::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்

Suren Surendiran (சுரேன் சுரேந்திரன் – பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னால் தலைவர். தற்போது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய தேசிய நாளிதலான தி கார்டியன் பத்திரிகையில் http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes  ஜனவரி 8ல் என்ற தலைப்பில் சுரேன் சுரேந்திரன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

கடந்த வியாழக்கிழமை ஜ நா இன்  நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டதால் பகல்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை எவரும் இந்த கொலைக்காக தண்டிக்கப்படவில்லை. அத்துடன் இப்படுகொலையில் அரச தரப்பிற்க்கும் பங்குண்டு என சந்தேகிக்க படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று குறிப்பிட்டதுடன் கனடாவின் நசனல் போஸ்ற்க்கு அளித்த பேட்டியில் தான் சிறீலங்கா முற்றிலும் சிங்கள மக்களுக்கு சொந்தமானது ஆனால் அங்கே சிறுபான்மை மக்கள் இருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எங்களுடைய மக்களாகவே கருதுகின்றோம். அவர்கள் எங்களுடன் இருக்கலாம் ஆனால் அவர்கள் தேவையில்லாத கோரிக்கைகள் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இக்கருத்து இனவாதத்தை தூண்டுவதாக பொதுவாக கருதப்படுகிறது.

மற்றவர்களுடன் சேர்த்து இவர்கள் இருவருமே  2006ம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 80 000கும் மேற்பட்ட போரளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்ய காரணமானவர்கள்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும், அரச விதிவிலக்கு நடைமுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் வரிச்சலுகையை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்கு எதிரான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எட்டு வரையிலான ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பல ஆயுத தாங்கிய ஒட்டுக்குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னனியில் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு சரிபாதியாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் வாக்கு பதிவுகளில் தான் வெற்றி தங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.

எனினும் 7 மாதங்களுக்கு முன்பு ஈடேறிய போரினால் தங்கள் சொந்த உறவுகளையும், நிலங்களையும்,  வீடு வாசல்களை இழந்த தமிழ் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் இராணுவம்  மற்றும் ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழலில் வாழ்கிறார்கள்.

1977 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்தனி நாட்டிற்கான கோரிக்கையை பெருமளவில் ஆதரித்து வாக்களித்தனர். ஆறாம் திருச்சட்டத்தை நடமுறைபடுத்தியதின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திர சூழலில் கூட பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.  அடக்கப்பட்ட பேச்சு உரிமையினால் கடும் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இதன் பின்பு இதுபோல் பல தேர்தல்களை மேற்கொண்டனர்.

இனப்பிரச்சினையின் தீர்வை கருத்தில் கொண்டு சுதந்திரம் கிடைத்து கடந்த 62 ஆண்டு காலமாக தமிழ் தலைவர்கள்  நல்லெணத்துடன் சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளனர். இவ்வரிசையில் இறுதியாக சர்வதேச மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 2002ம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம். இவ்வொந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள கட்சிகளால் ஒரு பட்சமாக நிராகரிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டவை. தற்போது பொன்சேகா பிரதான தமிழ் கட்சியுடன் ஓர் ”ஒப்பந்தத்தில்” கைச்சாத்திட்டுள்ளார். இவ் ”ஒப்பந்ததில்” வடக்கு கிழக்கை ஒன்றினைப்பதாக கூறியுள்ளார் என்பது உத்தியோக பட்டற்ற செய்தி. முன்னைய ஒப்பந்தமான இந்தோ லங்கா ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் கூட தாமத்திக்காமல் சிங்கள இனவாத்தை தூண்டும் வகையில் தான் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுள்ளார்.

”சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா என எண்ணத்தோன்றுகிறது.”

சில குறுகிய கால சலுகைகளுக்காக நல்லெண்ணத்துடன் தமிழ் தலைவர்களால் முன்னைய கால ஒப்பந்தங்கள் போல கைச்சாத்திடப்பட்டதே இவ்வொப்பந்தமும் ஆகும். தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் (ANC) தலைவர்கள் சர்வதேச அழுத்தினால் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரையைகளாக இருந்திருப்பர்.

மேலும் சந்தேகம் எழுகிறது இந்த புதிய ஒப்பந்ததில் சிங்கள இனத்திற்க்காக கையொப்பம் இட்ட சரத் பொன்சேகா தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறி உள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் அவருடைய உத்தியோகபூர்வமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் ஒப்பந்தத்தில் இருக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கவில்லை. அது மட்டும் அல்ல சரத் பொன்சேகாவை இத்தேர்தலில் பிரதான இரு சிங்கள கட்சிகள் ஆதரித்தாலும் ஒரு கட்சியே இவ் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.

தற்போதைய தமிழ் தலைவர்களை தேசதுரோகிகள் என சரித்திரம் எடைபோடாது என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றுக்காலை ஆரம்பமானது. பொலிஸ் மற்றும் முப்படையினர் உட்பட தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

தபால் மூல வாக்களிப்புகள் இன்றும் நடைபெறுகிறது. தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் தமக்குரிய கடமை நிலையங்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதியின் பிரகாரம் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள 427 பொலிஸ் நிலையங்களிலும் நேற்றுக்காலை வாக்களிப்புகள் நடைபெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருனாரட்ண தெரிவித்தார்.

இதேபோன்று இராணுவத் தலைமையகம், பலாலி படைத் தலைமையகம் உட்பட அனைத்து முப்படைத் தலைமையகங்கள், முகாம்களிலும் தபால்மூல வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகவும் இன்றும் தபால் மூல வாக்குப் பதவுகள் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற எவரேனும் வசதியீனம் காரணமாகவோ, அல்லது வேறேதும் விசேட காரணமாகவோ, நேற்றோ, இன்றோ வாக்களிக்க வருகைதராவிடின் இயன்றளவு விரைவாக அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுத்து வாக்களித்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு உறைகளை காப்புறுதி அஞ்சல் மூலம் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நேற்றும் இன்றும் தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்களிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் விண் ணப்பித்திருந்தனர். இவர்களுள் 4 இலட்சத்து 1,118 பேர் தகுதி பெற்றிருந்தனர். 57,036 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

‘ஆட்சி’ மாற்றமா? ‘ஆள்’ மாற்றமா? : ந சிறீகாந்தா (தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ)

Sivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential CandidateSivajilingam M K Presidential Candidateஅன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
எதிர்வரும் 26ந்திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில் இரண்டு வேட்பாளர்களுக்கிடையே தான் சனாதிபதிப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் – மகிந்த ராஜபக்ச. மற்றவர் – ஜெனறல் சரத் பொன்சேகா. மகிந்த ராஜபக்ச – ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர். சரத் பொன்சேகா – எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளர். இந்த இருவரும், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளையும் கோரி நிற்கின்றனர்.

இந்த இருவரைப் பற்றியும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்! நடந்து முடிந்த யுத்தத்ததை இவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக நடாத்தியவர்கள். விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்தின் படைகள் நடாத்திய யுத்தத்துக்கு உத்தரவு இட்டவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ச! ‘விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்தே தீருவேன்’ என்ற வைராக்கியத்துடன், யுத்தத்திற்கு தலைமை தாங்கி படைகளை வழி நடாத்தியவர் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா! முடிந்து போன யுத்தத்தில் நிகழ்ந்த எமது மக்களின் கோர மரணங்களுக்கும் கொடிய அவலங்களுக்கும் இந்த இருவருமே கூட்டான பொறுப்பாளிகள்.

மூன்று லட்சம் தமிழ்ப் பொதுமக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து, அனுபவித்த சகல துன்ப துயரங்களுக்கும் இவர்களே பொறுப்பாளிகள். குண்டு வீச்சுக்களாலும், செல் தாக்குதல்களாலும் எமது மக்களின் வீடுகளும் குடியிருப்புக்களும் தகர்த்தெறியப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் துடிதுடிக்க பலியாகிப் போன கோரக் கொடுமைகளுக்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தி துவம்சம் செய்வதே, இவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அப்பாவி தமிழ் பொது மக்களின் உயிர்ளைப் பற்றி இந்த இருவரும் கொஞ்சங் கூட கவலைப்படவேயில்லை! எமது மக்களைக் கொன்றார்கள்! கொன்று குவித்தார்கள்! சொத்துக்களை நாசமாக்கினார்கள்! லட்சக்கணக்கில் எமது மக்களை அகதிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கினார்கள்!

இன்று………. தயக்கம் எதுவுமின்றி உங்கள் வாக்குகளை, இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, கேட்டு நிற்கின்றார்கள். உங்களின் வாக்குகளை கோருவதற்கு எந்த அருகதையும் இந்த இருவருக்கும் கிடையவே கிடையாது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, ‘சிறுபான்மை மக்கள் என எவருமே இந்த நாட்டில் இல்லை’ என்று நாசூக்காக சொன்னவர் மகிந்த ராஜபக்ச. ‘இந்த இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது’ என, யுத்தத்தின் நடுவில், நாக்குக் கூசாது பேசியவர் சரத் பொன்சேகா. யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் – பிணைந்து செயற்பட்டவர்கள் இந்த இருவரும்! இப்பொழுது பிரிந்து போய், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக முட்டி மோதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளை முறியடித்த யுத்தத்தின் கதாநாயகன் யார்? என்ற கேள்வியை முன் வைத்தே இந்த இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் ரத்தக் கறைகள் படிந்த கைகளுடன் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு சிங்கள மாவீரர்களும் உக்கிரமாக மோதுகின்றன. இது பதவிப் போராட்டம்! அதிகாரச் சமர்! இந்த இருவரில் எவரையும், ஞாபக சக்தி கொண்ட எமது மக்கள் ஆதரிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கில் எமது உடன் பிறப்புக்களை கொன்று முடித்தாகி விட்டது. குழந்தைகளை – சிறுவர்களை – பெண்களை – கர்ப்பிணிகளை – முதியோர்களை ஈவிரக்கமின்றி கொன்று போட்டாகி விட்டது. இப்போது எங்களிடமே வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்! இனியாவது, எஞ்சியுள்ள எமது மக்களுக்கு நீதி வழங்க இவர்களில் எவராவது தயாரா…….? ஆகக் குறைந்தது, எமது சொந்த மண்ணில், எமது இனத்திற்கு சுயாட்சி வழங்கிட இவர்களில் எவராவது தயாரா……?

இல்லை! – இல்லை! – இல்லவே இல்லை!!!

இந்த நிலையில் இவர்களில் எவருக்கும் எமது மக்களின் வாக்குகளை கோருவதற்கு என்ன துணிச்சல்….! எதிர்வரும் தேர்தல், ஒரு சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல, ‘ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. ஒருவேளை ‘ஆள் மாற்றம்’ ஏற்படலாம். இதனால் விமோசனம் எதுவும் கிட்டும் என்று நம்பினால், கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றமே!

ஏன் எனில், மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் ஒரு நாணயக் குற்றியின் இரு வேறு பக்கங்களே! வேறு விதமாகச் சொல்வதானால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளாய் தொடரும் எமது அரசியல் போராட்டம் தோற்று விடவில்லை. எமது மக்களின் விடுதலை வேட்கை தணிந்து விடவில்லை. சுயமரியாதை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் சுதந்திர உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நீதி கிடைக்கும் வரையில் எமது சுதந்திர தாகம் தணிய மாட்டாது. சுதந்திரம் – சமத்துவம் – சமநீதி என்ற உன்னத கோட்பாடுகளின் அடிப்படையில், எமது சொந்த மண்ணில், சுந்தர பூமியில் எம்மை நாமே ஆளும் வகையில், ஆகக் குறைந்தது “சுயாட்சி” ஆவது எமக்கு வழங்கப்படுமா?

இத்தனை காலமும், இப்பொழுதும், எமது மக்கள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை அவலங்களையும், துன்ப துயரங்களையும் ஒரளவுக்காவது ஈடு செய்யும் வகையில், எமது மக்களின் தாயகமான வட – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுமா?

இந்த இலங்கைத் தீவில் நாம் வந்தேறு குடிகள் அல்ல வாழையடி வாழையாக – வரலாற்று ரீதியாக, எமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமது தாயகத்திற்கு சுயாட்சி கோர எமக்கு சகல உரிமைகளும் உண்டு. பல மொழிகள் பேசப்படும் பல்வேறு நாடுகளில் இனப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாக – சமாதான வழியில் – சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு எல்லாம் இது முடியும் என்றால், இங்கு – இந்த இலங்கைத் தீவில் இது ஏன் முடியாது? இது தான் இலங்கைத் தீவு எதிர்நோக்கும் கேள்வி! இந்தத் தேர்தலில், இந்தக் கேள்வியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி எழுப்ப வேண்டும்.

அடிபட்டோம், அல்லல் பல பட்டோம் அகதிகளானோம்…….., துயரங்கள் தொடர்ந்தாலும் – நாம் துவண்டு விடமாட்டோம்! இந்த மன உறுதியை – திடசங்கற்பத்தை உலகம் அறிய நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் எமது மக்களின் இலட்சிய உறுதியை பரீட்சித்துப் பார்க்க சிங்கள அதிகார வர்க்கத்தால் எம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அரசியற் சவால்!

முடிந்து போன யுத்தத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரின் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் அயல் நாடுகளின் உதவியுடன் சாதித்த வெற்றி என்பது, தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளின் புதைகுழி அல்ல! அது – எமது எதிர்கால எழுச்சிக்கும், இறுதி மகிழ்ச்சிக்குமான அரசியல் அத்திவாரக் கற்களின் நடுகுழி என்பதை நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

இந்த நிலையில், சுதந்திரம், சமத்துவம், சமாதானம் என்ற கோட்பாடுகளை முன் நிறுத்தி தேர்தல் களத்தில் துணிந்து நிற்கும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் திரு.சிவாஜிலிங்கம். இலங்கைத்தீவின் சனாதிபதி ஆவதற்காக அல்ல எம்மினத்தின் அடிமை நிலை சாவதற்காக அவர் களத்தில் நிற்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எந்த ஒரு கட்சியினதும் வேட்பாளர் அல்ல. சுயேச்சையாக போட்டியிடும் அவர் எம்மினத்தின் வேட்பாளர். சுயமரியாதை கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரினதும் வேட்பாளர். உங்கள் ஒவ்வொருவரினதும் வேட்பாளர். சிங்கள ஆதிபத்திய சக்திகளின் ஏவல் நாய்களாக ஓடித் திரியும் சில தமிழ்ப் பத்திரிகைப் பிரகிருதிகள் ‘உதய’ வேளைகளில் ஊளையிட்டு பச்சைப் பொய்களைக் கக்கலாம்….. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகள், சந்தர்ப்பவாத – சுயநல – சதிமதியாளர்கள் சலுகைச் சுகங்களுக்காக எமது மக்களின் முதுகில் துரோகத்தனமாகக் ஓங்கிக் குத்தலாம்……. நேர்மை இருந்தும் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் கடமையை மறந்து – கை கொடுக்க மறுத்து ஓடி ஒதுங்கலாம்…….

ஆனால், எமது மக்களின் சத்திய எழுச்சியை எந்த சதியும் அடக்கி விட முடியாது!! எந்த விதியும் ஒடுக்கி விட முடியாது. கொடியோரின் கொடுமை கண்டு குமுறிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரணி திரண்டு நேர்வழி நின்றால்… எமது மண்ணில் அநீதி சாயும்! அடிவானம் வெளுக்கும்! நமக்கு நாமே! நாம் மட்டுமே!! நமது ஆதரவு நம்மவனுக்கே!!!

உலகம் அறிய உரத்துச் சொல்வோம். தென்னிலங்கை எங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இது ஓர் புதிய அரசியல் வரலாற்றின் முதல் வரி! எம்மினத்தின் எழுச்சி அலைகளின் முகவரி! நம்பிக்கையுடன் செயற்படுவோம் – துணிவுடன் வாக்களிப்போம்.

‘சுதந்திரம் எமது பிறப்புரிமை.’
நாளை நமதே!

பொன்சேகாவின் 10 அம்சத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வருகை – ஜே.வி.பி.

jvp.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் பத்து அம்ச வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க, சம்பந்தனுக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்த போது கூச்சல் போட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே அறிவிப்பை செய்திருப்பதையிட்டு என்ன செய்யப் போகிறார்? எனவும் ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் ஜெனரல் பொன்சேகாவின் இணைஊடகப் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா பத்து அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றார். அதனடிப்படையிலேயே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இதே 10 அம்ச வேலைத்திட்டத்தினை முன்வைத்தே பேசினார். இந்த வேலைத்திட்டத்தின் மீது திருப்தி கண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது தவிர சம்பந்தனுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ ஜெனரல் பொன்சேகாவோ, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளோ எந்தவிதமான உடன்படிக்கைகளையோ, இரகசியப் பேச்சுகளையோ நடத்தவில்லை.

சில ஊடகங்கள் தெரிவிக்கும் விதத்தில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் எவருடனும் ஜெனரல் பொன்சேகா செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒரு சிங்கள வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஜெனரல் இணங்கியதாகவும் அதனாலேயே அவரை ஆதரிக்க முன்வந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறான எந்தத் தகவலையும் தான் கூறவில்லை என சம்பந்தன் மறுத்திருக்கிறார். சில ஊடகங்கள் மீது அரச தரப்பு தமது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஊடகங்களும் அதற்குத் துணைபோகும் நிலை காணப்படுகின்றது. எந்தவொரு ஊடகத்தையும் நாம் கட்டாயப்படுத்த முற்படவில்லை. ஊடகங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் – 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு

election_box.jpgஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டும்! – தமிழ் மக்களின் வோட்டும் ! : த ஜெயபாலன்

Sampanthan_RMavai_SenathirajahSuresh_Piremachandranதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA  http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.

ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.

அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.

இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.

ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:

தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) 
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)

இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)

ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html

கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் “நம்பிக்கையான மாற்றம்”

pr-can.jpg“நம்பிக் கையான மாற்றம்”  என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம்%27 எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட “அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 04 – புன்னியாமீன்-

election_box.jpg(தொடர்ச்சி…..)

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற  2ஆவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.

பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும்,  பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)

1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.

1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.

பொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை,  மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை,  மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.

யாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம் –

கொழும்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச  (U.N.P)  361,337  (49.14%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  339,958 (46.23%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   34,020 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  1,088,780
செல்லுபடியான வாக்குகள்  735,315 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,295  (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)

கம்பஹா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  350,092 (48.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  355,553 (48.83%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   22,467 (3.09%)

பதியப்பட்ட வாக்குகள்  969,735
செல்லுபடியான வாக்குகள்  728,112 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,054 (1.36%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)

களுத்துறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  169,510 (46.74%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  179,761 (49.57%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   13,375 (3.69%)

பதியப்பட்ட வாக்குகள்  570,118
செல்லுபடியான வாக்குகள்  362,646 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,537 (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)

மத்திய மாகாணம் –

கண்டி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  234,124 (54.88%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  186,187 (43.65%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,266  (1.47%)

பதியப்பட்ட வாக்குகள்  628,240
செல்லுபடியான வாக்குகள்  426,577 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,167 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)

மாத்தளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  37,007  (57.85%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  25,825  (40.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   1,135  (1.77%)

பதியப்பட்ட வாக்குகள்  214,938
செல்லுபடியான வாக்குகள்  63,967  (98.29%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,110  (17.1%)
அளிக்கப்பட்ட வாக்குகள்  65,077  (30.28%)

நுவரெலியா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  112,135 (62.15%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  64,907  (35.98%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,371  (1.87%)

பதியப்பட்ட வாக்குகள்  229,769
செல்லுபடியான வாக்குகள்  180,413 (98.19%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,320 (1.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

ஆர். பிரேமதாச    (U.N.P)   124,912 (44.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  148,615 (53.09%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,417  (2.29%)

பதியப்பட்ட வாக்குகள்  571,303
செல்லுபடியான வாக்குகள்  279,944 (98.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,461 (1.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)

மாத்தறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  45,399  (42.93%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  57,424  (54.30%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,922  (2.76%)

பதியப்பட்ட வாக்குகள்  451,934 
செல்லுபடியான வாக்குகள்  105,745 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,003 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  41,198  (49.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (U.N.P)  39,343  (47.39%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,478  (2.98%)

பதியப்பட்ட வாக்குகள்  295,180 
செல்லுபடியான வாக்குகள்  83,019  (95.56%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,855 (4.44%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 86,874  (29.43%)

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  33,650  (28.03%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  44,197  (36.82%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   42,198 (35.15%)

பதியப்பட்ட வாக்குகள்  591,782 
செல்லுபடியான வாக்குகள்  120,045 (93.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,517 (6.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)

வன்னி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  10,580  (55.78%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  4,889  (25.77%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,500  (18.45%)

பதியப்பட்ட வாக்குகள்  142,723 
செல்லுபடியான வாக்குகள்  18,969  (96.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   708  (3.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,677  (13.79%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  61,657  (50.99%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  21,018  (17.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   38,243 (31.63%)

பதியப்பட்ட வாக்குகள்  215,585 
செல்லுபடியான வாக்குகள்  120,918 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)

திகாமடுல்லை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  96,420  (50.77%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  83,137  (43.78%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   10,352 (5.45%)

பதியப்பட்ட வாக்குகள்  265,768 
செல்லுபடியான வாக்குகள்  189,909 (98.08%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,802 (1.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 193,711   (72.89%)

திருகோணமலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  36,841  (45.70%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  29,679  (36.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   14,103 (17.49%)

பதியப்பட்ட வாக்குகள்  152,289 
செல்லுபடியான வாக்குகள்  80,623  (98.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,326 (1.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 81,949  (53.81%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  198,662 (51.12%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  182,223 (46.89%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   7,717  (1.99%)

பதியப்பட்ட வாக்குகள்  784,986 
செல்லுபடியான வாக்குகள்  388,602 (98.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,281 (1.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)

புத்தளம் மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  125,339 (55.89%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  94,823  (42.28%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   4,093  (1.83%)

பதியப்பட்ட வாக்குகள்  319,003 
செல்லுபடியான வாக்குகள்  224,255 (98.70%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,965 (1.30%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  56,951  (42.94%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  73,154  (55.15%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   2,529  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  334,074
செல்லுபடியான வாக்குகள்  132,634 (98.36%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,027 (1.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)

பொலநறுவை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  26,392  (55.54%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  20,173  (42.45%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   957  (2.01%)

பதியப்பட்ட வாக்குகள்  163,741
செல்லுபடியான வாக்குகள்  47,522  (97.62%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,157  (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,679  (29.73%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  80,779  (60.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  50,223  (37.36%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   3,440  (2.56%)

பதியப்பட்ட வாக்குகள்  329,462
செல்லுபடியான வாக்குகள்  134,442 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,276 (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)

மொனராகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  16,872  (63.21%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  9,123  (34.18%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   697  (2.61%)

பதியப்பட்ட வாக்குகள்  161,927
செல்லுபடியான வாக்குகள்  26,692 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   851  (3.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 27,543  (17.01%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  180,622 (51.75%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  159,879 (45.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   8,516  (2.44%)

பதியப்பட்ட வாக்குகள்  457,224 
செல்லுபடியான வாக்குகள்  349,017 (98.84%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,113 (1.16%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)

கேகாலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  168,720 (57.11%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  119,769 (40.54%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,923  (2.34%)

பதியப்பட்ட வாக்குகள்  437,178 
செல்லுபடியான வாக்குகள்  295,412 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,277 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988

இறுதித் தேர்தல் முடிவுகள்

ஆர். பிரேமதாச   (U.N.P)  2,569,199 (50.43%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  2,289,860 (44.94%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   235,719 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  9,375,742
செல்லுபடியான வாக்குகள்  5,094,778 (98.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   91,445 (1.76%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   2,547,389

குறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    21,810

இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
279,339

தொடரும்…

நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் கிளிநொச்சியில் வாக்களிக்க ஏற்பாடு

election_box.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்களும், சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியவர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மீளக் குடியேறிய மக்களும் நிவாரணக் கிராம மக்களும் ஒரே இடத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 95 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். இதில் கொத்தணி வாக்குச் சாவடிகளும் உள்ளடங்குகின்றன. நிவாரணக் கிராமங்களுக்கென 70 கொத்தணி வாக்களிப்புச் சாவடிகள் அமைக்கப்படும். பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி ஆகிய இடங்களிலேயே வாக்குச்சாவடிகள் நிறுவப்படுகின்றன.

What does this election mean for the Tamil-speaking masses? : Senan

Sritunga_JeyasuriyaVikramabahu_KarunaratneSivajilingam_M_KWhat does this election mean for the Tamil-speaking masses? War and repression mean that the Tamil-speaking population has been reduced to less than 15% of the population of Sri Lanka. In the East and in the North, areas where Tamil-speaking people are in the majority, there are paramilitaries in control: Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) – the Tamil People’s Liberation Tigers in the East. In the North is the Eelam People’s Democratic Party (EPDP). These organisations are the voice of the government, all are armed to the teeth, they carry out human rights violations with impunity and will not allow the election to be contested fairly. The people live at the mercy of these oppressing forces.

Can the Tamil-speaking people be allowed to vote freely? Is there any alternative to the pro-government forces for them?

None of the leading candidates offers any way out for the working and poor masses. In fact they represent a choice of death by machete or death by axe. General Sarath Fonseka standing with UNP and JVP support led the war offensive, butchering the innocent Tamil minority and worked closely with the current government in all its attacks on the voices of dissent and in the suppression of democratic rights. In a breathtaking show of hypocrisy he now accuses the government of corruption and of denying democratic rights. Both the incumbent, Mahinda Rajapakse, and Fonseka suppressed democratic rights and their policies and actions pushed the workers and poor into destitution. Both are using all kinds of devious techniques to win the next election and have not shown any sign of changing their policies after the election.

Some in the Tamil National Alliance (TNA), a political alliance of various Tamil nationalist groups and parties brought together by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the 2002 truce, and Mano Ganesan of the Democratic People’s Front (DPF), are the only ‘Tamil’ independent voices raised so far. Now the TNA seems to be on the brink of collapse as a significant layer of its leadership is wavering between the ruling Sri Lanka Freedom Party (SLFP) and the weak-willed opposition party, the viciously neoliberal United National Party (UNP). And the DPF continues its support for the UNP regardless of its chosen presidential candidate – General Sarath Fonseka!

Previously Mano Ganeshan, the leader of the DPF was one of the very few Tamil MPs who had enough courage to organise and participate in actions to defend the rights of the Tamil-speaking people. He was a leading organiser of the Civil Monitoring Commission (CMC) together with Siritunga Jayasuriya of the United Socialist Party (USP). Like Siritunga Jayasuriya he is one of those who have bravely outspoken against the war and the attacks on democratic rights. But, despite his participation in many pickets and activities organised in the defence of minorities, journalists and activists, he has now joined the very forces he fought against.

Among the so-called Tamil elite and MPs, there are some who harbour careerist aspirations and hopes of one day becoming a minister – if the party they support is elected. But for the Tamil-speaking masses, nothing will change. No one in their right mind can ask the people to vote for either Fonseka or Rajapakse, knowing that they are responsible for a range of heinous crimes – from the mass murder of thousands of innocent people to the bloody slaughter of surrendered prisoners in Mullivaaikaal.

Some people have argued that an independent Tamil candidate cannot win, that either the SLFP or UNP must be supported. This idea – that there is no alternative other than the oppressors setting the agenda – is not acceptable. Tamil-speaking people deserve an independent voice. They deserve the opportunity to support anyone who will stand up for their rights, regardless of whether they can win a big victory or not. Of course any candidate opposing the warmongers and basing themselves on the minorities and poor will not win the election at this stage. But that is not the reason to give up the fight and to ask people to support either major party. Both are oppressive. Scandalously TNA has taken the site of the oppressing forces.

Should we then ask the oppressed Tamil masses to vote for the only Tamil presidential candidate Mr MK Sivajilingam? Sadly the fact remains that for Mr Sivajilingam there are no major political differences between the TNA and the UNP and he would have joined forces with the UNP if it had not supported the Fonseka candidature. It is only the Fonseka factor that is now keeping a significant section of the Tamil elite away from the UNP – rather than the UNP’s politics. In this respect Sivajilingam is no different from the old Tamil United Liberation Front (TULF) leaders who betrayed the Tamil masses. Throughout its history the Tamil elite has made the mistake of taking the site of the chauvinist elite parties who the majority of the oppressed Sinhala masses also oppose. It is with these politics that we are determined to break. To support Sivajilingam is to support the anti-working and poor people policies of the UNP and offers no solution to the problems of the Tamil-speaking masses. The ordinary people of Sri Lanka need a candidate with a principled stand against the policies of repression.

Unfortunately another presidential candidate, Vickramabahu Karunaratne, despite his left ‘profile’, is also eager to work with the entire Tamil elite regardless of their politics. It is not the first time Vickramabahu Karunaratne and his Nava Sama Samaja Party (NSSP) have made such a mistake. When the Indian army intervened in the north in the 1980s the NSSP argued that Indian imperialism was preferable to western imperialism and supported the presence of the Indian army in the Tamil-speaking areas. Even though they now admit that it was a mistake, Vickramabahu and his party continue to make similar mistakes as they seems to have a little understanding of the national question. [too crude!] Just as the TNA and other Tamil elites continue to cooperate with either leading party, the NSSP cooperates with the Tamil elite without reservation, abandoning the oppressed working and poor Tamil masses for the sake of electoral gains is not acceptable.

Mr Sivajilingam’s position not to take the side of the oppressors and join forces with the left candidate should be welcomed. However, at a stage where a clear political alternative is needed this marriage of convenience between Sivajilingam and Vickramabahu Karunaratne has only an electoral objective. In Tamil Solidarity we do not believe that they possess a clear alternative for the oppressed Tamil masses who at this stage need a long-term committed fighting programme to win their rights rather than a electoral stunt. 

What should our strategy be? The majority of the exploited Sinhala masses do not support either the ruling government or the opposition candidate. However, they have been led to believe that the brutal war was conducted in their interest. But the truth is to the contrary. The exploited Sinhala masses have nothing to gain from the mass killings of Tamil-speaking people. It is the ruling class that benefits from the brutality. We must join with those organising the exploited Sinhala masses against their oppressors. Only when the Sinhala workers and poor stand up for the rights of the Tamil workers and poor can any solution be found. Instead of allying with the oppressive forces who exploit all sections of society, Tamil-speaking people should stand up with those fighting. We must join with them to build an independent voice.

The most important question is not how we can defeat the current government in this election. Instead the question is how can we build this independent force that will change society for the benefit of all the Sinhala,Tamil, Muslim and upcountry masses.

Based on this long-term strategy Tamil Solidarity can carefully work with only those who are prepared to permanently defend the rights of the oppressed masses.

What the pro-business, ruling elite refuses to acknowledge is that there is an alternative. There are people even in the south who have consistently defended the rights of Tamil-speaking people and workers and poor. United Socialist Party (USP) members have risked their lives to speak and organise against the brutal war and oppression. They remain the only voice that is bravely and consistently defending the rights of the Tamil-speaking people. The USP also helped to set up the civil monitoring commission (CMC) that investigates death and disappearances caused by paramilitary operators. They risked their lives to openly condemn these atrocities and to organise pickets and activities.

Media in Tamil Nadu and around the world published widely when USP secretary, Siritunga Jayasuriya, bravely spoke against the brutal war at its height. This was at a time when the defence minister famously declared that you are either with the government and military or against them and accused everyone who spoke against them as being traitors. The majority of the Tamil politicians who now argue for a vote for the leading parties either remained silent or chose to support the government. But these political fighters in the USP risked their lives to stand up for the principles and ideas for which they have always stood – standing shoulder to shoulder with the poor and oppressed masses in the fight for their rights. This consistent approach and record deserves respect and it is the USP who the oppressed people, be they Sinhala, Tamil or Muslim, should trust. The TNA MPs and other Tamil elites know this fact very well. There is nothing impossible about having a Tamil candidate in the presidential election. But is this candidate prepared to stand up for the rights of the Sinhala workers and poor is the key question.

Siritunga Jayasuriya also helped to set up the ‘Stop the Slaughter of Tamils’ campaign which was the predecessor of the Tamil Solidarity campaign. From this record and the trust we built in our long fight against the attacks and brutality against the Tamil-speaking minority that TS steering committee urges all its members to support a left candidate, Siritunga Jayasuriya in particular.