::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

Nanthi_Kadal”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”

தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.

”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.

தொழில் – கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.

கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.

இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.

இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.

பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் – எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.

கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.

குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.

நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.

இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.

எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.

தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.

புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.

அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.

மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.

பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!

தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.

முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
 
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.

எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.

எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.

நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
 
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

தமிழர்கள் ஜனநாயகத்திற்கான தகுதி பெற வேண்டும். : வ அழகலிங்கம்

TULF Leader Anandasangaree Vயாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை  ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:-

“தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு  ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட்  ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை  இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.

தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன  எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய  மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள்.

ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும்  கோரலாம்.

ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத  இயக்கங்களும் தோன்றாது.  மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை.

ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின்  சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும்.

அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம்.

தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries  (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும்.

அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும்.

தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது.

ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும்  கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய  33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை.

இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ்  மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும்   வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது.

இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால்  வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார்.

இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு?

யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச்  செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும்.

இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும்.

நடப்பு 2009  ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்  திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன.  அவை  பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில்  அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது.  கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது.

அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது.

ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.  வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள்  உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.”

இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
   
ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது.  ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது.  மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக  13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன.

135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன.

உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன.

31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது.

இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர்  தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது.

வடமாகாணத்திற்கு தெருக்களையும்  றெயிற் பாதைகளையும்  அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர்  உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின்  2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கயிலே  ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும்.

இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில்  தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும்.

ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும்.

இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும்  தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில்  இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர்.  இன்றும் தமிழ்  சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.  அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும்.

உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின்  பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும்.

இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது  எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும்.

In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within.

03.06.2009

இனியும் நீ பிறப்பில்லா பல இறப்புகள் பெறுவாய்! : நா.நிவன்

Pirabakaran V LTTEபிரபாகரனே!
உன்னைப் பற்றியும் உனது போராளிகளைப் பற்றியும் உனக்கோர் கடிதம் எழுத வேண்டும் என எண்ணி எத்தனையோ தடவைகள் முயற்சித்துள்ளேன். உனது மனத்திடல், வீரம், விவேகம், தந்திரம், உன்னால் வளர்க்கப்பட்டு வந்தவர்களின் பண்பு, பணிவு, ரகசியக்காப்பு, மரியாதையான பேச்சு பற்றி மட்டுமல்ல, உன்னிடம் தெரிந்த குறைகள் பல பற்றி எல்லாம் எழுத வேண்டும் என எத்தனித்த போதெல்லாம் மாற்றுக் கருத்துக்கும் மரண தண்டனையே நியதி என்ற உனது சட்டத்தை அறிந்த நான் எனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பி உயிர் பேராசையால் பேனாவை மூடிக்கொண்டேன். ஆனால் இன்று என்னையும் அறியாமல் உன் பற்றிய செய்தி என்னை எழுதத் தூண்டிவிட்டது.
 
நீ இறந்துவிட்டாயாம் என்பது அரசியல் மட்டங்களில் உறுதி செய்யப்பட்ட செய்தி. அடிமட்ட ஈழத்து மக்களில் இருந்து அறிவு ஜீவி இலங்கைத் தமிழன் வரை நம்ப முடியாத, நம்பக் கூடாத, நம்பியும் நம்பாத செய்தியாகவே இருக்கின்றது அது. என்றாலும் கூட நீ இருந்தாலும் நலமே. ஏனெனில் எந்த ஒரு உயிரும் இயற்கை தவிர மனிதனால் அழியக் கூடாதென்பதே என் விருப்பம். என்றாலும் நீ இல்லை என்றாயின் நீ இல்லாத இவ்வேளையில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களையே உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

நீ இறந்தாய் என்ற செய்தியை இல்லை என்று சொல்பவர்கட்கும், சொல்லப்படுபவர்கட்கும் நீ இறந்தாய் தான் என்ற உண்மை நன்றாகவே தெரியும் என்பது உனக்குத் தெரியுமா? மற்றவரை முட்டாள் ஆக்குகிறோம் என்ற பெருமையில் தாங்களே தங்களை முட்டாள்கள் ஆக்கிக் கொண்டும், ஏமாற்றிக் கொண்டும் திரியும் இவர்கள் பூட்டிய அறைக்குள் கிடந்து விம்மி விம்மி அழுகிறார்கள் என்பதையும் நீ அறிவாயா?

தற்கால, எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி உன் மரணத்தையே மறைப்பவர்கள் மத்தியில், உனது மரணமென்பதே பொய்ச் செய்தி என்ற நினைப்பில், இந்தச் செய்தியை அலட்டிக் கொள்ளாத உனது அப்பாவி உறவுகளும் உள்ளார்கள் என்பதையும் நீ அறிவாயாக. பாவம் அவர்கள் கணணி பற்றியோ, இணையத்தளங்கள் பற்றியோ, மின் அஞ்சல் பற்றியோ, மாற்று ஊடகங்கள் பற்றியோ எதையும் அறிந்திராத அப்பிராணி சனங்கள். தங்களுக்கு என்று தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஊடகச் செய்திகளை மட்டுமே கேட்டும், பார்த்தும் பழக்கப்பட்ட ஆட்டுமந்தை கூட்டங்களான அவர்கள் உன் மரணச் செய்தியை கூட ஒரு கேலிச் செய்தியாகவே கேட்கிறார்கள்.

நீ ஒன்றே ஒன்று செய்திருக்க வேண்டும். நீ இறந்த பின் அம்மக்கள் உனக்காக என்ன செய்திருப்பார்கள் என்பதைக் காண்பதற்காய் நீ முன்பே ஒரு முறை இறந்ததாக ஒரு ஒத்திகை நாடகம் நடத்தியிருக்க வேண்டும். அப்போது நீ அறிந்திருப்பாய் உனது மக்களின் முட்டாள் தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும். சரி தான் நான் இறந்தால் இவர்கள் என்ன தான் செய்திருக்க வேண்டும் என்று தானே நீ கேட்கிறாய்? என்ன இப்படிக் கேட்கின்றாய். செய்தி கேட்ட நிமிடமே ஈழத்துத் தமிழன் வாழ்வு நிமிடத்தில் ஒரு கணமேனும் ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? நீ குண்டு கட்டி தன்னை மாய்த்த சமூகத்தில், நீ உயிர் வாழ வேண்டி தீய்க்குளித்து மாண்ட சமூகத்தில், உன்னைப் பாதுகாக்க வேண்டி பட்டினி விரதமிருந்த சமூகத்தில், ஊர்கூடி தேர் இழுத்தது போல் பாதை மறித்து தவமிருந்து போராட்டம் நடத்திய சமூகத்தில் நீ இறந்தாய் என்ற செய்தி கேட்டவுடன் துடித்து, வெடித்து உயிர்துறக்க யாரும் இருக்கவில்லையே. இப்போதாவது தெரிந்ததா இவையெல்லாம் அரிதாரம் பூசாமல் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என்று.

உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியும்.

உன்னை கிருஸ்ணனின் அவதாரம், சூரியக் கடவுள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள்? கடவுளுக்கு மரணம் ஏது என்கிறார்கள். உன் படம் பதித்த பதாதைகள் ஏந்தி பாதை மறித்து ஊர்வலம் சென்ற புலம்பெயர் வாழ்வுகள் உன் மறைவு கேட்டு என்ன செய்தார்கள்? ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் கூட்டினார்களா? ஒரு மௌன ஊர்வலம் போனார்களா? இல்லை ஒரு சோககீதப் பாடல் தான் ஒலிபரப்பினார்களா?

இந்த 27 வருடங்களில் உனது இயக்கத்தில் இருந்தவர்கள் எவரேனும் இறந்தால் கடையடைப்பு, கர்த்தால், கண்ணீர் அஞ்சலி, கறுப்புக்கொடி என்று எத்தனை புதினங்கள் செய்வார்கள். ஆனால் இயக்கமே அடியோடு அழிந்துவிட்டது என்ற செய்தி கேட்டும் ஏன் இவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்க நீ இல்லை என்ற தைரியம் அது என்பதை நீ அறிவாயா?

உன் இயக்கத்தில் மூன்றாம் தரத்து தளபதி இறந்தாலே 3 நாட்களுக்கு முகாரி பாடி வசூல் செய்யும் புலத்து தொலைக்காட்சிகள், நீ முதல் தலைவன் இறந்த செய்தி கேட்டு என்ன செய்தார்கள்? அட உன் இறப்பு செய்தியைத் தான் அவர்களால் நம்பமுடியவில்லை அதை விட்டுவிடு. உன்னோடு கூடவே இருந்த உனது முதல்தர, அடுத்தகட்ட தலைவர்கள் எல்லாரும் தான் இறந்துவிட்டார்கள் என்று நம்பியவர்கள், அவர்களுக்காகவேனும் ஒரு நிமிடம் சோககீதம் பாடாததென்ன. கருணாவின் துரோகத்தை சுட்டிக்காட்ட குத்திக் காட்டும் பாடல்களைத் தேடிப்பிடித்து ஒலிபரப்பியவர்களுக்கு உனக்காக ஒலிபரப்ப, உன்னைப் பற்றி புதுவை இரத்தினம் எழுதிய ஒரு பாடலாவது கிடைக்காமல் போனதேன்?

மாவீரனென்றும், மாமனிதனென்றும், வீரவேங்கையென்றும் பட்டங்கள் கொடுத்த உனக்கு எந்தப் பட்டமுமே இவர்களால் சூட்டமுடியாத அளவுக்கு இருந்தும் இல்லாத, இல்லாமலும் இருக்கும், கேள்விப் பொருளாகி விட்டாயே நீ.

மாவீரர் உறங்குவதற்கு கட்டிய கல்லறைகளையே கலைக்கூடமாக அழகியல் தன்மையோடு அமைத்தவன் நீ. உனக்கோர் கல்லறை தான் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு மண்ணறை கூட கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது தான் நெஞ்சம் கனக்கிறது.
 
உன்னால் மலரப்போகும் தமிழீழத்துக்கு தேசியகீதம் அமைப்பது யார் என்பதில் ஈழத்துக் கவிஞர்கட்கும் வைரமுத்துவுக்கும் இடையில் ஒரு இழுபறிச் சண்டையே நடந்ததாம். விதியின் விளையாட்டைப் பார்த்தாயா? உனக்கொரு இரங்கல் பா கூட எழுத முடியாமல் போய்விட்டது அவர்களால். எழுதக் கூடாது என்பது அவர்கள் முடிவல்ல. எழுதக் கூடாது என்பது உன்னால் வளர்க்கப்பட்டவர்களின் கட்டளை. உனக்கேற்பட்ட நிலை கண்டு நீ எதிரி என்று நினைத்தவர்களே இளகி உடைந்து நிற்கும் போது இவர்கள் மட்டுமேன் இப்படி கல்லாய் நிற்கிறார்கள். உனக்காக ஒரு இரங்கல் பா எழுதவென்று மூளைநிறைந்த வரிகளோடு, மூடிய பேனா வெடிக்கும் தறுவாயில், முலை சுரந்த தாயின் வலி போல உனக்காக எழுதவென்று நடுநிலை எழுத்தாளர் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீ அறிக.

நீ நல்லவனா? கெட்டவனா? நீ செய்ததெல்லாம் சரியா? தவறா? என்ற ஆய்வின் அடிப்படையில் நான் இதை எழுதவில்லை. நானும் நீயும் ஓரினம் என்பதால், மனிதம் பற்றிப் பேசவே இதை எழுதுகின்றேன்.

நீ வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு தம்பியாகவும், அண்ணனாகவும், செஞ்சோலை சிறார்களுக்கு தந்தையாகவும், புலம்பெயர் குழந்தைகளின் மாமனாகவும், ஏழை எளியவர்களின் மகனாகவும் மட்டுமல்ல, எங்கள் தேசியத் தலைவன் என்றும் மதிக்கப்பட்டவன். அப்படிப்பட்ட உனது இறுதி ஊர்வலம் எப்படி நடந்திருக்க வேண்டும். புலிக்கொடி போர்த்திய உன் உடல் பேழையை, உன் உயிர் தோழர்கள் தம் தோள்களில் சுமந்து வர, வெள்ளைப் புறாக் கூட்டம் போல் செஞ்சோலைச் சிறார்கள் முன்னே வர, நீ வளர்த்த போர் வீரர்கள் நேர் பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுமாய் அணிவகுப்பு செய்து வர மங்கல கீதத்தை மகளிர் படையினர் பாடிவர, மாணவ மாணவியர் மலர்கள் தூவிவர, மாவீரன் பிரபாகரனே, எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் தேசியத் தலைவனே போய் வா. நீ சாந்தி பெறு என்று சொல்லி தமிழ் மக்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்கப்பட வேண்டிய உன் இறுதி ஊர்வலம் இப்படியா நடந்திருக்க வேண்டும்.

அப்பா என்று சொல்லியழ மகளில்லை, கொள்ளிவைத்து கடமை செய்ய மகனில்லை, மார்பில் வீழ்ந்தழ மனைவியில்லை, என் மகனே என்று சொல்லியழ தாய் தகப்பன் இல்லை, தம்பி என்று சொல்லியழ சகோதர சகோதரியில்லை, மாமாவென்றழ மருமக்களில்லை, ஏன்………… இவன் என் தலைவன் என்று ஏற்றுக் கொள்ள ஒரு தடி மகனேனும் துணிவுடன் முன்வரவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் அல்லவா நீ ஏகபிரதிநிதிப்படுத்திய மக்கள் உன்னை அனுப்பி வைத்தார்கள். எத்தனை மரணங்களுக்கு நீ உரிமை கொண்டாடியிருப்பாய். உரிமை கொண்டாடப் படாத, அநாதைப் பிணமாக எரிக்கப்பட்ட முதல் தேசியத் தலைவன் நீ ஒருவனாகத் தான் இருப்பாய்.

உன் மறைவுக்குப் பின் அழுவதைப் போலவும் நடிக்கிறார்கள். நடிப்பதைப் போலவும் அழுகிறார்கள்.

இந்த வேளையில் நீ மட்டும் மீண்டும் வந்தால் எதிரியாய் நிற்கும் உன் தமிழ் மக்கள் நிலை கண்டு என்ன சொல்வாய் தெரியுமா? என் மக்கள் பட்டதெல்லாம் போதும். இனியும் இழப்பதற்கு எதுவுமில்லாத அவர்களை விட்டுவிடுங்கள். என் பெயர் சொல்லி பிழைப்பு நடத்த என் மக்களை பயன்படுத்தாதீர்கள் என்பாய். அதிலும் இந்த தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் நீ கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. அவர்களிடம் நீ கேட்டிருப்பாய், கோப்பெருந்தேவியின் சிலம்பல்ல கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பென்று வாதாடிய கண்ணகியிடம் ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் தன்னை குற்றமற்றவன் ஆக்கிக் கொள்ளத் துடித்த பாண்டிய மன்னனைப் போல் இறந்த உன் உடல் பற்றி வைகோவும், நெடுமாறனும் எழுப்பும் சந்தேகங்களும், கேள்விகளும் சின்னப்பிள்ளைத் தனமானது என்றிருப்பாய். இறந்த உடலின் கண்கள் ஒரு தடவை முடியிருந்ததென்றும் மறுதடவை திறந்திருந்ததென்றும் சொல்கிறார் வைகோ. உனது கழுத்துக்கு மேற்பட்ட பகுதி பொருத்தப்பட்டதாம் என்கிறார் நெடுமாறன். உனது உடலொன்றும் மேடம் ருஸாட் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மெழுகுச் சிலையல்ல என்பதையும், நீ சிங்கள அரசின் எதிரி, அவர்கள் கையில் அகப்பட்ட உன் உடலை ராஜ மரியாதையுடன் பாதுகாத்திருக்க மாட்டார்கள் என்பதையும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக உன் காலடித் தடத்தைக் கூட காண முடியாத அளவுக்கு அவர்கள் கண்களில் விரல்விட்டு ஆட்டிய உன் உடல் கிடைத்தவுடன் அதை எப்படி எல்லாம் பந்தாடியிருப்பார்கள், அதில் என்னென்ன சேதமெல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கூட அறியாத அரசியல் வியாபாரிகளின் கவலை என்ன தெரியுமா? இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன், தமிழனுக்கு என்றொரு தனி நாடே இனியில்லையா? என்பது தான். ஈழத்தமிழர் உயிர்கொடுத்து தனிநாடு பெறவேண்டுமாம். அதில் இவர்கள் பெருமை கொள்ள வேண்டுமாம். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிர்ப்பலி கொடுக்கப் பண்ணியவர்களே ஏன் உங்கள் நாட்டில் எட்டுக்கோடி தமிழர்களில் எங்கள் தொகை தமிழர்களை இழந்தேனும் ஒரு தனித்தமிழ் நாட்டை அமைத்துக் கொண்டு இழந்த இடத்துக்கு எங்களை சேர்த்துக் கொள்ளலாமே. அதை விடுத்து என் மக்கள் நெருப்பில் நீங்கள் ஏன் குளிர்காய விரும்புகிறீர்கள் என்று நீ மீண்டும் வந்தால் கட்டாயம் கேட்பாய்.

உன்னோடு சக கருத்து முரண்பாடு உண்டென்ற போதிலும், இன்று வரை உன்னில் சிறு மரியாதையையும் நம்பிக்கையையும் வைத்திருந்தேன். உன்னில் இருந்து கருணா பிரிந்து போனதில் இருந்து இதுவரை நீ எதுவித கருத்தும் சொல்லவில்லை. இருந்தும் உனது ஊதுகுழல்களும், ஊழியர்களும் பேசியவற்றுக்கு நீ எந்த மறுப்பும் கூட சொல்லவில்லை. சந்தர்ப்பமும், நிர்ப்பந்தமும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை ஒரு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் மண்டைக்குள் அடைத்து வைத்திருக்கும் மலங்களை அகற்றிச் சுத்தம் செய்வாய் என்றிருந்த சிறு நம்பிக்கை கூட கைகூடாமல் போய்விட்டதே என்பதே என் கவலை. உனக்கொன்று தெரியுமா? தவறு செய்பவர்கள் எல்லோருமே கிழக்கு மாகாணத்தான் என்பது தான் உனது ஊழியர்களின் நம்பிக்கையும், பரப்புரையும். இப்போது KP கூட கிழக்கானாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். யார் கண்டார் நாளடைவில் தேசியத் தலைவர் பிரபாகரன் கூட கிழக்கான் தானென்று உன்னைக் கூட இவர்கள் சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

நீ இறந்தாய் என்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு, தாயைப் பிரிந்த கன்றுகள் போல போகுமிடம் தெரியாமலும், நடந்த உண்மை அறியாமலும், வாடிய முகமும் சோர்ந்த நடையுமாய் அலைந்து திரிகிறதே ஒரு இளைஞர் கூட்டம். அவர்கள் தான் உன்னை நேசித்தவர்கள், நேசிப்பவர்கள், தமிழீழத்தை கனவில் சுமந்தவர்கள்.

நீ இறந்திருந்தால் மீண்டும் பிறந்து வர முடியாது. ஆனாலும் நீ இறந்திருந்தாலும் கூட இன்னும் பலமுறை இறப்பாய். பிறப்பில்லா உனது பல இறப்புகளை இவர்கள் அரங்கேற்றுவார்கள். நீ உயிரோடு இருப்பாய் ஆயின் தங்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆபத்தெனும் போதிலெல்லாம் உன்னைச் சாகடிப்பார்கள். இனிவரும் காலங்களில் நீ வந்த வாகனம் மோதி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாக உன் உடல் உருக்குலையும், நீ ஓட்டிவந்த படகு நீரில் மூழ்கி உன்னை மீன் விழுங்கும்………… இப்படிப் பற்பல கோணங்களில் சாகடிக்க தமிழ்நாட்டு அரசியலில் தான் சாத்தியம் உண்டு.
 
நீ எத்தனை தரம் இறப்பினும் அத்தனை தடவைகளிலும் உன் ஆத்மா சாந்தியடைய உன் விசுவாசிகளுடன் சேர்ந்து பிரார்த்தித்து உனக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் இவன்.

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன்

Protest_Londonதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Reggie_TROதமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.

தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

பெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் முல்லைத்தீவில் படையினரால் மீட்பு – இராணுவப் பேச்சாளர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgபெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஐநூறு கிலோவுக்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தினர்,  மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் ரி-என்.ரி ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து – 260 கிலோ, ரி.என்.ரி. சிலப் 85 கிலோ,  குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் மூலவெடிமருந்து – 83 கிலோ,  பெட்ன் ரக வெடிமருந்து – 11 கிலோ,  சி – 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து – 36 கிலோ,  கறுப்புப் பவுடர் – 13 கிலோ,  வெடிமருந்துகள் – 16 கிலோ,  ஆகிய பலதரப்பட்ட வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளனர்.

குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் – 530 கிலோ,  அலுமினியக் குண்டுகள் – 25 கிலோ,  குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் கறுப்பு மற்றும் சிவப்பு நிற சுவிட்சுகள் – 17,300 மற்றும் 517 பியுஸ்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, 55 கிலோ எடையுள்ள இனங்காணப்படாத இரசாயனப் பவுடர்களையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். இவற்றில் 35 கிலோ கறுப்பு நிற இரசாயனப் பவுடரும் 20 கிலோ வெள்ளை நிறப்பவுடரும் அடங்கும்.

ஆர்.பி.ஜி. குண்டுகள் – 44,  கைக்குண்டுகள் – 29, கிளேமோர் குண்டுகள் – 8, ஜொனி ரக கண்ணிகள் – 108, மிதி வெடிகள் – 98,  ரி. 56 ரக துப்பாக்கிகள் உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பொருத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் என்பவற்றையும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையணியினர் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் 58 வது படையினர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது.

ரி-56 ரக துப்பாக்கிகள் – 206,  வெடிக்கவைக்கும் கருவிகள் – 1000,  வெடிமருந்து பொதிகள் – 11,  தற்கொலை அங்கிகள் – 03,  சினைப்பர் ரக துப்பாக்கிகள் – 02,  40. மி. மீ. ரக கிரனைட் லேஞ்சர் குண்டுப் பெட்டிகள் – 03,  ஒட்சிசன் சிலின்டர்கள் – 13,  அசிட் கலன்கள் – 15 அதாவது 5 லீட்டர்   கடல் கண்ணிகள் – 06   சுழியோடி உடைகள் 120 மி.மி. மோட்டார் குண்டுகள் – 44   81 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 13   60 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 39 உட்பட ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
 
 

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும். : வீ. ஆனந்தசங்கரி – தலைவர் த.வி.கூ

Anandasangaree V _ TULF Leaderமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும்  தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென  இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ