விஸ்வா

விஸ்வா

யாழ்ப்பாணத்தில் 153 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளன. மேலும் 350 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளன.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் 153 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் இதுவரை புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் பலர் இருப்பிட வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு கூடார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்குமாறும், யாழ்.முஸ்லிம்களின் மனிதஉரிமைகளுக்கான நலன் விரும்பிகள் என்ற அமைப்பு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் வெள்ளத்தால் பாதைகள் துண்டிப்பு. படகு மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்.

வடமராட்சியையும், வடமராட்சிக் கிழக்கையும் இணைக்கும் மருதங்கேணிப் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்வதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மக்களுக்கு படகு மூலமே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள வடமராட்சிக்கிழக்கு மக்கள் மழையினால் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளனர்.

ஆழியவளை, உடுத்துறை. வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, ஆகிய பகுதிகளில் குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறி அண்மையிலுள்ள ஆலையங்களிலும், மேட்டுப்பகுதிகளிலுள்ள நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வடமாராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் வெள்ளப்பெருக்கினால் தடைப்பட்டுள்ளதோடு அப்பிரதேசத்தின் பல வீதிகளும் சேதமடைந்துள்ளன.

காணாமல்போனவர்கள் தொடர்பாக கொழும்பில் 10ஆம் திகதி போராட்டம்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதியன்று கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மனிஉரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோரைத் தேடியறியும் குழு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு இப்போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை காலமும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்காத நிலையில் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களும், மனிநேய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.வந்துள்ள சிங்கள மக்கள் கோரிக்கை.

யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளை அடுத்து வரும் புதிய ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர வேண்டியுள்ளதாகவும், அதற்கு வசதி செய்யும் வகையில் யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள் கடியேறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாங்கள் குடியேறியுள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு உதவிகள் வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தங்களுக்கு மேலிட உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரை வாழ்த்தும் பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்ந்ததும் இப்பகுதிகளில் அதேபோல் குடியமர்ந்துள்ள தமிழ் குடும்பங்களில் சுமார் 330 குடும்பங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்னர் மீண்டும் அங்கு குடியமரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளியில் நல்லிணக்க ஆணைக்குழு. 146 சாட்சியங்கள் பதிவு.

திருகோணமலை குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் 146 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் 53 பேர் நேரடியாகவும், ஏனையோர் எழுத்து மூலமாகவும் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளனர். முற்பகல் 9.30 மணி தொடக்கம், பிற்பகல் 2மணிவரை சாட்சியங்கள் இடம்பெற்றன.

இச்சாட்சியங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.

யாழ். மாநகரசபை உறுப்பினரும், கிளிநொச்சி. யாழ்.மவாட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அலுவலகங்களின் தலைவருமான மௌலவி சுபியான் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளததாக மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கு முன்னதாக கிளிநொச்சி பள்ளிவாசலில் வைத்து கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர். கிளிநொச்சி நகர்ப்பகுதி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா முதலான பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைவெள்ளதால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரிப்பு.

தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக யாழ். குடாநாட்டில் 3640 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 750 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் சேதடைந்துள்ளன. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடாநாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்கானை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, பருத்தித்துறை, நல்லூர், கரவெட்டி, காரைநகர், சாவகச்சேரி ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நேற்றுவரை 750 வீடுகளும் சேதமுற்றுள்ளன. இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 2ஆயிரத்து 520 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை. கரைச்சி, ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளிலேயே கூடுதலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். முல்லை மாட்டத்தில் ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் அக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வங்கள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள 6000 குடும்பங்களும் மீள்குடியமர்த்தப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அப்பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள் துரிதமாக அகற்றப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் 6ஆயிரம் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளதாகவும், முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் முல்லை மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 6ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பேர் மாத்திரமே இன்னமும் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக வன்னியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரிட்டன் பயணத்தின் போது புலம்பெயர்ந்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லண்டனில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்தானதைக் கண்டித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள மக்கள் படையினரின் நெறிப்படுத்தலில் ஆர்பாட்ட நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு அவர்களின் கைகளில் ஜனாதிபதிக்கு ஆதரவான சுலோக அட்டைகள் வழங்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறிப்பட்ட அளவு மக்கள் மட்டுமே கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடத்தில் மட்டும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளங்களின் பாவனையும், கைத்தொலைபேசிப் பாவனையும் சிறுவர்களிடத்தில் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்து ஒரே வீட்டில் அதிகம் பேர் வசித்து வருகின்ற நிலமையும் இதற்கு இன்னுமொரு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மட்டத்திலும் சிறுவர் துஸ்பிரயோகம் அதகிரித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோத்தை கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலத்திட்டம் அவசியம் எனவும், பெரிய அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.