எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கருத்துச் சுதந்திரத்தை கற்பித்தமைக்காக ஆசிரியர் படுகொலை!!!

கருத்துச் சுதந்திரம்: வல்லரசுகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எப்போதும் ஆபத்தான ஆயுதம்!

பிரஞ்ச் எழுத்தாளர் வோல்ரயர் கருத்துச் சுதந்திரம் பற்றி குறிப்பிட்டது: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it” – “நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உனக்கு சொல்வதற்குள்ள உரிமைக்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்”

ஆம்! நேற்று மாலை மூன்று மணியளவில் பிரான்ஸ் தலைநகரான பரிஸின் புறநகர பாடசாலை ஒன்றின் வரலாற்று விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியுள்ளார். 47 வயதான சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதஅடிப்படைவாதியால் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பாடசாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இதுபற்றித் தெரியவருவதாவது படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் கருத்துச் சுதந்திரம் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ள பிரான்ஸின் தலைநகரில் நடைபெற்ற சார்லி ஹப்துல் படுகொலைக்கு காரணமான மொகம்மது நபியின் கார்ட்டூன்களை காண்பித்து விளக்கி உள்ளார். அதற்கு முன்னதாக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கருதினால் வகுப்பை விட்டு வெளியேறவும் அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் வெளியேற சில இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பில் தொடர்ந்தும் இருந்தனர். அதன்பின் ஒரு பெற்றார் இதனை ஒரு பிரச்சினையாக விடியோவில் பதிவிட இது ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி இச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியது. பிரான்ஸில் வசிக்கும் மொஸ்கோவைச் சேர்ந்த செச்சினிய அடிப்படைவாதி அந்த ஆசிரியரை கழுத்தறுத்து தனது மத அடிப்படைவாதத்தை நிரூபித்துள்ளார்.

Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. – Article 19:

ஒவ்வொருவருக்கும் கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. அவ்வுரிமையானது தடைகளேதுமின்றி சுதந்திரமாக கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கருத்தியல்களையும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளுக்கு அப்பாலும் தேடவும் பெறவும் பரப்பவுமான உரிமையயை வழங்குகின்றது.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் நாகரீகம் நவீனத்தை நோக்கி நகர்ந்த போதும் மனதனின் அடிப்படைச் சிந்தனைகளில் இன்னமும் அடிப்படைமாற்றங்கள் நிகழவில்லை. வல்லரசுகள் முதல் அடிப்படைவாதிகள் வரை இன்னமும் அடிப்படை உரிமைகளை சாதாரணர்களுக்கு வழங்குவதை தங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தானதாகவே நோக்குகின்றனர். அடிப்படைவாதிகளுக்கு மொகம்மது நபிக்கு கார்ட்டூன் வரைந்ததைப் பொறுக்க முடியவில்லை தங்கள் கொலைவெறியயை காண்பிக்கின்றனர் அமெரிக்க பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளுக்கு தங்களைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியே வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை விக்கிலீக்ஸ்யை உருவாக்கிய ஜூலியன் ஆசான்ஜ் மீது பொய் வழக்குகளைச் சோடித்து அவரை படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். சர்வதே மனித உரிமை அமைப்புகள் அவரை விடுவிக்க கோரியும் பிரித்தானிய அரசு தனது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சேவகம் செய்வதில் எவ்வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையயை வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் இந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் மிக மோசமான மனித விழுமியங்களுக்கு புறம்பான செயற்பாடுகளையே செய்கின்றனர். மத எல்லைகளுக்கு அப்பால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் மனிதத்தை நேசிப்பவர்களாகவும் பண்பட்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடவுளை அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வணங்குபவர்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அன்பு பண்பு நேர்மை குன்றியவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

சகிப்புத் தன்மை பொறுமை கருத்துக்களை கேட்கும் இயல்பு கருத்துக்களை அலசி ஆராயும் ஆளுமை நம்பிக்கை தன்னம்பிக்கை இவைகளின் பற்றாக்குறையானது தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்த உலக சமூகத்தை அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டொரேற்ரே போன்ற அரசியல் தலைவர்கள் இந்த அமைதியற்ற வன்முறையான சமூகத்தின் பிரதிபலிப்புகள். சமூகத்தில் மேற்குறிப்பிட்ட விழுமியங்களின் பற்றாக்குறையினால் பண்பற்ற சமூக நோக்கற்ற பிரபல்யவிரும்பிகள் ஆட்சிக்கு வருகின்றனர்.

“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்” – ஔவை பாட்டி சொன்னது. இப்போது இது ரிவேர்ஸில் நடைபெறுகின்றது என்று கொள்ளலாம்.

கோன் இறங்க குடி இறங்கும்! குடி இறங்க காடெரியும்!! மதவெறியர் கழுத்தறுப்பர்!!!

குறிப்பு: பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு இக்கட்டுரையயை சமர்ப்பணம் செய்கின்றேன்.

தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்

“தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை

தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.

உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.

15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.

இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.

தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.

லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.

அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.

இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.

இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை

உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.

ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.

ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.

உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.

நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.

இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.

1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.

இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.

இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.

தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.

இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.

தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.

தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.

தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.

உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

(‘அரங்கம்’ இணையத்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)

தமிழ் மக்கள் மத்தியில் தொடரும் கொலைகளும் தற்கொலைகளும்!! லண்டனில் மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை!!!

இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது மனைவியயையும் மகனையும் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லண்டன் பிரன்பேர்ட்டில் உள்ள க்ளேபொன்ட் லேன் இல் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் ஐவர் படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்று 72 மணி நேரத்தில் லண்டனில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 ற்குப் பிறகு லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இரவு பொலிசார் பலாத்காரமாக சம்பவம் இடம்பெற்ற குடும்பத்தினரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது நடுத்தர வயது மிக்க பெண்ணும் நடுத்தர வயதான ஆணும் மூன்று வயதேயான கைக் குழந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மருத்துவப் பிரிவினர் அவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தனர். மருத்துவவண்டிகள் ஸ்தலத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டது. வான்வெளி மருத்துவ வாகனமும் தருவிக்கப்பட்டது. இவர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
பொலிஸார் கொல்லப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். தேசம்நெற்கு கிடைக்கும் தகவலின் படி கணவர் சிவராஜ் தனது மனைவி காமேஸ்வரியயை யும் மூன்றே வயதான மகனையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர்கள் வாழ்ந்த பகுதியியும் இவர்களின் மாடித்தொகுதியும் ஒரு வளம்மிக்க பகுதி. இவர்கள் அயலவர்களுடனும் மிக நல்ல உறவைப் பேணி வந்துள்ளனர். எப்போதும் குடும்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தம்பதிகள் மலேசியத் தமிழ் குடும்பத்தினர் எனவும் தெரிய வருகின்றது.
அதிகாலை நான்கு மணியளவில் அவர்களுடைய உடல்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!! கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!

பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்த வாழ்கின்ற பொபினி பிக்காசோ ரான்ஸி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக இந்த நொய்ஸ்-லி-சக் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மைத்துனர் குடும்பத்தினரை அறையிலி வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியயையும் பிள்ளைகளையும் கொலையாளி படுகொலை செய்ததாகவும் அவருடைய மனைவி மற்றையவர்களைக் காப்பாற்ற போராடியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி பாரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார். தனது மனைவி பிள்ளைகளைப் படுகொலை செய்தவர் அதன் பின் மைத்துனரின் குடும்பத்தினரையும் தாக்கி உள்ளார். அத்தாக்குதலில் மைத்துனரின் இரு பிள்ளைகள் கொல்லப்பட்டு உள்ளனர். அதன் பின் கொலையாளி தற்கொலை செய்ய முயற்சித்து தன்னை மிகவும் காயப்படுத்திக்கொண்டுள்ளார்.
இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆனால் பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்ட போது அது குடும்பத்தகராறு என்று அதனை பெரிதுபடுத்தாமல் குடும்பத்தினர் பின்னர் சமாளித்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரியவரவில்லை. இன்று இச்செய்தி பிரான்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய செய்தியாகி உள்ளது. நாளை பிரான்ஸ் தேசிய பத்திரிகைகளிலும் முதற்பக்கத்தை நிரப்பும் முக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறியுள்ளது.
கொலையாளி மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்றும் அவர் சந்திப்பவர்களை கன்னியமாக நலம்விசாரித்துக் கொள்பவர் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் அப்பாவித்தனமான இம்மனிதர் எவ்வாறு இப்படியொரு கூட்டுப்படுகைலையயைச் செய்தார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அங்கு குழந்தையயை விற்று வாங்கும் ஒரு விடயம் இடம்பெற்றதாகவும் அதில் கணவன் வழி குடும்பமா? மனைவி வழிக் குடும்பமா என்றொரு சர்ச்சை எழுந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டில் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.
கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இக்கொலைகளை அவர் திட்டமிட்டுச் செய்தாரா? என்ன நோக்கத்திற்காகச் செய்தார்? அவருடைய மனநிலை என்ன? என்பது பற்றிய விபரங்கள் தொடரும் பொஸில் விசாரணைகளில் இருந்தே தெரியவரும்.
இதுவரை தாய்மார் தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவர்கள் பிரித்தானியாவில் மூன்று சம்பவமும் கனடாவில் ஒரு சம்பவமும் அஸ்திரேலியாவில் ஒரு சம்பவமும் இடம்பெற்று இருந்தது. இச்சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் இரு குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தனர்.
மாறாக இவ்வாண்டு ஏப்ரல் பிற்பகுதியில் லண்டனில் தமிழ் தந்தை இரு குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். நேற்றைய பாரிஸ் படுகொலையானது இவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தில் கொலையாளி தாயயைக் கொன்றதுடன் மைத்துனர் குடும்பத்தையும் கொல்ல முயற்சித்துள்ளார். மருமக்களையும் கொன்றுள்ளார். தமிழர்களுடைய அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான கொடூரமான கூட்டுப்படுகொலைச் சம்பவம் இதுவாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது. முன்னைய சம்பவங்களில் கொலையாளிகள் இவ்வாறான ஒரு கொடூரத்திற்கு துணிவதற்கான எவ்வித அறிகுறியயையும் வழங்கவில்லை. தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதாக எண்ணிய மனநிலையுடனேயே கொலைகளில் ஈடுபட்டு தற்கொலை செய்யவும் முயற்சித்தனர். ஆனால் பரிஸ் சம்பவத்தில் கொலையாளி சில அறிகுறிகளை காட்டி இருக்கலாம் அவர் ஒரு காரணத்தோடு செயற்பட்டாரா என்ற எண்ணங்கள் எழுகின்றது.
தமிழ் சமூகம் தன்னுடைய உளவியல் மனநிலை பற்றி நிறையவே ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது.

பாரிஸில் நடந்த கொடிய சோகம்!! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை!!!

பரிஸில் தமிழர் வாழும் பகுதி ஒன்றில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் பற்றி பரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார்.

இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரிவவில்லை.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டிச் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.

கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக உறுத்திப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது.

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்ட இலக்கியங்களை நிராகரிக்கின்றது! – கலந்துரையாடல்

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்டம் சார்ந்த இலக்கியங்களை நிராகரிக்கின்றது என்பதனை விவாதத்துடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வு ஒன்றை ‘திரள்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஓகஸ்ட் 29 இலண்டன் நேரம் மாலை 2:30ற்கு ஆரம்பிக்கும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரத்தில் உள்ளது.

‘நவீன தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தமிழக இலக்கியச் சூழலாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டுள்ள ஈழச் சமூகங்களின் இலக்கியங்களை தமிழக இலக்கியச் சூழல் மேலும் ஓரம்கட்டுகின்றதா என்ற கேள்வி உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் ஈழத்து – தமிழக எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அண்மைக்காலத்தில் இணைந்து மேற்கொள்கின்ற கலந்துரையாடலும் விவாதமுமாக இது அமைய உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கிய ஆய்வாளர் ரியாஸ் குரானா தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இலக்கிய விமர்சகர் அபிலாஷ் சந்திரன் இலக்கிய ஆய்வாளர் முபீன் சந்திகா இவர்களுடன் லண்டனில் இருந்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  இந்நிகழ்வை இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமான வாசன் வழிநடத்துகின்றார். இவர்களது ஒரு மணிநேர முன்னுரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வோர் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைப் பரிமாறவும் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்த நிகழ்வும் இரு மணி நேரத்திற்குள் முற்றுப்பெறும். இந்த இணையவெளி கலந்துரையாடலில் இலங்கை, இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கேள்விகேட்டு கருத்துக்களை பரிமாற விரும்பாதவர்கள் சமகாலத்தில் நிகழ்வை முகநூலில் பார்க்கின்ற வகையில் நிகழ்வு ஒளிபரப்பாக்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘திரள் – உரையாடல் வெளி’ என்ற இவ்வமைப்பு அண்மையில் பிரித்தானியாவில் உள்ள முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு தொடர்ந்துவரும் காலங்களில் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒரு நிகழ்வையேனும் நடத்த உள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தனர். ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ள ஈழத்து இலக்கியச் சூழலை புலம்பெயர்ந்த நாட்டு எல்லைகலைக் கடந்து ஒருங்கிணைத்து புதியதொரு உத்வேகத்தோடு பயணிக்க உள்ளதாகவும் திரள் குழுமம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தது. பின் கோவிட்-19 காலம் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வெளியானது இலக்கிய ஆர்வலர்களை எல்லைகளைக் கடந்தும் சமகாலத்தில் கலந்துரையாடல்களை தொழில்நுட்ப வெளியில் மேற்கொள்வதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகத் தெரிவித்த திரள் குழுமத்தினர் தடைகள் பின்னடைவுகள் கூட புதிய வெளிகளை உருவாக்கி விடுகின்றன எனத் தெரிவித்தனர். முற்போக்கான ஆரோக்கியமான ஒரு இலக்கியச் சூழலை உருவாக்க முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.