எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

‘நினைவேந்தல் உற்சவம்’: தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்!

 

மலையகத் தமிழர்களை அவமானப்படுத்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும் யாழ் நண்பர்கள் அமைபும் இந்திய தூதரகமும்!!
மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டன அறிக்கையை இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது!!!

நாளை மார்ச் 19 இல் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்வு தொடர்பிலேயே இச்சர்ச்சை எழுந்தள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகளுடன் மலையக மக்களின் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை ‘இந்தியதமிழர்கள்’ என அழைப்பிதழ் அடையாளப்படுத்தி உள்ளது. இதனை மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வை யாழ் நண்பர்கள் என்கின்றவொரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நண்பர்கள் என்ற பெயரில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அணுசரணையோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவரகள்: கலாநிதி சிதம்பரம்போமன், கே கோபாலகிருஸ்ணன், சு கமலதாஸ், கலாநிதி கந்தையா சிவராஜா, இரா ரட்ணேஸ்வரன், யாழ் எப் எம் சமனோகரன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை ‘நினைவேந்தல் உற்சவம்’ என அழைப்பிதழ் குறிப்பிடப்பட்டிருந்ததையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கடுமையாகக் கண்டித்து இருந்து. ‘நினைவேந்தல்’, ‘உற்சவம்’ போன்ற சொற்களின் விளக்கத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் ‘யாழ் நண்பர்கள்’ என்ற அமைப்பு அழைப்பிதழைத் தயாரித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம், 200 ஆண்டுகளுக்கு முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூருவது எப்படி உற்சவம் கொண்டாட்டமாகும் என்று கேள்வி எழுப்பியதுடன் இது 200 வருடங்களுக்கு முன் உயிரிழந்த மலையக மக்களை மலையகத் தமிழர்களையும் அவர்களது பரம்பரையையும் அவமானப்படுத்தும் செயல் எனக் கண்டித்துள்ளனர்.

200 ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள் பிரித்தானியர்களால் இலங்கைக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக; அவர்களுக்கு பொய்வாக்குறுதிகள் அளித்து; அவர்களை அவர்களது சொந்தபந்தங்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து; அடிமைகளாகக் கொண்டுவந்த நிகழ்வு வரலாற்றின் மிக மோசன நிகழ்வு. அன்று முதல் இன்று வரை அந்த மலையக மக்கள் தேயிலைக் கொழுந்துகளை தங்கள் முதுகில் சுமந்து தங்கள் முதகெலும்பை முறித்து இலங்கையின் பொருளாதாரத்தின் முதகெலும்பாக இருந்தவர்கள். அவர்களுடைய இந்த வலி மிகுந்த வரலாற்றை அது பற்றிய எவ்வித உணர்வும் பொறுப்புமற்ற மனிதர்கள் வெறும் சம்பிர்தாயத்திற்காக செய்ய முற்பட்டதன் விளைவுதான் இது.

இந்நிகழ்வு வலி மிகுந்த மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவிற்கொள்ளும் நிகழ்வு. இது நினைவேந்தல் என்ற உயிர்த் தியாகம் அல்ல. இது உற்சவமோ கொண்டாட்டமோ அல்ல.

மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றத்தின் கண்டன அறிக்கை பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களது வேர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுடன் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது; பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்காக இந்தியத் தமிழர் என்று குறிப்பிட்டதை, சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது உத்தியோகபூர்வமாகவும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அம்மக்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்றே அழைக்கின்றனர். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட வேண்டும்” என்றும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் “ஈழத் தமிழர்கள் என்ற பதம் சனத்தொகைக் கணக்கெடுப்பில் இல்லை. அதில் ஸ்ரீலங்கன் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்ளை ஈழத் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகின்றனர். அது அவர்களுடைய உரிமை” என்பதையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவ்வறிக்கையில் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சார்பில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்: கலாநிதி எஸ் கெ நவரட்ணராஜா (Senior Lecturer, Engineering, University of Peradeniya), ரி ஜெயானந்தராஜா (Attorney-at-law, Colombo), பி சுந்தரசன்; (Pharmacist, Hong Kong) எஸ் விஜயகுமார் (Attorney-at-law, Ratnapura).

இந்நிகழ்வை சிறுபிள்ளைத்தனமாக ஏற்பாடு செய்த மொழியும் வரலாறும் தெரியாத யாழ் நண்பர்கள் அமைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லண்டனில் வாழும் அரசியல் விமர்சகரும் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான ஒருவர்: யாழ் நண்பர்கள் அமைப்பில் உள்ளவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக் கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் பொன் பாலசுந்தரம்பிள்ளை, ந சண்முகலிங்கன் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். அடுத்தடுத்து வந்த இவர்களுடைய நிர்வாகத்தின் கீழேயே யாழ் பல்கலைக்கழகத்தின் தரம் மிகத் தாழ்ந்து அதன் கடைநிலையை எட்டியதுடன் குறிப்பாக கலைத்துறை விரிவுரையாளர்களின் அந்தப்புரமாக்கப்பட்டது. இவர்கள் விட்டுச்சென்ற துச்சாதனர்கள் இன்றும் கலைத்துறையில் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். யாழ் சமூகம் சார்ந்த இத்துணை வேந்தர்களோ விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ இதுவரை குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அது பற்றிய அறிவும் சிந்தனையும் அவர்களிடம் இல்லை. இவர்கள் மலையக மக்களின் வலி மிகுந்த வரலாற்றை ‘நினைவேந்தல் உற்சவம்’ என்று குறிப்பிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரொக்கர்களும் தான். தமிழர்களின் கல்வி நிலை இவ்வளவுக் வீழ்ந்ததற்குக் காரணம் இவர்கள் உருவாக்கிய பெரும்பாலும் சமூக அக்கறையற்ற இரண்டாம்தர பட்டதாரிகள் தான் வடக்கு கிழக்கின் கல்விக் கட்டமைப்பிலும் ஏனைய கட்டமைப்புகளிலும் உள்ளதுதான்.

இவர்களுடைய இச்செயல் யாழ் சமூகம் பற்றி மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் பற்றியும் தவறான புரிதலை ஏனைய சமூகங்கள் மத்தியில் விதைக்கின்றது.

தங்களுடைய அரசியல் அபிலாசைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஈழத்தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் பொறுப்புடன் செவிமடுத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடமாகாணத்தில் தற்போது கணிசமான நாற்பது வீதமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் வட மாகாணத்தில் இன்னமும் அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பூஜ்ஜிமாகவே உள்ளது. இந்திய அரசுக்கோ இந்திய தூரகத்திற்கோ தங்களுடைய நாட்டில் வாழும் மக்கள் மீது என்ன கரிசனை உள்ளது என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை. ஆகவே அவர்கள் மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்க முற்படுவது ஒன்றும் அம்மக்கள் மீது உள்ள கரிசனையினால் அல்ல. சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈழத் தமிழர்களை பயன்படுத்தியது போல் மலையகத் தமிழர்களையும் தன்னுடைய முதலாளித்துவ நலன்களைப்பாதுகாப்பதற்கு பயன்படுத்தவே.

இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு மிகத் தீவிரமாகி வருகின்றது. அதற்கான புரோக்கர்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர்கள் நாம் அனைவருமே இலங்கை மக்களாக இருப்பது மட்டுமே எம் அனைவருக்கும் பாதுகாப்பு.

பிரேமானந்தா – பிரேமகுமார் – ஜெயந்திரன் கொடியவர்களின் கூடாரமாகும் லண்டன், பாரிஸ் சைவ ஆலயங்கள்!

இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார். பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி.

இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர்.

பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றுவதில் அவருக்கு உறுதுணையாக நின்றது ஹைகேற்றில் உள்ள உயர்வாசற் குன்று முருகன் ஆலயம். ஆலயத்தின் நிர்வாகசபைக்கான தேர்தலில் அதில் போட்டியிட்ட தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன், தான் தெரிவு செய்யப்பட்டால் சமூக விழுமியங்களைப் பேணுவேன் என அவர் காங்கேயன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் செப்ரம்பர் 22இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் பாலியல் குற்றவாளிக்கு துணைபோவதாகவே ஆலயத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.

லண்டன் ஹைகேற் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவராக யாழ் காரைநகரைச் சேர்ந்த கதிரவேலு நாகராஜா உள்ளார். தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன் செயலாளராகவும் யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் பார்த்தீபன் பொருளாளராகவும் உள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா சோதிலிங்கம் அறங்காவல் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த அறங்காவலர் சபையினால் நடத்தப்படும் ஹைகேற் உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜா மிகுந்த செல்வாக்கை கொண்டிருந்தார். இவருடைய வழக்கு வூட்கிறீன் நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆலயத்தில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விசேட பூசைகள் நடாத்தப்பட்டது. தண்டனை குறித்த நீதிமன்ற அமர்வின் போதும் பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக பார்த்தீபன் நீதிமன்று சென்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களுடன் தேசம்நெற் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்கள் யாரும் இணைப்புக்கு வரவில்லை. அவர்களுக்கு குறும் செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால் பதிலில்லை. தனாதிகாரி பார்தீபன் முதற் தடவை எடுத்த போது “வேலையாக உள்ளேன் பிறகு எடுக்கிறேன்” என்றார். ஆனால் அவர் பின்னர் எடுக்கவில்லை.

இரு ஆண்டுகளுக்கு முன் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பிரேமகுமாரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொலிஸார் ஹைகேற் முருகன் ஆலயத்திற்கு அறிவித்திருந்தனர். அத்தோடு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய தொடர்ச்சியான கூட்டங்கள் சூம் ஊடாக நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அப்போது ஆலயத்தின் தலைவராக இருந்த சபாபதிப்பிள்ளை ஸ்றிகாந்தா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், மெற்ரோ பொலிட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என மூவர் கலந்துகொண்டு நிலைமையை அவதானித்து வந்தனர். நாகராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபை பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட பிரேமகுமாரோடு நெருக்கமாக இருந்தது.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே முதலில் உருவானது. 1975இல் சபாபதிப்பிள்ளை இவ்வாலயத்தை உருவாக்கினார். தமிழ் ரைம்ஸ் என் எஸ் கந்தையா, பேர்மிங்ஹாம் பாலாஜி கோயிலை உருவாக்கிய டொக்டர் ராஓ, லண்டனுக்கு வெளியே ஒரு கோவிலை உருவாக்கிய வைரவமூர்த்தி, விநாயகமூர்த்தி, விம்பிள்டன் பிள்ளையார் கோவிலை உருவாக்கிய ரட்ணசிங்கம், ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தை உருவாக்கிய குணசிங்கம் ஆகிய ஏழு பேர் இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். சபாபதிப்பிள்ளையின் மகனே முன்னைய நிர்வாகத் தலைவராக இருந்த டொக்டர் ஸ்றிகாந்தா. இவர் பிரித்தானியாவின் மிகப்பிரசித்தி பெற்ற ‘மூர் ஐ ஹொஸ்பிரல்’லில் தசாப்தங்கள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே மிகக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. இவர்களிடம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 45மில்லியன் பவுண்கள் எனமதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும் இவ்வாலயம் இதுவரை குறிப்பிடத்தக்க சமூக செயற்பாடுகளை தாயகத்திலோ லண்டனிலோ மேற்கொள்வதில்லை.

பிரேமானந்தா பற்றிய நேர்காணலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் கோயில்களைக் கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பதாக்க குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் த பாண்டியன். அதில் அவர் லண்டனில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

பாண்டியன் குறிப்பிட்டது போல் ஆர் ஜெயதேவன் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் லண்டனில் இருக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அங்கு வருகின்ற ஆலய வருமானத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பொதுத் தொண்டுகளைத் தாயகத்தில் மேற்கொண்டு வந்தது. அப்போது ஆலய நிர்வாகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எஸ் கருணைலிங்கம் ஆலய வருமானத்தில் செலவு போக மூன்றிலொரு பங்கை தாயக மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். சில தடைகள் இருந்தாலும் அது இன்றை வரைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து லண்டனில் புலிகளும் இரு கோவில்களை நிறுவினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் மற்றையது என்பீல்ட் நாகபூசணி ஆலயம். இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர் ஜெயதேவனை விசாரணைக்கு இலங்கைக்கு வரவழைத்து அவரைத் தடுத்து வைத்து படுகொலை செய்யவும் முயற்சித்தனர். அக்காலகட்டத்தில் தேசம் உட்பட பலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து அழுத்தங்களை வழங்கினர். அதன் பின் பிரத்தானிய அரசினதும் அழுத்தங்களால் ஆர் ஜெயதேவன் விடுவிக்கப்பட்டார்.

பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதல் வழங்கியவர்களின் சமூக அக்கறையற்ற தன்மையை தேசம்நெற் வன்மையாகக் கண்டித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கலாநிதி நித்தியானந்தனின் சமூகப்பொறுப்பற்ற செயலை தேசம்நெற் அம்பலப்படுத்தியது. ஏனையவர்களும் அம்பலப்படுத்தப்படுவார்கள் என தேசம்நெற் எச்சரித்தது.

அதற்காக சமூவலைத் தளத்தில் ஆர் ஜெயதேவன் ஊடகவியலாளரான த ஜெயபாலன் (என்) மீது கொதித்து எழுந்து பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில் ‘குற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற சட்டத்தின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜா நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பின்னரே நாற்பது பேர் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனை நீதிமன்றத்தில் நீதிபதியும் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். “பிரேமகுமார் ஆனந்தராஜா ஒரு பாலியல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது தெரியப்படுத்தப்பட்டே இந்நற்சான்றிதழ் பெறப்பட்டது” என்பதை நீதிபதி பெப்ரவரி 02 தண்டனைக் காலத்தை தீர்மானிக்கும் வழக்கின் போது உறுதிப்படுத்திக்கொண்டார்.

வன்முறையான கிரிமினல் குற்றங்கள் கொலைகள் உட்பட, நிதி மோசடிகள் போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கணப்பொழுதின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வன்முறைக் குற்றங்கள் தேவையின் உந்துதலால் நிதிமோசடிகள் நிகழலாம். அவ்வாறான சமயங்களில் நற்சான்றிதழ் வழங்குவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆனால் மிகத் திட்டமிட்டு சாதுரியமாக இளம்பெண்களைத் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு ஆலயங்களை கூடாரமாக்குவது அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அயோக்கியத்தனமான செயல். இவ்வாறான சமூகத் தலைவர்களை யோக்கியமற்ற அயோக்கியர்கள் என்றால் மிகையல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கலாநிதி நித்தியானந்தனின் தமிழ் பள்ளியில் படித்த குழந்தை. ஆனால் கலாநிதி நித்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவனைக் கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தான் கையெழுத்திட்டதாக சிலருக்கு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அயோக்கியத்தனத்துக்கு ஆர் ஜெயதேவன் வக்காலத்து வாங்குகின்றார். ஈழபதீஸ்வரர் ஆலயம், ஹைகேற் முருகன் ஆலயம் போன்றன முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமாக வேண்டுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமேயொழிய காமுகர்களுக்கு புகலிடமாகவும் அவர்களைக் காப்பாற்ற கையெழுத்து வேட்டையும் நடத்தக்கூடாது. இவர்களுக்கு பாடம் புகட்ட இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், குருதுவாராக்கள் கொடியவர்களின் கூடாரமாகவும் பணம் சுரண்டுபவர்களாகவும் இருப்பதற்கு முற்றுப்புள்ளி முதலில் வைக்க வேண்டும். ஆனால் இவ்வாலயங்கள் அப்படிச் செய்வதில்லை. பிரான்ஸின் லாகுர்னே இல் உள்ள சிவன் ஆலயத்தின் உரிமையாளரான வெற்றிவேலு ஜெயந்திரன் அதன் வருமானத்தைக் கொண்டு நல்லூரடியில் ‘லக்ஸ் ஹொட்டல்’ என்ற பெயரில் காமவிடுதியை நடத்தி வருகின்றார். அதற்காக ஒரு சில மணித்தியாலங்களுக்கு ஹொட்டலை ‘புக்கிங்’ செய்யும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றது. பல இளம் பெண்களின் வாழ்வைச் சீரழித்த ஜெயந்திரன் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையில் உள்ள குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு எடுப்பதாகவும் பின் அவர்களுக்கு போதையூட்டி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாகவும் இந்த ஹொட்டலுக்கு சாரதியாக இருந்தவர்களில் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு இந்த லக்ஸ் ஹொட்டலில் ஒரு ‘ரூம் புகிங்’ செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “அண்ணை இந்த ஹொட்டல் நல்லதில்லை. அது மற்றைய விசயங்களுக்குதான் பாவிக்கிறவை” என்றார் அச்சாரதி. “இப்பதான் இப்படியா?” என்று கேட்டபோது, “அப்ப இருந்தே இப்படித்தான்” என்றார் அவர். “உங்களிடம் யாராவது முறையிட்டார்களா?” என்று கேட்டபோது, “ஆறு வருசத்துக்கு முதல் ஒரு நாள் ஒரு வடிவான நல்ல வெள்ளை கலரான பொம்பிளப் பிள்ளை அழுதுகொண்டு ஓடி வந்தாள். தனக்கு எதனையோ தந்து குடிக்கச் சொன்னதாகவும் தன்னை துஸ்பிரோகம் செய்ய முற்பட்டு தன்னை அடித்ததாகவும் சொன்னாள்” என்றார். “அதைவிட நிறைய கேள்விப்பட்டு இருக்கிறன். இதையெல்லாம் பார்த்துப் போட்டு பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் என்று போட்டுத்தான் அங்கயிருந்து விலத்தீட்டன்” என்றார். “அவன் கோயில் வைச்சிருக்கிறான் காசிலை குறைவிடான். ஆனால் வாயைத் திறந்தா ஒரே தூசணமும் சாதியை இழுத்தும் தான் கதைப்பான். எனக்கு ஒரு மாதிரியாத் தான் இருக்கும்” என்றார் அந்தச் சாரதி. அவர் இப்போது யாழில் இல்லாவிட்டாலும் அவருடைய பாதுகாப்பிற்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குடுமி ஜெயா என்று அறியப்பட்ட கைதேர்ந்த ஒரு அயோக்கியனை கடவுளுக்கு இணையாக வைத்து லாகுர்னே சிவன் கோவிலில் காசுக்காகப் பாடி கூத்தடிக்கின்ற ஒரு காவிக்கூத்தாடி தான் இந்திரநாதன் நாகலிங்கம். பாரிஸில் குடும்பமாக வாழ்கின்ற இவருக்கும் இளவயதில் மகளும் இருக்கின்றார். ஆனால் இவர் குடுமி ஜெயாவின் நெருங்கிய நண்பரும் கூட. புலம்பெயர் தேசத்தில் இருந்து அயோக்கியர்களுக்கும் காமுகர்களுக்கும் கதைவசனம் எழுதும் இந்திரன் என்று அறியப்பட்ட இவர் பொதுமேடைகளில் சமூகம் பற்றி சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றார். பாடுகின்றார். ஆனால் நடைமுறையில் அவரது பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களை கடவுளோடு இணைத்து சமூகத்தை சீரழிக்கின்றார்.

பிரித்தானியாவில் உள்ள நியுகாஸ்டில் உதைபந்தாட்டக் கழகத்தை சவுதியரேபியா கொள்வனவு செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. காரணம் சவுதியரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மன் ஊடகவியலாளர் ஜமால் கொஷொக்கியை படுகொலை செய்தவர் என்பதால் அது உதைபந்தாட்டக் கழகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சர்ச்சை எழுத்துள்ளது. ஒரு உதைபந்தட்டக் கழகம் கூட தன்னுடைய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற போது ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கியுள்ள கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி வருகின்றது.

பிரித்தானியாவில் தமிழர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ஒப்பிரேசன் என்வர் என்ற ஸ்கொட்லன்ட் யாட்டின் பொலிஸ் நடவடிக்கையோடு ஊடகவியலாளராக நானும் அன்றைய கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஈடுபட்டிருந்தோம். வேறும் பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதனை தலைமை தாங்கி நடத்தியது பின்நாட்களில் துணை ஆணையாளராக இருந்த சேர் ஸ்ரிபன் ஹவுஸ். அவர் ஜனவரி 2022இல் உள்துறை அமைச்சு லோசகருக்கு கூறிய ஒரு சொல் பெரும் அதிர்வலையை மார்ச் 2, 2023இல் ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்புணர்வு’ rape என்பதை அவர் ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று குறிப்பிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சேர் ஸ்ரிபன் ஹவுஸ் கடுமையாக தன்னுடைய மறுப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு என்ற மிகக்கொடுமையான குற்றச்செயலை ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று மிதமாகக் குறிப்பிட்டு அக்குற்றத்தின் கொடுமையை சேர் ஸ்ரீபன் ஹவுஸ் குறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிக உறுதியாக போராடுகின்ற நாடுகளில் ஆலயங்களை வைத்திருக்கும் எம் ஆணாதிக்க ஆசாமிகள் இக்குற்றங்களை இழைக்கும் கொடியவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்ட இளம்பெண்களையும் அப்பிள்ளைகளின் தாய்மார்களையும் எள்ளிநகையாடுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்தினால் அதனை gutter reporting, gutter journalism என்று கொக்கரிக்கின்றனர்.

பெண்களை கீழானவர்களாக நோக்குகின்ற பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கு அவர்களது நடத்தையே காரணம் என்று எண்ணுகின்ற பெண்கள் சொல்வதை நம்ப மறுக்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை தான் இந்நிலைக்குக் காரணம். இந்த ஆணாதிக்கச் சிந்தனை இருக்கின்ற வரை பிரேமானந்தா, பிரேமகுமார், குடுமி ஜெயா போன்றவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். எங்களுடைய ஆலயங்கள் முற்று முழுதாகவே ஆண்களுடைய – ஆணாதிக்க வாதிகளுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இயற்கை நிகழ்வான தீட்டை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் இந்த ஆணாதிக்க அயோக்கியர்களை ஆலயங்களில் இருந்து விரட்டாதவரை ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாகவே அமையும். ஹைகேற் முருகன் ஆலயம், வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம், லாகுர்னே சிவன் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட பெண்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆசாமிகளை அறங்காவலர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த ‘உண்டியல்’களை காயவிட்டால் போதும்.

பெண்களை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்த: பெண்களுக்கு போதைவஸ்தூட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதை தடுக்க, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த ஆலயங்களின் உண்டியலை காயப்போடுங்கள். உண்டியலைக் காயப்போட்டால் ஆசாமிகள் ஓடிவிடுவார்கள். கடவுள் உண்டியலுக்குள் போடும் பணத்தை வைத்து யாருக்கும் அருள்பாலிப்பதில்லை. அதனால் சாமிக்கு லஞ்சம்கொடுக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.

இளம் மாணவியை வாகனத்தால் மோதி மரணத்தைத் தந்த ரெலோ மூத்த போராளி ஜேர்மனியில் மரணம்!

கட்டிளம் பெண்ணான வாழ்க்கை பற்றிய பல்வேறு கனவுகளோடு வாழ்ந்த மிதுலா அப்போது நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆண்டு ஒன்பதில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த மிதுலா, 1995 சூரயக்கதிர் இராணுவ நடவடிக்கையோடு, தங்கள் சொந்த ஊரான யாழ் தாவடி (கொக்குவில்) பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் பல பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இறுதியில் கொழும்பு செல்லாம் எனத் தீர்மானித்து வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று முகாமில் தங்கியிருந்தனர். அப்படித் தங்கியிருந்த காலத்தில் தான் மிதுலா நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் படித்தார். மிதுலாவோடு மூன்று வயது மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார். குடும்பப் பொறுப்பு மிக்க மிதுலா பொறுப்பில் தான் பண நிர்வாகம் இருந்தது. அவ்வளவு பொறுப்பு மிக்கவர். அவர் கடைசியாக எழுதிய பரீட்சையில் வழமைக்கு மாறாக முதலாம் பிள்ளையாகவும் வந்திருந்தார். படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட காலமது. மிதுலா தனது அக்காவுக்கு எழுதிய ஓட்டோகிராப்யை கீழே காணலாம்.

அத்தங்கையின் விரும்பம் போலவே அதையும் தாண்டி கல்வியில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார் சகோதரி கங்கா. இவ்வாறான அன்புக்கும் பாசத்திற்குமரிய தங்கையுடன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள அந்தத் தங்கை தன்னோடு இல்லை என்ற ஏக்கத்துடனேயே கங்கா இன்றும் தனது நாட்களை கடந்து செல்கின்றார். கங்காவிடம் இருந்த அந்தத் தங்கையைப் பிரித்தது ?

1997 செப்ரம்பர் 20 அதுவொரு சனிக்கிழமை மிதுலா தன்னுடைய சகோதரி கங்காவோடும் கங்காவின் நண்பியோடும் உல்லாசமாக வெளியே புறப்பட்டு நெரிக்குளம் மகாவித்தியாலய முகாமில் இருந்து வந்து செட்டிகுளம் பிரதான வீதிக்கு வந்தனர்.

அதே செட்டிகுளம் சந்திக்கு அருகில் உள்ள வீட்டில் வின்சன் என்றழைக்கப்படும் கந்தையா அகிலன் தன் நண்பர்களோடு மது அருந்தி குடிபோதையில் இருந்தார். இவர் ஒரு தமிழீழ விடுதலை இயக்கப் போராளியும் கூட. இலங்கை வாகன ஓட்டுனர் பத்திரம் இல்லாத இவர் இந்தியாவின் வாகன ஓட்டுனர் பத்திரத்தையே வைத்திருந்தார். இவருக்கு லொறி போன்ற பெரிய வாகனத்தை ஓட்டிய அனுபவமும் இருக்கவில்லை. அந்நிலையில் அங்கிருந்த லொறியை எடுத்து ஓட்டுகிறேன் என்று வீராப்பு பேசி லொறியை வேகமாக ஒட்டிக்கொண்டு செட்டிகுளம் வீதிக்குள் நுழைந்தார் வின்சன்.

அதேசமயம் மிதுலா, சககோதரி கங்கா, கங்காவின் நண்பி வீதியின் ஓரமாக நடந்துகொண்டிருந்தனர். கங்கா தூரத்தே ஒரு லொறி வேகமாக வருவதை கண்டுவிட்டார். ஆனாலும் தாங்கள் வீதியின் ஓரத்தால் செல்வதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிகழப் போகும் அனர்த்தத்தம் பற்றி கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.

ஆம் வின்சன் மது போதையில் ஓட்டிவந்த லொறி இப்பெண்கள் மீது மோதி அருகில் சென்றுகொண்டிருந்த ரக்ரரையும் தாக்கி அப்பகுதியையே புழதி மண்டலமாக்கியது. அந்தப் புழதிக்குள் லொறியை ஓட்டி வந்த வின்சன் லொறியிலிருந்து இறங்கி அவ்விடத்தை விட்டே ஓடிவிட்டார். மிதுலா தலையில் ஏற்பட்ட பாரிய அடியினால் சிதைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கங்காவின் நண்பி பாரிய காயங்களுக்கு உள்ளானார். கங்கா அதிஸ்ரவசமாக சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்.

விசயத்தைக் கேள்விப்பட்டு நெல்லிக்குளம் முகாமில் இருந்த மிதுலாவின் சகோதரன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், இன்னும் சிலர் லொறியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அதில் மிதுலாவின் சகோதரனும் ஒருவர். அதற்குள் அப்போது வவுனியாவுக்கு ரெலோ பொறுப்பாளராக இருந்த குகனும் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள், சம்பந்தப்பட்ட சாரதி வின்சனுக்கு தகுந்த தண்டணை வழங்குவதாக உறுதியளித்தனர். மரண நிகழ்வுக்கான ஏற்பாடுகளையும் குகன் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிக்கிரியைகளின் போது வின்சன் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடிக்கப்பட்டார்.

ஒரு உயிர் இழப்பை எவ்வளவு பணமும் ஈடு செய்யாது, இழப்பீடாக 50,000 ரூபாயை வழங்கினர். குடும்பத்தினர் அதனை ஏற்க மறுக்கவே, பணத்தை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றனர்.

காயப்பட்ட கங்காவின் நண்பி குணமடைய இரு ஆண்டுகள் ஆனது. காலங்கள் உருண்டோட வவுனியா ரெலோ பொறுப்பாளராக இருந்த குகன் இயக்க மோதலில் கொல்லப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி கொலையைச் செய்த வின்சன் வவுனியா பொறுப்பாளரானார். இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அதின் பின் வின்சன் எப்படியோ ஜேர்மனி வந்தடைந்தார்.

கங்காவும் பிற்காலத்தில் அங்கு வந்து சேர்ந்தார். காயப்பட்ட கங்காவின் நண்பியும் ஜேர்மனியிலேயே வாழ்வதாகவே அறிய வருகின்றது. ஆனால் இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

இந்நிலையிலேயே ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் முகநூலில் கந்தையா அகிலன் மறைந்த செய்தியை வெளியிட்டு அஞ்சலியைச் செலுத்தி இருந்தார். அதற்கு மிதுலாவின் சகோதரி இடம் குறிப்பு கீழேபதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தையா வின்சன் இந்த விபத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. ஆனால் அவருடைய பொறுப்பற்ற செயல்: மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது, முன் அனுபவமில்லாமல் அந்த வாகனத்தை பொது வீதியில் ஓட்டியது இரண்டுமே இந்த விபத்துக்குக் காரணம். இந்தப் பொறுப்பற்ற மனிதரை ‘மூத்த போராளி’ என அவருக்கு ஒரு அந்தஸ்த்தை வழங்குவது இன்னமும் மோசமான செயல். இவ்வாறான சில்லறைத்தனமான பொறுப்பற்ற செயல்களால் தான் நாடு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களளவில் பொறுப்புடன் செயற்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியமைக்க முடியும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சிகளில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களை தூக்கி எறியத் தயாராக வேண்டும். மக்களும் பொறுப்பற்றவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்த வேண்டும். மாறாக மௌள்ள மாரிகள், முடிச்சவிக்கிகள், பொறுக்கிகள் என கோயில்களும் அரசியல் கட்சிகளும் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் பொலிஸார் வீதி விபத்துக்களை பதிவு செய்த போது எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். ஆனால் வீதி விபத்துக்களில் காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் கடந்து இறந்தும் உள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது 2020இல் வீதி விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணக்கை 4,200க்கும் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தினமும் பதினொருவருக்கு அதிகமானவர்கள் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றனர்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.) பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. ஒரு வீதம் வேகத்தை அதிகரிப்பது உயிரிழப்பை நன்கு வீதத்தால் அதிகரிக்கின்றது. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

துரதிஸ்ட்டவசமாக அன்று மிதுலாவை மோதிய வாகனத்தை அடித்து நொருக்கிய அண்ணனும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் கொல்லப்பட்டார். முன்னாள் போராளியான இவருடைய இன்னுமொரு சகோதரரும் மூத்த போராளியாக உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்இ சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்இ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல்இ அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்இ 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252.

மிதுலா விபத்தில் கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் இலங்கையின் வீதிகள் இன்னமும் எமலோகத்திற்கான வீதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை மட்டுப்படுத்த 2030இல் வீதி விபத்துக்களை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐநா பொதுச் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால் இலங்கையின் வீதிகள் என்னவோ மரணப் பொறியாகவே மாறி வருகின்றது. பொறுப்பற்ற மனிதர்களை சாரதி இருக்கையில் இருந்து தூக்கியெறிவதே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.

 

பிரபாகரனின் கடைசி மணிநேரங்கள்… என்னதான் நடந்தது? ஏன் மே 17 திகதி வரை காத்திருந்தனர்? Project Beacon, Operation Beacon பற்றி ஏன் பேசுகின்றார்கள் இல்லை?

“பேச்சு வாரத்தைக்கு வாருங்கள். அதனை விட வேறு வழியேதும் இல்லை” எனறார் விசாக தர்மதாஸ. இவருடைய மகன் இராணுவத்தில் இருந்தவர் கிளிநொச்சியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களைப் பெற்றவர்களதும் அமைப்பின் ஸ்தாபகரான விசாகா தர்மதாஸாவை நான் லண்டனில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இந்த நேர்காணலை தமிழர் தகவல் நடுவத்தின் காலம்சென்ற பொறுப்பாளர் வைரமுத்து வரதகுமார் ஏற்பாடு செய்துதந்திருந்தார். வரதகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிக வேண்டப்பட்டவர். பிரபாகரனின் மிக நெருங்கிய வட்டத்தில் ஒருவர். எதிர்பாராத விதமாக இந்நேர்காணல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிப்பதற்கு ஓராண்டு முன்பாக 2008 மே 18 இல் நடைபெற்றது. பிரித்தானியாவில் சறே பகுதியில் விசாகா தர்மதாஸ தங்கியிருந்த வீட்டில் தான் இந்நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

2009 பெப்ரவரி 3 இல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கத்தை லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து சந்திதேன். சிவாஜிலிங்கம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த யுத்தத்தின் போது மேற்குநாடுகளில் தான் இருந்தனர். இச்சந்திப்பை முன்னாள் ரெலோ உறுப்பினர் த சோதிலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் பிரபாகரனின் ஊரவர். உறவினர். பிரபாகரனை தன்னுடைய பதின்ம வயதில் காப்பாற்றியவர். பிரபாகரனுடைய பெற்றோருக்கும் இறுதியில் கூட இருந்து செய்ய வேண்டியனவற்றைச் செய்தவர். விடுதலைப் புலிகள் வேறொரு உலகத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவதே தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உகந்தது என மே 17 2009 இல் புலிகள் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரேயே பெப்ரவரி 3, 2009 இல் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

இலங்கையில் அறியப்பட்ட மிக முக்கியமான ஊடகவியலாளரான தராக்கி என்று அறியப்பட்ட தர்மரட்ணம் சிவராம் தமிழ்நெற், தமிழ் கார்டியன் ஆகிய ஊடகங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர் படுகொலை செய்யப்பட்டது ஏப்ரல் 29, 2005. அப்போது ஜனாதிபதியாக சந்திரிகாகுமாரதுங்க இருந்தார். பிரதம மந்திரியாக மகிந்த ராஜபக்ச இருந்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது நவம்பர் 19, 2005இல். ஆனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னரேயே அதாவது தராக்கி சிவராம் கொல்லப்படுவதற்கு முன்னரே அவர் ‘Project Beacon’ பற்றித் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் பேசியுள்ளார். இந்தப் புரஜக்ற் பீக்கன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுப்படுத்துவதற்கான திட்டம் இணைத் தலைமை நாடுகளான: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளால் வரையப்பட்டிருந்தது. நோர்வே பேச்சுவாரத்தை பற்றிய விபரங்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வந்ததால், இந்தியாவும் இந்த புரஜக்ற் பீக்கன் பற்றி நன்கு அறிந்தே இருந்தது.

தராக்கி சிவராமின் நெருங்கிய உறவினரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்கு அழுத்தம் வழங்குவதற்கு இத்திட்டம் வரையப்பட்டது என்றும் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினால் அவர்கள் ஓரம்கட்டப்படவார்கள் என்ற எச்சரிக்கையை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் புலிகள் இந்த எச்சரிக்கையை பெரிதாகக் கருதவில்லை. ரணிலின் சதி என்றே கருதினர். ஏற்கனவே கருணாவை தங்களில் இருந்து பிரித்து இயக்கத்தை பலவீனப்படுத்தியதற்காக ரணிலுக்கு பாடம் புகட்ட புலிகள் நினைத்தனர். ‘மொக்கு சிங்களவன்’ என்று எண்ணும் புலிகள் ரணில் ‘நரித்தனமாகப் பேச்சுவாரத்தைக்கு அழைத்து இழுத்தடிப்பான்’ அதனால் மஹிந்தவை கொண்டுவந்தால் அடித்து நொருக்கி தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று கருதினர். அதனால் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க விரும்பிய வடக்கு கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த புலிகள், மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். அதற்காக 200 கோடி ரூபாய் பணத்தை ராஜபக்சக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய தலைவர் பிரபாகரனின் சாணக்கியம்.

பதவிக்கு வந்த ராஜபக்சக்கள் சில வாரங்களிலேயே டிசம்பர் 2005இல் இணைத் தலைமைநாடுகளின் ‘Project Beacon’ னை திருப்திப்படுத்தும் வகையிலான ‘Operation Beacon’ இராணுவத் திட்டத்தை இணைத்தலைமை நாடுகளிடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து கையளித்தனர். புலிகள் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டாததால் ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் பச்சைக்கொடி காட்டினர். கண்துடைப்பிற்காக அல்லது எதிர்காலத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது, பொது மக்களின் இழப்புகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இணைத் தலைமை நாடுகளும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன. தங்களுக்கு தேவையான வளங்களையும் இலங்கை அரசு கேட்டிருந்தது. இராணுவ தளபாடங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் என்பன இலங்கைக்கு தாராளமாக வழங்கப்பட்டது.

புலிகளுக்கு மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் புலிகள் விழ ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அன்ரன் பாலசிங்கமும் ஒப்பிரேசன் பீக்கன் பற்றி அறிந்திருந்தார். தனிப்பட்ட சிலருடன் தலைவரின் எதிர்காலம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

யூலை 21 2006இல் புலிகள் மாவிலாற்றின் சுளியை மூடி அப்பகுதிச் சிங்கள விவசாயிகளுக்கான நீரோட்டத்தை தடுத்தனர். அரசு மாவிலாற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல புலிகளையே துடைத்து அழிப்பதற்கான ‘ஒப்பிரேசன் பிக்கன்’ திட்டத்தை அடுத்த 5 நாட்களில் 2006 யூலை 26இல் மாவிலாற்றில் ஆரம்பித்தது. இரண்டு நாட்களில் மாவிலாற்றில் இராணுவம் நிலைகொண்டது. ஓகஸ்ட் 11இல் மாவிலாறு நீர் வழமைபோல் திறந்துவிடப்பட்டது.

30 ஏப்ரல் 2007 வரையான ஓராண்டுக் காலத்திற்குள் ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி திருகோணமலையின் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான கடற் பிரதேசத்தையும் நிலப்பரப்பையும் பாரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் இல்லாமல் இலங்கைப் படைகள் கைப்பற்றினர். இந்த ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி மே 1, 2007 முதல் ஏப்பிரல் 30, 2008 ற்குள் மன்னார் முதல் பூனெரியன் வரையான கடற்பரப்பையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது, அடுத்து மே 1, 2008 முதல் ஏப்ரல் 30, 2009 வரையான காலப்பகுதிக்குள் ஆணையிறவு முதல் கொக்குத் தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது என்பதும் திட்டம். மேலும் அம்பாறை, சிலாவத்துறை, பருத்தித்துறை ஆகியவற்றினது கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதன் மூலம் புலிகளுக்கு இராணுவ தளபாடங்கள் வந்தடைவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அவர்களை முள்ளிவாய்க்காலில் முடக்குவதே அத்திட்டமாக இருந்தது. அதன் பின்னரான மே 1, 2009 முதல் ஏப்ரல் 30, 2011 வரையான இரண்டு ஆண்டு காலப்பகுதி புலிகளைக் களையெடுப்பதற்கான காலப்பகுதியாக வகுக்கப்பட்டது. அப்போது மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் என்பதே கணிப்பு.

இத்திட்டம் தொடர்பில் புலிகள் புலனாய்வு எல்லாம் செய்து எதனையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கவில்லை. ஓப்பிரேசன் பிக்கன் திட்டம் மஹித் ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னரேயே தமிழ்செல்வனிடம் கையளிக்கப்பட்டிருந்து. ஆனாலும் இத்திட்டத்தை முறியடிப்பதற்கு புலிகளால் எவ்வித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. இராணுவத்தை சமாளிப்பதைத் தவிர அவர்களால் திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடர முடியவில்லை. புலிகளின் புலானாய்வுப் பிரிவினர் அறிந்திராத பாதைகளினூடாக சந்து பொந்துகளால் எல்லாம் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த யுத்தம் இத்தனையாம் திகதி முடிவுக்கு வரவுள்ளது என்று தேசம்நெற் செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டம் இருந்தது. சிவராமினால் உருவாக்கப்பட்ட ரமில்எடிட்டேர்ஸ்.கொம் (tamileditors.com) என்ற இணையத்தளத்தில் டிசம்பர் 24, 2007 இது பற்றிய கட்டுரையொன்றும் எழுதப்பட்டு ஏதோ இராணுவம் குறிப்பிட்டபடி முன்னேறவில்லையென அக்கட்டுரையில் சடையப்பட்டு இருந்தது.

வவுனியாவுக்கு திருப்பி அடித்திருப்பம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. எந்தவொரு சர்வதேச நாடும் பேச்சுவாரத்தை பற்றியே பேசவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் ஆயதங்களை ஒப்படைத்து சரணடையுமாறே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரே குரலில் ஒலித்தன. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை பல வழிகளிலும் தடுத்தன. புலம்பெயர்ந்த சர்வதேச அரசியல் புரியாத ஆர்வக்கோளாறான அமெரிக்காவில் உள்ள பேர்ள் (PEARL) போன்ற புலிகளின் ஆதரவாளர்கள் தான் சில முட்டாள்தனமான பிரம்மைகளை உருவாக்கினர்.

தமிழ்டிப்ளோமற் (TamilDiplomat) இணையத்தில் தராக்கி சிவராம் பற்றிய நினைவுக் கட்டுரையை அண்மையில் எழுதிய பரணி கிருஸ்ணராஜனி, புரஜக்ற் பிக்கன் பற்றி புலிகள் அறிந்திருந்தும் ஏன் அந்த வலைக்குள் விழாமல் இருப்பதற்கான மாற்றுவழி பற்றி அவர்கள் முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலை பரணி கிருஸ்ணராஜினியால் எழுத முடியவில்லை.

புலிகள் மற்றையவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்திருந்த அளவுக்கு தங்களுடைய பலவீனங்கள் பற்றி எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை. தங்களது எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச அரசியல் பற்றிய அறிவு இருக்கவில்லை. முகநூலுக்கு வரும் லைக்குகளையும் கொமன்ற் களையும் பார்த்து இன்புறுவது போல் புலம்பெயர்ந்து வாழும் விசிலடிச்சான் குஞ்சுகளின் சூரியத்தேவன், தேசியத் தலைவர், அடங்காத் தமிழன் போன்ற விம்பங்கள் ‘பனை மரத்தில வெளவாலா எங்களுக்கே சவாலா’, ‘உள்ளுக்கு விட்டு அடிப்போம்’ போன்ற புலித்தேசிய அல்வா ஆய்வாளர்களின் பிதற்றல்கள் எல்லாமே மே 16, 2009 வரை புலிகளை கனவுப் போதையில் வைத்திருந்தது. வன்னியில் இருந்த புலிகள் குண்டுச் சத்தத்தில் கனவுப் போதையில் இருந்து விழித்துக் கொண்டபோது அது காலம் கடந்ததாகி விட்டது. புலம்பெயர் தேசத்தில் குண்டு விழாததால் இன்னமும் பலர் கனவுப் போதையில் இருந்து எழவில்லை. அவர்கள் ஒரு பரலல் யூனிவேர்ஸில் (parellel universe) தான் இன்னமும் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் த கணேசலிங்கம் போன்ற அரசியல் முட்டாள்கள் பொங்கு தமிழ் நடத்தி தங்களில் தேசியம் பொங்கி வருவதாகக் காட்டிக்கொண்டு முத்தையா யோகேஸ்வரி போன்ற சிறுமிகளை வன்புனர்வதிலும் அதனை வெளியே வந்துவிடாமல் மறைப்பதிலுமே படுபிசியாக இருந்தனர். ‘புரஜக்ற் செக்ஸில்’ (project sex) ‘ஒப்பிரேசன் இன்ரகோர்ஸ்’ (operation intercourse) இல் பிஸியாக இருந்தவருக்கு புரஜக்ற் பீக்கன் பற்றியோ ஒப்பிரேசன் பீக்கன் பற்றியோ எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

ஏப்ரல் 30, 2009 இல் தான் இந்த யுத்தம் முடிவடைய வேண்டும் என ராஜபக்சக்கள் கணிப்பிட்டதற்கு முக்கிய காரணம் மே 16இல் இந்திய தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் வரை பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டே வந்தது. 2006 யூலை முதல் 2009 பெப்ரவரி வரை 3000 பேர்வரை கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் 5 இல் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தை இராணுவம் முற்றுகையிட்டபோது, அது உடைக்கப்பட்டு பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். புலிகளின் பெரும் தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். இப்போது தான் கனவுலகத்தில் பொங்குதமிழ் நடத்தி யுத்த முழக்கம் முழங்கிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் விழித்துக்கொண்டனர்.

இந்த யுத்தத்தை என்ன விலைகொடுத்தும் எப்படியாவது மே 16 வரை இழுத்துச் செல்ல வேண்டும் என்று புலிகள் பெருமுயற்சி எடுத்தனர். அதனால் தான் பாரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புமே தங்களது வெற்றியை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தனரேயல்லாமல், மக்கள் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் சகல விதிமுறைகளும் தூக்கியெறியப்பட்டது. இறுதிச் சில வாரங்கள் யுத்தத்தின் எவ்வித விதிகளும் கடைப்பிடிக்கப்படாமலேயே யுத்தம் நடைபெற்றது.

இந்திய தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியும் அமையப் பெற்றால், தாங்கள் காப்பாற்றப்படுவோம் எனப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். புலிகள் தங்கள் ஆய்வுக் கதையாடல்களிலும், மக்கள் வகைதொகையாகக் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையிடும் என்று ‘கொசோவோ’ உதாரணத்தையும் வைத்துக்கொண்டு ரீல்கள் விட்டு அங்கு மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகினர். கலாநிதி ரட்டணம் நித்தியானந்தன் போன்ற அரசியல் முட்டாள்கள் வணங்கா மண் அனுப்புகிறோம் என்று தங்களுக்கு தமிழ் தேசியச் சாயம் பூசி கூத்தாடினர். இப்போது பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மே 16, 2009இல் ‘மம்மிக்காக காத்திருக்கும் தம்பி’ என்ற கட்டுரையை தேசம்நெற் வெளியிட்டது. அதே தினம் ‘இந்திய தேர்தல் முடிவு விடுதலைப் புலிகளின் கருப்புச் சனி’ என்று மற்றையொரு கட்டுரை எழுதினேன். ஆம் புலிகள் எதிர்பார்த்தது நிகழவில்லை. தமிழகத்தில் கருணாநிதியும் டெல்லியில் காங்கிரஸ்ம் ஆட்சியமைத்தது. உண்மையில் புலிகள் எதிர்பார்த்தது நடந்திருந்தாலும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடிந்திராது என்ற உண்மையை உணரும் அரசியல் அறிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்களை உசுப்பிவிட்ட புலத்து தமிழர்களுக்கும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை.

வன்னியின் மொத்த நிலப்பரப்பு 7,859 சதுர கிலோ மீற்றர். முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 2,817 சதுர கிலோ மீற்றர். ஆனால் மார்ச் மாதம் 3ம் திகதி புலிகள் வெறும் 14 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் குறுக்கப்பட்டு விட்டனர். அப்போது அங்கு 2,00,000 பேர் இருந்தனர். மே 16, 2009 இல் புலிகளுடைய நிலப்பரப்பு வெறும் 5 சதுர கிலோ மீற்றர்களாகக் குறுக்கப்பட்டு விட்டது. மறுநாள் மே 17இல் வெளிவந்த சூசையின் தொலைபேசி அழைப்பில் “போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

இச்சண்டையில் சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகியோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இறுதிக் கட்டத்தில் பொட்டம்மான் தன்னுடைய குடும்பத்தோடு. தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உடலும் யாருக்கும் கிடைக்காதவாறு பார்த்துக்கொண்டார் என பொட்டம்மானோடு உரையாடியதாகக் கூறும் முன்னாள் போராளி விபரிக்கின்றார்.

எண்பதுக்களின் பிற்பகுதியில் இந்திய இராணுவ காலகட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களுக்கு அதனைத் தெரிவித்துள்ளார். அவர் போகின்ற இடங்களுக்கு பெற்றோல் கானும் (petrol can)கொண்டுசெல்வது வழமை என இந்திய இராணுவ காலகட்டங்களில் புலிகளின் உறுப்பினராக இருந்த அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 165,000 எனப் புலிகள் அறிவித்தனர். இவர்கள் பெரும்பாலும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அவர்களின் குடும்பங்களுமே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மணித்தியாலங்கள் கடந்து செல்ல 5 சதுர கிலோ மீற்றர் 500 சதுர மீற்றரானது. இராணுவம் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட படையினரை மே 17 அதிகாலை மீட்டெடுத்தது. மே 18 அதிகாலை 250 சதுர மீற்றராகவும் ஆனது.

மே 17 இரவு – மே 18 அதிகாலையில் செல்வராஜா பத்மநாதன் (கெ பி), ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்து பிரபாகரனை எப்படியாவது விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முன்னரே மே 15 2009 வெள்ளிக் கிழமை இரவே புலிகள் கெபி க்கு தாங்கள் சரணடையத் தயார் என்ற செய்தியை அனுப்பியதாகவும் தான் வெளிநாட்டு ராஜதந்திரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தததாகவும் கெபி தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். அன்று வெள்ளிக் கிழமை மாலையாகிவிட்ட நிலையில் ராஜதந்திரிகள் அலுவலகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டதாகவும் தன்னால் அமெரிக்க ஐரோப்பிய ராஜதந்திரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கெபி தெரிவித்தார். அதேசமயம் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ புலித்தேவன் ஆகியோர் தொடர்பை மேற்கொள்ள முடிந்த ஊடகவியலாளர்கள் பிரான்ஸிஸ் ஹரிசன், மேரி கொலின் மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள ராஜதந்திரிகளுக்கு தாங்கள் சரணடைய உள்ளதைத் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த அழைப்புகள் மே 18 அதிகாலை 5:45 மணி வரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது கொழும்பில் பசில் ராஜபக்சவுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.

தேசம்நெற் க்கு அன்று கிடைத்த தகவல்களின் படி புலிகள் தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தையுமே அரசதரப்பு ஏற்றுக்கொண்டதாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வேண்டுகோள்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித பொறிமுறையும் அங்கிருக்கவில்லை. யுத்த களத்தில் இவ்வாறான சரணடைவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மாதம் எடுக்கும். ஆனால் புலிகள் கையறு நிலையில் சரணடையும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் அனைவருமே வெள்ளைக்கொடியோடு சரணடைந்தனர்.

மே 17 காலையில் 250 சதுர மீற்றர் பரப்பளவிற்குள் இருந்து புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடையும் வேளை ஏனைய இடங்களில் மக்களோடு மக்களாக வெளியேறுகின்ற போது பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு இல்லாமல் மக்களோடு மக்களாக வெளியேறிய புலிகளின் முக்கிய தலைவர்களையும் முகாம்களில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்றது.

இவர்கள் யாவரும் உலகின் அனைத்து யுத்த விதிகளையும் மீறி படுகொலை செய்யப்பட்டனர். அந்த மே 17 அன்று வெள்ளைக் கொடியோடு மக்களோடு அல்லாமல் சரணடைந்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. “அன்று தலைவருக்கு பக்கத்தில் நின்றேன். தப்பி வந்தேன்” என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. அவர்கள் அனைவருமே தலையில் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவரையான இந்த விபரிப்பை கதையாடலை தமிழுணர்வாளர்களோ புலித் தேசியவாதிகளோ பெரிதாக யாரும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இராணுவம் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் யாவரும் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை கதையாடலை மட்டுமே இலங்கை இராணுவம் திரும்பத் திரும்ச்சொல்வார்கள்.

அதன் பின் துடைத்துத் துப்பரவு செய்யும் ஒப்பிரேசன், கொமான்டர் ரஞ்சித் பந்துல கொடிப்பிலி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ், சவிந்திர டி சில்வா போன்ற இராணுவ அதிகாரிகள் இறுதிநேர ஒப்பரேசனில் தொடர்பில் இருந்தவர்கள். அதில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராயத்தில் பணியில் நியமிக்கப்பட்டு பின்னர் எழுந்த மனித உரிமைக் குற்றச்சாட்டுகளால் அங்கிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.

சரணடைந்தவர்களில் மகளீர் அணித் தலைவி தமிழினி பிடிபட்டு இருக்கும் போது ஆனந்தி சில்வா அவரைக் கண்டு ‘தமிழினி அக்கா’ என்று அழைத்துள்ளார். சீலையோடு தலையை குனிந்தபடி இருந்த தமிழினி குரலைக் கேட்டு தலையை நிமித்தினார். மேஜர் ஆனந்தி சில்வா தமிழை ஒரு தமிழனைப்போல் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். இவர் 2002 புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு ஊடகவியலாளராகக் கலந்துகொண்டார். அதன்போது புலிகளுடன் நல்லுறவைப் பேணிய ஆனந்தி சில்வா புலிகளைப் பற்றி செய்தித் தொடர் எழுதப்போகிறேன் என்று அவர்களுடன் உடன்பட்டு வன்னியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அதனால் தமிழினியோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்று தமிழினி அவருடைய கண்ணில் பட்டதால் உயிர் தப்பி இருந்தார்.

சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை ஏற்கும் தமிழுணர்வாளர்கள், புலித்தேசியவாதிகள் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பிரபாகரனும் ஒருவர் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்து, இலங்கை இராணுவத்தின் கதையாடலை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். மே 16 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் பிரபாகரன் மட்டும் தன் மனைவி மகள் கடைசி மகனைப் பிரிந்து ஒழிந்திருந்து சண்டையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். இன்னுமொரு சிலர் பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக்கொன்றார் என்கின்றனர்.

இன்னுமொருவர் சொர்ணத்தைச் சுடச்சொல்லி பிரபாகரன் கட்டளையிட சொர்ணம் அவரைச் சுட்டார் என்கின்றனர். ஆனால் அதற்கு முதல் நாளே சொர்ணம் சண்டையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த உரையாடல்களைச் சொல்பவர்கள் யாரும் தாங்கள் பிரபாகரனுடன் இறுதி நேரத்தில் நின்றதாகவோ தொடர்பில் இருந்ததாகவோ தெரிவிக்கவில்லை. இக்கதைகள் அனைத்தும் தாங்கள் பிரபாகரன் மீது கட்டிய விம்பத்தை தொடர்ந்தும் காப்பாற்றும் ஒரு முயற்சியே.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உரையாடல்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனை பல இராணுவத் தளபதிகளும் கூறியுள்ளனர். ஆனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை வெளியிடவில்லை.

அக்காலங்களில் பல்வேறு தவறான செய்திகள் ஊகங்களாக வெவ்வேறு ஊடகங்களில் வந்தபோதும் தேசம்நெற் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது. இலங்கையில் அன்று எமது ஊடகவியலாளராக இருந்த காலம்சென்ற பி எம் புன்னியாமீன், யுத்தகளத்தில் நின்ற இராணவத் தளபதியூடாக அதனை உறுதிப்படுத்தி இருந்தார். மே 20 அன்று தேசம்நெற் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட செய்தியை ஈழத்தமிழ் ஊடகங்களில் முதன் முதலாக வெளியிட்டது. மறுநாள் 21இல் “இந்தியாவின் மிகப்பெரும் துரோகம்! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டனர்!!” என்ற செய்திக்கட்டுரை தேசம்நெற்றில் வெளியானது. பரதெனிய பல்கலைக்கழகத்தில் என்னுடைய நண்பரோடு ஒன்றாகப் பயின்ற இன்னுமொரு இராணுவத் தளபதியும் பிரபாகரனின் குடும்பத்தினர் சரணடைந்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் வெளிப்படையாக வந்து இதுதான் நடந்தது என்று சொல்வதற்கு அண்மைய எதிர்காலத்தில் எவ்வித வாய்ப்பும் இல்லை.

பிரபாகரன் பற்றிய எந்தக் கதையாடலை யார் கேட்க விரும்புகின்றனரோ அதற்கமைய இந்தக் கதையாடல்கள் அமையும். உண்மைகள் உறங்குவதில்லை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி – சுபாஸ் சந்திரபோஸ் விமானவிபத்தில் கொல்லப்பட்டதாகவும் அவருடைய அஸ்தி ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு இந்திய அரசு வாடகையும் செலுத்துகின்றது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸ் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்வதை பிரதமர் நேரு அப்போதைய பிரித்தானிய பிரதமர் அட்லிக்கு காட்டிக்கொடுத்து ஸ்ராலினூடாக அவரைக் கைது செய்து தூக்கிலிட்டனர் என்பது சில தசாப்தங்களின் பின் வெளியான உண்மை. உண்மைகள் எப்போதும் கசப்பானவை.

மே 16இல் புலிகளின் கையறுநிலை அப்போது மத்திய கிழக்கில் ஜோர்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலிகளின் பிரபாகரனின் சரணடைவு பற்றியும் மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “நான் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டுக்கு நான் திரும்பப்போகின்றேன்” என்று குறிப்பிட்டு விட்டு மஹிந்த ராஜபக்ச மே 17 காலை கட்டுநாயக்காவில் தரையிறங்கி மண்ணை முத்தமிட்டார். பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்ற மமதையை மஹிந்த ராஜபக்சவின் உடல்மொழியும் உரையும் உறுதிப்படுத்தியது.

எல்லோருடனும் வெள்ளைக்கொடியோடு பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்தனர் என்ற உண்மை மிகக் கசப்பானது. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் இன்னமும் கசப்பானவை. ஈபிடிபி தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்த அண்மையில் வெளியிட்ட பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்.

தான் இதையெல்லாம் செய்யவில்லை என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா சொல்ல வருவதன் மூலம் அவர் குறிப்பிடுவது. இதையெல்லாம் பிரபாகரன் செய்தார் என்பதற்கே. அவர் குறிப்பிட்டுச் சொல்கின்ற விடயங்களும் அதற்கும் மேலாக நடந்ததும் வீடியோக் கிளிப்பாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்படி சரணடைந்த பிரபாகரனின் குடும்பத்தினர் பனாங்கொடை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரபாகரன் குடும்பத்தினர் மனித விழுமியங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மதிவதனியும் துவாரகாவும் பாலியல்துன்புறுத்தல்களை அனுபவித்தனர். இவை பதிவு செய்யப்பட்ட காணொலி அங்கிருந்த இராணுவத் தளபதிகளினால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்காக இது பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அந்தக் காணொலி தேசம்நெற் க்கு நெருக்கமான ஒருவராலும் பார்க்கப்பட்டது. அதுபற்றிய பதிவும் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியின் பிரதியை எடுக்க முயன்றபோது அது உடனடியாகவே மறைக்கப்பட்டது. அந்த காணொலியில் காணம்பிக்கப்பட்ட விடயத்தையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரணமாக ஒரு தமிழனாக இந்த விடயத்தை ஜீரணப்பது மிகக் கடுமையானது. புலிகளுடைய பிரபாகரனுடைய எதிரிகள் கூட இந்நிலைமையை ஜீரணிக்க கஸ்டப்பட்டார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அவருடைய அரசியல் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள் கூட பிரபாகரன் தனது குடும்பத்தோடு இறுதிவரை அம்மண்ணில் நின்று போராடியதையும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அப்போராட்டத்துக்கு அர்ப்பணித்ததையும் மிகப் பெருமையாகவே கருதுகின்றனர். இந்த சரணடைவது என்பது யுத்தத்தின் ஒரு அம்சம். தவிர்க்க முடியாதது.

ஒரு சில நாட்கள் சரியான உறக்கமும் உணவும் இல்லாதிருந்தால் நாம் சிந்திக்கவோ சரியான முடிவுகளை எடுக்கவோ முடியாது. அப்படி இருக்கையில் ஒரு சில கிலோ மீற்றருக்குள் ஒரு சில வாரங்கள் தக்க உணவு, உறக்கமின்றி நிம்மதியின்றி இருந்த ஒருவர் மிக நேர்த்தியான முடிவை எடுக்க முடியாது. அன்று இந்த சரணடைவைத் தவிர வேறேதும் வழியில்லை.

இந்நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அறிவின்மையும் வஞ்சப்புகழ்ச்சிகளும் அவர்களுடைய சுயநலன்களும் முக்கிய காரணம். பிரபாகரனும் புலிகளும் தமிழ் சமூகத்தின் உற்பத்திகள் தான். அவர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. பிரபாகரன் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என இரா சம்பந்தன் அவர்களும் விரும்பி இருந்தார். அவர் புலிகளையோ மக்களையோ காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதை எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

விடுதலைப் புலிகளை குறிப்பாக பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலங்கைக்கு அவ்வளவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜேவிபி இன் ரோஹன விஜய வீர, பிகெகெ ஓச்சுலான் போன்று சிறையில் அடைத்து தமிழ் மக்களது உள்ளுணர்வை நொருக்க ராஜபக்சக்கள் விரும்பி இருக்கலாம். சில சமயம் ஏனைய ஆயுத அமைப்புகள் அரசியலுக்கு வந்தது போல் புனர்வாழ்வு பெற்று பிரபாகரனும் பிற்காலங்களில் அரசியலுக்கு வந்திருக்கலாம். இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தது இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்தியாவே பிரபாகரனது குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரும் உயிருடன் இருக்கக் கூடாது என்ற உத்தரவை இலங்கை அரசுக்கு வழங்கியதாகவும் இலங்கை உயர்பீடத்தில் இருந்து சில தகவல்கள் தேசம்நெற்க்கு எட்டியது. பிரபாகரனோ அல்லது அவரது குடும்பத்தினரோ உயிருடன் இருந்தால் தமிழகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஏப்பிரல் 5இல் விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்தித்த போது, புளொட் அமைப்பினூடாக இந்தியாவுக்கு புலிகள் தாங்கள் சரணடைவதற்கு தயாராக இருப்பதை தெரியப்படுத்தி இருந்தனர். இதனை புளொட் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தது. இந்தியத் தூதரகம் பிரபாகரனும் பொட்டம்மானும் தவிர்ந்த ஏனைய போராளிகளை தாங்கள் காப்பாற்றவும் ஏற்றுக்கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்ததாக புளொட் வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தன.

இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆகையால் இந்தியாவின் விருப்பத்திற்கமைய பிரபாகரனின் குடும்பத்தினர் மீளவும் முள்ளிவாய்கால் கொண்டு செல்லப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டனர். மே 17 அதிகாலையில் சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் மே 18இல் மீண்டும்  முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனின் துணைவியார் மதிவதனியினதும் துவாரகாவினதும் உடல்கள் இந்தியாவின் என்டிரி NDT சனலில் மட்டும் ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. அதன்பின் அப்படங்கள் உடனடியாகவே நீக்கப்பட்டது. அதனைத் தவிர வேறு எங்கும் அவர்களின் படங்கள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.

பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய நிபுணர் பிரபாகரனுக்கு மிகக் கிட்ட (ஒரு மீற்றருக்குள்) இருந்தே துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவொரு தற்கொலையல்ல படுகொலையென்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகம் இந்தப் படிப்பினைகளில் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். அடைந்தால் தமிழீழம் இல்லையேல் மரணம், செய் அல்லது செத்துமடி போன்ற உணர்ச்சிகரமான போதையூட்டும் மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். வாழ்க்கை என்பது அது அல்லது இது என்ற பைனறி (binary language) மொழியல்ல. வடக்கு கிழக்கை ராஜ்ஜியமாக ஆண்ட புலிகள் அரசியல் அனாதைகளாகி பூஜ்ஜியமானது மிகச் சோகமான வரலாற்றுப் பதிவு. அரசியலுக்கு மேல் மக்களுக்கு மேல் ஆயுதங்களைக் காதலிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான பாடம்.

தேசம்நெற் பிரபாகரனின் மரணச் செய்தியை வெளியிட்டு நான்கு நாட்களின் பின், மே 24 அன்று அனைத்துலக வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாதன் (கெபி) “தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீர வணக்கங்கள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பிரபாகரனின் மரணத்தை உலகிற்கு அறிவித்தார். சில தினங்கள் பிரபாகரனின் மரணத்தை மறுத்துவந்த கெபி அதன்பின் அடேல் பாலசிங்கம் மற்றும் சிலரோடு உரையாடி புலிகளின் தலைவரின் மரணத்தை அறிவித்து அவருக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வறிக்கையை வெளியிட்டார். அதன் பின் தேசம்நெற் கெபி உடன் தொலைபேசியூடாக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. இந்நேர்காணலை அவருடைய ஆதரவாளரான லண்டனில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான வாசுதேவன் ஏற்படுத்தித் தந்தார். அந்நேர் காணலின் ஒலிப்பதிவு:

எதிர்காலத்தில் அரசியல் படுகொலையற்ற அரசியல் செய்வோம்! செய்வதற்குமுன் சிந்தித்து செய்வோம்!! எதற்காகவும் செத்துமடிய வேண்டாம்!!

சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வரமுன்பே யாழில் உள்ள உதவாக்கரைகளோடு கூட்டு! யாழில் சோபையிழந்த கூட்டம்!! கைதட்டவே மக்கள் கூச்சம்!!!

பெப்ரவரி 23 இல் யாழ் ரக்கா லேனில் சஜித் பிரேமதாஸாவின் சமாஜி ஜன பலவேய – ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. சில நூறுபேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களைப் பற்றி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சட் பதியுதீனும் உணர்ச்சி பூர்வமாக பேசிய போதும் யாரும் அவர்களது உரைகளுக்கு கரவோசம் பண்ணாமல், அவர்களது உரையை உதாசீனம் செய்பவர்களாக, அக்கூட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லாதது போல் இருந்தனர்.

இக்கூட்டத்தை பணமோசடி மற்றும் குற்றச்செயல்களுக்காக பிரான்ஸில் சிறையிலடைக்கப்ட்ட வெற்றிவேலு ஜெயந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இவர் தற்போது பெயரில் உள்ள எழுத்துக்களை இடமாற்றியும், வயதைப் பத்து வருடங்கள் குறைத்தும் மோசடியான அடையாள அட்டையோடு உலாவி வருகின்றார். ஆட்சியைப் பிடிக்கப்போவதாகக் கூறும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் விரோத சக்திகளோடு கைகோர்த்துள்ளது.

இளம்பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தும் வெற்றிவேலு ஜெயந்திரன் பெண்களைப் பற்றி மிக மோசமாக இழிவுபடுத்தி மிகக்கேவலமாக தூசணங்கள் பேசிய விடியோபதிவு இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் இல் வெளியானது. இச்செய்தியின் கீழும் அக்காணொலி இணைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை வெற்றிவேலு ஜெயந்திரனுடன் இணைந்து கிருபாகரன், விஜயகாந், மதன்ராஜ் ஆகியோரும் ஏற்பாடு செய்திருந்தாக தெரிய வருகின்றது. இவர்களும் வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ரக்காலேனில் இடம்பெற்றதற்கும் ஜெயந்திரனுக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. ஜெயந்திரனினால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்ட இளம்பெண்களின் நீண்ட படிட்டியலில் ஒருவர் ரக்கா லேனிலேயே வசித்தவர். ரட்சணிய சேனையில் இருந்த சகோதரியான பெண்ணை கவர்ந்து வந்து பின்னர் உதறிவிட்டுவிட்டு அவருடைய தங்கை பக்கம் தாவியவர் வெற்றிவேலு ஜெயந்திரன். பாதிக்கப்பட்ட அப்பெண் இன்னமும் திருமணமாகாமல் வாழ்கின்றார். இவ்வாறு பல இளம்பெண்களின் வாழ்வை சின்னா பின்னமாக்கிய ஒருவரை வைத்துக்கொண்டு ‘’இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன்” என்று சஜித் ரீல் விடுகின்றார். அதற்கு அக்கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பேச்சாளர் உமா சந்திரபிரகாஷ் நூல் எடுத்துக்கொடுக்கின்றார்.

வெற்றிவேலு ஜெயந்திரனின் முழுக் குற்றச்செயல்களையும் ஜெயந்திரனால் பாதிக்கப்பட்ட குறைந்தது நான்கு பெண்களை உமா சந்திரபிரகாஷிற்கு நன்கு தெரியும். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி இத்தீய மக்கள் விரோத சக்திகளை வைத்தே யாழில் அரசியல் செய்கின்றது. “வெற்றிவேலு ஜெயந்திரன் போன்றவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தலிலும் வெற்றி பெற்றால் யாழ் மண் மீள முடியாத சீரழிவுக்குள் தான் செல்லும்” என்கிறார் ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “ராஜபக்சக்களைப் பற்றிக் கதைக்க இவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பிய அவர் “ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்தனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரமுன்னரேயே கொள்ளையர்களை கட்சியில் சேர்த்துள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தாகிவிடும்” என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இக்கூட்டம் பற்றி தெரிவிக்கையில் “நான் லக்ஸ் ஹொட்டலில் பார்டிகளில் கலந்துகொகிறனான். வற்புறுத்திக் கூப்பிட்டார்கள் வரமலிருப்பது சரியில்லை என்பதால் தலையை காட்டுவதற்காக வந்தேன்” என்றார். உங்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள பணம் தந்தார்களா? எனக் கேட்டபோது “நான் பணம் வாங்கி வரவில்லை. ஆனால் மற்றவர்கள் பணம் வாங்கினார்களா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார். வெற்றிவேலு ஜெயந்திரனுடைய ஒலிப்பதிவைக் கேட்டீர்களா என்று கேட்டபோது “கேள்விப்பட்டேன். ஆனால் இப்ப இதையெல்லாம் யாரும் அவ்வளவு பெரிதாக எடுப்பதில்லை” எனத் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் பெண்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இன்று அரசியலில் வெற்றிவேலு ஜெயந்திரன் போன்ற மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தான் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக ஊளையிடுவதாக’ அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற் க்கு தெரிவித்தர். “அவர்களிடம் பண பலம் அரசியல் பலம் இருக்கு. அதை வைத்து எல்லாரது வாய்களையும் அடைத்துவிடுவார்கள்” என்று சலிப்புடன் தெரிவித்தார் அவ்வூடகவியலாளர்.

இந்திய அரசு தமிழ் மக்களினதும் எதிரி! இன்னுமொரு உக்ரைனை திருமலையில் உருவாக்க அத்திவாரம்!! மசூதிகளையும் தேவாலயங்களையும் அழிக்க இலங்கையில் ராமாயண யாத்திரைக்கு முயற்சி!!!

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டனில் இயங்கும் வரலாற்று மையத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் சங்கீதன் இந்தியா தங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பயிற்சிகள் பயிற்சிகள் அளித்தது பற்றி அண்மைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இனவாதத் தீயை இந்தியா எண்ணை ஊற்றி அணையவிடாமல் வளர்த்தது. பதிலுக்கு ஜே ஆர் ஜெயவர்த்தன அரசும் இஸ்ரேலிய மொசாட் பாஸிஸ்டுக்களுடன் இணைந்து தமிழர்களைக் கொன்றொழித்தார். தமிழ் இளைஞர்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் கொன்றொழித்தால் அதில் புலிகளும் அழிக்கப்படுவார்கள் என்பது மேற்குநாடுகள் போற்றும் மொசாட்டின் கண்டுபிடிப்பு. ஒரு கட்டத்தில் மொசாட் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தது.இது பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிரபாகரனை உருவாக்கியது இந்தியா. வளர்த்துவிட்டது இந்தியா. பிரபாகரனை முடித்ததும் இந்தியா தான்.

இப்போது இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு Tamil Co-ordinating Committee இல் இருந்து பிரிந்து சென்ற அப்துல்லா தலைமையிலான குழுவைத் தன்னோடு இணைந்ததுக் கொண்டுள்ளது. இவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்ற அறிவிப்பை பழ நெடுமாறன் மூலமாக, காசி ஆனந்தன் போன்றவர்கள் பக்கத்தில் இருக்க, பெப்ரவரி 13 அன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இவ்வாறான ஒரு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டாம் என பிரபாகரனின் சகோதரர் கேட்டுக்கொண்டபோதும் ஏனைய பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்ட போதும் இவ்வறிவிப்பை பழ நெடுமாறன் மேற்கொண்டிருந்தார். இந்த அறிவிப்பில் இந்திய உளவுப் பிரிவினரால் உள்வாங்கப்பட்டதாகக் கருதப்படும் அப்துல்லா தலைமையிலான அந்த நால்வரைத் தவிர வேறு எந்த ஈழத்தமிழரும் இந்த அறிவிப்பை மிக வன்மையாகக் கண்டித்தனர். தமீழ விடுதலைப் போராட்டத்தை தற்போது பழ நெடுமாறனும் ரோவுமே நேரடியாகக் கையாள ஆரம்பித்துள்ளனர்.

பிரபாகரனின் நெருங்கிய நண்பர் வல்வை ஆனந்தன்இ வல்வை நாடான் என அழைக்கப்படும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தராஜா அவருடைய நண்பர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும் போது “தேசியத் தலைவர் ஒரு போதும் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் செல்லக்கூடியவரல்ல. அவர் தனக்கென்று ஒரு நிலம் கூட இல்லாதவர். தேசியத் தலைவரின் வீடு என்று சொல்லப்படும் இங்குள்ள வீடு கூ; அவருடைய சகோதரியினுடையது என அவர் தெரிவித்தார்.

“இந்திய அரசு தமிழ் மக்களினது எதிரி!” என்று பட்டவர்த்தனமாகக் குறிப்பிடுவது தமிழ் அரசியல் சூழலில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும். இந்தக் கசப்பான உண்மையை பல்வேறு அரசியல் சமன்பாடுகளினாலும் அரசியல் நகர்வுகளினாலும் தவறானது என்று நிரூபிக்க பலரும் முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய அரசு தமிழர்களின் நண்பன் என்று அறுதியிட்டு சொல்வதற்கு எவ்வித தடயங்களும் இருக்காது. அவர்களுடைய வாதங்கள் இந்திரா அம்மையார் இருந்திருந்தால்… எம்ஜிஆர் இருந்திருந்தால்… அல்லது இந்திய அரசைத் தவிர வேறு வழியில்லை … என்பதில் தான் போய் நிற்கும்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய அரசுக்குமான உறவு மிக நீண்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையின் அமைவிடம் காரணமாக தென்னிந்திய அரசுகளின் படையெடுப்புகள் இல்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படையெடுப்புகள் இனரீதியானதாக கொள்ளப்படவில்லை. அவ்வாறான கறாரான இனவரையறுப்பு அன்று காணப்படவில்லை. யுத்தத்தில் தோற்றுப் போன எல்லாளனை பாதணியைக் கழற்றி வைத்து வணங்குகின்ற முறைமை சிங்கள மக்கள் இன்னமும் அனுராதபுரத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.

மேலும் பௌத்தத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். பௌத்த வாழ்வியல் முறை வட இந்தியாவில் உருவானாலும் அது இலங்கைக்கு தென்னிந்தியாவில் இருந்தே கொண்டுவரப்பட்டது. ஒரு காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியது. அந்தக் காலகட்டத்திலேயே இலங்கைக்கும் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை சங்கமித்தை கொண்டு வந்தாரா மணிமேகலை கொண்டுவந்தாரா நயன்தாரா கொண்டு வந்தாரா என்பதை வரலாற்று ரீதியாக நிறுவமுடியுமா தெரியவில்லை. ஆனால் ஒரு தமிழர் கொண்டு வருவதற்கே வாய்ப்பு உள்ளது.

ராகுல தேரர் குறிப்பிடுவது போல் பௌத்தம் ஒரு மதமல்ல. அதுவொரு வாழ்வியல் முறை. எதிர்கால இலங்கை பற்றி ராகுல தேரர் காண்கின்ற கனவு நனவாக வேண்டும். தமிழர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பௌத்த இளம் துறவிகள் கேட்டறிந்து தென்பகுதிக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காண வேண்டும். வடக்கில் இருந்தும் இளம் துறவிகள் தெற்கில் உள்ளவர்களிள் குறைகளைக் கேட்டறிந்து வடக்குக்குச் சென்று தீர்வு காண வேண்டும். இனிமேல் இந்த இனவாத பருப்பெல்லாம் இம்மண்ணில் வேகாது என்கிறார் ராகுல தேரர்.

ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தான் பிரித்தாளும் தந்திரத்தோடு திட்டமிட்ட முறையில் இன முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக சுதந்திரத்தின் பின் இனக்கலவரங்கள் நிகழ்ந்தன.

உலகத்தில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் இடதுசாரிகளின் துணையோடு எழுபதுகளில் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவின் அணிசேராக் கொள்கை. இந்தியாவோடு நெருக்கமான உறவு. திறந்த பொருளாதாரத்தின் கதவுகள் மூடப்பட்டது. இறக்குமதிப் பொருளாதாரம் தடைசெய்யப்பட உள்ளூர் உற்பத்தி பெருகியது. விவசாயிகள் செல்வந்தராகினர்.

அன்று தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் மக்களின் செல்வாக்கை இழந்தன. இடதுசாரிச் சிந்தனை தலைதூக்கியது. இடதுசாரிச் சிந்தனையைத் தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி தெற்கிலும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கிலும் இனவாதத்தை நெய்யூற்றி வளர்த்தனர். 1977இல் வட்டுக்கோட்டையில் ‘தமிழீழம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டது. தங்கள் கைகளைக் கீறி தமிழ் இளைஞர்கள் இரத்தப் பொட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் வாக்கு வங்கி வடக்கு கிழக்கில் நிரம்பி வழிந்தது. தெற்கில் ஜே ஆர் ஜெயவர்த்தன பிரதமராகி பின் ஜனாதிபதியானார். அமேரிக்காவிற்கு இலங்கையைத் திறந்த ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தமிழரசுக் கட்சியும் கூட்டுக்கலவியில் இறங்கியது. தமிழீழம் தள்ளாடியது.

ஆனால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்களோ தமிழீழத்தை அடைந்துவிட வேண்டும் என்று வேட்கை கொண்டனர். யார் முதலில் அடைவது, யாருக்கு தமிழீழ சொந்தம் என்றெல்லாம் போட்டியிட்டு சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டனர். இவர்களையெல்லாம் இனம்கண்ட இந்தியா, தன்னை விட்டு விலகி அமெரிக்கா பக்கம் சாய்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு பாடம்புகட்ட எண்ணியது. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி பங்களாதேஸ் உருவாக வழிவகுத்த துணிச்சலும் இந்தியாவுக்கு இருந்தது. அதற்கு தமிழ் இளைஞர்கள் வாய்ப்பாக அமைந்தனர். பங்களாதேஷ் போல் தமிழீழம் அமைக்க இந்தியா வகை செய்யும் என தமிழ் இளைஞர்கள் நம்பினர். நம்ப வைக்கப்பட்டனர். தமிழர்கள் கேள்விக்கு இடமில்லாமல் இந்தியாவை நம்பினார். இந்தியாவே கதி என்று இருந்தனர்.

1996இல் ரெலோ தலைவர் சிறிசபாரட்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குழப்ப முயற்சித்தனர். அந்நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய காலஞ்சென்ற அ அமிர்தலிங்கம் இந்தியாவை எதிர்ப்பது, இந்தியாவுக்கு துரோகம் செய்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்வதற்கு ஒப்பானது எனத் தெரிவித்து இருந்தார். இந்தியா மீதான இவர்களின் விசுவாசம் அப்படி இருந்தது.

ஆனால் இந்தியா தன்னுடைய நலனில் மட்டும் நின்றது. இந்தியா ஒப்பிரேசன் பூமாலை என்ற பெயரில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு சுருக்குக் கயிறிட்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பணிய வைத்தது. இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றியது. அதில் தமிழர் தரப்பில் பெயரளவில் கூட கையொப்பமிடத் தேவையிருக்கவில்லை.

இந்த உறவில்,1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படையினரோடு தமிழீழ விடுதலைப் புலிகள் மோதியது, அடுத்து 1991 ராஜீவ்காந்தியின் படுகொலை ஆகிய நான்கு ஆண்டுகள் மிகக் குறுகிய காலம் தான் விடுதலைப் புலிகள் இந்தியாவை எதிரியாகக் கணித்தனர். அந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் இன்று வரையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்திய அரசுக்கு விசுவாசமாகவே இருந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்காத போதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கிடைத்த குறைந்தபட்ச உரிமையும் அதற்குப் பின் நடைபெற்ற போராட்டத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் பெறப்படவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் போராளிகள், பொதுமக்கள், இராணுவம் என்று மொத்தமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கும். அதற்குப் பிந்தைய இரண்டு தசாப்தங்களில் தமிழர்கள் தரப்பில் மட்டும் இழக்கப்பட்ட உயிர்கள் லட்சத்தை தாண்டி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமைக்கு பல்வேறு காரணங்கள் புனையப்பட்டாலும் வே.பிரபாகரன் அவமானப்படுத்தப்பட்டதே அப்படுகொலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ராஜீவ் காந்தியை சந்திப்பதற்காக யாழ் சுதுமலையில் இருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் பிரபாகரன் ஏறுவதற்கு முன் தங்களுடைய கோரிக்கைகளை இந்தியா எற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடனேயே சென்றார். ஆனால் இந்தியாவில் தரையிறக்கப்பட்ட பிரபாகரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டதுடன் ராஜீவ் காந்தியுடனான சந்திப்புக்கு முன்னதாக ஆண்மையை மட்டும் மறைக்கும் உள்ளுடுப்போடு நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும் அப்போது தான் ராஜீகாந்தியை தீர்த்துக்கட்டுவது என்ற முடிவுக்கு பிரபாகரன் வந்ததாகவும் பிரபாகரனுக்கு நெருங்கிய ஒருவர் தெரிவிக்கின்றார்.

அந்த முடிவு தான் 28 ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரன் அதே உள்ளாடையோடு சாய்க்கப்படக் காரணமாக அமைந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு அரசியல் ரீதியான படுகொலையல்ல. தமிழ் மக்கள் இதனை ஒரு போதும் அங்கீகரித்தும் இருக்கவில்லை. அதுவொரு தனிப்பட்ட பழிவாங்கல். அது தமிழ் மக்களுக்கோ விடுதலைப் புலிகளுக்கோ எவ்வித நன்மையையும் பெற்றுத்தரவில்லை. இந்திய அரசு தமிழர்களது வாழ்நிலை குறித்து எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை.

வல்வை ஆனந்தன் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என்ற பெயரில் செயற்பட்ட இந்திய இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை: படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுவது, பாலல்வல்லுறவு மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்தவர். இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இழைத்த அநீதிகள் மிக மோசமானவை. இவை தொடர்பில் எந்தவொரு இந்திய இராணுவ வீரரும் தண்டிக்கப்படவில்லை. அதற்கான எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பொறுப்பாளர் சங்கீதன்: தேசியத் தலைவர் பிரபாகரன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. ரூபனும் அவருடைய நண்பரும் கொழும்பு நோக்கிச் சென்றதை மாலைதீவுக்கு அனுப்பி மதிவதனி அக்காவையும் பிள்ளைகளையும் காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் தேசியத் தலைவர் குடும்பத்தோடு மக்களோடு மக்களாகவே நின்றார் என்கிறார்.

கலை இலக்கிய விமர்சகர் வஐச ஜெயபாலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் இந்தியா தமிழர்களின் முதுகெலும்பை நொருக்கியது இருந்தாலும் புலிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக சீனாவையோ வேறு எந்த நாட்டையுமோ தெரிவு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆய்வாளர் ரவி பிரபாகரனும் இதே கருத்தையே வெளியிட்டார்.

ஆனால் 1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு தமிழ் மக்களுக்கு – தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அல்ல, ஊடல் ஏற்பட்டு 1991 ராஜீவ்காந்தி படுகொலையோடு தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு நெருக்கடி நிலைக்கு வந்தது. ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்திய அரசோடு எப்போதும் ஒருதலைக் காதலிலேயே மூழ்கிக் கிடந்தனர். மூழ்ங்கிக் கிடக்கின்றனர். இனிமேலும் மூழ்கிக் கிடப்பர்.

இந்தியாவுடனான இந்தக் காதலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய விலையைக் கொடுத்தது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ அமிர்தலிங்கமும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவை மட்டுமே நம்புகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மை சில மாதங்களுக்கு முன்னரேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பான தமிழ் தலைமைகளுக்கு இந்தியா தெரிந்திருந்தது என்று 2009 பெப்ரவரியில் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலேயே தாங்கள் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றும் எந்தவொரு முயற்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கவில்லை.

தமிழ் தலைமைகள் இந்திய அரசுக்கு தங்களுடைய கேள்விக்குட்படுத்தாத விசுவாசத்தைக் காட்டி வந்தபோதும் இந்தியா அவர்களையும் தமிழ் மக்களையும் ஒரு கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசை தன்பக்கம் இருந்து விலகிவிடாமல் தடுப்பதற்கே இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்திய உளவுப்பிரிவான ரோ வடக்கு கிழக்கை தன் வசப்படுத்தவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஆய்வாளர் ரவி பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால் அதன் அரசியல், பொருளாதார, சமூக தாக்கங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக காலம் காலமாகவே இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் தன்னுடைய உள்நாட்டிலும் கூட இந்தியா மனிதத் தன்மையோடு, மனிதப் பண்புகளோடு நடந்துகொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் அண்டை நாட்டு விடயங்களில் அதீத தலையீட்டை மேற்கொள்ளும் இந்தியா, தனது சொந்த மக்களின் வாழ்வியல் விடயங்களில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

அதற்கு பெரிய உதாரணம் எதுவும் தேவையில்லை. கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தபோது போது மோடி அரசு தன்னுடைய மத – கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, லட்சக் கணக்கான மக்களைக் கூடச்செய்து, மில்லியன் கணக்கான மக்களுக்கு கொரோனாவை பரவச் செய்து, ஐந்து மில்லியன் மக்களைப் படுகொலை செய்தது. உலக சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலாவது இடத்திற்கு நகரும் இந்தியா, தன் நாட்டில் 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது பற்றி எவ்வித வருத்தமும் கிடையாது. இது இன்றைய இந்திய அரசின் நிலைமட்டுமல்ல 1984இல் வட மாநிலமான போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவினால் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர். அதன் தாக்கத்தால் அங்கு இன்னமும் குழந்தைகள் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். ஆனால் இந்திய அரசு அம்மக்களுக்கு அந்த அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சரியான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கத் தவறியது.

அன்றும் இன்றும் இது தான் இந்திய அரசு. இது அத்தானி போன்ற பண முதலைகளுக்கு தீணி போடும் அரசே அல்லாமல் மக்களுக்கான அரசு அல்ல. தன்னுடைய சொந்த மக்களின் நலனைப் பற்றியோ அவர்களின் உயிர்வாழ்வு பற்றியோ எவ்வித கரிசனையும் கொள்ளாத இந்திய அரசு தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புவது அடி முட்டாள்தனமானது.

கடந்த காலப் பாடங்களில் இருந்து தமிழர்கள் இந்தியா பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகின்றார்கள். தற்போது கலாச்சார மையத்தைக் கட்டிக்கொடுத்தது என்பது எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. அங்கிருக்கின்ற ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களையே பயன்படுத்துவதற்கோ பராமரிப்பதற்கோ அங்குள்ளவர்கள் திணறிக்கொண்டுள்ளனர். இவ்வாறான ஆர்வக்கோளாறான கட்டமைப்புகள் சிறிது காலத்தில் கவனிப்பாரற்று போவதே இயல்பாக உள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய கலாச்சார மண்டபமும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இக்கலாச்சார மண்டபம் இந்துத்துவ பா.ஜா.காவுக்கு பெருமையடிப்பதற்கு மட்டுமே உதவும்.

இலங்கையின் இந்துத்துவ ஆதிக்கம் பற்றி கலை இலக்கிய ஆர்வலர் வ.ஐ.ச ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதுது போலவே இன்று வவுனியாவில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் ராமாயண யாத்திரை உரை அமைந்துள்ளது.

பழ நெடுமாறனின் பிரபாகரன் இருக்கின்றார் என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் இலங்கையில் இந்தியத் தலையீடுகள் பற்றியும் யாழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரான அருண் சித்தார்த் மிகக் கடுமையான விமர்சனத்தை இந்திய தலைவர்கள் மீதும் இந்திய அரசு மீதும் வைக்கின்றார். அருண் சித்தார் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களைப் போன்ற சிறுபான்மையான வெள்ளாள ஆண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியல்ல. இவர் வடக்கில் பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மறுக்கப்பட்ட குரலாக ஒலித்துவருபவர்.

இந்திய உளவுத்துறையும் அதனோடு சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளர்களாகக் தம்மைக் காட்டிக்கொள்ளும் பழ நெடுமாறன் போன்றவர்களும் காசி ஆனந்தன் போன்ற இந்தியாவில் வாழ்கின்ற புலிகளின் அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர்களும் இணைந்து இந்தியா அரசின் தேவைக்காக வெளியிட்ட “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தவிடுபொடியாக்கி உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் அமைப்பின் தலைவர் பீற்றர் ஹெய்ன்ஸ் தலைமையில் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சட்ட முன்னெடுப்புகள் கனியும் தருவாயில், “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு சில ஆண்டுகளாக பல்லாயிரம் பவுண்கள் நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தையும் வீணடித்துள்ளதாக, இந்த நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வழக்குரைஞர் தேசம்நெற் க்கு தெரிவித்து இருந்தார். சர்வதேச குற்றவியல் நீதித்துறையில் 30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட பீற்றர் ஹெய்ன்ஸ் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவது தொடர்பான குழுக்களுடனும் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் ஏனைய நாடுகளிலும் அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் அவ்வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவோடு செயற்படுபவர்களில் அப்துல்லா, சிறி, குலம் (மிசைல் இன்ஜினியர்) மற்றும் பிரபாகரனின் செல் பக்ரிக்கு பொறுப்பான மணி ஆகியோரும் செயற்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு மில்லியன் பவுண்கள் வரை நிதி சேகரிப்பில் ஈடுபடும் இக்குழுவினர் பிரபாகரன் போன்ற ஒருவரை கொண்டுவந்து நிறுத்தப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பேச்சாளர் சங்கீதன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறானவர்களையும் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணத்தையும் கொண்டு இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிலருக்கு பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே இந்தியா ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அளித்து மிகக் கோரவிளைவை ஏற்படுத்தியது. அதன் வடுவே ஆறுவதற்கு முன் மீண்டும் ஒரு ஆயுதப் பயிற்சி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகம் புலமைப் பரிசில் வழங்கி அம்மாணவர்கள் சீனாவில் கற்கை நெறியைத் தொடர ஏற்பாடு செய்தது. இந்தியா யாழில் உள்ள தனது முகவர்களுடாக – தமிழ் ஊடகங்கள் இந்தியாவின் ஏஜென்டுகளாகவே செயற்படுகின்றன. காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அதனை எள்ளிநகையாடினார். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரம் இவ்விவகாரத்தை நிதானம் தவறி கையாண்டு மொக்கையீனப்பட்ட ஒலிப்பதிவு தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது.

இந்தியா தற்போது பலாலி விமானப் போக்குவரத்து ராமேஸ்வரம் – மன்னார் கப்பல் போக்குவரத்து என வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் மும்முரமாகி உள்ளது. மோடியின் கோமயத்தில் இருந்து அனைத்துக் கழிவுகளும் வடக்கு கிழக்கில் கொட்டப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் மதவாதம் மிக மோசமடைந்து கொண்டு வருகின்றது. மேலும் சினிமாவின் தாக்கமும் வாள்வெட்டுக்களும், போதைப்பொருள் கடத்தல்கள், கடற்கரையோர ஆக்கிரமிப்புகள் என ஏற்கனவே இந்திய அரச செயற்பாடுகள் எதுவுமே தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமையவில்லை.

ஈழத் தமிழர்கள் என்றும் இந்திய மக்களின் நண்பர்கள். ஆனால் இந்திய அரசு தமிழர்களினதும் இலங்கையர்களினதும் எதிரியாகவே இப்போது வரை செயற்படுகின்றது.

இலங்கை மக்கள்: சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீகள் எல்லோருமே என்றுமில்லாதவாறு இந்தியாவின் ஆக்கிரமிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆக்கிரமிப்பில் முதலில் அழிந்து போவது ஈழத்தமிழரின் அடையாளமாகவே இருக்கும். 1970க்களில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட போது தமிழ் இலக்கியம் வளர்ந்தது, தமிழ் சினிமா உருவானது, தமிழர்கள் தன்னிறைவாகவும் வசதி படைத்தவர்களாகவும் மாறினர். ஆனால் இந்தியா எங்களை நோக்கி வர வர எங்களுக்கு கிடைப்பதெல்லாம் மூன்றாம்தர கலாச்சாரம், மூன்றாம் தர எழுத்துக்கள், ஆயுதங்கள், போதைவஸ்து, மற்றும் கழிவுகள் தான். இந்த ஆக்கிரமிப்பின் முதற்கட்டத்திலேயே குஜராத்தில், ஆயோத்தியில் நிகழ்ந்ததன் இரத்தவாடை அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் எங்களுக்கு வேண்டாம் உங்கள் மோடியின் கோமயம்.

SJB Jaffna District Chief Organizer Vettivelu Jayanthiran: A Convict with Fake ID

Vettivelu Jayanthiran, the main Jaffna District organizer of Sajith Premadasa’s Samagi Jana Balawegaya (SJB), faked his identity and also is a convicted criminal who served years in prison. SJB, which has a high chance of forming a government in Sri Lanka after the next general election, appointed such a person who faked his identity. Further, he has seduced young women and served a criminal sentence in France as explained below. Academics from Jaffna say that SJB failed to carry out basic diligence when they appointed a person for the most senior party-post in the cultural capital of Tamils.  It is, they say, an act of humiliation and insult to the Tamils of Jaffna District. This appointment raises the question how the SJB can win the votes of the Tamils.

In the investigations conducted by ThesamNet, it has been revealed that Jayanthiran cannot travel through European airports under his own name and he has reduced his age to attract young women and has created a fake identity for himself to obtain impunity. For, in the mid-eighties, Vettivelu Jayanthiran, who lived in the suburbs of Paris, started and ran an event management business for which he recruited hundreds of illegal migrants, mainly Tamil. He used the business to commit fraud and exploit the Tamil migrant workers who didn’t have passports or other paperwork to work. He was arrested by the police, convicted and sentenced.

But Vettivelu Jayanthian went to Sri Lanka in 2003 after serving his prison sentence in France. In Colombo, government officials were complicit in Vettivelu Jayanthiran’s obtaining a fake identity card under a false name with a false date of birth. He obtained a fake identity card which reduced his date of birth by ten years (from 1959.07.29  to 1969.07.29  His place of birth was changed to Nallur instead of Jaffna and his name to Wettivelu Yajandran’ instead of Vettivelu Jayanthiran. Thereby he impersonated himself. These details can be found on his original and doctored identity card. His passport (shown here) also has the original details.

Money Flowing From Shivan Temple in La Courneuve, Paris:

Meanwhile Jayanthiran  built a Shivan temple at La Courneuve. Temples are mostly public temples, owned by a trust. Some are owned by individuals like Jayanthiran. He runs the temple like a corner shop. He enjoys the income and funds his criminal activities from it. This was confirmed to ThesamNet on January 26, 2023 by a person who is currently managing the temple.

When ThesamNet contacted the temple’s phone number, the person answering stated that the income of the temple was being sent to “Kudumbi Jaya,” so nicknamed because of his long hair. Jayanthiran who used to run a violent rowdy gang in France, is this “Kudumbi Jaya,” says Thavakumar, whose family are devotees of the temple.

Hotel Lux, which is located in Nallur, Jaffna with a popular commercially-run swimming pool for the public, was bought and built by Jayanthiran from temple income. He also owns a number of properties in Colombo and Jaffna.

The only qualification for Jayanthiran’s appointment as the chief Jaffna District organizer of SJB seems that he owns Hotel Lux and that his pockets are full as required for an election. Muthu Ponnambalam, who is taking legal action in Canada against such anti-social activities, told ThesamNet that the illegal money or money earned from cheating people in the diaspora is degrading the people in the motherland.

As Muthu Ponnambalam states, wealthy criminals from the diaspora own effective slaves – that is, mercenaries (thugs) from Paris to Jaffna, and have been pumping drugs, alcohol, liquor and young girls to these thugs to serve their illicit activities.

Who is this Kudumbi Jaya?:

Vettivelu Jayanthiran is the third son of famous lawyer Ponnaiya Vettivelu from his first wife. Former Member of Parliament Yogeswaran, who was a respected leader of the Tamil United Liberation Front – TULF –  was a maternal uncle of sorts to Jayanthiran. Following the divorce from Jayanthiran’s mother, Ponnaiya Vettivelu had an affair with another woman from an oppressed community and she set herself on fire due to his suspicions on her loyalties. She is still alive. After that incident Ponnaiya Vettivelu had married another woman.

It was Ponnaiya Vettivelu who argued for the EPDP in the murder case of EPDP Atputhan and won the case. However, Jayanthiran did not join the EPDP, because, as he states, he believes that the EPDP is a party of “lower castes.”

Jayanthiran, who attended a party recently, was proud of his father’s past-times. There he proudly boasted that it was his father’s hobby to enjoy young women from oppressed castes. Continuing about his father, Jayanthiran said his father would tell two of his workers named Muttaia and Kandhan to go to Kilinochchi to work on his land, and then would go to their houses in Jaffna and enjoy their young wives.

At that party, a member of the oppressed community who was nearby told ThesamNet, “There was an urge in me to get up and slap Jayanthiran. But I could not do anything.” He regretted his powerless inability. He said that it is very disgusting that our society is ready to listen, enjoy and tolerate this kind of atrocious boasts.

Kudumbi Jaya’s web of young girls:

Like his father Jayanthiran is spoiling the lives of many marginalized young girls by showing off his wealth, and by giving drugs and liquor.  Jayanthiran, who is now in his sixties, has charmed a young lady who just turned 23 a few days ago, the same age as his granddaughter. In 2021, Jayanthan entered that girl’s family in a family-friendly manner after she had lost her father in an accident. In the Tamil sense, Jayanthiran was the deceased person’s elder brother. Entering in the name of “Periyappa,” he wooed the young lady.

Before that he had tried the girl’s mother. Its audio recording has caught the attention of ThesamNet. He is on record saying, “I will love you. You lost your life at a young age. You must live. I will give you all the money you need.” As soon as the mother got alerted to his intentions with the daughter, Jayanthiran pretended to care about the mother and took away her daughter as if to help the mother. When the mother contacted Jayanthiran to release her daughter, he responded, “You come to the hotel for a while and then I will leave her alone. Everything will be fine.”

Days after that conversation, the family went to the house where the daughter was kept and broke down the door of the house. The family went with the young women who is  living for 10 years without marrying her. The house where the woman was staying had been installed and monitored with 8 CCTV cameras. A large quantity of perfume bottles, liquor bottles and condoms were found there.

Then the matter went to the Chunnakam police. But as per the law the girl is a major and it was the girl who decided to go with Jayanthiran. The law therefore could not do anything for the girl’s parents in this matter. From the Chunnakam police station, Jayanthiran who had gone there with more than 20 thugs in two vehicles, took her back. The incident took place on January 22, 2023. The girl who was kept by Jayanthiran has a younger sister who is sixteen years old. Regarding her, Jayanthiran gently told the child’s mother who lost her husband in an accident that he wonders how to save her other children: ‘She is cute too.’  Such will be the SJB Leadership in Jaffna after its expected triumph.

Kudumbi Jaya’s ‘Andhapuram’:

Kudumbi’s Andhapuram (meaning “That side” where keeps are kept) had three families and four children making up countless relationships. Jayanthiran, who was living together with a Mauritian woman in France, ended his relationship with her. The woman has a child with Jayanthiran. After that he married a twenty-year-old girl and has two children through her. They live in Colombo. Their divorce case is coming to the Jaffna District Court in March 2023. This divorce case has been taken by lawyer M A Sumanthiran who is a Member of Parliament from the Federal Party.

Prior to the divorce proceedings, Jayanthiran had been living with a young girl in her early twenties for ten years. The woman, now in her mid-thirties, also has a daughter. But Jayanthiran did not legally marry her. He had said to her that he would marry her after the divorce case is over. But now there is another young girl who got involved. He wants to get rid of the unmarried young women with his young daughter.

Not only these three women and four children but many more women have been misused and abused by Jayanthiran. He had betrayed a young woman who was close to Devalayam in Uduvil. She is still living and unmarried. Jayanthiran has tried to have a relationship with her younger sister too. Angered by these, Jayanthiran’s half-sister (daughter of Vettivelu’s second wife) who was supporting the Liberation Tigers of Tamil Eelam at that time, complained to the LTTE about her brother’s unbridled sexual activities and exploitation of women. The LTTE investigated and interrogated Jayanthiran but released him after Jayanthiran agreed to make a huge financial contribution to the LTTE. Thennavan, who was a member of the LTTE living in Paris, called in Jayanthiran and questioned him. Thennavan confirmed that it is true, they did not punish Jayanthiran.

Jayanthiran has charmed all the above women by telling them the same story: “I have money. But there is no one to show me love.” Jayanthiran has attracted these young women by telling the same story of “I am alone and looking for love”. Then as the days passed and the sexual arousal wore off, he showed his true self after drinking: he beat, kicked and tortured his preys regularly. He has inflicted injuries on their faces and bodies and has left a wound in their hearts that will never heal. Then another woman  joins his lengthening list of victims.

Most of these women belong to the “lower castes,” in Jayanthiran’s language. Some belong to marginalized families due to inter-caste marriages or are the daughters of those who are mothered by respectable-castemen like Jayanthiran’s father, Ponnaiya Vettivelu. Where there are no male figures in a family, Jayanthiran capitalizes on the lack of vigilance in such a family, its poverty, and its having no one to guard them, and he preys on young girls from  a family to give vent to his lust. This is the greatest misfortune of the Tamil community.

Kudumbi Jaya’s entry into politics

Umachandra Prakash, Deputy Secretary of SJB, is also the party’s media spokesperson. Her role in bringing Jayanthiran into politics could not be confirmed. But she told a close friend of hers that she did not bring Jayanthiran into politics but she knew about Jayanthiran’s relationships adding in explanation that Jayanthiran’s personal life is different from his politics and that is why she has volunteered to travel with him in politics. It is noteworthy that Umachandra Prakash, a self-proclaimed feminist, is a maternal relative to Jayanthiran.

Umachandra Prakash is well aware of the plight of the three women who are victims: the mother of two children who are demanding a divorce because of Jayanthiran’s cruelty, the mother of the girl child who is currently living with Jayanthiran’s illegitimate child, and the now bewitched young girl whose child-like face is still intact. But for Jayanthiran’s money Umachandra Prakash is putting up with this for Lux Hotel which is the Jaffna District Office of SJB.

Spirituality – Politics – Power

If Jayanthiran was just a bully or a rowdy, it wouldn’t have made such a big impact. But Jayanthiran is the Chief Trustee of a Shivan temple, the chief organizer of a national party for Jaffna District. How do our religions and political parties lead our young generations? What kind of a society do we try to build in this island nation?

From the tigers of those days to the lions of today, no one saw the iniquity of people like Jayanthiran. As a result, such young girls fall prey to moneyed and influential men like Jayanthiran. This criminal who was imprisoned for crimes committed in Paris, wrote and published a kind of a biography “Through the Bars.”

In that book, Jayanthiran mentions that young girls fell for his charms and even his friends’ wives fell in love with him.

The cowards and scoundrels in Jaffna have the courage to beat innocent people who do not pay meter interest and take it away. Those in authority and Tamil political leaders don’t care about any of this. Several dozen Jayanthirans are still allowed to prey on marginalized Tamil girls.

Money is necessary for politics. So scoundrels like Jayanthiran are absorbed into politics. People like Jayanthiran get political status, then they use their money, politics and power to multiply their authority and become centers of power. In front of these the young girls fall as insects. If we want to save the young women, France La Courneuve Shivan temple should stop the euros falling into the undiyal (till), people should stop using Lux Hotel. The SJB should stop appointing scoundrels to positions of responsibility for money and alcohol. Not only Samagi Jana Balawegaya but every party should weed out the scoundrels in their parties. Are they ready for this?

About the Author:

Thambirajah Jeyabalan is a teacher / lecturer in the UK. Also, a freelance Tamil journalist and an editor, whose articles are published in many Tamil media including Thesam, ThesamNet, London Udhayan, London Kural and the youtube Channel Thesam Thirai. He is a social and political activist and a commentator since 1997. He published books including ‘Vaddukoddaiyil Irunthu Mullivaykkal Varai – வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை and Ilankaiyil Thamil Kalvich Samugam: Yarl Palkalaikalakam Oru Paarvai – இலங்கையில் தமிழ் கல்விச் சமூகம்: யாழ் பல்கலைக்கழகம் ஒரு பார்வை.

Read the article in Tamil:


அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் கலாநித்திகளும் கல்லாநித்திகளும்! சிறுவயதில் பாலியல் கொடுமையை எதிர்கொண்டவர்களின் பகிர்வு!!

பதின்மூன்று வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கி குற்றவாளிக்கு கிடைக்க இருந்த அதிகபட்ச தண்டணையை குறைக்க அல்லது குற்றவாளியை தண்டணையில் இருந்து விடுவிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளமை தேசம்நெற் க்கு தெரியவந்துள்ளது. பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் முன்னின்றவர்களில் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் மிக முக்கியமானவர். சமூகத்தில் தன்னை மதிப்புக்குரியவராக கட்டமைத்து வைத்துள்ள கலாநிதி நித்தியானந்தன் டொக்டர் நித்தி என்றும் அறியப்பட்டவர். ரட்ணம் பவுண்டேசன் ஸ்தாபகர் மட்டுமல்ல மேற்கு லண்டன் தமிழ் பள்ளியை நிறுவி நீண்டகாலம் அதன் அதிபராகவும் செயற்பட்டவர். நித்தி, தன் பள்ளியில் கற்ற மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டுகொளாமல் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு ஒரு பாலியல் குற்றவாளிக்காக நற்சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்த நற்சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருந்தார். இது சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் கடுமையான ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்ட பெப்ரவரி 2ம் திகதி குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கிய 42 பெயரின் விபரங்களும் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் நித்தி மிக முக்கியமானவர். இவரும் இவரது சகபாடிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. “இவையள் காரில் கொண்டு திரிந்து ஏற்றி இறக்க கேட்க்கிறது… இவை ஒழுக்கா இருக்கவில்லை…” என்றெல்லாம் பொருள்படும் வகையில் கதைத்து நித்தி, பாலியல் குற்றவாளிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

பாதிக்கப்பட்டவரையும் அவருடைய தாயாரையும் கொச்சைப்படுத்தும் கதையாடல்கள் கலாநித்திகளாலும் கல்லாநித்திகளாலும் பரப்பப்பட்டுள்ளது. “அவவுக்கு பரீட்சையை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் இப்படிச் செய்திருக்கிறா?”, “காரில் ஏத்தி இறக்க கேட்கிறவைக்கு ஒரு பாடம் படிப்பிக்கத் தான் நான் கரக்டர் சேட்டிபிக்கற் குடுத்தனான்”, என்றொல்லாம் வாந்தி பரப்பினதோடு நில்லாமல் ஒரு இணையத்தில் “கள்ளக் காதலியின் 13 வயது மகளோடு உறவு” என்ற அளவுக்கு கதைகள் பரப்பப்பட்டு செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து இச்செய்தியை வெளியிட்டவர்களின் தொடர்பு இலக்கம்: 0033753627270 இவ்விலக்கத்துக்கு உரியவர்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.

மேலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் குற்றவாளியான பிரேமகுமாரை விடுவிக்க வேண்டும் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விசேட பூசைகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பாலியல் குற்றவாளியான பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கியபட்டியலிலலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்துடன் தொடர்பானவர்கள் சிலர் உள்ளனர். இப்பட்டியலில் சில மருத்துவர்களும் பெண்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குகின்றனர். இவர்களின் முழமையான பதிவு விரைவில் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

தனக்கு ஜேர்மனியில் இழைக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோகத்தை பகிர்ந்து கொள்ளும் தமிழ் பெண் ஜென்னி ஸ்ரேக், “எனக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்தும் தமிழ் சமூகம் என்னோடு நிக்கவில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. நான் கைவிடப்பட்டது போலவும் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். “ஐந்து வயதில் தொடங்கியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பின்னிரவில் யாருக்கும் சத்தம் கேட்டுவிடாமல் என்னை காப்பற் (carpet) போடப்பட்ட மாடிப்படிகளால் தூக்கிக் கொண்டு வந்த வரவேற்பறையில் உள்ள சொகுசு இருக்கையில் படுப்பார் தன் மீது என்னை படுக்கவைப்பார். நீண்ட ரஸ்க்கை உமிந்ததைவிட எதுவும் தெரியாத அந்த வயதில் தன்னுடையதை என்னுடைய தொண்டைக்குள் திணித்தது இன்னமும் மங்கலாக ஞபகம் இருக்கின்றது” என்று தனக்கு இளம் வயதில் நடந்ததை விபரித்தார் ஜென்னி.

ஜென்னி மேலும் குறிப்பிடுகையில் “அந்த வயதில் இருந்து குழப்பம், கோபம், அவமானம், மறுதலிப்பு. என்னுடைய குழந்தைப் பருவம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். “அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அல்லது நினைக்கும் போதும் என்னுடைய உணர்வுகள் காட்டுத்தனமாகப் அலைமோதும்” என்றவர் “எனக்கு 17 வயதிருக்கும் போது அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அடிக்கும் போது பயத்தில் கதைக்கவே வராது. கதைத்தால் அதற்கும் அடிவிழும் என்ற பயம். ஒரு கனப்பொழுதில் ஒரு தைரியம் வந்து அவரை நிறுத்தச் சொன்னேன். அவருக்கு என்னில் கை வைக்க உரிமையில்லை என்றேன். எனது அம்மாவின் முகத்தில் அதிர்ச்சியைப் பார்த்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நான் சொன்னால் அதிலிருந்து எதிர்பாராத ஆபத்துக்கள் வந்துவிடும் என்று பயம். என்னுடைய சகோதரன் என்னை இன்னுமொரு அறைக்கு அழைத்துச் சென்றான். அவனிடம் சொன்னேன். எனக்கு நடந்ததை விபரிக்க தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய சகோதரனின் கண்ணில் கண்ணீர். அது அவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்றார் ஜென்னி.

“நான் படுக்கையில் கிடந்தேன் துவாயையும் கடந்து இரத்தம் வடிந்தோடியது. அம்மா வந்தார். அவரால் நம்ப முடியவில்லை. சிரித்தார். கண்ணீர் எனது முகத்தை நனைத்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இரவு அம்மா அவரோடு முரண்பட்டார். என்னை தங்கள் படுக்கையறைக்கு அழைத்தார். என்னை வைத்துக்கொண்டு அம்மா கேட்டார். எல்லாவற்றையும் அவர் மறுத்தார். நாட்கள் ஓடியது. ஏன் தனக்கு முதலிலேயே சொல்லவில்லை என்று அம்மா அடிக்கடி கேட்பார். சொல்லி இருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும் என்றார். இதனை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு குழந்தை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டுகள் ஓடி இரண்டு ஆண்டுகளில் எதுவுமே நடக்காதது போல் அவர்கள் நடந்துகொண்டனர். அவர் இப்போதெல்லாம் முன்னர் எனக்குக் காட்டிய கொடுமைக்காரன் அல்ல. எங்களின் அப்பா, அம்மாவின் கணவர், எங்களின் குடும்பத்தில் ஒருவர். ஓற்றுமையான குடும்பத்தைத்தானே நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. எனது இதயத்தில் கத்தியைச் செருகி திருப்பியது போல் இருக்கும். 19 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினான்” என்று தனக்கு 13 ஆண்டுகள் இழைக்கப்பட்ட வார்த்தைகளால் விபரிக்க முடியாத பாலியல் கொடுமையை பகிர்ந்துகொண்டார் ஜென்னி ஸ்ரேக். பின் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் தன் குடும்பப் பெயரை நீக்கிவிட்டு ‘ஸ்ரேக்’ என்ற ஜேர்மன் பெயரை சுவீகரித்துக்கொண்டார். உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து தற்போது சமூகசேவகியாக பணியாற்றுகின்றார்.

ஜென்னி போன்ற பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட்டவர்களின் கொடூர அனுபவங்கள் இப்படியிருக்க இந்த நவீன சிதைகளையும் அவர்கள் பெற்ற பெண் குழந்தைகளையும் தீக்குளிக்கும் படி கேட்கின்றது தமிழ் சமூகம். குற்றவாளிக்காக நற்சான்றிதழ் கையெழுத்து வேட்டையை முன்னின்று நடாத்திய இந்தக் கலாநித்திகளும் கல்லாநித்திகளும் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்கிறார் லண்டனில் வாழும் சமூக அரசியல் ஆர்வலரும் ஊடகவியலாளருமான பா நடேசன்.

குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்ட விடயம் தொடர்பாக பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணிநேரங்களில் தேசம்நெற் நித்தியோடு தொடர்புகொள்ள முயற்சித்தது முடியவில்லை. மறுநாள் அவரோடு தொடர்பு கொண்டு “நீங்கள் பாலியல் குற்றவாளியான பிரோமகுமாருக்கு கரக்ரர் சேட்டிபிகற் (நற்சான்றிதழ்) கொடுத்தனீங்களா?” என்று கேட்ட போது, “ஓம் நான் கொடுத்தனான் தான்” என்றார். “ஒரு பாலியல் குற்றவாளிக்கு நீங்கள் எந்த அடிப்படையில் கரக்டர் சேட்டிபிக்கற் கொடுதீங்கள்?” என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. “அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அது பிரைவேட் மற்றர் (தனிப்பட்ட விடயம்)” என்றார் நித்தி. “14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றவாளிக்கு கரக்டர் சேற்றிபிக்கற் குடுப்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ப்ரைவேட் மர்ரராக இருக்கலாம் ஆனால் இதுவொரு சமூகப் பிரச்சினை. நீங்கள் சமூகத்திற்கு பதிலளிக்க வேண்டும்” என்று தேசம்நெற் வலியுறுத்திக் கேட்ட போதும் “ இது பிரைவேட் மற்றர்” என்று சர்வசாதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிமீது எவ்வித கரிசனையும் இல்லாமல் பதிலளித்தார் நித்தி. “நீங்கள் இந்த கரக்டர் சேர்டிபிக்கற்றை, பிரேமகுமாரது பாலியல் தண்டணை நிரூபிக்கப்பட முதல் கொடுத்தீங்களா அல்லது பிரேமகுமார் பாலியல் குற்றவாளி என்று தெரிந்துகொண்டும் கொடுத்தீங்களா?” என்று தேசம்நெற் வினவியபோது, அதுவும் “ப்ரைவேட் மர்ரர்” என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நித்தியின் பேத்தியின் வயதையொத்தவர். நித்திக்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கின்றார். அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமி டொக்டர் நித்தியின் தமிழ் பள்ளியில் தமிழ் படித்தவர். தன்னையொரு சிறந்த நிர்வாகியாக தக்க வைத்த நித்தி “நெஞ்சினில் ஈரமும் இதயமுமற்ற மனிதாபிமானமற்ற ஆணவம்பிடித்தவொருவர்” என்கிறார் ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர். நித்தி ஈரோஸ் (Eelam Revolutionary Organization of Students) உடன் தொடர்புடையவர் என்று சொல்வதே எமக்கு அவமானம் என அவர் தெரிவித்தார்.

பரிஸில் வாழும் பெண்ணியச் செயற்பாட்டாளரான ஜெயந்தி தளையசிங்கம் பூரணி, சூரியா ஆகிய பெண்கள் அமைப்புகளில் பணியாற்றியவர், இது தொடர்பாக தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “ஒரு சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது?” என்று கேள்வி எழுப்பியதோடு “இந்தக் கீழான மனநிலைகொண்ட மனிதர்களை சமூகம் ஓரம்கட்டி ஒதுக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“மோரலி பாங்கிரப்ற் (morally bankrupt) ஆன நித்தி ஒரு பக்கத்தில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு துணைபோய்க்கொண்டு மறுபக்கத்தில் தந்தையின் பெயரில் ரட்ணம் பவுண்டேஸனை வைத்துக்கொண்டு சிறார்களுக்கு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் (smart board) கொடுத்து சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றார்” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த நித்தியின் நண்பர்.

“என்னுடைய சாமத்திய வீட்டுக்கு புகைப்படக்காரராக வந்தவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னை தன்னுடைய ஆதிக்கத்தைப்பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தார். இப்போது இந்த விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதால் இதற்குமேல் இது பற்றி கதைக்க முடியாது” என்கிறார் குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட தர்சிகா இளம்கீரன். அவர் மேலும் குறிப்பிடுகையில் இளம்வயதில் நடந்த இந்த பாலியல் துஸ்பிரயோகம் என் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்திவிட்டது. நிகழ்காலம் உறைந்துவிட்டது. எதையும் எல்லாவற்றையும் எல்லோரையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்தேன். வலி, தடுமாற்றம், நிலையின்மை, குழப்பம், வெட்கம், கோபம் இந்த உணர்வுகளே என்னை உலுப்பியது. இதைச் சொல்வதற்கான மொழி எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நான் இதை யாருக்கும் சொல்லவில்லை. பகலில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்துகொள்வேன். இரவில் எல்லோரும் தூங்கும்போது அழுவேன்” என்று தன்மீது நடத்தப்பட்ட அநீதியை விபரித்தார் தர்சிகா இளங்கீரன். தற்போது தர்சிகா இளன்கீரன் உளவியல் நலன்பேணுபவராக பணிபுரிகின்றார்.

ஜென்னி ஸ்ரேக் உம் தர்சிகா இளன்கீரனும் தங்களுக்கு நிகழ்ந்ததையிட்டு துவண்டுவிடவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து தங்களைப் போன்ற இளம்வயதில் பாலியல் துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலொசனைகளும் ஆறதலும் வழங்கி வருகின்றனர். அன்பு – Abuse Never Becomes Us – ANBU என்ற இந்த அமைப்பு பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து மீண்டெழுந்த இவ்விரு பெண்களாலும் உருவாக்கப்பட்டு 2016 முதல் கனடாவிலும் தற்போது பிரித்தானியாவிலும் இயங்கி வருகின்றது.

இவ்வாறு எல்லோராலும் மீண்டெழுந்துவர முடிவதில்லை. அவர்களும் மீண்டெழுந்துவர சமூகத்தில் மாற்றம் வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகின்ற, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகின்ற கலாநித்திகளும் கல்லாநித்திகளும் சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும். பெண்களை இழிவு செய்யும் மடமையை கொழுத்த வேண்டும்.

லண்டனில் தன் இளம் வயதில் தன் வீட்டில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருந்த தூரத்து உறவினரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானவர் தர்ஷனா நவேந்திரன். சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான மற்றைய சிறுமிகளைப் போலவே இவரும் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே தன் பெற்றோருக்கும் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் அந்த வலி அவரை மன உளைச்சலின் எல்லைக்கே இட்டுச்சென்றது. தன் வலியை தனிக்க அவர் கலையையும் ஆக்கப்படைப்பையும் நாடினார். தர்ஷனா தன் வலியோடு பிரசவித்தது தான் Bags of Pain என்ற அவருடைய கவிதை நூல். தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் புனைந்த அக்கவிதைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழுந்த வெவ்வேறு நிலைகளில் இருந்த இருவர் உரையாடும் பாணியில் அக்கவித்தைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. தன்னுடைய சினேகிதி பற்றி குறிப்பிடும் மயுரி திரவியநாதன், தன்னுடைய வாழ்க்கையில் மோசமான நிலைகளைக் கடந்துவந்த தர்ஷனா மிகவும் அறிவுபூர்வமான பெண் என்றும் பாலியல் குற்றங்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு உதவுவதையே அவர் தன்னுடைய இலக்காகக் கொண்டிருப்பதும் மிகவும் முக்கியமானதொரு அம்சம் எனத் தெரிவிக்கின்றார். தர்ஷனா தனது சமூகவலைத்தளங்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு குரல்கொடுக்க பயன்படுத்துகின்றார்.

லண்டன் தமிழ் நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ் பள்ளியின் அதிபராக பணியாற்றும் திருமதி மாதவி சிவலீலன் தேசம்நெற்கு அனுப்பிவ வைத்த குறிப்பில் , “இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பல நடைபெற்ற போதும் இதற்கு நியாயம் கேட்டுப் பெற்றோரோ பிள்ளைகளோ வெளியில் வருவதில்லை. எம் சமூகம் அவர்களையே குற்றவாளிகளென முத்திரை குற்றிவிடுகின்றது. இத்தகைய சமூகத்தில் இருந்து பெண்குழந்தைகளாயினும் ஆண்குழந்தைகளாயினும் இவர்களை எவ்வாறு காப்பாற்றி வளர்த்தெடுப்பதென்பது வேதனைக்கும் ஆபத்துக்குரியதாக இருக்கின்றது.

எங்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் போன்போர் கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் வழங்கியும் சிறு மாற்றத்தியேனும் ஏற்படுத்த முடியவில்லையெனும் போது, கவலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “நீண்டகாலமாகச் சமூகம் சார்ந்து கருத்துச் சொல்லும் நான் ஒரு பாடசாலை தலைமையாசிரியராக, பெண்ணியச் செயற்பாட்டளாராக இத்தகைய இழி செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பெற்றோர் மட்டுமல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும். ’மனதுக்கண் மாசிலன் ஆதல்’. எனத் திருக்குறளில் ஒரு வரி வரும். உன் மனச்சாட்சிக்கு குற்றமில்லாமல் இரு அதுவே அறம் ஆகுமென்று. இது ஒவ்வொருவரும் தான் செய்யும் தவறை உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தருவதுடன் திருந்தி வாழவும் உதவக் கூடும்.

இத்தகைய ஈனச்செயலை அந்நியர்கள் வீட்டிற்குள்ளோ பொது இடங்களிலோ செய்வதில்லை. குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றது. அந்தவகையில் பெற்றோர் மிக மிக அவதானமாகப் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது பிழையென்று தெரிந்தும் அதனை எதிர்க்கும் வல்லமையற்றவர்களாகப் பெற்றோருக்குச் சொல்லப் பயந்தவர்களாக இருந்து விடுகின்றனர். பின்னர் விபரம் அறிந்த வயதில் அவர்கள் இது பற்றிக் கூற முற்படுகையில் இந்தச் சமூகம் அதனை ஜீரணிக்க முடியாமல் அவர்கள் மீதே அவப் பெயரைச் சுமத்துகின்றது.

உங்கள் குடும்ப உறுப்பினர் மீது இத்தகைய அநியாயம் நடைபெற்றால் உங்கள் எதிர்வினை எவ்வாறு அமையும்? சிந்தித்துப் பாருங்கள். ஒரு தாயின் தந்தையின் மனவலியை, ஒரு பாதிக்கப்பட்ட பிள்ளையின் வாழ்நாட் மன உழைச்சலைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் துணிந்து, தன்னைப் போல் பிற பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாதென நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்டுப் போராடிய அந்தப் பிள்ளையையும் அந்தப் பெற்றோரையும் போற்றி வணங்குகின்றேன்” என்று குறிப்பிட்ட மாதவி சிவலீலன், “ஒருவர் குற்றவாளியென நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னர் அவரைக் காப்பாற்றத் துணைபோகும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எங்கள் குழந்தைகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையைக் கையளியுங்கள்” என்ற கோரிக்கையையும் மாதவி சிவலீலன் இங்கு பதிவு செய்துள்ளார்.

அன்று சிறுமியாக பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது கல்வி பயிற்சிக்காலத்தை முடித்துக்கொண்டு மருத்துவராக பணியாற்ற ஆரம்பித்து விட்டார். இந்த உணர்வுரீதியான அலைகள் ஓய்ந்ததும் தன்னைப்போல் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களை வெளியே கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பளிக்கும் செயற்பாடுகளை தான் முன்னெடுக்க விரும்புவதாக பாதிக்கப்பட்ட அன்றைய சிறுமி இன்று மருத்துவராகக் கடமையாற்றுபவர் தன்னுடைய சினேகிதிக்கு தெரிவித்தள்ளார். ஜென்னி ஸ்ரேக், தர்சிகா இளன்கீரன், தர்ஷனா நவேந்திரன் ஆகியோரின் வழியில் இவ்விளம் பெண்ணும் பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழும் பெண்களுக்கு நம்பிக்கையழிக்க முன்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

“புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!

இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இத்தரப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் நம்புகின்றனர். இவர்கள் இந்திய உளவுத்துறையோடு வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இந்த இந்திய ரோ சார்பு அணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக மு திருநாவுக்கரசுடன் லண்டனைச் சேர்ந்த நிலா தற்போது சிலகலமாக இந்தியாவில் தங்கியுள்ளார், லண்டன் வரலாற்று மையத்தின் ஆயூட்கால உறுப்பினர் திபாகரன் மற்றும் மயூரன் ஆகியோர் உள்ளனர். நிலா தற்போது தமிழக்தில் இருந்தாலும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படு செய்யும் பழ நெடுமாறன் தலைமையிலான குழவினரும் இந்திய உளவுத்துறையுடன் செயற்படுபவர்களாக இருந்த போதும், முன்னைய குழவினரைப் போல வெளிப்படையாக தங்களை இந்திய உளவுத்துறையினருடன் அடையாளப்படுத்துவதில்லை.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் சில வாரங்களாகவே ஐரோப்பாவில் உலா வந்துகொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என் போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் 150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர் துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்துவந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.

சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிதி சேகரிப்பை முடுக்கி விடவே முள்ளிவாய்க்கால் முற்றம் கூட்டப்படுகிறது. இதில் “ உலகத் தமிழர்களுக்கு இன்பச் செய்தி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே காத்திருந்ஙகள்… !” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறும்செய்தி அனுப்பி வைக்கின்றது.

பெப்ரவரி 11இல் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்த இந்தியா 48 மணி நேரத்திற்குள்ளாக “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்று தெரிவிக்க உள்ளனர். இந்த அறிவிப்பு ஒன்றும் எழுந்தமானதாக நடைபெறவில்லை. இதற்கு பணம் புரட்டுவது மக்களை ஏமாற்றுவது தான் என்ற காரணமும் இருக்க முடியாது. இது இந்திய உளவுத்தறையான ரோ இன் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. தேசம்நெற்க்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் இந்திய உளவுத்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலருக்கு ஆயதப் பயிற்சிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் சேர்க்கப்படும் இந்நிதி இலங்கையில் தேவைப்படும் போது வன்முறையைத் தூண்டி இந்திய அரசின் ஆளுமையை மேலும் ஸ்தீரணப்படுத்த பயன்படும் எனத் தெரியவருகின்றது. ஈஸ்ரர் குண்டுவெடிப்புக் கூட பயிற்சிகள் தொடர்புகள் எல்லாமே இந்திய மண்ணிலேயே நடந்துள்ளது. எங்கு எப்போது வெடிக்கும் என்பதனைக்கூட இந்தியா தெரிந்துவைத்திருந்தது.

எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றிய தமிழரசுக் கட்சி தனக்கேற்பட்ட தோல்வியில் இருந்து மீள தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தமிழீழக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. ஆனால் அந்தச் சீட்டை அதன் பின் இந்தியாவே மிகத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி சிங்களவர்களைப் படுகொலை செய்ய (அனுராதபுரம், கொக்கிளாய், நாயாறு படுகொலைகள்) புலிகளைத் தூண்டி இனமுரண்பாட்டை திட்டமிட்டுத் தூண்டியது. ஆயத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து போராட்ட களத்தில் இறக்கியது ஒன்றும் தமிழர்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பதை காலமும் நிரூபித்துவிட்டது.

அன்றையைக்காட்டிலும் இன்று இலங்கையின் அமைவிடம் உலக வர்த்தகப் போக்குவரத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது. அதனால் சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆளுமை செலுத்துவதில் கங்கணம் கட்டி உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா கலாச்சார மையத்தையும் கட்டித்தரும், தேவைப்பட்டால் அதனைக் குண்டு வைத்தும் தகர்க்கும். இந்தியாவுக்கு செம்பு தூக்குவதற்கு நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு களமிறங்கிவிட்டனர். இப்போது இவர்களோடு ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே அள்ளுப்படுகின்றது.

அடுத்த முறை அண்ணாமலை மோடியின் சிறுநீரைக் கொண்டு வந்து கோமயம் என்று தெளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அன்று இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிட்ட இந்தியா இன்று மத வன்முறையையும் தூண்டிவருகின்றது. சமூக வலைத்தளங்களிலும் வாய்வார்த்தைகளிலும் என்றுமிலாத அளவுக்கு மதவாத நாற்றம் மோடியின் கோமயத்தின் நாற்றத்தையும் மிஞ்சி நிற்கின்றது.