செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி: ஒடுக்குமுறையை உடைத்து முளைத்த வீரியமான மானிடன் அதிபர் பெருமாள் கணேசன்!

கடந்த ஏழு தசாப்தங்களாக திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இன்று மிகமோசமான மனிதக் கொடூரத்தின் சாட்சியங்களாக மாறியுள்ளனர். ஹிட்லரின் இனப்படுகொலைக்கு பலியாகி துரத்திவிடப்பட்ட யூதர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களுக்கும் வாக்களிக்கப்பட்டதாக சொல்லப்படும் பாலஸ்தீனத்தில்; அடைக்கலம் கொடுக்கப்பட்டது. இன்று அடைக்கலம் புகுந்தவர்கள் அங்குள்ள அந்த மண்ணை விட்டு நீங்காத பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையைப் புரிகின்றது இஸ்ரேலிய இராணுவம். காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அதிநவீன ஆயதங்களை மட்டும் இஸ்ரேலிய கொடுங்கோல் அரசு பயன்படுத்தவில்லை, அவர்களுக்கு கிடைக்கும் தண்ணியை நிறுத்தினர். உணவை நிறுத்தினர். பாண் ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகங்களை குறி வைத்துத் தாக்கினர். வாழ்விடங்களை தரைமட்டமாக்கினர், வீதிகளைக் கிளறி நாசம் செய்தனர். கழிவுகளை பரவவிட்டு தொற்றுநோய்கள் பரவச் செய்தனர். யாரும் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிடாதபடி மருத்துவமனைகளை அழித்தனர். காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய வெள்ளையின மேலாதிக்கவாதிகள் உலகெங்கும் சென்று இன அழிப்புச் செய்து அந்த நாடுகளைச் சுரண்டிக் கொள்ளையடித்து தங்கள் செல்வத்தை வளர்த்தனர். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்றழைக்கப்பட்ட பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டனர். கதை முடியவில்லை தொடர்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கின்றனர். பாலஸ்தீன நிலத்தை அபகரிக்கின்றனர். இதற்கும் மணிவிழாக் கொண்டாடும் நாயகன் பெருமாள் கணேசனுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?

காலனியாதிக்கவாதிகளின் கொள்ளைக்கும் அதிகாரத்திமிருக்கும் பலியான பல நூறு ஆயிரம் சமூகங்களில் ஒன்றான மலையக சமூகத்திலிருந்த வீரியமுடைய விதையில் முளைத்த மானிடன் தான் பெருமாள் கணேசன். இப்போது மலையகத்தின் 200 ஆண்டுகள்ளை எண்ணிப் பார்க்கின்றோம். ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் 200 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தார்கள் என்பதைக் காட்டுவது தான் காஸா மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர். காலனித்துவ காலத்தில் தமிழகத்தில் கொடிய பட்டினியால் மக்கள் இலட்சக் கணக்கில் இறந்தபோது, தானியங்களை இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றியவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள். பஞ்சத்தை பயன்படுத்தி அம்மக்களை தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பணியாற்ற இலங்கைக்கு கொண்டு வந்தனர். அந்த மலையக மக்கள் அன்றுபட்ட அவலம் காஸாவில் இன்று அதே ஏகாதிபத்தியம் செய்கின்ற கொடுமைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அன்றும் சரி, இன்றும் சரி அவர்கள் ஏனைய மக்களை மனிதர்களாகவே கணிக்கவில்லை. மனித விலங்குகளாகவே கணிக்கின்றனர். அவ்வாறே இஸ்ரேலிய தலைவர்கள் மனித விலங்குகள் என்று கூறுகின்றனர்.

இந்த மலையக மக்கள் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பொய்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இன்று இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த போதும் இலங்கை மக்கள், தமிழ் மக்களும் கூட அவர்களை கண்ணியமாக அன்றும் நடத்தவில்லை. இன்றும் நடத்தவில்லை. நாளை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் ஏற்படவில்லை. மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் நீட்சியாக ஜேவிபி உட்பட பேரினவாதக் கட்சிகள் பார்த்தன. அம்மக்களை தங்கள் எதிரிகளாக பார்த்து இன்றும் தோட்ட அடிமைகளாக நடத்துகின்றனர். தமிழ் மக்களும் அந்த மக்களை கள்ளத் தோணிகள், வடக்கத்தையான் என்றெல்லாம் முத்திரைகுத்தி தங்கள் அடிமைகளாகவே தொடர்ந்தும் வைத்திருந்தனர். பின்நாட்களில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் யாழ் மேட்டுக்குடிகள், கிளிநொச்சியில் பெற்றுக்கொண்ட காணிகளுக்கு தோட்டங்களுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படாத மலையக மக்கள் தோட்டக்காரர்களாகினர்.

இவர்களில் சில லட்சம் பேர் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதும் அங்கும் அவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வறுமை தலைவிரித்தாடும் உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் ராமர் கோயில்கட்டி மக்களுக்கு ‘நாமம் போடும்’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பாடசாலைகளையோ தொழிலகங்களையோ அமைக்கத் தயாரில்லை. ராமர் கோயிலைக்கட்டி மக்களை முட்டாள்களாக வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் தலைவர்களாக இருக்கலாம் என்ற சமன்பாட்டை உணர்ந்த பழுத்த அரசியல்வாதி அவர். யாழ் மேட்டுக்குடியின் நீட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு தற்போது தலைவரான எஸ் சிறிதரனும் மோடியின் சமன்பாட்டையே நம்புகின்றார்.

இவற்றுக்கு மறாக தனது சமூகத்தின் மத்தியில் மூட நம்பிக்கைகளைக் களைந்து அம்மக்களை அறியாமை எனும் அடிமைத்தளைகளில் இருந்து நீக்குவதை தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் அதிபர் பெருமாள் கணேசன். பெயர்பெற்ற பாடசாலைகளுக்கு போட்டி போட்டுச் செல்லாது, பின் தங்கிய பிரதேசங்களில், பாடசாலைக்கு ஆசிரியராகி, அதிபராகி அதனை மேன்நிலைக்கு கொண்டுவரப் பாடுபடுகின்ற அதிபர் பெருமாள் கணேசன் போன்ற மிகச் சிலர் இருப்பதால் கிளிநொச்சி மண் இன்றும் தன் கல்விநிலையில் முன்னேறத் துடிக்கின்றது. கல்வி நிலையில் பின் தங்கியுள்ள கிளிநொச்சியில் தமிழ் ஆசிரியர்களுக்கே போதாமை உள்ள போது ஆங்கிலக் கல்வியில் புலமைபெற்று அம்மண்ணில் ஆங்கில மொழியறிவையும் வளர்த்து வருகின்றார்.

அதிபர் பெருமாள் கணேசனுக்கும் எனக்குமான உறவு அகலமான, ஆழமான, நீண்ட உறவல்ல. நாங்கள் அடிக்கடி உறவாடியவர்களும் உரையாடுபவர்களும் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஓரிரு முறை உரையாடி இருப்போம். ஆனாலும் அந்த உறவு மிக ஆரோக்கியமானதாக இருக்கக் காரணம் இருவரிடமும் இருந்த சமூகத்தின் மீதான நேசம். அதனால் அதிபர் பெருமாள் கணேசன் பற்றிய எனது விம்பம் அவர்சார்ந்த அவரைச் சூழ உள்ளவர்களால் கட்டப்பட்டது. இதற்கெல்லாம் மணிமகுடம் சுட்டியது போல் அமைந்தது அவருடைய அகச்சீற்றம். அவருடைய போராட்ட குணாம்சம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்நிறுத்துகின்ற அடையாளம். அதனை அவர் எதிர்கொள்கின்ற பாணி. “நான் தோட்டக்காட்டான்!”. அதில் அவர் தன்னுடைய அடையாளத்தையே தன்னுடைய பலமாக மாற்றுகின்ற துணிச்சலைக் காண முடிகின்றது. இது வெறும் துணிச்சல் அல்ல. தன்நம்பிக்கையின் அடையாளம். இந்தத் துணிச்சல், ஒடுக்கும் மேட்டுக்குடிகளுக்கு சவாலாக உள்ளது. ஒரு சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்றால் அவர்களின் அடையாளத்தை கீழ்நிலைப்படுத்த வேண்டும். அவர்கள் யார் என்பதை வெளியே சொல்ல அவர்களே தயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதனையே காலம் காலமாக மேட்டுக்குடிகள் செய்தன. அவர்களை அந்த அடையாளத்தைப் பயன்படுத்தியே ஒடுக்கினர். பாதிக்கப்பட்டவர்கள் நிலவுக்குப் பயந்து பரதேசம் சென்றது போல் தங்களுக்கு வேறு அடையாளங்களை போர்த்திக்கொள்ள முயன்றனர். ஒடுக்குபவன் விடவில்லை. அவர்களின் அடையாளத்தை தோண்டி எடுத்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறான். அதிபர் பெருமாள் கணேசன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அதிபர் பெருமாள் கணேசனை யாராலும் ஒடுக்க முடியவில்லை, பாசத்தாலும் நட்பாலும் அல்லாமல்.

இலங்கையின் தமிழர் தாயகங்களில் யாழ்மாவட்டத்துக்கு இருக்கின்ற கல்விப் பாரம்பரியம் ஏனைய மாவட்டங்களுக்கு இல்லை. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் சிலநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டது. காலனியாதிக்க காலம் முதலாக அங்கு ஒரு கல்விப் பாரம்பரியம் உருவானது. அது மேட்டுக்குடிகளுக்கான கல்வியாகவே அமைந்தது. அதன் தாக்கத்தை இன்றும் தமிர்களிடையே பரவலாகக் காணலாம். கல்வி என்பது காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க வெள்ளாளர்களுக்கானதாக இருந்து பின் ஆறுமுகநாவலரின் சைவ மறுமலர்ச்சியைத் தொடர்ந்து யாழ் வெள்ளாள ஆண்களுக்கானதாக மாறியது. பின்னாளில் அது யாழ் சைவ வேளாளர்களுக்கானதாக மாற்றமடைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மையில் வெளியான தமிழ் வாழ்த்துக் கூட கல்வியை யாழ் மாவட்டத்துக்கானதாகவே சித்தரிக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்காக அதிபர் பெருமாள் கணேசன் போன்ற கல்வி ஆளுமைகள் பல்வேறு சமூகங்களில் இருந்து உருவான போதும் இன்றும் கல்வி அனைவருக்குமானதாக உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை.

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் என்பது இந்த நாகரீக உலகத்தின் மிக உன்னதமான வளர்ச்சித்திட்டம். உலகின் செல்வந்தர்களில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமானவர்களைத் தன்நாட்டில் கொண்டுள்ள உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் கல்வி ஜனநாயகமயப்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் சென்று திரும்பும் ஒவ்வொரு மாணவனும் 2 கோடி ரூபாய் கடனுடனேயே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்றனர். ஆனால் சின்னஞ் சிறிய இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு சதம் கடன் இல்லாமல் வெளியே வருகின்றனர். இந்தப் பட்டதாரிகளை அமெரிக்காவும் கனடாவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் உடனேயே உள்வாங்குகின்றனர். இப்பட்டதாரிகளுடைய கல்வித்தரம் அம்மேற்கு நாடுகளின் கல்வித் தரத்துக்கு ஒப்பானதாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களை மருத்துவ தாதிகளை நம்பியே பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இலங்கையில் இலவசக் கல்வி இருந்த போதும் கல்விக் கட்டமைப்புகள் காலனித்துவத்தின் நீட்சியாகவே இன்றும் இருக்கின்றது. இக்கல்வித் திட்டம் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மலையக மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தாய்மொழிக்கல்வி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம வாய்ப்பை அளித்தாலும் மொழிக்கு அப்பாலான பொருளாதார, பிரதேச, சாதிய தடைகள் இன்றும் பரவலாக உள்ளது. இத்தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சமூகம் அரசியல், பொருளாதார, இன, மத, சாதிய, பிரதேச அடிமைக்கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு கல்வி இன்றியமையாதது. ஆனால் ஆண்டாண்டு காலமாக நூற்றாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக உட்பட்ட ஒடுக்கப்படும் சாதிகளும் மலையக மக்களும் அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே கனவுகள் மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று நம்ப வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது தன்னம்பிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது.

காலனித்துவத்தின் நீட்சியாக உள்ள இலங்கைக் கல்விக் கட்டமைப்பு இங்குள்ள அதிகாரக் கட்டமைப்புக்கு சேவகம் செய்கின்ற வகையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே பிரித்தானிய கல்விக் கட்டமைப்பாகவும் உள்ளது. அதன்படி கல்வியில் மேன்நிலை அடையக்கூடியவர்களை மட்டும் வளர்த்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளும் இம்முறை ஏனையவர்களைப் பற்றிக் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறான சிந்தனைமுறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டு உயர் கல்வி வரை அது அனைவருக்குமான வகையில் ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால் சமூக ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஒடுக்குமுறையும் இன்னும் ஆண்டாண்டு காலத்திற்குத் தொடரும்.

துரதிஸ்டவசமாக கல்வியில் மேன்நிலை அடைபவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினராகவே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அந்தக் கல்விக் கட்டமைப்பில் வெற்றிபெறுவதற்கான தடைகள் பாரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலை, குடும்பத்தினுடைய கல்வி நிலை, அவர்களுடைய குடும்பத்தில், அவர்கள் வாழ்கின்ற சமூகத்தில் கல்வி பற்றிய பார்வை, அவர்களுடைய சூழலில் கல்விக்கான வாய்ப்பு வசதிகள், கல்விக்கான நவீன சாதனங்களுக்கான வாய்ப்பு என மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேற முடியாமல் பாரிய தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தடைகளைத் தாண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் முன்னேறுகின்ற போது கல்வி மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளின் மேல்மட்டங்களில் உள்ளவர்கள் அவர்களுக்கு தடைகளைப் போட்டு அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். மலையக, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பாடசாலைகளுக்கு அதிபர்களாக வருவது, கல்வி அதிகாரிகளாக வருவது, பல்கலைக்கழக துறைசார் தலைவர்களாக வருவது, துணை வேந்தர்களாக வருவது, மாகாணசபை உறுப்பினர்களாக வருவது, பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது. அன்று ‘சூரனின் சுயசரிதை’ நூலில் குறிப்பிட்டவாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டிய ஆரம்பப் பாடசாலையை தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எரித்து நாசமாக்கிய வரலாறு இன்று இடம்பெறவில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தை தடுப்பதற்கு இக்கட்டமைப்புகளும் கட்டமைப்புகளில் உள்ளவர்களும் துணைபோகின்றனர்.

கல்வி என்பது சான்றிதழ்களாக மட்டும் குறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் வினைத்திறனற்றவர்களாக உள்ளனர். நடைமுறையில் உள்ள தொழில்நுட்பக் கல்வியும் பிரதேசத் தேவைகளைச் சார்ந்ததாகவோ உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவோ இல்லை. கைக்கடக்கமான அப்பிளைக் கொண்டு ஐரோப்பாவில் நூற்றுக்கு மேற்பட்ட துணைப்பொருட்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வளவோ பெரிய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

கல்வி என்பது அனுபவம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறை. இன்றில்லாத, நாளை உருவாகப் போகின்ற பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலை இன்றைய கல்வி வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இன்றுள்ள பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத கல்வியைத்தான் தற்போதுள்ள கல்வி;க் கட்டமைப்புக்கள் இன்று வழங்குகின்றன. அதனால் தான் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இன்றைய கல்விக் கட்டமைப்பில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்நிலையை, வாழ்க்கைச் சூழலை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாதவர்கள் தான் இன்றைய கல்வி மற்றும் அதிகாரக்கட்டமைப்புகளில் உள்ளனர். ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பெரும்பாலும் உள்ளனர். இந்த அந்நியத்தன்மை, இந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும்.

இதனையே பதியுதீன் மொகமட் கல்வி அமைச்சராக இருக்கும் போது மாற்றி அமைத்தார். முஸ்லீம் பிரதேசங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் முஸ்லீம்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் ஆசிரியர் தெரிவுக்கான தகமை எல்லையை சற்று தளர்த்தினார். முஸ்லீம் பாடசாலைகளில் அவர்களின் வாழ்நிலை, வாழ்க்கைச் சூழல், கலாச்சாரத்தை உணர்ந்துகொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆகினர். அச்சமூகத்தின் மத்தியில் ஒரு கல்விப் பாரம்பரியம் உருவாக ஆரம்பித்தது. இந்நிலை வெவ்வேறு சமூகங்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் அச்சமூகத்திலிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வியும் வாய்ப்புகளும் மேலும் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிந்தால் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் நீக்க முடியும். ஆனால் தற்போதைய கல்விமுறை என்பது ஆரம்பம் முதலே மிக ஏற்றத் தாழ்வானதாக உள்ளது. முன்பள்ளிகளை எடுத்துக்கொண்டால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரை வேறுபடுகின்றது. இதில் யார் எந்த முன்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்கள்? எந்த முன்பள்ளியில் கற்கும் பிள்ளையின் கல்வியின் எதிர்காலம் நிச்சயமானதாக இருக்கும். இந்நிலை தற்போது தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையோடு உயர்கல்வியிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியோடு பாடசாலைகள் இரண்டாம் தரமானவையாக்கப்பட்டு பெரும்பாலான பாடசாலைகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது நாம் அனுபவ வாயிலாகக் கண்டுகொண்டது. தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியும் இதனையே காட்டுகின்றது. அதே போல் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி அரச பல்கலைக்கழகங்களின் தரவீழ்ச்சியை இன்னும் ஊக்குவிக்கும். அரச பாடசாலைகளை, அரச பல்கலைக்கழகங்களை தரமுயர்த்தாமல் கல்வியை தனியார் கைகளில் ஒப்படைப்பது நீண்டகாலத்தில் கல்வியில் தற்போதுள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மலையக மக்களுக்கு, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்குவதற்கான முயற்சியாகவே இது அமையும்.

இதனைத் தடுப்தற்கு அதிபர் பெருமாள் கணேசன் போன்ற தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் பலர் பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களில், பாடசாலைகளில் தங்கள் சேவையை ஆற்ற வேண்டும். பொறுப்பான பதவிகளில் அதிபர் பெருமாள் கணேசன் போன்ற பொறுப்பான மனிதர்கள் அமர்வது மட்டுமே வளமான, ஏற்றத் தாழ்வற்ற சமூக உருவாக்கத்திற்கான முன்நிபந்தனையாக இருக்க முடியும். அதிபர் பெருமாள் கணேசனின் இந்த மணிவிழா அவருடைய கடந்த கால கல்விப்போராட்டத்தை நினைவு கூரவும் அவருடைய அடுத்த இலக்கை செயற்திட்டத்தை திட்டமிடவும் உதவும். அண்மைய எதிர்காலத்தில் இவர் ஓய்பெற முடியாது. இவருக்கான பொறுப்புகள் அதிகம்.

எம்மோடு சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கல்விப் போராளியைப் பற்றிய ஒரு பதிவை வரைய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!

நட்புடன் த ஜெயபாலன்.

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதிகள் – சுழற்சி முறையில் வருகை தரும் அழகிகள்!

யாழ்ப்பாணம்-இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு விபசார அழகிகள் சிக்கியுள்ளனர்.

 

குறித்த பகுதியில் இன்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 42 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விடுதியை ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே பொறுப்பாக இருந்து நடாத்தி வருகின்றார் என தெரியவந்துள்ளது.

இந்த விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அழகிகள் சுழற்சி முறையில் வருகை தருவதாகவும், இதனால் அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த இளவாலை காவல்துறையினர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் எடுத்துள்ள நடவடிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.

 

இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியை விரும்பும் இலங்கையர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !

ஏதேச்சதிகாரத்தை மக்கள் விரும்புவது மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேற்கொண்ட ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பத்தில் ஒருவர் ஏதேச்சதிகாரம்குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

 

ஏனைய வகை ஆட்சி முறைகளை விட ஜனநாயக ஆட்சி முறையை அதிகளவானவர்கள் விரும்புகின்ற போதிலும் சமீபத்தைய ஆய்வின் மூலம் பத்தில் ஒரு இலங்கையர் சில சூழ்நிலைகளில் ஜனநாயக முறையை விட சர்வாதிகார ஆட்சிமுறை பொருத்தமானது என கருதுகின்றமை தெரியவந்துள்ளது.

2018 இல்; மைத்திரிபாலசிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு நெருக்கடி உருவானவேளை இதுபோன்றதொரு மனோநிலை காணப்பட்டது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

 

ஜனநாயகத்திற்கான வலுவான ஆதரவு உள்ளபோதிலும் ஜனநாயக ஆட்சி மீதான விரக்தி அதிகரிக்கும்போது எதேச்சதிகார ஆட்சிக்கான ஆதரவு புத்துயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை முன்னர் எப்போதையும் விட குறைவாக காணப்படுகின்றமையும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

 

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களி;ல் 22 வீதமானவர்களே நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்-19 வீதமானவர்களே அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ஜனநாயக கட்டமைப்புகளின் நம்பிக்கை தன்மைக்கு அவை குறித்த மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள ஆய்வு சட்டமியற்றும் ஸ்தாபனங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்களை உருவாக்கும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இராணுவம் மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை விட குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 

2011 இல் 63 வீதமான மக்கள் நாடாளுமன்றத்தை நம்பினார்கள் 2022 இல் இது 24 வீதமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஆய்வு இந்த அரசியல் கட்சிகள் குறித்தே மக்கள் மத்தியில் மிகக்குறைந்தளவு நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனது.

2011 இல் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கை 56 வீதமாக காணப்பட்டது 2024 இல் அது 19 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த முடிவுகள் இலங்கையின் ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை வெளிப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியாக புடின் சாதனை வெற்றி !

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஸ்டாலினுக்கு பின்னர்  பிறகு மீண்டும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வென்று ரஷ்யாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

1999 இல் முதன்முதலில் பதவிக்கு வந்த முன்னாள் புலனாய்வுத்துறை தலைவரான லெப்டினன்ட் கேணல் புடின் இன்றுவரை ஆட்சியில் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம் என்றும், இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது என்றும் புடின் கூறியுள்ளார்.

இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவுக்கு அறிக்கை!

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.

 

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் (CPRP) தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து காணொளி மூலம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

 

“இலங்கையில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற கொலைகள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள் தொடர்பான உண்மைகளை நாங்கள் முன்வைத்தோம்.”

 

சித்திரவதை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை தொடர்பில் மேலும் இரண்டு அமைப்புகளுடன் இணைந்து அறிக்கை சமர்ப்பித்ததாக சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் வலியுறுத்தி

 

“கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, சமூகம் மற்றும் மத மையம் (CSR) மற்றும் பெக்ஸ் ரோமனா ஆகியவற்றுடன் இணைந்து ஆவணம் ஒன்றை உருவாக்கி மனித உரிமைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளரிடம் ஒப்படைத்தோம்.”

 

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்தமை மற்றும் இதற்கென அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட தேசபந்து தென்னகோன், பாதிக்கப்பட்டவருக்கு தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்படுவதாகவும் குற்றஞ்சாட்டும், கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சபையின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா ஜெனீவாவில் இருந்து வெளியிட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் – டொனால்ட் டிரம்ப்

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

 

அமெரி;க்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவுக்கு வந்தது வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

அவர்களில் 05 பேர் கடந்த செவ்வாய்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

 

ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததை தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

 

இதன்போது, அவர்களின் விடுதலைக்காக தாம் வெளியில் ஒன்றுபட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிந்து வைத்தவர்கள் உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

வடக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஏப்ரலில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் எனவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும்,சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகளை தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டும், பரம்பரைபரம்பரையாக ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்கும் கலாசாரத்தினையும் மாற்றுதற்கு தெற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

 

அவர்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். தமிழர்களின் பங்களிப்புடனான ஆட்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.