செய்திகள்

செய்திகள்

செய்திகள்

2023இல் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் கைதானவர்கள் பொலிஸ் அதிகாரிகளே..!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம்,  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும்   தெரிவித்துள்ளது.

இந்த  முறைப்பாடுகளில் 2,789 முறைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கொழும்பு ஐ.நா அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம் !

காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (05) பதாதைகளை ஏந்திக்கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் தமது பதாதைகளில் ஏந்தியிருந்தனர்.

ஜக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும் கடமைப்பட்டுள்ளது  எனக்குறிப்பிட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கொழும்பு நகரசபை முன்னாள் உறுப்பினர்களான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான், எஸ்.எம். முஸம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டு மகஜர்களையும் கையளித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவனை இரகசிய அறையில் வைத்து தலைகீழாக தூக்கி ஆணுறுப்பை இலக்குவைத்து அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய பொலிஸார்- தொடரும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் , பல்கலைக்கழக மாணவனான கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை வழிமறித்து , தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார்.

அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை. என கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன, என அவற்றை எடுத்து கொடுத்த போது, அதனை வாங்காது, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைத்தார்.

அதன் போது, சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன்.

பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள் , மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள்.

கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது , அதனை தர முடியாது என மறுத்த போது, என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள்.

என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது.

அதனை அடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து, கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்கள் கண்டார்கள்.

அறைக்குள் வைத்து, அடிக்கும் போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள்.

எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள்.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரினால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ்.நீதவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

இளைஞனின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் கூறிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம், சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகிய நிலையில், கைதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

அச்சுவேலி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கு செல்லாத இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்து கடுமையாக தாக்கியமையால், இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் டக்ளஸ் !

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலை வரவேற்கும் அவுஸ்திரேலியா!

யேமனின் ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.

செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் பதற்றத்தை குறைப்பதும் அந்தபகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுமே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஹெளத்திகிளர்ச்சி குழுக்களின் தலைமைக்கு எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகமுக்கியமான கடல்பாதையில் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உயிர்களை நாங்கள் பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடியது மகிழ்வளிக்கிறது – சரத்வீரசேகர மகிழ்ச்சி!

தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று(4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என தெரிவித்தார்.

 

கொழும்பில் பதுங்கியிருந்த யாழ் வாள்வெட்டு ஆவா குழுவின் தலைவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மவுண்ட் யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் அந்தப் பகுதியில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்தறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியிருந்த அவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்!

காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

 

சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.

 

இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை பாரிய பேசுபொருளாகிய நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 76வது சுதந்திர தினதந்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி !

இலங்கையின் 76வது சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மக்களும் வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

 

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.

 

நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கரவண்டி பவனி முதலியனவும் இந்த பேரணியில் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.