செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழரசு கட்சி தொடர்பில் நான் பேச விரும்பவில்லை -கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் என்பது அவர்களின் தனிப்பட்ட விடயம் எனவும் அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறவிரும்பவில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

அத்தோடு, இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் எமது செய்தியாளர் கேட்டபோது தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார்.

 

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய செய்தியிலேயே இதனை கூறினார்.

 

மேலும், வடக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் விரைவில் மக்களை சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

 

மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக அதிபர் வழங்கியுள்ளார் எனவும், அந்த நிதி கடல் தொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தமானியில் வெளியானது இணையப்பாதுகாப்புச் சட்டம் !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப்பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன.

 

அதன்படி, தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை தொடர்ச்சியாக 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், அதன் முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் – UNHRC

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இந்த சட்டத்தின் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை தடுக்கப்படலாமென பேரவையின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக சிவில் சமூகத்திற்கும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளுக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து பரிசீலிக்க வேண்டுமென, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து !

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டம்!

ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் எனும் காற்றை சுவாசித்த எமது நாடு அதன் பின்னரான நான்கு தசாப்தங்களாக முகங்கொடுத்த யுத்தத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தாலும் கூட பூரணமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளையோ அல்லது தேவைகளையோ நாம் காணக் கூடியதாக இருந்தது.

 

இவ்வாறான கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் தற்போது நன்றாக அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

 

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முக்கியமான ஒன்றுதான் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியயேற்றுதல் ஆகும்.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றி அவர்களுக்குத தேவையான நிவாரணங்களை வழங்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய செயல் திறனான பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம்; கௌரவமான பாதுகாப்புமிக்க மக்கள் சமூகம் ஒன்றை உறுதிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

 

அதில் முக்கியமான திட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கல் மற்றும் சாந்தைப் பயன்படுத்தி நிரந்தர வீடை நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்தைக் கூறலாம்.

 

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 27,322 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28,619 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 29, 762 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 23,068 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 16,227 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10,039 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,098 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,713 வீடுகளுமாக மொத்தம் 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் பயனாளர்களினால் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும். இதற்கான கண்காணிப்பு மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும் தொழிநுட்ப அதிகாரியினால் வழங்கப்படும்.

 

இந்த செயற்றிட்டத்தின் கீழ் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 600,000 ரூபாயும் இரண்டு உறுப்பினர்களை விட அதிகமான உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு 1,000,000 ரூபாயும் வழங்கப்படும்.

 

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 7,671 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 952, முல்லைத்தீவு மாவட்டத்தில் 223 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2,183 வீடுகளும் மன்னார் மாவடத்தில் 526 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 3,500 வீடுகளும் மட்டக்களப்பு 3,214 வீடுகளும் அம்பாறை மாவடத்தில் 2,007 வீடுகளுமாக நிர்மாணிக்க வேண்டிய வீடுகளின் மொத்த எண்ணிக்கை 20,276 ஆகும்.

 

2024 ஆம் ஆண்டில் இந்த செயற்றிட்டத்திற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு 600 ,000 ரூபாய் பெறுமதியான 833 வீடுகளும் 1,000,000 ரூபாய் பெறுமதியான 1000 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 694 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில், 86 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 197 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 48 வீடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 316 வீடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 வீடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 181 வீடுகளுமாக மொத்தம் 1,833 வீடுகள் 2024 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது செயற்றிட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை கூறலாம்.

 

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிரந்தர வீடு நிர்மாணிக்கும் செயற்றிட்டத்திற்கு சமாந்தரமாக அவர்களை மீள்குடியேற்றும் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களின் எண்ணிக்கை 90,270 ஆகும். இதற்காக 10,848,92 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 

குடி நீர் இணைப்பு, குழாய் கிணறு நிர்மாணிப்பு, பொதுக் கிணறு நிர்மாணித்தல், விவசாயக் கிணறு நிர்மாணித்தல், வீட்டு மின் இணைப்பு, வாழ்வாதார அபிவிருத்தித் செயற்றிட்டம், மலவசலகூட வசதிகள், கல்விச் செயற்றிட்டம், உள்ளக வீதி, சுகாதாரம், சிறு குளங்களின் மறுசீரமைப்பு, ஏனைய செயற்றிட்டங்கள், காணி கொள்வனவு, TFR செயற்றிட்டம், ஆகிய அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினுள் அடங்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் பதிவாவதாக சுகாதாரப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பது மிகவும் பிரதான காரணம் என இனங்காணப்பட்டுள்ளது.

 

“அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதிப் பங்களிப்பில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் செயற்றிட்டம், அந்த தொழில்நுட்ப வசதி உள்ள தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுப்பதற்கு 2021 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தின் ஊடாக 27,444 குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதனடிப்படையில; கிளிநொச்சி மாவட்டத்தில் 23, வவுனியா மாவட்டத்தில் 23, முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்குமாக நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும். இதில் முழுமையாகப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 25 நனோ நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டத்திற்காக திட்டமிடப்பட்ட முழு ஒதுக்கீடு 211,669,403.67 ரூபாவாகும். இதுவரை செலவிடப்பட்ட முழுத்தொகை 125,678,182.44 ரூபாய் ஆகும். எஞ்சியிருக்கும் 25 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளின் பணிகளை நிறைவுசெய்து இந்த வருட இறுதிக்குள் மக்கள் மயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெற மூன்று நாட்கள் முயன்றும் கிடைக்கவில்லை – வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு முன்பு ஒருவர் தற்கொலை முயற்சி!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ளமரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய அநுரகுமார என்பவர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றதாகவும் எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 

இதனையடுத்து காரியாலய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் முறைப்பாடு – மன்னிப்பு கோரினார் மார்க் சக்கபேர்க் !

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கபேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தங்களது குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் வடித்திருந்தனர். மேலும், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினர்.

சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணை அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்றது.

மார்க் சக்கபேர்க் மற்றும் TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

தரமற்ற மருந்துகள் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை !

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (31) ஆஜராகுமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு வருகை தராமைக்கு முன்வைத்த காரணம் பொய்யானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரச செலவு முகாமைத்துவ அமைச்சு உப குழுக் கூட்டத்தில் அமைச்சர் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை என அதன் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

 

விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நாளை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

கிளிநொச்சியின் இயற்கை வளங்களை சூறையாடும் மணல் மாபியாக்கள்!

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அவர் 10 நாட்களுக்குள் இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறியதுடன், இதுதொடர்பாக 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

 

இந்நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31) பிற்பகல் சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர், கள நிலைமைகளை கண்காணித்ததுடன்,சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கிராம மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பகுதியில் மணல் மாபியாக்களில் இயங்கும் பலர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக காணப்படுவதால் மக்கள் அவர்களை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குவதாகவும் அறிய முடிகிறது.

 

இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் – 300க்கும் அதிகமானோர் கைது !

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும் முறைமையாக கடத்தல்காரர்களால் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (31) நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

கைத்தொலைபேசியுடன் தொடர்புடைய 1964 வர்த்தக நிலையங்கள், 2131 அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் 1202 இடங்களில் அடையாளம் காணப்பட்ட வர்த்தக வங்கிகள் தொடர்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.