செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் தெரிவில் வெளிப்படுவது சாதிய குளறுபடியா அல்லது ஆணாதிக்க சிந்தனையா..?

கடந்த வருடம் யாழ்ப்பாண தீவுப் பகுதி இந்து பாடசாலை ஒன்றில் கிறிஸ்தவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார் என்பதற்காக மாணவர்களை மதவாதம் சார்ந்த கருத்தியலுக்குள் தள்ளி ஒரு போராட்டம் ஒன்றை குறித்த பாடசாலை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தமை சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களை கிளப்பிவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19) காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் முன்னைய அதிபராக செயற்பட்டவரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்ற கருத்தை மையப்படுத்தி விவாதங்கள் வெளியாகியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க சாதி தொடர்பான பிரச்சனைகளும் குறித்த பாடசாலை அதிபர் தெரிவில் காணப்படுவதாக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதுடன் பாடசாலையின் முன்னாள் அதிபர் உயர் சாதியை சாராதவர் என்பதற்காக புதிதாக உயர்சாதியை சேர்ந்த பெண் அதிபரை நியமித்துள்ளதாகவும் இருந்தபோதிலும் அது தொடர்பிலும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசம்நெட்இற்கு தகவல் அளித்த சமூக நலன்விரும்பி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் இலங்கை பொலிஸார் !

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட  விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்த நிலையில் திங்கட்கிழமை (19) பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்போது நீதவான், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், உள்ளிட்டோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைமன்னாரில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும், விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமிக்கவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்து, எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் இல்லை – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

 

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு, வீட்டார் பணம் கொடுக்காததால், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

 

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால், குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால், அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வசதிகளை வழங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான்!

பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.

Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓர் கிழக்கு சமூகப்போராளியின் மறைவு !

தோழர் சந்திரகுமார் தனது இளமைக்காலங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஜே.வி.பி போன்ற அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். அதன் காரணமாக  1971 ஆம் ஆண்டு ஜேவிபியின் ‘சேகுவராப் புரட்சி’ இடம்பெற்றபோது  அரச படைகளினால் பல்வேறுவிதமான நெருக்கடிகளை எதிர்கொண்டார்.

அதனால் அவர் திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றத் தொடங்கிய போதே  ‘விடுதலைச் சந்திரகுமார்’ என அறியப்பட்டார். துறைமுகம் சார்ந்து மட்டுமல்ல  திருகோணமலையின் தொழிற்சங்க போராட்டங்கள் அனைத்திலும் முன்னணி வீரராக அவரிருந்த காலங்களாக அவை இருந்தன.

திருமலையில் ‘தமிழ் பல்கலைக்கழகம்’ என்னும் முயற்சி ஒன்றை 1959ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சில ‘புத்தியீவிகள்’ மேற்கொண்டு வந்தமை சிலருக்கு நினைவிருக்கலாம். அதற்காக அவர்கள்  திருகோணமலை  மக்களின் காணிகளை  மலிவு விலையிலும் இனாமாகவும் பெற்று அம்முயற்சியைத் தொடங்கியிருந்தனர். உள் துறைமுக வீதியில் ஐந்து ஏக்கரும் நகரை அண்மித்த உப்புவெளியில் 83 ஏக்கருமாக  மொத்தம் 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.  பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக வடக்கு,கிழக்கு மாகாணமெங்கும் மிகவும் பரபரப்பாக தமிழ் மக்களிடையே நிதி வசூலும் இடம்பெற்றது. ஆனால் தமிழரசுக் கட்சியினரின் அரசியல் விளம்பரத்துக்காக பயன்பட்டமையைத் தவிர வேறெந்த நன்மையையும் இந்த தமிழ் பல்கலைக்கழக பெரும் கதையாடலால் கிடைக்கவில்லை. யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் பல்கலைக்கழகம் என்பது மெல்ல மெல்ல உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகப் போனது.

பல்கலைக்கழக நிர்மாணத்துக்காக  திரட்டப்பட்ட  நிதிகள் கொழும்பிலே நாவலர் மண்டபம் கட்டப்படுவதற்கும்,  திருமலையில் ஏழை மக்கள் வழங்கிய  நிலங்கள் யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகளின் கையாடல்களுக்குமாக திருடப்பட்டன.  பல ஆண்டுகள் கடந்தும்  தமிழ் பல்கலைக்கழகம் கட்டப்பட்டதாயில்லை. இந்நிலை கண்டு கொதித்தெழுந்த இளைஞர் குழாமில் சந்திரகுமாரும் ஒருவராகும். எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் என்பவரை தலைவராகக் கொண்டும் இரா.கனகரெட்ணம், ந.மனோகரன் போன்றவர்களுடன் இணைந்தும் அந்நிலங்களில் ஒருபகுதியை பொறுப்பெடுத்து கூட்டுப்பண்ணை முயற்சிகளில் ஈடுபட்டார். சுமார் 60 விவசாயக் குடும்பங்கள் அதில் இணைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சம்மேளனத்தை அறிமுகம் செய்தார். அதனுடாக தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அவர்களின் சம்பளப் பிரச்சனைகளை வெற்றிகாணவும் இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகள் வாய்ப்பாக அமைந்தன.

இந்நிலையில் இப்பண்ணையை திருமலை சார்ந்த நிர்வாகக் குழுவினரிடம் இருந்து பறித்தெடுத்து காந்தியம் என்னும் தொண்டு நிறுவனத்திடம் தாரைவார்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் யாரெல்லாம் அந்நிலங்களை தமிழ் பல்கலைக்கழகம் என்னும் நன்னோக்கத்துக்காக வாரி வழங்கினார்களோ அவை அம்மக்களுக்கே மீள வழங்கப்படவேண்டும் என்னும் நிலைப்பாட்டில் சந்திரகுமார் போன்றவர்கள் உறுதியாக இருந்தனர்.

எனவே யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகள் அவர்களை சட்டம் கொண்டு மிரட்டி அடிபணிய வைக்க முயன்றனர். கூட்டுப் பண்ணை நிலங்களை விட்டு சந்திரகுமார் போன்றோரின் நிர்வாகத்தை அகற்றக் கோரி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் பண்ணை நிர்வாகம் சார்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக சந்திரகுமாருக்கு சில ஏக்கர் நிலங்களை வழங்குவதன் மூலம் அவரைச் சமாதானமாகி விலகச்செய்து புதிய நிர்வாகத்தை உருவாக்கி அந்நிலங்களை ஏப்பம் விட யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகள் எத்தனித்தனர். அந்த கையூட்டுச் சமரச முயற்சிக்கு பலியாகாத ஒரு மனிதனாக அவர் திகழ்ந்தார்.

தமிழ் பல்கலைக்கழகத்தின் பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அம்மண்ணின் பூர்வீக உரிமைகொண்ட மக்களின் பயன்பாட்டுக்காக மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக 1973 ல் தொடங்கிய போராட்டமானது 1980ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது. அக்காலங்களில் மிகச்சிறந்த பண்ணையொன்றை கட்டியெழுப்புவதில் வில்லியம்ஸ் தலைமையில் சந்திரகுமார் மற்றும் அவரது தோழர்களும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.

இறுதியாக போலீசாரைக் கொண்டும் சட்டத்தைக்கொண்டும் துரத்தியடிக்க முடியாத நிலையில் காந்தியத்துக்கு ஆதரவான ஆயுதக்குழு ஒன்று களமிறக்கப்பட்டது. அதன்காரணமாக மிரட்டலையும் உயிர் அச்சுறுத்தலையும் சந்திரகுமார் எதிர்கொண்டார். திருமலை மக்களின் நிலங்கள் தமிழ் பல்கலைக்கழகமெனும் பெயரில் சிலரால் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்த போராடிய காரணத்தினால் சந்திரகுமார் தனது சொந்த நிலமான திருமலையை விட்டே விரட்டப்பட்டார்.

 

இறுதியாக கொழும்புத் துறைமுகத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். கொழும்பில் அவருக்கு வீடுவாசல் வசதிகள் என்று எதுவும் இருக்கவில்லை. கொழும்பு மாநகரத்து பாட்டாளிகளும் தொழிலாளிகளும் குவிந்து வாழும் ரயில் கடவையோரத்து சேரிப்புறமொன்றே அவருக்கு தஞ்சமானது. அங்கும் வந்தோமா, பிழைத்தோமா, குழந்தை குட்டியோடு வாழ்ந்தோமா, என்றில்லாமல் தன்னைச்சுற்றி வாழும் மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக ஓயாது குரல்கொடுத்தார். பல சமூகப் பணிகளை முன்னெடுத்தார். சேரிப்புறத்து மக்களின் நீர், மின்சாரம், நிலம் மற்றும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். அங்கு வாழ்ந்த விளிம்புநிலை மாந்தர்களின் பிரதிநிதியாக நாளும் பொழுதும் மாநகரசபைக்கும் அமைச்சு அலுவலகங்களுக்கும் திணைக்களங்களுக்கும் ஏறி இறங்குவதே அவரது நாளாந்த பணியாக இருந்தது.

 

1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் வருகையும் சிறிது காலத்தின் பின்னர் புலிகளுடனான இந்தியராணுவத்தின் மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருந்தன. புலிகள் இலங்கை இராணுவத்தோடும் ஏனைய இயக்கங்கள் இந்திய இராணுவத்தோடும் அணிசேர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பனிப் போர் நடந்துகொண்டிருந்தது.வடக்கு கிழக்கில் வாழ்ந்த இளைஞர்கள் ஏதாவதொரு அணியின் சார்பின்றி உயிர்வாழ முடியாதநிலை. சுருங்கச்சொன்னால் கையில் ஆயுதம் இல்லாவிடின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாறாக எங்காவது கண்காணா தேசத்துக்குத் தப்பியோட வேண்டும். இதன்காரணமாக பல நூறு இளைஞர்கள் உயிரைக் காத்துக்கொள்ள கொழும்பிலே தஞ்சமடைந்து கொண்டிருந்தனர்.

 

குறிப்பாக கிழக்கிலிருந்து வந்த இளைஞர்களுக்கு கொழும்புத் தமிழரிடையே சொந்தம் கொண்டாடக் கூடிய உறவுகள் மிக,மிகக்குறைவாகவே இருந்தது.

 

ஏன் இல்லையென்றே சொல்லலாம். கொழும்பில் வியாபாரிகளாகவோ, உத்தியோகஸ்தர்களாகவோ முன்பின் தெரிந்தவர்களென்று யாருமிலர். கொழும்பைத்தாண்டி வெளிநாடுகளுக்கு செல்வதென்பதும் அவர்களுக்கு இலகுவானதாயிருக்கவில்லை.

 

ஒரு வார்த்தை கூடத் சிங்களம் தெரியாது, அனைவரும் ஒவ்வொரு இயக்கங்களில் இருந்துவிட்டு தப்பித் பிழைத்து வந்தவர்களென்பதால் கொழும்புப் பெருநகரில் நடமாடும் அலுவலகக் காவலர்களைக் சீருடையில் கண்டாலே உடம்பெல்லாம் நடுக்கமெடுத்துவிடும். லொட்ஜுகள் என்றழைக்கப்படும் சிறிய சிறிய விடுதிகளில் தங்கினால் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. பணப்பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் இரகசியப் பொலிஸாரினதும் புலனாய்வுத் துறையினரதும் விசாரணைகள்,கைதுகள் என்று மறுபுறம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை.

 

இந்நிலையில்தான் கொழும்பை நாடி வரும் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அவர் அறிமுகமானார். நாட்டுக்காக போராடப்புறப்பட்டு நாட்டை விட்டே ஓடி ஒழிய வேண்டிய நிலையில் இளைஞர்கள் இருப்பதையெண்ணிப் பரிவு கொண்டார். தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியல் மீதும் விடுதலை இயக்கங்களின் வன்முறைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் கொண்டிருந்தார். இந்த இளைஞர் கூட்டத்தை காப்பாற்ற வேண்டும், அவர்களது எதிர்காலத்துக்காக புதிய பாதைகளைத் திறக்க வேண்டும் என்று தர்ம ஆவேசம் கொண்டலைந்தார்.

தினமும் மட்டக்களப்பில் இருந்து வரும் உதயதேவி ரயிலுக்காக கொழும்பு கோட்டை இரயில் நிலைய வாசலில் காத்திருந்து இளைஞர்களுக்கு ‘கிழக்கின் சிந்தனையாளர்’ என்னும் துண்டுப்பிரசுரங்களை அவர் விநியோகித்துக்கொண்டிருப்பார். தானே எழுதி தனது சொந்தக் காசிலே பிரசுரித்து தானே வீதிவீதியாக தனது அரசியல் கருத்துக்களை பரப்பும் கொள்கை வெறி கொண்ட மனிதராக அவர் இருந்தார்.

 

சந்திரகுமார் அவர்கள் திருமலையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அவரது மனைவி மட்/கல்லாற்றைச் பிறப்பிடமாகக் கொண்டவர். அதன்காரணமாக பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த பலர் அவருடன் உறவுகொண்டாடி அவர் வீட்டிலேயே தஞ்சமடையத் தொடங்கினர்.

 

அவர்களில் பெரும்பானலானவர்கள் கல்லாறு, களுதாவளை, மாங்காடு, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், ஆரையம்பதி போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். காலம் செல்லச் செல்ல அவரது வீடு ஒரு அன்ன சத்திரமாகவே மாறிப்போனது.

 

வந்து சேரும் சில இளைஞர்களது கையில் பசையிருக்கும். ஆனால், பலரது நிலை சொல்லிமாளாதவை.

 

ஆனாலும் அவரது ஒற்றைச் சம்பளத்தில் ஒரு வேளைச்சோறாவது அனைவருக்கும் போடுவார். எதுவுமே வழியில்லாத பட்சத்தில் துறைமுக தேனீர்ச்சாலையில் மலிவுவிலை சோற்றுப் பார்சல்களுடன் வந்து நிற்பார். அவருக்கோ பீடியும் தேநீரும் கூடவே பேனாவும் பேப்பரும் இருந்தால் மட்டுமே போதும். இவையனைத்துக்கும் மேலாக எவ்வளவோ துன்பங்களுக்கும் மத்தியில் ஒருமுறைதானும் அவரோ அவரது மனைவியோ மனம் கோணுவதை யாரும் கண்டிருக்க முடியாது.

 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை, தலைவர் சண்முகதாசன், தோழர் சிவராசா போன்றவர்களை கிழக்குமாகாண இளைஞர்களுக்கு அறிமுகம் செய்தார். மட்டக்களப்பின் நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் இருந்த தேவநாயகம் போன்றோரிடம் அவர்களை அழைத்துச்சென்று வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் அயராது உழைத்தார்.

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தபோது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலை நடாத்துவதிலும் மாகாண சபைகளை உருவாக்குவதிலும் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு பெரிதாக அக்கறையிருக்கவில்லை. எனினும் இந்தியாவின் நெருக்குதலுக்கு பணிந்து அவர் தேர்தலை அறிவித்தார். புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் ஒரே அணியில் நின்று போட்டியிட முன் வந்தன. புலிகளோ தேர்தலை நிராகரித்தனர். போட்டியிடுபவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தனர். எனவே ஏனைய மிதவாத தரப்பினர் எவரும் போட்டியிட முன்வரவில்லை. இதனைச் சாட்டாக கொண்டு இலங்கையரசு தேர்தல்களை இழுத்தடிக்க முற்பட்டது. ஆனால் சந்திரகுமார் இலங்கை- இந்திய ஒப்பந்தத்ததை பயன்படுத்தி ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். எப்படியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான தேவநாயகம் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

 

அவ்வேளையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கியதேசிய கட்சி செயலிழந்து காணப்பட்டது. ஆனாலும் அவரது முயற்சியை அவர் கைவிடவில்லை. மட்டக்களப்பின் ஐ.தே.க அரசியல் பிரமுகர்களான மாணிக்கப்போடி, ரிஸ்வி சின்னலெப்பை, ஈஸ்வரன் போன்றோர்களுடன் உரையாடி தேர்தலில் களமிறங்கும் முயற்சியை சாத்தியமாக்கினார். எனினும் போதிய வேட்பாளர்களை இணைத்துக்கொள்ள முடியாத சூழலில் தானே முன்வந்து கிழக்கின் சிந்தனையாளர்கள் குழாமின் சிலரையும் இணைத்துக்கொண்டு ஐ.தே.க சின்னத்தில் முதலாவது வடக்கு- கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். எவ்வித அரசியல் பலமோ பொருளாதாரப் பலமோ இல்லாத நிலையிலும் படுதோல்வி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டும் அத்தனை உயிராபத்துகளையும் எதிர்கொண்டு மாகாண சபை உருவாக்கத்தை சாத்தியப்படுத்தவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிட்டார். இதன் காரணமாக கிழக்கின் சிந்தனையாளர் குழாமில் ஒருவரான தோழர் தில்லையம்பலம் புலிகளால் கொல்லப்பட நேர்ந்தது.

காலப்போக்கில் இந்த கிழக்கின் சிந்தனையாளர் குழுமம் விரிவடைந்தது. சில இளைஞர்களின் துணையுடன் ‘உண்மைகள்’ என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்றை அவர் தொடங்கி நடாத்தினார். 1989-1990களில் இப்பத்திரிகை வெளிவந்தது. அதனை கொழும்பு ரயில் நிலையங்களிலும் செட்டியார் தெரு வீதிகளிலும் நாளும் பொழுதும் தன் தோழர்களுடன் அலைந்து விற்றுத்திரிந்தார். அப்பத்திரிகையில் இந்திய இராணுவம்-புலிகள் மோதல்கள் குறித்தும் பல செய்திகளும் விமர்சனக் கட்டுரைகளும் வெளிவந்தன. தமிழ் தேசியமென்பது யாழ்-மேட்டுக்குடிகளின் பெருங்கதையாடல் என்பதை விளக்கி பல கட்டுரைகளை அதில் எழுதினார். கிழக்கின் தனித்துவ தன்மைகளை அதன் பல்லின போக்குகளை கையாள தமிழ் தேசியவாதத்தால் ஒருபோதும் முடியாது என்று அன்றே ஆரூடம் சொன்னார்.

 

தொடர்ந்து வந்த காலங்களில் தேனீ இணையத்தளத்திலும் பல கட்டுரைகளை எழுதினார். தினக்குரல் பத்திரிகையிலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.

 

அவர் அன்று மட்டுமல்ல தனது 76ஆவது வயது வரை அரசியல் பணியை கைவிட்டாரில்லை. மரணப்படுக்கையில் வீழும் காலம் வரை முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ‘போராட்டம்’ பத்திரிகையை நாடெங்கும் விற்றுத்திரிந்தார்.

 

சந்திரகுமார் அவர்களது அரசியல் வாழ்வானது ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதிலோ தலைவராக மேலெழுந்து நிற்பதிலோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் ‘கம்யூனிஸம்’ என்பதும் ‘புரட்சி’ என்பதும் முதலில் நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் ஒழுக்கம் என்பதை வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றவர் அவர். அவரது மரணம் ஒரு சாதாரண மனிதனின் முடிவல்ல. ஒரு தனிமனிதப் பேரியக்கத்தின் முடிவாகும்.

எழுத்தும் தொகுப்பும் – எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம்

நன்றி : அரங்கம்

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்று ஏன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடாது..? – கஜேந்திரகுமாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ” நான் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன். சிலர் அதனை மறுக்கின்றனர்.” என்றார்

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ”நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள். உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள்” என்றார்.

இதன் போது பதில் அளித்த டக்ளஸ் , ”இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும்.

நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சினை தீரப்போவதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன்.” என்றார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் !

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.

எனினும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிக படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.”என்றார்.

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் திறன்மிக்க இலங்கையர்கள் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை !

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கணிக்கப்பட்ட அளவை விட குறையும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பதனால் இந்த நிலை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.

தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி, குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பொருளாதாரம் படிப்படியாக அதிக வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடுமை – இந்தியாவில் சம்பவம் !

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துஇ அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.