செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் போராட்டம்!

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

 

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன.

 

இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

அதனால் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தனர்.

‘ஹலால் ஜிம்’ கொமன்ற் – இஸ்லாமிய விரோதத்தையும் குடும்பப் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன்

லண்டன் மேயர் சித்திக் கானை இஸ்லாமிய தீவிரவாதிகள் இயக்குகிறார்கள் என்று வலதுசாரி கொன்சவேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லீ அன்டர்சன் பெப்ரவரி பிற்பகுதியில் குற்றம்சாட்டி இருந்தார்;. இக்கருத்து தவறானது என்று தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், அது இஸ்லாமிய விரோதக் கருத்துடையது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷி சுனாக்குக்கு எதிராக தலைமைத்துவப் போட்டியில் களமிறங்க உள்ள மற்றுமொரு தீவிர வலதுசாரி சுவலா பிரவர்மன், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை ‘கலகக் கும்பல்கள்’ என்று விபரித்து வருகின்றார். அதே கட்சியின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லெட்டர் பொக்ஸ்’ பகிடி 2018இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறிஸ் ஜோன்சன் இஸ்லாமிய பெண்களின் கலாச்சார ஆடையைப் பற்றி பின்ருமாறு கூறினார்: பெண்கள் தபால் பெட்டிகள் போலவும் வங்கிக் கொள்ளையர்கள் போலவும் உடையணிந்து கொள்வது மிகவும் அபத்தமாக இருக்கின்றது – “it was “absolutely ridiculous” women chose to “go around looking like letterboxes” and “bank robbers”. பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள் கொல்லப்பட்டு பாலஸ்தீனக் குழந்தைகள் பட்டினியில் மரணத்தை தழுவ ஆரம்பித்துள்ள இந்நிலையில் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய விரோதப் பரப்புரைகளால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மம் கொழுந்துவிட்டெரிகின்றது.

இந்நிலையில் உரிமைப்போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழ் சமூகத்திலிருந்து வந்து, லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராகவும் லண்டன் சைவத்திருக்கோயில்கள் அமைப்பிலும் இருக்கும் ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ என்று கருத்துப் பதிந்து முஸ்லீம் பெண்கள் உடற் பயிற்சி செய்வதை கிண்டலடிக்கும் குறும் காணொலி ஒன்றை இன்று பெப்ரவரி 28இல் பகிர்ந்துள்ளார். அதனை நீக்குமாறு தேசம் ஜெயபாலன் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துள்ளார்.

லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீர்வரர் ஆலயமும் அதன் உரிமையாளரும் எப்போதும் சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கைகளில் இருந்த ஆலயம் ஆர் ஜெயதேவனின் கைக்கு மாறியது முதல் இன்று வரை சர்ச்சைகள் ஓயவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் தாக்குவதற்காக ஆர் ஜெயதேவன் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும், தனக்கு பிடியாதவர்களையும் திட்டித் தீர்த்து நான்கு இதழ்களோடு அது நின்றுவிட்டது.

இப்போது ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் சமூக வலைத்தளங்களில் இனக்குரோதத்தை வளர்க்கும் வகையில் முஸ்லீம் சமூகத்தை கிண்டல் அடிக்கின்ற வீடியோ ஒன்றை லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் சமூகவலைத் தளத்தில் ‘ஜெ‘ என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். லண்டன் சைவத் திருக்கோயில்களின் அறங்காவலர்கள், உரிமையாளர்கள், பக்தர்கள் உள்ள இந்த வட்ஸ்அப் சமூகவலைத் தளத்திலேயே இப்பதிவு ஏற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் தங்களுடைய இஸ்லாமிய கலாச்சார உடையோடு வெவ்வேறு உடற் பயிற்சிகளைச் செய்வதை அந்த வீடியோ காட்டுகின்றது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும் ஒரு கறுப்பின இளைஞன் அவர்கள் இஸ்லாமிய கலாச்சார உடையோடு உடற் பயிற்சியை மேற்கொள்வதை விசித்திரமாகப் பார்த்துவிட்டு தனது நளினத்தை தலையசைத்து காட்டியவாறு அங்கிருந்து வெளியேறுவதாக, அக்குறும் காணொலி காட்டுகிறது. இந்த வீடியோவுக்கு ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ பாருங்கள் எனும் வகையில் கையால் திரையைக் குறிப்பிடும் குறியீட்டையும் சிரிப்புக்கான குறியீட்டையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோபதிவு முஸ்லீம் பெண்கள் தங்கள் இஸ்லாமிய கலாச்சார உடையணிந்து உடற்பயிற்சி செய்வதாக காட்டப்பட்டாலும் அது போலித் தன்மையுடையதாகவே உள்ளது. இது முஸ்லீம் பெண்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் சில விசமிகளால் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ போன்றேயுள்ளது. அந்த வீடியோ போலியானதோ உண்மையானதோ என்பதல்ல இங்கு பிரச்சினை. இதனை ‘ஹலால் ஜிம்’ என்று சொல்லி ஈழபதீஸ்வரர் ஆலயத்தினதும் லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தினதும் முக்கியஸ்தரும் தன்னை ஜனநாயகவாதியாகவும் சமூக அக்கறையுடையவராகவும் மாற்றுக் கருத்துடையவராகவும் விம்பம் கட்டும் ஆர் ஜெயதேவன் சமூகவலைத்தளங்களில் பகிருவதற்கு பின்னாலுள்ள மனநிலையும் மற்றைய சமூகங்களை மதங்களை எள்ளி நகையாடுவதும் ஆபத்தானது.

லண்டனில் தவறணை நடத்துபவர்கள், பார் நடத்துபவர்கள் இவ்வாறான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வாறானவற்றை பகிருவது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மது வியாபாரத்தை அதிகரிக்க பெண்களின் கவர்ச்சியை மூலதனமாக்கி அதில் மூழ்கிக்கிடப்பவர்கள் போல் ஆலயங்களின் உரிமையாளர்களும், அறங்காவலர்களும் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.

இந்தத் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தவர் வேறுயாருமல்ல, கிழக்கு லண்டனில் உள்ள லண்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஆலயத்துடன் நெருக்கமான ஒருவரே. அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் “இவனுகள் எல்லாம் கோயில் நடத்தினால், சைவம் எப்படி உருப்படும் ?” என்றார். “இவனுகள் ஊரிலும் போய் நிம்மதியாய் இருக்கின்ற சமூகங்களை வெட்டுக்குத்தில தான் இறக்குவான்கள்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாரம் தூக்கும் போட்டியில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் சேலைகட்டி வந்து பாரம் தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். உடலில் இரத்தம் கசியுமளவுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்றாலும் லண்டனிலும் பறவைக்காவடி எடுக்கின்றோம். இவற்றை மற்றய இனத்தவர், மதத்தவர் கொச்சைப்படுத்துவது சரியா?

அதுமட்டுமல்ல, ஒரு இளம் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார். மேலும் தனக்கு பிடிக்காதவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் படத்தை கொச்சைத்தனமாக எழுதி பொதுத்தளங்களில் பரப்பி வருகின்றார்.

நீண்டகாலமாகவே இஸ்லாமிய விரோதக் கருத்துக்களை வெளியிட்டுவரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரான இவர் இறுதி யுத்தத்திற்குப் பின் மோடியின் கோசலம் பருகி பிஜேபி க்கு விசுவாசியாகியுள்ளார். இறுதி யுத்தத்திற்கு முன் ஈழபதீஸ்வரர் கோயிலை தங்களிடமிருந்து பறித்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது இவரை விடுதலை செய்யக் கோரி இவரது முஸ்லீம் நண்பர்கள் ரிபிசி வானொலியூடாகவும் ஏனைய ஊடகங்களுடாகவும் குரல் எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பதிவை நீக்குமாறூம் பெண்களது படங்களை கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவததை நீக்குமாறும் அதே சமூகவலைத் தளத்திலேயே ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை தேசம் ஜெயபாலன் விடுத்திருந்தார். அதனைக் கீழே பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் தனக்கு எதிராகவும் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கும் சைவ ஆலயங்களுக்கும் எதிராகவும் நான் தொடர்ந்து மேற்கொள்ளும் பழிசுமத்தல்களே என்று ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் தேசம் ஜெயபாலன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்றதொரு மதவிரோதக் கருத்து, இதே சமூகவலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இவ்வாறான பதிவுகளை நீக்குமாறு நானும் இன்னும் சிலரும் கோரியிருந்தும், எதுவும் ஆகவில்லை. அதனால் “நாய் வாலை நிமித்த முடியாது” என்று கூறி சிலர் அந்த சமூகவலைத்தளத்திலிருந்தே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரின் இந்த முஸ்லீம் விரோதச் செயற்பாடுகள் பற்றி பாருக் மொகமட் தெரிவிக்கையில், “மேற்குலகமும் அதன் ஊடகங்களும் முஸ்லீம் விரோதத்தைக் கக்குகின்றன. இதில் ஜெயதேவன் போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் மற்றும் இனவாதிகள் முஸ்லீம் விரோதம் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களைப் பாகாக்க வேண்டிய ஆலயங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் ஜெயதேவன் போன்றவர்கள் ஊடுருவி, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, இன ஐக்கியத்தை குலைக்கும் இவ்வாறான செயல்களைச் செய்வது மிகத்தவறானது எனத் தெரிவித்தார்.

ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர், பெண்களது படங்களை கொச்சையாக எழுதி சமூகவலைத்தளங்களில் பரப்புவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி நற்சான்றிதழ் வழங்குவது, பெண்கள் உடற்பயிற்சியில் என்ன உடை உடுத்த வேண்டும் என்று சொல்வது எல்லாமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இவர்கள் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று பல்லின, பல்கலாச்சார, பெண்ணுரிமைகளை மதிக்கின்ற சட்டங்கள் உள்ள நாடுகளுக்குப் போனபோதும் மத அடிப்படைவாதிகளாகவும் இனவாதிகளாகவும் வலதுசாரிகளாகவும் பெண்களுக்கு எதிரானவர்களாகவும் செயற்படுவது ஆச்சரியமாக உள்ளது என்கிறார் வன்னியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் போராளியும் பெண்ணியவாதியுமான மரியதாஸ் ஜொய்சிமலர்.

Thesam Jeyabalan’s letter to Mr R Jeyadevan:

Dear Mr. Jeyadevan (Jey),

I am writing to you urgently about concerns that have recently surfaced regarding certain comments and content attributed to you on various public platforms, including WhatsApp and social media.

It has come to my attention that the video you shared today and the comments made are being perceived as Islamophobic and misogynistic. Additionally, there are concerns about the use of female family members in addressing issues with individuals, particularly when it involves making misogynistic comments and sharing their photos. The video also shows Muslim women exercising in a gym with their traditional clothing, and your comment referring to it as ‘halal gym’ has raised concerns.

Such actions and comments are not aligned with the principles of unity and respect that are crucial in our diverse communities.

Furthermore, there are claims that you provided a character certificate to an individual who was found guilty of abusing a young girl. This has raised questions about the values upheld by the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples, of which you are a trustee.

As a trustee responsible for running these esteemed institutions, it is imperative to ensure that our actions and words align with the values of inclusivity, tolerance, and harmony. Saivam, as a belief system, encourages understanding and compassion rather than promoting hatred.

I kindly request that you review and consider removing any content that may be perceived as Islamophobic and misogynistic. Such comments have the potential to harm the reputation of the institutions you represent and may create divisions within the community.

Addressing these concerns in a transparent and respectful manner will contribute to fostering a more inclusive and harmonious environment. I appreciate your prompt attention to this matter and trust that you will take the necessary steps to maintain the positive reputation of the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples.

Thank you for your understanding and cooperation.

Sincerely,
T. Jeyabalan

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

 

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ‘சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது விழா 2023’ இலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

 

இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் சிறந்த பெண் வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் வியாபாரம், சந்தை பிரவேசத்தை வலுவூட்டும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டதோடு, சார்க் வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு விசேட பிரிவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கப்பட்டது. சார்க் பிரிவு வெற்றியாளர்களுக்கான விருதுகள் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவால் வழங்கி வைக்கப்பட்டன.

 

இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் பெண்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 1985 ஆம் ஆண்டு தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் (WCIC) ஸ்தாபிக்கப்பட்டது.

 

தொழில் வல்லுனர்கள் மற்றும் தமது சொந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தும் பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் தேசிய பெண் வர்த்தக சம்மேளனம் 300 அங்கத்தவர்களை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

“கடந்த சில வருடங்கள் சுமூகமானதாக இருக்கவில்லை. வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

 

2024ஆம் ஆண்டில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் சாதகமான பொருளாதார வளர்ச்சியை எம்மால் அடைய முடிந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்ட முடியாதுள்ளது. அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும்.

கடந்து வந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முதல் வருடம் இதுவாகும். அதற்காக பல கடினமாக தீர்மானங்களையும் எடுக்க வேண்டியிருந்தது.

 

அனைவரும் வாழக்கூடிய பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். தற்போது பணத்தை அச்சிடவோ, கடன் வாங்கவோ முடியாது. அதனால், வரி சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரூபாயை பலப்படுத்தி, பணவீக்கத்தைக் குறைப்பதே எமது இலக்காகும்.

 

பழைய பொருளாதார அடிப்படையில் நாட்டை முன்னேற்ற முடியாது. அதனால், நாட்டில் விரைவான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு புதிய பொருளாதார முறையில் நாடு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக போட்டித்தன்மை நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். மேலும், அரசாங்கம் என்ற வகையில் வர்த்தகர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும். அதற்காகவே ‘பாராட்டே’ சட்டத் திருத்தச் செயற்பாடுகளும் இவ்வருட இறுதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

பெண் வர்த்தகர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கும்.

 

மேலும், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக உங்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பெண்களை வலுவூட்டுவதால் நாட்டின் பொருளாதாரத்தை கணிசமான அளவில் பலப்படுத்த முடியும். மேலும், பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்களால் பெரும் பங்காற்ற முடியும். எனவே நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. எதிர்காலத்தில் டிஜிட்டல்,பசுமைப் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை தயார்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

 

இன்று, பல பெண்கள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், நாட்டின் சுற்றுலாத் துறையும் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான தொழில்முனைவோரை உருவாக்க முடியும். சுற்றுலாத் துறையை சரியான முறையில் மேம்படுத்த வேண்டும். அதற்கான சேவைகளை வழங்கும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. சுற்றுலா வணிகத்தில் ஒருவரின் நாளாந்த வருமானம் குறைந்தபட்சம் 500 டொலர் வரையில் அதிகரிக்க வேண்டும். அந்த பொறுப்பு பெண் வர்த்தகர்கள் சங்கத்தையும் சார்ந்துள்ளது.

விவசாயத் துறையை நவீனமயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் இத்துறைசார் தொழில் முனைவோருக்கு அதிக கேள்வி இருக்கும். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னேறும்போது, நாமும் அதற்கமையவே முன்னேற வேண்டும்.

 

நாம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. புதிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ளோம். அந்தச் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டுச் செய்ய முடியும்.

 

தற்போது மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் காணி உரிமை பெற்றுகொள்ளும் 20 இலட்சம் பேரின் பங்களிப்பு நேரடியாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும். அதன்படி, விவசாய நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கும் அவர்களின் நேரடி பங்களிப்பைப் பெற முடியும். வலுவான பொருளாதாரத்தை கொண்ட இலங்கையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

 

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, மின் சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் .பஹீம் உல் அஸீஸ், இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அனோஜீ டி சில்வா, இணைச் செயலாளர் துஷிதா குமாரகுலசிங்கம், மற்றும் சித்ராஞ்சலி திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்களை சந்திக்க தயாராகும் அனுரகுமார தரப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் கைது !

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஹலவத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால், புத்தளம் – ஹலவத்தை வீதியின் லுனு ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

 

இந்தநிலையில் குறித்த ஆசிரியரிடம் இருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பதவியை கைவிட்டுவிட்டு கடற்தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் – டக்ளஸ் தேவானந்தா

எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

 

குறிப்பாக நான் நீண்டகாலமாக எதை கூறிவந்தேனோ அதுதான் இன்று ஜதார்த்ததாகயுள்ளது என்றும் அதையே இன்று ஏனைய தரப்பினர் ஏற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

 

அதேநேரம் அன்று நான் கூறியதை சக தமிழ் இயக்கங்கள் கட்சிகள் ஏற்றிருந்தால் இன்று இந்த அழிவுகள் இழப்புகள் அவல நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

 

இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதருடன் கலந்துரையாடியிருந்தேன்.

 

அதைவிட மிகப்பிரதானமானது சமீபத்தில் ஜேவி்பியின் தலைவர் இந்தியா சென்று பலதரப்பட்டவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனாலும் அவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் எடுத்தக் கூறியிருக்கவில்லை.

 

அதேபோன்று சமீபத்தில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கூட எமது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதே பகுதி தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால் என்னுடனான சந்திப்பின்போது இந்திய மீன்பிடியாளர்களின் எல்லைமீறிய அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால் அதை தொடர்வதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

 

“இதனிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராடடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது,

 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது.

 

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இந்தியாவில் மரணம் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

 

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

 

இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

 

இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

எனினும் இன்று சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்.

 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

 

அதற்குள் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கைகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

சிறைச்சாலைகள் நிரம்பி வழிவது தொடர்பில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ​​அதற்கு தற்போது இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கையே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதில் இந்த நடவடிக்கை வெற்றியடைந்தாலும், கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இது பங்களித்துள்ளது என நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், வழக்குகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும் சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட்டுள்ளதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

5 தொடங்கி 19 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்மாதம் முதல் பாலியல் தொடர்பில் கல்வி !

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின் பாலியல் கல்வி தொடர்பில் கொண்டுள்ள குறைந்த அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.

முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்கள் வரையிலும், வயது வந்தவர்களுக்காகவும் இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் முழுமையான மேற்பார்வை மற்றும் அவற்றின் அனுமதியுடன் துறைசார்ந்த நிபுணர்களால் தொகுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

முதல் கட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பான வெளியீடுகள் இலத்திரனியல் வெளியீடுகளாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் பாலியல் பற்றிய அறிவை முறையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உருவாகி வரும் பல நெருக்கடிகளை களைய முடியும் என்றும், இதன் மூலம் பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.

பாலஸ்தீன் மீது தொடரும் அமெரிக்காவின் அழுத்தம் – பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா !

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது