செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் – எச்சரிக்கிறது ஐ.நா !

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

 

சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் – யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா

ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் என தெரிவித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா அமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து வந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது அவர் அமைச்சர் இளைஞராக இருந்த காலத்தில் அவரது செயற்பாடுகள் எவ்வாறானதாக இருந்ததென்பதை நினைவு கூர்ந்திருந்ததுடன் மேலும் கூறுகையில் –

 

இன்றுள்ள அரசியல்வாதிகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறுபட்டவராகவே இருக்கின்றார். அவர் மக்களுக்கான தேவைப்பாடை அறிந்து அவர்களது நலன்கள் அவர்களது எதிர்காலம் அவர்களது பொருளாதாரம் என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டும் அல்லது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே அதிக கரிசனையானவராக இருக்கின்றார்.

 

அந்தவகையில் தமிழ் மக்கள் இவ்வாறான ஒருவரை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதற்கான பல்வேறு முயற்சிகளை குறிப்பாக எவ்வாறான தடைகள் இருந்தபோதிலும் அதன் உச்சிவரை சென்ற அவற்றை உடைத்து வெற்றிபெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

 

இதற்கு சான்றாக கிளிநொச்சி அறிவியல் நகரும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் சான்று பகர்கின்றன. அதுமட்டுமல்லாது பின்தங்கிள் கிராமங்களின் விளையாட்டுத்துறை கல்வி அகியவற்றில் மட்டுமல்லாது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதை பார்க்க முடிகின்றது.

 

அதேவேளை அமைச்சரின் அரசியல் சாணக்கியத்தினூடாக தொழி்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றன.

 

அதேபோன்று எதிர்காலத்திலும் எமது மக்களி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக காணப்படுகின்றார்.

 

இந்த யதார்த்தத்தினை புரிந்து யாழ் பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினர் மட்டுமல்லாது மக்களது முன்னெடுப்புக்களும் அமைந்தால் அனைத்து தேவைகளுக்குமான தீர்வுகளும் சிறப்பானதாக அமையும் என்பதுடன் அது வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் மாறி வரும் அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்தது இராஜதந்திரம் என்றால் கருணாஅம்மான் செய்ததும் இராஜதந்திரமே – ஜெயா சரவணா

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்தார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அம்மான் படையணியின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றது. வன்னி பெருநிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகள் எம்முடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் வருகின்ற வாரமளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

அம்மான் படையணியின் செயற்பாடுகள் என்ன என அதிகமானோர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆயுதத்தை தூக்கி இராணுவத்தினரை சுடுவதல்ல. சமூக சீர்திருத்தத்திற்காகவே உருவாக்கப்பட்டது. கடந்த காலங்களில் வவுனியாவில் போதைவஸ்து பாவனையை அடையாளம் காண உதவியிருந்தோம். அதேபோல் கடந்த வாரமளவில் மண் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்ற செயற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு எமது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது எம்முடன் இணைந்த போராளிகள் குறித்த வேலைத்திட்டங்களினை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருணாம்மானிடம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் நீங்கள் துரோகி என மக்கள் கூறுகிறார்கள் அதற்கு உங்கள் பதில் என்ன ? என வினவியதற்குரிய பதிலை அவர் வழங்கியிருந்தார். என்னுடைய மனதிலும் சில கருத்துக்கள் இருக்கின்றது. துரோகி என்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. யார் துரோகி? அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளை சார்ந்த வகையில் அவர் துரோகி. இந்திய இராணுவத்துடன் இருந்து எங்களை காட்டி கொடுத்ததால் துரோகி. எதற்காக காட்டிக்கொடுத்தார் எனில் அவரை கொலை செய்ய செல்லும் போது உதவியை நாடினார்.

அதே விடயத்தில் ரெலோ தலைவர் செல்வம் , ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் இவர்கள் ஆரம்ப காலத்தில் துரோகி அதன் பின்னர் விடுதலைப்புலிகளிடம் வன்னிக்கு சென்று விருந்துண்டதன் பின்னர் அவர்கள் தமிழின காவலர்கள். யாரெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறார்களோ அவர்கள் துரோகி இல்லை. யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் துரோகி. கருணாம்மானை கொலை செய்திருந்தால் இன்று அவரின் பெயர் அடிபட்டிருக்காது. அவரை கொலை செய்ய முடியவில்லை அதனால் துரோகியாக்கப்பட்டார்.

நாங்கள் தேசிய தலைவர் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றோம். கருணாம்மானை துரோகி என்று கூறுமளவிற்கு யார் தற்போது இருக்கிறார்கள். விடுதலை புலிகளை பொறுத்தவரை ஒரு தீர்ப்பெனில் அது மரணதண்டனை தான். அத் தண்டனை கருணாம்மான் மீது ஏவப்பட்டது. அவர் அதிலிருந்து தப்பித்து கொண்டார்.

சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தது துரோகம் என கூறுகிறார்கள். அவரை கொலை செய்ய செல்லும் போது அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்தார். அவருக்கு இன்றுவரை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தால்  அதென்ன இராஜதந்திரமா? அது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரம் தான். நீங்கள் எதிரியுடன் கூட்டு சேர்ந்தால் இராஜதந்திரம் நாங்கள் கூட்டு வைத்தால் துரோகம்.

பார்ப்பதற்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. முன்னாள் போராளிகளை பார்க்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்கின்ற மக்களுடைய வாழ்க்கையை பார்க்க வேண்டும். அரசியல் மாற்றங்கள் வரப்போகிறது நாடு முழுவதும் அலைமோதி கொண்டிருப்பது அரசியல் மாற்றம். சிங்கள, தமிழ் பகுதியாக இருக்கலாம் இரு பகுதியிலும் அவ்வாறான ஒரு நிலையே காணப்படுகிறது. களத்தில் வந்து நின்று பிரச்சினைகளை சந்தித்து பாருங்கள் வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் நடந்து பாருங்கள்.

அண்மையில் முன்னாள் போராளி அரவிந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். போராளிகளது நலன் திட்டத்திற்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது விடுதலைக்காக யாராவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? பௌத்த விகாரை மூன்று வருடமாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் கட்டி முடிஞ்சு பெயின்ற் அடிக்கிற நேரத்தில் பாயை போட்டு படுக்கிறவங்களையும் காணல, வெடுக்குநாறிமலையில் தூக்கும் வரைக்கும் கிடக்கிறவங்களையும் காணல, முருகனாக்கள் வருகிறார்கள் என விமான நிலையத்திற்கு சென்று போஸ் கொடுத்தவர்களையும் காணல தமிழ் தேசியம் எங்களுடையது தான் என்று வந்து நிக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என மேலும் கருத்து தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபா மோசடி – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு !

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.

முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.

அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் – 72 மணி நேரத்தில் 23 பேர் பலி !

கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 3 நாட்களில் இடம்பெற்ற 167 வாகன விபத்துக்களில் 134 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தினம் மாத்திரம் 76 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் திடீர் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

வழமையாக நாளொன்றில் சுமார் 300 நோயாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த முறை 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் 160 முதல் 165 நோயாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு வீட்டினுள் வீழ்தல், வாகன விபத்து, விளையாட்டு விபத்து, பட்டாசு வெடித்தல் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, பட்டாசு வெடித்ததினால் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் துஷின குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் – எச்சரிக்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

 

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொடரும் கத்திக்குத்து பிரச்சினைகளால் பதற்றம் !

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

 

தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

 

அதன்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவமானது, தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தி குத்தியதில் 6 பேர் வரை உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதை நிலையில் குழப்பத்தை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை – இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான்

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் பொது வேட்பாளரினை நியமிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் கிழமைகளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதன் காரணமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

என்னை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் தரப்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலினை பொறுத்த வரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார்.

 

எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதியை வெற்றி அடைய வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

 

மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியம் அல்லது இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும் என்று எமக்குத் தெரியவில்லை.

 

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர்கள் ஒருவரையே ஆதரித்துள்ளனர். அதுவே சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன். ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை போடுவதன் மூலம் வெற்றியை நோக்கி செல்வதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அது சாத்தியமில்லை.

 

எனவே தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

 

மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.

‘நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்..” – இரா.சாணக்கியன்

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, இருதயபுரம் மற்றும் கறுவப்பன்கேனி பகுதியில் உளள இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒன்றினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தலையணை அடித்தல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், தொப்பி மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டதுடன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதிய வருடம் பிறந்திருக்கின்றது இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.

எங்களுடைய தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நமது அரசியல் அபிலாசைகளை இந்த வருடத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது நமது அனைவருடைய அவாவாக இருக்கின்றது அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் தேதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.

இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி இல்லாமல் நீதியை கோரிக் கண்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் பார்த்தேன் ஒரு அமைச்சர் கூறி இருந்தார் நிமல் சிறிபாலடி சில்வா என்கின்ற அமைச்சர் இருக்கின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கூட அந்த அமைச்சர் அவருடைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்திருப்பார் என்று கூறி இருக்கின்றார்.

தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இடத்தில் இன்று நீதியினை கோறுகின்றோமே தவிர இந்த ஊழல் மோசடிகள் செய்யும் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களை எமது பக்கம் எடுப்பதோ ஒருபோதும் செய்யப் போவதில்லை.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்