வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த சுமார் 43 ஆயிரம் குழந்தைகள் !

கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு இழப்பு உள்ளது.

கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என உலகின் எங்கு பார்த்தாலும் சோகமாக இருக்கிறது. அமெரிக்காவிலும் பல வீடுகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அங்கு சுமார்  43 ஆயிரம் குழந்தைகள் தாய்- தந்தை இருவரையுமோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரையோ இழந்திருக்கிறார்கள்.

அதிலும் கருப்பின சமூகத்தினரிடம் தான் இழப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க குழந்தைகளில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதமாகும். ஆனால் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து இருக்கிறார்கள்.

கோவாக்‍ஸ் திட்டம் மூலம் வெனிசூலாவுக்‍கு 50 லட்சம் டோஸ்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ​ !

உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ​அளிக்‍கும் திட்டத்தின் கீழ் வெனிசூலாவுக்‍கு 50 லட்சம் டோஸ்கள் மருந்து கிடைக்‍கும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், அமெரிக்‍கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வெகுசில நாடுகளே கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துவருகின்றன. உலகம் முழுவதும் பாதிக்‍கப்பட்ட அனைவருக்‍கும் தடுப்பு மருந்து கிடைக்‍க வாய்ப்பு இல்லாத நிலையில், வசதியான நாடுகள் மட்டும் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதைத் தடுக்‍க கோவாக்‍ஸ் என்ற திட்டம் உருவாக்‍கப்பட்டது.

உலக சுகாதார அமைப்புடன் பல்வேறு நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்திவருகின்றன. இத்திட்டத்தின் படி, வசதியான நாடுகள் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை ஏழை நாடுகளுக்‍கும் பகிர்ந்தளிக்‍கும் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்‍கா மற்றம் தென்னமெரிக்‍க நாடுகளுக்‍கு இத்திட்டம் பயனளிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. இந்நிலையில், வெனிசூலா நாட்டுக்‍கு இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து கிடைக்‍கும் என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்‍கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த முடியாத நிலையே நாடு முழுவதும் காணப்படும் நிலையில், கோவாக்‍ஸ் திட்டம் பொதுமக்‍களுக்‍கு மிகுந்த பயனளிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா மாநில அரசு அனுமதி – குவியும் மக்கள் கூட்டம் !

இந்தியாவின் ஆந்திராவில் நாட்டு மருத்துவர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்‍கு வழங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசல் இல்லாமல் நாளை முதல் மருந்தை விநியோகிக்‍க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் என்ற இடத்தில், ஆனந்தையா என்ற நாட்டு மருத்துவர் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த மருந்து நல்ல பலன் தருவதாக அதனை எடுத்துக்‍கொண்ட மக்‍கள் தெரிவித்ததால், ஆயுர்வேத மருந்தை வாங்க ஏராளமான மக்‍கள் கிருஷ்ணபட்டினத்தில் குவிந்தனர். இருந்தபோதிலும், இந்த மருந்தால் பக்‍கவிளைவு ஏதேனும் உள்ளதா என கண்டறியும் வரை, மருந்தின் வினியோகத்திற்கு தடை விதிக்‍கப்பட்டது.

கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி..! - தமிழ்நாடு

மருந்து, ஆயுஷ் அமைச்சக சோதனைக்‍கும் பரிந்துரைக்‍கப்பட்டது. இந்நிலையில், ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்‍கு நாளை முதல் விநியோகிக்‍க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், கருப்பு பூஞ்சை நோய்க்‍கு, அவர் வழங்கிய கண் சொட்டு மருந்தை மட்டும் வேண்டாம் என்று தடை செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்‍கு ஆயுர்வேத மருந்து லேகியத்துடன், ஆங்கில மருந்தையும் சேர்த்து எடுத்துக்‍கொள்ள மக்‍களுக்‍கு ஆந்திர அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வு – ஒரு தம்பதி மூன்று குழந்தைகளை பெற்றுக்காள்ள முடியும் என சீனா அறிவிப்பு !

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பல ஆண்டுகளாக ஒரு குழந்தை திட்டம் அமுலில் இருந்தது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த கொள்கையில் கடந்த 2016ம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு, புதிய கொள்கை  அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்த நிலையில், சீன அரசு குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.  இதற்கான புதிய கொள்கை குறித்து சமீபத்தில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றம் நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் எனவும் தெரித்துள்ளது.
சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. 1950களுக்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை மிக மெதுவான விகிதத்தில் 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது என்பதை அந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதல் இருந்ததாகவும் தரவு காட்டுகிறது.

“என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது. ”- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தியப்பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மம்தாவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மம்தாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்காள தலைமைச் செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இதில், எங்கள் தவறு என்ன இருக்கிறது? பிரதமருடனான கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது.
மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக பிரதமர் தன் காலில் விழும்படி கூறினால், நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்களா? நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்?  வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டம் பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது பாஜக தலைவர்களும் கவர்னரும் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏன் அழைக்கப்பட்டனர்?
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியும் கொரோனா நோயாளர்களை நேரடியாக பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் !

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை உச்சம் பெற்றுள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இதன் அலை இன்னும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Image
கோவையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உணவு வழங்கும் முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
இது தொடர்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை  பி.பி.இ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! என பதிவிட்டுள்ளார்.

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சி – 34 லட்சம் மக்கள் பட்டினி துன்பத்தை அனுபவிக்கப்போகிறார்கள் !

மியன்மார் நாட்டில் ஆங் சாங் சூகி கட்சியின் ஆட்சி இருந்த நிலையில் அந்த ஆட்சியை இராணுவம் கவிழ்த்தது. இராணுவத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை இராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு எதிரான செயல்பாடுகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மேலும் அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவழித்து வருகிறார்கள்.

பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட காசு இல்லை. இதனால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது. சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது. எனவே சர்வதேச சமுதாயம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கிராமப் பகுதிகளை விட நகரப்பகுதிகளில் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கிறார்கள். அரிசியை மட்டும் வாங்கி கஞ்சி காய்ச்சி அருந்துவதாகவும், காய்கறி வாங்க காசு இல்லை என்றும் மக்கள் பலர் கூறுகிறார்கள்.

இராணுவமும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் மியான்மரில் இருக்கும் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது.

“சீனாவின் பூனைகளையும் , புறாக்களையும் வேட்டையாடுங்கள்.” – வட கொரிய அதிபரின் ஆணையால் கொன்று குவிக்கப்படும் புறாக்கள் !

“சீனாவின் பூனைகளையும் , புறாக்களையும் வேட்டையாடுங்கள்.”  என வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன் அறிவித்துள்ளார்.

வட கொரியாவின் அண்டை நாடான சீனாவிலிருந்து வரும் புறாக்கள் தமது நாட்டில் கொரோனாவை பரப்புவதாக அவர் நம்புகிறார்.

இதனால் சீனாவில் இருந்து வரும் புறாக்கள் கொரோனாவைப் பரப்புவதாக கூறி வடகொரியாவில் அவற்றை வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீன எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை சுட்டு கொன்று குவித்து வருகிறார்கள்.

அதேபோல் பூனைகளும் கொரோனாவைப் பரப்புவதாக கூறப்பட்டு அதனையும் வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைசன் மற்றும் சினுஜு ஆகிய நகரங்களில் உள்ள அதிகாரிகள் புறாக்களையும் பூனைகளையும் வேட்டையாட நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கனடாவில் 1978-ல் மூடப்பட்ட பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – முழுமையான விசாரணை ஆரம்பம் !

கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. 1978-ல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

ஐரோப்பியர்கள் அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போது  அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா நாட்டிலும் பூர்வ குடிமக்கள் ஏராளமானோரை கொன்று குவித்தார்கள். அங்கு நாகரிக ஆட்சி வந்த பிறகும்கூட பூர்வ குடிமக்களை ஒழிப்பது நிற்கவில்லை.

ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக பள்ளிகளை நடத்தினார்கள். இது விடுதியுடன் கூடிய பள்ளி ஆகும். அவ்வாறு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல குழந்தைகள் மாயமான சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா உருவாகியது தொடர்பில் அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும்.” – பைடனின் 90 நாள் கெடுவுக்கு சீனா பதில்!

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. பின்னர் வுகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார்.

US military may have brought virus to Wuhan, tweets China | கொரோனா வைரஸை  வூகானில் அமெரிக்க ராணுவத்தினர் பரப்பியிருக்கலாம்..: சீனாவின் பகிரங்க  குற்றச்சாட்டால் ...கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், உகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதித்து 2019 இறுதியில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக சமீபத்தில் அமெரிக்க உளவு அறிக்கையில் தகவல்கள் வெளியாகின.

இதனால் வுகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாகவும் இது அமைந்துள்ளது.

இதையடுத்து, கொரோனாவின் தோற்றம் எங்கே என்பதை உறுதியாகக் கண்டறிவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். “கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்” என்று உளவு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உளவு அமைப்புகளுக்கு அவர் 90 நாள் கெடுவை விதித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தோன்றிய விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜோ பைடனின் திடீர் உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன்,

‘அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈராக்குக்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ள சூழலில், அதை திசைமாற்றுவதற்காகவே சீனா மீது அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு தெரிவித்து இதை செயற்படுத்தியுளார் ஜோ பைடன்.

உலகமே இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் சூழலில் உலக சுகாதார அமைப்பை அவமதித்தது மட்டுமில்லாமல், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கிறார் பைடன்.

கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும். உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவே வெளிப்படையான விசாரணையாக இருக்கும்’ என கூறினார்.