விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

இத்தாலி ஓபின் டென்னிஸில் மகுடம் சூடினர் நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹாலெப் !

இத்தாலி ஓபின் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார்.

இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை

இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.

வீணானது பேர்ஸ்டோவின் அரைச்சதம் – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது பெங்களூர்!

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில்  வென்ற சன்ரைசர்ஸ் அணி தலைவர் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார்.
36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 பந்துப்பறிமாற்ற முடிவில் 5 இலக்கு இழப்பிற்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி
இதனால் 164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
அந்த ஜோடி ஐதராபாத் அணியின் ஓட்டத்தை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்துவெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 இலக்குகளை இழந்து ஐதராபாத் திணறியது.  இறுதியில் ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து இலக்குகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .
பெங்களூர் அணி தரப்பில் சாஹல் 4 பந்துப்பறிமாற்றங்களில் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். சிவம் துபேயும் 3 பந்துப்பறிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.
நவ்தீப் சைனியும் 4 பந்துப்பறிமாற்றங்களில் 25 ஓட்டங்கள் கொடுத்து 2 இலக்குகளைவீழ்த்தினார்.

மும்பையை பழிதீர்த்து வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது டோனியின் சென்னைசுப்பர்கிங்ஸ்!

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றையதினம்  தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 பந்துப்பநிமாற்ற முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ஓட்டங்களும், டி காக் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்கத்திலேயே விஜய் 1ஓட்டங்களும், வாட்சன் 4 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.

கொரோனா பாதிப்பால் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு !

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய ஆறு மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது.

பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

தடைப்பட்ட கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் விட்டு விடலாம்: 'பிபா' |  Makkal Osai - மக்கள் ஓசைமேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.

சிமன்ஸ் அதிரடியால் ,கரீபியர் பிரிமீயர் லீக் 2020 சம்பியனானது போலார்ட்டின் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் ! –

ஐ.பி.எல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி ர்டினிடெட் நகரில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில்  வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8 ஓட்டங்களிலும் மார்க் டியல் 29 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால், டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டிரிபாகோ அணியின் கேப்டனும் பந்துவீச்சாளருமான கேரன் போலாட்டு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5 ஓட்டங்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157ஓட்டங்களை எட்டியது.
இதனால் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிராபாகோ அணியின் சிமன்ஸ் 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 84 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அதேபோல் டேரன் பிராவோவும் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த டிராபாகோ அணியின் சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அந்த அணியின் கேப்டன் கேரன் போலாடுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

மீண்டும் வருகிறார் யுவராஜ்!

பீல்டிங், பேட்டிங்,  பவுலிங் என மூன்று துறைகளிலும் அசத்தியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராகவும் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு மற்றும் சகலதுறை வீரராகவுமு்  திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பி.சி.சி.ஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் இணைந்து தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.

பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் தாவித் மலன்!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 இங்கிலாந்து தொடரை வென்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான  தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ஓட்டங்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

“2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் ” – ஜப்பான் உறுதி.

இந்த ஆண்டு சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகினுடைய 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வருகின்ற நிலையில் 2020,2021 ஆகிய வருடங்களில்  நடைபெறவிருந்த உலககூட்டத்தொடர்கள், விளாயாட்டுப்போட்டிகள் என்பன ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு செலவிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கு இப்போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை 23 ம் தேதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்‍கியோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக்கிற்கான அமைச்சர் ஹஷிமோடோ, கொரோனா இருந்தாலும், இல்லையென்றாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருவதாக ஹஷிமோடோ தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியிலும் ஆஸிக்கு ஏமாற்றம்., பட்லரின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து !

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்பட்ட நிலையில் ,
2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியது. வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர். இதனால் 3 ஓட்டங்களுக்குள்ளேயே  2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ஓட்டங்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ஓட்டங்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ஓட்டங்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில்  23ஓட்டங்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள்  பேர்ஸ்டோவ்  9ஓட்டங்களுடன்  வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 54 பந்தில் 77 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.
3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளைமுறுதினம் (செப்டம்பர் 8-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் உலகின் நம்பர் 1 வீரர்! – தகர்ந்தது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு.

யு.எஸ் ஓபின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் ஆடிய நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபின் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் நம்பர் 1 வீரரை தகுதி நீக்கம் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்று ஜோகோவிச் 5-6 என்று பின் தங்கினார். இதில் சற்றே வெறுப்படைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடிக்க அது அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனே ஜோகோவிச் அவர் அருகே சென்று அவருக்கு உதவினார், தேற்றினார். ஆனால் யு.எஸ் ஓபின் தொடர் ரெஃப்ரி சோரம் ஃப்ரீமெல் மைதானத்த்துக்குள் விரைந்து வந்தார். ஆட்ட நடுவர் ஆரிலி டூர்ட்டிடம் பேசினார், கிராண்ட் ஸ்லாம் கண்காணிப்பு அதிகாரி ஆண்டிரியாஸ் எக்லியும் உடனிருந்தார்.

யு.எஸ் ஓபின் அதிகாரிகளுக்கும் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை தெரியாமல்தான் நடந்து விட்டது மன்னிக்கவும் என்றார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் விதிகள் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராகச் சென்றன. கடைசியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் பரிதாபமாக தன் கிட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினார்.

எதிர் வீரர் பஸ்டா அதிர்ச்சியில் உறைந்தார். 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு முடிந்தது.

இதற்கு முன்பாக 1995-ம் ஆண்டு விம்பிள்டனில் பிரிட்டன் வீரர் டிம் ஹென்மன் இதே காரணத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

யு.எஸ் ஓபினிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் யு.எஸ் ஓபனில் அவர் எடுத்த தரவரிசைப் புள்ளிகளை இழக்கிறார். மேலும் அபராதத் தொகையையும் ஜோகோவிச் செலுத்த வேண்டும்.

மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததால் இன்னொரு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நோவக் ஜோகோவிச் தடை குறித்து கருத்துக் கூறிய அனைவருமே வேறு வழியில்லை, ஜோகோவிச் தன் விதியை சந்தித்துதான் ஆக வேண்டும், விதிமுறைகள் அப்படி என்கின்றனர்.

சம்பவத்துக்குப் பிறகு ஜோகோவிச் இறுகிய முகத்துடன் தன் கருப்பு டெஸ்லா காரில் பறந்தார். யு.எஸ் ஓபனில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, ஜோகோவிச்சின் செர்பிய ரசிகர்களுக்கு தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஜோகோவிச் மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடையச் செய்ததோடு என்னை வெறுமையாக்கியுள்ளது. காயம்பட்ட அவரை நான் உடனடியாக கவனித்தேன் கடவுள் புண்ணியத்தில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார்.

அவருக்கு இதன் மூலம் ஏற்படுத்திய வேதனைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் பெரும்தவறிழைத்து விட்டேன். அவரது அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவரது பெயரை நான் வெளியிடவில்லை. தகுதி நீக்கம் குறித்து நான் மீண்டும் என் ஏமாற்றத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.

இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரராகவும் இனிமேலாவது ஒரு மனிதனாகவும் மாற முயற்சிகள் மேற்கொள்வேன். யுஎஸ் ஓபினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த என்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி, என்னை மன்னித்து விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அண்டு 26 போட்டிகளில் வென்று ஒன்றைக் கூட தோற்காது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொது கண நேர வெறுப்பின் செயலால் பலனை அனுபவித்து வருகிறார் ஜோகோவிச்.