மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

CNN_Hero_Narayanan_Kirishnanஎந்திரன் முகத்திரை கிழிகிறது என்ற பதிவில் நான் எழுதியது. திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 

”எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!” : பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி

George_R_Willyபிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி இலங்கையில் வடமராச்சியில் பருத்தித்துறையை  பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது அமெரிக்காவில் கிளரி கிளிங்டன் அமைச்சில் குடிவரவு பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகராக கடமை ஆற்றி வருகிறார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள்,  ஹ்யூஸ்டன், டெக்சாஸ் நகரில் விருந்துபசாரம் ஒன்றில்  கலந்து கொண்டபோது, ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை. – தமிழில்: ந. சுசீந்திரன் –  

._._._._._.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் “இது இலங்கையோ?” என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.

நான் இலங்கையில் பிறந்தவன். என்  தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான், என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு  கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த  ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும்  நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும்  அன்னசத்திரங்களில்  கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள் தோத்திர பஜனைகள் கேட்டும்  மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும்  சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும்  திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணி செய்துமிருகிக்கிறேன்.
 
ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை  அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது. அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்களோ துட்ட காமினியின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட காமினி எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் ஐக்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட காமினி இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான்.

எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும்  நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க  வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம்  தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற   25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்‌ஷ என்ற பெயருடைய மாவீரன்  என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட காமினி என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும்.  ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகாமினியின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ  அல்லாது  நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும்  தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம்.  தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமகனாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது  அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும்  கலாசாரங்கள் மிகச் சிலவே.  நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில்  நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது.

படைநடத்திச்சென்று சமராடி  ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது  நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாரளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. வாளோடும் துப்பாக்கியோடும் இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள உங்களால் முடியாது.  மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே  பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று தம்மபதத்தில் புத்தர் சொல்லியிருக்கின்றார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது,   நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை  என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!      
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!

நன்றி : இனி டென்மார்க்

இலங்கையில் பால்வினைத் தொழில் : சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.

தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று  ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும்  இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில்  தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான  கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது.  அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான்  விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம்  என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே  நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி  ஒருவர் என அறிய வருகிறன்றது.

அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.  இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு  அரசாங்கத்தின் அணுசரணையுடன்  தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.

இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில்  கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து  வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும்  பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக்  கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்)  சட்டரீதியாக்கினால்  பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி: ஊடறு

தீர்வுக்கு முன் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும் – ஜனாதிபதி

president.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.”சில (தமிழ்) அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பதாக நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவானது பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார்.

இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின் நிலைமையை ஒத்ததாகவுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வட அயர்லாந்தில் யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற்றிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதாரசேவைகள், கல்வி என்பனவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் ஜனாதிபதி விபரித்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையே உள்ளது. சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகள் குறித்து தூதுக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அப்பணியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற அமைப்புகள் அதனை நிராகரித்தமையை இட்டு ஜனாதிபதி தாம் கவலையடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஐ.நா. உட்பட சகலரையும் உள்ளடக்கியது இவ் ஆணைக்குழு எனவும் உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமெனவும் வட அயர்லாந்திலிருந்தோ அல்லது வேறெங்கிலிருந்தோ அதனை கொண்டுவர முடியாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எமது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாக தீர்வு அமைய வேண்டும். அதேசமயம், ஏனையோரின் அனுபவத்தை கற்றுக்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.மேலும், சிறுவர் போராளிகளினதும் இளைஞர்களினதும் புனர்வாழ்வில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாகக் கூறுகையில், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே அவசியமென்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது என ராஜபக்ஷ அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏதாவது நியாயபூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனை பாராளுமன்றத்தின் மூலம் வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு தான் ஊக்குவிக்க முடியுமெனவும் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: thinakkural. 20.01.2010

தமிழின் ஆங்கில மயம்

தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன.

“மற்றர்” “சஸ்பென்ட்”, “கட்”, “ரெடி”, “நைட்”, “பவர்”, இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கில மயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமானது பல நூறு கோடி ரூபாவை உலக செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக செலவழித்துள்ளது. செம்மொழித் தமிழ் குறித்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சகல பேச்சாளர்களுமே தொண்டை வரளும் அளவுக்குப் பேசினார்கள். தமிழின் மேன்மைத்தன்மையை அவர்கள் எடுத்துரைத்தனர். ஆனால், எழுத்திலோ வேறுபட்ட தன்மை காணப்படுகிறது. தமிழானது ஆங்கிலச் சொற்களுடன் இணைந்து எழுதப்படுவது தொடர்கிறது.

அத்துடன், மொழியானது ஆக்ரோஷமான விதத்தில் ஏனைய வழிகளிலும் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு முன்னர் சென்னைக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தலொன்றை விடுத்திருந்தது. சகல வர்த்தக நிறுவனங்களும் பெயர்ப்பலகையை தமிழில் எழுத வேண்டுமென்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தந்திரோபாயம் தமிழ்மொழியைப் பொறுத்தவரை வெற்றிபெற்றதாக காணவில்லை. தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கில மொழியின் செல்வாக்குக் காணப்படுவதாக சில நிருபர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாடல்கள், உரையாடல்களில் ஆங்கில மொழி தாராளமாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால், வாசகர்களுடன் இதன் மூலம் சுலபமாக தொடர்புகொள்ள முடியுமென சிலர் நியாயப்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகையொன்றின் நிருபரொருவர் அதிரடி,சஸ்பென்ட்,ஆலோசனை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். நாங்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர். தூய்மையான மொழியை பயன்படுத்துவது பத்திரிகை ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறுகிறார். தினம் என்பதற்குப் பதிலாக டெய்லி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நிருபர் முன்னுரிமை கொடுக்கிறார்.அது அவரின் பத்திரிகையை குறிப்பதாக அமைகிறது. கிராமவாசிகள் கூட சஸ்பென்ட் என்ற வார்த்தையை இலகுவாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறுகிறார். தற்காலிக பணி நீக்கம் என்ற இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கஷ்டம் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், சகலருமே பத்திரிகை ஆசிரியர்களே இந்த விடயத்தை சீரமைக்க முடியுமென்ற ஏகோபித்த அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். கால ஓட்டத்தில் தமிழ்ச் சொற்களை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அறிமுகம் செய்ய முடியும் என அதாவது அடிக்கடி அச்சொற்களைப் பயன்படுத்துவதால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மாற்றியமைக்க முடியுமென அந்த அபிப்பிராயம் காணப்படுகிறது.

தியாகராஜர் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் கூறுகையில்;

சரியான தமிழ்ச்சொற்கள் இல்லாவிடில் இது சரியான விடயம். (ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்) ஆனால், கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது தமிழை கேலிக்கூத்தாக்கும் விடயமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜக்கிஷான் தமிழ்பேசுகிறார். (ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழ்வடிவம்) தமிழ் நடிகர் சூர்யா தமிழ்ப் படங்களில் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் புஷ் தெரிவித்திருக்கிறது.

 நன்றி தினக்குரல்

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

Piyasena_M_MP_TNA தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மனம்துறந்த தமிழ் சிஎன்என் இணையத்திற்கு வழங்கிய பேட்டி மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் தமிழ் சிஎன்என் இணையத்திற்கு  கூறுகையில் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு கட்சி என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பே எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கே தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் 40 வருடங்களுக்கு முன் மலையகத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருட்படுத்ததாமல் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாலேயே தான் அரசுடன் .இணைந்துள்ளதாக கூறுகின்றார். அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவருக்கு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பா உ பியசேன வின் இந்நேர்காணல் அருகில் உள்ள இணைப்பில் கேட்கலாம். அவர் எவ்வித அரசியல் மேல்பூச்சும் இன்றி சாதாரண மக்களின் மொழியிலேயே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். http://www.youtube.com/watch?v=Q1htJPT8IBM&feature=player_embedded

._._._._._.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது? என்பதை விளக்கினார்.

அவர் தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

”தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான். ஏனெனில் அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றமைக்கான தலைமை கூட்டமைப்பில் இல்லை. உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.

தமிழினத்தைப் புதை குழியில் தள்ளிய- தள்ளிக் கொண்டிருக்கின்ற கட்சி இதுதான். இளைஞர்களை உசுப்பு ஏற்றி விட்டதைத் தவிர கூட்டமைப்பு எதைத்தான் செய்தது?

கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும், வே. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.

ஆனால் கூட்டமைப்பினர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழிய வேண்டும் என்று விரும்பினார்கள். மக்களையும், போராளிகளையும் அநியாயமாக கொன்று விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடத்தியவர்களும், புலிகளின் அழிவுக்கு காரணமானவர்களும் இக்கூட்டமைப்பினரே.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை இவர்கள் ஒருமுறை கூட நாடாளுமன்றில் பேச அனுமதித்தமை கிடையாது.இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான விதவைகள், வறியவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்த்தமையே இல்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள். கட்சியின் பெயர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். கூட்டமைப்பில் அறிஞர்கள், புத்திஜீவிகள் என்று யாராவது இருக்கின்றார்களா?.சம்பந்தன் ஆயினும் சரிஇ மாவை சேனாதிராசா ஆயினும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயினும் சரி, ஏன் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாமையால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள்தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றன.

அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்ற இவர்களால் இவர்களால் ஒரு குண்டூசியைக் கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாது. சிங்கள தேசம் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொடுக்க காத்திருக்கின்றது. ஆனால் பெற்றுக் கொள்ள கூட்டமைப்புத்தான் தயாராக இல்லை.

கூட்டமைப்பினர் வன்னி மக்களை அகதி முகாம்களில் சந்திக்க சென்றபோது ஒரு ரொபி பைக்கெற்றைக் கூட கொண்டு சென்றிருக்கவில்லை. வேண்டும் என்றே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் சென்றிருந்தார்கள். தெரிந்துகொண்டே அப்படிச் செய்திருந்தார்கள்.அப்போதுதானே பிரச்சினைகள் வெடிக்கும்.

கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சைக்கிள்களை கொடுத்து விட்டு போட்டோக்களில் பெரிதாக போஸ் கொடுக்கின்றார். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் போடுகின்றார்.

பசியில் இருக்கின்றவர்களுக்கு சைக்கிள்களைக் கொடுத்து என்ன பயன்? இன்னமும் மக்கள் இவர்களை தலைவர்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றமை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. மக்களின் நிலை கண்டு தினமும் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். அழுகின்றேன்.

மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற நோக்கோடுதான் அரசை ஆதரிக்கின்றேன். நிச்சயமாக அரசின் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையில் தொடர்ந்தும் பாடுபடுவேன்.”

”துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.” வேலும்மயிலும் மனோகரன் (தவிபு இன் சர்வதேசப் பிரிவின் மூத்த உறுப்பினர்)

மே 18க்குப் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் பலத்த பிளவுகள் ஏற்பட்டு குழுவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இக்குழுக்கள் இரு பிரதான அணிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. ஒன்று உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற அணி. மற்றையது உருத்திரகுமாரனின் தலைமையை அல்லது நாடுகடந்த தமிழீழத்தை எதிர்க்கின்ற அணி.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைக்கான போட்டியில் உருத்திரகுமாரனுடன் பிரித்தானியாவில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜெயானந்தமூர்த்தியும் போட்டியிட இருந்தார். ஆனால் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரினதும் ஆதரவைத் தக்க வைத்து தன் வெற்றியை உருத்திரகுமார் உறுதிப்படுத்தியதால் ஜெயானந்தமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசை ஜெயானந்தமூர்த்தியின் ஊடாகக் கைப்பற்ற திட்டமிட்ட ஐரோப்பிய அணி தற்போது உருத்திரகுமாரனுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எதிராக இணைய யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே இந்நேர்காணல் ‘தாய்நிலம்’ இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இப்போதைய காலப் பொருத்தம் கருதி தேசம்நெற் வாசகர்களுக்காக இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. – நன்றி தாய்நிலம்.
._._._._._.

விடுதலைப் புலிகளின் சர்வ தேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன் அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் என்பனவற்றினைப் பற்றிய பலதரப்பு கேள்விகளுக்கு பதில் தருகின்றது.
 
அறிமுகம்:

1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்தியில் இவர் வழங்கினார்.

இயக்கத்தின் சார்பில் சர்வதேச தரப்புக்களுடனான பேச்சுக்கள் பலவற்றின் ஆரம்பகட்டங்களை மனோகரன் அவர்களே தலைமையின் வழிகாட்டலில் நடத்தினார்.

புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்குள் இவேர் விட்டுள்ள நச்சு சக்திகள் என்பனவற்றின் நெருக்கடிகளை மீறி பிரான்சில் நாடுகடந்த அரசுக்கான சனநாயக பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவுக்குத் தலைமை தாங்கி தேர்தலை நடாத்தி முடித்தார்.

._._._._._.

கேள்வி:  இன்றுள்ள தாயக நிலவரங்களை ஒரு மூத்த இயக்க செயற்பாட்டாளனாக எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
 
கேள்வி: எவ்வாறு இந்தச் சிக்கலை தமிழ்சமூகம் எதிர்கொள்ளலாம் என எண்ணுகின்றீர்கள்?

பதில்: இதுவொரு நீண்டகால வியூகத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய விவகாரமாகும். வெறும் பிரகடனங்களும் வெற்றுத் தந்திரங்களும், உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களும் இன்றைய ஆபத்தான நிலையிலிருந்து எமது அரசியலை, இருப்பை மீட்டெடுக்காது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான நீண்டகால போராட்டத்திற்கு, அல்லது சந்ததி சந்ததியாக நடத்தப்பட வேண்டியும் வரக்கூடிய ஒரு போராட்டத்திற்கு தேவையான அடிப்படைகளை நாங்கள் இப்போது அத்திவாரமாக இடுதல் வேண்டும். இதற்கான மூலமான தரப்பாய் இருப்பவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அந்த மூலத்தினை பலப்படுத்தும் அடுத்த வட்டம் என்றே நான் கணிப்பிடுகின்றேன். இந்த அடிப்படையில்,

முதலாவது, தாயகத்தில் வாழும் மக்களின் உடனடிப்பிரச்சனைகளை புறக்கணிக்காது, அதற்குரிய முக்கியத்துவத்தினை உணர்ந்து நாங்கள் செயற்படல் வேண்டும்.
இரண்டாவது, சிறைப்பட்டுக் கிடக்கும் எமது போராளிகளைப் பாதுகாத்து அவர்களை வெளியில் எடுத்துவிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
மூன்றாவது, தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளிடையே ஒருங்கிணைப்பினையும், பொது வேலைத்திட்டத்தினையும் ஏற்படுத்தி எதிர்காலம் தொடர்பான நீண்டகாலப் பார்வை கொண்ட போராட்டப் பாதையை வகுக்க வேண்டும். நான் அரசியல் போராட்டத்தினைத்தான் முன்வைக்கின்றேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: முள்ளிவாய்க்கால் என்கின்ற பேரவலத்தினை தந்த சக்திகள் அதன் அடுத்த கட்டமாக புலத்துத் தமிழர்களை அடுத்த முள்ளிவாய்க்கால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்றுதான் நான் மதிப்பிடுகின்றேன். புலத்தில் வாழும் தமிழ்மக்கள் விடுதலைப் போருக்கு தமது பங்களிப்புக்களை நிறைய வழங்கியவர்கள். நிறைந்த கனவுகளைக் கொண்டிருந்தவர்கள். மே18 வரையான இழப்புக்களால் அல்லது தோல்விகளால் துவண்டு, விரக்தியுற்று சோர்ந்து போயுள்ளனர். அவர்களை இன்னமும் துன்பப்படுத்தும் விதத்தில் இணையங்கள், ஊடகங்கள் என்கின்ற பெயரில் மக்கள் விரோத, சக்திகள் நடத்தும் மனோவியற் போரினை இந்த முள்ளிவாய்க்கால் இரண்டிற்கான மூல தந்திரமாக நான் பார்க்கின்றேன்.

கேள்வி: இன்று புலம்பெயர்ந்த நாடுகளின் ஊடகங்களைப் பொறுத்தவரை கே.பி விவகாரமே முக்கியத்துவமான தாக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த கே.பி விவகாரத்தினை துரோகமாக்கி, நீண்டகால செயற்பாட்டாளர்கள், நீங்கள் எனப் பலதரப்பும் கடும் வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: எம் மீதான இவர்களின் வசைபாடல்களை கெட்ட உள்நோக்கம் கொண்டவையாகத் தான் நான் கருதுகிறேன். தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் சிலர் தேசியம் சார்ந்த செயற்பாடுகள் தாம் சார்ந்தோரின் ஏகபோகமாக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அனைவரும் தமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் தமது கட்டமைப்புக்கு வெளியில் தேசியம் சார்ந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதனை இவர்கள் இப்போது தமது முதன்மைப்பணியாகக் கொண்டுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதனை அவர்கள் எதிர்த்தமைக்கும் இதுதான் காரணமாக அமைந்தது. நாம் இவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு உறுதுணையாக நின்றோம். இப்போதும் இவர்களின் ஏகபோக தேசிய அரசியலுக்கு நாம் உண்மையோடு அச்சுறுத்தலாக உள்ளோம். அதனால் இத்தகைய வசைபாடல்கள் மூலம் எம்மை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் முனைகிறார்கள். இப் பின்னணியில் இருந்துதான் இவர்களின் வசைபாடல்களை நாம் நோக்க வேண்டும்.

நாம் தமிழீழம் பற்றிப் பேசிக்கொண்டு தாயகத்தில் தற்போது கால் வைக்க முடியாது. தாயகத்தில் எதுவும் பரந்த சமூக மட்டத்தில் செய்வதானால் சிறிலங்கா அரசினை மீறியும் செய்ய முடியாது. இது இன்று ஈழத் தமிழர் சமூகம், அதுவும் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சவால். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் தமிழ்மக்களும் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு எந்த வகையான அரசியல் வெளியும் இப்போது அங்கு இல்லை.

புலத்திலுள்ள நாம் தாயகத்தில் வாழும் மக்களுக்காக அவர்களை நெருங்கிச் சென்று கைகொடுக்க முடியாதுள்ளோம். இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவது எவ்வாறு? இவற்றினைப் பற்றிப் பேசுவதும்இ இவற்றிற்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிப்பதும்இ இவை பற்றிய கவனத்தினை ஏற்படுத்துவதுமே முதிர்ச்சியான ஊடக அல்லது அரசியல் அணுகுமுறை. இதனை விட்டு விட்டு மக்களின் கவனத்தினை திசைதிருப்புவோரை என்ன வென்று சொல்லது?.

கே.பி இயக்கத்தின் மூத்த போராளி. கைதுக்குப் பிற்பாடு சிங்களத்துடன் ஏதோவொரு தொடர்பாடலைப் பேண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசியல் கைதி. அவரை துரோகி என்பவர்கள் மக்களுக்கும், தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட எங்கள் தேசத்தின் வரலாற்றிற்கும் பதில் கூறட்டும். அதற்கான பதிலை கே.பி தனது சொல்லாலோ, செயலாலோ வழங்கட்டும். துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

எங்களுக்கு எமது தேசியத் தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன். இன்று குறித்த இணையத்தளங்கள் ஊடாகவும், ஒரு பத்திரிகை ஊடாகவும் சிறீலங்கா அரசின் ஏஐண்டுகளாக செயற்பட்டு மக்களைக் குழப்பும் தீயவர்கள் பற்றி தேவைப்பட்டால் நான் எதிர்காலத்தில் பேசுவேன்.

கேள்வி:  உங்களுக்கு எதிரான தாக்குதலை நாடுகடந்த அரசாங்கத்தினை குழப்ப முன்பு முற்பட்ட அதே ஊடகங்களே நடத்துகின்றன. இன்றும் மீண்டும் உங்களுக்கு எதிராகவும், உருத்திரகுமாரனிற்கு எதிராகவும் வசைபாடல் நடத்தப்படுவதால், இது நாடுகடந்த அரசினை குழப்பும் சதி என்று சொல்லலாமா?

பதில்: எனக்கும் அவ்வாறான ஊகம் உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் ஒரு அரசியல் வேலைத்திட்டம். இன்று ஏற்பட்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்புபட்ட இடைவெளியினை நிரப்பும் ஒரு திட்டமாகவே இதனை பார்க்கின்றேன். நாடுகடந்த அரசாங்கத்தினை எதிர்ப்பது, கொச்சைப்படுத்துவது, இயங்கவிடாது தடுப்பது, தமது கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று கூறுவது எல்லாமே இந்த அரசியல் வேலைத்திட்டத்தினை தோற்கடிக்கும் நடவடிக்கைகளாகும்.

இதனைத் தேசியத்தின் பெயரால் எதிர்க்கும் தரப்புக்களிடம் எதுவித மாற்று வேலைத்திட்டங்களும் கிடையாது. வெறுமனே பொய்யால் புனையப்பட்ட அறிக்கைகளை விடுவதும், ஒரு சாதாரண தமிழ் சங்கம் செய்யக்கூடிய குடிமக்கள் நடவடிக்கைகயை பெரும் அரசியல் நடவடிக்கையாக கூறுவதும் என்னைப் பொறுத்தவரை உச்சபட்ட ஈகத்தினைச் செய்த மாவீரர்களுக்கு செய்யப்படும் துரோகமாக அல்லது எமது இயக்கத்திற்கு செய்யப்படும் துரோகமாகக் கருதுகின்றேன். நானும், உருத்திரகுமாரனும் இயங்குவது தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் சிலரை அசெளகரியப்படுத்துகின்றது என்பது எனக்கு விளங்குகின்றது.

தலைவர் முன்பொருமுறை கூறியது போன்று உண்மை வெளிக்கிட்டு புறப்படும் முன்னர் பொய் ஒருமுறை ஊர்வலம் வந்து சேரும், ஆனால் உண்மைகள் வெளிவரும் போது அதுவே நிலைத்து நிற்கும்.

கேள்வி: மக்களின் குழப்பத்தினை தீர்ப்பதற்காக சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை ஒருங்கிணைக்கிறீர்களா? கேபிக்கும் உங்களுக்கும், கேபிக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

பதில்: கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை நான் ஒருங்கிணைப்பதாக வெளிவந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதே போல கே.பி க்கும் உருத்திரகுமாரனுக்கும் தற்போது தொடர்பிருப்பதாக செல்வதிலும் உண்மை இல்லை. தி ஐலன்ட் பத்திரிகையில் கே.பி அவர்களை செவ்வி கண்டதாகக் கூறி அதனைப் பிரசுரித்த அதன் ஊடகவியலாளர் குறிப்பிட்ட ஒரு தகவலினை கே.பி கூறியதாக திரித்து உள்நோக்கம் கொண்ட குழுவொன்று நடத்தும் கேவலமான அரசியலை ஓரமாக வைத்துவிடுங்கள்.

கே.பி கைதுசெய்யப்பட்டு கொழும்பில் இருக்கையில் எனது தலைமையில் கே.பியுடன் செயற்பட்டவர்கள் செயற்படுவதாக தி ஐலன்டின் செய்தியாளர் எழுதுகின்றார். அது கே.பி சொன்னதாக கூட எழுதப்பட்ட செய்தியல்ல. இந்த ஊடகவியலாளர் எதற்காக இவ்வாறு குறிப்பிட்டார் என்பதனையும் அதற்கு இருக்கக்கூடிய உள்நோக்கங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களை முட்டாள்களாக நடத்தும் இந்த இணையப் புலிகளுக்கு மக்கள் தான் பதில் கூற வேண்டும்.

எனக்கு கே.பியினை அறிமுகப்படுத்தியது எனது தலைவர். 1984ல் ஒரு பட்டியலுடன் தலைவர் அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார். 2003 ம் ஆண்டு வரை அவர் இயங்கினார். அவருடன் நாங்கள் இயங்கினோம். சுமார் 18 வருடமாக பொறுப்பில் இருந்த மூத்த உறுப்பினர் அவர். அவருடன் இயக்கத்தின் வெளிநாட்டுக் கட்டமைப்பில் செயற்பட்ட அனைத்து மூத்த செயற்பாட்டாளர்களுக்கும் பல்லாண்டு தொடர்புகள் இருந்துள்ளது. 2003ல் அல்லது 2009 மே19 ற்குப் பிறகு இயக்கத்திற்குள்? புகுந்தவர்களுக்கு அவரைத் தெரியாது.

நான் அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்ட பிற்பாடு பணிசார்ந்து கே.பி உடன் நெருங்கிய உறவு நிலையை பேணினேன். பிற்பாடு 2009 சனவரியில் கே.பி மீள தலைவரால் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்ட போது அந்த தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 2009 மே18 ற்குப் பிற்பாடு அடுத்த கட்டம் பற்றிய கலந்துரையாடல்களில் உலகின் பல மூலைகளிலிருந்தும் போராளிகள், மூத்த செயற்பாட்டாளர்களை கே.பி ஈடுபடுத்திய போது நானும் அந்த நடவடிக்கைகளிற்காக அழைக்கப்பட்டேன். ருத்திரகுமாரனும் அழைக்கப்பட்டார். கே.பியின் கைதுக்குகுப் பிற்பாடு அவரின் விடுதலைக்காக பிரான்சின் மிக முன்னணியான சட்டத்தரணியினை நான் ஏற்பாடு செய்த போதும் சட்டத்தரணிக்கு கொடுக்கப் பணமில்லாமையால் அது கைவிடப்பட்ட துன்பமும் நிகழ்ந்தது.இதுவே எங்களிற்கு இடையேயான தொடர்பு.

கேள்வி: கேபி குழு என்ற ஒன்று குறித்த ஊடகங்களினால் சொல்லப்படுகின்றதே. அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இது மே18 ற்குப் பிறகு கட்டப்பட்ட கதை. இயக்கத்தினை தெரிந்தவர்களுக்குத் தெரியும் இயக்கத்தினுள் குழுவாதம் அனுமதிக்கப்படுவதில்லை. வேலை சார்ந்த பொறுப்புகளே வழங்கப்படும். கே.பி 20 வருடங்கள் வெளிநாட்டு கட்டமைப்புக்களை கட்டியெழுப்பியவர் என்பதால் பெருந்தொகையான மூத்த உறுப்பினர்களின், அனுபவம் மிக்க உறுப்பினர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். மே18 ற்குப் பிறகு புலிகள் இயக்கத்தினை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த முற்படும் சக்திகள் இந்த மூத்த, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை ஓரங்கட்டுவதற்காக் கண்டுபிடித்த சொல் தான் கேபி குழு என்று நான் கருதுகின்றேன்.

இவர்கள் தாம் குழுவாக இயங்கும் காரணத்தினால் என்னவோ எல்வோர் மீதும் குழு என்ற முத்திரை குத்த முற்படுகிறார்கள். இயக்கத்தில் நீண்டகாலம் செயற்பட்டவர்கள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் என்று தம்மை அடையாளப்படுத்தவே விரும்புவார்கள். வேறு ஒரு தனி நபர் பெயரையும் ஏற்றுக் கொள்ளாத மரபு எம்முடையது.

கேள்வி: இயக்கத்தினை சர்வதேச ரீதியாக வழிநடத்தியவரான நீங்கள் இன்றுள்ள செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை எனக்கு தலைவர் சொல்லித்தந்தது, மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதே முக்கியமானது என்பது. அதனையே உங்களுக்கும் சொல்ல விரும்புகின்றேன்.

இரண்டாவது விழிப்புடன் இருங்கள். எமக்குள் இருக்கும் புல்லுருவிகள் பலரும் மே18ற்குப் பிற்பாடு தீவிரமாகியுள்ளனர். எனவே விழிப்பு முக்கியமானது.

மூன்றாவது, தலைவர் ஒரு உயரிய பண்பாட்டினை தந்துள்ளார். அது மதிப்பது. மக்களை மதிப்பது, சக உறுப்பினர்களை மதிப்பது என அந்த மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்.
 
கேள்வி: நாடுகடந்த அரசுவின் தேர்தல் முடிவுகள் இரண்டு தொகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான சர்ச்சையும் உங்களுடன் தொடர்புபட்டது. அதுபற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இத் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை உத்தியோக பூர்வமாக வெளியிடாது உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்டோம். அதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு மனேகரனிடம் நம்பிக்கையில்லை என்று பேசினார்கள். நாம் கலந்து பேசி முடிவில் தமிழர் அல்லாத மாற்றினத்தவர்களைக் கொண்ட சுயாதீனமான குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சுயாதீனக்குழு பிரான்சுக்கார நிபுணர்களைக் கொண்டது. அதன் விசாரணைகளுக்கு அனைவரும் ஒத்தழைப்புக் கொடுத்தனர். குறித்த இருவர், அதாவது நடுநிலைக்குழுவின் விசாரணையைக் கோரிய இருவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணை அறிக்கைகள் இப்போது தேர்தல் ஆணைக்குழு மற்றும் உருத்திரகுமாரனின் கைகளில் உள்ளது. அதன் முடிவுகள் விரைவில் மக்களின் முன்பாக வைக்கப்படும்.

எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்.

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanபிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி:அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை, பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: நான் கூறுவது உண்மையானது. இது மிகவும் எளிமையான கதை….. எமக்கிடையில் எந்த விதமான உடன்பாடும் இல்லை. எம்மிடையே இருந்தது புரிந்துணர்வு மட்டுமே. நேர்மையான புரிந்துணர்வு. நாம் இருவரும் சில பொது இலக்குகளை கொண்டுள்ளோம். எனவே நாம் அந்த பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்கின்றோம். இதுதான் எம்மிடையிலான உடன்பாடு. வேறேதுமில்லை.

கேள்வி:தயவுசெய்து இதை இன்னும் விளக்கமாக கூறமுடியுமா? இந்தக் கருத்துடன்பாடு என்னவென்று குறிப்பிட்டுச் செல்லுங்கள்.

பதில்:தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இப்போது முடிந்துவிட்டது. யுத்தத்தை திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வேறு பாத்திரமொன்றை ஏற்றுள்ளார். அவருக்கு சமாதானத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியும் வரக்கூடிய வன்முறைக் கிளர்ச்சிகளை தடுக்க வேண்டியும் உள்ளது. யுத்தத்தால் உருவான பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வுக்காண நிறையவே செய்ய வேண்டியுள்ளது என்பதை அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் உணர்ந்துள்ளனர். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியமர்த்தப்படும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். வழமை நிலை திரும்ப வேண்டும். ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விரும்புகின்றனர்.

அதேசமயம் நானும் இந்த பிரச்சினைகள் பற்றி கரிசனையாக உள்ளேன். இயன்றளவு விரைவாக இளைஞர்களும் யுவதிகளும் விடுவிக்கப்படுவதை நானும் விரும்புகின்றேன். இவர்களுக்கு புதுவாழ்வு வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்து மீள்பவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். இதானால்தான் இந்த விடயங்களில் எம்மிடையே உடன்பாடு காணப்படுகின்றது. இந்த விடயங்களில் ஓரளவு ஈடுபடுவதற்கு எனக்கு பாதுகாப்பு செயலாளர் ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றார். இதுதான் எமது கருத்துடன்பாடு அல்லது உடன்பாடு கண்ட விடயம்.

கேள்வி:ஆனால், இந்த விடயங்களில் ஈடுபடுவதற்கு மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் முன்னாள் தலைருக்கு இப்படியான வாய்ப்பு ஏன் வழங்கப்படுகின்றது என்பதே பலருக்கு புதிராக உள்ளது.?
பதில்:பாதுகாப்பு செயலாளர் அல்லது அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் அல்லது ஒரு உத்தியோகத்தரே இதற்கு பதிலளிக்க மிகப்பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன். எனது பார்வையில் அல்லது அரசாங்கத்தின் சிந்தனையில் பின்னணியில் என்ன உள்ளது என நான் நினைப்பதை வைத்துக்கொண்டு மட்டும்தான் என்னால் பதிலளிக்க முடியும்.

கேள்வி:சரி. அந்த விதத்திலேயே கூறுங்கள். இந்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் வழங்கப்பட்டது எண்ணுகின்றீர்கள் என்று எனக்குக் கூறுங்கள்?
பதில்:அவர்கள் ஒரு சிக்கலான, இக்கட்டான நிலைமையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். அவர்கள் இடம் பெயர்ந்தவர்களையும் தடுப்புக்காவலில் உள்ளவர்களையும் இயன்றளவு விரைவாக புனர்வாழ்வு அளிக்க அல்லது விடுவிக்க விரும்புகின்றனர். இது தாமதாமாக ஆக, சர்வதேச விமர்சனமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதே சமயம் இன்னொரு பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பு என்ற பார்வையில் நோக்கும்போது எச்சரிக்கையாகவும் செயற்படுகின்றனர். பிரிவினை வாதம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் வகையில் அல்லது அரசியல் சார்ந்த வன்முறை மீண்டெழும் வகையில் உள்நோக்கம் கொண்ட பகுதியினரால் இந்த மீள்குடியேற்றப்பட்ட விடுவிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனால்தான் அரசாங்க அதிகாரங்கொண்டோர் கவனமாக உள்ளனர். இதனால் விடயங்கள் தாமதமாகின. இந்த மெதுவான நகர்வு அரசாங்கம் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுத்தது. எனவே, அரசாங்கம் பாதுகாப்பு நலன்களை பேணும் அதேசமயம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவக்கூடிய வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் நான் வருகிறேன் என நான் நினைக்கிறேன்.

இந்த விடயங்களில் ஒரு அறிய பாத்திரத்தை வகிக்க அவர்கள் எனக்கு ஒரு சந்தரப்பத்தை தருகின்றனர். இது இராமாயணத்தில் கடலுக்கு குறுக்காக அணைகட்ட உதவிய அணிலின் பாத்திரம் போன்றதாகும். இது எனது வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒன்றை செய்வதற்கு எனக்கு வாய்ப்பை அளிக்கின்றது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

கேள்வி:ஆனால் உங்களை ஏன்? ஒரு அரசு சாரா நிறுவனம் அல்லது அரசு சாரா நிறுவனங்களின் தொகுதியிடம் அல்லாமல் உங்களிடம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளிடம் இது இல்லை?
பதில்:ஏன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இப்படியான பாத்திரம் வழங்கவில்லை என்பது பற்றி நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன், நான் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு, நான் என்ன நினைக்கின்றேன் என்பதை மட்டும்தான் நான் கூறமுடியும்

கடந்த காலத்தில் பெற்ற விரும்பத்தகாத அனுபவங்கள் காரணமாக அநேகமான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் நம்பவில்லை என நான் நினைக்கின்றேன். இதனால்தான் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது என நான் நினைக்கின்றேன். தமிழக்கட்சிகளும் முன்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தினர் அல்லது துஷ்ப்பிரயோகம் செய்தன.

இதனால் அவர்கள் மீதும் நம்பிக்கையற்று உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது பிரச்சினை பாதுகாப்பு மற்றும் அரசியல் என்பவற்றுடன் தொடர்புறுகின்ற, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாக உள்ளது.

விமர்சனங்கள் வருகின்றபோதும் அரசாங்கம் இந்த விடயத்தில் எந்தவித்திலும் ஆபத்துக்கும் முகங்கொடுக்கும் நிலை வருவதை விரும்பவில்லை. பழைய புலி உறுப்பினர்களுடன் கலந்து பழக சகல நிறுவனங்களையும் அதுமதித்து, பாதுகாப்பு சிதைவடையும் ஆபத்துக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்படுவதுடன் ஒப்பிடப்படுமிடத்துதான் விமர்சனத்துக்கு உள்ளாவதே மேல் என அவர் நினைக்கின்றார். இப்படியான நிலைமையில் எனக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. புனர்வாழ்வுக்கு தயாராக்கப்படும் முன்னாள் புலிகளுடனும் வேறு பிரயோசனப் படக்கூடிய சிலருடனும் கலந்து பழகுவதற்கு என்னை அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

அவர்கள் என்னை நம்புகின்றனர். அத்துடன் நான் அவர்களிடம் பிடிப்பட்டுள்ளதால் என்னையிட்டுப் பயப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது மக்களுக்கு, குறிப்பாக முன்னைநாள் புலி உறுப்பினர்களுக்கு சேவை செய்யக்கிடைத்த இந்த வாய்ப்பை நான் விருப்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி: இந்தவகையில் உங்களுக்கு உற்சாகம் அளிப்பது என்ன?
பதில்:முன்னாள் புலித் தலைவர்களில் மிக மூத்தவராக நான் இப்போது இருக்கின்றேன் என நினைக்கின்றேன். இன்றைய தமிழ் மக்களின் பரிதாப நிலையை காணும்போது நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகின்றேன். இந்த இளைஞர் யுவதிகளின் கதியை பார்க்கும்போது எனக்கு மிகுந்த கவலையாகவும் துன்பமாகவும் இருக்கிறது. இந்த பிள்ளைகளில் பலர் தமது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது.

வன்னிப்பிரதேச சாதாரண மக்களை (சிவிலியன்) காணும்போது நான் பெரிதும் கழிவிரக்கம் கொள்கின்றேன். அவர்கள் ஒரு காலத்தில் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இப்போது போரின் காரணமாக துன்பகரமான வறுமையில் உள்ளனர். இதனால் தான் நான் அவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து சிறிதாவது பிராயச்சித்தம் செய்ய விரும்புகின்றேன்.

இன்னுமொரு காரணம் உள்ளது. நான் சென்ற வருடம் கேள்விப்பட்ட கதை. பிரபாகரனும் வேறு தலைவர்களும் சென்ற மேமாத நடுப்பகுதியில் கூடிப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் “எமது மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ன நடக்கும்?” என ஒருவர் கேட்டார். அதற்கு “கே.பி. இருக்கிறார். அவர் மக்களையும் உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வார்” பிரபாகரன் என கூறினாராம்.

சில மாதங்களுக்கு முன் இது உண்மையில் நடந்த சம்பவம்தான் என்றும் பிரபாகரன் இவ்வாறு வெளிப்படையாக என்னைக் குறிப்பிட்டார் எனவும் உறுதி செய்யும் என்று எனக்கு கிடைத்தது. எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட இறுதிக்கட்டம் இந்த மக்களை கவனித்து கொள்வதுதான், இந்த வகையில் எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது.

இதுதான் நான் ஊக்கத்துடன் இருக்கக் காரணம் நான் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தை (NERDO) தோற்றுவித்தேன். இது ஒழுங்கு முறையாக ஜுலை 06, 2010 இல் பதிவு செய்யபட்டது. எமக்கு வடக்கு கிழக்கில் நடமாடவும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுடனும் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருடனும் கலந்து பழக பாதுகாப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

கேள்வி:NERDO பற்றி பேசமுன் மிகச்சொற்ப காலத்தில் NGO அரச சார்பற்ற நிறுவனம் என்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. NERDO வுக்கு பாதுகாப்பு அனுமதியும் நடமாட்ட சுதந்திரமும் கிடைத்துள்ளது. இது உயர்மட்டங்களில் ஆதரவு இல்லாது சாத்தியமாகியிருக்காது. பாதுகாப்பு செயலாளரின் ஆசீர்வாதத்துடன் தானே NERDO இந்த அங்கீகாரத்தையும் நடமாட்ட சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது?

பதில்:ஆம் நாம் சகல விதிமுறைகள் நடைமுறைகளுக்கூடாகவும் சென்று விண்ணப்பித்தோம். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவின்றி இவ்வளவு விரைவான அனுமதி கிடைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி:முன்னைய விடயத்துக்கு மீண்டும் போக அனுமதியுங்கள். கோட்டாபய ராஜபக்ஷவுடனான உங்கள் விசேடமான உறவின் காரணமாக மட்டுமே, நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவராக இருந்த போதும் நீங்கள் சில செயல்களில் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகின்றது என்பது தெட்டத் தெரிகின்றது. நீங்கள் முன்னர் கூறியதுபோல உங்களுக்கிடையே உடன்பாடு எதுவுமில்லை. சில தொடர்புடைய மக்கள் நேய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே உங்களிடையேயான கருத்துடன்பாடாக இருந்தது. இப்படியான மிகவும் நல்ல உறவு எப்படியான சூழலில் பரிணமித்தது? தொடர்ந்து வளர்கின்றது என நீங்கள் விளக்குவீர்களா?

பதில்: நல்லது. நான் எப்படி மலேசியாவில் பிடிப்பட்டேன். கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். எமது முதல் சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பன பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அதன்பின் தொடர்ந்து வந்த சந்திப்பில் மூன்றாவது என்றுதான் நினைக்கின்றேன். கோட்டாபய ராஜபக்ஷ ஒட்டுமொத்தமாக இந்த நிலைமைப்பற்றி நான் என்ன நினைக்கின்றேன். நான் எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பது பற்றி நேரடியான கேள்விகளைக் என்னிடம் கேட்டார்.

அப்போது நான் என்னைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது என்றும் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவது இனிமேல் முடியாதது என்பதை பூரணமாக உணர்ந்துவிட்டேன் என்றும் தெளிவாகக் கூறினேன். மக்களின் கதிபற்றி நான் மிகவும் குற்றவுணர்வுடன் உள்ளேன் என்றும் எனக்கு ஒரு வாய்ப்புத் தரப்படுமானால் நான் இந்த மக்களுக்கு சிறு அளவிலாவது குறைந்த பட்சம் பிராயச்சித்தம் என்ற வகையில் உதவி செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அப்போது பாதுகாப்பு செயலாளர் தானும் இடம்பெயர்ந்தோரை விரைவில் விடுவித்து மீள்குடியேற்றம் செய்யவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் விரும்புவதாகக் கூறினார். இந்த வகையில் காரியங்களை விரைவுப்படுத்த நம்பத்தகுந்த ஆட்கள் தனக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். இந்த செயன்முறையில் தனக்கு உதவ நான் விரும்புவேனா என என்னிடம் அவர் கேட்டார். நான் ‘ஆம்’ எனக் கூறினேன்.

சில நாட்களின் பின் இராணுவ புலனாய்வு தலைவர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனது வேண்டுகோளை தானும் பாதுகாப்பு செயலாளரும் விரிவாக ஆராய்ந்ததாகவும் அப்போது ஒரு சாதகமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதன்பின் இந்த தொடர்செயற்பாட்டில் பங்குக் கொள்ளும் வகையில் சுதந்திரமான செயற்பாட்டுக்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கேள்வி:நீங்கள் ஆலோசகராக ஆக்கப்பட்டீர்களா?
பதில்:நீங்கள் கேட்பது போல அது முறைசார்ந்தாகவோ அல்லது உத்தியோக பூர்வமானதாகவோ இருக்கவில்லை. ஆனால், சில தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் என்னுடன் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் தடுப்பு காவலிலிருந்த உறுப்பினர்களுடனும் வடக்கிலிருந்த சிலருடனும் கலந்து பழகவும் நான் அனுமதிக்கப்பட்டேன்.

கேள்வி: நேரில் சென்று பேசவா?
பதில்: இல்லை. நேரடியாக அல்ல. முதலில் தொலைபேசி மூலம் மட்டும்தான். பின்னர் தடுத்துவைக்கப் பட்டிருந்தவர்களின் பெற்றோரின் பிரதிநிதிகளை வடக்கிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரவும் அவர்களை சந்திக்கவும் முடிந்தது. அப்படியான ஒரு சந்திப்பின்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிக் கூறிக் கவலைப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவரிடம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான நடவடிக்கையை எடுக்கும்படி பாதுகாப்பு செயலாளரிடம் அவரால் வேண்டு கோள் விடுக்க முடியுமா எனக்கேட்டேன். இதை அவர் செய்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவர்களை விடுவிக்க கொள்கையளவில் உடனடியாகவே சம்மதம் தெரிவித்தார். பின்னர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இப்போது எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்புக்காவலில் இல்லை. அதுபோலவே புனர்வாழ்வு அளிக்கப்படுவோரும் வகைரீதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: உங்களுக்கு உத்தியோக ரீதியான பதவி எதுவுமில்லை. ஆனால் குறித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வமல்லாத விசேடமான ஒருவகை பாத்திரம் வகிக்கின்றீர்கள் என நான் கருதுகிறேன். இதனால்தான் இந்த விடயங்களில் இணைந்து செயற்படவும் நல்லதொரு பாத்திரத்தை வகிக்கவும் உங்களால் முடிந்தது என நான் கருதுகிறேன்.

பதில்: ஆம். அது நான் NERDO வை உருவாக்கமுன். இப்போது இவ்வாறான விடயங்களில் நான் NERDO வை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

கேள்வி:அப்படியானால் அரசாங்கமே உண்மையில் பொறுப்பாகவிருந்து கொள்கைகளை தீர்மானித்து, அவற்றை செயற்படுத்தியது. ஆனால், ஆலோசகர் என்ற வகையில் ஒரு மேலதிகமான ஒரு பாத்திரத்தை நீங்கள் வகித்தீர்களா?

பதில்:அப்படியேதான். ஆம், அரசாங்கம்தான் அதை கையாண்டது. உதாரணமாக, முன்பு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு வழங்கப்படுவோர் புனர்வாழ்வு ஆனையாளர் நாயகத்தின் நிறுவகத்தின் கீழ் வந்தனர். இந்த விடயத்தில் மிகப்பொருத்தமான ஒருவரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது என்பதை நான் கூறியாக வேண்டும். இந்த வேலைக்கு மிகப் பொருத்தமானவர்தான் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க. பாதுகாப்பு வதிவிடப் புனர்வாழ்வு மையத்தில் (PARC) தங்கவைக்கப்பட்டிருப்போரின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே உண்டு.

கேள்வி:அப்படியானால் இந்த விடயங்களில் நீங்கள் நீங்கள் செய்தது என்ன அல்லது செய்து கொண்டிருப்பது என்ன?
பதில்: என்னிடம் ஒரு கருத்து அல்லது அபிப்பிராயம் கேட்கப்படும்போது நான் எனது ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். சில ஏற்கப்பட்டுள்ளன. வரையப்படும் திட்டங்கள் பற்றி கேட்கப்படும் போது நான் எனது அபிப்பிராயங்களை கூறுவேன். ஒரு பிரச்சினை அல்லது நியாயமான ஒரு வேண்டுகோள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் சம்பந்தப்பட்டால் நான் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடன் நேரடியாக அல்லது வேறுவழியில் தொடர்பு கொண்டு இதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். நானும் சில விடயங்களை முன்னெடுத்து ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். இந்த விடயங்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உத்தியோகத்தர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்த துரதிஷ்டசாலியான மக்களின் கதியையிட்டு நிறைந்த அனுதாபங்கொண்ட நேர்மையான ஆட்களாக உள்ளனர். இதனால் கருத்துகள் ஆலோசனைகளை அதிஉயர் அளவில் உள்வாங்குபவர்களாக உள்ளனர். இதனால் விடயங்களை செய்துகொள்ளுதல் ஒரு போதும் பெரிய பிரச்சினையாக இல்லை. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நாமும் உதவி செய்கின்றோம். அதிகமாக இது NERDO ஊடாகவே செய்யப்படுகின்றது.

கேள்வி:ஆனால் ஆட்களை விடுவிப்பதிலும் புனர்வாழ்வு அளிப்பதிலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறதே? ஏன்?
பதில்: நான் அங்கு அவதானித்ததிலிருந்து இந்த பிரச்சினைகளை வினைத்திறனுடனும் விரைவாகவும் தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் பக்கத்தில் நேர்மையான சிந்தனை உள்ளதை காண முடிகிறது. அவர்கள் இரண்டு விசாலாமான வகையினரை இனங்கண்டுள்ளனர். ஒரு வகையினர் ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இல் பல வருடங்களாக இருந்தவர்கள், கரும்புலி அல்லது தற்கொலைத்தாக்குதல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் என சந்தேகிக்கப் படுவர்களை உள்ளடக்கிய் பகுதியினர் ஆவர். இந்த வகையில் கிட்டத்தட்ட 1400 பேர் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏனையவர்கள் மென்பகுதியினர் என்ற வகையில் அடங்குவர். இவர்கள் எர்.ரீ.ரீ.ஈ உடன் சொற்பகாலம் அனுபவம் கொண்டவர்கள் அல்லது அண்மைக்காலத்தில் கட்டயாமாக சேர்க்கப்பட்டவர்கள் அல்லது வங்கி, பொலிஸ் , போன்ற எல்.ரீ.ரீ.ஈ இன் நிர்வாக தொழிற்பாட்டில் சம்பந்தபட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கை 11000க்கு மேல் உள்ளது. ஆனால் தற்போது 7000 -8000 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இது இவர்கள் ஒரு வகை ஒழுங்கில் விடுவிக்கப்பட்டதன் விளைவாகும்.

இவர்கள் ஒவ்வொருவரையும் கவனிப்பதற்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு தலா 400 ரூபா செலவு செய்கின்றது. அரசாங்கம் நிச்சயமாக இயன்றளவு விரைவில் இவர்களை விடுவித்து, செலவழிக்கப்படும் பணத்தை மீதப்படுத்தவே விரும்பும். ஆனால் நடைமுறைப்பிரச்சினை உள்ளது. நான் முன்னர் கூறியது போன்று உள்நோக்கம் கொண்ட சிலரால் விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கப்படலாம் என அரசாங்கம் பயப்படுகின்றது.

இதை தடுப்பதற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் எவரும் வேலையின்றியோ அல்லது எதுவும் செய்யாமல் சும்மாவோ வேலை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவது ஒரு வழியாகும். இதற்காகவே தொழில் திறன் செயற்றிட்டங்களை வகுத்து, இவர்களை பயிற்றுவித்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வர். இதனால்தான் மெதுவான முன்னேற்றம் காணப்படுகிறது.

கேள்வி: இருப்பினும் விடுவிப்பதற்கான ஒரு நாள் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லையை ஏன் வகுக்க முடியவில்லை?
பதில்: நான் ஏற்கனவே சொன்ன காரணங்களால்தான் இது நடக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் இந்த மென் பகுதியினர் ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பூரணமாக விடுவிக்கப்படுவர் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பதை நான் கட்டாயம் சொல்லவேண்டும். இந்த காலக்கெடுவை எதிர்கொள்ளும் வகையில் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நான் நினைக்கின்றேன்.

ஆனால், இந்த பிரச்சினை பற்றி வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். இவர்கள் விமர்சிப்பதை விட்டு விட்டு நிதி ரீதியாக உதவவேண்டும். முதலீடு செய்யவும் வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு பயிற்சியும் வேலையும் வழங்க இவர்கள் நிதி உதவி வழங்குவார்களாயின் இவர்களை விரைவில் விடுதலை செய்யலாம். வெறுமனே விமர்சிப்பதற்கு பதிலாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருப்பின் நிதி உதவி வழங்குவதன் மூலம் ஏன் விரைவான விடுப்புகளை உறுதி செய்யக்கூடாது. பாதுகாப்பு செயலாளர் இவர்களை இயன்றளவு விரைவில் விடுவிக்கவே விரும்புகிறார்கள் என்பதை எனது அனுபவத்திலிருந்து உறுதியாகக் கூறுகிறேன்.அவரை குறை கூறுவதற்கு பதிலாக ஏன் உதவி செய்து முயன்று பார்க்கக்கூடாது?

கேள்வி: பாதுகாப்புச் செயலரையும் உங்களையும் பற்றி வினவ அனுமதியுங்கள். நீங்கள் அவருடன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை தொடர்பு கொள்வீர்கள்?
பதில்:அது இப்படித்தான். நான் அவருக்கு ஏதாவது தகவல் வழங்க விரும்பினால், எம் இருவருக்கும் இடையில் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஊடாகத் தெரிவிப்பேன். அவரும் இதேபோலத்தான் செய்வார். இதைவிட, இடம்பெயர்ந்தோர், புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு நாம் நேரடியாகவும் சந்தித்துள்ளோம். அண்மைக்காலமாக நாங்கள் NERDO வை ஸ்தாபித்தன்பின் பாதுகாப்பு செயலாளர் அதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றார். ஒவ்வொரு வாரமும் எமது முன்னேற்றத்தைப்பற்றி அறிந்து கொள்வார். தேவையானால் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை நான் அணுகுவேன்.

கேள்வி: உங்கள் இதயம் தொட்ட விடயம் பற்றிப் பேசுவோம். NERDO பற்றி சொல்லுங்கள். அது எப்படி உருவானது? NERDO ஊடாக நீங்கள் என்ன செய்ய செய்ய எண்ணியுள்ளீர்கள்?
பதில்: முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பிரச்சினைகளை கையாள அரசு சார்பற்ற சமூகசேவை நிறுவனம் தேவை என நான் உணர்ந்தேன். இந்த நிறுவனம் அரச கட்டுப்பாடின்றி இயங்க முடியும். ஆனால், இந்த முயற்சிகள் தொடர்பில் அரசின் ஒட்டு மொத்தமான முயற்சிகளுடன் இணைந்து செயற்படலாம். அரசாங்க அதிகாரிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

எனவே சில ஆயத்தங்களை செய்யத் தொடங்கினோம். ஆனால் விடயங்கள் பெரிதாக நடக்கத் தொடங்கவில்லை. போதிய பணம் இன்மை ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலரின் ஒரு வாரகால சுற்றுப்பயணம் இவ்வருடம் ஜுனில் வந்தது.

கேள்வி: குறுக்கீடு செய்வதற்கு வருந்துகின்றேன். அந்த சுற்றுப்பயணம் எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டது?
பதில்: சில வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு வந்து பார்த்து நேரடியாகவே உண்மை நிலையை அறிந்துக் கொள்வதே இந்தத் திட்டம். முதலில் நாம் இந்த வருகை மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் யுத்த ஆண்டு நிறைவுடன் பொருந்தி வரவேண்டும் என நினைத்தோம். ஆனால், சில காரணங்களாலும் வெள்ள நிலைமை காரணமாகவும் இதை நாம் ஜு10ன் மாத்திற்கு ஒத்திவைக்க வேண்டியேற்பட்டது. முதலில் நாம் 20 பேருக்கு மேல் கொண்டுவர எண்ணியிருந்தோம். 22 பேரின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தோம். பயண ஒழுங்குகள் தொடர்பான காரணங்களால் தொகையை குறைப்பது நல்லது என கொழும்பிலிருந்து அதிகாரிகள் கருதினர். இதனால் இது 12 பேராக குறைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேர பிரச்சினைகள் காரணமாக 9 பேர் மட்டுமே வர முடிந்தது.

கேள்வி: ஆக, அது எப்படி நடந்தது? தயவு செய்து NERDO பற்றி மேலும் கூறுங்கள்?
பதில்: வெளிநாட்டில் வசிப்போரின் வருகை எமது திட்டங்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இங்கு வந்தவர்கள் இருந்த நிலைமை பற்றி நேரடி அனுபவம் பெற்றுக்கொண்டனர். ஒருவரைத் தவிர, மற்றைய யாவரும் உண்மை நிலைவரத்தை விளங்கிக் கொண்டனர். அவர்கள் NERDO இன் தேவையை உணர்ந்துக்கொண்டனர். சிலர் நன்கொடை வழங்கினர். பெரிய தொகையாக அது இல்லாதபோதும் அது விடயங்களை நகர்த்த போதுமானதாக இருந்தது. அரசாங்கம் அவர்களின் வருகைபற்றி திருப்தி அடைந்து NERDO வெற்றியாக வருவது சாத்தியம் என்பதை ஒத்துக்கொண்டது.

வடக்கு மீனவர் சங்கத்தின் சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் எஸ்.தவரத்தினம் உள்ளார். நான் NERDO இன் செயலாளர்.

கேள்வி: NERDO வின் செயற்பாடு அமைப்புப்பற்றி மேலும் கூறமுடியுமா?
பதில்: நல்லது. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இப்போது வளங்கள் மட்டுப்படுத்தப் பட்டவையாகவே உள்ளன. கரிசனை உள்ளவர்களிடமிருந்து நன்கொடை பெற விரும்புகிறோம். சில நிதிகள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன. வவுனியாவில் உள்ள எமது அலுவலகம் மிகவும் எளிமையானது. எமக்கு பெரிய கட்டிடங்களேர் அதிகளவு ஊழியர்களோ கட்டுப்படியாகாது. இங்கு இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒருவர் யாழ்ப்பாணத்தவர் , மற்றையவர் மலைநாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் அலுவலக வேலைகளை கவனிக்கின்றார். மற்றவர் கள உத்தியோகத்தர் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு பெண் தொண்டர் என்ற வகையில் தட்டெழுத்தாளராக இருக்கிறார். அவருக்கு சம்பளமாக ஒரு தொகை வழங்கப்படுகிறது.

சம்பளமின்றி பகுதிநேர அடிப்படையில் உதவிசெய்யும் சில தொண்டர்களும் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் எனக்கு தனிப்பட்ட முறையில் – எமது ஊரான மைலிட்டியை சேர்ந்தவர்கள் அல்லது காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரி என்பவற்றிலும் பழைய மாணவர்கள் என பலவகையிலும் தெரிந்தவர்கள். சிலர் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் என்னோடு படித்தவர்கள்.

இவர்களில் சிலர் பாடசாலை அதிபர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் , அல்லது வங்கி ஊழியர்களாவர். நான் 1981 இல் வெளிநாடு சென்றபின் இவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை என்பதை குறிப்பிடவேண்டும. நான் எல்.ரீ.ரீ.ஈ இல் இணைந்து வேலை செய்தபடியாலும் இவர்கள் இலங்கையில் இருந்த காரணத்தாலும் அவர்கள் பாதுகாப்பு கருதி நான் இவர்களுடன் தொடர்பாடலைத் தவிர்த்தேன்.

இப்போது இவர்கள் என்னோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சேவைகளை செய்ய முயல்கின்றனர். இதில் 25-30 பேர்வரையில் உள்ளனர். எமக்கு வினைத்திறன் மிக்க தொண்டர்கள் தேவை. எனவே இது படிப்படியாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன்.

கேள்வி: NERDO இது வரை செய்தது என்ன? உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
பதில்: எமது முதல்மாத முன்னேற்றம் கொஞ்சமானதே. கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒவ்வொன்றுக்கும் 15,000 ரூபா வீதம் தவணைப் பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதற்காக வழங்கினோம். மகாவித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு தமிழ் கலவன் பாடசாலை என்பனவாகும். இங்கு கே. புவனேஷ்வரன் என்னும் வலுக்குறைந்த இளைஞனுக்கு க.பொ.த.(உ.த) பரீட்சைக்கு சென்றுவர உதவியாக 5,000 ரூபா கொடுத்தோம்.

இதைவிட க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தயாராகும் புனர்வாழ்வு அளிக்கப்படும் 358 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் பணிஸும் தேநீரும் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு இவ்வாறு செய்யப்படும். இதுபோல க.பொ.த (சா.த) பரீட்சை எழுதப்போகும் 119 பிள்ளைகளுக்கும் சில ஆசிரியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பணிஸும் தேநீரும் வழங்குவதற்கான செலவு 450, 000 ரூபாவினை NERDO முழுமையாக செலுத்திவிட்டது.

கேள்வி: ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் சில ஊடக அமைப்புகள் NERDO வை விமர்சிக்கின்றன. இது அரசாங்கம் செய்யவேண்டிய வேலை. இதை நீங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறுகின்றன.

பதில்: இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கு உண்மைநிலை வேறாக உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த பிரிவினர் போலன்றி நாம் அரசாங்கத்தை தாக்குவதோ அல்லது குறைகளை குத்திக்காட்டிக் கொண்டோ இருப்பதில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர் போலன்றி இங்கு அடிமட்டத்தில் வேலை செய்யும் நாம் அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக உள்ளோம்.

இது “நாங்களும் அவர்களும்” என்ற மாதிரி இல்லை. இது “நாங்கள்’” என்னும் நிலைமையாகும். இங்கு அரசாங்கமும் நாமும் ஒற்றுமையாக எமது மக்களுக்கு உதவுவதற்காக எம்மாலானதை அதி சிறப்பாக செய்யவேண்டும். அரசாங்கத்துக்கும் சிலவிடயங்களால் நிதித்தட்டுப்பாடு உள்ளது. அப்படியானால் சும்மா குந்திக்கொண்டிருந்து, அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா?

இப்படிக் கதைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நினைத்திருந்தால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி புனர்வாழ்வு அளிக்கப்படும் பிள்ளைகளை க.பொ.த( உ.த) பரீட்சைக்கு தோற்றாவிடாமல் தடுத்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

கஷ்டங்கள் இருந்தப்போதும் சோதனைகளை எழுத ஒழுங்கு செய்தார்கள். உணவு வழங்கினார்கள். போக்குவரத்து ஏற்பாடு செய்தார்கள். ஆட்களையும் வழங்கினார்கள். அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனமொன்று கற்றல் சாதனங்களையும் மேலதிக ஆசிரியருக்கான செலவையும் எழுதுகருவிகளையும் கொடுத்துதவியது. நாம் இதற்கான ஒழுங்குகளை தளத்திலிருந்து மேற்கொண்டோம். பின்பு NERDO விலிருந்து நாம் பணிஸும் தேநீரும் வழங்கி உதவினோம்.

எனவே, இது அரசாங்கம், அவுஸ்திரேலிய NGO, புலம்பெயர்ந்த ஆகிய மூன்று பகுதியினர்களுக்கு உதவ மேற்கொண்ட கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கம் சிரமத்திலும் செலவிலும் பெரும் பங்கை தாங்கிக் கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் இப்படியான மடத்தனமான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி: புலம்பெயர்ந்தவரின் எதிர்கால செயற்றிட்டங்கள் எவை?
பதில்: ஆம்; எம்மிடம் நிறைய திட்டங்கள் உண்டு. அவற்றை செயற்படுத்துவதை நோக்கி வேலை செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் மேலும் இரண்டு அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வவுனியா, மன்னார் வீதியில் அன்பு இல்லம் என அழைக்கப்படும் வீடு ஒன்றை அமைப்பது திட்டமிடப்பட்டுகின்ற குறிப்பான ஒரு செயற்றிட்டமாகும். போரினால் அநாதைகளாகிய பிள்ளைகளுக்கும் கை, கால், கண் இழந்தோருக்கும் கவனிக்க யாருமே இல்லாத மிகவும் வயதுபோனவர்களுக்கும் பாதுகாப்பான வதிவிடம் வழங்க விரும்புகிறோம். ஏற்கெனவே கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் கத்தோலிக்க கன்னியாஸ்த்திரி ஒருவர் 40 பேரைக் கொண்ட இவ்வாறான இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு உதவி செய்ய சிங்கள கத்தோலிக்க கன்னியாஸ்த்திரிகள் குழுக்களாக வருகின்றனர். நாம் இந்த அருட் சகோதரியுடன் இணைந்து NERDO இன் உதவியுடன் அவரது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் சில இடம்பெயர்ந்தோருக்கும் கூட விஞ்ஞான முறையிலான விவசாயத்தை கற்பிக்கவும் கடைப்பிடிக்கவுமாக 200 ஏக்கர் அளவியல் மாதிரிப் பண்ணை ஒன்றை அமைப்பதும் எமது இன்னொரு திட்டமாகும். கை கால் இல்லாதவர்களையும் வறுமையில் வாழும் வயோதிபர் ஆகியோரையும் பெருமளவில் கொண்ட வவுனியா நகரத்திலிருந்து 25 மைல் தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றையும் நாம் இனங்கண்டுள்ளோம். சமுதாயமைய திட்டமாக இந்த கிராமத்தை வேலை வாய்ப்பும் கவணிப்பும் வழங்கும் மாதிரிக் கிராமமாக உருவாக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

இன்னொரு திட்டம் அம்புலன்ஸ் சேவை ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். இலண்டனில் உள்ள ஒரு நலன்விரும்பி ஒரு அம்புலன்ஸ் வாகனம் வழங்க சம்மதித்துள்ளார். இதை நாம் கிளிநொச்சியிலிருந்து இயக்குவோம்.

கேள்வி : இப்படி குறிப்பான செயற்றிட்டங்கள் தவிர விரிந்த அளவில் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி பெருந்திட்டங்களை அமுலாக்கும் எண்ணம் உங்களிடம் உண்டா?
பதில்: ஆம் எமக்கு அந்த எண்ணம் உண்டு. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழாரான ஒரு அறிஞர் ஒருவர் எமது மீன்பிடித்துறையை மீட்டெடுக்கவும் கட்டியெழுப்பவும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்துள்ளார். மீன்பிடித்துறை யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கரையோர மீன்பிடித் தொழில் புனருத்தாரண நிகழ்ச்சித்திட்டம் என பெயரிடப்பட்ட ஒரு குறுகியகால செயற்திட்டத்தை Nநுசுனுழு வகுத்துள்ளது. தற்போதுள்ள மீளாய்வு வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி உபகரணங்களை வழங்குவதும் இதனுள் அடங்குகிறது. சரியாக அமுலாக்கப்பட்டால் 3300 குடும்பங்களுக்கு இது முழு வேலைவாய்ப்பை வழங்கும்.

விவசாயம் பால்பண்ணை விலங்கு வளர்ப்பு துறைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒரு அறிஞர் ஏற்கனவே விவசாயத்துக்கான பெருந்திட்டம் ஒன்றை வகுப்பதிலும் செலவை மதிப்பீடு செய்வதிலும் ஈடுப்பட்டுள்ளனர். பால்பண்ணை, விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி திட்டமொன்றை உருவாக்க இன்னொரு அறிஞர் விரைவில் வருவார்.

எமது இன்னொரு திட்டம் தொழில்திறன் கல்வி, தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றை வழங்கும் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். ஆரம்பத்தில் முன்னாள் புலி உறுப்பினராக இருந்து, புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு குறுகிய பாடநெறிகள் மோட்டார் பொறிமுறை குழாய் பொருத்துதல் இலத்திரனியல் தரைத்தோற்றக்கலை என பல துறைகளையும் நாம் இந்த குறுகிய கால பாடநெறித் தராதரப் பத்திரங்களை பெறுவோருக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் தேவையெனில் உயர்கல்வியை தொடரவும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எண்ணுகிறோம். இறுதியாக இதை நாம் முழுவசதிகொண்ட தொழில்நுட்பக் கல்லூரியாக விருத்தி செய்ய விரும்புகின்றோம்.

அடுத்த எமது திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலாசார நிகழ்வுகளை தொடராக நடத்துவதாகும். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னைநாள் புலி உறுப்பினர்களே இதில் பங்குப்பெறுவர்.

பிரபலமான சிங்கள திரைப்பட நடிகை அனோஜா வீரசிங்க 60 புனர்வாழ்வு அளிக்கப்படும் புலி உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றார். அவரது அர்ப்பணிப்பு என்னைக் கவர்ந்தது. எமது பிரபலமான பாடகர்களில் ஒருவாரான சாந்தன் இரண்டு பிள்ளைகளுடன் தடுப்பில் உள்ளார். இவர்கள் உழைப்பை ஒன்று சேர்த்து முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கி சமாதானம் நல்லெண்ணம் பற்றிய செய்தியை பரப்பும் வகையில் கலைவிழாக்களை நடத்தத் திட்டமிடுகின்றோம்.

கேள்வி: இந்த விடயங்களில் அரசாங்கம் எங்கு வருகிறது?
பதில்: நான் முன்பு கூறியது போல நாம் சுயாதீனமாக வேலை செய்வோம். ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக இருப்போம். அரசின் ஆதரவு அல்லது அனுமதியின்றி வடக்கு கிழக்கில் அல்லது இலங்கையின் எந்த பகுதியிலும் எவரும் தொழிற்முடியாது என்பதுதான் இன்றைய நிலை. வடக்கு கிழக்கில் எமக்கு ஆயுதப்படைகளின் முழு ஆதரவும் தேவை இதுவே யதார்த்தமாக இருக்கும்போது எமது சுயாதீனத்தை தக்கவைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் ஒத்திசைவாக வேலை செய்ய வேண்டும்.

அரசாங்கம் NERDO வைப் பிரச்சினை அல்லாத ஒன்றாகவே பார்க்கின்றது. அரசாங்கம் இதற்கு உதவி கொடுக்கும். தொடர்பாடலுக்கு அனுமதிக்கும். உதாரணமாக, மாதிரிப்பண்ணை அமைக்க அரசாங்கம் எமக்கு நிலம் தரும். அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களுடன் முடியுமானபோது இணைந்து கொள்ளவும் உதவி பெறவும் NERDO எண்ணுகின்றது.

கேள்வி: உங்கள் திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப் படுத்த உங்களிடம் வளங்கள் உண்டா?
பதில்: இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நாம் ஆரம்ப விருத்தி நிலையில் உள்ளோம். முதலில் அபிவிருத்தியை பொறுத்தவரையில் எமது மக்கள் பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டனர் என்பதை அங்கீகரிப்பதற்கு தாமும் யாதார்த்த பூர்வமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வடக்கில் புகையிரதப்பாதை இல்லை.

எமது சமுதாயம் எமது கல்விப் பாரம்பரியம் பற்றி பெருமைப்பட்டு கொண்டிருந்தது. இன்று எமது பாடசாலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகள் மரத்தின் கீழ் குந்தியிருந்து படிக்கின்றனர். பிள்ளைகளில் பலர் வறுமை காரணமாகவும் சீருடை, காலணி, பாடப்புத்தகம் என்பன இல்லாததாலும் பாடசாலை செல்வதில்லை. நாம் இந்த நிலைமை பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.

எமது திட்டங்கள் செயலாக வரத்தொடங்கி மக்கள் எம்மைப்பற்றி அறியவரும்போது வெளிநாட்டிலுள்ள எமது தமிழ் உறவுகளிடமிருந்து பெருமளவு உதவியையும் அனுசரணையையும் பெறுவோம் என நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சில தகுதிவாய்ந்த வெளிநாட்டில் வாழ்வோர் இங்கு வந்து தமது கல்விசார்ந்த, வாண்மை சார்ந்த நிபுணத்துவத்தை கொண்டு அடிப்படையில் வழங்கச் சம்மதித்துள்ளனர். சிலர் விசேட செயற்றிட்டங்களுக்கு நிதி வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர். NERDO எமது மக்களின் உதவியுடன் படிப்படியாக நன்றாக இயங்கும் என நம்பிக்கையோடு உள்ளேன்.

கேள்வி: ஊடகங்களுடன் நிறையத் தொடர்புள்ள வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் தமது கருத்தை அழுத்திப் பேசவல்ல. ஒரு பகுதியினர் உங்களுக்கும் NERDO வுக்கும் எதிராக நச்சுத்தனமான பிரசாரம் ஒன்றை செய்துக்கொண்டிருக்கின்றனர். உங்களை அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் NERDO என்பது வெளிநாட்டிலிருந்து தமிழ் மக்களின் பணத்தை வரவழைத்து அரசாங்கத்தின் கஜனாவில் சேர்ப்பதற்கான ஒரு தந்திரம் என்றும் குற்றஞ் சாட்டுகின்றனர். இப்படியான பாதகமான நிலைமையில் நீங்கள் வெற்றி பெறலாம் என நம்புவது எப்படி?

பதில்: ஆம். இப்போதுள்ள நிலைமை பற்றி நீங்கள் கூறுவது சரியே. ஆனால். இது ஒரு தற்காலிகமான நிலைமை என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த எதிரான பிரசாரத்தை அவிழ்த்துவிட்டுள்ள பகுதியினர் சிறுபான்மையினரரே. ஆனால் நீங்கள் கூறியதுபோல் வெளிநாட்டுகளில் இவர்களுக்கு ஊடகங்கள் மீது கிட்டத்தட்ட தனியாதிக்கம் உண்டு. இதனால் இவர்களின் உண்மைப் பலத்தைவிட கூடுதலாக இவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் சிறுபான்மையினரே. இவர்களது பிரசாரம் பொய்களிலும் தவறான வழிகளிலும் தங்கியுள்ளது.

நான் நம்பிக்கை வைத்திருப்பதும் தங்கியிருப்பதும் சத்தியம் மீதுதான். முதலில் எமது வலையமைப்பில் எமது செயற்றிட்டங்கள் பற்றியும் செலவுகளையும் இ கிடைத்தபணமஇ; செலவு செய்த பணம் என்பவற்றின் கணக்கறிக்கைகயையும் விரிவாக அவர்களது நேர்மையான விசாரணைகளுக்கும் பதிலளிப்போம். நாம் இந்த விடயங்களில் திறந்த தன்மையுடன் வெளிப்படையாக உள்ளோம் என மக்கள் மேலும் மேலும் அறியவரும்போது இந்த பொய்ப்பிரசாரம் நிலைத்து நிற்கமுடியாது போகும்.

இரண்டாவதாக, எமது ஆதரவையும் உதவிகளையும் பெற்றக்கொண்டவர்கள் உண்மை நிலைமைப்பற்றி வெளிநாட்டில் வாழும் தமது உறவினரருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு உள்ளோம். அவர்கள் நேரடியாகவே விடயங்களை அவதானிக்கவும் தமது சொந்த முடிவுக்கு வரவும் உதவ தயாராகவுள்ளோம். எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எம்மோடு தொடர்பு கொண்டால் வடக்கு கிழக்குக்கு பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவி செய்யவும் NERDO தயாராகவுள்ளது. தேவையெனில் NERDO வின் பிரதிநிதி ஒருவகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கலாம் எனவும் யோசிக்கின்றோம்.

ஆகவே, படிப்படியாக உண்மை வெல்லும் NERDO வெற்றியடையும்.

கேள்வி: நீங்கள் எப்போதும் நன்மையே நடக்கும் என எண்ணுபவர் என நான் காண்கிறேன். நீங்கள் சில புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களுடனான ஒரு சந்திப்பின்போது நம்பிக்கைதான் வாழ்க்கை என கூறும் காட்சியை வீடியோ துண்டம் ஒன்றில் பார்த்தேன். நான் உங்கள் மனோநிலையை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பயமுறுத்தும் தடைகளையும் மீறி உங்களால் வெற்றியடைய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: பிரபாகரன் என்னிடம் வெளிநாட்டு கொள்வனவு (ஆயுதம் வாங்குதல்) பொறுப்பை 1983 இல் தந்தபோது நான் ஒரு கற்றுக்குட்டியாக இருந்தேன். நான் மிகவும் சாதாரண பின்னணி யிலிருந்து வந்தவன். எனது தந்தை அரசியல்ரீதியாக விளக்கமுடையவராக இருந்தார். ஆனால் அவர் ஒரு சாதாரண மீனவராக இருந்தார். நான் உயர் குழாத்தினர் படிக்கும் பாடசாலைகளில் கல்வி பெறவில்லை. எனது ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. நான் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே எங்கும் போயிருக்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ ஆயுத வியாபாரத்தில் முக்கியமான எவரையும் அறிந்திருந்த அனுபவமில்லாத இயக்கமாக இருந்தது.

ஆயினும் நான் எனது பகுதியை மெதுவாகவும் நிதானமாகவும் விருத்தி செய்தேன். நாங்கள் ஆயுதங்களை பல்வேறுப்பட்ட மூலங்களிலிருந்து உலகளாவிய ரீதியில் கொள்வனவு செய்து வடக்கு கிழக்கில் கப்பலில் ஒழுங்கு தவறாமல் அனுப்புமளான நிலைமைக்கு எல்.ரீ.ரீ.ஈ இன் சக்தியை வளர்த்தேன். நான் வெளிநாட்டில் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் வரையில் எல்.ரீ.ரீ.ஈயால் யுத்தத்தை வெற்றிகரமாக நீடிக்க முடிந்தது. என்னால் ஆயுதங்களை தொடர்ச்சியாக வாங்கக் கூடியதாக இருந்ததே இதற்கான காரணம்.

சாவையும் அழிவையும் கொண்டுவந்த ஒரு கடமைப் பொறுப்பில் அப்போது என்னால் வெற்றி பெறக் கூடியதாக இருந்தது என்றால் முன்னர் போலல்லாது மக்களையும் வாழ்க்கையையும் அழிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதுமான இலக்கை கொண்ட இந்தப் புதிய கடைமைப் பொறுப்பில் ஏன் என்னால் வெற்றியடைய முடியாது?

கேள்வி: நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டுமென இதைக் கூறவில்லை. அத்துடன் உங்கள் ஆற்றலையும் விசேட திறமையையும் நான் மறுத்துரைக்கவும் இல்லை. ஆனால் இங்குள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் தடுப்புக் காவலில் இருக்கிறீர்கள். சுதந்திர மனிதனாக இல்லை. முன்பு போலன்றி விடயங்களை செய்வதற்கு உங்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. அதோடு உங்களுக்கு வயது போய்விட்டது. நல்ல ஆரோக்கியத்துடனும் இல்லை. அத்துடன் உங்களுக்கெதிராக அதிதீவிர அமுக்கக் குழு ஒன்று கடுமையாக வேலை செய்கின்றது. இதனால்தான் நான் சந்தேகப்படுகிறேன்.

பதில்: ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் வெற்றிப்பெறுவேன் என நினைக்கின்றேன். ஆம், தடுத்து வைத்திருக்கப்பட்டிருப்பதும் காரியங்களை நேரில் போய் செய்வதற்கு பதிலாக தொலைபேசி, ஸ்கைப், இணையம் என்பவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதும் விரக்தியடையச் செய்யும்தான். ஆனால் நான் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். நான் தடுப்புக்காவலில் இருக்கக்கூடும். ஆனால் குறைந்த்பட்சம் மக்களுக்காக சிலவற்றை செய்யும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என நினைப்பதுண்டு.

என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய பொறுப்பும் வாய்ப்பும் ஆகும். முதலாவதுதான் பிரபாகரனால் ஆயுதக்கொள்வனவு செய்ய நியமிக்கப்பட்டது. நான் அதில் வெற்றிப்பெற்றேன். இரண்டாவது பொறுப்பு நான் மீண்டும் இயக்கத்தில் இணைந்தபோது யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவதும் தலைமையையும் இயக்கத்தையும் காப்பாற்றுவதாகவும் இருந்தது. நான் அதில் தோல்வி அடைந்தேன்.

இப்போது இது எனது மூன்றாவது பெரிய கடமைப் பொறுப்பு. இதில் எனது நோக்கமும் தூரநோக்கும் மக்களுக்கு உதவுவதாக உள்ளது. நான் ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வழங்கவோ அல்லது அதை காப்பாற்ற முயலவோ இல்லை. இந்த முறை நான் மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கு உதவுகின்ற உயர்ந்த பெறுமதிமிக்க பொறுப்பில் இருக்கிறேன். எனவே நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கேள்வி: மக்களுக்கு உதவும் உங்கள் இலட்சியத்தில் தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் நீங்கள் ஈடுபடும் வகையில் உங்களை விடுவிக்கும்படி நீங்கள் ஏன் வேண்டுகோள் ஒன்றை விடுக்கக் கூடாது?

பதில்: இரண்டு காரணங்களால் நான் இப்படியான வேண்டுகோளை விடுக்க மாட்டேன். முதலாவதாக ஆயிரக் கணக்கான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. நிலைவரம் முன்னேற்றம் கண்டு முன்னாள் உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்பட்டு அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படும் நிலைமை வரும்போது நானும் சுதந்திரமாக இருப்பது பற்றி யோசிக்க முடியும்.

அடுத்த காரணம், இப்படி செய்வது அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே அரசாங்கம், குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் என் காரணமாக எதிரக்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். இதை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்து எல்.ரீ.ரீ.ஈ பற்றி முழுதான ஒரு கொள்ளைத் தீர்மானத்தை எடுப்பார். எனது கதி என்னவாகும் என்பதை நான் அறியேன். அதுவரை இந்த நிலைமையில் கீழ் எது முடியுமோ அதை நான் செய்வேன்.

ஒரு நன்மையான விடயம் என்னவென்றால் அர்ப்பணிப்பு உள்ள ஒரு அணி NERDO வைச் சுற்றி மெதுவாக உருவாகின்றது. எனவே எனது நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் இந்த அணி உற்சாகமாக வேலை செய்யும். ஆனால் இயலுமாயின் என்னை வவுனியாவில் நிலைப்படுத்தும்படி நான் கேட்டிருக்கிறேன்.

கேள்வி: அரசாங்கம் உங்களை பயன்படுத்திக் கொள்கின்றது உங்களை பின்னர் தட்டிக் கழித்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: நான் நம்பிக்கையில் விசுவாசத்தில் நல்லெண்ணத்தில் வேலை செய்கின்றேன். நான் அப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், விவாதத்திற்காக அப்படி நடக்கும் என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட குறைந்தப்பட்சம் இப்போது நான் செய்வது போன்று சிலருக்கு உதவி செய்வதில் வெற்றிக் கண்டிருப்பேன். அது எனக்கு போதும்.

கேள்வி: மறுபுறத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவதுபற்றி பல தமிழ் அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளனர். அப்படியான எண்ணம் ஏதும்?
பதில்: இல்லை. இயலுமாக இருந்தாலும்கூட நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலை நடத்தட்டும். நான் செய்ய விரும்புவதெல்லாம், புனர்வாழ்வு வழங்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களினதும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரினதும் நலன்களை கவனிப்பதையே. இப்போது எமது மக்களுக்கு தேவையாயிருப்பது அரசியல்வாதிகள் அல்ல. மாறாக மனித நேயர்களே.

கேள்வி: NERDO வடக்கு கிழக்கில் உள்ள சகல மக்களுக்காகவும் உழைக்குமா?
பதில்: அதுதான் எனது நீண்டகால நோக்காக உள்ளது. ஆனால் இப்போதைக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்தோர் மீது மட்டும் எமது கவனத்தைக் குவிப்போம்.

கேள்வி: நாம் நீண்ட நேரம் பேசிவிட்டோம். இன்னும் பேச வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. இன்னொரு நேரத்தில் பேசக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் முடிக்கும்முன் நீங்கள் இலங்கையருக்கென பொதுவாகவும் தமிழருக்கெனப் குறிப்பாகவும் சொல்ல விரும்பும் செய்தி உண்டா?

பதில்: தொலைதூரத்திலிருக்கும் கனடாவிலிருந்து தொலைபேசிமூலம் இந்த உரையாடலை நடத்தியதற்கு நன்றி. இதை நாம் விரைவில் மீண்டும் செய்யவேண்டும். அப்போது NERDO எவ்வளவு சாதித்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்லக் கூடியதாக இருக்கும்.

ஆம். என்னிடம் இரண்டு செய்திகள் உள்ளன. முதலாவது எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்: போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மாற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை.

இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.

கேள்வி: இந்த உரையாடலுக்கு நன்றி. உங்கள் நல்ல நோக்கங்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன். தனிப்பட்ட மீட்சிக்கான உங்கள் பயணமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் சேரிடத்தை அடைவீர்கள் என நான் நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

பதில்: உங்கள் வாழ்த்துக்களுக்கும் நேர்காணலுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.

டி.பி.எஸ் ஜெயராஜ் கூறுகிறார்:

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்த நேர்காணலின் மூன்றாம் பாகத்தில் இரண்டு தவறுகள் நேர்ந்து விட்டன.

முதலாவது. பிரபாகரனின் குடும்பத்தை காப்பாற்றும் பிழைத்துப்போன திட்டத்தின் செலவு பற்றியது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. அது உண்மையில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகவிருந்தது.

இரண்டாவது தவறு முன்னால் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசனுடன் தொடர்பு கொண்டிருந்த மகேந்திரன் என அழைக்கப்படும் தமிழ் நாட்டு அரசியல்வாதியொருவர் பற்றிக் கூறும்போதும் ஏற்பட்டதாகும்.

இங்கு குறிப்பிடப்பட்ட மகேந்திரன் தமிழ்நாடு மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் சி.மகேந்திரன் ஆவார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) இன் அல்லது (CPI-M) இன் தமிழ்நாடு சட்ட சபை உறுப்பினர் கே. மகேந்திரன் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. இரண்டு தவறுகளுக்கும் வருந்துகிறோம்.

(தமிழில்: ந. கிருஷ்ணராசா)

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanNediyavan_Sivaparan_Perinbanayakamவிடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி: பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் ஹெலிகொப்ரர் மூலம் காப்பாற்றும் உங்கள் திட்டத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? ஏன் அது செயற்படவில்லை?
பதில்: அது மிகவும் துயரமான கதை. பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப் படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம். பிரபாகரன் விரும்பினால் சார்ள்ஸ் அன்ரனியை தவிர  குடும்பத்தின் ஏனையோர் வெளியே கொண்டுவரப்படுவர். தலைவருக்கு விருப்பமில்லையென்றால்  அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் சிரேஷ்ட தலைவர்களும்  ஹெலிகொப்டரர் மூலம் இலங்கையில் ஒரு குறித்த காட்டுப் பகுதியில் இறக்கப்படுவர். அதன்பின் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இன்னும் ஒரு சிலர் ஆகியோரை கப்பலுக்கு ஹெலிகொப்ரர்  கொண்டு செல்லும். நான் கப்பலில் இவர்களுக்காக காத்திருந்திருப்பேன். பின்னர் இந்த குடும்பத்தை மூன்று நாடுகளில் ஒன்றில்,  சில சமயம் சுழற்சி முறையில் வைத்திருக்க எண்ணினேன்.

கேள்வி: இந்த நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனவா? இவை மேற்கத்தைய நாடுகளா?
பதில்: இல்லை. அவை மேற்கத்தைய நாடுகள் இல்லை. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாடுகள்; ஒன்று ஆசிய நாடு. எனது பிரதிநிதிகள் மூலம் இந்த நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். இதைப்பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கேள்வி: இந்தத் திட்டம் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததே? இது வெற்றிபெறும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?
பதில்: ஆம். ஆபத்துமிருந்ததுதான். ஆனால் நான் அதை முன்னெடுக்க தயாராகவிருந்தேன். இந்த ஆபத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கவில்லையென்றால் அடுத்தது மரணம்தான். பிரபாகரன் கடைசி நிமிடத்தில் வெளியேவர சம்மதிக்கலாம் என்ற இரகசியமான எண்ணம் எனக்கிருந்தது. இதனால்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். எதிர்பாராத செயற்பாடு என்பதே முக்கியம். முதல் கட்டம் வெற்றி பெற்றால் வேறு ஆட்களையும் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.

கேள்வி: அப்படியானால் எங்கு பிழை நடந்தது?
பதில்: அது ஒருபோதும் நினைத்த மாதிரி இருக்கவில்லை. அந்த திட்டத்தை செயற்படுத்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. என்னிடமோ அவ்வளவு பணம் இல்லை. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப் பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து  கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார்.  அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ  விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.

மே மாதத்தின் நடுப்பகுதியில்  இலங்கை இராணுவம் மும்முனைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. அதன்போது வலைஞர்மடம் – முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பகுதிகளை முற்றுகை அரணுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சி சாத்தியமற்றுப்போனது. பெரும் சோகத்துடன் நான் அந்த திட்டத்தை கைவிட்டேன். நெடியவன், காஸ்ட்ரோ ஆகியோர் மீது நான் பெரும் சினங்கொண்டேன். ஆனால் எதுவுமே செய்யமுடியாத நிலை.

கேள்வி: சில நாட்களுக்குள் எல்லோரும் இறந்துவிட்டனரா?
பதில்: ஆம். அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது.  பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை  என்பார். நான் அவனுடன் கதைப்பேன். பின்னாளில் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நான் இன்னும் அவன் நினைவாகவே உள்ளேன். சண்டை உரத்து ஷெல் வீச்சு அதிகரித்தபோது அவன் பயந்து போயிருந்தான். பின்னர் சாள்ஸ் வான்வழியே தப்புவதற்கான ஒழுங்கை மேற்கொள்ளும்படி என்னை கேட்டிருந்தபோது பயப்படாமல் இருக்கும்படியும் விரைவில் கேபி மாமாவிடம் போய்விடுவாய் என்றும் கூறப்பட்டது. இந்த சின்னப்பையன் தனது பொருட்களில் சிலவற்றை பையொன்றில் போட்டு போகுமிடமெல்லாம் கொண்டு திரிந்தான். நான் கேபி மாமாட்ட போறன் என்று கூறுவானாம். சில சமயம் பாலச்சந்திரன் பையை வைத்துக்கொண்டு தான் கே.பி மாமாவுடன் போகப்போவதாக ஆட்களுக்கு கூறிக்கொண்டு நடக்கப்போகாத காப்பாற்றும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை எனது மனத்திரையில் காண்பேன். இப்படி நினைக்கும் போது நான் பெருங்கவலைப்படுவேன். திட்டத்தை செயற்படுத்தாது குழப்பிய நெடியவன் மீது கோபங்கோபமாக வரும்.

கேள்வி: ஏன் அவர் அப்படிச் செய்தார்?
பதில்:  எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இது காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நடந்திருக்கலாம். கே.பிக்கு இந்த பெருமை கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல் காணப்பட்ட பிழையின் வெளிப்பாடுதான், தனிநபர்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான பொறாமைகள், பிரிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தையும் போராட்டத்தையும் கெடுத்துக்கொண்டனர்.

கேள்வி: முழுக்குடும்பமுமே கொல்லப்பட்டுவிட்டது என உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், மதிவதனி உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சில பகுதியினராலும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் கதைகள் பரப்பப்பட்டுள்ளனவே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
பதில்: இப்படியான கதைகள் சிலரது சுயநலனுக்காகப் பரப்பப்படுகின்றன. மற்றும் சிலர் இப்படி நடந்து விட்டதை ஏற்க மனமில்லாமல் இந்த கதைகளை நம்புகின்றனர்.

கேள்வி: இதுப பற்றி நேரடியாகக் கண்டக் சாட்சிகள் உங்களிடம் இல்லையல்லவா?பதில்:  உண்மைதான். கடைசிக் கட்டம்வரை  நான் சூசையுடன் தொடர்பிலிருந்தேன். இது பற்றி நான்  உத்தியோக பூர்வமான மூலங்களிலிருந்தும் கேள்விப்பட்டுள்ளேன். முக்கியமாக நான் பிரபாகரனின் உடலை ரிவியில் பார்த்தேன்.

கேள்வி: அது அவர்களது உடல் அல்ல என இவர்கள் கூறி மறுக்கின்றனரே?
பதில்: முழு முட்டாள்தனமான கதை. ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன்  பழையதை நினைத்து அழுதேன்.

கேள்வி: இந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றீர்கள். பிரபாகரனின் மரணம் பற்றி செய்திகள் வந்தபோது அவர் மரணிக்கவில்லையென்றும் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளதாகவும் நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் மறுப்புரையை வாபஸ் பெற்றீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை பெரிதும் சிதறிப்போனது. இது உங்களை விமர்சிப்பவர்களுக்கு நல்ல ஆயுதமாயிற்று. ஏன் இந்த தடுமாற்றம்? விளக்கமுடியுமா?
பதில்: ஆம். இதற்கான விளக்கத்தை தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நடந்தது இதுதான். பிரபாகரன் பொட்டம்மான் மற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் வழியாக அதன் கரையூடாக வெளியேறினர். வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் சென்றனர். காட்டுக்குள் போய்ச் சேர்வதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.முற்றுகையிடப்பட்ட பகுதியைச் சுற்றி மூன்று அடுக்குகளாக படைவீரர்கள் நிற்பதனை முன்னைய உளவுபார்ப்புகள் கண்டறிந்திருந்தன. என்னோடு தொடர்பிலிருந்த சூசை, பிரபாவும் பொட்டுவும் மூன்று அடுக்கு காவலையும் தாண்டி சென்றுவிட்டதாக எனக்கு அறிவித்தார். இதன் பின்  பிரபாகரன் குழுவுடன் தொடர்பேதும் கிடைக்கவில்லை. எனவே நானும் சூசையும் தலைவர் பாதுகாப்பான இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்பு சாதனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருதினோம்.

இதன் பின்னரே எமது ஆயுதங்களை மௌனிப்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டேன். இதை நான் சூசையுடன் பேசிய பின்னர்தான் செய்தேன். சமாதான முன்னெடுப்புகளை விரைவுப்படுத்தவும் எஞ்சியுள்ளோரை காப்பாற்றவும் ஒரு அத்திவாரம் இடும் வகையில்தான் நான் அறிக்கையை வெளியிட்டேன்.  வேறு ஒரு இடத்திலிருந்த நடேசனும் புலித்தேவனும் கூட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர். பிரபாகரன் இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்களை கடந்து சென்றுவிட்டார் என முதலில் எனக்கு கிடைத்த தகவல்தான் அவர் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டார் என நம்பவைத்தது. இந்த நம்பிக்கைதான் பிரபாகரன் இறந்ததுவிட்டார் என்ற செய்தியை மறுக்கவும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் கூறவைத்தது. அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற முதலாவது ஊடக அறிக்கை அம்புலன்ஸில் தப்பிப்போகும் முயற்சியுடன் தொடர்பாக வெளிவந்தது. ஆனால் அந்த அறிக்கை தவறானது. பிரபாகரன் அம்புலன்ஸ் எதிலும் இருக்கவில்லை.

சூசையுடன் நான் தொடர்பை இழப்பதற்கு சற்று முன் பிரபாகரனால் முற்றுகையை தாண்ட முடியவில்லை. அவர் திரும்பிவந்துவிட்டார் என பதறி சூசை என்னை திகைப்படைய செய்தார். பிரபாகரன் இருந்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே தான் நின்றதாக கூறினார். இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்குகளை தாண்டும் முயற்சி சரிவரவில்லை என்றும் பொட்டம்மான் இன்றி பிரபாகரன் தனியே திரும்பிவிட்டதாக சூசை கூறினார். சண்டை கடூரமாக நடக்கின்றது என்பதற்கு மேலாக எந்த தகவலையும் அவரால் தரமுடியவில்லை. சிறிது நேரத்தின்பின் நான் சூசையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்.

சிறிது நேரத்தின்பின் தொலைக்காட்சியில் பிரபாகரனது உடலை பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால். பிரபாகரனின் இறப்பை மறுத்த முதலாவது அறிக்கை பின்னர் அதை உறுதி செய்து விடப்பட்ட அறிக்கை எல்லாமே நேர்மையாக விடுவிக்கப்பட்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரையும் பிழையாக வழிப்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அந்த அறிக்கைகள் அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் என்னால் விடுக்கப்பட்டவை. சண்டை தொடர்ந்து கொண்டிருந்ததது. தொடர்பாடல் கஷ்டமாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நிலைமைகள் பற்றி மக்கள் தவறான தகவல்களை பெற்றுக்கொள்ளும் போர் நிலைமைகளை போரின் மூடுபனி எனக் கூறுவர்.

கேள்வி: ஆம். கிளொஸ்விற்ஸ் என்பவர்தான் இந்த பதத்தை முதலில் பயன்படுத்தினார். பின்னர் இந்த சொல் றொபேட் மக்னமராவினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. சரி பிரபாகரன் எப்படி இறந்தார் என்று சொல்லுங்களேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல்  அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.

கேள்வி: பிரபாகரன் சரணடைந்தார் அவர் மானபங்கப்படுத்தப்பட்டபின் சுடப்பட்டார் என்ற கதைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்.?
பதில்:   இல்லை. அது நடக்கவில்லை. எனக்கு பிரபாகரனை தெரியும். அவர் ஒருபோதும் சரணடைந்திருக்க மாட்டார். எனக்கு இந்த கதைகள் தெரியும். சிலர் வேண்டுமென்றே இதை செய்கின்றனர். சிலர் காதில் விழுவதை யோசிக்காமல் திருப்பிக் கூறுகின்றனர். எனக்கு நன்றாகத் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் பிரபாகரன் சரணடைந்தார் எனவும் பின்னர் சரத்பொன்சேகாவிடம் கொண்டுவரப்பட்டதாகவும் அங்கே சரத்பொன்சேகா அவரை முழங்காலில் இருக்கவைத்து சுட்டதாகவும் கூறித்திரிந்தார். அபத்தமானகதை. பழைய தமிழ் தலைவர் பிரபாகரன் முன்னால் பயந்து நெளிபவர் அவர் இறந்தபின் இந்த மாதிரி ஏன் பேசவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் பிரபாகரனை தோற்கடித்த இராணுவத்தினர் அவரைப் பற்றியும் அவர் மரணித்த விதம் பற்றியும் உயர்வாகவே பேசுகின்றனர். பாதுகாப்பு அமைப்பில் உச்ச நிலையில் உள்ள சிலர் – உங்களுக்கு இவர்கள் யார் என விளங்கும் என நினைக்கின்றேன். இந்த குழு கடைசிவரையும் வீரத்துடன் போராடி சரணடையாமல் மரணத்தை தழுவினர் என்பதையிட்டு மிகவும் கௌரவமாக என்னிடம் கூறினார். ஆனால் எமது ஆட்களில் சிலர் பிரபாகரனை பற்றி அவர் இறந்தபின் கேவலமாக பேசுகின்றனர். நான் திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன். எனது தலைவர் கடைசிவரை போராடி வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

கேள்வி: இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரனின் ஒரு மெய்ப்பாதுகாவலரிடம் பெற்றோல் கலன் ஒன்று இருக்குமாம். தான் இறந்தால் இராணுவத்திடம் தனது உடல் அகப்பட்டக் கூடாது. என்பதற்காக தனது உடலை கொளுத்திவிட வேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆனால் இது இந்தமுறை நடந்ததாகத் தெரியவில்லையே. என்ன நடந்தது?
பதில்: இந்த முறையும் இப்படியான ஒழுங்கு செய்யபட்டிருந்தது என நான் கேள்விப்பட்டேன். தனது உடல் வேறு யார் கையிலும் போய்ச் சேராது  அழிக்கப்பட வேண்டும் என்பது பிரபாகரனுக்கு மிக முக்கியமான விடயமாக இருந்தது. பெற்றோல் கான் நீரில் விழுந்திருக்கலாம். அல்லது பெற்றோல் கான் ஒப்படைக்கபட்ட போராளி பிரபாகரன் இறக்கும் முன் கொல்லப்பட்டிருக்கலாம். இது எனது ஊகம்தான். எனக்கு உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியாது.

கேள்வி: பொட்டு அம்மான் பற்றி….? அவருக்கு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில்: பிரபாகரனும் பொட்டுவும் ஒன்றாகவே சென்றனர். பிரபாகரன் மட்டுமே திரும்பி வந்தார். பொட்டு தப்பிச் செல்லும் முயற்சியின் போது கொல்லப்பட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லாதுவிடின் பிரபாகரன் பக்கத்திலேயே இருந்திருப்பார்.   பொட்டு அம்மானின் உடல் கிடைக்கவில்லை என்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால் பொட்டு அம்மானின் உடல் இராணுவத்தின் கையில் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரனே பொட்டு அம்மானின் உடலை அழித்திருக்கலாம்.

கேள்வி: பொட்டு தப்பியிருக்க முடியுமல்லவா?
பதில்: விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.  பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணர வேண்டும்.

கேள்வி: பிரபாகரனின் உடல் தொடர்பாக இன்னொரு கேள்வி. பிரபாகரனின் குடும்ப அங்கத்தவர்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் வழங்கும்படி கோருவர் என்றும் வெளிநாட்டுப் புலிகள் அதனைப் பெற்றுக்கொண்டு 40 வருடங்களுக்கு மேலாக தான் வகுத்துக்கொண்ட கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்த மனிதனுக்கு இறுதி அஞ்சலியை ஒழுங்கமைப்பர் எனவும் நான் எதிர்பார்த்தேன்.
பதில்:  உங்களைப் போலவே நானும் அப்போது யோசித்தேன். இது தொடர்பில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர வழிகளிலும் ஆலோசனையை பெற்றுக்கொண்டேன். பிரபாகரனின் சகோதரங்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் தரும்படி கேட்டால் இலங்கை அரசுமீது இது தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என எனக்கு கூறப்பட்டது. எனவே நான் பிரபாகரனின் சகோதரனுடனும் அவரது சகோதரிகள் இருவரில் ஒருவருடனும் இந்த கோரிக்கை விடயமாக தொடர்பு ஏற்படுத்தினேன். நான் அவமதிக்கப்பட்டேன். உண்மையில் பிரபாகரனின் சகோதரியின் கணவர் தன் மனைவியின் கையிலிருந்த தொலைபேசியை பறித்து இனிமேல் போன் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியை முகத்தில் அடித்தாற்போல வைத்துவிட்டார். எனவே என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கிடையில் பிரபாகரனின் உடலை எரித்து சாம்பலை கடலில் தூவியதாக அரசாங்கம் அறிவித்தது. அவ்வளவுதான்.

கேள்வி:  சரி பிரபாகரன் சண்டையில் இறந்துவிட்டார். அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் பற்றி என்ன தெரியும்.? என்ன நடந்தது?
பதில்: எனக்கு கிடைத்த தகவலின்படி மனைவி மதிவதினி ஷெல் வீச்சில் கொல்லப்பட்டார். இது பிரபாகரனின் வெளியேறும் முயற்சியின் முன் நடந்தது என நான் நினைக்கின்றேன். சாள்ஸ் அன்ரனி முன்னரே சண்டையில் காயபட்டிருந்தார். ஆனால் அவர் இறுதிவரை தனது அணியினரை சண்டைக்கு இட்டுச் சென்றார். நான் முன்பு கூறியது போலவே அவர் தப்பிப்போக விரும்பவில்லை. அவர் சண்டையில் உயிர் துறந்தார். இதில் இன்னொரு விடயத்தை கூறவேண்டும். சொர்ணலிங்கம் அல்லது சங்கரின் (செப்ரம்பர் 27 2001 இல் கொல்லப்பட்டவர்) மனைவி குகா பற்றி கூறவேண்டும். குகா சாள்ஸ்டன் இருந்து அவரோடு இறந்து போனார். மதிவதனியின் நெருங்கிய சிநேகிதி குகா. அவர் சாள்ஸ்டன் தான் எப்போதுமிருந்து தாயாக அவரைக் கவனிப்பேன் என மதிவதினியிடம் உறுதியளித்திருந்தார். அவர் ஏனைய தலைவர்களின் மனைவிமார் அல்லது விதவைகள் போலன்றி விட்டுப்போக மறுத்துவிட்டு சாள்ஸ்டன் இருந்துவிட்டார். மகள் துவாரகாவும் போர்க்களத்தில் போராடி மரணித்துவிட்டார். அவர் மே.14 இல் இறந்து விட்டதாக அறிந்தேன்.

ஆக இளைய பிள்ளையான பாலசந்திரனைப் பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவர் தன் தாயோடு நெருக்கமாக இருந்திருப்பார். எனவே ஷெல் வீச்சில் தாயோடு இறந்திருக்கலாம். ஆனால் இறந்த பாலசந்திரனின் உடல் என இன்ரநெற்றில் காட்டப்பட்ட படம் அவர் ஷெல்வீச்சில் இறந்தது போலல்ல. எனவே இதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கேள்வி: பிரபாகரனும் அவரது குடும்பமும் இந்தமாதிரி கொல்லப்பட்டது உங்களுக்கு பேரிடியாக இருந்திருக்கும். அவரது திருமணத்தில் நீங்கள்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தீர்கள் என நினைக்கிறேன். அவருடைய சிரேஷ்ட துணைத் தலைவர்களும் தளபதிகளும் இருந்தபோதும் நீங்கள் எப்படி மாப்பிள்ளைத் தோழனாக ஆகினீர்கள்?
பதில்: ஆம் நான் பிரபாகரனின் குடும்பத்துக்கும் நெருக்கமானவனாக இருந்தேன். அவர்களது மரணம் எனக்கு பேரிழப்பு. என்னால் அவர்களுக்கு உதவவோ காப்பாற்றவோ முடியாமல் போனமை எனக்கு நிரந்தரமான சோகத்தின் மூலமாகவே இருக்கும். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்ததைப் பற்றிக் கேட்டீர்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரன்,மதிவதனி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்யவிரும்பிய போது அநேகமான சிரேஷ்ட தலைவர்களும் தளபதிகளும் அதை விரும்பவில்லை. இது இயக்கத்தை பாதிக்கும் என்னும் காரணத்தால் அவர்கள் எதிர்த்தனர்.

அந்தக் கட்டத்தில் பிரபாகரன் என்னிடம் வந்தார். முன்னர் நடந்த ஒரு விடயத்தால் இதைப்பற்றி என்னிடம் கூற வெட்கப்பட்டார். நான் இயக்கத்தில் சேர்ந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு புரட்சியாளன் காதலில் விழக்கூடாது எனக் கூறி எனது காதலை கைவிடும்படி பிரபாகரன் கூறினார். பெரும் தயக்கத்துடன் நான் அவருக்கு கீழ் படிந்து எனது காதலை துறந்தேன். பின்னர் சூழ்நிலைமாறி, பிரபாகரன் காதல் வயப்பட்டு எனது உதவியை நாடி வந்திருந்தார். அவர் அந்தரப்பட்டது ஆச்சரியமானது அல்ல. ஆனால் நான் உடனேயே எனது ஆதரவை வழங்கி திருமணம் செய்யக் கூறினேன். நான் பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேசி அவர்கள் மனதை மாற்றினேன். பிரபாகரனின் தந்தையை கண்டு அவரது மகனின் திருமணம் பற்றி கூறியது நான்தான். இந்த காரணத்தால் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகினேன்.

கேள்வி: திருமணத்தின் பின்னரும் நீங்கள் அவருக்கும் குடும்பத்துக்கும் நெருக்கமானவராக இருந்தீர்களா?
பதில்: ஆம். நான் அதிகமாக வெளியே இருந்தபோதும் அக்காலத்தில் பிரபாகரனுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தேன். நான் பிள்ளைகளுடனும் மதிவதனியுடனும் பேசுவேன். நான் திருமணம் செய்தபின் எனது மனைவியும் மதிவதனியும் தொலைபேசி மூலம் பேசிக்கொள்வார்கள். நான் கப்பலில் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பரிசுப்பொருட்களை அனுப்புவேன். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காட்டுக்குள் போக வேண்டியிருந்தபோது இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சமாளிப்பது மதிவதனிக்கு கஷ்டமாக இருந்தது. பிரபாகரன் அவர்களை சிறிது காலம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு அனுப்ப விரும்பினார்.  அவர் அவர்களை சுவீடனில் இருந்த பழைய தோழனான ‘சிங்கம்’ என்பவரிடம் அனுப்ப விரும்பினார்.

அவரகள் படகு மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின் நான் பயண ஆவணங்களை தயாரித்து அவர்களை ஸ்கண்டிநேவியாவுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் பிரபாகரனின் நண்பனுக்கு சில பிரச்சினைகள் இருந்ததையும் அதனால் அவருக்கு மதிவதனியையும் பிள்ளைகளையும் தன்னுடன் வைத்திருப்பது சிரமம் என்பதையும் அறிந்துக்கொண்டோம். எனவே நான் ஆபத்தான போதிலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சுவீடனுக்கு சென்று தாயையும் பிள்ளைகளையும் டென்மார்க் அனுப்பி வைத்தேன். நான் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்தேன்.

கேள்வி: மதிவதனியின் குடும்ப அங்கத்தவர்களுடனா?
பதில்: இல்லை அவர்களோடு அல்ல. அவர்கள் தயக்கம் காட்டினர். இது வேறு இடம்.  பின்னர் 1987 இல் பிரேமதாஸ அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை நான் முறையான பயண ஆவணங்களை பெறுவதற்குப் பயன்படுத்திக்கொண்டு ஸ்கண்டினேவியா சென்றேன். அங்கிருந்து நானே தாயையும் பிள்ளைகளையும் கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் எனக் கூறி பிரபாகரனிடம் ஒப்படைத்தேன். பிரபாகரனுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி. பிரபாகரனின் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டு வந்த அந்தக் காலத்தையும் என்னால் உதவமுடியாமல் போன இந்தக் காலத்தையும் நினைக்கும்போது எனக்கு கவலைக்கு மேல் கவலையாக உள்ளது. அந்த நாட்களில் மகனும் மகளும் என்மீது பிரியமாக இருந்தனர். நான் அவர்களை அடிக்கடித் தூக்கித் திரிவேன்.

கேள்வி: ஆம் எனக்கு முன்னர் நீங்கள் சார்ள்ஸை தூக்கி வைத்திருக்கும் படங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. சாள்ஸ் அன்ரனியும் அவரது சகோதரியும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் படித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வந்தன. என்ன நடந்தது? அவர்கள் எப்போது திரும்பி வந்தனர்.? ஏன் வந்தனர்.?
பதில்: இல்லை. இல்லை. அவர்கள் ஒருபோதும் படிப்புக்காக வெளிநாடு செல்லவில்லை. அதெல்லாம் பொய்.

கேள்வி: அப்படியானால்?
பதில்: இரண்டு பேருமே மிகவும் கெட்டிக்காரர்கள். உயர்கல்வியில் அவர்கள் மிகவும் நன்றாகவே செய்திருப்பார்கள். தாயார் மதிவதனி இதில் மிக அக்கறையாக இருந்தார். பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 இல் வன்னிக்கு வந்திருந்தபோது மதிவதனி பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பதற்கான ஆயத்தங்களை செய்யும்படி என்னிடம் கேட்டிருந்தார். எனவே நான் சிறிது காலம் எடுத்து கவனமான தயாரிப்புகளை மேற்கொண்டேன். இவர்களின் ஆளடையாளம் தெரியாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் வெளிநாட்டில் கல்வியை ஆரம்பிப்பதற்கான,  ஒரு போதும் பிழைபோகாத ஏற்பாடுகளை செய்தேன். மதிவதனிக்கு பெரிய சந்தோசம். ஆனால் பிரபாகரன் முதலில் சம்மதித்திருந்தாலும் பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்டார். அவர் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவிட்டார். மதிவதனியால் அவரது நிலைப்பாட்டை மாற்றமுடியவில்லை. அவ்வளவுதான். அவர்கள் ஒருபோதும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவில்லை. பின்னர் இருவருமே தாமாகவே இயக்கத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட போராளிகளாயினர்.

கேள்வி: பிரபாகரன் ஏன் இப்படிச் செய்தார்?
பதில்: அவரது கொள்கைதான் காரணமென நான் நினைக்கிறேன். மற்றவர்களின் பிள்ளைகள் வன்னிக்குள் இருக்க வேண்டிய நிலையில் தனது பிள்ளைகளை  பாதுகாப்புக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்புவது சரியில்லை என அவர் நினைத்தார். இதே கொள்கைதான் தனது மகனையும் மகளையும் இயக்கத்தில் சேரத் தூண்ட வைத்தது. மற்றவர்களின் பிள்ளைகள் சண்டையில் ஈடுபடும்போது தனது பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது எனவும் அவர் எண்ணினார்.

கேள்வி: இந்த விடயம்  தொடர்பாக உங்கள் விளக்கத்துக்கு நன்றி. உண்மை நிலையை பற்றி எமக்கு பிழையான தகவல்கள் வழங்கபட்டது போல் உள்ளது. இருந்தாலும் பிரபாகரனின் மரணம்பற்றி பிழையாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. சரியான தகவல் தரப்படவில்லை. இது ஏன்? உங்களுக்கும் நெடியவனுக்கும் இடையில் ஏன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது?

பதில்: ஆரம்பத்தில் உண்மையை ஏற்றுக்கொள்வதை  மறுத்ததானது உணர்வுகளுடன் தொடர்பானதாக இருந்தது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டதாக நான் முதலில் அறிக்கை விட்டபோது உளவுத்துறையை  சேர்ந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் அதை மறுத்து அறிக்கைவிட்டார். பின்னர் அவர் உண்மையை விளக்கிக் கொண்டு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொண்டு இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். நெடியவனையும் அவரது ஆட்களையும் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே அதை வெளிப்படையாக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றும் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் தொடர்கின்றது என்றும் கதைகளை பரப்பி வருகின்றனர்.

நாம் தமிழ் ஈழத்தை போராடிப்பெற்று பிரபாகரன் வெளிப்படும்போது அதை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என தமிழ் நாட்டு தலைவர்கள் சொல்லி வருவதும் இவர்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு உதவியாக உள்ளது.

கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் நெடியவனின் உள்நோக்கம் என்ன?

பதில்:  பணம். இப்போது எல்லாம் பணம்தான். நான் பிரபாகரன் இறந்துவிட்டார் என அறிக்கை விட்டபோது தலைவர் உயிரோடு உள்ளார் எனக் கூறி அதை எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கம் அஞ்சலி செலுத்த நான் திட்டமிட்டபோது அவர்கள் அதை தடுத்தார்கள். முதலில்   பிரபாகரன் உயிருடன் உள்ளார் என அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்றே நான் நினைத்தேன். பின்னர் அவர்கள் உண்மை தெரிந்தும் நடிக்கின்றனர் என்பதை கண்டுகொண்டேன்.

கேள்வி: அது எப்படி?
பதில்:  சிலகாலத்தின் பின் எமது முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். நான் உறுதியாக இருந்த விடயங்களில் ஒன்று பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்வதும், ஒருவாரகாலததுக்கு அனுஷ்டிப்பை நடத்துவது என்பதாகும். அதற்கு, நெடியவன் பிரபாகரனின் மரணத்தை நாம் ஒருபோதும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்  அப்படி ஏற்றுக்கொண்டால் இயக்கத்தினால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் சேர்க்க முடியாது என்றும் கூறினார். நான், இயக்கம் ஒன்றை பொய்களைக் கூறிக்கொண்டு நடத்தமுடியாது என அவர்களுக்கு கூறினேன். அது மாத்திரமல்ல, இவ்வளவு  காலமும் தமிழ் இலட்சியத்துக்காக ஓய்வின்றிப் போராடிய அந்த தலைவருக்கு நாம் புகழாஞ்சலி செலுத்த தவறுவோமானால் நாம் நன்றி கெட்டவர்களாக இருப்போம் எனவும் கூறினேனன்.

பிரபாகரன் எமது போராட்டத்தின் ஆத்மாவாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டினேன். அவரின்றி போராட்டமோ இயக்கமோ தமிழ் ஈழமோ இல்லை. எமக்கு ஆயுதங்கள் வாங்கவே பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆயுத போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் அவ்வளவு பெருமளவு பணம் எமக்கு தேவையில்லை. வெளிநாட்டில் உள்ள எமது வர்த்தக செயற்பாடுகள் எமது கொள்கைப்பிடிப்புள்ள ஆதரவாளர்களின் சிறு நன்கொடைகள் என்பன இயக்கத்தை நடத்தப் போதுமென்று கூறினேன்.

எமது புதிய கடமைப்பொறுப்பு எமது மக்களுக்கு உதவுவதுதான். போர் நடத்துவது அல்ல என்றும் நான் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை வெளியில் கொண்டு வருவதும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதும்தான் உடனடியான நோக்கம் எனவும் கூறினேன். அடுத்து இடம் பெயர்ந்த தமிழர்களை விடுவித்து மீளக்குடியமர்த்தல் என்றேன்.

நெடியவன் தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார். எமக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக நான் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் தலைவராக ஆகினேன். இது ஜுலை 2009 இல் நடந்தது. நான் பிரதம செயலாளராகவும் நெடியவன் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான செயலாளராகவும் இருந்தோம். நவம்பரில் மாவீரர் வாரத்தின்போது பிரபாகரனின் மரணத்தை நினைவு கூருவது என ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால், இது நடந்து சில வாரங்களுக்குள் ஓகஸ்ட் 05 இல் நான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். அதோடு எல்லாம் முடிந்துபோனது. நெடியவனின் கை ஓங்கியது. எனவே பிரபாகரனின் மரணம் ஏற்கப்படவில்லை. அவர் உயிரோடுள்ளார் என்ற மாயை தொடர்ந்து பேணப்படுகிறது.

கேள்வி:  இந்த மாயையை தொடர்ந்து பேணுவதில் பணம் முக்கிய பாத்திரம் வகிப்பதாக முன்னர் கூறினீர்கள் என்னால் இது ஏன், எவ்வாறு என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். ஆனால் இதை நீங்கள் விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும்.

கேள்வி: நெடியவனின் அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை இது விளக்குகிறது.  ஆனால் ஏன் நெடுமாறன் , வைகோ (வை. கோபாலசாமி) போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனக் கூறுகின்றனர். அவர்கள் உண்மையாகவே இதை நம்புகிறார்களா?

பதில்: இல்லை. அவர்களுக்கும் உண்மை தெரியும். இவர்களுக்கும் நெடியவனால் கட்டுப்படுத்தப்படும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்புகள் உண்டு. அத்துடன் அவர்களின் அரசியல்  எல்.ரீ.ரீ.ஈ. வெல்லப்பட முடியாது. பிரபாகரன் சாகாவரம் பெற்றவர் என்பவற்றை  மையமாக வைத்து நடத்தப்படுவது. எனவே அவர்கள் பிரபாகரன் உயிருடன் உள்ளார்,  தமிழ் ஈழம் மலரும் என்று சொல்லத்தான் வேண்டும்.

கேள்வி: நெடுமாறன்,  வைகோ போன்றவர்களுக்கு உண்மையை விளங்க வைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில்: சென்ற வருடம் நான் பிடிபடுவதற்கு முன் நெடுமாறனுடன் உண்மை நிலையை விளக்கி நீண்ட நேரம் பேசினேன். அப்போது அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் மத்திய செயற்குழுவை பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கூறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வைக்குமாறு கூறினார். என்னால் அதை எப்படி செய்ய முடியும். தலைவர்கள் எல்லோருமே ஒன்றில் இறந்து விட்டனர், அல்லது காணாமல் போயிருந்தனர்,  அல்லது பிடிப்பட்டு இருந்தனர். பின்பு இந்த நெடுமாறன், வைகோவுடன் சேர்ந்து ஒரு ஊத்தை வேலை செய்தார். இவர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; கே.பி. இந்திய உளவு நிறுவனமான றோவின் கையாள் எனக் கூறும் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

அதன்பின் நான் அவர்களோடு பேச முயல்வதை நிறுத்திவிட்டேன். நான் வைகோவுடன் பேசவில்லை. ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியும் என்பதை நம்பகமான முறையில் நான் அறிவேன். பிரபாகரனின் மரணம்பற்றி தனிப்பட்ட முறையில் கூறப்பட்டப்போது வைகோ குலுங்கி குலுங்கி அழுதார். ஆனால் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பொய்யை பகிரங்கமாக கூறிவருகிறார்.

இவர் இரகசியமாக எவ்வளவுதான் அழுதாலும் எல்.ரீ.ரீ.ஈ இன் வீழ்ச்சி தொடர்பில் இவரது குற்றவுணர்வு தொடரத்தான் செய்யும். இந்திய அனுசரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை கெடுத்தவர் இவரே.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? வைகோ இது தொடர்பில் செய்தது என்ன? செய்யாமல் போனது என்ன?
பதில்: நான் ஒரு புறத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருந்தபோது மறுபுறத்தில் நடேசனும் (பாலசிங்கம் மகேந்திரன்) இதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தி.மு.க விலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளான முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்சபா உறுப்பினருமான கனிமொழி, கத்தோலிக்க குருவான வண. ஜகத் கஸ்பர் என்பவருடன் இணைந்து மத்திய அரசின் அமைச்சரான பி.சிதம்பரத்துடன் யுத்த நிறுத்தமொன்றினை கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த சமயம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவி ஜெயலலிதா எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த நிலைப்பாட்டை எடுத்த நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோல்வியடைய வேண்டி வருமோவென பயந்திருந்தனர். எனவே சிதம்பரம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தனித்து விடுக்க வேண்டும் என விரும்பினார். ஒரு அம்சம் ஆயுதங்களை மௌனிக்க வைக்க ஒப்புக்கொள்வதுடன் ஆயுதங்களை காலகதியில் ஒப்படைப்பதாகும். மற்றையது தமிழ் ஈழத்துக்குப் பதிலாக ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொளவதாகும்.

எல்.ரீ.ரீ.ஈ தனது பெயரில் வெளியிடுவதற்கான அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈக்காக சிதம்பரம் அவர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தன் கையாலேயே எழுதினார் என நான் கேள்விப்பட்டேன். இந்த அறிக்கை விடப்பட்டபின் மத்திய அரசு கொழும்பு மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் எனவும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் கொண்டு வரப்படும் எனவும உறுதியளிக்கப்பட்டது.

வைகோ,  நெடுமாறன் போன்றோருக்கு இந்த ஏற்பாட்டை பற்றிய விபரங்களை கூறவேண்டாம் என நடேசனுக்கு கூறப்பட்டிருந்தப்போதும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான கே.மகேந்திரன் என்பவருடன் இது விடயமாக ஆலோசித்துள்ளார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்   தலைமையிலான தேர்தல் கூட்டணியில் வைகோவின் மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இவரது கட்சியான இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) யும் சேர்ந்திருந்ததது. மகேந்திரன் இந்த திட்டம்பற்றி வைகோவுக்கு தெரிவித்துவிட்டார்.

இவர்கள் இருவரும் காங்கிரஸ{ம் தி.மு.கவும் யுத்தம் நிறுத்தத்திற்கான பெருமையை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என கவலைப்பட்டனர். எனவே இவர்கள் இந்த திட்டத்தை கெடுக்க விரும்பினர். வைகோ எல்.ரீ.ரீ.ஈ யுடன் கோபித்தார். தமிழ் ஈழத்திற்கு மாற்றாக வேறு எதையாவது எல்.ரீ.ரீ.ஈ ஏற்றுக்கொண்டால் மக்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்  எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவான வேறு கட்சிகளும். தமது எல்.ரீ.ரீ.ஈ க்கான ஆதரவை நிரந்தரமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என நடேசனுக்கு வைகோ எச்சரித்தார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலில் பாரிய வெற்றியை பெறும் எனவும் புதுடில்லியில் பி.ஜே.பி அரசாங்கம் அமையும் எனவும் நடேசனுக்கு பிழையான நம்பிக்கை ஊட்டப்பட்டது. இதன்பின் யுத்தநிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் இ தேர்தலுக்கு முந்திய எந்த போர் நிறுத்தமும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு உதவுவதாக அமையும்.

எனவே இந்த நடேசன் அறிக்கையை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டார். சிதம்பரத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாமே வைகோவால் வந்ததுதான். இவர்கள் சுயநலமானவர்களாக இருந்தனர். இதனால் தேர்தலில் தாம் வெற்றி பெறுவோம் என நினைத்து வரக்கூடியதாக இருந்த யுத்த நிறுத்தத்தை தடுத்துவிட்டனர்.

கேள்வி: கூறப்பட்டப்படி ஓர் அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈ வெளியிட்டுருந்தாலும் எல்.ரீ.ரீ.ஈ, தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் கொழும்பின் மீது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்கும்படியான நிர்ப்பந்தத்தை பிரயோகித்திருக்க முடியுமா? இன்னுமொன்று பி.ஜே.பி.  வென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி தமிழ்நாடு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இலங்கையில் நடப்பவற்றை ஓரிரு நாட்களில் மாற்றியிருக்க முடியாது. இராணுவத்தின் வேகமான முன்னேற்றம் காரணமாக இந்தியா விரும்பினாலும் கூட இந்தியா நடவடிக்கை தொடங்க முன்னரே எல்லாமே முடிந்து போயிருக்கும்?

பதில்: நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது என்னவென்றால், இந்தியாவின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கான ஒரு வாய்ப்புக்கூட இந்த வைகோ என்ற மனிதனால் தொடக்க  நிலையிலேயே அழிக்கபட்டுவிட்டது என்பதைத்தான். தனது தேர்தல் நோக்கத்துக்காக எல்.ரீ.ரீ.ஈ ஐ பலியிடவைத்த ஒரு சுயநல அரசியல்வாதி. இப்போது அவர் பிரபாகரனுக்காக தனியாட்கள் முன்னிலையில் முதலைக் கண்ணீர் விடுகிறார். பகிரங்கத்தில் இன்னுமொரு ஈழ யுத்தம்பற்றிக் கதைக்கின்றார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்?

கேள்வி: அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை  பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: உண்மை சொல்வதுதான் எனது பதில். இது உண்மையில் மிக எளிதான கதை………

(தொடரும்)
 
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

மழை நாடகம் – வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்

Mazhaiலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.

இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm

._._._._._.

Mazhaiமிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL  Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.

Mazhaiநிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.

தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.

Mazhaiபுரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.

டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.

அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.

Indira_Parthasarathyவாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.