நேர்காணல்கள்

நேர்காணல்கள்

378 பேர் கொல்லப்பட்டதாக செய்தி : தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்கிறது இலங்கை அரசு – பீபீஸி தமிழோசை பேட்டி

gotabaya-rajapakasa.jpgஇலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரை பீபீஸி தமிழோசை பேட்டி கண்டிருந்தது. பீபீஸி இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அப்பேட்டியின் விபரம் வருமாறு:

பீபீஸி தமிழோசை: இன்று (நேற்று 10ஆம் திகதி) 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பீபீஸி தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள், 1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?

கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.

பீபீஸி தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.

கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.

பீபீஸி தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.

கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்கை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார்.

நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை: புலிகளின் பேச்சாளர் இளந்திரையன்

ilanthirayan.jpgவலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (நேற்று) சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு:

உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?

களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.

களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு சிங்களப் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும் மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.  இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் தலைவரின் வழிகாட்டலில் மிகவும் திறமையாகப் போராடி வருகின்றனர்.

மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.

சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும் அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.

கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?

இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.

களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?

மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும் ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில் விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?

அவசரப்பட்ட, பக்கச்சார்பான முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.

தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில் கடற்படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில் உயிரிழந்திருக்கிறார்.

கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?

சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள் எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆனால், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?

“சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்” என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.

நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை –

வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை – எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.

களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது – பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது – நாங்கள் இறந்த சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு குரல்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.

சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?

சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்போதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.

புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம் – அமைச்சர் கருணா அம்மான்

karuna_amman.jpgதேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  இணையத்தளம் ஒன்றிக்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு தருகிறோம்.

கேள்வி: புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்கு முன்னர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த நீங்கள், அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சரான பின்னர் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளீர்களே.. அத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவுடன் உடனடியாகவே நீங்கள் ஏன் அரசுடன் இணையவில்லை?

பதில்: இல்லை. அது தவறான செய்தி. நாம் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவுடன் புலிகளால் எமக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் எம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுதமேந்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே உண்மை. இவ்வாறு நாம் தெரிவித்த கருத்தே திரிவுபடுத்தப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பிலிருந்து நாம் பிரிந்து அரசுடன் உடனடியாகச் சேர்ந்திருந்தால் எம்மைத் துரோகிகள் என மக்கள் தெரிவித்திருப்பர். அவ்வாறான குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படக் கூடாதென்பதற்காவே நாம் ரிஎம்விபி (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) என்ற அமைப்பை உருவாக்கி புலிகள் அமைப்பிலிருந்து நாம் விலகியமைக்கான காரணங்களையும் பிரபாகரனின் துரோகத்தனங்களையும் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமை தொடர்பிலும் நாம் விளக்கமளித்தோம். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் எமது நோக்கமும் நிறைவேறியது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இரு தேர்தல்களின் போதும் மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தனர்.

கேள்வி: நீங்கள் ரீஎம்விபியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?

பதில்: இலங்கையைப் பொறுத்த வரையில் 15க்கும் மேற்பட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்பிலோ தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பிலோ பெரும்பாலான கட்சிகளிடம் தெளிவான எந்தக் கொள்கையும் திட்டங்களும் இல்லையென்பது ஒரு கசப்பான விடயமாகும். அத்துடன் பிராந்திய ரீதியான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டே தேசிய ரீதியான அல்லது பிரதேச ரீதியான அபிவிருத்தியை முழுமையாக அடைய முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயம். இது கடந்த கால அனுபவத்தின் வெளிப்பாடுமாகும்.

வெறும் விளையாட்டுக் கழகங்கள் போன்று கட்சிகளை வைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. தொடர்ந்தும் பிராந்தியக் கட்சிகளுக்கு ஊடாக நாம் அரசியலை நடத்திச் செல்வதால் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையிலேயே நாம் ரிஎம்விபி கட்சியிலிருந்து வெளியேறி தேசிய அரசியலில் எம்மைச் சங்கமிக்கச் செய்தோம்.

கேள்வி: உங்களை நம்பி உங்கள் பினனால் வந்த போராளிகள் நிலை என்ன?

பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு முன்னரே எமது அமைப்பைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அவர்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், வெளிநாட்டு வேளைவாய்ப்புப் போன்றனவற்றை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

எமது அமைப்பைச் சேர்ந்த ஆயிரம் பேர் இதுவரை இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 300 பேர் தற்போது தொப்பிகலைப் பிரதேசத்தில் கடமையாற்றி வருகின்றனர். மேலும் 1500 பேரை இராணுவத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.

இப்போது கிழக்கு மாகாணத்திலுள்ள எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியலங்களின் பாதுகாப்புக்குக்; கூட நாம் இலங்கைப் பொலிசாரின் உதவியையே கோரியுள்ளோம்.

கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள.; ஆனால் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்னும் ரீஎம்விபி கட்சியை வழிநடத்தித்தானே செல்கிறார்?

பதில்: அவரின் கட்சியிலிருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மேற்படாது. அவர் தற்போது தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்.

கேள்வி: அவரிடம் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்த்திருக்கலாமே?

பதில்: அவர் அதனை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்.

கேள்வி: நீங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரும் பதவியை ஏற்ற பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் ஏதாவது செய்துள்ளீர்களா?

பதில்: ஆம், நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர் பல அமைச்சுகளின் இணைப்பாளரகவிருந்து நல்ல பல விடயங்களைச் செய்துள்ளேன். அதுபோன்று இப்போது எனக்குக் கிடைத்துள்ள அமைச்சு மூலம் தேசிய ரீதியிலேயே நல்ல பணிகளைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன். இப்போது கிடைத்துள்ள அமைச்சினை நான் மிகவும் விரும்புகிறேன். சுமார் 25 வருடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட வடக்கினையும் கிழக்கினையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

இந்த அமைச்சின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்கவும் முடியும். தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்ளும் வகையில் புதியதொரு திட்டத்தினையும் நான் விரைவில் செயற்படுத்தவுள்ளேன். இந்த இரு இனங்களும் இரு மொழிகளையும் கற்பதன் மூலமும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கலாமென்பதே எனது நம்பிக்கை.

கேள்வி: நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் படை பல ரீதியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம். நானும் பெரும் எண்ணிக்கையிலான போராளிகளும் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் அவர்களின் பலம் குறைக்கப்பட்டு விட்டது.

மேலும் புலிகளின் தரப்பில் இப்போது யுத்தமொன்றுக்குத் தலைமை தாங்கிச் செல்லக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்குப் பின்னர் அவர்களால் யுத்தத்தில் வெல்ல முடியாதென்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி: கடந்த காலங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சாதமான ஏதாவது விடயத்தை பிரபாகரன் தவற விட்டுள்ளாரா?

பதில்: நிச்சயமாக, இறுதியாக இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில் நானும் கலந்து கொண்டேன். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பெடரல் முறையிலான தீர்வுத் திட்ட ஆலோசனைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான ஆவணங்களிலும் எமது தரப்பில் (புலிகள்) கையொப்பமிடப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் எனது அழுத்தத்தின் மத்தியில் இதில் கையொப்பமிட்டார்.

கேள்வி: உங்கள் அழுத்தமா?

பதில்: ஆம், இதில் தான் கையொப்பமிட்டால் பிரபாகரனால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அன்ரன் பாலசிங்கத்திடம் அன்று காணப்பட்டது. இந்த நிலையில் அவரை நான் தைரியப்படுத்தி கையொப்பமிடச் செய்தேன். பின்னர் இலங்கை திரும்பியதும் வன்னி சென்று பிரபாகரனைச் சந்தித்து கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவர் அதனை மகிழ்ச்சியான மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான ஒப்பந்தமொன்றில் அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டமை தொடர்பாக என்னிடம் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் அதனைக் கிழித்தெறிந்து விட்டார். இதுவே அவருக்கும் எனக்குமிடையிலான முரண்பாடுகள் ஏற்படக் காரணமுமானது.

அது மட்டுமன்றி தமிழ் மக்கள் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கபட்ட இந்த ஆலோசனையை அவர் நிராகரித்தமை இனப்பிரச்சினை தீர்வில் அவருக்கு அக்கறை இல்லையென்பதனையுமே காட்டியது. பல வருடகால யுதத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலையிலிருந்த போது இவ்வாறு பிரபாகரன் நடந்து கொண்டது முட்டாள்தனமானது.

கேள்வி: நீங்கள் எவ்வாறு தெரிவித்தாலும்; தமிழ் மக்கள் தம்முடன் இருப்பதாகத்தானே புலிகள் கூறுகின்றனர்?

பதில்: தமிழ் மக்கள் அப்படிக் கூறுகின்றனரா இல்லையே?

கேள்வி: எங்களுக்காகத்தான் பிரபாகரன் போராடுகின்றாரென தமிழ் மக்கள் கூறுகிறார்களே?

பதில்: அந்தக் காலம் இப்போதில்லையே. தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய போராட்டமானது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்ல. அது பயங்கரவாதத்தின் பக்கம் வழி தவறிச் சென்று விட்டது. புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பாப்பானது பரவிக் காணப்படுகிறது.

கேள்வி: அப்படியாயின் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

பதில்: மாகாண சபை ஊடான அதிகாரப் பரவலாக்கலே சிறந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றைக் காணமுடியும்.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நீங்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச முடியாது.

பதில்: பொலிஸ் அதிகாரத்தின் மூலம்தான் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏனைய சமூகங்கள் தவறாகக் கணிப்பிடக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதனாலேயே இதனை எதிர்க்கிறேன். அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் எதிர்காலத்தில் தமிழ் மொழி பேசும் பொலிசாரே நியமிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் அதிகாரம் தேவை இல்லையென்பதே எனது கருத்து.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பூரணமாக வழங்கவில்லையென்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான); பகிரங்கமாகத் தெரிவிக்கிறாரே?

பதில்: எதனை எவ்வாறு கையாள்வதெனத் தெரியாத பிள்ளையான் தனது தரப்பிலுள்ள பிழைகளை மறைப்பதற்காக சுமத்தும் குற்றச்சாட்டுகள்தான் இவை. கிழக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திருப்பியனுப்பப்பட்டமைக்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஹில்புல்லாஹ் கிழக்கு மாகாண அமைச்சர்தானே அவரும் அதே மாகாண சபை மூலம் எவ்வளவு சேவைகளைச் செய்து வருகிறார். முதலில் நிர்வாகத் திறமை இருக்க வேண்டும் அது இல்லாமல் தாம் விடும் பிழைகளுக்கெல்லாம் பிறரைக் குற்றம் சொல்வது தவறு.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது யுத்த களமுனையில் உள்ளாரா அல்லது வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருப்பாரா?

பதில்: வன்னிப் பெரும் பரப்பிலுள்ள காடொன்றுக்குள் அவர் ஒழிந்துள்ளாராரென்றே நான் கருதுகிறேன். அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது கடினம். அப்படித் தப்பிச் சென்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் எல்லாம் முடிந்த கதை. அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறவும் மாட்டார்கள். யாராலும் அவர்களை மாற்றவும் முடியாது.

‘சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு இயல்பானதே’ உயர்ஸ்தானிகர் நிஹால் ஜெயசிங்க – நேர்காணல் : த ஜெயபாலன் & ரி சோதிலிங்கம்

SL_HC_Nihal_Jayasinghe._._._._._.
தற்போதைய  இலங்கை நிலவரம் தொடர்பாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்கேயை தேசம்நெற் க்காக நேர்காண்டிருந்தோம் அதன் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகிறது. மார்ச் 24 இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்காணலில் தேசம்நெற் சார்பில் த ஜெயபாலன் ரி சோதிலிங்கம் ஆகிய இருவரும் உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்க மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப் பொறுப்பாளர் கபில ஆகியோர் பங்கேற்றனர்.  90 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நேர்காணலின் போது உயர்ஸ்தானிகர் ஆயுதப் போராட்டத்தின் முன் தமிழ் பிரதேசங்களுக்கு தான் பயணித்த தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
._._._._._.

தேசம்நெற்: இன்றைய யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஐ நா உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசு மீது வைத்துள்ளன. குறிப்பாக கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்ததன் பிற்பாடு இவ்வாண்டு ஜனவரி முதல் தொடரும் முல்லைத்தீவு முற்றுகையில் எவ்வித பாகுபாடுமற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தமிழ் பொது மக்களின் இழப்பு ரொக்கற் வேகத்தில் அதிகரித்து உள்ளது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குகிறதா ?

உயர்ஸ்தானிகர்: பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் பல்வேறு மூலங்களில் இருந்து வெளிவருகிறது. நாங்கள் கிழக்கை மீட்டெடுக்கவும் இவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கையையே கையாண்டோம். ஆனால் அப்போது இப்படியான குற்றச்சாட்டுகள் எழவில்லை. வடக்கில் தான் புலிகளின் பிரச்சாரத்தால் இந்த பொய்ப்பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேறு வேறு மனித உரிமை அமைப்புகள் பல்வேறு புள்ளிவிபரங்களை வெளியிடுகிறது. அரசாங்கம் உதவி அமைப்புகளையோ ஊடகங்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவர்கள் புலிகள் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர்.

சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு வெளியே வடக்கிற்கு வன்னிக்கு வெளியே தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். கொழும்பில் சிங்கள மக்களின் சனத்தொகை வெறும் 28 வீதமே. 72 விதமானவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும். தமிழர்கள் மிகவும் பலம் வாய்ந்த வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அந்த வாக்காளர்கள் தங்களைவிட்டுச் செல்வதை எப்படி விரும்புவார்கள். 19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் 12.5 மில்லியன்  வாக்காளர்கள்  உள்ளனர். சிறுபான்மை இனங்களது வாக்குகள் 25 வீதம். எந்த ஒரு அரசாங்கமும் 25 விதமான சிறுபான்மையினர் தங்களை விட்டு ஒதுங்கிச் செல்லவதை விரும்பாது.

ஆகவே வேறுவேறு முகவர் அமைப்புகளால் வெளியிடப்படும் இந்த அழிவுகள் பற்றிய தகவல்கள் அர்த்தமற்றவை. அரச படைகள் எழுந்தமானமான கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதில்லை. ஆனால் யுத்த சூழலில் இழப்புகள் ஏற்படும். புலிகள் மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும். புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் தான் யுத்தம் செய்வதாகக் கூறினால் மக்களை எதற்காக அங்கு தடுத்து வைத்திருக்கிறார்கள். அரசபடைகளுடன் சண்டை என்றால் போய் அரச படைகளுடன் சண்டையிடுங்கள். புலிகள் ஒரு பலம் மிக்க இராணுவ அமைப்பு என்று சொன்னால் எதற்கு பொது மக்களை கவசமாகப் பயன்படுத்துகிறார்கள்.

தேசம்நெற்: புலிகள் பொது மக்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்புகளும் தெரிவிக்கின்றன. புலிகள் இலங்கையில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ள ஒரு இராணுவ அமைப்பு. ஆனால் இலங்கை அரசு அப்படியல்ல. அது சட்டபூர்வமான ஒன்று. அதனால் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஒரு பயங்கரவாத இயக்கம் என்று நீங்கள் சொல்லும் ஒரு இயக்கத்திடம் மலர்க் கொத்தையும் மனிதாபிமானத்தையும் எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையல்லவா? ஆனால் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 7000 பேர்வரை காயமடைந்து உள்ளனர். இரண்டில் மூன்று வீதமான குண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதாக ஐ நா குற்றம்சாட்டி உள்ளது. பாதுகாப்பு வலயம் இருப்பதன் அர்த்தம் என்ன ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: இலங்கை அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டு வருகின்றது. அரச படைகள் முன்னேறிச் செல்லும் வேகத்தை பெருமளவில் குறைத்து இருப்பதே மக்களுடைய இழப்புகளைக் குறைப்பதற்கே. இதில் பெரும்பாலான பரப்புரைகள் பொய்யானவை. அரச படைகள் கிளஸ்ரர் குண்டகளைப் பயன்படத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தவதில்லை என்ற ஒப்பந்தத்தில் இலங்கை கையழுத்து இட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது அவ்வாறான ஆயுதங்களை எமக்கு அயுதங்களை வழங்கும் நாடுகள் எப்படி வழங்கி இருக்க முடியும். இது சாதாரண விடயங்கள் அல்ல. ஆயுதக் கொள்வனவுகளுக்கென்று சில நடைமுறைகள் இருக்கின்றது. அப்படியானால் எந்த நாடு எங்களுக்கு இந்த கிளஸ்ரர் குண்டுகளைத் தந்திருக்க முடியும். இதுவும் புலிகளின் ஒரு பிரச்சார யுக்தியே.

மற்றது பாரபட்சமில்லாமல் தமிழ் மக்கள் மீது செல்தாக்குதல் நடத்துகின்றது என்று சொல்வதும் புலிகளின் ஒரு பொய்ப் பிரச்சாரமே. 2010ல் அடுத்த தேர்தல் வர இருக்கின்றது. சிங்கள மக்களுடைய வாக்குகளில் மட்டும் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் மிக முக்கியம். அப்படி இருக்கும் போது அரசாங்கம் எப்படி தமிழ் மக்களை பகைத்துக் கொள்ள விரும்பும். அந்த மக்கள் மீது செல் தாக்குதலை நடத்திவிட்டு எப்படி அவர்களின் வாக்குகளை வெல்ல முடியும்.

தேசம்நெற்: தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறதே ?

உயர்ஸ்தானிகர்: அரச படைகள் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதல் தவிர்ப்புப் பகுதிகளில் ஒளிந்துகொண்டு மக்களைக் கேடயமாக்கிக் கொண்டு புலிகள் தான் அரச படைகள் மீது தாக்குதலை நடத்துகின்றனர். அப்படிச் செய்யும் போது அரச படைகள் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா. தமிழ் மக்களைப் போல இராணுவ வீரர்களும் மனிதர்கள் தானே. அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.

அங்கே சிங்கள மக்கள் மத்தியிலும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது.  இந்த விடயத்தில் தாக்குதல் தவிர்ப்புப் பகுதி, பாதுகாப்பு பகுதி என்றில்லாமல் அரச படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி முன்னேறிச் செல்வது இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அரச படைகள் அவ்வாறு செய்யவில்லை. அப்படிச் செய்தால் பாரிய உயிரிழப்புகள் பொது மக்களுக்கு ஏற்படும். அதனால் பொது மக்களுடைய பாதுகாப்பை கவனத்தில் எடுத்தே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதனால் தான் 50000 தமிழ் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தப்பி வரக் கூடியதாக இருக்கிறது.

தேசம்நெற்: புலிகளை துடைத்தழிக்கின்ற பீக்கன் புரஜக்ற் என்கிற திட்டம் ஒன்றை இன்றைய அரசாங்கம் 2005ல் இந்தியா மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு வழங்கியதாகவும் அதற்கு அவர்கள் தங்கள் ஆதரவை இரகசியமாக வழங்கி இருந்ததாகவும் தேசம்நெற் அறிகிறது. இத் திட்டம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இந்த இணைத்தலைமை நாடுகள் இதற்கு ஆதரவு அளித்துள்ளனவா ?

உயர்ஸ்தானிகர்: இது என்ன விடயம் என்றே எனக்குத் தெரியாது. இது பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

தேசம்நெற்: எல்ரிரிஈ பெரும்பாலும் தங்கள் அனைத்து நிலப் பரப்புக்களையும் இழந்து விட்டனர். அரசாங்கம் பெரும்பாலும் யுத்தத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்த யுத்தத்திலும் பார்க்க கடினமானது தமிழ் மக்களுடைய  இதயங்களை வெற்றி கொள்வது. அதனை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகின்றது ?

உயர்ஸ்தானிகர்: இது தான் மிக முக்கியம். அரசாங்கம் பல்வேறு நம்பிக்கைத் தரக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறது. இலங்கை அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்காக சேர் பொன் ராமநாதன் சேர் பொன் அருணாச்சலம் போன்ற தமிழ் தலைவர்கள் உழைத்து உள்ளார்கள்.

தேசம்நெற்: இலங்கையில் தமிழ் மக்களுக்கு திட்டமிட்ட இனப்பாகுபாடு இல்லையென்று சொல்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட முறையில் இனப்பாகுபடுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. யாழ்ப்பாணப் பெண் குடி தண்ணீர் எடுக்க நீண்ட துரம் நடக்க வேண்டி உள்ளது. பாடசாலைகள் சுகாதார வசதிகள் பிரச்சினையாக உள்ளது. அப்படித்தான் மொனராகலையிலும். தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் ஒரே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அது தமிழர்களுக்கு மட்டுமான பிரச்சினையில்லை. இது ஒரு மூன்றாம் உலகநாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சினை.

தேசம்நெற்: கடந்த 30 வருட யுத்தத்தில் 100000 பேர்வரை கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். இந்த உயிரிழப்புகளில் எல்ரிரிஈ க்கு மட்டுமல்ல பாதுகாப்பு படையினருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள நீதித்துறையால் எந்தவொரு பாதுபாப்பு படையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. பண்டாரவளையில் 35 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்துள்ளீர்கள் அதிலும் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. இலங்கையின் நீதித்துறையில் எவ்வாறு தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியும் ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: இது உண்மையல்ல. இலங்கையில் உள்ள நீதித்துறை சட்டங்கள் பெரும்பாலும் குறம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளது. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறை கவனமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதனை எங்கு வந்தும் சொல்வதற்கு நான் தயாராக உள்ளளேன்.

ஒருவருக்கு தண்டனையை உறுதிப்படுத்த சாட்சியங்கள் அவசியம். ஆனால் பெருமளவு வழக்குகளில் ஆதாரபூர்வமான சாட்சியங்கள் கிடைப்பதில்லை. உங்களுடைய கேள்விக்கு எனது பதில் ஆதாரங்கள் இருந்தால் அரசாங்கம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும்.  நீதித்துறையில் ‘truth beyond reasonable dobut’ என்று குறிப்பிடுவார்கள்.  வழக்கின் போது கூறப்படுகின்ற உண்மையில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தினாலே குற்றம்சாட்டப்பட்டவருக்கு போதுமானது.

தேசம்நெற்:அதாவது இலங்கையில் உள்ள நீதித்துறை நிரபராதிகளை தண்டிக்கவில்லை. ஆனால் பல்வேறு குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளனர் என்பதை ஏற்றக் கொள்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: அப்படியில்லை. ஒருவரும் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல. ஆதாரங்கள்  அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்களுக்கு உள்ள பிரச்சினை ஆதாரங்கள் சாட்சிகள் இல்லை.

தேசம்நெற்: ஆதராங்களை பெற்று குற்றவாளிகளைத் தண்டிப்பதும் சாட்சிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா ?

உயர்ஸ்தானிகர்: மக்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலமே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்கிறது.

தேசம்நெற்: ஒரு இலங்கைப் பிரஜை அங்குள்ள சட்டத்துறையில் நம்பிக்கை கொள்ள முடியுமா ?

உயர்ஸ்தானிகர்: சட்டத்துறை என்பது ஒரு விடயம். அதில் தங்கி இருக்க முடியுமா என்பது அடுத்தது. ஏனைய துறைகளைப் போன்றது தான் இதுவும். ஒவ்வொருவரும் தமது கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். ஒரு தவறு ஏற்பட்டதற்காக அந்தத் துறையை நிராகரிக்க முடியாது. ஒரு தவறும் நிகழாத சட்டத்துறை ideal situation தான் இருக்கும்.

தேசம்நெற்: இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும்  எதிராக இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றங்கள் சுமத்தப்பட்டு அமெரிக்காவில் வழக்கு தொடரபட்டு உள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

உயர்ஸ்தானிகர்: இந்த வழக்கைத் தொடுத்தவர் முன்னாள் செனட்டர் புருஸ்பெயின். இவர் எல்ரிரிஈ இன் தீவிர ஆதரவாளர். எல்ரிரிஈ ஆல் இதற்காக அமர்த்தப்பட்டு உள்ளார். இனப்படுகொலை என்பது திட்டமிட்ட முறையில் ஒரு இனத்தை அழிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை. அதனை எழுந்தமானமாக பயன்படுத்த முடியாது.  இலங்கையில் தென் பகுதியில் கூடுதலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மற்றையது யுத்தத்தில் தோக்கின்ற தரப்பு எப்பொதும் யுத்தத்தில் வெல்பவர்கள் யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாகவே குற்றம்சாட்டுகின்றனர். 

தேசம்நெற்: இலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ‘வணங்கா மண்’ என்ற கப்பல் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றி இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

உயர்ஸ்தானிகர்: நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுனாமி காலகட்டத்தில் நிவாரணங்கள் பலராலும் அனுப்பி வைக்கப்பட்டது தானே. இலங்கையின் சுங்க நடைமுறைகளுக்கு அமைய இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை யாரும் அனுப்பி வைக்கலாம். ஆவணங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால் அதில் என்ன திரில். வன்னி மிஸனில் என்ன திரில்.

எந்த ஒரு கப்பலும் ஒரு துறைமுகத்தில் இருந்து புறப்படும் போதும் அது எந்தத் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு செல்கிறது என்று தெரியாத கப்பல் தனது கடல் எல்லைக்கு வந்தால் எந்த நாடும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.

தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு விட்டது. அபிவிருத்திகள் நடைபெறுகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அண்மையில் பள்ளிச்சிறுமி பாடசாலையில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முதலமைச்சர் பிள்ளையனுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். மக்கள் எப்படி உங்கள் ஆட்சியில் உங்கள் அரசில் நம்பிக்கை வைக்க முடியும் ?

உயர்ஸ்தானிகர்: 28 வருடங்கள் யுத்தம் நடைபெற்று சட்டமும் ஒழுங்கும் இல்லாது இருந்த பகுதி. தற்போது 10 மாதங்களாகவே அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 28 வருடங்களாக சட்டம் ஒழுங்கு இல்லாது இருந்த பிரதேசத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. அதற்கு காலம் எடுக்கும்.

அடுத்தது முதலமைச்சரின் கட்சியுடன் தொடர்புடையவர் செய்தார் என்பதற்காக முதலமைச்சர் மீது குற்றம் சுமத்த முடியாது.

ஒரு சிறுமியை இவ்வளவுக்கு கொடுமைப்படுத்தியவர்களைப் போன்றவர்களுக்கு மத்தியில் தான் நாங்கள் சட்டம் ஒழுகை நிலைநாட்ட முயற்சிக்கிறோம். இதுவெல்லாம் நீண்ட கால ஆயுதக் கலாச்சாரத்தின் விளைவுகள். சட்டம் ஒழுங்கை இவர்கள் மத்தியில் நிலைநாட்ட காலம் எடுக்கும்.

தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு இவ்வளவு காலம் ஆகியும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச்  செல்ல  முடியாமல் இன்னமும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனரே.

உயர்ஸ்தானிகர்: இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது. பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். இலங்கை ஒரு வறியநாடு. எங்களால் செய்யக் கூடியவற்றை செய்கிறோம்.

தேசம்நெற்: ஆனால் இலங்கை 1.5 பில்லியன் டொலர்களை பாதுகாப்புக்கு செலவிடுகிறது. உலகிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை உள்ளது.

உயர்ஸ்தானிகர்: இது இன்றைய அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல. தவிர்க்க முடியாதது. நாங்கள் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கு இந்த செலவு ஏற்படும்.

தேசம்நெற்:  கிழக்கு விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. எல்ரிரிஈ யை குறிப்பிட்ட காலத்திற்குள் இல்லாமல் துடைத் தெறிவோம் என்றும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எல்ரிரிஈ ஆங்காங்கே கெரில்லா தாக்குதலை நடாத்தி வருகிறது. ஒரு கெரில்லா அமைப்பை அவ்வளவு இலகுவாக துடைத்தெறிய முடியும் என்று நம்புகிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் அப்படி நம்பவில்லை.  ஆனால் ஏற்படப் போகும்  வெற்றிடத்தை அரசியல் நடைமுறையால் நிரப்ப முடியும் என்று அரசாங்கம் மனசார நம்புகிறது. அதனை அரசாங்கம் நிச்சயமாக நிரப்ப வேண்டும்.

தேசம்நெற்: தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டே தமிழ் மக்களின் அரசியல்   அபிலாசைகள் நிரப்பப்பட வில்லை என்பதே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அது எல்ரிரிஈ க்கு விளைநிலமாகவே அமையும். அதனாலேயே தமிழ் மக்கள் எல்ரிரியை நோக்கிச் சென்றனர்.

உயர்ஸ்தானிகர்:  அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனை ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். இந்த யுத்தம் முடிவடைய அரசாங்கம் வடக்கு கிழக்கை கைவிட்டால். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இளைஞன் எல்ரிரிஈ இடம்தான் செல்ல வேண்டும். அதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அரசாங்கம் எவ்வாறு நிரப்பப் போகின்றது ?

உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறது. இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க இருக்கிறது. பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

தேசம்நெற்: அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் நிறைவு செய்ய முடியும் என்று நினைக்கிறது. அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணம் இல்லை. அப்படித்தானே ?

உயர்ஸ்தானிகர்: அரசியல் தீர்வு பற்றித் தானே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராய்கிறது. 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள்.

தேசம்நெற்: ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையே.

உயர்ஸ்தானிகர்: அதனை அமூல்படுத்துவதற்கு எல்ரிரிஈ அனுமதிக்கவில்லையே.

SL_HC_Nihal_Jayasingheதேசம்நெற்: நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று. சரி ஆனால் அரசாங்க கட்டப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை.

உயர்ஸ்தானிகர்: இந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சில எல்ரிரிஈ க்கு சார்பாக இயங்குகின்றன என்ற பலமான சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு உள்ளது. இந்த மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இவ்வமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் எல்ரிரிஈ ன் கைகளுக்குச் செல்கிறது.

தேசம்நெற்: வன்னி மக்கள் மத்தியில் இலங்கை இராணுவம் பற்றிய அச்ச உணர்வு ஒன்று இருக்கிறது. அப்படி இருக்கையில் அச்சத்தில் வருபவர்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொருத்தமற்றது. மேலும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் சீவிக்க வேண்டும் என்பதால் பலர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அச்சம்கொள்வார்கள். அதனால் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் கையளிப்பதே பொருத்தமானதாக இருக்கும் அல்லவா ?

உயர்ஸ்தானிகர்: ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.

இது வந்து எம்மிடம் உள்ள ஒரு மூளைப் பதிவு. எங்களுக்கு எங்களுடைய மக்களைப் பார்க்கத் தெரியாதா? எங்களுக்கு எதற்கு வெளிநாட்டவர். எங்களுடைய மூளைப்பதிவில் வெள்ளைத் தோலுடையவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கின்றோம். நோர்வே சுவீடன் டென்மார்க் பிரிட்டன் என்று நாங்கள் ஏன் இவர்களுக்கு பின் செல்ல வேண்டும். நாங்கள் எங்களுடைய மக்களை கவனிப்போம்.

தேசம்நெற்: வன்னி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள்.  இலங்கை இராணுவம் என்பது இரத்த வெறியுடையது என்றே புலிகள் பிரச்சாரப்படுத்தி உள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களைக் குறைந்தபட்சம் இராணுவம் அல்லாத சமூக அமைப்புகளின் கைகளில் கூட அரசாங்கம் ஒப்படைக்க முன்வரவில்லையே ஏன் ?

உயர்ஸ்தானிகர்: இப்போது யுத்தம் நடந்தகொண்டிருக்கிறது. இது ஒரு முடிவுக்கு வரும்போது இந்த முகாம்கள் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடப்படும்.

தேசம்நெற்: எஸ்எல்எப்பி மட்டுமல்ல முக்கியமாக யூஎன்பி உட்பட இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இன்றைய இந்த மோசமான சூழலை ஏற்படுத்தி உள்ளன என்பதை நீஙகள் ஏற்றுக் கொள்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: இது ஒரு மிகவும் அரசியல் சார்ந்த கேள்வி. எனது பொறுப்பிற்கு அப்பாற்பட்டது அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

தேசம்நெற்: தமிழ் மக்கள் எல்லோரும் எல்ரிரிஈ என்ற பார்வை அரசாங்கத்திடம் உள்ளதா ?

உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் வேறு எல்ரிரிஈ வேறு. இது அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாகத் தெரியும். இந்த நம்பிக்கையீனம் தான் பெரும் பிரச்சினை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வரும் முன்னரே மேற்கு நாட்டு ஊடகங்கள் அவரை கடும் போக்காளர் என்றும் யுத்தப் பிரியர் என்றும் கட்டமைத்தனர்.

தேசம்நெற்: எல்ரிரிஈ பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: பிரபாகரன் ஒரு இராணுவ தந்திரோபாயம் மிக்க தலைவர் என்று தான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்ததும் ராஜிவ் காந்தியின் படுகொலையும் என்னை அந்த அபிப்பிராயத்தில் இருந்து விடுவித்தது. 

தேசம்நெற்: இன்றைய யுத்தத்திற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுவது பற்றி….. ஆரம்பத்தில் இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டது. இன்று இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச்  சேர்ந்து உள்ளது.

உயர்ஸ்தானிகர்: இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை அதற்கும் மேல் இந்தியாவே இந்த இயக்கங்களை உருவாக்கியது.

தேசம்நெற்: சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு எப்போதும் இருக்கிறதல்லவா?

உயர்ஸ்தானிகர்: ஆம். அந்த எதிர்ப்புணர்வு இருக்கிறது. அது இயல்பு தானே. இந்தியா தானே இந்த நிலைமையை தோற்றுவித்தது.

தேசம்நெற்: ஆனால் இந்தியா தானே இந்த யுத்தத்தில் இலங்கைக்கு உதவுகிறது.

உயர்ஸ்தானிகர்: இந்தியா இந்த யுத்த்திற்கு ஆதரவு தருகின்றது. ஏனென்றால் ராஜீவ் காந்தியை படுகொலை செய்து பிரபாகரன் மிகப் பெரிய பிழைவிட்டுவிட்டார்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர்- பா.நடேசன்

nadesan.jpgஇந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் செய்தியாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பேட்டி அளித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு காலம் (Post-LTTE Scenario), என பலர் கூறுகிறார்களே?
 
இங்கு நான் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிங்களப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?
 
சிங்கள மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த  ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.
 
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்கிற பேச்சு இருக்கிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
சிங்கள அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு  அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.
 
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.
 
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?
 
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

உலகத்திற்கு  உங்களுடைய கோரிக்கை என்ன?
 
அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிங்கள ஆயுதப் படைகளால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
 
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

‘சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவேயே நாம் இன்று எதிர்கொள்கிறோம்.’ அபுயுசுப் சிறி – ரெலோ பேச்சாளருடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Apuysef_Sri_TELO._._._._._. 

கொம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பின்னர் ஈபிஆல்எல்எப் இல் இணைந்து கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக செயற்பட்ட அபுயூசவ் தற்போது சிறி – ரெலோ அமைப்பின் பேச்சாளராக செயற்படுகிறார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

தேசம்நெற்:உங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் செயற்ப்பாடகள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

அபுயுசுப் : நாங்கள் தற்போது கொழும்பிலும் வட- கிழக்கு மாகாணங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். மாவட்டக் குழுக்கள் அமைத்து அந்த மக்கள் மத்தியில் செயற்;பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேசம்நெற் : எவ்வாறான அரசியல் வேலைத் திட்டங்களை முன் வைத்து செயற்படுகிறீர்கள் ?

அபுயுசுப் : ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் ஓர் தீர்வு கண்டு தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டத்துடன் அரசியல் முயற்ச்சியுடன் செயற்ப்படுகிறோம்.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் – 3 தசாப்த்தங்களின் பின்னர் தமிழீழம் கேட்டுப் போராடி இன்று தமிழ்பேசும் மக்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்? இயக்கங்கள் மக்களை வழிநடாத்தி போராட்டம் எப்படி வந்து நிற்கிறது என்பதை தெட்டத் தெளிவாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு சேதாரம் இல்லாமல் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது ஜனநாக உரிமைகளுடன் வாழக்கூடிய போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்றும் நீண்டகால மூலோபாயம் என்ன அதற்காக தற்போது செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவும் முக்கியமாக அரசியற் கட்சிகளுக்கு தேவை.

ஆயுதப் ஆபாராட்டத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜனநாயக போராட்ட அனுபவங்களில் இருந்தும் எமது தற்போதய புதிய ஜனநாயக வழிவகைகளை மூலோ பாயங்களை கண்டறிந்தாக வேண்டும். தற்பேததுள்ள வன்னிப் பிரதேசம் வட – கிழக்கு பிரதேசம் நாடுதழுவிய தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியும் கருத்திற் கொண்டே இந்த மூலோபாயத்தை கண்டறியும் போராட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசம்நெற் : தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்புக்கள் தான் தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்hபக ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் கடத்தல் கப்பம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு.

அபுயுசுப் : சித்தாந்த தெளிவின்றி ஆயுதம் ஏந்தியதின் விளைவே அன்றி வேறேதும் இல்லை. தனி நாட்டைப்பெற்று உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று ஆயுதம் ஏந்திப் போராடினர். ஆயுதம் ஏந்தியது பலாத்காரத்தை செய்வதற்காகவா? பலாத்காரத்தை எதிர் கொள்வதற்காகவா? என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறி விட்டோம்.

ஆயுதங்களைக் கொண்டு மக்களை அடக்கி விட்டோம் என்பதும் ஆயுதங்களால் மக்களின் அபிலாசைகளை  நிலைநிறுத்தவில்லை என்பதே இந்த நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவம். அதன் காரணமாகத்தான் பல பிரச்சினைகள் தோன்றின. ஆட்கடத்தல் கொலை கொள்ளை கப்பம் போன்ற விடயங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு அரசியல் இல்லாமல் ஆயுதம் ஏந்தியதன் விளைவேயாகும்.

தேசம்நெற் : அதை நிறுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?

அபுயுசுப் : ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் சக்தியினை நம்பி மக்கள் உரிமைக்காக போராடுவோம். கடந்த கால அரசியல் இராணுவ போராட்டங்கள் தற்போது எமக்கு அரசியல் பாசறைகளாக உள்ளன. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் புதிய நடைமுறைகளை வழிமுறைகளை கண்டு போராட வேண்டும் என்பதேயாகும்.

தேசம்நெற் : இந்தப் பாடத்திற்கு கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் 100 000 க்கு மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

அபுயுசுப் : உண்மை. உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதானால் போராட்டத்தை ஆரம்பித்த தங்கத்துரை அவர்கள் சர்வதேசம் போராட்டம் ஆயுதம் இவைபற்றியே சர்வதேச பாடங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டத்தை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அவர் உயிர் துறந்தார். அவர்கள் நினைத்த மாதிரி இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தவறவிடப் பட்டுவிட்டது. அவர்கள் எப்படி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தார்களோ அவையாவும் வெளிவர முன்பே அவர்கள் உயிர் நீத்ததும் ஒரு காரணமாகும். அதன் பின்னர் ஆரப்பித்த ஆயுதப் போராட்டம் சித்தாந்த தெளிவில்லாமல் போனதால்தான் அதனுடைய அத்தனை விளைவுகளையும் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். லட்சக் கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். நிர்க்கதியாகி இருக்கிறோம்.

தேசம்நெற் : இப்போ நீங்கள் குறிப்பாக ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை வைத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடந்த செயற்பாடுகளால் குறிப்பாக புலிகளால் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டனர். பின்பு முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற தங்கள் அடையாளத்தை நிராகரித்தனர். ஆனால் நீங்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடனேயே முஸ்லீம்களை பார்க்கிறீர்கள் ?

அபுயுசுப் : தான் எந்த இனம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ தமிழன் என்றோ தீர்மானிப்பது எப்படிப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்படும் என்றால் மொழிதான் தீர்மானிக்கும். மொழி மூலம்தான் சிந்திக்கிறார்கள். மொழிமூலம் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் தமிழன் அல்ல முஸ்லிம் என்று தமிழ் மொழியில்தான் சொல்கிறார். ஆகவே இது இடையிலே ஏற்பட்ட விபத்தும் விபரீதமானதுமாகும். இந்த நாட்டிலே நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் மொழி அடிப்படையிலேதான் வஞ்சிக்கப்பட்டோம். தமிழ் மொழி பேசியதால் தான் வஞசிக்கப் பட்டோம். ஆகவே விமோசனம் தமிழ்பேசும் மக்களின் விமோசனமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தமிழர்கள் முஸ்லிம்கள் என்று தனித்தனியாக இருக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே அடிப்படையில்தான் இருக்க முடியும்.

முஸ்லிம் என்பது இனம் அல்ல. அது ஒரு மார்க்க அடையாளம் மட்டுமே. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் அல்ல. பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அங்கே அரபுக்களுக்கும் – யூதர்களுக்குமான பிரச்சினையே தவிர அது முஸ்லிம் போராட்டமாக பார்க்க முடியாதே.

இதைவிட எதுசரி எப்படி பிரச்சினைகளை தீர்ப்பது அதற்கான சரியான நடைமுறை என்பதையே கவனத்தில் எடுக்க வேண்டும்.

சாதாரணமாக சொல்வோமானால் இன்று வட கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் 600க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் சிங்களவர்களுடைய வெற்றிடங்களை நிரப்புகின்றனவே அன்றி தமிழ்பேசும் மக்களிடையேயான வெற்றிடங்களை நிரப்பத் தயாரில்லை. எனவே இதை தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்த்து தீர்க்கவும் முடியாது.

முஸ்லிம்கள் தமிழ்பேசும் மக்களே என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் இன்றும் உள்ளது. பலர் இதில் தெளிவாக உள்ளார்கள்.

இந்த தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்கள் செறிந்த இடங்களின் வாக்குகளுக்காக முஸ்லிம் என்ற அடையாளர் உயர்த்தப்பட்டதே தவிர இது சரியாக தெளிவாக யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்படியான முடிவாகவும் இருக்க முடியாது. இந்த சரியான கருத்தை முஸ்லிம்களிடையே தெளிய வைக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும். அதேபோல வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட  தமிழர்களும் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்களது உரிமை இது. 

வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அத்தனை மக்களும் மீள குடியமர்த்துவது எமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். அந்த மக்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிப் போவது என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.

Apuysef_Sri_TELOதேசம்நெற் : இன்றைய இலங்கை அரசு பற்றிய உங்களது மதிப்பீடு என்ன ?

அபுயுசுப் : இலங்கை அரசு ஒரு முதலாளித்துவ அரசு. நான் ஒரு கமியூனிஸ்ட் இப்படித்தான் சொல்வேன். இனிவரப் போகும் யுஎன்பி அரசம் முதலாளித்துவ அரசுதான். முதலாளித்துவ நடைமுறைகளை கொண்ட அரசு. இந்த முதலாளித்துவ அரசில் முதலாளித்துவ வாதிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதல்ல. இந்த அரசுகள் சமாதானப்படுத்தப்ப முடியாத வர்க்க முரண்பாடு காரணமாக தோன்றி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதொன்று.

ஆளும் அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கத்தின் அடக்குமுறை யந்திரம்தான் அரசு என்று எமக்கு தெரியும். அதை பல்வேறு விதமாக ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த நாட்டடில் முதலாளித்துவம் இருக்கும் வரையில் முதலாளித்துவ அரசாகத்தான் இருக்கும். அது தனது நலனை பாதுகாக்கவே முற்படும். அது அந்த வர்க்க நலனுக்காக இனப்போராட்டத்தையும் தீவிரமடைய வைக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் இடையே இனக்குரோதத்தை வளர்த்தால்தான் தனது நலன் பேணப்படும் என்றால் அதை தந்திரமாகவும் நளினமாகவும் அது செய்து கொண்டிருக்கும். அதைத்தான் இவ்வளவு காலமும் செய்து கொண்டுவந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை மக்களின் தேசிய ஜனநாயக உரிமைக்காக தமிழபேசும் மக்களைத் தயார்படுத்துவதும் சிங்கள மக்களை தயார்படுத்துவதும் அவசியம். இதற்கு ஜனநாயக சக்திகளை நாம் இனம் கண்டு அந்த சக்திகளடன் இணைந்து செயற்பட வேண்டும். இலங்கையிலுள்ள ஒட்டுமொத்தமாக அனைத்து அல்லல்படுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்காக செயற்ப்படுவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டம் மேலும் வீரியமடையும் என்பது எமது கருத்து.

தேசம்நெற் : நீங்கள் உங்களை கம்யுனிஸ்ட் இடதுசாரி என்று கூறுகிறீர்கள். அப்படியான பின்னணி உடைய நீங்கள் ரெலோ என்ற அமைப்புடன் எப்படி உங்களை அடையாளம் காண்கிறீர்கள்?

அபுயுசுப் : நான் ரெலோ என்பதற்கு முன்பாக ஈபிஆர்எல்எப் டன் என்னை அடையாளம் கண்டு கொண்டேன் அங்கிருந்து தான் ரெலோவிற்கு வந்தேன். சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும்.

தேசம்நெற் : கம்ய+னிச சித்தாந்த பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் ஈபிஆர்எல்எப் இடமிருந்து ரெலோவிற்கு வருவதன் காரணம் என்ன?

அபுயுசுப் : அடிமைப்பட்ட மக்கள் அல்லவா? அந்த மக்களுக்காக போராடுவது கம்யூனிஸ்டின் கடமையல்லவா? சமூகத்தில் போராட்டம் நடக்கிறது என்றால் இங்கு கம்ய+னிஸ்ட்டுக்களின் பங்களிப்பு இருக்கத்தானே வேண்டும். கம்யூனிஸ்ட் அந்த பங்களிப்பை நிராகரிக்க முடியாதே கண்மூடித்தனமாக பார்க்காமல் இருக்க முடியாதே.

இலங்கையில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கா தமிழ்பேசும் மக்களின் பாட்டாளிகளையும் அழைக்க வேண்டிய கடமை உண்டல்லவா. தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் செயற்ப்பாட்டை முதலாளித்துவ வழியில் செல்லவிடாது இழுத்துச் செல்லும் கடமையை கம்யூனிஸ்ட் செய்ய வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் இந்த அமைப்புகளினுள்ளும் சென்று அரசியல் வேலைகளை செய்வதன் மூலம்தானே அது சாத்தியப்படும்.

தேசம்நெற் : ஆனால் துர்திஸ்டவசமாக அது நடக்கவில்லையே?

அபுயுசுப் : நடக்கவில்லை. சில தமிழ் மார்க்ஸிஸ்ட்டுக்கள் முயற்ச்சித்தார்கள். பலர் அதை கண்டு கொள்ளவில்லை அதே போல சிங்கள மார்க்ஸிஸ்ட்டுக்களும் இவர்களுடன் செயற்ப்படவில்லை. அது அவர்களடைய தப்பு. நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தான் ஈபிஆர்எல்எப் க்கு ஒரு அமைச்சராக போனேன்.

தேசம்நெற் : எந்த கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து?

அபுயுசுப் : இலங்கை மாஸ்கோ சார்பு கம்ய+னிஸ்ட் கட்சியிலிருந்து அந்த கட்சியின் அரசியல் குழு அங்க்த்தவனாக இருந்தவன். அங்கு இருக்கும் போது தோழர் நாபா நீங்கள் எமது அமைச்சரவைக்கு வாருங்கள் என்று கேட்டார். நானும் சென்றேன். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து செயற்ப்படும் கடமை ஒன்று இருந்தததை உணர்ந்து தான் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட சென்றேன். இந்த மக்களை சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தான் செயற்ப்பட்டடேன்.

தேசம்நெற் : இன்று வன்னியில் நடைபெறும் யுத்தம் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவாதத்தை அதன் உச்ச அளவிற்கு தூண்டியுள்ளதே?

அபுயுசுப் : இருபக்மும் உள்ள இனவாதிகள் தமது சுயநலன்களுக்காக இனவாதமாக  மாற்றிவிட்டார்கள். இந்த யுத்தத்தை தமிழர்க்கும் சிங்களவர்க்கு மிடையிலான யுத்தமாக மாற்றிவிட்டார்கள்.

தேசம்நெற் : இந்த இனவாதத்ததை கடந்து தமிழ் முஸ்லீம் மலையக சிங்கள மக்கள் ஒன்னிணைந்த போராட்டத்தை நடாத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

அபுயுசுப் : நிச்சயமாக. இன்னும் ஆழமாக நம்புகிறேன். அதுதான் ஒரே வழி. இலங்கையின் விமோசனத்திற்கு தமிழ் மக்களின் சிங்கள மக்களின் முஸ்லீம் மக்களின் விமோசனத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கையின் விமோசனத்திற்காக இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கான சமானிய அன்றாட ஜீவியத்திற்க்காக பாடுபடும் மக்களின் விமோசனத்திற்கு அனைத்து மக்களும் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான கொள்கையில் செயற்ப்பட வேண்டும். அது இப்போது செய்ய முடியாது. இப்போது அழைக்க முடியாத. அழைத்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இப்போது யுத்தம் நடக்கிறது. இந்த யுத்த்தின் விளைவு என்ன? இதிலிருந்து நாம் மக்களை அரசியல் மயப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு பாரிய பணியாகும். ஒரு பாரிய காரியமும் ஆகும.; அந்த காரியத்தை சித்தாந்த தெளிவு உள்ளவர்களாலேயே நடாத்த முடியும். அது மட்டுமல்ல அவை அன்றாடம் செய்யப்பட வேண்டியவைகளுமாகும்.

இந்த நாட்டிலே உண்மையான  தேசிய ஜக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்பேசும் மக்களும் சிங்கள மொழிபேசும் மக்களும் அந்த மக்கள் மத்தில் உள்ள அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும் ஒன்னிணைய வேண்டும். அப்போது தான் தேசியங்களின் விடுதலை பற்றி பேச முடியும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களும் சுபீட்சம் பெறமுடியும்.

அதற்காக போராடுவோம் எமது போராட்டத்தில் அதுவும் ஒரு அம்சம். தமிழ்பேசும் மக்கள் படும் கஸ்டம் போலவே பெரும்பாலான சிங்கள மக்களும் கஸ்டப்படுகிறார்கள் அவர்களக்காகவும் போராட வேண்டியது தெளிவடைந்த அரசியற் கட்சிகளின் கடமையாகும். இது இந்த யதார்த்த்ததை புரிந்து கொண்ட மக்கள் சிந்தனையாளர்களைக் கொண்ட கட்சியால்த்தான் அது முடியும்.

தேசம்நெற் : இறுதியாக தேசம்நெற் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்களா ?

அபுயுசுப் : சொல்வதற்கில்லை. இனி செய்தாக வேண்டும். செய்ய நிறையவே உண்டு. செய்ய வேண்டிய கடமைகளைப் புரிந்து கொண்டு தெளிவான பார்வையுடன் தெளிவான போராட்டததை தியாக மனப்பானமையுடனும் முன்னெடுத்துச் செல்வோமேயானால் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் மக்களும் ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் இங்கே வாழ முடியும்.

எங்கள் போராட்டம் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருடன் இணைந்து நடத்தப்பட்டு இருந்தால் எங்கேயோ போயிருக்கும். ஜேவிபி கூட அந்த தவறை செய்துள்ளது.

ஜேவிபி யின் திட்டமே ‘சிங்கள இனவெறியைத் தூண்டி பதவிக்கு வந்து நியாயமான விடயங்களை செய்வோம். அதில் தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க வைப்போம்’ என்ற உபாயம். அவர்கள் குட்டிப்பூர்சுவாக்கள் தானே இப்படியான உபாயங்களைத் தான் அவர்கள் வளர்ப்பார்கள். குட்டிப்பூர்சுவாக்களின் உபாயம் அப்படித்தான் இருக்கும்.

அவர்கள் பாரிய பின்னடைவை சந்தித்தார்கள் அவர்களே இரண்டாக பிளவடைந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் இவர்களின் பேச்சை நம்பவில்லை. எந்த சிங்கள மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்கள் கடந்த தேர்தலில் அவர்களை நிராகரித்து விட்டனர்.

அந்த இருதரப்பு ஜேவிபி யினரையும் மக்கள் நிராகரித்தது விட்டனர். உபாயத்தை சரியாக வகுக்காதுவிட்டால் அந்த உபாயம் வர்க்க எதிரியின் கையில் ஒரு ஆயுதமாகிவிடும்.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் எந்த இனவாத உபாயத்தை எடுத்தார்களோ அந்த உபாயம் இவர்களுக்கு எதிராக போய்விட்டது.

பிரபாகரன்தான் போரை முன்னின்று நடத்துகிறார் – பா.நடேசன்

nadesan.jpgபிரபாகரன் எங்கும் ஓடவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?

நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.

தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.

கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?

நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.

இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?

நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.

இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.

‘வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர யாரும் முன்வருவதில்லை. எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள்’ உதயராஜா சிறி ரெலொ நேர்காணல் : த ஜெயபாலன்

Uthayarajah_Sri_TELOபாலசிங்கம் உதயராஜா – சிறி ரெலோவின் செயலாளர் நாயகம். ஜரோப்பாவிலிருந்து 2004ல் மீண்டும் இலங்கை சென்று சிறீ ரெலோவை ஆரம்பித்தார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: சிறீ ரெலோவை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?

உதயன்: புலிகள் ரிஎன்ஏ யிலுள்ள அமைப்புகளை தனது ஆதரவு அமைப்பாக செயற்படுத்தத் தொடங்கியபோது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துப் போய்விட்டார்கள். இது ரிஎன்ஏயிலுள்ள எல்லா அமைப்பினர்க்கும் பொருந்தும். ரெலோ ஈபிஆர்எல்எவ் ரியுஎல்எவ் போன்ற தலைவர்களை கூப்பிட்டு புலிகள் கதைத்துவிட்டு கடந்தகால பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் மறைத்துவிட்டு தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு நாங்கள் – ரெலோவில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- ஒன்றாக தனித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகள் தமக்கு ஆதரவளித்த இயக்கங்களை தமக்காக செயற்பட வைத்துவிட்டனர். எமது தலைவரையும் 300 போராளிகளையும் கொன்ற புலிகள் தற்போதய தலைமையை கூப்பிட்டு கதைத்து தமக்காக பேச வைத்துள்ளார்கள். இதேபோல ஈபிஆர்எல்எவ் இலும் நடந்துள்ளது.

நாங்கள் ரெலோவின் தனித்துவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்காகவும் சிறீ ரெலோவை ஆரம்பித்தோம். இதேபோல நாபா ஈபிஆர்எல்எப் உருவாக்கப்பட்டுளளது.

தேசம்நெற்: இப்போது உங்கள் சிறீ ரெலோவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எங்கெங்கே உங்கள் அலுவலகங்கள் செயற்ப்படுகிறது?

உதயன்: முழுநேர அங்கத்தவர்களாக 250 பேர் மட்டிலும் வட – கிழக்கு மாகாணங்கள் எல்லாவற்றிலம் செயற்ப்படுகின்றோம்.

தேசம்நெற்: உங்களுக்கான பாதுகாப்பு விடயங்களை யார் செய்து கொள்கிறார்கள்?

உதயன்: எல்லா முகாம்களுக்கும் பொலீசார் பாதுகாப்பு தருகிறார்கள் வவுனியாவில் யாழ்பாணத்தில் மட்டக்களப்பில் கொழும்பிலும் பொலீஸ் பாதுகாப்பு அரசினால் தரப்பட்டுள்ளது.

தேசம்நெற்: இன்று இரண்டு ரெலோ இயங்குகிறது. ஒன்று புலிகளுடனும் மற்றையது அரசடனும் சேர்ந்து இயங்குகிறது. இதில் என்ன தனித்துவம் கொள்கை உள்ளது?

உதயன்: ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் ரெலோ என்று இருந்தால் கூட நல்லது ஆனால் அப்படி இல்லை அவர்கள் பல காலமாக ரெலோ என்று அறிக்கை விடுவதில்லை அவர்கள் புலி சார்பான பிரச்சாரங்களையே செய்கிறார்கள்.

தேசம்நெற்: இன்றைய காலத்தில் அப்படி ஒரு பிரச்சாரம் தேவையா? ரெலோ ஈபிஆர்எல்எப் என்று கட்சி அரசியல் தேவையா? மக்கள் தேவைகள் பற்றி மக்கள் சார் அரசியல் தானே பேச வேண்டும். ஏன் நீங்கள் கட்சி அரசியல் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உதயன்: மக்கள் கட்சி என்று ஒன்று இல்லையே. புலிகள் தாங்களும் மாவீரர்களும் பற்றித்தான் கதைக்கிறார்களே அல்லாமல் இதில் மக்கள் சம்பந்தப்படவில்லை. மக்கள் சார்ந்த நடவடிக்கைகள் என்று புலிகள் சொல்வதற்கு எதுவுமில்லை. புலிகள் கடற்புலிகள் ஆகாயப் புலிகள் என்று சொல்லுகினமே தவிர மக்களின் தேவைக்கான புலிகள் என்று ஒன்று இல்லைத்தானே?

புலிகளால் பாதிக்கப்பட்டோம் என்பது இரண்டாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் என்று யார் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் என்ன மக்கள் வேலைகள் செய்கிறீர்கள்? மக்கள் சார்பான என்ன கொள்கைகள் வைத்திருக்கிறீர்கள்? மக்கள் தொடர்பாக என்ன சேவைகள் செயற்ப்பாடுகள் செய்கின்றீர்கள்?

உதயன்: நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்கான சேவைகளை செய்யும் பணியாளர்களாக இருக்கிறோம்.

தேசம்நெற்: அதைத்தான் கேட்கிறேன். நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

உதயன்: இன்று புலிகள் பிரதேசத்திலிருந்து வரும் மக்களுக்கு என்ன செய்யலாம். எப்படி உதவலாம் என்று அரசுடன் பேசுகிறோம். இது பற்றி அரச தரப்பினரிடமும் மற்றவர்களிடமும் பேசுகிறோம்.

வன்னியிலிருந்து வரும் மக்களின் பாதுகாப்பும், அப்படி வந்து சேர்ந்த மக்களின் குடும்பங்கள் பிரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஒன்றுபடுத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம்.

உதாரணமாக வன்னியிலிருந்து தப்பி வந்த மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் பட்சத்தில் அச்செய்தி அறிந்து ஏனையவர்களும் புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதிகளை மீறி வெளியேறுவர்.

தேசம்நெற்: ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வரும் மக்களை ஆயுதக் குழுக்கள் துன்புறுத்துகிறார்கள் என்று பல்வேறு செய்திகள் வெளிவருகிறது.

உதயன்: ஓம்

தேசம்நெற்: ஆப்படியாயின் வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் யாரை நம்புவது? புலிகளையா? அரசாங்கத்தையா? ஆயுதக் குழுக்களையா? எல்லோரும் மக்களுக்கு எதிராகத்தானே செயற்ப்படுகிறார்கள்?

உதயன்: அது சரி அப்படியான நிலையில்த்தான் வன்னி மக்கள் இருக்கிறார்கள். உடைத்துக் கொண்டு போவதா அல்லது இப்படியே இருந்து சாவதா? இங்கே வவுனியாவில் ஆட்களை கடத்துகிறார்கள் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்தி அவர்களை அடையத்தான் செய்யும்.

தேசம்நெற்: இவற்றை தடுத்து நிறுத்த நீங்கள் சிறீ ரெலோ அல்லது மற்ற அமைப்புக்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

உதயன்: மற்றவர்களைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால் புலிகள் வன்னியில் மோசமான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் வன்னியில் இராணுவம் பெண்களை கற்பழிக்கிறது கொடுமை செய்கிறது என பிரச்சாரம் செய்கிறார்கள்.

தேசம்நெற்: அண்மையில் உங்கள் அமைப்பு உறுப்பினர்கள் கூட கொல்லப்பட்டு உள்ளனர் அல்லவா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?

உதயன்: இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைப்புடன் கதைக்கப்பட்டுள்ளது அதற்கு பதில் கிடைக்குமென நம்பவில்லை. மக்களுக்கு தெரியும் யாரால் செய்யப்பட்டுள்ளது என்று.

தேசம்நெற்: ஒரு அரசியல் குழுவாக செயற்ப்படும் உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு சாதாரண மகனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

உதயன்: நான் இதைத்தான் அரசுக்கும் எடுத்து சொல்லியுள்ளேன்.

தேசம்நெற்: அப்படியாயின் நீங்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சொல்கின்றீர்கள்?

உதயன்: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே புலிகளின் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற முற்படுவர் என்பதே எனது கருத்து.

தேசம்நெற்: இப்போது  உங்கள் அமைப்பின் மீதும் மக்கள் விரோதச் செயற்ப்பாடுகள் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதே?

உதயன்: கடந்த வாரம் நெருப்பு இணையத் தளத்தில் வந்த செய்தியும் இது பற்றியும் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். மக்களைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் தெரியும் யார் இதை செய்திருக்கின்றார்கள் என்று.

தேசம்நெற்: தற்போது வவுனியாவில் உங்களுக்கும் புளொட்டுக்கும் பல முரண்பாடுகள் வளர்ந்துள்ளது. அண்மையில் உங்களுடைய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டும் உள்ளனர். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உதயன்: இது பற்றி புளோட் சித்தார்த்தனுடன் கதைத்து உள்ளோம். அவர் இது தொடர்பாக தனது தோழர்களுடன் கதைத்து விட்டு பதில் தருவதாக கூறியுள்ளார். அப்படித் தவறு நடைபெற்றால் அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசம்நெற்: நீங்கள் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து செயற்ப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

உதயன்: ஈபிடிபி யுடன் போதிய நட்புறவு உள்ளது. அவர்கள் ஈபிடிபி நாங்கள் ரெலோ.

தேசம்நெற்: ஈபிடிபியுடன் சேர்ந்து இயங்குவது வேலை செய்வது தேர்தல்களை ஒன்றாக சந்திப்பது சம்பந்தமான வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது சம்பந்தமாக பேசுகிறோம். எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேசி முடிவுகள் எடுப்போம்.

தேசம்நெற்: உங்கள் அமைப்பு சார்பான பொறுப்புக்களில் உள்ளவர்கள் சம்பந்தமாக சொல்ல முடியுமா?

உதயன்: ஒழுங்கமைப்பாளரும் பேச்சாளரும் திரு அபுயூசப் இங்கு என்னுடன் உள்ளார்

தேசம்நெற்: எனைய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

உதயன்: வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு அகிலன்
யாழ் மாவட்டப் பொறுப்பாளர் திரு தாஸ்
திருகோணமலைப் பொறுப்பாளர் திரு பரமேஸ்வரன்
மட்டக்களப்பு பொறுப்பாளர் திரு நாதன்
மன்னார் பொறுப்பாளர் திரு சுதன்

தேசம்நெற்: எப்ப அடுத்த தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்?

தேசம்நெற்: நீங்களும் உங்கள் கட்சியும் தேர்தலில் பங்கெடுப்பீர்களா?

உதயன்:  நிச்சயமாக பங்கேடுப்போம். கூட்டாக செயற்ப்படுவது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். முடிவு எடுக்கவில்லை. மற்றய கட்சிகளுடனும் அரசடனும் கதைத்துள்ளோம்.

தேசம்நெற்: உங்கள் சிறீரெலோ கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளை ஏற்ப்படுத்தியுள்ளது. கிழக்கில் கருணா – பிள்ளையான் மற்றும் டக்ளஸ் என்று பிரித்து அரச பிரித்தாளும் தந்திரத்தை வைத்திருக்கிறது. இந்த சிறீரெலோவைக் கூட உருவாக்கிய விடயம் அப்படித்தான் என்று பார்க்கப்பட முடியும்தானே!

உதயன்: நிச்சயமாக இல்லை. நாங்கள் மட்டுமல்ல மலையக கட்சிகள், ஈபிஆர்எல்எப் போன்ற பல கட்சிகள் இப்படித்தான் உடைந்துள்ளது. இது அரசு உருவாக்குகிறது என்று சொல்ல முடியாது.

தேசம்நெற்: நீங்கள் சிறீரெலோ அரசிடம் அரசியல்த் தீர்வை முன்வைக்குமாறு அழுத்தங்களை கொடுக்கிறீர்களா?

உதயன்: நிச்சயமாக அது மட்டுமல்ல ஜனநாயக நடைமுறைகளையும் செயற்ப்படுத்துமாறும் கேட்டுள்ளோம்.

தேசம்நெற்: இந்த அரசியல்த் தீர்வு சம்பந்தமாக அரசு எல்லா கட்சிகளையும் கூப்பிட்டு ஒரு சந்திப்பை நடாத்தியதா?

உதயன்: இல்லை நடாத்துவதாக சொல்லியுள்ளது.

தேசம்நெற்: வன்னியிலிருந்து வெளிவரும் தமிழ் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசு ஏன் தன்னுடன் இயங்கும் தமிழ் அமைப்புகளிடம் கூடிப் பேசவில்லை?

உதயன்: இல்லை புலிகள் கட்டவிழ்த்து விடும் பொய்ப் பிரச்சாரங்கள் அதிகம். பெண்களைக் காணவில்லை, கொலை செய்யப்பட்டு உள்ளனர் இப்படி பல. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது உண்மை.

தேசம்நெற்: ஆனால் அரசாங்கம் கிட்டத்தட்ட நாஜி முகாம்கள் வைத்திருந்தது போன்று ஒன்றை திட்டமிட்டு செயற்ப்படுத்துகிறது. இதில் குடும்பங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. உறவினர்கள் பார்வையிடவும் தடை விதித்து இருக்கிறது.

உதயன்: புலிகளும் மக்களோடு மக்ளாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை அடையாளப்படுத்துவது சம்பந்தமாகவும் பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் புலிகளின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே சில பெற்றோர்களையும் பிள்ளைகளையும் இராணுவம் பிரித்து வைத்துள்ளது. புலிகளில் இப்படியான பல நிலைமைகள் உண்டு.

தேசம்நெற்: தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டுமுன்னணி உருவாக்கும் வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது பற்றி எல்லோரிடமும் கதைத்துள்ளோம். புளொட் சித்தார்த்தன், கூட்டணி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப், கிழக்கு தலைவர்கள் எல்லோரிடமும் கதைத்த போதும் யாரும் முழுமனதுடன் செயற்ப்பட முன்வருவதாக தெரியவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் அமைப்புக்களின் திட்டங்கள் பற்றி கதைக்கிறார்களே அன்றி ஒன்னிணைவு பற்றி கதைக்கிறார்கள் இல்லை.

தேசம்நெற்: மக்கள் நலன்தான் இந்தக் கட்சிகளுக்கு முக்கியம் என்றால் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம் அல்லவா? ஏன் ஒன்று சேர முடியாதுள்ளது?

உதயன்: இதற்கு யாரும் முன்வருவதில்லை என்றே சொல்லலாம். எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள் எம்மிடையே ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாகும். இன்றய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும். பல விடயங்களைச் சாதிக்கலாம்.

தேசம்நெற்: இந்த மகிந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ் யுத்த முடிவில் ஒரு அரசியல்த் தீர்வை முன்வைக்கும் என்று நம்புகிறீர்களா?

உதயன்: எல்லா தரப்பினரும் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாமும் எதிர்பார்கிறோம்.

”பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார்.” அமைச்சர் முரளிதரன் லங்காதீபக்கு வழங்கிய செவ்வி.

karuna1.jpgகேள்வி : புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?

பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய விடயங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் எடுத்தியம்பி என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய ஒரே நோக்கு பயங்கரவாத தாக்குதல்களாகவே இருந்தது, அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலே போய்விட்டது, பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் ஈடுபாடற்ற தன்மையையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. மற்றது ஜெனீவா பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும் அதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்திருக்கவில்லை. இந்த நிலைமை காரணமாக எனக்கு எமது தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்படவே நான் அந்த அமைப்பிலிருந்து விலகினேன். தமிழ் மக்களின் விடிவிற்காய் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு குழம்பிப்போயிருந்த பிரபாகரனின் பாசிச போக்குத்தான் என்னை இந்த ஜனநாயக நீரோட்டத்தில் குதிக்க வைத்தது.

கேள்வி : நீங்கள் த.ம.வி.புலிகளிலிருந்து விலகி சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து உறுப்பினராவதற்கான காரணம் என்ன?

பதில் : த.ம.வி.புலிகள் அமைப்பு ஒரு எதிர்காலம் இல்லாத அமைப்பு. தற்பொழுது அக்கட்சியில் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர். பிள்ளையான், பத்மினி, பிரதீப் ஆகியோரே உள்ளனர். எதிர்காலம் இல்லாத அக்கட்சியிலிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அதனால்தான் என்னுடன் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பலரும் சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு நீங்கள் பகீரத பிரயாத்தனம் செய்திருந்தீர்களல்லவா?

பதில் : ஆம், அது முற்றிலும் உண்மை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிக்கு புலிகள் என்ற பதம் பொருத்தமான தொன்றல்ல,  இந்நாட்டின் சகல மக்களுக்கும் புலி என்ற பெயரில் அதிகபட்ஷ விருப்பமின்மையையே காணக்கூடியதாக இருக்கிறது. அதே போல் இந்நாட்டு மக்களுக்கு புலிகளால் பாரிய பொருளாதார இழப்புக்களும்,  அதே போல் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு,  அவர்களுடைய வீடு வாசல்,  அசையும் அசையா சொத்துக்கள் அழிந்திருப்பது மட்டுமில்லாது,  பல உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்,  அதிலும் பலர் அங்கவீனமடைந்துமுள்ளனர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அழிந்து போயிருக்கிறது,  இப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய புலிகள் என்ற பெயரை த.ம.வி.புலிகள் அமைப்பின் பெயரிலிருந்த நீக்குவதற்கு முயற்சித்தேன்,  அத்தோடு புலி என்ற பெயரிலிருக்கும் அமைப்பினால் (தற்கால கட்டத்தில்) தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு,  அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முடியாது என்ற யதார்த்த நிலமையை உணர்ந்த பின்புதான் நான் அந்த முடிவினை எடுத்திருந்தேன்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தை அகற்றுவதற்கு பிள்ளையான் விரும்பவில்லை. நீங்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் மூல காரணமா?

பதில் : எதிர்காலமே இருண்டு போயிருக்கும் அக்கட்சியிலிருந்து கொண்டு முன்னேற்றப் பாதையில் எமது மக்களுடன் பயணிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன், முன்நோக்கிச் செல்லும் பயணம். த.ம.வி.புலிகள் கட்சிக்கு எதிர்காலமே இல்லாத காரணத்தினால் நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.

கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கோபமாக இருக்கிறீர்களா?

பதில் : இல்லை, அப்படியொரு கோபமுமில்லை,  எங்கள் இருவரினதும் எதிர்பார்ப்பு மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களுடைய ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்வதுமேயாகும். மக்களின் எதிர்காலம் பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. த.ம.வி.புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்க பிள்ளையான் விரும்பவில்லை, ஆனால் நான் விரும்பினேன். கட்சிகளுக்குள் தலைமைத்துவ பிரச்சனை என்பது பொதுவானது. இன்றுகூட ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவைகள் சாதாரணமானவைகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில்,  மக்களின் சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டுமே தவிர,  தனிப்பட்ட வைராக்கியங்களுடன் கூடிய அரசியலுக்கு இடமில்லை.. யார் தன்னலமற்ற மக்கள் சேவகன் என்பதை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்கின்ற எஜமான்கள். பெயரிலுள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு பிள்ளையானக்கு விருப்பமில்லை, அவ்வளவுதான் இதில் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு வாய்ப்பில்லை.

கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் உங்களுடன் சேர்த்து யார் யாரெல்லாம் இணைந்து கொண்டார்கள் என்று கூற முடியுமா?

பதில் : ஆம்,  என்னுடன் த.ம.வி.புலிகளுடன் தொடர்புபட்ட சுமார் 2000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்கள்.

கேள்வி : நீங்கள் என்ன எதிர்பார்ப்புடன், நோக்கத்துடன் சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்?

பதில் : எனது அரசியல் பிரவேசத்துடன் கிழக்கில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்த்தேன், அது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அதனால்தான் த.ம.வி.புலிகளிடமிருந்து வெளியேறினேன். நாட்டின் அனேக மக்களின் ஆசிர்வாதத்தின் மத்தியில்,  கிழக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தி,  அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் முதற்கொண்டு பாகுபாடற்ற சேவையினை எதிர்காலத்தில் வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்த ஒரு நிலமை ஏற்பட்டு எமது மக்கள் கௌரவத்துடனும், போஷாக்குடனும்,  பொருளாதார கல்வி வளர்ச்சியுடனும் ஏனைய சமூகங்களுக்குக் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் அவர்களுக்குக்கிடைத்து,  ஏனைய சமூகங்கள் போல் அசுர வேகத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதற்காகவுமே சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.

கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தற்பொழுது அவற்றுக்கு என்ன நடந்தது?

பதில் : குறிப்பாக எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்களைப் பாவிப்பது பயங்கரவாத அமைப்பாகும். நாங்கள் பயங்கரவாத அமைப்பல்ல. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடமிருந்த ஆயுதங்களை கையளித்து விட்டோம். என்னுடன் இருப்பவர்கள் ஜனநாயக வழிக்குத்திரும்பி விட்டார்கள்,  தற்பொழுது எம்மிடம் ஆயுதங்களில்லை.

கேள்வி : அப்படியானால் உங்களுடைய பாதுகாப்பு?

பதில் : ஏனைய அமைச்சர்களைப் போன்று எனக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : நீங்கள் புலிப் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இரக்கிறதா?

பதில் : இலேசான புன்னகையுடன் பதில் : நான் அப்பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்பொழுது வெளியேறினேனோ, அன்றிலிருந்து நான் அவ்வமைப்பின் முதலாவது இலக்காகத்தான் இருந்து வருகிறேன்.

கேள்வி : தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பானது,  தங்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா?

பதில் : ஆம்,  திருப்தியானதாக இருக்கின்றது.

கேள்வி : வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு, நாட்டிற்கு சிறந்ததொரு சேவையை செய்யமுடியுமென்று கருதுகிறீர்களா?

பதில் : ஏன் முடியாது? எனக்கு கிடைத்திருக்கும் அமைச்சு நாட்டின் முக்கியமானதொரு பொறுப்புவாய்ந்த அமைச்சாகும். இன்று நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும், ஒற்றுமையின்மையும்தான். மீண்டும் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலர வேண்டுமாகில் அனைத்து இனங்களும் விட்டுக் கொடப்புக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், இது பேச்சளவில் இல்லாமல் அதற்கான களம் அமைத்துக் கொடக்கப்பட வேண்டும். அந்த நிலமையை ஏற்படுத்தவதற்கு எனது இந்த அமைச்சினூடாக பல வேலைத்திட்டங்களை செய்யலாம் என்று கருதுகிறேன். நான் அமைச்சர் டீயூ குணசேகர அவர்களுடன் இணைந்து சேவை செய்ய கிடைத்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் முதர்ச்சியுள்ள, அனுபவம் மிக்க சிறந்த அரசியல்வாதி கௌரவ டீயூ குணசேகர அவர்கள்,  அவர் எனக்கு எல்லா வழிகளிலும் பக்க பலமாக, உதவியாக இருக்கின்றார்.

கேள்வி : நீங்கள் இந்த நிலையை அடைவதற்காகவே, ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தினீர்கள் என்று யாராவது சொன்னால்………

பதில் : பலரும் பத்தையும் கதைப்பார்கள். காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம் பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக்கூடாது. ஜனநாயகத்திற்கு வந்துவிட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். மேன்மை தங்கிய ஜனாதிபதின் சகோதரர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களிடமிருந்து எனக்கு விசேடமாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. நான் அமைச்சுப் பதவிக்காக காத்திருந்தவனுமல்ல,  நான் அதைக்கேட்டதுமில்லை,  எனக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தவர் ஜனாதிபதி அவர்கள். அவருடைய வேண்டுகோளிற்கு இணங்கினேன். இதில் எந்தவிதமான குறைபாடுகளும் எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : யுத்தம் தொடர்பான கேள்வி ஒன்று, பிரபாகரனின் இன்றைய நிலை என்ன?

பதில் : இக்கேள்வி தொடர்பான நல்லதொரு விரிவான பதிலினை இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். பிரபாகரன் தற்பொழுது அவருடைய படைகளில் மிஞ்சிய நன்கு பயிற்றப்பட்டவர்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார். இதற்காகத்தான் அப்பாவி மக்களை தனது கவசமாக வைத்திருக்கிறார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.