நேர்காணல்கள்

நேர்காணல்கள்

தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!! : பாகம் 26

பாகம் 26: தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 26 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 26

தேசம்: பின்தள மாநாடு பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதில நீங்கள் பரந்தன் ராஜன் பி.எல்.ஓ பயிற்சி முடித்துவிட்டு இங்க வரேக்க, காக்கா சிவனேஸ்வரன் கொலை செய்யப்படுகிறார். அந்த முரண்பாட்டில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறும் போது 300 – 350 போராளிகளும் சேர்ந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்லுறீங்க. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரைக்கும் கதைக்கப்பட்ட விடயங்களை பார்க்கும் போது, பரந்தன் ராஜன் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்ததாக எங்கேயும் சொல்ல வில்லை. அப்படி அவருக்கு பாத்திரம் இருக்கா? முற்போக்குப் பாத்திரம் வகித்ததாக சொல்லப்படுவது அல்லது இடதுசாரி சிந்தனை அரசியலில் சொல்லப்பட்ட தீப்பொறி குழு ஆட்கள் வெளியேறும்போது அவர்கள் மூன்று பேர்தான் போகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? ராஜனுக்கு பின்னாடி எப்படி இவ்வளவு 300 – 350 போராளிகள் சேர்ந்து பிரிகிறார்கள் என்றால் அவர் ஒரு சக்தியாக இருந்திருக்கிறார் தானே? அது எவ்வாறு?

அசோக்: ஒருவரை நம்பி நாம் செல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒரு நம்பிக்கைதான். நீங்கள் ஒரு நெருக்கடியான உயிர் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு நிலையில், யார் உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் தருகிறார்களோ, உங்கள் மீதான அக்கறையை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பின்னால்தான் போவீர்கள். இங்க வந்து முற்போக்கு கருத்துக்களும், மாக்சிஸ ஐடியோலொஜிகளும் துணை புரியாது. மாக்சிஸ ஐடியோலொஜி உள்ளவர்கள், தோழர்களை காப்பாற்ற கூடிய வல்லமை இருந்தால் அவர்களுக்கு பின்னால போவார்கள். அது ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்எடுப்பதற்கான சாத்தியத்தை வழங்கக் கூடும். ஆனால் உயிர் ஆபத்துக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் போன்ற விடயங்களைத்தான் தோழர்கள் முதல் கவனத்தில கொள்வாங்க.

இங்க கோட்பாடு அரசியல் என்பது இரண்டாம்பட்சமாகி விடும். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறின பிற்பாடு அவர்களுக்கு பின்னால போகாதது ஏனென்று கேட்டால் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கேல. அவர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்களேயொழிய இவர்கள் ஒரு ஸ்தாபனத்தை கொண்டு நடத்துவார்கள் என்றோ தோழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றோ வழி காட்டுவார்கள் என்றோ எந்த நம்பிக்கையும் தோழர்களுக்கு வரவில்லை.

அடுத்தது பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவங்கள் வெளியேற முதல் யோசித்திருக்க வேண்டும் தங்களால் வந்த தோழர்கள் சந்தேகப்பட்டு பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கேல. அப்போ அடிப்படைப் பிரச்சனை என்னவென்று கேட்டால் பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இருக்கேல. உண்மையிலேயே அவர்கள் பைட் பண்ணியிருக்க வேண்டும்.

அனைத்து முகாம்களுக்கும் போய் வருபவர் தோழர் ரகுமான் ஜான். நிறைய தோழர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது உள்ளுக்க இருந்து ஃபைட் பண்ணி இருக்க வேண்டும். இனி புளொட்டில் இருப்பது பிரயோசனம் இல்லை என தோழர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டு வெளியேறி இருந்தால் தோழர்கள் மத்தியில் பிரச்சனை உருவாகி அவர்களும் இவங்களோட வெளியேறி இருப்பாங்க. முகுந்தனால் எதுவும்செய்ய முடியாமல் போய் இருக்கும்.

ராஜனைப் பொறுத்தவரை இதுதான் நடந்தது. ராஜனோடு தோழர்களும் நிறைய வெளியேறிவிட்டதினால் முகுந்தனினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. ராஜனை பொறுத்தவரையில் ராஜனுக்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை. விமர்சனங்கள் இருக்கு. ஆனால் ராஜனிடம் மனிதாபிமானம் இருந்தது. வெளியேறிய தோழர்களை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராஜன் தொடர்பாய் என்ன விமர்சனங்கள் இருந்தன…

அசோக்: உளவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ராஜன் தொடர்பாக விமர்சனம் இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் ராஜன் பி கேம்ப் போட்டது தொடர்பாக விமா்சனம் இருந்தது.

தேசம்: அது என்ன மாதிரியான விமர்சனம்…

அசோக்: அதுல தான் டோச்சர் நடந்தது.

தேசம்: ராஜன்ட கேம்பிலையோ?

அசோக்: பீ கேம்ப் (basic camp – b camp) என்பது ஆரம்ப பயிற்சிநிலை கொண்ட முகாம். அது பேசிக் காம்பாக இருந்தமையால் பீ கேம் என்று சொல்லப்பட்டது. ராஜன் தான் பேசிக் கேம்ப் போட்டது. அங்க தோழர்கள் மீதான சித்திரவதைகள் நடந்த படியால், ராஜன் மீது அந்த குற்றங்கள் வந்து விட்டதென நினைக்கிறன். ராஜன் தொடங்கிய நோக்கம் பேசிக் கேம்ப். ஆரம்ப பயிற்சிக்காக தொடங்கப்பட்டது. அங்கதான் டோச்ஜர் நடந்தது.

தேசம்: அதுக்கு ராஜன் பொறுப்பாக இருக்கேல?

அசோக்: இல்லை இல்லை அந்த காலகட்டத்தில் ராஜன் பீ.எல்.ஓ பயிற்சிக்காக போய் விட்டார் என நினைக்கிறன்.

தேசம்: ராஜன்ட முரண்பாட்டுக்கு அதுவும் காரணமாக இருக்கலாமா? தான் தொடங்கின முகாமில் …

அசோக்: அது தெரியல. பீஎல்ஓ ரெயினிங் முடித்து வந்த பின் முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது. நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார். உள்ளுக்குள்ள நடந்த கொலைகள் தொடர்பாக. அவர் கலந்துகொண்ட சென்றல் கமிட்டி மீட்டிங் பிறகுதான் நடந்தது. தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் தானே அதுல முரண்பட்டுதான் கேள்விகள் கேட்கிறார்.

தேசம்: ராஜனுக்கும் தோழர் ரகுமான் ஜான் போன்றவர்களுக்கும் இடையில் தொடர்புகள்…

அசோக்: தொடர்புகள் ஒன்றுமில்லை.

தேசம்: அது எப்படி ஒரே அமைப்பின் மத்திய குழுவில் இருந்தவர்களுக்கு இடையில் தோழமை உரையாடல் இல்லாமல் இருந்தது?

அசோக்: இவங்களைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் ராஜனை முகுந்தனுடைய ஆளாகத்தான் இவங்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் ஆரம்ப காலகட்டத்தில் ராஜன் முகுந்தனுடைய ஆதரவு நிலைப்பாட்டோடுதான் இருந்திருக்கிறார். ராஜன் மாத்திரம் அல்ல ஆரம்ப காலகட்டத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் நான் உட்பட எல்லோரும் முகுந்தன் விசுவாசிகள்தான். முகுந்தன் விசுவாசம் இல்லாவிட்டால் கட்டுப்பாட்டுக்குழுவில் தோழர் ரகுமான் ஜான், சலீம் எப்படி இடம் பெறமுடியும். காலப்போக்கில் முரண்பாடு ஏற்பாட்டு விட்டதே தவிர ஆரம்ப காலங்களில் எல்லோரும் ஒன்றுதான். விசுவாசம் வேண்டுமென்றால் ஆளுக்கால் கூடிக் குறையலாம் …

தேசம்: இதெல்லாம் ஒரு கற்பனை மாதிரி தெரியவில்லையா. கிட்டத்தட்ட ஒரு கற்பனாவாதம் தான். ஒருவருக்கொருவர் தோழமை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் உரையாடல் நடத்தாமல் என்னென்று நீங்கள் எலலோரும் மத்தியகுழுவில் இருந்தீங்க.

அசோக்: இப்ப யோசிக்கேக்க அது பிழையாகத் தான் தெரியுது. அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஒரு சந்தேகம் பயம் இருந்திருக்கலாம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் சந்தேகங்கள் பயம்கள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் இல்லையே. குறிப்பிட்ட காலத்துக்குள் தானே இது எல்லாம் நடக்குது. ஒன்றில் நீங்கள் அதீத எப்படி சொல்வது, தெனாலியில் கமலஹாசன் சொல்வது மாதிரி அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம், அப்படி பயம் என்று சொல்லுறது மாதிரியான பயத்தை நாங்கள் இப்ப கட்டமைக்க இயலாது. மற்றது அந்த காலகட்டத்தில் தான் நீங்கள் புலிகளிடமிருந்து வந்து இதை ஆரம்பிக்கிறீர்கள். ஒரு வருஷத்துக்குள்ள அவ்வளவு ஒரு கொலை கூட்டமாக மாறுவது வாய்ப்பில்லை…

அசோக்: உண்மையிலேயே இப்ப திரும்பி பார்க்கும் போது எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருகிறது. இயக்கம், போராட்டம் விடுதலை என்பதக்கு அப்பால், எங்களிடம் எங்களின்ற தனிப்பட்ட இருத்தலுக்காக அடையாளத்திற்காக முயற்சித்தோமே தவிர எந்த இயக்க நலன்சார்ந்த உரையாடல்கள், விட்டுக்கொடுப்புக்கள், பரஸ்பர நம்பிக்கைகளுக்கு ஊடாக எதையுமே நாங்க முயற்சிக்கல்ல போல தெரிகிறது. முகுந்தனும் உளவுத்துறையும் தான் மிக மிக முக்கியமான பிரச்சினை என்றால் முகுந்தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கு.

தேசம்: முகுந்தன் பாவித்த அத்தனை பேருமே சுழிபுரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாருமே சந்ததியாரால் புளொட்டிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். படைத்துறைச் செயலாளர் கண்ணன் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அசோக்: யாழ்ப்பாணம், எந்த பிரதேசம் என்று தெரியவில்லை.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி…

அசோக்: இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

தேசம்: பரந்தன் ராஜன் வெளியேறும்போது… நீங்கள் சொல்கிறீர்கள் பரந்தன் ராஜன் ஒரு தனிக் குழுவாக செயற்பட்டார் என்று.

அசோக்: தனிக் குழுவாக இல்லை. ராஜன் வெளியேறின பிற்பாடு முகாம்களுக்குள் அதிருப்தி அடைந்து வெளியேறின தோழர்கள் அனைவரும் ராஜனிட்ட பாதுகாப்புத்தேடி போயிட்டாங்க.

தேசம்: இந்தத் தோழர்கள் யாரும் தீப்பொறி குழுவோட போகல…

அசோக்: யாரும் போகவில்லை. முதலில் நம்பிக்கை வேண்டுமே. அவங்களோடு மிக நெருக்கமான நாங்களே அவங்களோடு போகவில்லை. தோழர்கள் எப்படி நம்பி போவார்கள். முதலில் தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ராஜன் ஆட்கள் அந்த நம்பிக்கையை கொடுத்தாங்க. அந்தக் காலகட்டத்தில் தான் நாங்களும் பின்தள மாநாட்டுக்கு போறோம்.

தேசம்: நாங்கள் என்னதான் தலைமைத்துவம் இடதுசாரி, அரசியல் இதெல்லாம் கதைத்தாலும் சரியான தலைமையை அந்த போராளிகளுக்கு கொடுக்க தவறி விட்டோம்.

அசோக்: எங்களிடம் நிறைய தவறுகள் இருந்திருக்கின்றன. புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர் விருவாசம், குழுவாதம் போன்றவற்றோடு தொடங்கியதுதான் எல்லா வீழ்ச்சிக்கும் காரணம். உங்கட இந்த விமர்சனம் எங்கள் எல்லோருக்கும் உரியது. நாங்கள் சரியான தலைமையை கொடுத்திருந்தால் அந்தத் தோழர்கள் எங்களை நம்பி வந்திருப்பார்கள். நாங்கள் சரியான தலைமையையும் கொடுக்கல்ல. தனி நபர்களாக கூட தோழர்கள் மத்தியில் எங்கள் மீது நம்பிக்கைகளை ஏற்படுத்த தவறிட்டம். இதுதான் ரகுமான் ஜான் தோழர் ஆட்களுக்கு நடந்தது. பிறகு பின்தளம் சென்ற பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் டேவிட் ஐயாவை சந்திக்கிறோம். சரோஜினிதேவி, சண்முகலிங்கம், ஜூலி..

தேசம்: ஜூலி பற்றி சொல்லுங்கள் முதல் சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன்…

அசோக்: ஜூலி வந்து காந்தியத்தில் வேலை செய்த ஒரு துணிச்சலான கருத்தியல் ரீதியில் வளர்ந்த தோழர். முதன் முதல் காந்தீயம் வவுனியாவில் நடாத்திய சத்தியா கிரக போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் முக்கியமானவர். பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர். மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்.

தேசம்: இப்ப எங்க இருக்கிறா…

அசோக்: இப்ப திருமணம் செய்து. நான் நினைக்கிறேன் அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு போயிட்டாங்க. அப்போ முகுந்தன் மீது அதிருப்தி கொண்ட ஆட்கள் எல்லாரும் அங்க சந்திக்கிறோம். பின் தளத்திலிருந்த மத்திய குழு ஆட்களையும் சந்திக்கிறோம் நாங்கள். ராஜனை சந்திக்கிறோம். பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், சேகர் அதாவது முகுந்தனோடு அதிருப்தியாகி மத்திய குழுவில் இருந்து இவங்களும் வெளியேறிட்டாங்க. முகுந்தனோடு இருந்தது கண்ணன், வாசுதேவா, கந்தசாமி, மாணிக்கதாசன், ஆனந்தி. 5 பேர் தான் முகுந்தனோடு இருந்தது. மிச்ச பேர் வெளியில் தான் இருக்கிறார்கள். தளமத்திய குழு நாங்க நாலு பேர் மற்ற முன்னரே வெளியேறி இருந்த சரோஜினி தேவி உட்பட முகுந்தனுக்கு எதிராக மொத்தம் 11 பேர் வெளியில் இருக்கிறம்.

தேசம்: செந்தில், சீசர், ஆதவன் எல்லாம் எங்க…

அசோக்: அவங்க அந்த நேரம் பின்தளத்தில் இருந்தவர்கள்.

அப்போ, வெளியேறின சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கிறோம். அவங்க சொல்லுறாங்க நாங்கள் ஒரு சென்றல் கமிட்டி மீட்டிங்கை முதல் கூட்டவேண்டும் என்று. சென்றல் கமிட்டி மீட்டிங் போட்டு பின்தள மாநாடு நடத்துவது தொடர்பாக முகுந்தன் ஆட்களோடு கதைக்க வேண்டும் என்று. அதற்கிடையில் தளக்கமிட்டி முகுந்தனுடனும் வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். ஓரளவு மாநாடு நடத்துவதற்கு முகுந்தன் ஒத்துக்கொண்டு, வெளியில் மாநாட்டை தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தார். சின்ன சின்ன பயமுறுத்தல்கள் எங்களை தனி வீட்டில் தங்க வைத்து வெளித் தொடர்பில்லாமல் வைத்திருப்பது. இப்படி தொடர்ந்தது.

அப்ப நாங்க சொல்றம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஒத்துக்கொள்கிறார். அப்போ மத்திய குழுக் கூட்டம் நடக்குது. அதுதான் கடைசியாக நடந்த மத்திய குழுக் கூட்டம் அதில் எல்லாரும் கலந்து கொள்கிறார்கள்.

அதுல நாங்கள் தளத்திலிருந்து போனவர்கள் 3 பேர். மற்றவர்கள் ராஜன், பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், முகுந்தன், கண்ணன், கந்தசாமி, வாசுதேவா, மாணிக்கதாசன், ஆனந்தி அது ஒரு மிகப் பதட்டமான சூழலில் நடக்குது. நாங்கள் முதலில் முடிவெடுத்து விட்டோம் என்னவென்றால், இந்த சென்ற கமிட்டிக்கான பாதுகாப்பை தள செயற்குழு தளக் கமிட்டி இருக்குதானே அவங்களுடைய மேற்பார்வையில் இந்த மத்திய குழுக் கூட்டம் நடக்க வேண்டும் என்று. யாருமே ஆயுதம் கொண்டு வர இயலாது.

தளக் கமிட்டி இவங்கதான் மத்திய குழுக் கூட்டம் நடக்குற மண்டபத்தில் வெளியில் நிற்பார்கள். இவங்கதான் செக் பண்ணி விடுவார்கள் என்று சொல்லி. எங்களுக்கு ஒரு பயம் இருக்கும் தானே முகுந்தன் எங்களை மாநாட்டுக்கு கூப்பிட்டு ஏதாவது செய்யலாம் என்று.

தேசம்: அது யார் முகுந்தனோடு கதைத்து உடன்பட வைத்தது?

அசோக்: அது தள கமிட்டி. தள கமிட்டிதான் போய் சொன்னது சென்ட்ரல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. நாங்களும் ஒரு கடிதம் அனுப்பினோம் சென்றல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஏற்றுக் கொண்டு சென்றல் கமிட்டியை கூட்டுவதற்கு சம்மதிக்கிறார். அதிலதான் பல்வேறு விவாதங்கள் நடக்குது. நாங்கள் பின் தள மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை முகுந்தன் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறம்.

ஏனென்றால் பின்தள மாநாடு நடத்துவதற்கான எந்த சாத்தியத்தையும் முகுந்தன் தரவில்லை. அப்போ அதிலே நாங்கள் ஃபைட் பண்ணுவதற்குத் தான் போறோம். அங்க அந்த மத்திய குழுக் கூட்டத்தில் மிகப் கடுமையான விவாதம் நடந்தது. தள மாநாட்டையே முகுந்தன் ஏற்றுக் கொள்ளாத வகையில் தான் கதைக்கிறார். திட்டமிட்டு புளொட்டை தளத்தில் உடைத்ததாகவும், அதே போல் பின் தளத்தில் உடைக்க நாங்க முயலுவதாகவும் எங்கள் மீது குற்றம் சுமத்தினார்.

பிறகு சொன்னார் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எல்லாத்தையும் தாங்கள் செய்கிறோம் என்று. நாங்கள் சொன்னோம் அதை நீங்கள் செய்ய இயலாது. மத்திய குழுவைச் சேர்ந்த எவரும் அதில் அங்கம் பெற முடியாது; தீர்மானிக்கவும் முடியாது. அதை தளக்கமிட்டீயும் முகாம்களில் இருக்கிற தோழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய நீங்கள் தீர்மானிக்க இயலாது. குற்றம் சாட்டப்பட்ட உளவுத் துறை சார்ந்தவர்களும் தீர்மானிக்க இயலாது என்று. முகுந்தன் ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின்தள மாநாட்டை நடாத்தும் எண்ணமே முகுந்தனுக்கு இல்லை. அதற்கிடையில் சந்ததியார் படுகொலை, செல்வன் அகிலன் படுகொலை பற்றி எல்லாம் பிரச்சனை தொடங்கிவிட்டது.

தேசம்: இப்பிரச்சனைகளை யார் கேட்டது?

அசோக்: சந்ததியார் படுகொலை பற்றி ராஜனும், செல்வன், அகிலன் படுகொலை பற்றி நானும் கேள்வி எழுப்பினோம். இதுபற்றி சென்ற உரையாடலில் சொல்லி இருக்கிறன். எங்க மீது முகுந்தன் ஆட்கள் கடும் குற்றச்சாட்டை வைக்க தொடங்கினாங்க. புளொட்டை தளத்தில் உடைத்தோம். நிறைய குற்றச்சாட்டுகள் நேசன் ஆட்கள் வெளியேறியதை, ரீட்டா பிரச்சனை பற்றி தனக்கு நாங்கள் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தள இராணுவப் பொறுப்பாளர் மெண்டீசிக்கு நாங்க ஒத்துழைப்பு கொடுக்கல்ல என்று சொல்லியும் முகுந்தன் எங்கள் மீது குற்றச்சாட்டு. முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பெரும் வாக்குவாதம். முகுந்தனிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் ஒழுங்கான பதில் இல்லை. கேள்வி கேட்பவர்களை குற்றம்சாட்டி கூட்டத்தை குழப்புவதிலேயே முகுந்தனும், முகுந்தன் சார்பானவர்களும் குறியாக இருந்தாங்க.

தேசம்: அதுல ஒரு உறுதியான முடிவும் இல்லை…

அசோக்: உறுதியான முடிவு இல்லை. கடும் முரண்பாட்டுடன் அந்த மத்திய குழு முடிந்தது…

தேசம்: தங்கள் மீதான எல்லா குற்றச்சாட்டையும் மறுத்துட்டாங்க…

அசோக்: அவங்க மறுத்துட்டாங்க. பின் தள மாநாடு நடத்தவும் உடன்படவில்லை. பிறகு முரண்பட்டு அதோட மத்திய குழு கூட்டம் முடியுது. அதுதான் புளொட்டினுடைய இறுதி மத்திய குழு கூட்டம். நாங்க கலந்து கொண்ட கூட்டம்.

தேசம்: 86 கடைசியில் நடந்தது…

அசோக்: இது வந்து எண்பத்தி ஆறு ஜூனில் நடக்குது. அப்போ நாங்கள் முரண்பட்டு வந்த பிற்பாடு, தளத்தில் இருந்து போன தளக் கமிட்டியும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடுகிறோம். இனிமேல் நாங்கள் தான் புளொட் தொடர்பான உத்தியோகபூர்வமான முடிவுகளை எடுப்போம் என்றும் முகுந்தனுடன் புளொட் தொடர்பான எந்த விடயங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், தளத்தில் இருந்து வந்த தள கமிட்டியும் பின் தளத்தோழர்களும் இணைந்து பின்தள மாநாட்டை நடத்தி அதற்கு ஊடாக தெரிவு செய்யப்படும் மத்தியகுழுதான், புளொட் அமைப்பின் உத்தியோக உத்தியோகபூர்வ நிர்வாகம் என்றும், எனவே புளொட்டின் பெயரில் யாரும் முகுந்தனுடன் தொடர்பு கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் அறிக்கை வெளியிடுறோம்.

பெரிய ஒரு அறிக்கை. நிறைய விஷயங்கள் உள்ளடக்கியிருந்தது. அதுல நாங்கள் சைன் பண்ணுறோம். பிறகு தளத்திலிருந்து போன மத்திய குழு உறுப்பினர்களும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறோம்.

பிறகு நாங்கள் பின்தள மாநாட்டுக்கான ஆயத்த வேலைகளை செய்கிறோம்.

தேசம்: இப்ப புளொட்டில் இருக்கிற யாராவது உறுப்பினர்கள் அதில் இருந்திருக்கிறார்களா? ஆர் ஆர் அல்லது சித்தார்த்தன்.

அசோக்: இல்லை இல்லை ஒருவரும் இல்லை…

தேசம்: இப்ப புளொட்டின் தலைமையில் இருக்கிற ஒருத்தரும் அதுல இருக்கல?

அசோக்: இப்ப புளொட்டின் தலைமையில் யார் யார் இருக்கிறார்கள்?

தேசம்: சித்தார்த்தன் தலைவர். ஆர் ஆர் அதில் முக்கியமான உறுப்பினர் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஆர் ஆர் முகாமில் முக்கிய பொறுப்பில் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். சித்தார்த்தன் பெருசா தெரியல. சித்தார்த்தன் வெளிநாட்டிலிருந்து தொடர்பாளராக புளொட்டினுடைய மறைமுகமான வேலைகளுக்கு முகுந்தனின் பின்னால் அவர் இயங்கி இருப்பார் என்று நினைக்கிறேன். பணம், ஆம்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களை கவனித்திருப்பார். புளொட்டுக்குள் எதுவும் உத்தியோகபூர்வமாக நடக்கவில்லை தானே. தனிநபர் ரீதியாகத்தான். முகுந்தன் சித்தார்த்தனோடையும், சீனிவாசனோடையும், லண்டன் கிருஷ்ணனோடையும் இப்படியான தனிப்பட்ட உறவைத்தான் பேணிக் கொண்டிருந்தார்.

உட்கட்சிப் போராட்டத்துக்காக தள கொமிட்டி பயணம்! பின்தளத்தில் பரந்தன் ராஜன் வெளியேற்றம்!!! – பாகம் 25:

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 25 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 25

தேசம்: தளத்தில் மாநாடு முடிந்து நீங்கள் 17 பேர் போறதுக்கு தெரிவு செய்யப்படுகிறீர்கள். என்ன மாதிரி அந்தப் பயணம் அமைந்தது? எப்படி போனீர்கள் எல்லாரும்? எல்லாரும் ஒன்றாக போனீர்களா அல்லது வெவ்வேறு படகுகளில் …

அசோக்: எல்லோரும் ஒன்றாகவே பயணம் செய்தோம் தளக் கமிட்டி 17 பேர், சென்றல் கமிட்டீ நாலு பேரில் தோழர் முரளி எங்களோடு வரவில்லை. அவருக்கு தனிப்பட்ட சில அலுவல்கள் இருந்ததால அதை முடித்துக் கொண்டு பின் தளம் வருவதாக சொல்லி இருந்தார். மற்ற படைத்துறைச் செயலாளர் கண்ணன், டெலோ பொபி, சந்திரன் பாதுகாப்புக்கு இரண்டு பேர். அதில் ஒருவர் டேவிட்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன்

அசோக்: ஓம். அவர்தான்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன் எந்த ஊரைச் சேர்ந்தவர்.

அசோக்: அது தெரியல எனக்கு. பின் தளத்தில்தான் இருந்தவர். இப்ப இங்க பிரான்சில்தான் இருக்கிறார். பயிற்சி பெற்றதற்கு பிறகு புதுக்கோட்டை பயிற்சி முகாமில் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர் என்று நினைக்கிறேன். பின் தளத்தில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். ஏனென்றால் நிறைய பேருடன் உறவு வைத்திருந்தவர்.

தேசம்: இந்தக் காலகட்டத்திலும் நிறைய பேருடன் தொடர்பில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: புதுக்கோட்டை பயிற்சி முகாமில் 2 பேர் இருந்தவர்கள். இவர் ஒன்று மற்றது அகஸ்டின் ஜெபமாலை என்று சொல்லி ஜீவா. அவர் பயிற்சி பொறுப்பாக இருந்தவர். அவர் இப்ப ஜெர்மனியில் இருக்கிறார்.

தேசம்: அகஸ்டின் ஜெபமாலை?

அசோக்: அவரும் அம்பாறை மாவட்டபுளொட் பொறுப்பாளராக நான் இருந்த காலத்தில் தளத்தில் இருந்தவர்.

தேசம்: இந்தப் பயணம் என்ன மாதிரி போயிட்டு. எல்லாரும் ஒன்றாக போகிறீர்களா? என்ன மாதிரி?

அசோக்: இது ஒரு மோசமான பயணம். மன்னாரில் இருந்து நாங்கள் ஸ்பீட் போட்டில் போறது என்றுதான் முடிவெடுத்தது. ஸ்பீட் போட் கிடைக்கவில்லை எங்களுக்கு. மாதகலிலிருந்து போற பயணங்கள் ஒரு அளவுக்கு பாதுகாப்பானது. ஸ்பீடு போட்டில் போயிடலாம். மன்னாரில் ஸ்பீட்போட் கிடைக்காதபடியால் ரெண்டு மூன்று நாள் அங்கு தங்கிட்டம். ஸ்பீட் போட் தேடிக்கொண்டு. அந்த நேரம் புளொட் பெருசா அதிலே இண்ட்ரஸ்ட் காட்டேல எங்களுக்கு போட் தாறதில. பிறகு தனியார் படகு ஒன்று எடுத்து ரோலர் எடுத்துதான் நாங்கள் மன்னாரிலிருந்து கிளம்புறோம்.

தேசம்: 17 பேரும் ஒன்றாக தான் போகிறீர்கள் எத்தனை பேர் எல்லாமாக பாதுகாப்புக்கு வந்தவர்கள்…

அசோக்: எல்லோருமாகச் சேர்ந்து 25 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய ரோலர் மீன்பிடி ரோலர் தெரியும் தானே. ஆனா ஸ்பீடா போகாது. மிக ஸ்லோவாக தான் போகும். பெரிய ஆபத்தான பயணம் இது. ஏனென்றால் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ரெண்டே ரெண்டு துப்பாக்கிகளோடுதான் அங்க பாதுகாப்புக்கு வந்தவங்க என்று நினைக்கிறேன். அடுத்தது பகல் நேரப்பயணம். ஆபத்தானது.

தேசம்: கடற்படை வழிமறிச்சா சிக்கல் தான் என?

அசோக்: நேவியின் அந்த அந்த ஸ்பீடுக்கு இவங்களால ஓட இயலாது. ரெண்டு மணிக்கு கிளம்பினாங்க .ரோலர் ஓடியோடி போய் இரவு பட்டபின் சேர்ந்து விட்டோம். அதிர்ஷ்டவசமாக போய் சேர்ந்து விட்டோம்

தேசம்: இவ்வாறு தான் இந்த பயணங்கள் அமைகிறதா? 25 பேர் ஒரே நேரத்தில போறது என்பது…

அசோக்: அப்படி ரோலரில் போறது முட்டாள்தனமான வேலை. யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்களை பயிற்சிக்கு அனுப்பும்போது ஸ்பீட் போட்டில்தான் அனுப்புவோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண கரையோரங்கள் டெலோ – எல் ரீ ரீ ஈ பிரச்சனைகளால் புலிகளின்ற கண்காணிப்பு இருந்தது. டெலோ தோழர்களை கொண்டு பயணம் செய்வது ஆபத்தானது. அத்தோட நாங்களும் தனியப்பயணம் செய்ய தயங்கினோம். புலிகள் ஏதும் செய்வார்கள் என்ற பயம் இருந்தது.

தேசம்: ஏன் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஸ்பீட்போட் எடுக்க முடியாமல் போனது?

அசோக்: அந்த நேரத்தில் மன்னாரில் புளொட்டிலும் பெரிய ஸ்பீட் போட் இல்லை என்று நினைக்கிறேன். புளொட்டில் கேட்டபோது அந்த நேரத்தில் தங்களிடம் ஸ்பீட்போட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்தது நாங்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்த, பின் தள மாநாடு நடத்த பின் தளம் போகிறோம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தேசம்: ஆனால் கண்ணனும் வந்தது அதில். கண்ணனுக்காகவாது பாதுகாப்பு கொடுக்குற முயற்சியை அந்த நேரம் மேற்கொண்டிருக்கலாம். ஒன்றுமே இல்லை. கண்ணன் தானே படைத்துறைச் செயலாளர்?

அசோக்: கண்ணன் படைத்துறைச் செயலாளர் அவருக்கே இந்த நிலை என்றால்…

தேசம்: அப்போ அவ்வளவு மோசமான போக்கு ஒன்று இருந்திருக்கு. என்ன சொல்லுறது …

அசோக்: ஒரு சுவாரசியமான விடயம் சொல்ல வேண்டும். நாங்கள் தளமாநாட்டில் பின்தள படுகொலைகள் பற்றி பின்தள செயற்பாடுகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம் தானே, அப்போ கண்ணன் கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் எங்களுடைய எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டவர்.

தேசம்: அதற்கு பின்பு வருவோம் நாங்கள். இப்ப போட்ல போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். போய் சேர்ந்தா எப்ப மாநாடு நடக்குது? போட்டுக்குள்ள ஏதாவது கருத்து பரிமாற்றங்கள்?

அசோக்: அந்தப் பயணம் மோசமான பயணம் என்றாலும் மிகவும் கலகலப்பான பயணம். எல்லோரும் ஒத்த கருத்துக் கொண்ட தோழர்கள்தானே. கண்ணனும் கூட எங்களோடு உடன்பாடு கொண்டவராகத்தான் இருந்தார். தள மாநாட்டில் எங்களுடைய கருத்துடன் முழுக்க முழுக்க உடன்படுகிறார். புளொட்டுக்குள்ள படுகொலை நடந்தது என்று சொல்லியும் படுகொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் அதற்கு முழுக்க முழுக்க உமா மகேஸ்வரனும் உளவுத்துறையும் சங்கிலியும் தான் பொறுப்பு என்று சொல்லியும் ஒத்துக்கொண்டார்.

தேசம்: அவர் ஒத்துக் கொண்டது படகுக்குள்ள நடந்த உரையாடலிலா?

அசோக்: இல்லை இல்லை தளமாநாட்டில் பப்ளிக்கா. தள மாநாட்டில் நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் இருக்குதானே தலைமை மீது. அதற்கு முகாமில் நடந்த கொலைகளுக்கு தனக்கு தொடர்பில்லை என்று சொல்லிட்டார். தனக்கு தொடர்பு இல்லை என்று சொல்லியும் கட்டாயம் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், பின் தளத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற எங்க நிலைப்பாட்டிக்கு ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அப்போ அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் படைத்துறைச் செயலாளர் தானே…

அசோக்: அவருக்கு எந்த அதிகாரமும் பின் தளத்தில் இல்லை.

தேசம்: அவர் வெளியேறியவர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தவர்?

அசோக்: நாங்க வெளியேறினதற்குப் பிறகு, பின் தளத்தில் நிறையத் தடவைகள் நான் சந்தித்திருக்கிறேன் கண்ணனை. இயக்கம் தொடர்பாக முழுக்க முழுக்க அதிருப்தியோடு தான் இருந்தவர். நாங்க வெளியேறியது தொடர்பாக அவருக்கு மனவருத்தமும் விமர்சனங்க களும் இருந்தன.

ரகுமான் ஜான், கேசவன் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் ஒரு ஆரோக்கியமான போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி இருந்தால் இயக்கத்தை சரியான வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் அவரிடம் இருந்தது.

தேசம்: உண்மையிலேயே ஆரோக்கியமான சக்திகள் நிறைய பேர் இருந்தும் அந்த ஆரோக்கியமான சக்திகளுக்கு இடையில் ஒரு…

அசோக்: ஒருங்கிணைப்பு இல்லை. உரையாடலும் நடக்கலை. ஏனென்றால் கண்ணன் நிறைய அதிருப்தியோடு இருந்தது எனக்கு தெரியும். தனிப்பட்டமுறையில் என்னோடு கதைப்பார். ஆனால் வெளிப்படையாக கதைக்க மாட்டார். தன்னுடைய படைத்துறைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தானும் கொலைசெய்யப்படலாம் என்ற பயம் இருந்தது. பின் தளத்தைப் பொறுத்தவரை உங்களுடைய பதவி என்பது வெறும் பொம்மை. படைத்துறை செயலாளராக இருந்தால் என்ன, அரசியல் துறைச் செயலாளராக இருந்தால் என்ன முகுந்தனும் அவருடைய உளவுத்துறையும் நினைத்தால் யாரையும் கொலை செய்யலாம். அங்க அதிகாரம் என்பது உளவுத் துறைக்கும் முகுந்தனுக்குமானது தான்.

தேசம்: இல்லை பொதுவாக இந்த ராணுவ கட்டமைப்புகளை பார்த்தீர்கள் என்றால் இப்படியான இந்த அதிகாரங்கள் வந்து குவியுறது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தான் நடக்கும். ஒரு அமைப்பு வந்து மெது மெதுவாக வளர்ச்சியடைந்து பெரிய அமைப்பாக வரேக்க சில ஆண்டுகளுக்குப் பிறகு அது கொலை இயந்திரமாக மாறும். இது நீங்கள் ஐந்து பேர் சேர்ந்து தொடங்குகிறீர்கள். அது பார்த்தா ஆறு மாதத்திலேயோ ஏழு மாதத்திலேயோ நீங்கள் கொலைஞர்களாக மாறுகின்றீர்கள் என்றால் இது ஒரு பெரிய கால இடைவெளி இல்லை தானே.

அசோக்: கால இடைவெளி என்றால்…

தேசம்: 83 க்கு பிறகு தானே இது எல்லாம் ஆரம்பிக்குது.

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி…

தேசம்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி என்றால் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதத்திற்குள்ளேயே இந்தப் பிரச்சினை வருது. இத்தனைக்கும் புளொட்டுக்குள்ள ஆயுதமும் இருக்கேல. ஆயுதம் வந்து ஒரு கொஞ்ச காலம் தான். மற்றது இதுக்குள்ள இருந்த ஆட்கள் எல்லாம் ஏதோவொரு வகையில் பயிற்சி எடுத்தவர்கள் ஒத்த சிந்தனையோடு இருந்தவர்கள். இவர்களுடைய அக்கறையின்மையா இத்தனைக்கும் காரணம்?

அசோக்: நீங்கள் சொல்லுவது சரி. முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்ப காலத்திலேயே சின்ன சின்ன அதிருப்திகள் முரண்பாடுகள் பிரச்சனைகள் வரேக்கையே பேசித் தீர்த்திருக்க வேண்டும். நான் முதலே சொல்லிருக்கிறேன் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உரையாடல் அவசியம். அந்த உரையாடல் இருக்கல. முரண்பட்ட உடனே முரண்பாடு கூர்மையடைந்து கொண்டு போனதேயொழிய தீர்ப்பதற்கான எந்த வழியும் இல்லை .ஏனென்றால் முரண்பாட்டுக்கு ஊடாக குழு வாதம் உருவாகிவிட்டது. அந்தக் குழு வாதம் எங்க உருவாகுதோ அங்க முரண்பாடுகள் பெரிதாகும்.

முதல்ல எல்லா பேரும் ஒரு சினேகபூர்வமாக வாற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் என்றால் அங்க இந்த உளவுத்துறையினுடைய அதிகாரம், நடவடிக்கைகளை எல்லாத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த உரையாடலில் இதைப்பற்றி முன்னமே நிறைய கதைச்சிருக்கம்.

தேசம்: இந்த பிரச்சனைக்காக தானே பிரபாகரனில் இருந்து இவர்கள் வெளியில வாறினம்.

அசோக்: பிரபாகரன் மீது அதாவது புதிய புலிகள் பிறகு புதிய பாதை பிறகு விடுதலை புலிகள் பிறகு புளொட் இந்த வரலாற்றை பார்த்தீர்களென்றால் எல்லாம் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தான் வருது. அரசியலற்ற ஒரு தனிநபர் பயங்கரவாத கண்ணோட்டத்தில் தான் உருவாக்கம் பெறுகிறது. இந்த தனிநபர் பயங்கரவாதத்தை யார் முன்னெடுத்து செய்றது, யாரிடம் அந்த அந்த அதிகாரம் இருக்கு என்பதுதான் பிரச்சனையேயொழிய எல்லா வகையிலும் நாங்கள் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமென்றால் எங்களுடைய போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதத்தின் ஊடாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. எந்த அரசியலும் இல்லை. எந்தவொரு ஜனநாய அமைப்பு வடிவங்களும் இருக்கவில்லை.

தேசம்: ஏனென்றால் புளொட்டில் இருந்த இந்த தலைமைகளைப் பார்க்க இவர்களுக்கு விடுதலைப் புலிகளையோ பிரபாகரனையோ விமர்சிக்க எந்த ஒரு தார்மீக நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட அதே போக்கைத் தான் கடைப்பிடிக்கினம் பிறகும்.

அசோக்: அதிகாரம் கிடைத்தால் புளொட்டும் ஒன்றுதான் புலிகளும் ஒன்றுதான். புளொட் தத்துவார்த்த கோட்பாட்டோடு கொலை செய்திருப்பார்கள். புலிகள் தத்துவார்த்த கோட்பாடற்று கொலை செய்திருப்பார்கள். எங்களுக்கு முலாம் பூசுவதற்கு ஒரு தத்துவார்த்த கோட்பாடு இருந்தது தானே சில நேரம் கொலைகளை செய்து போட்டு தத்துவ முலாம் பூசியிருப்போம்.

தேசம்: ஆனால் சங்கிலியன் செய்த படுகொலைக்கு நீங்கள் எப்படி அந்த தத்துவக் கோட்பாட்டை பாவிக்கிறது?

அசோக்: அதுதான் முகுந்தனின் சாணக்கியம். தோழர் சந்ததியாரை கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆள் என்று ரோவிடம் போட்டுக் கொடுத்தார். உண்மையில் முகுந்தன் தொடர்பாக ஒரு நேர்மையான விமர்சனம் வைப்போமானால் அவரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. முகுந்தன் விசுவாசிகளாக இருந்த பலர் இந்த கொலைகளை நியாயப்படுத்த முகுந்தனுக்கு உதவினாங்க. உதாரணமான டெல்லியிருந்து ரோவுக்கும் புளொட்டிக்கும் டபுல் ஏஜென்சியாக இருந்தவர்கள் முக்கியமானவர்கள். புளொட்டின் அழிவுக்கு இவர்களும் ஒரு காரணம். பிறகு இது பற்றி கதைப்பம்.

தேசம்: இந்த மாநாட்டை சொல்லுங்கள். நீங்கள் போய் எத்தனை நாளில் மாநாடு நடந்தது? அல்லது நீங்கள் போக உங்களுக்கான வரவேற்பு…

அசோக்: வரவேற்பு பெரிய சந்தோசமாக இல்லை. நாங்கள் போய் மன்னாரில் இருந்து வேதாரணியத்துக்கு போறோம். அங்கிருந்து ஒரத்தநாட்டிக்கு போறம். அங்க போன உடனே தளத்தில் இருந்து வந்த 17 பேருக்கும் மத்திய குழு உறுப்பினர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது வந்து ஒரத்த நாடு புளாட் ஆபீஸ் இருக்குக்கும் இடத்திலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் உள்ளுக்க இருக்கிற கிராமத்தில் நாங்க தங்குவதற்கு ஒரு இடம் ஒழுங்கு பண்ணி தந்தாங்க. அங்கு பஸ் போக்குவரத்து ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு ஒன்று வரும். அந்த கிராமத்தில வீடொன்று எடுத்து எங்களை தங்க வைத்து, எங்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் கண்காணிப்பு.

தேசம்: யார் உங்களுக்கு பாதுகாப்பு தந்தது…

அசோக்: அது சங்கிலி ஆட்கள்தான் போட்டது. ஆனால் எங்களுக்கு தெரியும் அது எங்களுக்கான ஒரு பொறி , எங்களை கண்காணிக்க உளவுத் துறையால் போடப்பட்டது என்று. அங்க இருந்து ஒவ்வொரு குரூப்பா ஐந்து பேர் ஆறு பேர் சேர்ந்து முகாம்களுக்கு போவதற்கான அனுமதி கேட்டனாங்கள். முதல்லில் முகுந்தன் அனுமதி தரவில்லை. பிறகு சில நாட்களுக்கு பிறகு அனுமதி தந்தார். தள செயற்குழுவும் நாங்களும் போய் முகாம்களை பார்வையிடலாம் என. முகாம்களுக்கு போய் முகாம்களை பார்வையிட்டு நாங்கள் தளத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று தளத்தில் நடந்த மாநாட்டு பிரச்சனை எல்லாம் சொல்லி, இங்கே ஒரு தள மாநாட்டுக்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம். தோழர்கள் எங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த ஆதரவு காட்டினாங்க…

தேசம்: அதற்கு உமாமகேஸ்வரன் அனுமதி கொடுத்தவரா?

அசோக்: உமாமகேஸ்வரன் முகாம்களைப் பார்வையிட மட்டும்தான் அனுமதி கொடுத்தது. முகாம்கள் தொடர்பாக அதிருப்தி இருந்தது தானே. அப்போ முகுந்தன் சொல்லுச்சு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நீங்கள் போய் பார்க்கலாம் அங்க எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று. முகுந்தன் எதிர்பாக்கல தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்க போய் ஒரு பிரச்சாரமாக மேற்கொள்ளுவோம் என்று.

தேசம்: அது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியது தானே அவ்வளவு முட்டாள் இல்லை தானே முகுந்தன். ஒன்றில் அவர் சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் ஒருத்தரும் கதைக்கக் கூடாது என்று. அப்படி சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்ப அவர் எதிர்பார்த்து தானே இருப்பார்.

அசோக்: எதிர்பார்த்தாரோ தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு முகாம்களுக்கு போவதற்கான தடை வந்துவிட்டது. அந்த நேரத்தில் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிட்டார்கள் தானே. வெளியேறினதற்குப் பிறகு முகாங்களுக்குள் கதை பரவிட்டது இவங்க ஒரு குரூப் வெளியேறிவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு ராஜனோடு ஒரு குரூப் உடைந்து போய்விட்டது. தளப்பிரச்சனைகள் பற்றி தோழர்களுக்கு பெரிசாக தெரிந்திருக்கவில்லை.

தேசம்: பரந்தன் ராஜன்…

அசோக்: ஓம். ராஜன் பாலஸ்தீன பயிற்சி முடித்து வந்த பின் பின்தள நிலைமையை பார்த்து முகுந்தனோடு கடும் பிரச்சனை. முக்கிய பிரச்சினை என்று கேட்டால் காக்கா சிவனேஸ்வரன் என்று உடுவிலைச் சேர்ந்த தோழர் படுகொலை பற்றி …

தேசம்: அவர் எப்ப படுகொலை செய்யப்பட்டவர்?

அசோக்: சரியாக காலம் ஞாபகம் இல்லை. இந்த கொலை சந்ததியார் கொலைக்கு முன்னமே நடந்துவிட்டது.

அப்போ ராஜன் கடும் பிரச்சினை. ஏனென்றால் ராஜனுக்கு மிகத் தெரிந்த நெருங்கிய தோழர் அவர். பிறகு ராஜனுக்கும் முகுந்தனுக்கும் நிறைய முரண்பாடுகள் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜன் வெளியேறி விடுகின்றார். காலப் போக்கில் ராஜனோடு நிறையதோழர்கள் வெளியேறிப் போயிற்றாங்க. நாங்கள் பின்தளம் போகும்போது ராஜனோடு 300-350 தோழர்கள் கேம்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மத்தியகுழு உறுப்பினர்களான ஆதவன், செந்தில், பாபுஜீ மற்ற முக்கிய தோழர்களும் குறிப்பா PLO ராஜா, PLO காளித் ஐயா, விஜி, மெக்கன்ரோ, சுரேஸ் போன்றவர்களும் ராஜனோடு சென்றுவிட்டார்கள். முகாம்களில் தோழர்கள் பெரும் குழப்பத்தோடுதான் இருந்தாங்க. புளொட்டை விட்டு முன்னரே வெளியேறி இருந்த டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம், யூலி, துளசி, தங்கராஜா தோழர் இவங்க எல்லோரும் ராஜனுக்கு சப்போர்ட்பண்ணிக் கொண்டிருந்தாங்க.

ஊடகவியலாளர் சிவராம்: செல்வன் – அகிலன் இரட்டைப் படுகொலை – சிவராமின் (தராக்கி) இரத்தக் கறை!!! : பாகம் 24

(சிவராமின் இரத்தக்கறைக்குரிய படுகொலை செய்யப்பட்ட செல்வன் – அகிலன்)

இவ் உரையாடல் 40 பாகங்களை உள்ளடக்கியது. இதன் 24 வது பாகம் இதுவாகும். இவ் உரையாடலின் முக்கிய நோக்கம், சம்பவங்களை கதைப்பதல்ல. அதற்கப்பால், அதன் உள்ளார்ந்த அரசியல், அதன் மீதான அரசியல் விமர்சனப்பார்வை, மற்றும் அமைப்பு வடிவங்கள் பற்றிய பிரச்சனைகள் என அமையும். அத்தோடு தீப்பொறி குழுவினர் மீது தள மத்திய குழுவினர் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காமை, மத்தியகுழுவில் தளமத்திய குழு உறுப்பினர்கள் மீது முகுந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்கள், பின் தள மாநாடு, இயக்கத்தில் உளவுத்துறைகளின் குறிப்பாக ரோவின் தாக்கம் என உரையாடல் தொடர்கின்றது. இவ் உரையாடல்கள் ரோ முகவர்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களுக்காக பணமுதலைகள் விசிறும் பணத்துக்காக – அவர்களுக்கு வேண்டாதவர்களை தூற்றுவதற்கு எழுதப்படும் ‘அம்புலிமாமா’ கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 24 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 24

தேசம்: தள மாநாட்டுக்கு முன்பாக செல்வன், அகிலன் படுகொலை இடம்பெற்றது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த செல்வன், அகிலன் படுகொலையில் ஏதோ ஒரு வகையில் நீங்களும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அது நான் நினைக்கிறேன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையில் என்ன நடந்தது ? செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட காரணம் என்ன? உங்களோடு முதல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர் எடுபடவில்லை. அப்படி என்றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்பவே தொடங்கிவிட்டது…

அசோக்: அது உண்மையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. மத்திய குழுவைச் சேர்ந்த இப்ப உயிரோட இருக்கிற ஆட்கள் தான் அதை சொல்ல வேண்டும். தோழர் ரகுமான் ஜான், சரோஜினிதேவி, சலீம்… செல்வன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் சொல்லப்பட்ட மத்திய குழு கூட்டத்தில் நான் இல்லை. அதற்குப் பிறகுதான் நான் கலந்து கொண்டேன். தோழர் செல்வன் பல்மருத்துவ பீட மாணவர். மிகத் திறமையான தோழர். திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர்.

தேசம்: இதுல முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்துக்கு அல்லது பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மிகத் திறமையான மாணவர்கள் தங்களுடைய படிப்பை குழப்பிக்கொண்டு வந்தவர்கள். தோழர் ரகுமான் ஜானும்…

அசோக்: ஓம் . தோழர் ரகுமான் ஜான் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். அதை நிராகரித்துவிட்டு தொடர்ந்து புளொட்டில் வேலை செய்தவர். அவர் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் இன்றும் போராட்ட உணர்வுகளுடன் இயங்கும் ஒருவர் அவர். அடுத்தது அர்ஜுனா என்று சொல்லி ஜெகநாதன். அவர் மன்னார் பகுதியிலிருந்து வந்த மிகத் திறமையான மருத்துவபீட மாணவர். இப்படி படிப்புக்களை விட்டு நிறைய தோழர்கள் வந்திருக்கின்றார்கள். தோழர்கள் படிப்பை கைவிடாமல் தொடர வேண்டும் என்பதில் தோழர் குமரனும், நானும் மிக வும் கவனமாக இருந்தோம். இது பற்றி முன்னர கதைத்திருக்கிறம்.

செல்வன் அகிலன் பிரச்சனை என்னவென்று கேட்டால் சிவராம் இந்தியாவுக்குப் போய் வரும்போது வெங்கட் என்பவரையும் தளத்திற்கு அழைத்து வருகின்றார். முகுந்தனின் உத்தரவின் அடிப்படையிலேயே வெங்கட் வருகின்றார். நான் நினைக்கிறேன் பின்தளத்தின் முடிவோடுதான் செல்வன், அகிலன் படுகொலைகள் நடந்தது என்று. அவர்களின் நோக்கம் செல்வன் தான். செல்வனோடு அகிலனும் இருந்தபடியால் அவரையும் இவர்கள் படுகொலை செய்தார்கள்.

தேசம்: வெங்கட் என்றது…

அசோக்: வெங்கட் என்றது முகுந்தனுடைய உளவுத்துறை யை சேர்ந்தவர்.

தேசம்: பண்டத்தரிப்பா?

அசோக்: இல்லை சுழிபுரம். அவர் சங்கிலி கந்தசாமியோடு உளவுத்துறையில் வேலை செய்தவர். பின் தளத்தில் பல்வேறு படுகொலையுடன் தொடர்புபட்ட ஒராள். அவரும் இன்னொருவரும் அவருடைய பெயர் எனக்கு தெரியாது. ரெண்டு பேரும் சிவராமோடு வாரார்கள். அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஈஸ்வரன் நிற்கிறார். அவர்தான் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாளர். இவங்கள் கிழக்கு மாகாணத்தில் ராணுவ தாக்குதலை செய்ய வேண்டும் அதற்கு சில இடங்களை பார்வையிடுவதற்கு அங்க போக வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் கிழக்கு மாகாண பொறுப்பாளரின் கடிதம் இல்லாமல் இவர்கள் அங்க போக இயலாது. வழிகாட்டிகளோ, தங்குமிடங்களோ, சாப்பாடுகளோ பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும். தன்னிச்சையாக ஒராள் போக இயலாது. அந்தந்த பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் நீங்கள் போக வேண்டும். அடுத்தது வழிகாட்ட வேண்டும்… வழிகாட்டிகள் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்யமுடியாது.

தேசம்: பொதுப் போக்குவரத்தில் போக இயலாது தானே…

அசோக்: அப்போ ஈஸ்வரன் கடிதமொன்று கொடுத்திருக்கிறார், இந்தக் கடிதம் கொண்டு வருபவருக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் படி.

தேசம்: அடுத்தது அகிலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

அசோக்: அகிலன் மூதூரைச் சேர்ந்த தோழர். அங்க மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பாளராக வேலை செய்த தோழர். அவரும் திறமையான தோழர். காந்தியத்துக்கூடாக செல்வனை போல வந்தவர் என்று நினைக்கிறேன். மிகத் திறமையான தோழர்கள். அப்போ அந்த நேரத்தில் அவர்கள் மூதூர் பகுதியில் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படுகொலைகள் மூதூருக்கு பக்கத்தில் தான் நடந்திருக்கு.

தேசம்: இந்த இரண்டு கொலைகளுக்கும் முதல் பின் தளத்தில் சில கொலைகள் இடம்பெற்றதாக…

அசோக்: நிறைய கொலைகள் நடந்து இருக்குதானே.

தேசம்: தளத்தில் அதாவது புளொட்டினுடைய தலைமை புளொட்டினுடைய உளவுத்துறை தளத்தில் இவ்வாறான கொலைகளில் ஈடுபட்டிருந்ததா?

அசோக்: தளத்தில் நடந்த கொலைகள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். அந்த கொலைகளுக்கும் பின் தள உளவுத்துறைக்கும் தொடர்பில்லை. அவைகள் கண்ணாடிச் சந்திரன், நேசன் ஆட்களினால் செய்யப்பட்டவை.

தேசம்: இதுதான் முதல் படுகொலை என்று நினைக்கிறேன்.

அசோக்: சுழிபுரம் படுகொலை நடந்ததுதானே. ஆனா திட்டமிட்டு, அதாவது தலைமையால் உளவுத்துறையால் தளத்தில் நிகழ்த்தப்படுகின்ற முதலாவது படுகொலை, இரட்டைப் படுகொலை இதுதான்.

தேசம்: அதற்கான ஏதாவது சமிஞ்சை இருந்ததா? ஏனென்றால் முரண்பட்டு வந்தது நீங்கள்…

அசோக்: என்ன சந்தேகம் இருந்தது என்று கேட்டால் தளத்தில் தளத்தில் நேசன் ஆட்கள் வெளியேறிவிட்டார்கள் தானே. பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி விட்டார்கள். செல்வன் ரகுமான் ஜானின் நெருங்கிய தோழர். திருகோணமலை தானே, ஒரே இடம். தோழர் ரகுமான் ஜான் வெளியேறின உடன் அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துட்டுது இவரும் ரகுமான் ஜானின் ஆளாக இருப்பார் என்று. யாழ்ப்பாணத்தில் நேசன் ஆட்கள் வெளியேறியதைப் போன்று திருகோணமலையிலும் குழப்பங்கள் ஏதும் வரலாம் என்று நினைத்திருக்கலாம்.

நிறைய விடயங்களை மறந்திட்டன். இப்பதான் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தள மாநாட்டிக்கு பிறகு பின்தளத்தில் ஒரு மத்திய குழு கூட்டம் நடந்தது. அதில்தான் நீண்ட காலத்திற்கு பிறகு ராஜன் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் முகுந்தன் தொடர்பாக கடும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் ராஜனால் வைக்கப்பட்டு, இடையில் குழப்பத்தில் முடிந்த கூட்டம் அது. சந்ததியார் கொலை, செல்வன், அகிலன் கொலை பற்றியெல்லாம் கதைக்கப்பட்டது. முகுந்தனிடம் இருந்து ஓழுங்கான எந்த பதிலும் வரல்ல.

இதைப்பற்றி பிறகு கதைக்கிறன். இதில செல்வன் அகிலன் கொலை பற்றி நான் கேள்வி எழுப்பிய போது முகுந்தன் சொன்னது ஞாபகம் வருகிது. அவர்கள், சந்ததியார், ரகுமான் ஜான் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைக்க முயன்றதாகவும், விசாரிக்க சென்ற போது செல்வனிடம் இருந்து இவங்க எழுதிய கடிதங்கள் பிடிபட்டதாகவும் கூறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தார். ஒழுங்கான எந்த பதிலும் முகுந்தனிடம் இருந்து கிடைக்கல்ல. பிறகு தளத்தில் இருந்த எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கினார். அதற்கிடையில் ராஜனுக்கும், முகுந்தனுக்கும் வாக்குவாதம் அதிகமாகி பெரிய குழப்பமாகி கூட்டம் இடையில் குழம்பிவிட்டது. இதுதான் நாங்கள் கலந்து கொண்ட கடைசி மத்தியகுழு கூட்டம். இதைப் பற்றி பிறகு கதைப்பம்.

உண்மையில பார்த்தீங்க என்றால் இயக்கங்களின் ஆரம்ப வரலாறே பிரச்சனைகளுக்கு முரண்பாடுகளுக்கு ஒரே தீர்வு கொலைதான் என்றுதான் செயற்பட்டு இருக்காங்க. உரையாடல் என்பதே அங்கு இருக்கல்ல. ஆயுத போராட்டம் என்றால் அது வன்முறை ஒன்றுதான் என்ற பார்வைதான் எங்களிட்ட இருந்திருக்கு.

தேசம்: அகிலன்

அசோக்: அகிலன் மூதூர். ரகுமான் ஜானை தெரிந்திருக்குமே ஒழிய பெரிய நெருக்கம் இருக்காது. சிவராம், வெங்கட் ஆட்கள் செல்வனை முதூரில் வைத்து அவரை அரெஸ்ட் பண்ணும் போது கூடவே அகிலனும் இருந்திருக்கின்றார். எங்களுக்கு நடந்ததற்கு பிறகுதான் தெரிய வருது.

தேசம்: இவர்கள் கொல்லப்பட போகிறார்கள் என்பது சிவராமுக்கு தெரியும்.

அசோக்: தான் வழிகாட்ட தான் போனவர், தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் சாதித்துக் கொண்டிருந்தார். அடுத்தது ஈஸ்வரன் கொடுத்த கடிதம் தன்னிடம் இருக்கு என்று சொல்லி நிறைய பெயரிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர். கடைசியா பார்த்தா கடிதத்தில் ஒன்றும் இல்லை.

தேசம்: அதுக்குள்ள என்ன இருந்தது…

அசோக்: இந்த கடிதத்தை கொண்டு வருபவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் என்று சொல்லி ஈஸ்வரன் எழுதி கொடுத்திருந்தார்.

தேசம்: அப்போ ஈஸ்வரனுக்கும் தெரியாது என்ன நடக்க போகுது என்று சொல்லி…

அசோக்: இல்லை. ஆனால் ஈஸ்வரனுக்கும் தொடர்பு என்று சொல்லி வெளியில கதையை பரப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் தெரிந்திருக்காது என்றே நம்புகிறேன்.

தேசம்: அப்போ வெங்கட்டும் சிவராமும் தான் இந்த கடிதத்தை கொண்டு போயினம்.

அசோக்: இன்னும் ஒருத்தரும் இவர்களோடு வந்தவர். பெயர் ஞாபகம் இல்லை.

தேசம்: இவைக்கு தான் என்ன நடக்கப் போகுது என்று தெரியும்…

அசோக்: மூன்று பேரும் அந்த நோக்கத்தோடு தானே வந்திருக்கிறார்கள்.

தேசம்: மூன்றாவது ஆளைப் பற்றி உங்களுக்கு தெரியாது?

அசோக்: தெரியாது, மூன்று பேரும் அந்த நோக்கத்துடன்தான் வந்திருக்கிறார்கள். இதில இந்த கடிதம் கொண்டு போனால் மட்டும்தான் அங்கு போக முடியும் என்பதற்காக, திருகோணமலை மாவட்டங்களில் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு இடங்கள் பார்க்க வாரோம் என்று சொல்லித்தான், ஈஸ்வரனிடம் கடிதம் கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் பின் தளத்தின் அனுமதியோடுதானே வருகிறார்கள். அப்போ ஈஸ்வரனும் நம்பிட்டு இவங்கள் ஏதோ தாக்குதல் செய்வதற்கு ஆய்வு செய்ய வாறாங்கள் இடங்கள் பார்க்கத்தான் வாறாங்கள் என்று அந்த கடிதத்தை கொடுத் திருக்கிறார்.

தேசம்: அந்தக் கடிதத்தில் செல்வன் அகிலன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

அசோக்: ஒன்றுமே இல்லை. அப்படி நடந்திருந்தா தள மாநாட்டில் ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டு வந்திருக்கும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடந்தது. பின்தள மாநாட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாதாரணமாக தெரிவு செய்யப்படவில்லை. வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்தள மாநாட்டிக்கு செல்வதற்கு தேர்தல் அடிப்படையில் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டது பற்றி முன்னர் கதைத்திருகிறன். அந்த தேர்தலில் மத்தியகுழு உறுப்பினர்கள் நாங்க நான்கு பேர்களும் கலந்து கொண்டோம். அதில் கூடிய வாக்கு ஈஸ்வரனுக்கும் அடுத்தது எனக்கும் தோழர் கௌரிகாந்தனுக்கும்தான் கிடைத்தது. எங்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் எனக்கும் ஈஸ்வரனுக்கும் ஏன் தோழர்கள் வாக்கு கூட போடுகிறார்கள்?

தேசம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் உங்களுடைய பெயர் வரக் காரணம் என்ன? பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் ஆரம்ப காலங்களில் மிக நெருக்கமாக வேலையும் செய்திருக்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் உங்களைத் தெரியும். தனிப்பட்ட முறையிலும் தெரியும்.

அசோக்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளனாக ஆரம்ப காலகட்டங்களில் நான் இருந்திருக்கிறன். UTHRரோடு பெரிதாக எனக்கு தொடர்பு இருக்கவில்லை.

ஆனால் அதில் எனக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். UTHRரோடு பெருசாக உடன்பாடு இருக்கவில்லை. அதுல உள்ள சில நபர்கள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தது. பிறகு நீங்கள் தான் ஒருநாள் அனுப்பி இருந்தீர்கள். உங்களுக்கு யாரோ ஒரு ஆள் என்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டை அனுப்பியதாக.

தேசம்: நட்சத்திரன் செவ்விந்தியன்.

அசோக்: அப்போதான் எனக்கு தெரியும். அதுவரைக்கும் UTHR ரிப்போர்ட்டில் என்னைப் பற்றி இப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. பிறகு விசாரிச்சா என் மீது முரண்பாடு இருக்கிற தோழர் ஒருவர் என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்பதற்காக அந்த ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். UTHR ஆட்களும் எந்த விசாரணையும் இல்லாமல், சிவராமுக்கு நான்தான் கடிதம் கொடுத்தேன் என்ற தோழரின் புனைவை தங்களின்ற ரிப்போர்ட்டில் பதிவு செய்திருந்தாங்க. எனக்கே இந்நிலை என்றால் அவர்களின் தகவல்களில் எப்படி உண்மைகள் இருக்கமுடியும்?

தேசம்: உங்களுக்கு முரண்பாடான தோழர் என்றால் இயக்கத்தில் இருந்த தோழரா? அல்லது

அசோக்: புளொட் இயக்கத் தோழர்தான். அப்போ பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் UTHRரோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்தேன். அப்போ விளக்கம் ஒன்று எழுதித்தர சொன்னார்கள் என்ன நடந்தது என்று சொல்லி. நான் பெரிய அக்கறை எடுக்கவில்லை. எழுதிக் கொடுக்கவில்லை. இப்ப எனக்கு எதிரிகளாக இருக்கிறவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அது பிரச்சினை இல்லை. தளத்தில் நடந்த மாநாட்டிக்கு வந்த தோழர்களுக்கு தெரியும்தானே. தளத்தில் எத்தனை தோழர்கள் என்னோடு வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் என்னைப்பற்றி.

தள மாநாட்டில் செல்வன், அகிலன் பிரச்சனை முன்வைத்தவர்கள் நாங்கள்தான். சிவராமுக்கும் எனக்கும் அதன் பின் பெரிய முரண்பாடு. தனக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் அது பின் தள முடிவு என்றும் சொன்னார். நான் நினைக்கிறேன் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பிற்காலங்களில் சிவராமை நான் இங்க பரிசில் சந்தித்த போது கூட இதைத்தான் சொன்னார்.

தேசம்: மற்றது அகிலன், செல்வின் படுகொலையில் நான் நினைக்கிறேன் ஜென்னி தோழரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என. அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் அவரிட்டையும் போய்க் கேட்டிருக்க வேண்டும்.

அசோக்: எல்லோரும் திருகோணமலையில் மிக நெருக்கமான தோழர்கள்தான். ஜென்னி, ஜான் மாஸ்டர் எல்லார்கிட்டயும் கேட்டிருப்பார்கள். தோழமைக்கு அங்காள குடும்ப நட்பாக அவங்க எல்லோரும் இருந்தவங்க. செல்வன், அகிலன் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தளத்தில் சேர்ந்து வேலை செய்த அருமையான தோழர்கள். நான் நினைக்கிறேன். செல்வனுக்கும் சிவராமுக்கும் முன்னரே முரண்பாடு இருந்திருக்கும் என்று. ஏன் என்றால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இக் கொலைகளை தடுத்திருக்க முடியும். பின் தள உத்தரவு என்றால் அங்கேயே இந்த உத்தரவை தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யல்ல. இங்க பரிசில் சந்தித்த போது கடுமையாக அவரைப் பேசினேன். பின்தளம்தான் காரணம் என்று தன்னை நியாப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தேசம்: அதுல நான் நினைக்கிறேன் ஜென்னியும் கடுமையாக எதிர்த்து இருந்தவர் என்று. படுகொலைகளை கண்டித்து இருந்தவர். ஆனால் அவர் மீதும்…

அசோக்: ஜென்னி மீதும் குற்றச்சாட்டு சொல்லப் பட்டது. ஜென்னி இயக்கத்தோடு விசுவாசமாக வேலை செய்வது அவரது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால் அவருக்கு ஒரு தீர்மானம் இருக்கும் முகுந்தன் சரியாக நடக்கிறார் என்று. அதனால அவ சப்போர்ட் பண்ணுவா. இந்த நிலைப்பாடு, அவரின் அரசியல், முகுந்தன் விசுவாசம் இவை எல்லாம் விமர்சனத்திறகுரியதுதான். அவர் முகுந்தன் சப்போர்ட் என்பதற்காக படுகொலைக்கு எல்லாம் அவரை சம்பந்தப்படுத்த இயலாது.

தீப்பொறியினருக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. எங்களைப் பற்றியும் இருந்தன . தங்களோடு நாங்க வெளியேறவில்லை என்ற கோபம் இருக்குதானே. தங்களை நியாயப்படுத்த பல கதைகளைச் சொன்னாங்க. உண்மையிலேயே அவர்கள் தளமாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவங்க வைக்கிற குற்றச்சாட்டை தானே நாங்களும் வைக்கிறோம். நீங்கள் ஒரு 4, 5 பேர் ஒளிந்துகொண்டு என்னத்தை சாதித்தனீங்க? எங்களோடு தோழர் ரகுமான் ஜான், கேசவன் இருந்திருந்தால் பலமான சக்தியாக நாங்கள் இருந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவங்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இருந்தது.

தேசம்: இந்த மாநாடு முடிந்த பிறகு நான் நினைக்கிறேன் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு டெலோ புலிகளால் அழிக்கப்படுவது.

அசோக்: உண்மைதான். பெரிய அழிவு அது. அதுல ஒன்று குறிப்பிட வேண்டும் ரெலோ தோழர்கள் நிறைய பேர் இந்த புலிகளின் கொலை வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டு எங்களிட்ட வந்து தஞ்சம் கேட்டு பாதுகாப்பு கொடுத்தோம். முக்கியமாக பொபி மற்றது சந்திரன் என்று சொல்லி அவரும் எங்கட குரூப்போட கூட்டிக்கொண்டு தான் நாங்கள் பின்தள மாநாட்டுக்கு சென்றது. யாழ்ப்பாணத்திலிருந்து மிகப் பாதுகாப்பாகத் தான் நாங்கள் போனது. காட்டுப்பாதையால் அவங்களை அழைத்துக் கொண்டு மன்னார் சென்று அங்கிருந்து நாங்கள் பின் தளத்தில் அவர்களை கொண்டு விட்டோம்.

தேசம்: அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு என்னவென்றால் ரெலோ அழிப்பிலும் கூட கூடுதலாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதைகள் எல்லாம் வடிவாக தெரியும். தப்பிப்பதற்கான வழிகளும் தெரியும். அதேநேரம் பிடிபட்டவர்களை அவர்களுடைய பெற்றோரோ உறவினர்களோ போய் சண்டை பிடித்து கூட்டி வந்து இருப்பார்கள். கிழக்கு மாகாண தோழர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைமையில் தான்.

அசோக்: உண்மைதான். சம்பவம் நடந்த உடனே மட்டக்களப்பு தோழர்கள் சிலர் எனக்கு தகவல் அனுப்பினாங்க இப்படி பிரச்சனை என்று. எனக்கும் மட்டக்களப்பு டெலோ தோழர்களுக்கும் உறவு இருந்தது. ரெலோ பிரச்சினை வந்தவுடன் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. அப்போ கோப்பாய்க்கு பக்கத்தில் ஒரு கேம்ப் இருந்தது என்று நினைக்கிறேன். அது புலிகளால் வளைக்கப்பட்டு அவர்கள் 4 பேரும் தப்பிட்டாங்க. தப்பி என்னட்ட வந்துட்டாங்க. அவங்களோட நிறைய தோழர்கள் வந்தவங்க. பிறகு மென்டிஸ் தான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இந்த தோழர்களையும் காப்பாற்றி அனுப்பி போட்டுத்தான் நாங்க பின் தள மாநாட்டிக்கு போனது.

தேசம்: எத்தனை தோழர்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்…

அசோக்: கிழக்கு மாகாணத்துக்கு நான் நினைக்கிறேன் பத்து பதினைந்து தோழர்களை அனுப்பி இருப்போம். நான் பொறுப்பெடுத்து அனுப்பினேன். மெண்டிஸ் நிறைய செய்தது. எல்லா தோழர்களுக்கும் மெண்டிஸ் ஆட்கள்தான் பாதுகாப்பு கொடுத்தது.

தேசம்: எப்ப நீங்கள் பின் தளத்துக்கு போகிறீர்கள். ஏப்ரல் மே வரைக்கும் இது நடக்குது என்று நினைக்கிறேன்.

அசோக்: அதுக்குப் பிறகுதான் நாங்கள் போறோம் ஏனென்றால் பின்தள மாநாடு எண்பத்தி ஆறு கடைசியில் தான் நடக்குது.

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.

தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் – பாகம் 22

 

பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 22:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம்.

தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?

அசோக்: நாலு பேர்.

தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.

அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.

தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?

அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.

தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…

அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.

தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?

அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.

அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.

தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?

அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.

தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?

அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க நாலு பேரும் களைப்புல படுத்திட்டிங்க நிம்மதியா நித்திரை கொண்டு இருக்கீங்க.

அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.

தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,

அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.

தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.

அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.

அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.

பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.

பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?

அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.

தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?

அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.

தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?

அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.

தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?

அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…

அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.

தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?

அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.

தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…

அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.

தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.

தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.

தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?

அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.

தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.

அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.

தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?

அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.

தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,

அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.

தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.

அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.

தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?

அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?

ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.

இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.

தேசம்: வேற அமைப்புக்கள்…?

அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.

தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.

அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.

தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?

அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.

தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.

பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.

அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.

தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…

அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.

தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …

அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.

தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…

அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…

அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…

தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…

அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.

தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.

அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.

தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;

அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.

தேசம் : அதே மிக மோசமானது.

அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.

பாகம் 20: புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 20 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 20:

தேசம்: நாங்கள் ஏற்கனவே கதைத்த மாதிரி 84, 85 காலகட்டங்களில் அரசியல் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. எப்படி நடந்ததோ தெரியல. புற அரசியலில் ஞாயமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது. ஏனென்றால் 85 ஆம் ஆண்டு ரெலோ ட்ரைனை அடித்து புரட்டியது. நான் நினைக்கிறேன் அது அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதல் என்று. அதுல 45 தொடக்கம் 50 வரையிலான ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். சாவகச்சேரி பொலீஸ் ஸ்டேஷன் அடிபடுது. அதுக்குப்பிறகு அனுராதபுரத்தில் புலிகள் போய் பொதுமக்களை கொல்கிறார்கள். கிட்டத்தட்ட 140 பேர் அதில் சாகினம்.

பிறகு குமுதினிப் படுகொலை அதுவும் அந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான தாக்குதலாக இருக்குது. அதோட ஈழ தேசிய விடுதலை முன்னணியின் இயக்கங்களின் இணைவுக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. திம்புப் பேச்சுவார்த்தை இப்படி அந்த காலகட்டம் அரசியல் ரீதியாக மிக வேகமாக துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இது அவ்வளவு தூரம் உணரப்படவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குள்ள உட் பிரச்சனை மிக தலைதூக்குற கால கட்டமாக இருக்குது. அந்தக் காலகட்டத்தில்தான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: புளொட்டைப் பொறுத்தவரையில் ஒரு பார்வை இருந்தது முதலில் அதைப்பற்றி கதைத்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மக்கள் மயப்படுத்தலுக்கு பிற்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்று. மக்கள் இராணுவம், மக்கள் யுத்தம், வெகுஜன அரசியல், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கே புளொட் முன்னுரிமை கொடுத்தது. அதன் கோட்பாடும் அதாகத்தான் இருந்தது. ஏனென்றால் வெறுமனமே இராணுவத்தின் மீதான இப்படியான தாக்குதல்கள் மக்களுக்கு பெரிய தீங்கை கொடுக்கும். ராணுவத்தைப் பலப்படுத்தவும், எமது மக்களை இராணுவம் கொன்று குவிக்கவும் இவ்வாறான தாக்குதல்கள் வழிசமைத்து விடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. அதுதான் நடந்தது. மக்கள் யுத்தத்துக்கான முதல் தயார்படுத்தல் என்பது மக்களை அரசியல் மயப்படுத்தல் மக்கள் மத்தியிலிருந்து மக்கள் ராணுவத்தை கட்டி எழுப்புதல். மரபுரீதியான ராணுவத்தை எழுப்புவது அல்ல ஒரு போராட்டம்.

தேசம்: குறிப்பாக தளத்தில் நீங்கள் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தபடியால் இதுவும் ஒரு பெரிய அழுத்தமாக இருந்திருக்கும் என. மற்ற அமைப்புகள் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நீங்கள் அப்படி முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெரிய அழுத்தங்களை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அசோக்: மக்கள் மத்தியில் போய் வேலை செய்யும் போது அப்படியான எதிர்பார்ப்புகள் வரும். ஆனால் அந்த தாக்குதல்களால் ஏற்படுகின்ற எதிர் நடவடிக்கைகள் மக்களை பார்க்கும்போது அவர்கள் உணர்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தீங்கானது என்று சொல்லி. அப்போ நாங்கள் விளங்கப்படுத்துகிறோம். பூரணமான விடுதலை என்பது இது அல்ல. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டுவரும். நிறைய முரண்பாடுகள் ஏற்படுத்தும். பலமான சக்தியாக ராணுவம் பலம் பெறும் என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலங்களில் புலிகளின் சுத்த இராணுவவாதத்தை, அரசியல் அற்ற போக்கை பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். கடைசி காலங்களில் எல்லா இயக்கங்களும் அவர்களால் அழிக்கப்பட்ட பின்பு மக்கள் நிலை கையறு நிலைக்கு வந்த பின் மக்களால் என்ன செய்யமுடியும். புலிகளை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லைத்தானே. புலிகள் திட்டமிட்டே இவ்வாறு செய்தார்கள்.

அடுத்தது நீங்கள் கேட்டது சந்ததியார் வெளியேற்றம். சந்ததியார் வெளியேற்றம் 85 நடுப்பகுதியில் தான் நடந்தது. காலங்களை சரியாக என்னால் ஞாபகம் கொள்ள முடியாதுள்ளது. 85 நடுப்பகுதியில் மத்தியகுழு கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதில் தோழர் சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. எனவே நான் நினைக்கிறேன் 85 நடுப்பகுதியில் சந்ததியார் வெளியேறி இருப்பார் என.

தேசம்: சந்ததியார் எப்போது கடத்தப்படுகிறார்…

அசோக்: இந்த மத்தியகுழு கூட்டத்திற்கு பிற்பாடு தான் சந்ததியார் கடத்தபட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த மத்தியகுழு கூட்டம் நடந்த பின்புதான் ரகுமான் ஜான் தோழர், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறுகின்றார்கள்.

தேசம்: பாலஸ்தீன பயிற்சி முடித்து தோழர் ரகுமான் ஜான் வந்துவிட்டாரா?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்துவந்த பின் நாங்கள் ஒன்றாக கூடிய மத்தியகுழுகூட்டம் இதுதான். இந்த மத்திய குழு கூட்டம் முடிந்து வரும்போது தான் சொல்கிறார்கள் தாங்கள் வெளியேறப்போவதாக.

தேசம்: அதாவது நீங்கள் சொல்லுற மத்திய குழுக் கூட்டம் சந்ததியார் கடத்தப்பட்ட நேரம் நடக்கிற மத்தியகுழு கூட்டமா அல்லது அதற்கு முதலா…

அசோக்: இந்த மத்திய குழுக் கூட்டம் தோழர் சந்ததியார் வெளியேறிய பின்னர் நடந்த மத்தியகுழு கூட்டம். இக் கூட்டம் நடைபெறும் போது தோழர் சந்ததியார் வெளியேறி இருந்தாரே ஒழிய அந்த நேரம் கடத்தப்படவில்லை. இந்த கூட்டம் நடை பெற்ற பின்னர்தான் தோழர் சந்ததியார் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றார். காலங்கள் சொல்ல முடியாதுள்ளது. சரி பார்க்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சந்ததியார் தொடர்பான விவாதம் நடந்தது. சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கேட்டபோது முகுந்தன் சந்ததியார் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என தனக்கு தெரியாது என்றும் அதற்கான காரணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்கின்றார்.

தேசம்: யார் இந்த கேள்விகளை எழுப்பியது ?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் தான் சந்ததியார் தொடர்பான பிரச்சனை அங்கு வைத்தவர். தோழர் ரகுமான் ஜானின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் முகுந்தனால் பதில் அளிக்கமுடியவில்லை. முகுந்தனுக்கும், அவரின் விசுவாசிகளுக்கும் பெரும் டென்சன். கூட்டத்தில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சந்ததியார் தொடர்பாக பயங்கர விவாதம். முகுந்தனோட பெரிய முரண்பாடு. முகுந்தன் தனக்கும் சந்ததியார் வெளியேற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நியாயப் படுத்திக் கொண்டே இருந்தார். கூட்டம்முடிந்து வெளியே வந்த பின், தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், கண்ணாடி சந்திரன் சொல்கிறார்கள் இயக்கத்தை விட்டு வெளியேறப்போறாம், உங்களின் நிலைப்பாடு என்ன என்று எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. என்ன நடந்தது என்றால் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னரே அவங்க தீர்மானித்துவிட்டாங்க தாங்க வெளியேறுவது என்று. முதலே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா எங்க கிட்ட சொல்ல வில்லை. நாங்கள் தளத்திலிருந்து அந்த மத்திய குழு கூட்டத்துக்கு போறோம். இவர்களின் நோக்கம் எதுவுமே எங்களுக்கு தெரியாது.

தேசம்: இந்த மத்திய குழுக் கூட்டத்துக்கு முற்பாடு இதைப்பற்றி எதுவும் கதைக்கல…

அசோக்: எதுவும் கதைக்கேல, நாங்கள் பின் தளத்தில் இருக்கவில்லை தானே. நாங்கள் இரண்டு மூன்று நாளுக்கு முதல் தான் மத்திய குழுக் கூட்டத்துக்கு போறோம். எங்களை சந்தித்தவர்கள் இதைப் பற்றி கதைக்கவும் இல்லை.

தேசம்: அப்போ இந்த மத்திய குழுவில் இருந்து வெளியேறும் ஆட்கள் யார்?

அசோக்: தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன்

தேசம்: சலீம்?

அசோக்: சலீம் தோழர் இந்த காலத்தில் இலங்கையில் சிறையில் இருந்தவர். அப்போ வெளியேறுவது என்று சொல்லி முடிவெடுத்து அவர்கள், கூட்டம் முடிந்து வெளியில் வந்த சொன்னவுடன் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக போய்விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்கள் வெளியேறினால் எங்களையும் முகுந்தன் ஆட்கள் சந்தேகிப்பார்கள் பெரும் ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். தோழர் குமரன் குழம்பி விட்டார். குமரனுக்கு இவர்களோடு வெளியேறும் எண்ணம் இருந்தது. நான் குமரனுக்கு சொன்னேன். நாங்கள் நாலு பேரும் நாட்டில் இருந்து வந்திருக்கிறோம். நாட்டுக்கு போறோம். நாட்டுக்குப் போய் பின்தள பிரச்சினையை சொல்லுறோம். அங்கு போய் நாம் முடிவு பண்ணுவோம் என்று. கூட்டத்தில் பல்வேறு கொலைகள் தொடர்பாக எல்லாம் கதைக்கப்பட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார். மத்திய குழுக் கூட்டத்தில் கடைசியும் முதலுமாக உட் கொலை பற்றி கதைக்கப்பட்டது அன்றைக்குத்தான்.

தேசம்: அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும்…

அசோக்: கதைத்து பிரச்சனைப்பட்டு அவங்கள் வெளியேறிவிட்டாங்க. நாங்களும் அவங்களோட சேர்ந்து கதைத்து பிரச்சனைபட்டு விட்டோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன் . 2 ,3 நாட்களுக்கு பிறகு அவங்க வெளியேறிவிட்டாங்க. எங்களை நம்பி, எங்க கதைகளை நம்பி போராட்டத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களும், தோழர்களும் நாட்டில இருக்காங்க. அத்தோட நாங்க பயிற்சிக்காக பின் தளம் அனுப்பிய தோழர்களின் நிலை என்னவாகும். நாங்க வெளியேறிய பின் அவர்களின் நிலை மிக மோசமாகி சந்தேகப்பட்டு அவர்களின் நிலமை கொடுமையாகிவிடும் . அதனால தளத்திற்கு போய் நிலமையை சொல்வோம் என்று நாங்க முடிவு பண்ணினோம். இவங்க வெளியேறிய பின்பு எங்களின் நிலை ஆபத்தாகி விட்டது.

தேசம்: நாங்க என்று சொல்லி யாரை சொல்லுகின்றீர்கள்?

அசோக்: நான், ஈஸ்வரன், குமரன், முரளி. நாங்கள் அதற்கு பிறகு ஒரு வாரம் அங்கேயே நின்றோம். நாட்டுக்கு போவதற்கான நடவடிக்கைகளை எடுத்து எங்களுக்கான போக்குவரத்து boat வசதி எதையும் முகுந்தன் ஆட்கள் செய்து தரவில்லை.

தேசம்: நெருக்கடி தரேலயா…

அசோக்: நெருக்கடி தரேல. ஆனால் கண்காணிக்கப்பட்டோம். மத்திய குழுக் கூட்டம் நடந் து சுமார் ஒரு மாதம் நாங்க அலைக்கழிக்கப்பட்டோம்.

தேசம்: மத்திய குழுக் கூட்டம் நடந்து ஒரு மாதம் வரை நீங்கள் பின் தளத்தில் தான் இருக்கீங்க?

அசோக்: எங்களை நாட்டிக்கு போவதற்காக கோடியாக்கரைக்கு போக சொன்னாங்க. கரைக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்களுக்கான எந்த வசதியும் செய்து தரப்பட இல்லை. பிறகு பார்த்தால் புதிதாக இரண்டு பேர் எங்கள் பாதுகாப்புக்கு என்று நாங்க தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பப்பட்டாங்க. பிறகு காலப்போக்கில் அவங்களில் ஒருவர் சொல்லி விட்டார் எங்களை உளவு பார்க்கத்தான் முகுந்தன் தங்களை அனுப்பியதாக.

தேசம்: யார் ஆள் அது…

அசோக்: அந்தத் தோழர் குமரனுக்கு தெரிந்தவர். பெயர் ஞாபகம் இல்லை. குமரனிட்ட எல்லாம் சொல்லிட்டார் உங்களை உளவு பார்க்க தான் தங்களை அனுப்பினது என்று. அப்போ எங்களுக்கு தெரிந்தது நெருக்கடியான கட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று. பிறகு நாங்களாகவே வோட் ஒழுங்கு பண்ணி நாட்டிக்கு போகலாம் என்று சொல்லி இருக்கும் போதுதான் முகுந்தன் boat ஒழுங்கு பண்ணி போறதுக்கு ஏற்பாடு செய்தவர்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அவர்களை சந்திக்கவில்லையா?

அசோக்: அதன் பிறகு தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடிச் சந்திரன் யாரையுமே நாங்க சந்திக்க முடியவில்லை. அவர்களும் எங்களை சந்திக்க முயலவில்லை. அதன்பின் பல காலங்களின் பின் நான் இங்கு வந்த பின்தான் தொடர்பு கிடைத்தது.

தேசம்: நீங்கள் அவர்களை கேட்கவில்லையா உங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கு…

அசோக்: இதை பற்றி உரையாடல் நடந்தது. நாட்டிக்கு வரும்படி கேட்டோம். அவர்கள் வெளியேறி அப்படியே தளத்திற்கு வந்திருக்க முடியும். வந்திருந்தால் தளத்தில் இருந்த தோழர்களோடு இணைந்து உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தி புளொட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடிந்திருக்கும். அதற்கான திறமையும் ஆற்றலும் ரகுமான் ஜான் தோழரிடம் இருந்தது. புளொட்டில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் ஆற்றல் கொண்டவராக இருந்த ஒரே ஒரு ஆள் என்றால் அது ரகுமான் ஜான் தோழர்தான். ஆனா அவங்க முயற்சிக்கவில்லை.

தேசம்: பொறுங்கோ வாரேன். நீங்கள் சொல்லுற இந்த உரையாடல் மத்திய குழுவில் நடந்ததா மத்திய குழுக்கு வெளியில் நடந்ததா?

அசோக்: வெளியில் நடந்தது. காந்தன் இங்க பிரான்சிக்கு வந்தபோது நான் இந்த கேள்வியை கேட்டேன். ஏன் நீங்கள் எங்களோட தளத்திற்கு வரல. வந்திருந்தால் எப்படியாவது ஒருமாற்றத்தை கொண்டு வந்திருக்கமுடியும் என்று.

தேசம்: காந்தன் என்று சொல்லுறது?

அசோக்: ரகுமான் ஜான் தோழரை. அப்பவே நாங்கள் கேட்டோம் நீங்கள் வாங்கோ எங்களோடு. நாங்கள் போவோம். நாட்டுக்குப் போய் சகல பிரச்சினைகளையும் கதைப்போம். ஏனென்றால் எங்களை நம்பி நிறைய தோழர்கள் முகாமில் இருக்கிறார்கள். தளத்திலும் இருக்கிறார்கள். விட்டுட்டு நாங்கள் வெளியேற இயலாது. ஏனென்றால் நாளைக்கு அவங்களுக்கு ஆபத்து. நாங்கள் சொன்னோம், நாங்கள் போய் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடத்துவோம் இங்கேதான் நடத்த முடியாதே.

தேசம்: அதற்கு அவர்களுடைய பதில் எப்படி இருந்தது?

அசோக்: இதை இனி திருத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிரயோசனமில்லை. நீங்கள் போறது என்றால் போங்கள் என்று சொல்லி. உண்மையிலேயே இவங்கள் வந்திருந்தா ஃபைட் பண்ணி இருக்கலாம்.

தேசம்: திருத்துவதற்கு வாய்ப்பில்லை என்றால் இதற்கு முதலும் இதைப்பற்றி கதைக்கவே இல்லை தானே. ஒரே கூட்டத்தில் நீங்கள் திருத்த ஏலாது தானே அமைப்பை.

அசோக்: இதை வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் எல்லாரிலையும் பிழை இருக்கு. அதை யாரும் உணர்ந்ததாக இல்லை. இயக்கத்தின் அடிப்படை பிரச்சனையே உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனதுதான். அதனை நாங்க உறுதியாக நிலை நிறுத்தி இருக்கவேண்டும். அத்தோடு அரசியல் கல்வி மேல்மட்ட தோழர்களுக்கு, நிர்வாகிகளுக்கு இல்லாமை. இது பற்றி முன்னமே கதைத்திருகிறோம்.

புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர்களின் விருப்பங்களில் தன்னிச்சையான போக்குகளினால்தான் கட்டமைப்படுகின்றது. எல்லா அதிகாரங்களையும் முகுந்தன் வைத்துக் கொண்டது. தனிநபர் அதிகாரங்களை நாங்க இல்லாமல் செய்திருக்கவேண்டும். கூட்டுமனநிலை கூட்டுசெயற்பாடுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக நடந்த அந்த மத்தியகுழு கூட்டத்தில் ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்திக் கொண்டதே மிச்சம். நாங்க முகுந்தன் ஆட்களை குற்றம்சாட்ட அவர்கள் எங்களை குற்றம்சாட்ட எந்தவித நியாங்களும் தீர்வுகளும் இன்றி அந்த கூட்டம் முடிஞ்சி போய் விடடது குறைந்தபட்சம் பரஸ்பரம் சுயபரிசீலனை செய்ய யாரும் தயார் இல்லை நான் உட்பட. இதுல முகுந்தன் உட்பட எல்லாரும் குற்றவாளிகள். புளொட் உடைவில எல்லாருக்கும் பாத்திரம் இருக்கு. புளொட் ஆரோக்கியமான அமைப்பாக கட்டி அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. ஆரோக்கியமான திசை நோக்கி போகவேண்டிய அமைப்பை இந்த அளவுக்கு பாழ்படுத்தியதற்கு எல்லாருக்கும் பங்கு இருக்கு.

தேசம்: குறிப்பாக நான் நினைக்கிறேன் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் இருந்தவைக்கு பெரும் பொறுப்பு இருக்கு. ஏனென்றால் முகுந்தன் இவ்வளவு அதிகாரத்தோடு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை தானே.

அசோக்: அதிகாரத்தை முகுந்தன் குவித்ததற்குக் காரணம் எங்களுடைய பலவீனம். நாங்கள் மத்திய குழுவில் தவறுகளை சுட்டிக்காட்டி ஆரம்ப காலத்திலேயே ஃபைட் பண்ணி இருந்தால். ஏனென்றால் நீங்களும் முகுந்தனுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மௌனமாக இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு உள்ள முரண்பாடு வரும் போது தான் சிக்கல் வருகிறது.

தேசம்: மற்றது இந்த காலகட்டம் வரைக்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படுகொலைகளைப் பற்றி ஏதாவது வைக்கப்பட்டதா?

அசோக்: முன்னர் கதைக்கப்படவில்லை. ஒரு தடவை நான் கதைத்து முகுந்தன் என்னிடம் ஆதாரம் கேட்டு டென்சன் ஆனதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். யாரும் கதைத்ததில்லை. ஆனால் இந்த மத்தியகுழு கூட்டத்தில் கதைக்கபட்டது. கதைத்த எங்களிடம் உறுதியான எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கொலைகள் தொடர்பாக எந்த ஆதாரத்தோடையும் யாரும் கதைக்கவில்லை. எவிடன்ஸ் ஒருத்தருட்டையும் இல்ல. பொதுவாகவே பி கேம்ப் (B – Basic Camp) பில் ரோச்சர் நடக்குது கொலை என்று சொல்லப்பட்டது. அப்போ முகுந்தனுக்கு ஒரு சாதகமாக போயிட்டு. முகுந்தன் எப்பவுமே ஆதாரம் கேட்பார்.

தேசம்: எத்தனை பேரின் பெயர்கள் வைக்கப்பட்டது?

அசோக்: பெயர் எதுவும் சொல்லவில்லை. படுகொலைகள் நடக்குது கேம்பில் ரோச்சர் நடக்குது என்ற அடிப்படையில்தான் பிரச்சனை விவாதம் நடந்தது. அது ஆரோக்கியமான உரையாடலுக்கான நியாமான சூழலாக இருக்கல்ல. ஒரே டென்சனாகவே இருந்தது.

தேசம்: அப்போ அதுவும் ஒரு வதந்தியாக தான் வைக்கப்பட்டது.

அசோக்: வதந்தியாக தான் கதைக்கபட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார்.

தேசம்: அப்போ ஆதாரங்கள் ஒன்றும் இருக்கல.

அசோக்: ஆதாரங்கள் ஒன்றுமில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் கொல்லப்பட்டவர்களது பெயர்கள் ஏதாவது பேசப்பட்டதா?

அசோக்: பிற்காலத்தில் நிறைய பெயர்கள் வந்திருக்கு. குறைந்தது 25 பெயராவது வெளியில வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயர்களை ஞாபகம் இல்லை. ஆனால் தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். டார்ச்சர், படுகொலைகள் பின் தளத்தில் நடந்திருக்கு அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசம்: எப்ப இருந்து எப்ப வரைக்கும்?

அசோக்: 84இல் இருந்து 85 வரைக்கும் நடந்திருக்கு.

தேசம்: 84 முடிவு பகுதியில் இருந்தா?

அசோக்: B camp போட்டதிலிருந்து. B camp என்றால் basic camp. அந்த கேம்பில தான் சித்திரவதைகள் , கொலைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. காலங்களை சரியாக சொல்லமுடியாதுள்ளது.

தேசம்: நானறிந்த வரைக்கும் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் புளொட்டில் ஆட்கள் கதைத்து அளவுக்கு அல்ல ஒரு கொலை என்றாலும் கொலைதான். ஒரு கொலை என்றாலும் அது மனித உரிமை மீறல் தான். ஆனால் வெளியில் கதைக்கப்பட்டது அப்படி என்றால் 20 – 25 பேருக்குள்ள அல்லது ஆகக் கூடியது 50 பேர் வரை கொலைகள் நடந்து இருக்கு என்று. அதற்கான சாட்சியங்களை ஏன் அதை எடுத்தவர்கள் வைக்க இயலாமல் போனது. சாட்சியங்கள் இருக்கலாம் மத்திய குழுவில் நீங்கள் வைத்து தானே இருக்க வேண்டும். மத்திய குழுவில் 20 பேரில் உமா மகேஸ்வரன் சங்கிலி வேற யார் அந்தப் பக்கம் இருந்தார்கள்

அசோக்: மாணிக்கதாசன் போன்ற ஆட்கள்தான். ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பதில் அளிப்பார். இவங்க அவரோடு சேர்ந்து ஆமா போடுவார்கள். மத்தியகுழுவில் நாங்க சமநிலை கொண்டிருந்தம். ஆனால் எங்களிட்ட எந்த அதிகாரமும் பலமும் இல்லைத்தானே. முகுந்தன் நினைத்திருந்தால் அன்றைக்கு எங்களை கொலை செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு திமிர்த்தனமும் ஆணவமும் அவங்களிடம் இருந்தது. நாங்க வெறும் எண்ணிக்கைதானே ஒழிய எங்களிடம் எந்த பவரும் இல்லை.

தேசம்: மற்றது உங்கட பக்கத்துலயும் …. ட்ரைனிங் எடுத்த ஆட்கள் இருந்திருக்கிறீர்கள். ஆரம்பகால உறுப்பினர்கள் இருந்திருக்கிறீர்கள். அடுத்தது தளம் முழுமையாக உங்கட கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அசோக்: தளத்தின் நிலமை வேறு. பின்தளம் அப்படியல்ல. அதிகாரமும் ஆயுதமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகள். பின்தளத்தில் நாங்கள் எல்லோரும்வெறும் நபர்கள்தான். உண்மையில் ரகுமான் ஜான், கேசவன் எல்லாரும் எஙகளோடு தளம் வந்து உட்கட்சிப்போரட்டம் நடாத்தி இருந்தால் முகுந்தன் ஆட்களால் எதுவுமே செய்திருக்க முடியாது. ஆரம்ப காலத்திலேயே இந்த தவறுகளுக்கு எதிராக உட்கட்சிப்போராட்டத்தை இவர்கள் பின்தளத்தில் நடாத்தி இருந்தால், ஃபைட் பண்ணி இருந்தால் அதனுடைய தாக்கம் தளத்திலும் இருந்திருக்கும். தளத்தில் நாங்கள் சப்போர்ட் பண்ணி இருப்போம். முகாமில் தோழர்களும் சப்போர்ட் பண்ணி இருப்பாங்க. இவர்கள் யாரும் ஃபைட் பண்ணவில்லை. நான் கலந்து கொண்ட மத்திய குழு அதாவது 84 ஜனவரியிலிருந்து இவங்கள் வெளியேறும் வரைக்கும் மத்திய குழுக் கூட்டங்கள் எதிலேயும் வந்து உட் கொலைகள், இயக்க பிரச்சனைகள் தொடர்பாக கேட்டு ஃபைட் பண்ணினது இல்லை. வெளியேற்றத்திற்கு அன்றைக்கு நடந்த ஃபைட் தான் கடைசியும் முதலுமான பைட்.

தேசம் : நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதை ஆதாரபூர்வமாக வைக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டை மக்கள் முன்னிலையிலும் கொண்டுபோய் இருக்கலாம் தானே. மக்கள் அமைப்பு தானே. மற்றது தளம் முழுதாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கிற அல்லது உங்கட பக்கம் நிக்குது. அப்படி இல்லா விட்டாலும் அதை உங்கட பக்கம் எடுத்திருக்க வேண்டும்.

அசோக்: இப்ப யோசித்தால் நாங்கள் ஆதாரபூர்வமாக நாங்கள் முதலில் ஃபைட் பண்ணி இருந்தால் புளொட்டை சரியான திசைவழியில் எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். இல்லாட்டி இவங்கள் எங்களோடு வந்து இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஆட்களை வெளியேற்றி போட்டு நாங்களே புளொட் என்று சொல்லி உரிமை கோரி புளொட்டை வழிநடாத்தி இருக்கமுடியும். ஏனென்றால் நாங்கள் கடைசியில் தளத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தி தானே வெளியேறினோம்.

தேசம்: புளொட்டில் உமாமகேஸ்வரனில் குற்றம்சாட்டி வெளியேறின ஆட்களும் கறைபடிந்த கைகள் தான். நான் உங்களை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை. கண்ணாடி சந்திரன் சில கொலைகளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் கொலைகளை மேற்கொண்ட மல்லாவி சந்திரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுல என்ன தார்மீகம் இருக்கு எவ்வாறானதொரு நியாயம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அசோக்: விமர்சனத்திற்கு உரிய விடயம் தான். நிறைய தோழர்களுடன் கதைக்க வேண்டும். சந்ததியார் இறந்துட்டார். கேசவன் இறந்துட்டார். இப்ப இருக்கிறது நான், முரளி தோழர் இருக்கிறார். குமரன் இறந்துட்டார். மத்திய குழுவில் இருந்த சரோஜினி இருக்கிறார். கண்ணாடி சந்திரன் இருக்கிறார். ரகுமான் ஜான் இருக்கிறார். அடுத்தது பாபுஜி, ராஜன் இருக்கிறார்கள். இவர்கள் கதைக்க வேணும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக. உண்மைகளை கதைக்க வேண்டும்.

தேசம்: இது ஒரு சில நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. கிட்டத்தட்ட மிகப் பெரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. சில நூறு, சில ஆயிரம் உறுப்பினர்கள். இவர்களுடைய செயற்பாடுகளால் அல்லது இவர்களுடைய முடிவுகளால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவ்வளவு தூரம் பொறுப்பு கூறாமல் போக இயலாது.

அசோக்: சரியான திசையை நோக்கி போயிருந்தால் பிற்காலத்தில் புளொட். இடதுசாரி இயக்கம் என்ற ஒன்றிக்கு முன்மாதிரியாக இருந்திருக்க முடியும். அது இல்லாமல் போய்விட்டது.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த பிரிவுக்கு பிறகு அங்க பெருசா செய்ய ஒன்றுமில்லை. பிறகு எப்போ சந்ததியார் மத்திய குழுவுக்கு வராமல் விடுகிறார். பிறகு கடத்தப்பட்டதாக சொல்லப்படுது.

அசோக்: நான் நினைக்கிறேன் 85 செப்டம்பரில் கடத்தப்படுகிறார். சரியாக ஞாபகம் இல்லை.

தேசம்: கடத்தப்பட்ட சில நாட்களிலேயே ….

அசோக்: ஓம். கடத்தப்பட்ட சில நாட்களிலேயே கொல்லப்படுகிறார். அதுக்குப் பிறகு ஒரு மத்திய குழுக் கூட்டம் நடக்கிறது.

தேசம்: சந்ததியார் கொல்லப்பட்டதற்கு பிறகு…

அசோக்: ஆம். அந்த மத்திய குழுக் கூட்டம் எப்படி என்றால் நாங்கள் நாட்டில் போய் தள மாநாடு நடத்தி, அதில் தீர்மானங்கள் எடுத்து பின் தளத்தில் பிரச்சனைகளை கதைப்பதற்கான தள கமிட்டி தெரிவு செய்யப்பட்டு அந்த தோழர்களோடு பின்தளம் வந்த பின் நடந்த மத்திய குழு கூட்டம் அது .

தேசம்: அதைப்பற்றி பிறகு கதைப்போம்.

அசோக்: அதுதான் இறுதியாக நாங்கள் கலந்து கொண்ட கூட்டம்.

(படங்கள்: சீலனின் தொடரில் இருந்து.)

பாகம் 19: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 19

தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.

அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.

தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.

அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.

மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.

தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.

அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.

தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…

அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.

தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக

அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.

தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.

அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.

தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?

அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?

அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.

அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.

இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.

தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.

இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.

தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.

அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

பாகம் 18: அரசியல் அற்றவர்கள் பொறுப்பான பதவிகளில் – புளொட்டின் மற்றுமொரு முரண்பாடு!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை

ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 18 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 18

தேசம்: நாங்கள் எண்பத்தி நான்காம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் கதைத்து இருக்கிறோம். இந்த காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு பாரிய அளவில் ஆயுதங்கள் எவையும் பெருசாக கிடைக்கவில்லை. ஆனால், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இருந்த அமைப்புகளில் அரசியல் கல்வியூட்டும் விடயங்களை மேற்கொண்டு இருந்தது என்று நினைக்கிறேன். சமூக விஞ்ஞான கல்வியினுடைய உருவாக்கம் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அது என்ன நடந்தது, அதில யார் யார் தொடர்புபட்டவை. உமா மகேஸ்வரனுக்கு தொடர்பு இல்லாமல் இருந்ததா அல்லது அவர் அதை மறுத்து அப்படியான கல்விவூட்டல்களை நிராகரித்தாரா? அதுகளைப் பற்றி கதையுங்கள் என்ன நடந்தது?

அசோக்: T3S என்று சொல்லப்பட்ட தமிழ் ஈழ சமூக விஞ்ஞான பாடசாலை 1984 யில் சென்னை கே. கே. நகரில் தொடங்கப்பட்டது. மார்ச்சிய அரசியல் கல்வி மற்றும் சமூகவியல், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் சர்வதேச உறவுகள், அபிவிருத்தி திட்டமிடல் இப்படி எதிர்காலத்தை முன் வைத்து இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. இதற்கு பயிற்சி முகாங்களிலிருந்து தோழர்கள் தெரிவு செய்யப்பட்டாங்க. இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் நிறைய பேர் அந்த வகுப்புக்களை எடுத்தாங்க. அது ஒரு தரமான அரசியல் கல்வி ஏனென்றால், அவர்கள்தான் காலப்போக்கில் தளத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும், முகாம்களில் வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும் தான் உருவாக்குவதற்காக தான் அது ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உருவாக்குவதில் பலருடைய ஆர்வம் இருந்தது. உமாமகேஸ்வரன், சந்ததியார், யோதீஸ்வரன், வாசுதேவா, ரகுமான் ஜான் எல்லா பேரும் சேர்ந்து தான் அதை உருவாக்கியவர்கள்.

தேசம்: அப்படி ஒரு கல்லூரியின் தேவையை எல்லோரும் உணர்ந்து இருந்தவை?

அசோக்: ஓம் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்கினது.

தேசம்: அது கடமைக்காக ஆரம்பிக்கப்படவில்லை. உணர்வுபூர்வமாக தான் ஆரம்பிக்கப்பட்டது.

அசோக்: உண்மையில் நல்ல நோக்கத்தோடு நம்பிக்கையோடுதான் ஆரம்பிக்கப்பட்டது. முகுந்தனுக்கு அந்த நம்பிக்கை இருந்ததா என்பது இப்ப யோசிக்கும் போது சந்தேகம்தான். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது இயங்கல்ல. அதில படித்த தோழர்களை பார்த்தீர்களென்றால் அரசியல் ரீதியாக மிக வளர்ச்சி பெற்ற தோழர்களாக தான் இருக்கிறார்கள். லண்டனில் பணிக்ஸ் என்ற தோழர் இப்ப இருக்கிறார். இதில் படித்தவர். அவரோடு அடிக்கடி உரையாடுவேன். அரசியல் மற்ற பல விசியங்களை அவரிடம் அறிய முடியும். சீனு, அரசிளங்கோ, கணன், சாமி இப்படி பல தோழர்கள். அஜீவன் சுவிஸில் இருக்கிறார் அவரும் T3S இல் படித்தவர்தான்.

தேசம்: என்னுடைய சகோதரரும் T3Sல் படித்தவர்தான். அதோட நேதாஜி என்ற பிரேம்சங்கர் என்று அறியப்பட்டவர் அவரும் சமூக விஞ்ஞான கல்லூரியில் படித்தவர்.

அசோக்: இந்த அரசியல் வகுப்பு 40 பேர் கொண்ட வகுப்புக்களாக நான்கு பிரிவுகள் நடத்தப்பட்டது. சுமார் 160 தோழர்கள் அதில் படித்திருப்பார்கள் என நினைக்கிறன். அதன்பிறகு புளொட்டில் ஏற்பட்ட குளப்பங்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் செய்துவிட்டன. லண்டனில் இருந்து வந்த தோழர் ராஜா நித்தியன் அதற்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் முகாம்களிலும் அரசியல் கல்வி நிறைய ஊட்டப்பட்டது. ஆரம்ப காலங்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. உதாரணமாக பார்த்தீர்களென்றால் பல்வேறு முகாம்களில் இருந்து அரசியல், கலை, இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் வந்திருக்கு அந்த நேரத்தில். தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர் ரவி வர்மன் என்று சொல்லி. சில காலங்களுக்கு முன்னர் இறந்திட்டார். அப்ப நாங்கள் அவரை தோழர் மது என்று அழைப்போம். அவரும் பயிற்சி முகாம்மில் இருக்கும் போது தரமான சஞ்சிகை ஒன்றை கொண்டுவந்தார். இப்படி பல சஞ்சிகைகள். தோழர்கள் இப்படி பல ஆக்கபூர்வமான வேலைககளில் ஈடுபட்டார்கள். தெளிவான அரசியலை கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று கேட்டால், இந்த முகாம்களில் இருக்கின்ற தோழர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பாளர்கள் அதற்கேற்ற தகுதி வாய்ந்தவர்களாக அரசியல் அறிவு கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் முகுந்தனின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தார்கள். எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் இருக்கல்ல. முதலில் அரசியல் கல்வி ஊட்டி இருக்க வேண்டும். அது இருக்கல்ல. முகுந்தன் விசுவாசி என்ற ஒரு தகுதி இருந்தாலே போதும் பொறுப்புக்களுக்கு வந்து விடலாம் என்ற நிலைதான் இருந்தது. அந்த மன நிலையை மாற்றி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குழுவோ அல்லது மத்திய குழுவோ எந்த அக்கறையும் இதில் கொள்ளவில்லை.

முகாங்களில் இருந்த தோழர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி கொண்டவர்கள். அப்ப என்ன நடக்கும் என்றால் அவர்கள் நீண்ட காலமாக முகாம்களில் இருக்கும் போது ஏற்படும் சிக்கல் இருக்குதானே, முரண்பாடு வரும். அவங்கள் கேள்வி கேட்பார்கள். அரசியல் சார்ந்த உரையாடலுக்கு இவர்கள் பொறுப்பாளர்கள் தயாரில்லை. இவர்கள் வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டம் கொண்டவர்கள்.

தேசம்: முகாமில் இருக்கிற உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக வளர்ந்து இருப்பார்கள். அவர்களை வழிநடத்துற தோழர்களுக்கு அரசியல் கல்வி போதாமை இருக்கு.

அசோக்: ஓம். அவங்கள் நீண்டகாலமாக முகாமில் இருந்தவர்கள் தானே, நாட்டிக்கு போவது தொடர்பாக, யுத்தம் தொடர்பாக, போராட்டங்கள் தொடர்பாக அரசியல் கேள்விகள் கேட்டால் இவங்களுக்கு பதில் தெரியாது. அப்போ முரண்பாடு வரும். காலப்போக்கில் இந்த முரண்பாடு அரசியல் கதைக்கிறவன் எல்லாம் சந்ததியார் ஆள் என்று குற்றம் சுமத்தும் நிலைக்கு போய்விட்டது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் இந்த முகாம் பொறுப்பாளர்களை யார் நியமித்தது. ஏனென்றால் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் தோழர் ஜான் இருந்திருக்கிறார்.

அசோக்: அவர் இராணுவ ஆலோசகர் என்று நினைக்கிறேன்.

தேசம்: கட்டுப்பாட்டு குழுவுக்கு முகாம் பொறுப்பாளர்களை நியமிக்கின்றது தொடர்பா அல்லது அவர்களுக்கு இருக்கின்ற தகுதி தொடர்பா விளக்கம் ஏதும் இருக்கேலயா?

அசோக்: கட்டுப்பாட்டு குழுவுக்கு ஜெயில் பிரேக் நடந்த உடனேயே குறிப்பிட்ட ஆட்களுக்கு பதவி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நேரம் தங்களை சுற்றியுள்ள ஆட்களுக்கு ஏதாவது பதவிகளை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலை இவங்களுக்கு. குறிப்பாக, முகுந்தனுக்கு இருந்தது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு அதிகாரமிக்க பதவி கொடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கோ அரசியல் கல்வி பெறுவதற்கோ இவங்கள் தயாரில்லை. சிறையில் அடைக்கப்பட்டு வந்த அவ்வளவு பேருக்கும் மற்ற சுற்றியுள்ள பேர்வழிகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு வகையில் பதவி கொடுக்க வேண்டும். அப்போ அவர்கள்தான் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் உட்பட எல்லா பதவிகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேசம்: அவர்களுக்கு தகுதி இருந்ததோ இல்லையோ சிறையிலிருந்து அதுதான் அவர்களுடைய தகுதியாக..

அசோக்: புளொட்டில் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து இருப்பார்கள். இதுதான் இவர்களின் ஒரே தகமை. அரசியல் கல்வி அவர்களிடம் இல்லை. புளொட்டின் அரசியல் யாப்பை பார்த்தீர்களென்றால் அது தரமானதொரு அரசியல் கோட்பாடு கொண்டது. அனைத்து அடக்குமுறைகளையும் உடை த்தெறிவோம் என்ற கோஷமே உங்களுக்கு விளங்கும். அரசியல் மட்டங்களில், சமூக மட்டங்களில், கலாச்சார மட்டங்களில் இருக்கிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு கோஷமாக கொள்கையாக தான் அது இருக்குது.

தேசம்: இந்த அரசியல் யாப்பு எல்லா போராளிகளுக்கும் வழங்கப்பட்டதா.

அசோக்: அரசியல் வகுப்புகள் எடுக்கப்பட்டிருக்கு. அந்தநேரம் பார்த்தீர்கள் என்றால் நிர்மாணம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அது இலங்கையினுடைய சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக, சாதியம், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எண்பத்தி மூன்று கடைசியிலேயே வெளியிட்டிருக்கு இருக்கு. எண்பத்தி நாலிலும் வந்தது. நாலு ஐந்து சஞ்சிகைகள் வந்திருக்கு. அதில சிவசேகரம், கௌரிகாந்தன் எல்லாரும் எழுதி இருக்கிறார்கள். பெரிய விவாதமே நடந்திருக்கு. அத்தோட spark என்று ஆங்கிலத்தில் அரசியல் சஞ்சிகை வெளி வந்தது.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது ஆரம்ப கட்டத்தில் எல்லாமே ஒரு சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருந்திருக்கு.

அசோக்: அந்த ஆரம்ப பாதையை மிக நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் முன்னெடுத்திருந்தால் வேறு ஒரு திசைக்கு கொண்டு போயிருக்கலாம். ஏனென்றால் ஆரம்ப காலங்களில் அரசியல் சார்ந்து ஆழ்ந்து எழுதுகிற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் புளொட்டில் வெளிவந்திருக்கு. புளொட்டின் ஆரம்பகால துண்டு பிரசுரங்களையும், எழுத்துக்களையும், புத்தகங்களையும் பார்த்தீர்களென்றால் மிக அரசியல் சார்ந்த பிரதிகளாகத்தான் அவை இருந்தது. முரண்பாடுகள் வந்ததும் எல்லாம் சிக்கலாக போய்விட்டது.

தேசம்: இதுல ஒரு முக்கியம் என்ன என்று கேட்டால் தங்களுடைய இயக்கத்துக்கு வாற தோழர்களை, உறுப்பினர்களை கல்வி ஊட்டுவது என்பது முக்கியமான விடயம். அந்தக் கல்வியை ஊட்ட வேண்டும் என்ற உணர்வு எல்லார்கிட்டயும் இருந்திருக்கு. ஆனால் அதால வரக்கூடிய பிரச்சனைகளை அடுத்த கட்டத்துக்கு அவர்களைக் கொண்டு போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அசோக்: உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் சகல மட்டங்களுக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டிருக்க வேண்டும். முதலில் மத்திய குழுவிலிருந்த முழுப்பேருக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கல்வி சமூக அக்கறை ஜனநாயக பண்பாடு கொண்ட தோழர்களை பொறுப்புக்களுக்கு நியமித்திருக்க வேண்டும்.

தேசம்: நீங்கள் சொல்வதன் படி சங்கிலியன் எல்லோரும் மத்திய குழுவில் இருந்து இருக்கிறார்கள்.

அசோக்: சங்கிலி கந்தசாமி மாத்திரம் அல்ல. பலர் இப்படி. நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒருக்கா மத்திய குழுவுக்கு போவோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு முரண்பாடுகள் வந்த உடனே நாங்கள் போகாமல் விட்டுட்டோம்.

தேசம்: ஏன் நீங்கள் போகாமல் விட்டீர்கள்…

அசோக்: விரக்தியாக போய் விட்டது. ஏனென்றால் அங்க போய் ஒரு பிரயோசனமும் இல்லை.

தேசம்: உண்மையிலேயே இந்த பயணம் உயிரை பணயம் வைத்து போற பயணம். இலங்கையிலிருந்து அடுத்த கரைக்கு போய்ச் சேர வேண்டும். எவ்வளவு நேர பயணம் அது ?

அசோக்: ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்தில் போகலாம். அது நேவிய பொறுத்து இருக்கு. நேவி துரத்தி பிரச்சனைப்பட்டால் சிக்கல் தான்.

தேசம்: அப்படி போய் வரேக்க உங்களுக்கு நெருக்கடிகள் இருந்ததா…

அசோக்: ஓம் ஒரு தடவை பயங்கர நெருக்கடி. நான் ஈஸ்வரன், முரளி, தோழர் கேசவன் இரவு 11 மணிக்கு மாதகலிலிருந்து கிளம்பினாங்கள். நாங்கள் போகும் போது நேவி கண்டு விட்டது. அவர்கள் துரத்த தொடங்கி விட்டார்கள். கோடியாக் கரைக்கு போகவேண்டிய நாங்கள் ஓடி ஓடி கடைசியில் பெற்றோலும் முடிந்த நிலையில், அதிகாலை 4மணியளவில் மல்லிப் பட்டணத்தில் கரை ஒதுங்கினோம். இப்படி இந்த கடல் பயணங்களில் பல அனுபவங்கள்.

தேசம்: இலங்கை கடற் பிராந்தியத்தை தாண்டி நேவி கலைத்து அடிக்கிறது.

அசோக்: அவர்கள் துரத்த தொடங்கினால், இந்திய எல்லைக்குள் எல்லாம் வருவாங்க. அது அவங்களுக்கு பிரச்சனை இல்லை. வோட்டில் பின் தளம் போகும் போது பெரிய பயம் தேவையில்லை. இலங்கை நேவி துரத்தி சுட்டாலும், எப்படியோ தப்பித்து இந்தியா கரைக்கு போய்விடமுடியும். ஆனால் அங்கிருந்து கரையை நோக்கி வரேக்க பெரிய ஆபத்துகள். நேவி கண்டால் சிக்கல்தான்.

தேசம்: வரேக்க உங்களுக்கு கரையில் தகவல் தருவதற்கு ஆட்கள் இருந்தவையா?

அசோக்: அப்படி ஒன்றும் இல்லை. ஓட்டி தான் கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டு வரவேணும்.

தேசம்: வெறும் கண்ணால பார்த்து

அசோக்: கண்ணால தான் பார்க்க வேண்டும். அப்ப எங்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை.

தேசம்: அந்த நேரம் பயணங்களில் நிறைய பேர் உயிரிழந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம் எல்லா இயக்கங்களிலும் நடந்திருக்கு.

தேசம்: பாக்கு நீரினை கடலில் விடுதலை போராளிகள் காவியமே படைத்திருக்கிறீனம்.

அசோக்: மிகவும் பரிதாபத்துக்குரிய மரணங்கள் அவை.

தேசம்: இவ்வாறான பயணங்கள் எப்படி நடக்கிறது? கிழமையில் 1, 2 நடக்குமா…

அசோக்: அந்த நேரத்தில் பின்தளத்திற்கு பயிற்சி பெற செல்லும் தோழர்களின் எண்ணிக்கையை பொறுத்து இப்பயணங்கள் நடக்கும்.

தேசம்: அப்போ நீங்கள் இவ்வளவு உயிரை பணயம் வைத்து அங்கே போகும்போது அது மதிக்கப்படுதா?

அசோக்: அதுதான் பிரச்சனை. ஆரம்ப காலத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை தானே இருந்தது. தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், தோழர் சந்ததியார் போன்றவங்க ஒரு அரசியல் சார்ந்து இருக்கேக்க பெரிய நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒருகட்டத்தில் அவங்களுக்குள்ள முரண்பாடு தோற்றம் பெறுவது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சந்ததியாரின் ஆளும் இல்லை முகுந்தனின் ஆளும் இல்லை. தளத்திலே பொறுப்பு நாங்கள் அவ்வளவுதான்.

தேசம்: உங்களுக்கு இவர்களுடைய தொடர்பு …

அசோக்: மிகக் குறைவு எங்களுக்கு. பின்தளம் போனால் மாத்திரம் சந்திப்போம். உரையாடுவோம்.

தேசம்: உங்களுக்கு ஆரம்பத்திலேயே… நீங்கள் கிழக்கு மாகாணம் என்றபடியால் ரகுமான் ஜானுடன் ஏற்கனவே தொடர்புகள் இருக்கு.

அசோக்: எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த தோழர்கள் ரகுமான் ஜான், சந்ததியார், பார்த்தன், சலீம், வாசுதேவா போன்றவர்கள்தான். உமா மகேஸ்வரனை எல்லாம் பின் தளத்தில் வைத்து தான் நான் சந்திக்கிறேன். அரைவாசிப் பேரை சென்ட்ரல் கமிட்டியில் தான் சந்திக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க பின் தளத்துல போயிருக்கிற நேரம் ரகுமான் ஜான், சந்ததியார், சலீம் இவர்கள அங்க சந்தித்து உரையாடுறனீங்களா? உரையாடக்கூடியதா இருந்ததா?

அசோக்: ஒரு காலகட்டத்தில் சலீம் பிடிபட்டு சிறைக்கு போயிட்டார். அவர் சென்ட்ரல் கமிட்டிக்கு வாறது இல்லை. ரகுமான் ஜான், சந்ததியர் எல்லாரையும் சென்றல் கமிட்டியில் சந்திப்பன்.

தேசம்: அங்கதானே நீங்கள் ஒன்றும் கதைக்கிறதில்லை.

அசோக்: தனிப்பட்ட வகையில் உரையாடுவோம் …

தேசம்: அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? அந்த உரையாடல்களில் நீங்கள் இயக்க பிரச்சனைகள் பற்றி கதைப்பீர்களா? பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் கூட்டத்துக்கு வெளியில இன்னொரு கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தில் தான் கூடுதலாக முக்கியமான விடயங்கள் பேசப்படும். மனம்விட்டு நிறைய பேசக் கூடியதாக இருக்கும். அவர்கள் பிரிந்து போவது சம்பந்தமாக அல்லது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளேக்க அதற்கான ரெக்ரூட்மெண்ட்ஸ் வேறயாட்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள். அப்படி அந்த வகையில உங்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்ததா?

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி வரைக்கும் அவர்கள் எங்களிடம் முரண்பாடுகள் பிரச்சனைகள் பற்றி கதைத்தது குறைவு . தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சிக்கு போனதால் மத்தியகுழு கூட்டங்களுக்கு வந்தது குறைவு. அவரை அக்காலங்களில் சந்தித்ததும் குறைவு. ஆரம்பகாலங்களிலும் கடைசி காலங்களிலுதான் அவரை சந்திக்க முடிந்தது.

முரண்பாடுகள் வரேக்க தானே இது பற்றிய உரையாடல்கள் வரும். அதிருப்திகளை சொல்லுவாங்க. ஆனா 84இல் நடுப்பகுதியில் அந்த முரண்பாடு வந்துட்டுது. கொலைகள், சித்திரவதைகள் பற்றிய வதந்திகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. ஆனால் கமிட்டியில் கதைக்க மாட்டாங்க. அடுத்தது நாங்களும் கதைக்க இயலாது. கதைத்தால் முகுந்தன் கேட்கும் எப்படி உங்களுக்கு தெரியும் என்று. பிறகு ஆதாரம் கேட்பார். ஒருதடவை நான் கேட்டு முகுந்தன் டென்சன் ஆகி. இதைப்பற்றி போன உரையாடலில் கதைத்திருக்கிறன்.

தேசம்: முகுந்தனுக்கு இருக்கிற அதே அதிகாரம் தானே சந்ததியருக்கோ, ரகுமான் ஜானுக்கோ, சலீமுக்கோ உங்களுக்கோ இருந்தது.

அசோக்: ஆரம்ப காலங்களில் இவங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுக்கு அதிகாரம் இருந்தது. அதை இவங்க ஆரோக்கியமாக பயன்படுத்த தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை நான் வைக்கிற விமர்சனம் என்ன என்று கேட்டால் முகுந்தன் உடைய அதிகாரம் வளர்வதற்கான காரணம் நாங்கள் தான். இது தொடர்பா முன்னமே கதைத்திருக்கிறன்.

தேசம்: சொன்ன விஷயம் எல்லாம் வைத்து பார்க்கும்போது அந்தப் பலத்தை முகுந்தன் தக்க வைத்துக் கொண்டதற்கு முதல் எல்லோரும் கிட்டத்தட்ட சம பலத்தில் தான் இருந்திருக்கிறீர்கள். அப்போ எங்கேயோ ஒரு இடத்தில் தளர்வு ஒன்று நடக்குது. முகுந்தனிட்ட இந்த அதிகாரங்கள் எல்லாம் கை மாறுது. அதற்கு இவர்களும் துணையாக இருந்து இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி எழுகின்றதல்லவா?

அசோக்: ஆரம்ப காலத்தில் இந்த முரண்பாடு வரேக்க ஒரு உரையாடலை செய்திருக்கலாம். எல்லாரும் வளர்ந்த தோழர்கள். காலப்போக்கில் இந்த முரண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கூர்மையடைந்த படியால் முரண்பாட்டுக்கான காரணங்கள் ஆராய்ப்படவும் இல்லை களையப்படவும் இல்லை. அது கூர்மை அடைந்ததுதான் மிச்சம்.

தேசம்: குறிப்பா மத்திய குழுவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு என்னவென்றால். கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் அமைப்பில் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அமைப்பு. அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இந்த மத்திய குழு உறுப்பினர்களுக்கு இருக்கு.

அசோக்: நாங்கள் எங்களுக்குள் பிரச்சனைகள் இந்த அதிகாரத்தனம், தன்னிச்சையான போக்குகள் பற்றி கதைப்பம். தீர்வு காணக் கூடிய எந்த வல்லமையும் அதிகாரமும் தளத்தில் இருந்த எங்களுக்கு இருக்கல்ல. அத்தோட பின் தளத்தை பொறுத்தவரை நாங்க அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பின் தளத்தில் நாங்க மனம் விட்டு கதைக்கக் கூடிய தோழராக தங்கராஜா தோழர் ஒருவர்தான் எங்களுக்கு இருந்தார். மற்றவர்களோடு கதைக்க பயம் இருந்தது. எல்லோரும் முகுந்தன் விசுவாசிகளாகத்தானே இருந்தாங்க.

தேசம்: ஆனால் அவர் மத்திய குழுவில் இருக்கிறாரோ.

அசோக்: மத்திய குழுவில் இல்லை. அவர் தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அவர் சொல்லுவார். இவங்கள் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை அழிக்கப் போறாங்கள் என்று. எங்கட கௌரவத்துக்காக நாங்கள் மத்தியகுழு என்று சொல்லிக் கொண்டோமே ஒழிய எந்த பிரயோசனமும் பின் தளத்திலும் இல்லை. தளத்திலும் இல்லை.

தேசம்: அது நேரடியாக உமாமகேஸ்வரன் என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.

அசோக்: உமா மகேஸ்வரனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

தேசம்: மற்றவர்கள் கதைக்க முற்படவில்லை

அசோக்: முடியாது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த இயலாது. ஒரு கட்டத்துல நாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறதில்லை. ஈஸ்வரன் கிழக்கு போயிருப்பார். முரளி வன்னிக்கு போயிருப்பார். நான் நான் தொழிற்சங்க, மாணவர் அமைப்பு வேலைக்காக கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவுக்கு போயிட்டே இருப்பேன். ஏனென்றால் நின்று பிரயோசனம் இல்லை. நின்றால் உங்களுக்கு மண்டை வெடிக்கும். தன்னிச்சையான போக்கு ஆரம்பத்தில் இருந்தே. இதைப் பற்றி போன உரையாடல் ஒன்றில விரிவாக கதைத்திருக்கிறன் என நினைக்கிறன்.

தேசம்: இதை யாழ்ப்பாணத்துக்கு உரிய குணாம்சமா? அல்லது வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இதை காணக்கூடியதாக இருந்ததா

அசோக்: நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்பது, இலங்கையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சாதிய, மத மேலாதிக்க மனநிலையும் அதன் அடையாளங்களும் சேர்ந்து தொழிற்படும் போது இதன் வெளிப்பாடும் தாக்கமும் அதிகமாக இருக்கப் பார்க்கும். இது சமூகத்தில் இயல்பானது. இவற்றை மாற்றி அமைக்கத்தானே நாம் போராட வேண்டும். நீண்ட நெடுங்காலமாக எங்களிட்ட ஊறிப்போன இவ்வாறான குணாம்சம் குறிப்பிட்ட காலத்தினுள் எங்களிட்ட இருந்து மாறிப்போகும் என்று நாம் எதிரபார்க்க முடியாதுதானே.

ஆனா அதற்கெதிரான போராட்டம் முயற்சி அவசியம். அதற்கு மார்க்கிய அரசியல் கல்வி அவசியம். அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் அவசியம். இல்லாட்டி நாங்க அதிகார ஆசை கொண்ட ஆட்களாக, ஒரு அதிகார வர்க்கமாக தான் இருப்பம். ஒரு ஏ.ஜி.ஏ டிவிசனில் இருப்பவர் ஏஜி ஆக அதிகார மனநிலை இருப்பர். மாவட்ட அமைப்பாளர் மாவட்ட ஜி ஏ மாதிரிதான் நடப்பார். மக்கள் மத்தியில் அதிகாரம் காட்டப்படும். மக்கள் எங்களுக்கு அன்னியமாக தெரிவாங்க. அதிகார இருத்தலுக்கு ஆயுதம், வாகனங்கள் தேவைப்படும். நடத்தல், சாதாரண சைக்கிள் பயணம் எங்களுக்கு தேவைப்படாது.

தங்களை அர்ப்பணித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி மக்களுக்குரிய விடுதலையை பெறுவதற்கான உணர்வு இவ்வாறான ஆட்களிடம் இருந்ததே இல்லை.

தேசம்: மற்றது யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கல்வி கற்று அதற்குள் இருந்து வாரவர்களுக்கான ஒரு தெனாவட்டு இருக்கு என்று சொல்லுவார்கள் தானே.

அசோக்: அந்த கல்லூரி என்று இல்லை, பொதுவாகவே மத்திய தர வர்க்கத்துக்கான குணாம்சம் இப்படித்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் உண்டு. இது யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்கு மாத்திரம் அல்ல, இந்து மத அடிப்படைகளை, சாதிய உணர்வுகளை கொண்ட பல பாடசாலைகளுக்கு இது பொருந்தும். இயக்கங்களில் மிக மோசமான நடத்தை கொண்டவர்கள் அதிகார மனநிலை கொண்டவர்கள் இந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள்.ஆனால் இவற்றை பொதுமைப்படுத்தக் கூடாது.

யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டால் ஒன்று படித்தால் உங்களுக்கான பதவி உத்தியோகம் வேண்டும். அது இயக்கங்களுக்கு வரும்போது அந்த எதிர்பார்ப்பு இருக்கு அவர்களிடம். ஒரு ஆள் மொரட்டுவ யுனிவர்சிட்டியில் ஆர்க்கிடெக்ட் படித்துக்கொண்டு இடையில் வந்தால் அவர் வந்து கீழ் மட்டங்களில் வேலை செய்ய மாட்டார்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இன்றைக்கு இருக்கிற பாராளுமன்ற அரசியலை தான் அன்றைக்கு இயக்கங்களும் பிரதிபலித்த மாதிரிதான் எனக்கு தெரியுது. மிதவாத கட்சிகளில் சேர்ந்து எங்கள் என்றால் உங்களுக்கு பாராளுமன்ற பதவி கொடுக்கப்பட வேண்டும். ஆசனங்களுக்காக ஃபைட் பண்ணுவினம். ஆசனங்கள் வழங்கப்படாட்டி கட்சியை விட்டு வெளியேறுவது இப்படியான நடைமுறைகள் இருக்கும். கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்…

அசோக்: அப்படித்தான். இதுபற்றி முன்னர் உரையாடி இருக்கிறம்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இப்ப நாங்கள் குறிப்பாக பேச வேண்டியது அதிகாரம் எங்க இருக்கோ அதைப் பற்றித்தான் பேச வேண்டும். அதிகாரம் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் தான் குவிக்கப்பட்டிருக்கு. இவ்வளவு காலமும் என்னுடைய பார்வை அதற்குள் குறிப்பிட்ட ஆட்கள் முற்போக்காளர்கள் இடதுசாரி பார்வை கொண்டவர்களாக தான் நான் பார்த்தேன். உங்களோடு இவ்வளவு நேரம் நடந்த உரையாடலில் எனக்கு அந்த வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. சில வேளை அவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை வைத்து இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் அப்படி இருந்த மாதிரி தெரியவில்லை.

அசோக்: இடதுசாரி என்பது வெறும் கருத்தியல் சார்ந்த வெறும் அறிவாக இருக்காது. அது ஒரு வாழ்க்கை முறை. வட இலங்கைக் கம்யூனிஸ்ட் பாட்டிகளை பார்த்தீர்களென்றால், சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை செய்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மக்களோடு மக்களாக வேலை செய்தார்கள். சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்கள். அவர்கள் இடதுசாரிகள். இவர்கள் தங்களை இடதுசாரியாக சொல்லுகின்ற நபர்களேயொழிய இடதுசாரியத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அது நான் உட்பட எல்லாருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் நாங்கள் மிக நேர்மையாக, மார்ச்சிய உணர்வு கொண்டவர்களாக இருந்திருந்தால், புளொட் இந்த அளவுக்கு போயிருக்காது. புளொட்டின் அழிவுக்கு எல்லோரும் பொறுப்பேக்க வேண்டும். அது சந்ததியாராக இருந்தால் என்ன, உமாமகேஸ்வரனாக இருந்தால் என்ன, நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பொறுப்புக்கூற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. நாங்கள் இன்னொருவரை குற்றம்சாட்டி போக இயலாது.

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.