நேர்காணல்கள்

நேர்காணல்கள்

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்!

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 04 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 4

தேசம்: 77 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு ஜே.வி.பியுடனான உறவு முறிந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, காந்தியத்திட்ட போறீங்க. காந்தியத்தின் செயற்பாடுகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது?

அசோக்: 77 ஜே.வி.பியினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு, நாங்க சுயமாக வாசகர் வட்டம், தேசிய இளைஞர் சேவை மன்றம், அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இலக்கியங்களுக்கு ஊடாக வெளிக்கிடுறம். அந்த நேரத்துல காந்திய வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடங்கிவிட்டது. மாலையர்கட்டு என்ற இடத்தில் காந்திய பண்ணை போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கு. அந்த நேரத்தில் தொண்டர் இல்லை , காந்திய வேலைத்திட்டங்கள் செய்ய. நிறைய சிறுவர் பாடசாலைககளும் ஆரம்பிக்க ப்பட்டன.

தேசம்: அப்ப நீங்கள் ஈடுபட தொடங்கும்போதே காந்தியம் இயங்கத் தொடங்கிவிட்டது…

அசோக்: ஆம் காந்தியம் இயங்கத் தொடங்கிற்று… வடக்கிலே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இவையெல்லாம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில இயங்கவில்லை. திருகோணமலையில் எல்லாம் ஃபுல்லா இயங்க தொடங்கிற்று.

தேசம்: அதன் பின்னணி என்ன மாதிரி ? யார் யார் காந்தியத்தை உருவாக்கினது?

அசோக்: நான் நினைக்கிறேன் என்னவென்றால், 77 இல் கே சி நித்தியானந்தா தமிழர் புனர்வாழ்வு கழகம் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற அமைப்பை தொடங்குகிறார்…

தேசம்: கே.சி நித்தியானந்தா தான் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வளர்ப்பு தந்தை என்று சொல்வது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர்.

அசோக்: ஆம். அன்றைய தொழிற்சங்கவாதிகளாக இலங்கையில் விளங்கிய திசாநாயக்க, கந்தசாமி, வைகுந்தவாசன், ஆசிர்வாதம், எஸ்.டி.பண்டாரநாயக்க, திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன, போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொழிற்சங்க வேலைகள் செய்தவர் கே. சி. நித்தியானந்தா. அதே காலகட்டத்தில் தான் டேவிட் ஐயா ஆட்கள் காந்திய அமைப்பை தொடங்குகிறார்கள்.

தேசம் : ரீ.ஆர்.ஆர்.ஓ தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் காந்தியமும் தொடங்கப்படுகிறது…

அசோக் : ஆமா ஏனென்றால், அந்த இனக்கலவரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்ற வேண்டும், அவர்களுக்கு புனர்வாழ்வு, எதிர்கால நம்பிக்கைகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது. காந்தியத்தை தொடங்குவதில் முக்கியமாக இருந்தவர்கள் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம், சாந்தினி, அடுத்தது கூடுதலா சண்முகலிங்கம் , அதுல கூட ஈடுபாட்டுடன் இருந்தவர்.

சரோஜினிதேவி என்டு கனடாவில இருக்கிறா, அவங்களின்ர தம்பிதான் சண்முகலிங்கம். ஏனென்டா, அவர் மலையகத்தில வேலை செய்தவர். ஜே.வி.பியோட உறவா இருந்தவர். அவருக்கு நிறைய மலையகத் தொடர்பெல்லாம் இருந்தது. அடுத்தது, அவர் காந்தியத்தை உருவாக்கினதில ஒராள் இல்ல. காந்தியத்தோட ஈடுபட்டவர். காந்திய உருவாக்கத்தில வந்து நாலு, ஐந்து பேர் இருக்கிறாங்க. டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சாந்தினி, ஒரு சிங்களத் தோழரும் அதில இருந்தவர் என்று நினைக்கிறேன்.

தேசம்: இந்த காந்தியம் தொடங்கினாக்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் அல்லது தமிழ்த்தேசிய அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அசோக்: டேவிட் ஐயாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில எந்த உடன்பாடும் இருக்கேல. காந்திய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அவர்கள் நினைத்தார்கள் காந்தியம் காலப்போக்கில், ஒரு அரசியல் கட்சியாக வரும் என்ற ஒரு பயம் அவங்களுக்கு இருந்தது. காந்தியப் பணிகள் தொடங்கி, பாராளுமன்ற கட்சியாக வருமோ என்ற பயம் இருந்தது. அதால காந்திய அமைப்புக்கு மிக எதிராகத்தான் தமிழரசு கட்சி இருந்தது. அடுத்தது, டேவிட் ஐயாவுக்கும் கோட்பாட்டு ரீதியாக, அரசியல்ல தமிழரசுக் கட்சியை பிடிக்கல. தமிழ் தேசியவாதியாக அவர் இருந்தாலும்…

தேசம்: டேவிட் ஐயாவின் பின்னணி பற்றி சொல்லுறீங்களா?

அசோக்: அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் யுனிவசிற்றியில் ஆக்கிடெக்கில் பட்டம் பெற்றவர். லண்டனிலும், நைஜீரியாவிலும் Urban planning study முடித்தவர். பிறகு கென்யாவின் மொம்பாசா urban planning யில முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினாங்க. உலகம் முழுதும் பிரபல ஆர்க்கிடெக் ஆக இருந்து வந்தவர். வந்து காந்தியத்தைத் தொடங்குகிறார்.

தேசம் : எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்?

அசோக்: நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணம் தீவுப் பகுதியை சேர்ந்தவர். கரம்பன் என்று நினைக்கிறேன். இளவாலை சென் கென்றிஸில் தான் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு பிரபலமான ஆக்கிடெக் கட்டடங்களை எல்லாம் அவர் உருவாக்கியிருக்கிறார் ஐரோப்பிய நாடுகளில். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும், அவர் எங்கெங்கு வேலை செய்திருக்கிறார் என்று. பிரபலமான ஆர்க்கிட்டெக்காக இருந்திருக்கிறார். ஆர்க்கிட்டெக் பற்றி அறிய உலகமெல்லாம் சுத்தி இருக்கின்றார். காந்தியம் பண்ணைய தொடங்குவதற்கு முதல் அவர், மாதிரி கிராமம், மாதிரிகூட்டுப் பண்ணை பற்றி நிறைய ஐடியாக்கள், டேவிட் ஐயாவிடம் இருந்திருக்கு. கூட்டு பண்ணையை பற்றி படிப்பதற்காக இஸ்ரேவேலுக்கெல்லாம் போய் இருக்கிறார்.

தேசம்: அப்ப காந்தியத்தின்ட அந்த concptயை, ஐடியாவை அவர்தான் கொண்டு வாரார்?

அசோக்: அவர்தான் கொண்டு வாரார். காந்தியக் சித்தாந்தத்தின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கு. பல நாடுகளுக்கு போய் கூட்டுப்பண்ணை, சுய பொருளாதார கட்டமைப்புக்கள் எப்படி உருவாக்கப்படுது என்றெல்லாம் பார்க்திருக்கிறார். அந்த மாதிரித் திட்டத்தைதான் இங்க கொண்டு வாறார், காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு. பாடசாலைகள், சுகாதார வசதிகள், சத்துணவு திட்டம், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வாறார்.

தேசம்: டேவிட் ஐயா பற்றி சொன்னீர்கள். கே.சி நித்தியானந்தா காரைநகர் …
அசோக்: ஆனா, கொழும்பில்தான் கே.சி நித்தியானந்தா இருந்தவர். அவருடைய இருப்பிடம் அங்கதான். தொழிற்சங்கவாதியாக அங்க இருந்தவர். அங்கதான் டக்ளஸ் தோழர் இருந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிர அரசாங்க எழுதுவினைஞர் சேவை நலச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர் இவர்.

தேசம்: டாக்டர் ராஜசுந்தரம் அவரைப் பற்றி…

அசோக்: அவர் டாக்டர். வவுனியாவில் கிளினிக் வைத்திருந்தவர். அவர் வைஃப் சாந்தினி அவங்களும் டாக்டர். “சாந்தினி கிளினிக்” என்று வவுனியாவில் பிரபலமாக இருந்தது. ராஜசுந்தரம் மலையகத்தில் வைத்தியராக இருந்தவர். அந்த இணைப்பு தான் அவரை காந்தியத்துடன் இணைக்குது. அவருக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது. மலையக மக்கள் மீதான ஒரு கரிசனையும் இருந்தபடியால்… பொருளாதார பெரும்பங்கு டேவிட் ஐயாவின் சொந்தக் காசுதான் . மற்றப்படி பல்வேறு அமைப்புகள் தனிநபர்களுக்கு ஊடாகவும் பணம் பெறப்பட்டது என நினைக்கிறன்.

தேசம்: வேறு யார் குறிப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள் ?

அசோக்: காந்தியத்தில் நிறைய பெயர் ஈடுபட்டிருக்கின்றார்கள் சரோஜினி அடுத்தது…

தேசம்: அவருக்கு ஏதாவது அரசியல் பின்னணி இருக்கா… ?

அசோக்: சரோஜினி பிறகு புளொட்டில சென்றக் கமிட்டில இருந்தவ. காந்தியத்த்துக் ஊடாகத்தான் நிறையபேர் புளொட்டுக்கு வாறாங்கள். அந்த காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்தாக்கள் வந்து… தோழர் சந்ததியார் வேலை செய்தவர்.

தேசம்: நீங்கள் போகும்போது சந்ததியார் காந்தியத்தில் இருந்தவரா?

அசோக்: சந்ததியார் காந்தியத்தில் இருந்தவர். நான் நினைக்கிறேன் ஜென்னி காந்தியத்தில் இருந்தவ. ஜெயச்சந்திரன் பார்த்தன் காந்தியத்தில் இருந்தவர். வாசுதேவா… அடுத்தது, ஜென்னிட அம்மா பிலோமினா லோரன்ஸ் அவா தான் திருகோணமலைக்கு மாவட்ட காந்திய பொறுப்பாளராக இருந்தவா.

தேசம்: ஆனா அவாவும் தமிழ்தேசிய தமிழரசுக் கட்சிதானே…

அசோக் : தமிழரசுக் கட்சியின் பிரதம பேச்சாளர். மங்கையர்கரசி மாதிரி ஒரு பேச்சாளர். நன்றாக பேசக்கூடியவர்.

தேசம்: தமிழரசுக் கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுல உறுப்பினர்கள் சிலர் இருந்திருக்கினம்.

அசோக்: தமிழரசுக் கட்சி நிறைய பேர் காந்தியத்தில் இருந்திருக்கிறாங்கள். தலைமைக்கு அதோட உடன்பாடு இருக்கேலயேயொழிய, அதைக்கூட வெளிப்படையாக காட்டவில்லை. அது உள்ளுக்குள்ள ஒரு பனிப்போர் இருந்ததேயொழிய, வெளிப்படையாக காட்டேல. வெளிப்படையாத் தெரிஞ்சாதான் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே இருந்ததுதான்.

அப்ப வாசுதேவா எங்களை சந்திக்கிறார். சந்தித்து காந்தியத்துக்கூடாக இப்படி அபிவிருத்தி வேலைகள், மக்கள் நலப்பணிகள் செய்யலாம் என்று சொல்ல, எங்களுக்கு உடன்பாடு வருது. ஏனென்றால், எங்களுக்கு சமூக போராட்டம், சமூக அக்கறை இருக்கிறபடியால், நாங்கள் இதுல வேலை செய்யலாம் என்று சொல்லி…

தம்பலவத்தை என்ற ஒரு கிராமம் இருக்கு, மண்டூருக்கு அங்கால. அது வந்து எல்லைப்புற கிராமம். அந்த கிராமத்திற்கு பக்கத்தில் மாலையர்கட்டில்ல வந்து ஒரு காந்திய குடியேற்றத் திட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாசுதேவா கூப்பிடுகின்றார். அப்ப நாங்கள், அங்க போய் காடுகளை அழித்து வீடுகள் அமைத்து இந்த குடியேற்றத் திட்டத்தில நாங்கள் உதவி செய்கிறோம்.

தேசம்: அது எல்லைப்புற கிராமமா?

அசோக்: எல்லைப்புற கிராமம். அதுல முக்கியமா பேரின்பம் என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அவர் எங்கே என்றே தெரியல. அவர் முக்கியமா அதுல ஈடுபட்டவர். காந்தியப் பண்ணைக்கு பொறுப்பாக இருந்தது சண்முகம் என்று ஒரு தோழர், அவர் இப்பவும் இருக்கிறார். மிக முக்கியமாக இருந்தவர்.

தேசம்: போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட பலர் இந்தக் காந்தியதுத்துடன் தொடர்பில இருக்க வாய்ப்பு இருந்ததா?

அசோக்: ஓம். மண்டுர் மகேந்திரன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரெல்லாம் தொடர்பு இருந்தது.

தேசம் : யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் அதுல இருந்திருக்கினமா?

அசோக்: மட்டக்களப்பு காந்தியத்திலாவா…

தேசம் : இல்ல பொதுவா காந்தியத்தில…

அசோக்: யாழ்ப்பணத்தில காந்தியம் இருக்கேலத்தானே.

தேசம்: இல்ல அங்கே இருந்து வந்தவர்கள் காந்தியத்தில் ஈடுபட்டார்களா… ?

அசோக்: தோழர் சந்ததியார் இருந்தவர். காலப்போக்கில் வவுனியா வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் என்று சொல்லி… தோழர் பொன்னுத்துரையை, குமரனை, தோழர் ஜூலியை தெரியும். குமரன் புளொட்டுக்கூடாக வந்ததேயொழிய, காந்திய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் குறைவு.
சில வேளைகளில் ஏனைய குடியேற்றத்திட்டங்களில் வேலை செய்திருப்பாங்க. 81ம் ஆண்டு என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தில ஒரு கிராமத்தில சில சிரமதான வேலைகள், குடிசைகள் அமைச்சி கொடுத்தம். கிராமத்தின் பெயர் ஞாபகம் இல்லை. அப்ப நாங்கதான் வவுனியாவில இருந்தும் மட்டக்களப்பில இருந்தும் போய் இருந்தம். யாழ்ப்பாணத்தில இருந்து குமரன் தோழரும் இன்னொரு தோழரும் வந்திருந்தாங்க.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காந்தியத்தில் இருந்தவைக்கு கூடுதலா பிற்காலத்தில் புளொட்டுடன் தான் தொடர்பு கூட வந்திருக்கா அல்லது வேறு அமைப்புகளுடனும் தொடர்பு வந்திருக்கா?

அசோக்: காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புளொட் உருவாகிவிட்டது. அப்ப சந்ததியார் காந்தியத்தில் இருந்தபடியால், சந்ததியார் என்ன செய்தார் என்றால் புளொட் இளைஞர்களை காந்தியத்துக்குள் இணைத்தார். அப்ப யார் யாரெல்லாம் புளொட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காந்தியத்தில் வேலை செய்தார்கள். அதனாலதான் புளொட்டுக்கும் காந்தியத்துக்கும் உறவு வந்திச்சுது. காந்தியத்தில் இருந்த தோழர்கள் வேறு அமைப்புக்களுக்கு போனமாதிரி நான் அறியல்ல.

தேசம்: தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாவுக்கு தெரியுமா?

அசோக்: இந்த தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாக்கு ஓரளவு தெரியும் . புளொட் ஆயுத அமைப்பு என்று டேவிட் ஐயாவுக்கு தெரிந்திருந்தால் நான் நினைக்கவில்லை, அவர் விரும்பி இருப்பார் என்று. ஒரு ஆயுத இயக்கத்தோடு காந்தியத்தை இணைப்பதற்கு அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் நினைத்திருப்பார் புளோட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் தான் என்று.

ஆனால் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், சந்ததியாரும் டாக்டர் ராஜசுந்தரமும் நல்ல நெருக்கம். சந்ததியார் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருக்கிறார் என்று கட்டாயம் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். டேவிட் ஐயாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இருந்திருக்காது. டேவிட் ஐயா நினைத்திருப்பார், சந்ததியார் சமூக அக்கறையோடு, காந்திய அமைப்பில ஆர்வத்தோட சமூக சேவைக்கு வாரார் என்று.

இப்படித்தான் வாசுதேவாவும் காந்தியத்தில் இணைந்தவர். சந்ததியார் கூட பெருசா வெளியில தெரியல. வாசுதேவா வெளிப்படையாகவே புளொட்டினுடைய அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதோட காந்தியத்தினுடைய கிழக்குமாகாண இணைப்பாளர். அப்ப புளோட் அண்டர்கிரவுண்ட் இயக்கம் இல்லை. அண்டர்கிரவுண்ட் ஆனது எப்ப என்று கேட்டால், சுந்தரத்தின் படுகொலைக்குப் பிறகு. அப்போ புளொட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம்தான்.

தேசம்: காந்தீயம் ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு. புளொட் ஆயுத விடுதலை அமைப்பு. காந்தியத்தோடு தொடர்வு வைத்தால் அது காந்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஆபத்து என்று சந்ததியாருக்கு தெரியவில்லையா ? இதை எப்படி பார்க்கின்றீங்க…

அசோக்: உண்மையில இப்ப யோசிக்கும் போது, நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். மக்கள் நல அபிவிருத்தி சமூக மேம்பாட்டு அமைப்பு ஒன்று, சுதந்திரமாக இயங்குவதுதான் சரி என்ற அரசியல் புரிதல் அன்று எங்களுக்கு இல்லாம போயிற்று. சமூக மேம்பாட்டு வெகுஜன அமைப்புக்களுக்கும், இராணுவ கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கத்திற்குமான உறவு நிலை, தொடர்வு பற்றிய அரசியல் தெளிவு எங்கட்ட இருந்திருந்தால் காந்திய அமைப்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்ப யோசிக்கும்போது எங்க தவறு தெரிகிறது.

தேசம்: புளொட் வெகுஜன அமைப்பாக அது பதிவு செய்யப்பட் டதா?

அசோக்: இல்லை. புளொட் ரெஜிஸ்ட்டர் பண்ணுப்படல. புளொட் வந்து ஒரு அரசியல் வெகுஜன இயக்கமாக வெளியில இயங்குகிறது. உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு, துண்டு பிரசுரம் அடித்தல், புதிய பாதை பத்திரிகை, கருத்தரங்குகள் போன்ற சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் வேலைத் திட்டங்களில ஈடுபடுகிறது.

ஆயுத இயக்கம் என்றால் தானே தடை செய்யப்படும். அது ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு… புளொட் வெளிப்படையாக குற்றங்களிலில ஈடுபடவில்லை. ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலில் கூட, புளொட் என்று வெளிப்படையாகத் தெரியாது. எப்ப அடையாளப்படுத்தப்படுகிறது என்றால், சுந்தரம் படுகொலைக்குப் பிறகுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. சுந்தரம் புளொட் என்று தெரிய வருகிறது.

தேசம்: காந்தியத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எப்படி அமைந்தன?

அசோக்: காந்தியத்தில் எங்கள் செயற்பாடுகள் என்னென்று கேட்டால்… படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்…

தேசம்: அப்ப நீங்கள் ஏ எல் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓ.எல் எடுத்துட்டன். ஏ.எல் எடுக்கல நான் குழப்பிட்டன். அந்தக் காலகட்டத்தில் சனி – ஞாயிறுகளில், ஒரு விடுமுறை காலத்தில்தான் காந்திய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது. முக்கியமாக ஈஸ்வரன் தோழர்… காந்தியத்தில் மிக முக்கியமானவர். அவர் புளொட்டில மத்தியகுழுவில் இருந்தவர். எனக்கு முதன் முதல் புளொட் தோழர் என்று அறிமுகமானவர் ஈஸ்வரன் தோழர்தான். ஈஸ்வரன் முதலில் வந்து காந்தியத்தின் ஆளாகத்தான் எனக்கு அறிமுகமானவர். அப்ப அவருக்கு வேறு பெயர்.

மாலையர்கட்டு பண்ணை வேலை முடிந்த பிறகு, செட்டிகுளம் கல்லாறு பண்ணையை ஈஸ்வரனே பொறுப்பு எடுக்கிறார். அவர்தான் முன்நின்று அதனை தொடங்குகின்றார். அவரும் நானும் தான் முதல் முதல் அந்தக் செட்டிக்குளம் கல்லாறு பண்ணைக்கு போறோம். பயங்கர முசுரு காடு. ஈஸ்வரன் மிகப்பெரிய உழைப்பாளி, மிக எளிமையானவர். நான் சொகுசாய் இருந்த ஆள்தானே… அப்ப நம்மட வேலைகள் தெரியும்தானே. அவர் மிக நேர்மையான உழைப்பாளி. அவருக்கு ஊடாகத்தான் நான், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒடுக்கட்ட வறிய மக்களோடு அவர்களாக மாறி அவர்களுக்காக சேவை செய்வதென்பதை ஈஸ்வரன் தோழரிடம் நாம் கற்கவேண்டும். அவ்வளவு எளிமையானவர். மிகப்பெரிய காந்திய வேலைத்திட்டம் அது என்று நினைக்கிறன். நிறைய செட்டிக்குள தோழர்கள் உதவி செய்தார்கள். தர்மலிங்கம் என்றொரு தோழர். இதில முக்கியமானவர். இப்ப அழிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். மலையக மக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

தேசம்: செட்டிகுளத்திலயா…

அசோக்: செட்டிக்குளத்திற்கு பக்கத்தில் கல்லாறு பண்ணையில்…

தேசம்: காந்திய இயக்கத்தில் அதில் உங்களுக்கு அரசியல் ரீதியான அறிவூட்டல்களும் நடந்ததா?

அசோக்: இல்லை இல்லை. காந்திய பண்ணையில் சேவை மனப்பான்மைதான். காந்தியத்தில் இருக்கும்போதுதான் வாசுதேவா ஊடாக அரசியல் உறவுகள் வருது எனக்கு. உண்மையிலேயே வாசுதேவா காந்தியத்துக்குள் எங்களை ஈடுபடுத்தியது புளொட்டுக்குள்ள கொண்டு போகத்தான். நேரடியாக நாங்கள் புளொட்டுக்குள்ள போக விரும்பமாட்டோம் என்பதற்காக…

தேசம்: அதுக்குள்ள ஒரு ஹிடின் அஜெண்டா இருந்திருக்கு…

அசோக் : அஜெண்டா இருந்திருக்கு. அதுக்கு பிறகு அவர் புளொட் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறார். அப்ப சில அறிமுகங்கள் வருது. நான் முன்ன சொன்ன மாதிரி ஈஸ்வரன் தோழரை முதலில் புளொட் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். பிறகு தோழர் டொமினிக், கேசவன், ஜெயச்சந்திரன் – பார்த்தன், ரகுமான் ஜான், குமரன் பொன்னுத்துரை, முரளி எனப்பலரும் அறிமுகம் ஆகிறார்கள்.

தேசம்: தோழர் கேசவன் பிற்காலத்தில் தீப்பொறி…

அசோக்: ஆம் . புதிய தோர் உலகம் நாவல் எழுதியவர். புலிகளால கொலை செய்யப்பட்டவர்.

தேசம்: இதெல்லாம் காந்தியத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்…

அசோக்: ஆம். காந்தியத்தில் இருந்த காலகட்டத்தில் புளொட்டுக்குள்ள போவதற்கான முதல் ஆரம்பம். அந்த அறிமுகங்கள் நடக்குது. அப்ப இவங்கள் புளொட்டுக்கு வேலை செய்கிறார்கள்.

தேசம்: காந்தியத்திலும் இருக்கினம், புளொட்டிலும் இருக்கினம்.

அசோக்: ஆம். அப்ப எங்கட அரசியல் தெரியும்தானே… எங்களுக்கு தமிழீழம் தனிநாடு கோரிக்கை இதிலெல்லாம் ஈடுபாடில்லை என்று தெரியும் தானே. அப்ப இவங்கள் எங்களுக்கு முன்னுக்கு வைக்கிற கோஷம் என்னவென்றால் வர்க்கப் போராட்டம். தேசிய முரண்பாடுகள், இனப்பிரச்சனைகள், தமிழ் மக்களுக்கு உரிமை அற்ற தன்மை, பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான முதல் தீர்வும், அதன் பின் வர்க்கப்போராட்டமும். அதாவது, தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஊடாக வர்க்கப்போராட்டம். கிடைக்கின்ற சோசலிச தமிழ் ஈழத்தினுடாக, எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கத்தின் – பாட்டாளி வர்க்கத்தின் இணைப்போடு, தென்னிலங்கை மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவளித்தல்.

தமிழீழம்தான். ஆனா அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டம். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை நோக்கிய பயணம்தான். அதற்கான முதல் படிதான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம். அப்ப எங்களுக்கு தேசிய ஒடுக்குமுறை இருக்குத்தானே.
தேசிய விடுதலைக்கூடாக ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு போறது என்ற சித்தாந்தம் எங்களுக்கு பிடித்துக்கொண்டது. அப்ப கேட்க உண்மையாத்தான் எங்களுக்கு இருந்தது.

இப்ப பரிசீலிக்கும் போது, எனக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அப்ப மிக திருப்தியாக இருந்தது. அப்ப நாங்க நினைச்சம் அதுல போய் சேர்ந்து வேலை செய்யலாம் என்று.

பிறகு வவுனியாவுக்கு வாறம். தோழர் சந்ததியார் எல்லாரையும் சந்திக்கிறோம். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் அமைப்பாளராக சின்னாச்சி என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அம்பாறை மாவட்டத்தில் கருணாநிதி என்ற தோழர் வேலை செய்தவர். அவர்கள் பெருசாக இல்லை. பிற்காலத்தில் இரண்டு பேரும் புலிகளுக்கு பொயிற்றாங்க.

அப்ப மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக என்னையும், அம்பாறைக்கு ஜீவா என்கிற அகஸ்டின் செபமாலையையும் நியமிக்கிறாங்க. இப்ப அவர் ஜேர்மனியில் இருக்கின்றார். எனக்கு உதவியாக வரதன் என்கிற ராகவன் தோழர் நியமிக்கப்படுகின்றார். அவர் இப்ப நாட்டிலதான் இருக்கிறார்.

தேசம்: மாலையர்கட்டு முடிய நீங்கள் செட்டிகுளம் போறீங்க. எவ்வளவு காலம் காந்தியத்துடன் உங்களுடைய செயற்பாடு இருந்தது?

அசோக்: காந்தியத்தில ஒரு வருஷத்துக்குள்ள தான் இருந்தது.

தேசம்: ஒரு வருஷம் என்றால் 79 ஆம் ஆண்டு மட்டில…

அசோக்: அப்படித்தான். 80 க்கு பிறகுதான் நான் புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆகினது. 80 நடுப்பகுதியில் புளொட்டில் சேர்ந்திருப்பேன். ஏனென்றால் புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தான். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயருடன், அப்போதுதான் உருவாகினது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக மலையகத் தமிழர்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததா உங்களுக்கு?

அசோக்: நிறைய இருந்தது. மாலையர்கட்டில, செட்டிகுளத்தில எல்லாம் மலையக மக்கள் தானே…

தேசம்: மலையக தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி பார்க்கப்பட்டது அந்த காலத்தில்?

அசோக்: எல்லைக் கிராமங்கள் தானே. எல்லைக் கிராமங்கள் என்று சொன்னால் கொஞ்சம் தள்ளித்தான் தமிழ்க் கிராமங்கள் இருக்கும். மலையக தமிழ் மக்களுக்கும் அந்தப்பகுதி தமிழ் மக்களுக்கும் உடனே பெரிய தொடர்புகள் இருக்கேல. காலப்போக்கில் உறவு ஒத்துழைப்பு என்று இருந்தது. ஐந்து ஆறு மைல் தள்ளித்தான் சிங்களக் கிராமங்கள் இருக்கும். பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்துல வந்தது. எல்லை கிராமங்கள்ல மலையக மக்களை நாங்கள் பலிகடா ஆக்குறம் என்று.

தேசம்: அந்த நேரமே இந்த விமர்சனங்கள் இருந்ததா?

அசோக்: சில இடங்களில் இருந்து வந்தது. விமர்சனங்கள் எப்பவும் இருக்கும் தானே. அதை நாங்கள் உதாசீனப்படுத்திட்டம். ஏனென்றால் அது தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த சில பேரால் வைக்கப்பட்டது. அந்தக் காணிகள் தமிழ்ப் பிரதேசத்துக்குரிய காணிகள்தான். எல்லை பிரதேசமாக இருந்தாலும், சிங்கள கிராமங்கள் பக்கத்தில் இல்லை. தமிழ் எல்லை பிரதேசங்களில் ஏனைய தமிழ் கிராமங்களும் இருந்தது. பல்வேறு கிராமங்களுக்கு இடையில்தான் இந்த குடியேற்றங்கள் உருவானது. நெருக்கமான கிராமங்களாக இருக்கவில்லை. ஒரு மைல் அப்படி இடைவெளிகள் இருக்கும். கல்லாறுப் பண்ணையில் வந்து பக்கத்தில் பல்வேறு கிராமங்கள் இருக்கு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பில் அப்படித்தான் தமிழ்க் கிராமங்களை அண்மித்துத்தான் குடியேற்றங்கள் செய்யப்பட்டது.

தேசம்: மலையக மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு, குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் எப்படி இருந்திருக்கும் அந்த நேரம். வரவேற்கிற தன்மை இருந்ததா?

அசோக் : முரண்பாடு இருக்கேல. அந்த பிரதேச மக்கள் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைத் திட்டம் செய்யேக்குள்ள பக்கத்து கிராமப்புற மக்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. செட்டிகுளம் கல்லாறு பண்ணைக்குள்ள நிறைய செட்டிகுளம் பையன்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். முரண்பாடு இருக்கேல, ஆரம்பத்தில் நெருக்கம் இருக்கல்ல. சமூக உறவுகள் காலப்போக்கில்தானே உருவாகும். ஆனா நாங்க கிராமக் குழுக்களை அமைத்திருந்தோம். இக்குழுவில மலையக இளைஞர்களும், அந்தப் பிரதேச இளைஞர்களும் அங்கம் வகிச்சாங்க. அது காலப்போக்கில் தானே ஏற்படும்.

தேசம்: வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த மலையக மக்களுக்கு எதிரான, வேற பெயர் சொல்லிக் கூப்பிடுற தன்மைகள் இருந்தது. வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி இப்படியான விஷயங்கள் எல்லாம் இருந்தன. இப்படியான எதிர்மறையான கருத்து நிலைகள் மற்ற பகுதிகளில் இருந்ததா?

அசோக்: நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால் குடியேற்றங்கள் செய்திருக்கேலாது. யாழ்ப்பாண சமூகத்தின் ஒருசாரர்களின் மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வுக்கு இவ்வாறான கண்ணோட்டத்திற்கு பல்வேறு அரசியல் பொருளாதார பின்புல காரணிகள் இருக்கு. அங்கு கிழக்கு மாகாணத்தில அந்த காரணிகள் இல்லை. ஏன் இங்க வருது என்று கேட்டால், பொருளாதார ரீதியாக ஆசிரியர் வேலைவாய்ப்புக்கள் ஏனைய தொழில் என்று அங்க போய்… எப்ப முரண்பாடு வரும் என்று கேட்டால், அந்த பிரதேசத்துக்கும் எங்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் உறவெண்டு வரும்போதுதான். அந்த உறவை சமத்துவமாக சமநிலையாக நேச உறவாக நாங்க பேணமுடியாம, அதிகார சாதிய வர்க்க பிரதேச கண்ணோட்டத்தோடு அணுக வெளிக்கிடக்குள்ள முரண்பாடுகள் வரும் . இந்த அதிகாரத்தனம், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளாப்பட்ட மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்திவிடும்.

அங்க கிழக்கு மாகாண மக்களுக்கும், மலையக மக்களுக்கும், யாழ்ப்பாண சமூகத்தைப்போன்று, மலையகத்தில் பெரிய உறவுகளும் தொடர்புகளும் நெருக்கங்களும் இருந்ததில்லை. அப்ப முரண்பாடுகள் சிக்கல்கள் உருவாக சாத்தியம் இல்ல. அப்ப அந்த முரண்பாட்டுக்கான தளம் இல்லாமல் போய்விடுகின்றது. மலையக மக்களை குடியேற்றும் போது அந்த பிரதேச மக்கள் சொந்த மக்களாகதான் பார்த்தாங்க… உடனடியாக ஒரு சமூக உறவு வராதேயொழிய, முரண்பாடுகள் வராதுதானே.

கிளிநொச்சியிலயோ முல்லைத்தீவிலயோ மட்டக்களப்பிலயோ குடியேற்றம் செய்த இடங்களில் முரண்பாடு இல்லை.

தேசம்: வட மாகாணத்துக்கு உள்ள நடந்த குடியேற்றங்களில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை…

அசோக்: யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்கள் நடக்கேல தானே.

தேசம்: எல்லைக் கிராமங்களில் நடந்த குடியேற்றத்திட்டங்கள் தொடர்பான அந்த விமர்சனத்தில் ஒரு உண்மையான நிலையும் இருக்கும் தானே. ஏற்கனவே சிங்கள சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நாங்கள் எல்லை கிராமத்தில் கொண்டு வந்து குடியேற்றும் போது திருப்பியும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானே…

அசோக்: எங்கட உரையாடல் பிரயோகத்தில் எல்லைக் கிராமம் என்ற வார்த்தையை பயன்படுத்துறதால அந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது என நினைக்கிறன். கிராமங்களிடையேதான் முன்ன நான் சொன்ன மாதிரி நாங்க குடியேற்றம் செய்தனாங்க. என்டாலும் இதுபற்றி ஆராயவேண்டும்.

எல்லைக் கிராமங்களில் தான் திட்டமிட்டு நடந்தது என்று இல்லை. எதிர் விமர்சனங்கள் எப்படி வைக்கப்பட்டது என்றால், நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக மலையக மக்களை பயன்படுத்துகிறோம் என்று. தவிர்க்க முடியாம சில எல்லைக் கிராமங்களில் குடியேற்ற வேண்டிவந்தது. ஏனென்றால் அங்குதான் காணிகள் இருந்தது. எல்லை கிராமங்களில் அது அமைந்தவுடன் இந்த விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் இது…

தேசம்: தமிழரசுக் கட்சி அந்த விமர்சனம் வைத்ததா?

அசோக்: ஆம் சில பேர்களுக்கு இருந்தது.

 

 

அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும்: பாகம் 3

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 3

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?

அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.

தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?

அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.

தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?

அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.

தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…

அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.

தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.

அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.

தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…

அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.

தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை

அசோக்: இல்லை

தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?

அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.

78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.

என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.

தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?

அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?

அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.

தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?

அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.

தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.

தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?

அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.

தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…

அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.

78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.

இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.

தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.

அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.

அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…

தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.

தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?

அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?

அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.

தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.

தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?

அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.

தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.

அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.

எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.

இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.

தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்

அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.

தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க

அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.

தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.

அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.

தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?

அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.

தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…

அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.

தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?

அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.

தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?

அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பள்ளிப் படிப்பும் பதின்மப் பருவமும்!!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலை பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள்.

அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச் சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.

வெற்றிலை செய்கைக்கு பெயர் போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை வெற்றிலைக்கும் காலிப் பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று.

தேசம்: வழிபாட்டு முறைகள்,..

அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்றபடியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கிறது. இங்கே நெற் பயிர்ச்செய்கையே மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது.

தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.

தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள்.

அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில.

தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள்.

அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ணன மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக்காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன்.

தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா?

அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக்காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார்.

நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக்கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டு வந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.

தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தது?

அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவுநாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுதுபோக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது.

தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்?

அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோ மீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒருவருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாகஇருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன்.

இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறு மூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன்.

தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா?

அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப்பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நா ங்க உருவாக்கினோம்.

தேசம்: உங்களுக்கு எத்தனை வயது?

அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறியசிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.

இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதம லிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது.

தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டத்துடன் பயணித்தவர்களுடனான ஞாபகங்கள்?

அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன் இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி பொலிசாரினால் கடும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை.

தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது.

அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது.

தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?

அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக் கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப் போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன?

அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.

தேசம்: இந்த சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?

அசோக்: அப்படி சொல்லமுடியாது.

தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ?
அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில் அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம்.

நாடங்களில் அவங்க மிகத் திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன்.

எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போக முடியாது. எங்க பாடசாலையில் படிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்த போது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.

அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க . அந்த நண்பர்களில் சில பேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.

தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது.

அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது.

– தொடரும் –

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒளிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின்  பேச்சுமொழியில்  எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

எனது ஊரும் சுற்றமும்

தேசம்நெற் சார்பாக தோழர் யோகன் கண்ணமுத்து அவர்களுடன் நேரடியான ஒரு உரையாடல். கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்து உடைய வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளது. அந்தவகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். நாங்கள் நேரடியாக இந்த உரையாடலுக்குள் செல்வோம்.

தேசம்: வணக்கம் தோழர் யோகன் கண்ணமுத்து!

அசோக்: வணக்கம் ஜெயபாலன்!

தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது. அந்த நேர சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன? எப்படி இந்த அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் என்பதைச் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில் உங்களின் மிக இளமைப் பருவத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது? உங்கள் கிராமம், குடும்பம் சம்மந்தமாக..

அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற   கடலோர  விவசாயக் கிராமமான களுதாவளைதான் என்  பூர்வீகம்.  எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்…

அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.

அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்

தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…?

அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு   ஆன்மீக ஈடுபாடு இருந்தது.  அத்தோடு  சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள்  உருவாகியது.  அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு  பிரதேசங்களில்   ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம்,  காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பா தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.

அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்த படியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது.

தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?

அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம் தான். அம்மா 10 ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு …

தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா?

அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை.

தேசம்: ஏன்? சமூக பின்னணியா?

அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டு போய் மிஷனரியில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு.   காலப்போக்கில் இராமக்குட்டியாரின்  கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர்.

தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம்   கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம்.  இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான்.

தேசம்: குடி வழி சமூகம் என்றால்…?

அசோக்: குடிவழிச்சமுகம் என்றா அம்மாவின்  வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற  சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள்.  அம்மா பெத்தான்குடி. அப்பா  பேனாச்சிகுடி.  அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார்.

தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா?

அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை.

தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன?

அசோக்: அம்மாவின்  ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.   அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இமாநாட்டிற்கும் அறப் போரணித்  தலைவர் அரியநாயகம் திருக்கோயில்   அவருடைய தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து

திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன்.

தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்?

அசோக்: ஆம்

தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?

அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள்.

தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள்.

அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன் தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர்.

தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது?

அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொளிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ  அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி  குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசு கட்சி யில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள்  எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால்  நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும்.

தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா?

அசோக்: நல்லதொரு கேள்வி.   யாழ்ப்பாண   சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள்  மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய  குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச்   சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில்   பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும்.

தேசம்: சாதிய முரண்பாடு இங்கு ஓரளவு குறைவாக இருக்கும்?

அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில்  பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனா  குடிமைச் சமுகங்கள் வாழும்  அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்த கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது.  நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனி பாடசாலை. தனி கோயில்.

நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான்  என நினைக்கிறன்.  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம்,  ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும்.

தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலை பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வேலை பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையல்ல. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக   இருக்கின்ற  படியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது.

(உரையாடல் தொடரும்…)

 

உண்மைகள் உறங்குவதில்லை: மனம் திறந்து பேசுகின்றார் தோழர் யோகன் கண்ணமுத்து!

ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.

இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.

இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.

அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.

N. Ram interviews Sri Lanka’s President Mahinda Rajapaksa

MR_PresidentOfSLDuring his first term, Sri Lanka’s President Mahinda Rajapaksa, underestimated by his political opponents and the outside world, achieved overwhelming political dominance after his politico-military strategy eliminated the LTTE as a military force and he went on to score two big electoral victories. As he embarks on a second presidential term, which began on November 19, he reflects on the tasks and challenges ahead in an interview given to N. Ram at Temple Trees in Colombo.

Mr. President, you made a huge score in the first innings. As you begin your second innings, there are heightened expectations from many constituencies within Sri Lanka and outside. How do you react to these?

As for what I achieved in the first term, I have brought peace to this country. Eliminated terrorism and brought peace. Now my aim is to develop the country. After that, the priorities are the people whom we have to win over – the hearts and minds of the people. Now Sri Lanka is one country; it’s not divided. So what we want is to see that the whole nation gets all the benefits, not only one area, not only one community. To develop the economy so that all the people benefit.

Earlier you spoke about the three Ds, Development, Democratisation, and Devolution. Has that changed?

No. Development is important. Without development and peace, we can’t have democracy. Democracy is very important because we are a democratic country. And then devolution: we have said we must know the minds of the people. Politicians have their own theories but people, the new generation, have different views. What we want is reconfirmation of what they want. Definitely we are going to have this. To have peace, we need all this.

How do you find the response of the people of Sri Lanka when you go to the rural areas? You won two big elections, the presidential election and the parliamentary elections.

When I go to villages and talk to the people, they are warm and friendly. I feel it.

You have no worthwhile opposition, politically speaking. Of course there are opposition forces. General [Sarath] Fonseka came into the picture and there are others. But after the elimination of the LTTE and after the electoral victories, I don’t see any leader in South Asia who is so well placed, so dominant politically as you are. How do you react to this? Do you sometimes feel complacent?

I must thank the people. In our democracy, people have trusted me to deliver. They know I have delivered peace to them. Now they need development and peace again. That is what the people expect from us. Now, with a two-thirds majority in Parliament, after a victory by 1.8 million – all this gives strength to me and to my party. What the people wish to have, we have to deliver.

On the Tamil question, the first challenge after the elimination of the LTTE was looking after 300,000 people who were in the camps. Now most of them have been sent back to their areas and I believe the number in the camps has come down to 18,000.

Of this 17,000 or 18,000, many of them are not in the camps; they go to the villages and come back. But at least 10,000 of them are from areas that have to be de-mined; we can’t send them there yet. But by December, we expect to send back everyone other than the people who wish to stay there [in the camps].

Are you satisfied with the resources that have come internally and externally to help this process?

I’m satisfied. Because all our friends helped us. Otherwise, we wouldn’t have been able to achieve this.

Now, there are heightened expectations about the political solution, the 13th Amendment-plus, that has been promised. The impression is that there is drift here.

As you would understand, we can discuss this only now – with all the political parties. After the elections, we have had discussions and they will continue. The solution that I have in mind might not be good enough for them; they might not accept it. Not only the political parties, the people must accept it. They want a new leadership to be built up. After we send them back to their villages, they have all these expectations and hopes. We must find out from them too. I have already had discussions with our political leaders who are in the government and who are in the opposition.

Do you have in mind a clear political solution, even if you have not revealed the specifics?

Yes, but I will first find out their views. We want to appoint a committee, from both sides and discuss all these.

Do you find the opposition reasonably cooperative, at least the main opposition, the UNP?

[Laughs]. The problem is they have to survive. The Opposition has lost all their slogans, now they have to find new slogans. It’s good in a way. But the Opposition must also remember this. They must oppose us within the country; it is their democratic duty. They must also realise that when we go out of the country, we all represent Sri Lanka. The fight is here, in Sri Lanka, but not when they go out. They must always respect the country.

This is a principle you have followed throughout in your political career, when you were in the Opposition also?

Yes. I never went and tried to stop any aid or any benefits that we got! We never went on to that. We said, ‘yes, there are human rights violations,’ because I was the one who first went to Geneva and gave evidence in the Human Rights Commission. But we never tried to pressurise the governments to withdraw aid and benefits to the people of Sri Lanka.

It is notable that the Tamil National Alliance, or the people who are now the TNA, have for the first time said they would accept a devolution package within the framework of a united Sri Lanka. How do you see that?

It is a good development. Because earlier they wanted a separate state. It’s a very good development. We can now start talking to them.

You expect a lot from them?

Not only from the TNA but from all the Tamil parties. We need their support and the [Tamil] people’s support. This is very important. They must realise that they can’t get what Prabakaran wanted – by using guns and all those weapons, by terrorism. They can’t terrorise the country that way. They must also realise that what we refused to give Prabakaran, we won’t give to others. So they must be realistic – and fair, in this process. They must know the feelings of the others too.

The question is also about the sequencing: before you come to this political agreement, the search for a political consensus on the devolution package, why not hold elections in the Northern Province? But even the TNA doesn’t seem to be in a great hurry.

Yes, because at this juncture we have to re-settle these people first. They must be given their basic needs and provide for their livelihoods.

But they voted in the presidential and parliamentary elections even though they were in the camps. Do you have to wait for them to be completely re-settled now?

There is also the need to register all of them [in the electoral register]. We can’t have elections now under the 1981 Census. You know, in the Eastern Province, we had elections as soon as we threw the LTTE out. But [in the North] I didn’t want to have elections when they were in camps, because the interpretation would have been different. Now I want to have elections as soon as possible to the Northern Provincial Council. We might be able to do that by next year. People who want to criticise us will always criticise us, for the low turnout and so on. But we can’t have elections under the 1981 Census!

Everybody speaks about the tremendous infrastructural development in Sri Lanka, every part of Sri Lanka except the areas where de-mining is yet to be completed. So you have a very good thing going. Can’t the political process be speeded up to keep pace with this rapid development?

Unfortunately, the stakeholders were not available, some of them. When we start that [political process], the Opposition must cooperate. Everybody must agree to the solution – this is not my personal solution! It must be a solution of the people, a solution from the grassroots level – not imported, not imposed by force – it must come from them. This is the solution we want. Now they all want to be one country, one nation. I have been to the North, our young MPs also have gone. We have spent billions of rupees there. What we have spent on the Eastern Province and on the North, we have not spent on the other Provinces. If you compare that, we have invested massively in the North and the East.

Because if the political agreement happens, there will be no issue. The Lessons Learnt and Reconciliation Commission, the LLRC, was set up to probe events from 2002 to the end of the war and fix responsibility and make recommendations. We have the successful South African model [the Truth and Reconciliation Commission]. How do you assess the progress made in this?

I would say, very good. They have already given us an interim set of recommendations. I have given it to the officials to implement. A committee has been appointed. The commission is not meeting in Colombo only; they go to the North, they go to villages. They go and meet the people; they don’t wait till people come to them, they go to the masses. The difference is that. They have invited all international human rights groups to come and give evidence. They have sent invitations to the United Nations, so it can come and find out now. I think they are working very well, though some of the interested parties have their own views about the Commission.

You have the U.N. effort, the advisory panel that the Secretary General has set up despite opposition from the Sri Lankan government, and the demands of the NGOs for more investigations into alleged human rights violations. They don’t seem to have got anywhere.

I understand the plight of the NGOs. They have to say something. Whatever we do, finally we won’t be able to change their views – we might be able to change the views of a few of them but not all of them. They must realise that if you talk about other countries, conflicts are there, human rights issues are there. You can see the difference. For example, when all the 300,000 came this side and we started building some villages and kept them there, they said we were keeping them in ‘concentration camps’! You went there at that time, you could see for yourself whether they were concentration camps. When we re-settled them, they said ‘no permanent houses.’ Within six months, we have to build permanent houses. But without de-mining, how can we go and settle them? If we had settled them, they would have said we did this purposely to kill these people. We have seen some of these NGOs in Sri Lanka during election time. They went all out. One NGO, Transparency International, its local chapter, spent [SL Rs] 109 million in 2009, and within one month, the election month, January [2010], it spent [SL Rs] 69 million. A government department won’t be able to spend so much! This is what they did – got involved in local politics. They want to change governments, they want to change leaders. They don’t worry about the repercussions. Some of these NGOs are out; some of them are working.

‘Help us bring the communities together’

You have taken a special interest in language policy. You have announced a Ten Year Presidential Initiative for a Trilingual Sri Lanka and before that the initiative to promote English. This seems to have been thought out over the long term. How do you see this going?

Last year was the Year of English and Information Technology. With that the people started spoken English, they started learning English. So I thought the best thing was that all Sinhalese must learn Tamil now, the Tamils must learn Sinhala, and they must all learn English and acquire knowledge, international knowledge. We thought the best thing was to launch this three-language initiative. We have set the target of 2020 and I think we can achieve it. One issue is teachers; we have to train the teachers. But we have to meet that challenge.

The coordinator of this initiative, Sunimal Fernando, told me about the findings of a socio-linguistic survey in Sri Lanka; it showed a surprising amount of support, even enthusiasm, among both Sinhalese and Tamils for learning each other’s language. This must have come as a surprise even to you.

Yes but I have seen some of this. Government servants get from [SL Rs] 10,000 to [SL Rs] 25,000, depending on the level of competency, for learning a second language, Sinhalese learning Tamil or Tamils learning Sinhala. We pay them; I don’t think any other country pays government servants like this. We are serious about this.

In your address in 2009 during the launch of the Year of English and IT, you made an interesting statement. First about Sinhala and Tamil, not merely as tools of communication but as encapsulating values and worldviews. And English is to be delivered purely as a “life skill” for its “utility value,” as “a vital tool of communication with the outside world of knowledge” and as a skill that is required for employment. Then you go on to say something very interesting: “We will ensure that there will be a complete break with the past where in our country English was rolled out as a vehicle for creating disaffection towards our national cultures, national ethos and national identity.” So you make a qualitative distinction between learning Sinhala and Tamil by people belonging the other community and English as a life skill – but breaking with the past. So it was a real problem in Sri Lanka, the separation of the English-knowing elite and the people?

Yes. Because everybody thought that English was for the elite. And the elite used it as a sword – in Sinhala it is “kaduva.” The elite used knowledge of English as a kaduva to cut down the others from the villages. This was very prominent in high society, especially in Colombo; they thought the people who didn’t know English must be somebody to be looked down upon. Now it has changed and we want to change this attitude.

And if this Trilingual Initiative really takes off and achieves its target, it will really be a unique achievement. Very few countries would have done anything like this.

Yes.

Can you tell us about your thinking behind the removal, through a constitutional amendment, of the two-term bar on holding presidential office? There has been international comment on, and criticism of this change.

The thing is I have seen the second term of various leaders, not only in Sri Lanka but also in many other countries. Because in the first year [of the second term] you can work. Yes, you make promises, you can work in the first year. When it comes to the second year, from the beginning the party is fighting within to find the next leader. Government servants will be looking out to see who will be the next leader and they will not work. And the President would be a lame duck President from the second year [of the second term]. See what happened during the last term to [President] Chandrika [Kumaratunga], what happened to J.R. [Jayewardena], what happened to others. I’ve seen that, so I’m not going to walk into that trap! So I thought the best thing – whether you contest or not, that is a different thing – would be to be free from that [constraint]. Because during the second term of six years that the people have given me because I have achieved during the first term, I must have that freedom, without conspiracies, without pulling you down among your people, among the government servants especially.

The second term is very important. To achieve development for the people – that was the mandate they have given me. That’s why I did that. It doesn’t mean…whether I’m going to contest a third term or fourth term, it’s not like that. Generally, this [two-term limit] had made our leaders lame ducks during the second term.

You have told me on more than one occasion that one of the problems with the constitutional structure in Sri Lanka was that the President was away from Parliament, and that you had grown up in the parliamentary tradition and you wanted to overcome or narrow that gap. Have you been able to do that?

Yes. Now it’s compulsory, after the 18th Amendment, for the President to go to Parliament, at least once in three months.

This will solve that problem?

I think so. Because then when I have the right to go there, at least once in three months, I can use it at any time when I think it is necessary or useful. Even that they criticise, saying I am trying to control Parliament! I don’t want to do that; that’s why I said once in three months was enough. I don’t want to go and mess around with the parliamentary system. I want to be there to feel the pulse of the people, to hear the Opposition, to find out. I will give you an example. Recently, when Ranil Wickremasinghe, Leader of the Opposition, raised an issue on casinos, that somebody had started a casino on government land, I issued orders and found out it was a true story. I immediately called Ranil and thanked him for raising that. The Opposition’s duty is to show us these things and if I am there, in Parliament, I will be better informed about these things. Where something wrong has happened, we can always rectify it. It is very important that I should be very close to Parliament.

The other issue that is commented upon and criticised is the jailing and conviction of your former Army Commander, Sarath Fonseka. Neither he nor any member of his family has asked for a presidential pardon. Is it a political problem in Sri Lanka?

No, it’s not a political problem. The law is for all; everybody is equal before the law. Whatever wrong things they have done, they have to face it. People understand this. Some Opposition MPs, thinking they can use this as a platform to gain political advantage, are using his name. But I don’t think it’s a matter over which people are excited. They are not interested.

Neither the UNP nor even the JVP seems to have taken this up in a serious way.

No. When they want to say something or do something, they bring this up.

One is the rule of law and the President’s role. But there is also a personal side. He was your Army Commander, you knew him personally. How do these two sides interact?

Yes, it’s really difficult. But whether you are the Army Commander or not, if you do something wrong, you will have to face it. We never thought he was a man like that, we didn’t know. When he came forward as a candidate, somebody informed and said his son-in-law was an arms dealer. We never knew about this. He didn’t admit it either. He should have informed us. He sat as chairman of the tender board; no Army Commander had done that earlier. We made a man who was supposed to retire in a little while the Army Commander. If I had known that his son-in-law was an arms dealer, I would have warned him or tried to correct him.

There are, I’m told, about 11,000 self-confessed LTTE cadres or supporters in custody, hardcore elements and maybe some others. How do you resolve this issue?

Some of them have already been rehabilitated. Four thousand have already gone dome. We have released the children and the old people. Some of them don’t want to go; they are with us, for their own sake.

In your U.N. address, you extended an open invitation to all Tamil expatriate citizens of Sri Lanka who wished to come and join the development of the country. Has there been a good response to this?

Yes, there has been a lot of response, including from those expatriates who want dual citizenship. But there are also those who went away for other reasons, but showing the conflict as the reason. Many Sri Lankans have gone and settled down abroad and taken the citizenship of other countries.

You have been in close touch with Indian leaders. You have come to India; you were the chief guest at the closing ceremony of the Commonwealth Games; you have maintained continuous contact. Are you satisfied with the level and quality of India’s contribution to this process, after the war ended?

Yes. Yes. Relations have been excellent, after the war, and before the war ended. We have been in close touch, the leaders of the two countries.

For example, building 50,000 houses should take care of most of the housing needs of the displaced people in the mainland North. Then there is restoration of the collapsed railway network in the North. Palaly Airfield; KKS harbour; road development projects; a power project in Sampur in the East…

So all these projects have been given to India. But still some of the papers are making a big fuss over our projects and making comparisons with what we have given China.

Did the Indian government, political leaders or officials, express concern over this?

No, no. They are much more mature. Because everything had been offered to them first. The airport, the port, Hambanthotta harbour. Even Sampur was offered four years ago. We need development, rapid development. This will greatly help the people of the North, the Tamils. People who used to support the LTTE, those who made a big fuss over these projects, including Professor [M.S.] Swaminathan’s blueprint for the development of agriculture and fisheries in the North, should realise this.

As you embark on your second term, your new term, as President of Sri Lanka, what is your message to your people and to the international community? How should they respond to Sri Lanka’s new situation?

The message to my people is that I am concentrating on development work. I want to make Sri Lanka a hub for the development of knowledge, energy, commerce, naval transportation, and aviation. To achieve that, our people must stay together, rally round the government and achieve it – for the people. To the international community, my message is they must understand our position. We defeated terrorists, not freedom fighters. The whole world is facing this problem. So they must realise what we have achieved and help to develop the country, develop the North-East. They must help us not to widen the gap between the communities but to bring them closer. The past is past; you don’t dig into the wounds. We must think positively, not negatively.

(Courtesy of The Hindu)

”முழுமையாக இந்தியாவை குறை கூறுவதிலும் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதிலும் அர்த்தமில்லை!” புளொட் தலைவர் த சித்தார்த்தன் – நேர்காணல்

Darmlingam_Sitharthan”முழுமையாக இந்தியாவை குறைகூறுவதிலும் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதிலும் அர்த்மில்ல!” என புளொட் தலைவர் த சித்தார்த்தன் கேசரி இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கா துவான் நஸீருக்கு வழங்கிய நேர்காணலில் ”நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.” என த சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

த சித்தார்த்தன் உடனான நேர்காணல்:

கேள்வி : உரிமைகளுக்கு போராடும் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட கட்சி அமைப்புகள் உருவாகி ஒரு இலக்கு சார்ந்த கருத்தொருமைப்பாடு என்பது மழுங்கிவரும் நிலையில் உரிமைகளுக்கான தீர்வு காணல் எனும் விடயத்தில் அதன் தாக்கம் பாரதூரமானதாக அமையும் அல்லவா?

பதில் : விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை பிரகடனப்படுத்தி பலரை பயத்திலோ அல்லது நயத்தாலோ தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். சிங்கள அரசியல் தரப்புகள்கூட புலிகளின் இந்த நிலைப்பாட்டை விரும்பியிருந்தன என்பது போலவே எனக்கு அன்று தெரிந்தது. இதற்குக் காரணம் இருந்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்ற நிலைப்பாட்டை இத் தரப்புகள் விரும்பியதன் காரணம் மிக இலகுவாக ஒரு தீர்வைக் காண்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதியமையாகும். விடுதலைப் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வரமாட்டார்கள் எனவே நாம் தீர்வைக் காண்பதில் அர்த்தம் இல்லை என்று பல தலைவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். இத் தரப்புகள் இதனை ஒரு சாட்டாக சர்வதேச தரப்புகளுக்கும் இலகுவாக கூறிக் கொண்டன. ஆகவே ஏகப்பிரதிநிதிகள் என்ற விடயம் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. புலிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் முதற் கட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கருத் தொருமைப்பாட்டுக்கு வருவது மிகவும் முக்கியமானது. முதற் கட்டத்தில் ஒரு ஒற்றுமை முன்னணி ஏற்பட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. முதலில் தேவை கருத்தொருமைப்பாடேயாகும். இதன் அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற விடயத்துடன் தொடர்புபட்டிருக்கிறோம்.

அதேநேரம் மறந்து விடாமல் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களிடையே பலம் பொருந்திய மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து மற்றவர்கள் கூடுவதால் பலன் ஏற்படும் எனக் கூறமுடியாது. ஆகவே நாம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

யுத்தம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட போதிலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இன்று இம்மக்கள் எல்லா வகையிலும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். தமிழ் சமுதாயமே ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் சரியான முறையில் முன்னெடுப்புகளை எடுக்கமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் தீர்வுடன் சமாந்தரமாக பொருளாதார முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இன்றைய முக்கிய விடயமாகும். அரசியல் தீர்வு என்பது அதிகாரப்பரவலுடன் கூடிய ஒரு அரசாங்கம் என்பதாகும். நான் கூறுவது ஒரு மாகாண அரசாங்கம்.

இந்த 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல என்பதை நாம் மாத்திரம் அன்றி தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரேமதாஸ சர்வகட்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் 13 ஆவது திருத்தம் அறுதித் தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அதேபோல சந்திரிக்கா அம்மையார் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அமைத்திருந்தார். அத்துடன் தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்திருந்தார். பின்பு ரணில் விக்கிரமசிங்க கூட ஒஸ்லோ பிரகடனத்தின் ஊடாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இன்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த கூட சர்வகட்சிக் குழுவினை அமைத்து இருந்ததன் மூலம் 13ஆவது திருத்தம் தான் முழுமையான தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டது போல அன்றைய தலைவர்களின் செயற்பாடுகள் ஒஸ்லோ பிரகடனம் எல்லாம் உண்மை தான். ஆனால் இன்று அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சியோ சமஷ்டி என்ற சொல்லை பிரயோகிப்பதைக் கூட விரும்புவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: உண்மைதான். சமஷ்டி என்ற சொல் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கு கூட சொல்லத்தகாத ஒரு சொல்லாக அமைந்திருக்கிறது. இச் சொல்லை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள். எனவேதான் நாம் இச் சொல்லை பயன்படுத்துவதில்லை. பதம் அல்ல எமக்கு முக்கியம்.

எங்களுடைய பகுதிகளில் நாங்களே எங்களது பகுதிகளை அபிவிருத்தி செய்து நிர்வகிக்கக் கூடியதான மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாத சிறந்த ஒரு அதிகாரப் பரவலாக்கலையே நாம் பேசுகிறோம். கோருகிறோம். அது எந்த மாதிரியான (மொடல்) கூட இருக்கலாம். இந்தியா மாதிரியாகவோ சமஷ்டியாகவோ ஒற்றையாட்சியாகவோ ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பதாகவோ இருக்கலாம்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட பல விடயங்களை இப்போது எம்மால் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி: அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்று அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில்தான் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 13ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அத்துடன் உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் இரண்டு திருத்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவை எந்தளவுக்கு ஆரோக்கியமானது?

பதில்: 18ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது என்னைப் பொறுத்தவரையில் பிரச்சினைக்குரியவை அல்ல. ஆனாலும் பொலிஸ் சேவை ஆணைக்குழு முதலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கலை இதன் மூலம் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டிருப்பது எமக்கு பாதகமானதே. உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான திருத்தச் சட்டங்கள் சிறுபான்மை இனக் கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான். இக் கட்சிகளின் அங்கத்துவம் குறைந்து மிகப் பெரிய பிரச்சினைகளை இது தோற்றுவிக்கக் கூடியது. இக் கட்சிகளை படிப்படியாக இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்களாகவே இவற்றை நான் காண்கிறேன். இவற்றுக்கு மாகாண சபைகளில் ஐ.தே.கட்சி கூட ஆதரவு வழங்கியிருக்கிறது.

அரசாங்கத் தரப்பும் ஐ.தே.கட்சியும் இவ் விடயத்தில் ஒத்த நோக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிகிறது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சி எடுத்த நடவடிக்கைகள் பேசிய கருத்துக்கள் சிங்கள மக்களிடம் தங்களது தளத்தை இழக்கக் காரணமாகிவிட்டது என்று கருதுவதால்தான் என்னவோ இன்று இக் கட்சியினர்கூட கடும் போக்காளர்களாக மாறும் போக்கை காண்கிறேன். இந்த நிலை இலங்கையின் எதிர்காலத்துக்கு உகந்த ஒன்றாக இருக்க மாட்டாது.

இன்று தமிழ் மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு எல்லைக்குப் பிறகு வித்தியாசமான ஒரு நிலையை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய தலைமுறையில் என்னை எடுத்துக் கொண்டால் நாம் பேசித் தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இதை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கூட இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும் சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பதை அடுத்த தேர்தலுக்கு ஆன ஒரு விடயமாகவே பார்த்திருக்கின்றன.

எனவே இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசியலாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இப் பிரச்சினையை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வைக் கண்டுவிட வேண்டும். அதன்மூலம் நாட்டை சுபீட்சப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும். இதற்கு முன்வராத நிலையில் இப்போதைக்கு பலவீனமடைந்துள்ள தமிழ் மக்கள், தங்களை அடக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: வடக்கில் இந்தியாவும் தெற்கில் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் செயற்படுகின்ற புதிய நிலையில் இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கை தமிழர்களை எந்தளவுக்கு பாதிக்கின்றது?

பதில்: நாங்கள் சந்தித்த சந்திக்கக்கூடிய டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளும், தமிழ் நாட்டிலுள்ள சிலரும் இன்னும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நான் உணர்கிறேன். ஆனாலும் இந்தியாவுக்கு பிராந்திய அரசியல் குறித்தும் அதிக அக்கறை இருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடும் தமிழ்நாடு மூலமாக இந்திய மத்திய அரசாங்கம் தந்தை செல்வநாயகம் காலம் தொட்டு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைக் காணலாம் என முயன்று இருக்கின்றன. இந்தியாவின் பிராந்திய அரசியல் குறித்த செயற்பாடுகளை நோக்கும்போது சில சமயங்களில் எம்மை குறித்த அக்கறை அவர்களுக்கு குறைந்த மாதிரி தெரிந்தாலும் முழு அக்கறை இல்லை என்று கூற முடியாது. எனினும் 1983களில் இருந்த அக்கறை போல இன்று அக்கறை காட்டுவதில்லை என்பதை நிச்சயமாக கூறமுடியும்.

அக்கறை இல்லை என்று கூறாவிட்டாலும் குறைந்திருக்கிறது என்று நாம் கூறுவதில் எங்களுடைய பிழைகளும் அடங்கி இருக்கின்றன. அதாவது தமிழ் தரப்புகளுடைய பிழைகள் இந்தியாவின் அக்கறை குறைந்து போனதற்கு நிச்சயமான காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக இந்திய அமைதிப்படையை எடுத்து நோக்கினால் இந்தப் படையுடன் யுத்தம் ஆரம்பித்தவுடன் அப்படையை திரும்பிப் போ, இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்று குறை கூறினார்கள். பின்பு இலங்கை இராணுவம் வெல்லுகின்ற நிலை வந்தபோது இந்தியத் தாயே வந்து காப்பாற்று என்றார்கள்.

ஆகவே நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.

ஆகவே முழுமையாக இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை.

நாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா மூலம் சிறு அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

கேள்வி: யுத்தத்துக்கு பின்னரான தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு குறித்த வலியுறுத்தல்களில் விரும்பியோ விரும்பாமலோ அதிகம் பாதிக்கப்பட்டு விட்ட முஸ்லிம்களுக்கு எம்மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். அத்தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களுக்கு எத்தகைய இடம் அளிக்கப்பட வேண்டும் என்பன குறித்த நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: முஸ்லிம்கள் புலிகளால் மட்டுமன்றி சகல தமிழ் தரப்புகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களால் கிழக்கில் தமிழ் மக்களும்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவை குறித்து விவாதிப்பதில் இனி அர்த்தமில்லை.

எமது கட்சியில் மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை அன்றே எடுத்திருந்தோம்.

முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் அவர்களுடைய அபிலாஷைகள், அவர்களது பயங்கள் தீர்க்கப்படாமல் வட கிழக்குக்கு ஒரு தீர்வு வரமுடியாது. ஆகவே எந்த தீர்விலும் அவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களுக்கான என்ன தீர்வு என்பதை நாங்கள் கூற முடியாது. இதை முஸ்லிம்களே கூற வேண்டும். ஆரம்ப காலங்களில் மறைந்த நண்பர் அஷ்ரப் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். தென்கிழக்கு மாகாண அலகை அவர் கோரியபோது அதை நாம் மட்டுமன்றி அமிர்தலிங்கம் அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார். தமிழ் மக்களாகிய எங்களுக்கு என்ன தீர்வு என்பதை சிங்கள மக்கள் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லாதபோது முஸ்லிம்களுக்கான தீர்வை நாங்கள் கொடுக்க முடியாது.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பது உண்மையிலேயே ஒருவருக்கும் தெரியாது. புலிகள் செய்த இந்த மோசமான செயல் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன. இதை நாம் கண்டித்திருக்கிறோம். வவுனியாவில் நாம் பலமாக இருந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதான நிலையை ஏற்படுத்தி இருந்தோம். இவை எவ்வாறாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சரியான பாதையில் தமிழ் முஸ்லிம் இரு தரப்பும் இணைந்து பலமாக நின்றால்தான் வட கிழக்குக்கு ஒரு சரியான தீர்வை காணமுடியும். அது என்ன தீர்வு என்பதை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி: ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பின் போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சிக்கான சைகைகளை வெளிப்படுத்துவார் என சில தரப்பில் பேசப்படுகிறது? உங்கள் தரப்பால் இதனை எதிர்பார்க்க முடிகிறதா?

பதில்: அப்படி நான் எதிர்பார்க்கவில்லை. இன்று இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதியை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற ரீதியில் மிகப்பெரிய தலைவராக சிங்களவர்கள் பார்க்கிறார்கள். அவர் தீர்வு தொடர்பாக எதை சொன்னாலும் சிங்கள மக்கள் ஏற்கிறார்கள்.

ஜனாதிபதி இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு சரித்திர முக்கியத்துவமான கடமையாக நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியையும் அவரது தரப்பையும் நாம் ஆதரித்து இருக்கிறோம். அந்த வகையில் எமக்கு ஜனாதிபதியிடம் சில விடயங்களை கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இதனைப் பாரப்படுத்துவதால் நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனாலும் ஏனைய கட்சிகள் எப்படி ஜனாதிபதியை எதிர்பார்த்திருந்தாலும் என்னால் பெரிதாக எதனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

கேள்வி: இலங்கையில் தற்போதுள்ள நிலைமை குறித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? இம் மக்களை புலிகளுக்கு ஆதரவானவர்களாகவே பெரும்பான்மை இனம் பார்த்திருக்கிறது.

பதில்: இம்மக்கள் புலிகளுக்கு ஆதரவானவர்களாக பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அமைதியாய் இருக்கும் பெரும்பான்மை தமிழ் புலம்பெயர் மக்கள்கூட யுத்தம் இங்கு நடந்தபோது புலிகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைவரையும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகப் பார்ப்பது தவறு.

இவர்களில் பலருக்கு பல நோக்கங்கள் இருந்தன. மனப்பூர்வமாக புலிகளை ஆதரித்தவர்கள் உதவி செய்தவர்கள் ஒரு ரகம்.

அதேநேரம் தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டி பெருமையடைவதற்காக ஆதரித்தவர்கள் ஒரு ரகம். புலிகளுக்கு உதவி செய்வதன் மூலம் இலாபத்தை கண்டவர்கள் இன்னொரு ரகம்.

உண்மையில் புலிகளை ஆதரித்த பலர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். நிதி திரட்டுவதில் இவர்களுக்கு 20 சதவீத கழிவு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கணக்கு வழக்கின்றி நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கணக்கே இல்லாமல் போய் விட்டது.

இப்போது காசைப் பற்றி கேட்டால் தலைவர் வருவார் அவரிடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படியான நிலைகளையே நாம் இன்று காண்கிறோம். எனினும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையாக தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே கருதுகிறார்கள். இவர்கள் தான் அமைதியான பெரும்பான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்று சிறுகச் சிறுக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு இங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இங்கு வந்து செயற்படக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் இன்னும் உருவாகவில்லை. சிலர் இங்கு வந்து முதலீடு செய்தாலும் அவை வியாபார நோக்கம் கொண்டவை. அதேநேரம் பலர் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய சரியான மார்க்கம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களுக்கு சரியான மார்க்கம், ஊக்கம் நம்பிக்கையும் அளிக்கப்படும் பட்சத்தில் சிறந்த பெறுபேறுகளை அடையமுடியும்.

கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், குடியேற்றுதல், தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவித்தல் முதலானவற்றில் அரசாங்கம் கூறுவதுபோல செயற்பாட்டில் போதிய உண்மைத் தன்மை இல்லை என சில தமிழ் தரப்புகள் கூறுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: சுமார் 3 இலட்சம் மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட போது தமிழ் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் யாவும் இம்மக்கள் நீண்ட காலத்துக்குள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறின. நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோயிருந்தோம். ஜனாதிபதியை நான் சந்தித்தபோது நிச்சயமாக 6 மாதங்களுக்குள் இவர்களை விடுதலை செய்ய ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறியதுபோல இன்று செயற்படத் தொடங்கியிருக்கிறார்.

சில விடயங்களில் அரசாங்கம் நேர்மையாக செயற்படத் தொடங்கியிருக்கிறது. விடுதலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு என்பது மிகப்பெரியது. இதனை அரசாங்கம் மட்டும் தனித்து செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே ஏனைய நாடுகளையும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளையும் இப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்.

சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள மக்களிடம் மகிழ்ச்சி நிலவுகிற அதேநேரம் சிறுகச் சிறுக அச்சம் மேலோங்கி வருவதை நான் உணர்கிறேன். நிலப்பறிப்பு, பெரும்பான்மை சமூகத்துடனான வியாபாரப் போட்டி என்பன அதிகரிக்கின்றன.

இந்த வகையில் பெரும்பான்மையின மக்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியும் காணிகளை வழங்கியும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுப்பது தவறு. ஏனெனில் நலிவுற்ற தமிழ் மக்களால் இவர்களுடன் இப்போதே போட்டியிட முடியாது. எனவே இங்கிருக்கும் மக்களுக்கே தங்களை வளர்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இப்போது கைதானவர்கள் விடயத்தில் மாத்திரமன்றி பல காலங்களுக்கு முன்பே காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், சிங்களக் குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் குடியேறியிருப்பதன் பின்னணியில் சில சக்திகள் இருப்பதாக நினைக்கிறேன்.

இம்மக்கள் தாங்களாகவே இங்கு வந்திருக்க முடியாது. 1981ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 6 ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் மீண்டும் திரும்பி வருவதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் அதற்கான ஆதாரங்களையும் காணிகள் குறித்த விபரங்களையும் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.

இலங்கையில் யாரும் எங்கும் சென்று வாழலாம். ஆனால் அந்தப் பகுதியின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்ட குடியேற்றத்தைத்தான் நாம் முற்று ழுழுதாக எதிர்க்கின்றோம்.

கேள்வி: வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்க வேண்டும் என நீங்கள் கூறினாலும் யுத்த முடிவின் பின் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம் அவற்றை வெளியேறச் செய்திருக்கிறது அல்லவா?

பதில்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து நேர்மையாக ஒரு விடயத்தை கூற வேண்டும். யுத்த முடிவின் பின் வன்னி முழுவதையும் சென்று பார்த்தவன் நான். எத்தனையோ கோடி கோடி ரூபாக்கள் செலவு செய்திருப்பதாக தொண்டு நிறுவனங்கள் கணக்கு காட்டினாலும் குறிப்பிடத்தக்க எதையும் அங்கு காண முடியவில்லை. சுனாமியின் போதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செயற்பட்டன. மொத்தத்தில் எந்த அபிவிருத்தியையும் என்னால் இப் பிரதேசங்களில் காண முடியவில்லை. புலிகள் செய்ய விடவில்லை என்றால் அந்தப் பணங்களுக்கு என்ன நடந்தது? எனவே அரசின் நடத்தையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் குறை கூறிவிட முடியாது. சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அப் பகுதியில் இடமளிப்பதன் மூலம் இவற்றை சிறப்பாக செய்ய முடியும். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி இவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.

‘எங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை’ வீ சங்கரி தவிகூ – நேர்காணல் : த ஜெயபாலன்

Anandasangaree_VAnandasangaree_VAnandasangaree_V‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது. மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் அரசியல் தீர்வு விடயத்தில் நான் ஒரே முடிவிலேயே உள்ளேன்.’ என்று தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார். ‘எங்களுக்காகக் (தமிழர்களுக்கு) குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு (தமிழர்களுக்கு) குரல்கொடுக்க யாரும் இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 12ல் லண்டன் வந்துள்ள தவிகூ இன் தலைவர் வீ ஆனந்தசங்கரியை அரசியல் ஆர்வலர்கள் வி சிவலிங்கம், கவுன்சிலர் போல் சத்தியநேசன், எஸ் அரவிந்தன், எஸ் தயா, த ஜெயபாலன் ஆகியோர் நேற்று – ஒக்ரோபர் 13ல் சந்தித்தனர். தற்போதைய நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடலில் இலங்கை அரசின் தன்னிச்சையான போக்குகளை வீ ஆனந்தசங்கரி கடுமையாகக் கண்டித்தார்.

இச்சந்திப்பில் பல்வேறு விடயங்களும் உரையாடப்பட்டது. தற்போது யாழ் வந்துள்ள சிங்கள – தமிழ் குடும்பங்கள் பற்றித் தெரிவிக்கையில் அவர்களை திருப்பி அனுப்பும்படி கோருவது நியாயமற்றது எனத் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி இந்தக் காலகட்டத்தில் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முற்படும் போக்கு எனக் கண்டித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துக் கேட்டதாகவும் அதற்கு பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் அவர்களே பொருத்தமானவர் என்ற கருத்தை தான் வெளியிட்டதாகவும் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி தகுதியும் நேர்மையும் சிறந்த அனுபவமும் கொண்ட பேராசிரியர் ஃகூலே அப்பதவிக்குப் பொருத்தமானவர் எனத் தெரிவித்தார்.

தற்போதைய நாடுகடந்த அரசாங்கத்தின் முதற் பிரதம மந்திரி பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘இதுவொரு விசர்க்கூத்து’ என்று தெரிவித்தார்.

அண்மையில் லண்டனில் இலங்கையில் இருந்து சிலர் வந்து கலந்துகொண்ட கூட்டம் (தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்த கூட்டம்) ஒன்று நடந்தமை பற்றியும் விசாரித்துக் கொண்ட வீ ஆனந்தசங்கரி. பெரும்செலவில் நடத்தப்படும் இச்சந்திப்புக்களின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இச்சந்திப்பின் போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவான தமிழரங்கத்தை மேலும் பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் வீ ஆனந்தசங்கரி முக்கிய பாத்திரத்தை எடுக்க வேண்டுமென அவருக்கு வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்த வீ ஆனந்தசங்கரி தமிழ் அரங்கத்தின் தலைமைக்குப் பொருத்தமானவர் என்றும் அவருடைய வயதும் நீண்ட அரசியல் அனுபவமும் தமிழ் அரங்கத்தை மேலும் பலமான அமைப்பாக உருவாக்க உதவவேண்டும் எனவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

._._._._._.

தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி உடனான நேர்காணல்

Anandasangare_06Sep10\Anandasangaree_V_and_Jeyabalan_Tதேசம்: மே 18க்கு முன்பிருந்த அரசியல் நிலையும் மே 18க்குப் பின்னான அரசியல் நிலையையும் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்.

சங்கரி: பாரிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது. நான் முன்வைத்த இந்திய முறையிலான தீர்வு பற்றி பேசும் போது ஜனாதிபதி ‘இந்தியமுறை பற்றி எவ்வளவும் பேசுங்கோ ஆனால் சமஸ்டி பற்றி பேச வேண்டாம்’ என்றார். ஆனால் இப்ப அந்தக் கதையே இல்லை. 13 திருத்தம் பற்றிக் கதையே இல்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது குறிப்பிடப்படும் படியாக எதுவும் நடக்கவில்லை. எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்? மீள்குடியேற்றம் என்று என்ன செய்கிறார்கள்? வன்னியில் மீட்கப்பட்ட மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது?

சிலர் விடுதலைப் புலிகள் பரவாயில்லை என்று சொல்கிற அளவிற்கு நிலைமை உள்ளது. அதனால் விடுதலைப் புலிகள் சரியென்பதல்ல. நிலைமை மோசமாக சென்று கொண்டுள்ளது.

தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு மோசமான ஒரு நிலையே ஏற்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எப்போதுமே கூறிவந்துள்ளனர். இன்றும் அத்துருப்புச் சீட்டையே அவர்கள் தங்கள் பிரதான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான ஒரு உணர்வையே நீங்கள் இப்போது வெளிப்படுத்துகிறீர்கள். அப்படியாயின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உங்கள் அரசியல் தவறானது என உணர்கிறீர்களா?

சங்கரி: அப்படியல்ல. நான் தான் இந்த நிலையேற்படும் என்பதை முன்கூட்டியே சொல்லி நேரத்துடனேயே சில விசயங்களை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னனான். நான் எப்படிக் குற்றவாளியாக முடியும். நான் சொன்னது தான் இப்ப நடக்கிறது. நான் வே பிரபாகரனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை படித்து அதன்படி செய்திருந்தாலே இதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு நாட்டுடன் ஒரு இயக்கம் போராடுகிறது என்றால் அது முழு உலகத்துடனும் தான் போராடுகிறது. அரசாங்கங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாதம் என்றவுடனே எல்லாரும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் பகையை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள். இப்படிச் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லி இருக்கிறன். அப்ப ஏன் என்னுடைய சொல்லைக் கேட்கவில்லை.

இப்ப சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு நாடுகடந்த ஈழம் கடல்கடந்த ஈழம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 40 000 மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் 40 000 மக்களை கொல்வதற்கா. இனி மக்கள் இவர்களை விடுவார்களா?

இந்த சர்வதேச அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது எச்சரிக்கை வழங்குகிறார்களா? இல்லையே.

பிரபாகரனுக்கு விழுந்ததே கடைச்சி சூடு அதற்குப் பிறகு இன்று வரைக்கும் துப்பாக்கிச் சூடு இடம்பெறவில்லை.

புலிகளோடு இருந்தவர்களே இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்துள்ளார்கள்.

தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் பற்றி தமிழ் மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் தமிழ் அரசியல் தலைமைமைகளின் பின் நின்றனர். அதனால் இலங்கை அரசு மீது பழிபோட்டுவிட்டு தமிழ் அரசியல் தலைமைகள் தப்பித்துக் கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வேறு ஏதாவது விதமாக கையாண்டு இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையில் மாற்றம் எற்பட்டு இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

சங்கரி: நிச்சயமாக தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வித்தியாசமாகக் கையாண்டு இருக்க முடியும். தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல் தலைமை என்று யாரை ஏற்கிறார்கள். அவர்கள் என்னை தமிழ் அரசியல் தலைவர் என்று ஏற்கிறதில்லை. காலம்காலமாக என்னைப் பற்றி விசமேற்றி உள்ளனர். ஆர் சம்பந்தன் மா வை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் இவர்கள் தான் தமிழ் தலைவர்கள். இதில் என்னைக் குற்றம் சொல்ல முடியாது.

அவர்கள் தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். அதைவிட்டு எல்லோருடனும் பேசி ஒரு தீர்வுக்கு வர எப்போதாவது முன் வந்திரக்கிறார்களா? நான் கடந்த ஏழு வருடங்களாக இந்தியன் முறை என்ற ஒரு தீர்வை முன் வைத்து அதற்காக தனித்துப் போராடி வருகிறேன். இதற்கு மேலான ஒரு தீர்வு இலங்கையில் வர போவதில்லை. நான் ஜனாதிபதி எதிர்க்கட்சி மற்றைய கட்சிகளோடு பேசி வந்துள்ளேன். மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் நான் இதையே வலியுறுத்தி வருகிறேன்.

ஆகக் கூடிய அளவு இந்தியா அழுத்தம் கொடுக்கக் கூடியது இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு. அதனையே நான் முன்வைத்துள்ளேன். அதற்கு மேல் அதிகாரப் பகிர்வை வழங்க இந்தியாவும் முன்வராது. நாங்கள் உலக நாடுகளுடனும் அயல்நாடான இந்தியாவுடன் அனுசரித்துமே எமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெறமுடியும். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது.

தேசம்: இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வையுமே வழங்கப்போவதில்லை என்பதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிகையை முன்வைத்தனர் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தமான வாதம். இலங்கை அரசு இந்தியன் முறை யிலான தீர்வையும் அங்கிகரிக்கப் போவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

Anandasangaree_Vசங்கரி: இலங்கை அரசு எதையுமே தராது என்பது புலிகளுடைய வாதம். இலங்கை அரசு எதையுமே தராது என்றவர்கள் தானே இந்த ரிஎன்ஏ. இந்த வருடம் ஜனவரி தினக்குரலில் ஆர் சம்பந்தன் தெரிவித்து இருப்பதைப் பாருங்கள். கல்முனை என்று நினைக்கிறேன், ‘‘இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு தீர்வை  நாங்கள் ஏற்கத் தயாராய் இருக்கிறோம்’’ என்று கூறி இருக்கிறார். ஆனால் இதனையே ஆனந்தசங்கரியும் கூறி வருகிறார் என்றதைச் சொல்ல ஆர் சம்பந்தன் தயாரில்லை. அதற்கு முன்னர் தினக்குரலில் முன்பக்கத் தலைப்பிலும் ரிஎன்ஏ இந்தியா மாநிலங்களுக்கு ஒப்பான தீர்வுக்கு தயாராய் இருப்பதாக வெளிவந்தது. அதில் ஜனாதிபதியும் இதனைத் தெரிவித்து இருந்ததாக ஆர் சம்பந்தன் கூறி இருந்தார்.

ஜனாதிபதி சொல்லி இருந்தார் என்றால் அப்போதே அதனையேன் ஏற்கவில்லை. ஏன் இப்பொது தான் உங்களுக்கு ஞானம் பிறந்ததா? நீங்கள் பெரும்தன்மையாக இருந்திருந்தால் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையேற்பட வேண்டும் எண்ணி இருந்தால் ஆனந்தசங்கரியும் இதனையே சொல்லி வருகிறார் என்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்காகவே சங்கரி குரல் எழுப்பி வருவதை ஆர் சம்பந்தன் இருட்டடிப்புச் செய்தார். இதுதான் சம்பந்தர் தமிழ் மக்களுக்குச் செய்யும் அரசியல் சாணக்கியம்.

ஜனாதிபதித் தேர்தலில் இந்திய மாநிலமுறையை ஆதரித்த நீங்கள், பாராளுமன்றத் தேர்தலில் அதைப்பற்றிக் கதைகவே இல்லை. பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சம்பந்தர் எப்படி பிரச்சாரம் செய்கிறார். ‘ஆனந்தசங்கரியும் உதயசூரியனும் அரசாங்கத்தின் ஏவல் பேய்கள்’ என்கிறார். சங்கரி கேட்கின்ற இந்திய முறையைத் தான் நீங்களும் மீண்டும் தேர்தல் முடிந்த பின் கேட்கிறீர்கள். ஆனால் ‘சங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம். இது சம்பந்தரின் சாணக்கியமா? அல்லது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமா?

பாராளுமன்றத் தேர்தலுக்கு நான் இந்தியன் முறை என்பதை வைத்து போட்டியிடுகிறேன். ஆனால் சம்பந்தர் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் போட்டியிடுகின்றார். ஆனால் தேர்தல் முடிந்ததும் இந்திய மாநில முறைக்கு ஆதரவாக பேசுகிறார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைக்கு ஏனைய கட்சிகளுடன் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாரில்லை.

தேசம்: நீங்கள் எவ்வாறான ஒரு குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைத்திருந்த போதும் தமிழ் மக்களின் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளனர். அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஒரே தமிழ்க் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

சங்கரி: தமிழ் மக்கள் விடுகின்ற பிழை என்னவென்றால் நீங்கள் சொன்ன கூற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்தது. இந்தியாவுக்கு டெல்லிக்குச் சென்றுவிட்டு வந்து தங்களுக்கு ஏதோ சமிஞ்சை கிடைத்துள்ளது. நீங்கள் பொன்சேகாவுக்கு வோட் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர். சரத் பொன்சேகாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. தாங்கள் சொல்லித்தான் அந்த வோட் விழுந்ததாகவும் கூறினார்கள். அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளுடன் ஆரம்பித்தது. பாராளுமன்றத் தேர்தலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் ஊடகங்கள் டிபிஎஸ் ஜெயராஜ் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும்படி தெரிவித்தனர். ஆனால் என்ன நடந்தது. தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) யாழ்ப்பாணத்தில் 65 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர். எனக்கு மட்டும் தான் விழவில்லை. பலரும் எனக்கு எதிராக மேற்கொண்ட சதிப் பிரச்சாரம் தான். டக்ளஸ் தேவானந்தாவின் கட்சிக்கு 45 ஆயிரம் வாக்குகள் விழுந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் கேட்ட பெண் மணிக்கும் வாக்குகள் வீழ்ந்துள்ளது. ஆகவே 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இத்தேர்தல் பெரும் தோலிவியே.

தேசம்: நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல்கொடுத்து வருகின்றீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் தற்போது அரசாங்கத்தினுடைய ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் குரல்கொடுக்கின்றீர்கள். எவ்வாறானாலும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட நீங்கள் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளீர்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கின்றது.

சங்கரி: என்னுடைய உள்ளுணர்வு நான் ஏமாந்த மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளேன் என்கிறது. மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. ஏமாந்த மக்கள் என்னை நிராகரித்துள்ளனர்.

‘ஆனந்தசங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனந்தசங்கரி என்ன மந்திரிப்பதவி எடுத்தேனா? மந்திரிப் பதவி எடுக்கின்ற தகுதி எனக்கில்லையா? ஜனாதிபதி ‘அடுத்த கவனர் பகுதி உங்களுக்குத் தான்’ என்று சொன்ன போது அது தமிழ் மக்களுக்கு எப்படி உதவும் என்று தான் நான் கேட்டனான். நான் எந்த நன்மையையும் அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை. எனக்கு கிடைத்த பரிசுப் பணத்தை என்ன செய்தேன் என்று கேட்கிறார்கள். அதனை வைத்துத் தான் நான் கட்சி நடத்தினேன்.

நான் புலிகளுடைய போக்குக்கு எதிரானவன். நான் புலிகளை ஆரம்பத்தில் விமர்சிக்கவில்லை. யுத்த நிறுத்தம் கையெழுத்திட்ட பின் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. வெண்ணை ‘திரண்டு வரும்போது தாளியை உடைக்க வேண்டாம்’ என்று நான் அதனைக் கண்டித்தனான். நான் பிரபாகரனுக்கு எழுதியது ‘இதை இதைச் செய்ய வேண்டாம் இதை இதைச் செய்யுங்கோ என்று.’ என்ன நடந்தது?

இந்த ரிஎன்ஏ க்கு கிடைத்த 22 ஆசனங்களும் பிரபாகரன் போட்ட பிச்சை. ‘அந்தத் தலைவர் நல்லாக இருந்தவர். எங்களுக்கு பாராளுமன்ற ஆசனம் பெற்றுத் தந்தவர்’ என்று ஒருநாள் அந்தாளுக்கு அஞ்சலி செலுத்தினார்களா? இல்லை. அடுத்த நாளே தாங்கள் சமஸ்டிக்கு ரெடி என்றார்கள். இதனை சுடரொளியில் வித்தியாதரன் சுட்டிக்காட்டி இருந்தார். ‘ஆனந்தசங்கரி பிரபாகரன் இருக்கும் போதும் சரி இல்லையென்று ஆனபோதும் சரி தனது இந்தியன் முறையில் உறுதியாக உள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் இல்லையென்று ஆனபோது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி விட்டது’ என்று அவர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

தேசம்: மந்திரி பதவி கவனர் பதவி என்பவற்றை நீங்கள் எடுக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள். இப்போது அவ்வாறான ஒரு பதவியை நீங்கள் பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

சங்கரி: நான் அப்பதவிகைள் எடுக்காமைக்காக சந்தோசப்படுகிறேன். பதவி எடுத்திருந்தால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நானும் பொறுப்பாகி இருப்பேன்.

தேசம்: நீங்கள் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் வன்னி மக்களின் அபிவிருத்திக்கான பொறுப்பை உங்களிடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் அரசாங்கத்திடம் வைத்திருந்தீர்கள் அல்லவா?

சங்கரி: அது வேறு. இது வேறு. வன்னி மக்களின் அபிவிருத்தியில் தெற்கில் இருந்து முடிவு எடுப்பவர்களுக்கு அப்பகுதியின் சூழல் தெரியாது. ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச சில விடயங்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவருக்கு அந்தப் பிரதேசத்துடன் எவ்வித அனுபவமும் இல்லை. அதனால் அப்பிரதேசத்தில் 1959ல் இருந்து வாழ்ந்தவன் நான். அப்பகுதி பற்றி நன்கு அறிந்தவன்.

தேசம்: நீங்கள் சொல்வது சரி. அதனைச் செய்வதற்கு அப்பொறுப்பு அப்பதவி உங்களுக்கு அவசியமல்லவா?

சங்கரி: பொறுப்போ பதவியோ வேண்டாம். சம்பளமும் வேண்டாம். அப்பகுதி பற்றிய அறிவும் அனுபவமுடைய என்னை ஆலோசகராக நியமிக்கவே கேட்டேன். வடபகுதி அபிவிருத்திக்கென 19 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு முஸலீம் 18 சிங்களவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு கிளிநொச்சி தெரியும். அதனால் அபிவிருத்தித் திட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் நிதியும் மக்களுக்கு முழுமையான பயனைத் தரவில்லை.

உதாரணமாக இரணைமடு குளம் 25 000 – 30 000 ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்கிறது. யாழ்பாணத்தில் தண்ணீர் இல்லாத இடம்என்று எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஓரிரு கிராமங்கள் இருந்தால் தண்ணீர் பவுசரில் கொண்டு செல்லலாம். 60 கோடி செலவில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் குடி தண்ணீர் கொண்டு வரப் போகின்றார்களாம். யாருடைய ஆலோசனை?

டிஎல்ஓ மென்டிஸ் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இருந்தவர். அவர் முன்னர் கூறி இருந்தார் ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு உருவாக்க வேண்டும் என்று பொறியியலாளர் ஆறுமுகம் விரும்பி இருந்தார்’ என்று. அவருடைய திட்டம் தொண்டைமான் ஆற்றைப் மறித்து, மழைத் தண்ணீர் எல்லாம் தொண்டைமான் ஆற்றூடாகவே கடலைச் சென்றடைகிறது. மற்றறையது நாவற்குழியால் கடலைச் சென்றடைகிறது. இன்னொன்று சுண்டுக்குளத்தால் கடலைச் சென்றடைகிறது. வேறு வழியில் தண்ணீர் சென்றடைவதற்கு இடமில்லை. அப்ப இரணைமடுக் குளம் நிறைந்தால் அதன் தண்ணீரை ஆணையிறவு ஊடாக அனுப்பினால் அதனைத் தொண்டைமான் அறுவரை அனுப்பலாம். யாழ்;ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள உப்புத் தறையின் உவர்த் தன்மை படிப்படியாக குறையும். ஐந்தாறு வருடங்களில் அப்பகுதிகளில் உள்ள உவர்த்தன்மை படிப்படியாக இல்லாமல் போகும். அப்பகுதிக் கிணறுகளில் நன்னீர் கிடைக்கும் அப்பகுதிகளில் விவசாயம் செழிக்கும்.

அப்படி இருக்கையில் 60 கோடியில் பைப் தண்ணி எதற்கு. என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால் அப்பிரதேச மக்களுடைய அறிவை அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அரசாங்கம் எல்லாவற்றையும் வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது.

தேசம்: இன்றுள்ள இந்த நெருக்கடியான சூழலை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு கையாள முடியும் என நினைக்கிறீர்கள்?

Anandasangaree_Vசங்கரி: இந்த அரசினுடைய போக்கு மிகப் பிழையென எல்லோருக்கும் தெரிகிறது. அரசாங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றது. அதனால் நாங்கள் குழம்பவில்லை என்று நாங்கள் காட்ட வேண்டும். நான் மந்திரியில்லை. நான் கவனர் இல்லை. நாங்கள் எல்லோரும் சமன் என்று உணர வேண்டும். எங்களுக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதனைத் தீர்த்து வைக்க வேண்டும். இப்போது குடியேற்றம் செய்யப்படாது. அதனைச் செய்ய வேண்டிய காலத்தில் பார்க்கலாம். தங்கட காணி பூமியை விட்டுவிட்டு போனவர்கள் திரும்பி வரவேண்டும். அந்தக் காணிகளில் இப்ப கை வைக்கக்கூடாது. இப்ப காணி இல்லாதவர்களுக்கு எப்படி உறுதிகொடுக்க முடியும்?

தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் காணி அற்ற பலருக்கும் காணிகளைப் பிரித்து வழங்கி இருந்தார்கள். அந்நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அந்த மக்களிடம் தங்கள் நிலத்திற்கான சட்டப்படியான உரிமம் இல்லை. அவ்வாறானவர்களுக்கு உறுதி வழங்குவதில் என்ன தவறு?

சங்கரி: விடுதலைப் புலிகள் காணி இல்லாதவர்களுக்கு காணி கொடுத்தது ஒரு பக்கம். காணி நிலத்துடன் இருந்தவர்களை அவற்றைப் பறித்துக் கொண்டு விரட்டியும் உள்ளனர். அந்தக் காணிகளுக்கான உறுதியை இன்னொருவருக்கு வழங்கினால் பிரச்சினை மேலும் மோசமாகும் எல்லா.

நான் உறுதி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்ப அதற்கு அவசரம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

தேசம்: இந்த உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறதா? அல்லது தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறதா?

சங்கரி: வேறு யாருக்காவது கொடுக்கிறது என்றால் இன்னம் மோசம் எல்லோ. எங்கள் காணி நிலம் பறிபோவது போல் எல்லோ.

முதலில் ஒரு குறிப்பிட்ட திகதிக்கு முன் எல்லோரையும் தங்கள் தங்கள் காணிகளில் இருக்கச் சொல்ல வேண்டும். அதன் பிறகு உறவுகள் சொந்தங்களின் காணிகள் இருந்தால் அதனையும் கிராமசேவகர் அரசாங்க அதிபர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். காணிகளின் சொந்தக்காரர்களை உறுதிப்படுத்திய பின்னுள்ள அரச காணிகளை காணி அற்றவர்களை அழைத்து அவற்றை பகிர்ந்து உறுதி கொடுக்க முடியும். அதற்கு எவ்வளவு காலம் இருக்கு. சனங்கள் இன்னும் தங்கள் இடங்களுக்குப் போய் குடியிருக்கவே இல்லையே.

தேசம்: மே 18 2009ற்குப் பின் வடபகுதியில் எங்காவது குடியேற்றம் நடந்துள்ளதா?

சங்கரி: நான் அறிய இல்லை. ஆனால் இராணுவத்திற்காக மிக வேகமாக வீடுகள் கட்டப்படுகின்றது. அது குடியேற்றமாக அமையும் என்றே நம்புகிறேன். 15 000 வீடுகள் அமைக்கும் திட்டம் இருக்கிறது. இலங்கையின் தென்பகுதிகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் நிறையக் காணிகள் உள்ளது. இப்ப எதற்காக வடக்கு கிழக்கில் குடியேற்ற அவசரப்பட வேண்டும்.

தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடாத்தி தாங்கள் இழந்த உரிமைகளைப் பெற முற்பட்டனர். பின்னர் ஆயுத வன்முறையிலும் இறங்கினர். ஆனால் இரண்டுமே தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இனிமேல் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

சங்கரி: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக நின்று செயற்பட வேண்டும். அதற்கு சில விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டே ஆக வேண்டும். நாட்டைப் பிரிக்கச் சொல்லி கேட்கமாட்டம். ஆனால் குடியேற்றத்தை நிறுத்தச் சொல்லலாம். எனக்கு சிங்களவர்களும் முஸ்லிம்களும் பக்கத்தில் இருப்பது விருப்பம். ஆனால் அதனை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யக் கூடாது. நாங்கள் துவசம் பேசவில்லை.

தேசம்: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக வரவேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழ் அரங்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டதன் மூலம் அந்த ஒற்றுமையை நோக்கி ஒருபடி முன் நகர்ந்து இருக்கிறீர்கள். இந்த தமிழ் அரங்கத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என நினைக்கிறீர்கள்?

சங்கரி: தமிழ் அரங்கத்தை நான் துவங்கியிருப்பன் ஆனால் தேர்தலுக்காக என்றெல்லாம் சொல்வார்கள் என்பதால் நான் துவங்கவில்லை. ஆனால் இனி எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. ஒரு தரும் துவங்கவில்லை. டக்ளஸ் துவங்கினார். டக்ளஸ் துவங்கினார் என்பதற்காக நான் விட்டுவிட்டு ஓட இயலாது. டக்ளஸ் ஒரு நல்ல வேலையைச் செய்யும் போது நான் சென்றேன். ரெலிபோனில் அழைத்து அண்ணை வாங்கோ என்றார் நான் போனேன். ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 15 பேர் இருந்தார்கள்.

முதல் நாளே நான் சொன்னான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றால் ஒரு சமயம் நீங்கள் எல்லோரும் சம்மதிப்பியல். ஆனால் பிரச்சினை எனக்கும் டக்ளஸ்க்கும் ஆகத்தான் இருக்கும். அவரும் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறார். நான் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன். நாங்களும் கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். அதற்கு எத்தனையோ தடைகளை டக்ளஸ் பாய வேண்டி இருக்கும். அப்ப டக்ளஸ் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனான். ‘அப்படி ஒருநிலை வந்தால் தான் உங்களுடன் நிற்பேன்’ என்றார். அந்த உத்தரவாதத்தோடு நான் இருக்கிறேன்.

சம்பந்தர் தேர்தலுக்குப் பிறகு சொல்லி இருக்கிறார் ‘எல்லோரும் வாருங்கள்! நடந்ததை மறப்பம்!’ என்று. பிறகு அழைப்பு வரவில்லை அப்படியெல்லாம் சொன்னார்கள். ரிஎன்ஏ சரவணபவன் தாங்கள் தேசியத்துக்கா நிற்கிறம் என்றெல்லாம் சொன்னார். அதுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் வருவம் என்றார்.

தேசம்: தமிழ் அரங்கம் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையானதாக உள்ளது.

சங்கரி: இக்கட்டான ஒரு பிரச்சினை வருகின்ற போது அரசாங்கத்துடன் நிற்கும் கட்சிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். அதையும் மீறி துணிந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 5000 பேரை வடக்கில் குடியேற் முடிவெடுத்தால் தமிழ் அரங்கம் அதற்கு எதிராக இயங்க வேண்டி இருக்கும். அப்போது டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

தேசம்: இதுவரை தமிழ் அரங்கத்தில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா?

சங்கரி: இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்தும் உறுதியான முடிவுகள் பற்றி பேசாததற்குக் காரணம் ரிஎன்ஏ வந்த சேராதது. இனி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி வந்தாலும் வரலாம்.

தேசம்: தமிழ் அரங்கம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத ஒரு அரங்கமாகத் தான் இருக்கப் போகின்றது?

சங்கரி: அது அவர்களுக்கு அரசாங்கத்துடன் நிற்பவர்கள் என்று எங்களைப் பற்றி பொய் பிரச்சாரங்கள் செய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.

தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பு….

சங்கரி: இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குக் கஸ்டம். மக்களை கனகாலத்திற்கு ஏமாற்ற முடியாது.

தேசம்: தமிழ் அரங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் இருப்பதால் தான் அவர்களுடன் தங்களை அடையாளப்படுத்த முடியவில்லை என ததேகூ இன் யாழ் எம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறி இருக்கிறார்?

சங்கரி: அப்ப யாரை அடையாளப்படுத்தி எல்லோரும் வாருங்கள் ஒன்றுசேருவோம் என்று சம்பந்தர் கேட்டவர்.

தேசம்: வடமாகாண சபைக்கான தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் அரங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

சங்கரி: இப்ப இந்த தேர்தலுக்காகத்தான் இவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள் என்ற கதையள் மறைமுகமாக வந்து இருக்கிறது. இதைப் பற்றி இன்னமும் இதுவரை பேசப்படவில்லை. நிச்சயமாக நான் கேட்கமாட்டேன்.

தேசம்: தமிழ் அரங்கத்தில் உள்ள எல்லோரும் இணைந்து ஒரே வேட்பாளர் பட்டியலை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா?

சங்கரி: ஒரே குழுவாகத்தான் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்று யாராவது தனித்து வெளியே சென்று கேட்க முற்பட்டால் அவர்கள் பாடம் படிப்பார்கள். இந்த தமிழ் அரங்கத்தின் உருவாக்கத்திற்குப் பிறகு நான் எனக்கு மாறானவர்களையும் சந்தித்து இருக்கிறன். அவர்கள் இதை நல்ல முடிவு என்று தான் வரவேற்கிறார்கள். டக்ளஸ் க்கும் 3 ஆசனங்கள் கிடைத்திருக்கே. இப்ப யாரும் கள்ள வோட் என்று குற்றம்சாட்ட முடியாதே.

தேசம்: நீங்கள் ஒரு மூத்த அரசியல்வாதி, நீண்ட கால அரசியல் வரலாறு உண்டு என்று தமிழ் அரங்கம் முதலமைச்சருக்கான வேட்பாளராக உங்களை நியமிக்க முன்வந்தால் நீங்கள் அதனை ஏற்பீர்களா?

சங்கரி: அதைப்பற்றி இப்ப நான் ஒன்றும் சொல்ல முடியாது. இப்ப என்னுடைய நிலைப்பாடு இவற்றில் தலையிடுவதில்லை என்பதே.

தேசம்: அப்படியானால் நீங்கள் தமிழ் அரங்கத்தின் முடிவோடு தான் செயற்படுவீர்களா?

சங்கரி: தமிழ் அரங்கத்தில் பிளவுகள் வராதவரை நான் தமிழ் அரங்கத்தின் முடிவுடனேயே செயற்படுவேன். பிளவை ஏற்படுத்துவதற்கு நான் காரணமாக மாட்டேன்.

தேசம்: இதனை தமிழ் அரங்கம் பற்றி நம்பிக்கை உருவாகி உள்ளது என்று எடுக்கலாமா?

சங்கரி: ஓம்.

தேசம்: 1981 முதல் வட மாகாணத்தில் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வடமாகாணத்தில் முன்னைய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கினரே வாழ்கின்றனர். 2011ல் வடமாகாணத்தின் சனத்தொகையும் கணக்கிடப்பட உள்ளது. இது வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் அல்லவா?

சங்கரி: நிச்சயமாகப் பாதிக்கும். ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் இல்லாவிட்டால் உங்களுக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. இதனை அன்றே உணர்ந்து தான் நான் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு இதனைச் சுட்டிக்காட்டி 1983 வாக்காளர் பதிவைப் பயன்படுத்தும்படி அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவிடம் கேட்டு அதனையே பயன்படுத்தச் செய்தோம்.

இன்றுவரை அந்த வாக்காளர் பதிவை வைத்து புதிய வாக்காளர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.  மரணித்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் யாருடைய பதிவும் நீக்கப்படவில்லை. எனது அண்ணரின் பதிவு கிளிநொச்சியில் இருந்தது. அவர் இறந்து 10 வருடங்கள் ஆகியும் அப்பதிவு இன்னமும் நீக்கப்படவில்லை. 700 000 வாக்காளர் இருக்கின்றார்கள் என்பது இந்த அடிப்படையிலேயே.

தேசம்: சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின் என்ன நடக்கும்?

சங்கரி: அதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. நாங்கள் உறவோடு இருந்திருந்தால் அப்போது கேட்டது போன்று செய்திருக்கலாம். அப்போது அந்த உறவு இருந்தது. இப்போது கடினம். ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆசனங்களைக் குறைக்க வேண்டாம் என்று கேட்கப் போகின்றோம்.

தேசம்: அப்படியானால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் இதே எண்ணிக்கையில் பேணுவதற்கான சட்டப் பாதுகாப்பு இல்லை.

சங்கரி: சட்டப் பாதுகாப்பில்லை. சட்டப்படி பார்த்தால் பிரதிநிதித்துவம் குறைய வேண்டும். அதனால் தான் நான் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.

தேசம்: இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருந்தது. நீங்களும் இந்திய முறையிலான தீர்வையே முன்வைத்தம் இருக்கிறீர்கள். மேலும் இந்தியா 1987ல் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டது. இன்று இந்தியாவின் நிலைப்பாடு எப்படி உள்ளது?

சங்கரி: இந்தியா நேரடியாக எதிலும் தலையிடாது. நாங்கள் தான் முடிவுக்கு வரவேண்டும். என்னுடைய இந்திய முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டால், தமிழநாடு மூலமாக அவர்கள் இதனைக் கையாள்வார்கள். மற்றும்படி நேரடியாக அவர்கள் தலையிட மாட்டார்கள்.

தேசம்: தமிழ் அரங்கம் உங்கள் இந்திய முறையிலான தீர்வுடன் முரண்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சங்கரி: முரண்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மற்றையவர்களிலும் பார்க்க கூடுதலாகவே கேட்கிறேன்.

தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முரண்பட முடியாது?

சங்கரி: இனி முரண்பட முடியாது. ஏன் என்றால் ஏற்கனவே இந்திய முறையிலான தீர்வை ஏற்கத் தயார் என்று கூறிவிட்டார்கள்.

தேசம்: அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இக்கோரிக்கையை வைப்பதில் என்ன தடை உள்ளது.

சங்கரி: இதில் என்ன தடை என்றால் சிலருக்குள்ள தலைமை ஆசை. சம்பந்தர் கிழவனாகி விட்டார். நான் தான் அடுத்த தலைவர் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனின் எதிர்பார்ப்பு. நான் தானே கட்சியைத் துவங்கினனான் என்று மாவையின் எதிர்பார்ப்பு. சம்பந்தர் எதற்காக என்னை விட்டுச் சென்றவர். சம்பந்தன் சொன்னவர், ‘நானும் உன்னைப் போலத்தான் ஏகபிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ அதனை வெளிப்படையாயச் சொல்கிறாய். நான் அப்படிச் சொல்லேல்லை’ என்று. இப்ப இதைக் கதைப்பது சரியல்ல.

தேசம்: 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் இன்று வரையான அரசியல் போக்கு மிகப்பெரும் அழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. வட்டுக்கொட்டைத் தீர்மானம் – தமிழீழக் கோரிக்கை மிகத் தவறான முடிவு என்பதை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தீர்கள்.

சங்கரி: தமிழீழக் கோரிக்கை என்றது மிகத்தவறான ஒரு அரசியல் முடிவு. ஜி ஜி பொன்னம்பலம் என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். என்னுடன் வாடா போடா என்று தான் கதைப்பார். எனக்கும் அவருக்கும் மிக நெருக்கம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்தவுடன் மாநாடு முடிந்ததும் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு போய்ச் சொல்ல ‘என்னடா செய்து போட்டு வாறியல். இரத்த ஆறு ஓடப்போகுதடா’ என்றார். ஜீ ஜீ அவர்கள் 1976ம் ஆண்டு கூட்டத்திற்கு வரவில்லை. அவர் கருணாநிதியின் வழக்கை முடித்துக்கொண்டு மலேசியா சென்றிருந்தார். அவரையே கூட்டணியின் தலைவராகப் போட்டோம். அவர் வரும் போது பெரு வரவேற்பு அளிப்பதாகவே இருந்தது. ஆனால் அவர் உயிரற்ற உடலாகவே நாடுக்குத் திரும்பினார்.

தேசம்: உங்கள் அரசியல் வாழ்வின் ஆரம்பம் பற்றி சிலவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்…..

சங்கரி: நான் பிறந்தது பருத்தித்துறை. வளர்ந்தது அச்சுவேலி. சமசமாஜக் கட்சியுடன் கொழும்புக்கு வந்துவிட்டேன். 1959 முனிசிபல் கவுன்சில் எலெக்சனில் என்னையும் நொமிநேற் பண்ணினார்கள். பிறகு சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை என்னை கிளிநொச்சித் தொகுதி வேட்பாளராகப் போடும்படி கேட்டது. அப்ப கட்சி என்னை கிளிநொச்சியில் நிறுத்த முடிவெடுத்தது. வேட்புமனுவை இறுதி நேரத்தில் தாக்கல் செய்தேன். அப்ப எனக்கு 24 வயது. அதற்குப் பிறகு வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பேச்சு. தேர்தலில் நிற்க ஆசை என்றால் பருத்தித்துறையில் கோப்பாயில் நின்றிருக்கலாம் என்று அம்மா அடிக்காத குறை. பருத்தித்துறை என்றால் சின்ன இடம். பலரையும் தெரியும். வீரசிங்கம் என்ற அப்பாவி பெயருக்கே வோட்டு வந்திருக்கும். அப்ப கோப்பாயில் அப்பா கிங் மேக்கர். என்னுடைய மாமா பாலசிங்கம் தமிழரசுக் கட்சியில் நன்றார்.

கிளிநொச்சிக்கு சென்றால் யாரும் கிட்ட வருகிறார்கள் இல்லை. இருந்தாலும் சிறிது நாட்களுக்கு உள்ளாகவே ஓரளவு ஆதரவைத் திரட்டினோம். 1960 மார்ச் தேர்தலில் 2500 வாக்குகள் பெற்றேன். ஆயிரம் வாக்குகளால் தோல்வி அடைய வேண்டி வந்தது. ஒரு வாக்கால் கட்டுப்பணத்தையும் இழந்தேன். எட்டுப்பேர் கேட்டத்தில் வாக்குகள் பிளவுண்டது. பிறகு 1964ல் விலேஜ் கவுன்சிலில் செயர்மனாக வந்தன். 1960ற்கு பிறகு கிளிநொச்சியும் கொழும்பும் தான் யாழ்ப்பாணம் விட்டாச்சுது. தமிழரசுக் கட்சியின் கோட்டையான கிளிநொச்சித் தொகுதியில் 1970ல் தமிழ் காங்கிரஸில் நின்று வெற்றி பெற்றேன்.

தேசம்: உங்களுடைய அரசியல் அனுபவம்:

சங்கரி: என்னுடைய அரசியல் வாழ்க்கை இடதுசாரிக் கட்சியில் தான் துவங்கியது. நாங்கள் பெரியதொரு பிழைவிட்ட நாங்கள். அதே பிழையை இப்போதும் விடுறம். எங்களுடைய முதலாவது பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டியவரே இடதுசாரியாகிய என் எம் பெரேரா தான். யுஎன்பி டி எஸ் செனநாயக்காவுக்கு பெரும்பான்மை இல்லை. அனைத்து தமிழ் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தால் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும். அது கை கூடவில்லை. பிரஜாவுரிமைச்சட்டம் வரும்போது அதற்கு எதிராக வாக்களித்து சமசமாஜக்கட்சி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்போது என்றாலும் இந்த தமிழ் சாதிக்கு அறிவு வந்திருக்க வேணும்.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்.

அதற்குப் பின் 1960 அம் ஆண்டுத் தேர்தல். அதில் நானும் சமசமாஜக் கட்சியில் தேர்தலில் நின்றனான். அப்ப அ அமிர்தலிங்கம் வந்து என்ன பேசினவர். ‘அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன்;.’ இந்த வாய்க்கொழுப்பு தான் எங்கள் இனத்தின் கேடு. அப்போதாவது இடதுசாரிக்கு கட்சிகளுடன் தோழமை கொள்ளவில்லை. ஒரு ஆசனம் கூட வெல்லப்படவில்லை. தமிழர்களுக்கு குரல்கொடுத்ததாலேயே அழிந்த கட்சி அது. 1960இல் இலங்கையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஆட்களைப் போட்டனர். ஒரு சீற்றும் வெல்லவில்லை. அப்படி இருந்தும் சம அந்தஸ்து கொள்கையை அவர்கள் விடவில்லை.

1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். உங்களுக்கு தந்த இன்ரவியூவிலும் அந்தத் தவறை ஏற்றுக்கொண்டனான். அந்த நேரம் இடதுசாரிக் கட்சிகள் எவ்வளவோ தியாகத்தைச் செய்தும் நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ‘நாங்கள் தமிழர்களுக்காகக் கதைத்து தோற்றுப்போகிறோம். தமிழர்கள் வெற்றி பெற்று யுஎன்பி உடன் போகிறார்கள்’ என்ற எண்ணம் சிங்கள இடதுசாரிகள் மத்தியில் எழுந்தது. இடதுசாரிகளில் சிலரையாவது நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமானநிலை வந்திருக்காது.

அப்போது நடந்த மே தின ஊர்வலத்தில் ‘அப்பிட்ட எப்பா மசாலாவடே. அப்பிட எப்பா கடல வடே’ என்று சில பேர் கோசம் போட்டுக் கொண்டு போனதைத் தொடர்ந்து நாங்கள் சிலபேர் கட்சியில் இருந்து விலகிவிட்டோம். அதை நாங்கள் ஒரு பெரிய குற்றமாக எடுத்திருக்கக் கூடாது. அதனை என் எம் பெரேரா சொல்லவில்லை. அங்கிருந்த யாரோ ஒரு சிலர் கோசம் போட்டதே. அது நான் விட்ட பெரிய தவறு. 1970க்களில் சமசமாஜக் கட்சிக்கு 18 சீட்டுக்கள் இருந்தது. கொம்யூனிஸ்ற் கட்சியையும் சேர்த்தால் 22 – 23 சீட் இருந்தது. இப்ப சமசமாஜக் கட்சி ஒன்று, கொம்யூனிஸ்ற் கட்சி ஒன்று. இது தான் நாங்கள் விட்ட பிழை. எங்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை.

(செப்ரம்பர் மாதம் லண்டன் வந்திருந்த போது வீ அனந்தசங்கரி தேசம்நெற் க்கு இந்நேர்காணலை வழங்கி இருந்தார். இந்நேர்காணல் செப்ரம்பர் 5ல் பதிவு செய்யப்பட்டது.)

‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க – நேர்காணல் : த ஜெயபாலன்

rajiva_wijesinha_prof‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க இன்று (செப்ரம்பர் 18, 2010) தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். 2010இல் ‘’சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்’’ என்றும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க நம்பிக்கை வெளியிட்டார். ‘இலங்கை யுத்தத்திற்கு பின்னான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க றோயல் கொமன்வெல்த் சொசைடியில் நேற்று (செப்ரம்பர் 17 2010) உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ‘‘யுத்தத்திற்குப் பின் சிறிலங்கா விரைவாக வழமைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் கிராமப் புறங்கள் முன்னுரிமை வழங்கப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது. சுயாதீனமாக எங்கும் சென்றுவரக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது. 5000 தமிழ் பொலிஸாரை பொலிஸ் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது’’ என்ற விடயங்களை சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் அரைமணி நேர உரையின் பின் சபையில் இருந்தவர்கள் மத்தியில் இருந்து கேள்விகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரம்பரிய ஆதரவாளர்களால் நிறைந்திருந்த மண்டபத்தில் இலங்கை தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடையவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். கேள்வி நேரத்தில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மீதும் இலங்கை அரசு மீதும் கடுமையான கண்டனங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், குடும்பக் கட்டுக்குள் அதிகாரங்களைக் குவிப்பது, பிறள்வான ஆட்சிமுறை போன்ற வழமையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இவற்றுக்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘தமிழ் மக்களுக்கு கடந்த கதலங்களில் அநீதி இழைக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்களின் உணர்வுகளை எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் நானும் கவலைகொள்கிறேன். ஆனால் இன்று அரசாங்கம் அநீதி இழைக்கப்பட்ட சூழ்நிலையை மாற்றி அமைக்கின்ற செயன்முறையில் தன்னை ஈடுபடுத்தி உள்ளது. 1987ல் எல்ரிரிஈ மட்டும் ஆயுதங்களை ஒப்படைக்காமல் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இன்று யுத்தம் வெல்லப்பட்டு சமாதனச் சூழல் ஏற்பட்டு உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் எதிர்மறையாக செயற்படுவதால் எவ்வித பலனும் இல்லை’’ எனத் தெரிவித்தார்

சர்வதேச நாடுகளின் மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில், ’’பனிப்போருக்குப் பின் தேவைகளைப் பொறுத்து மேற்குநாடுகள் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்றனர்’’ என தெரிவித்தார். கனடாவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவர், ‘‘கனடாவில் உள்ள பொருளாதார அகதிகளை திருப்பி அனுப்ப முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையில் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகலாம் என தஞ்ச வழக்குகளின் நீதிபதிகள் கருதுகின்றனர். ஆகவே எப்போது அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும்’’ எனக் கேள்வி அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘கனடா ஏன் அவர்களை மனித வளமாகக் கருதவில்லை. அவர்களை தங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாமே”” எனப் பதில் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தம் பதிலளிக்கையில்,’’கனடாவில் உள்ள 50 வீதமான தமிழர்களும் விடுமுறைக்கு இலங்கை வந்து செல்கின்றனர். அதனால் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற கதைகள். கனடாவில் வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் செழிப்பான இடங்களுக்கு மக்கள் கவரப்படுவது இயல்பானது. இலங்கைக்கு யாரும் திரும்பி வருவதில் எந்தத்தடையும் இல்லை’’ என்றார் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க.

இன்று (செப்ரம்பர் 18 2010) காலை லண்டனைவிட்டு புறப்படுமுன் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல்.

தேசம்: தடுத்து வைக்கப்பட்டு உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் காலவரையறையை குறித்துள்ளதா?

பா உ ரஜீவ: யுத்தத்தின் முடிவில் 10 000 வரையான எல்ரிரிஈ உறுப்பினர்கள் சரணடைந்தனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் முகாம்களில் உள்ளவர்களால் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எல்ரிரிஈ இல் என்ன ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்ற வகையில் A, B, C, D, E, F, G என வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் A, B, C பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும் ஏனையவர்கள் 10,000 பேரும் உள்ளனர். இந்தப் 10 000 பேரும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஏற்கனவே சில ஆயிரம் பேரை அரசாங்கம் விடுவித்து உள்ளது. தற்போது 7,000 பேர் வரையிலேயே உள்ளனர். இவர்களில் இன்னும் 1400 பேர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். மாதத்திற்கு 1,000 பேரை விடுவிப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது.

A, B, C பிரிவுகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எல்ரிரிஈ இன் முக்கிய உறுப்பினர்கள். இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஏனையவர்களுக்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ஏனையவர்கள் ஒரு சில வருடங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு தொழில் பயிற்சி உளவியல் ஆலோசணைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் திருமணங்கள் கூட செய்து வைத்துள்ளது.

தேசம்: அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மத்தியிலேயே தற்போது அதிருப்தி நிலவுகின்றது. வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். வட மாகாண அபிவிருத்தியை முன்னெடுக்க அமைக்கப்பட்ட குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாரும் இல்லை.

பா உ ரஜீவ: அபிவிருத்தி விடயங்களை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர் பசில் ராஜபக்ச சில துரித விடயங்களை மேற்கொள்கிறார். அப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ரிஎன்ஏ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதித முன்னுரிமை வழங்கப்படுவதாக பல சமயங்களிலும் குற்றம்சாட்டி வருகின்றது. மற்றைய தமிழ் கட்சிகளும் அப்போது பிளவுபட்டு நின்றன. அபிவிருத்தி துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனாலேயே கட்சிகள் அக்குழுவில் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்.

தேசம்: வடக்கு – கிழக்கு மாகாணத்தின் குடிபரம்பலை மாற்றி அமைக்கின்ற நிகழ்ச்சி நிரல் ஒன்று அரசாங்கத்திடம் உள்ளதா? அரசாங்கத்தை ஆதரிக்கின்ற கட்சிகளே அவ்வாறான திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருப்பதாக நம்புகின்றன.

பா உ ரஜீவ: இவ்வாறான செய்திகள் சென்ற ஆண்டில் பரப்பப்பட்டு இருந்தது. அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை இப்போது ஒரு வருடம் ஆன பின் அறிந்திருப்பீர்கள். எண்பதுக்களில் இடம்பெயர்ந்த சிறிய தொகையான சிங்கள கிராமவாசிகள் தங்கள் நிலங்களுக்கு திரும்பியதைத் தவிர அங்கு வேறு குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.

வடக்கு கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கின்ற எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை நான் நிச்சயமாகத் தெரிவிக்க முடியும். ஆனால் உங்களுக்கு விளங்க வேண்டும் வடக்கில் சில இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதையொட்டி சிறிய அளவில் இராணுவக் குடும்பங்கள் குடிஇருப்பார்கள்.

இது பற்றி அமைச்சர் கருணாவும் கூட அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளார். இக்குடியிருப்புகள் சிறய அளவுக்குள்ளாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களுடன் இராணுவக் குடியிருப்புகள் உள்ளது. அவ்வாறு சிறிய குடியிருப்புகள் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களுடன் அமைக்கப்படும் இது வடக்கு கிழக்கின் குடிபரம்பலை மாற்றி அமைக்கும் நோக்குடன் செய்யப்படவில்லை. அவ்வாறான நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை.

தேசம்: இலங்கையில் இனப் பதட்டத்தை தீர்ப்பதற்கு அதனை ஏற்படுத்திய சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என நேற்று றோயல் கொமன்வெல்த் சொசைட்டியில் இடம்பெற்ற உரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இனப்பதட்டமற்ற சூழலை உருவாக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

பா உ ரஜீவ: இந்த இனப்பதட்டத்தை உருவாக்கியதில் மொழி முக்கியமானது. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவரப்பட்டது மடமைத்தனமானது. அதனைப் பின்னர் மாற்றி அமைத்த போதும் அதனை ஆட்சிக்கு வந்தவர்கள் சரிவர அமுல்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்று அதனை அமுல்படுத்துகின்றோம். இளையவர் மட்டத்தில் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் தெரியாமல் பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பில்லை. ஏற்கனவே அரசதுறைகளில் உள்ளவர்களை வேலைநீக்கம் செய்ய முடியாது. ஆனால் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டுகிறோம்.  

பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியிலான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது தவறு. அது பிரதேச ரீதியான தரப்படுத்தல் ஆன போது கொழும்பும் பாதிக்கப்பட்டது. ஆனால் அங்கு வேறு கல்வி வாய்ப்புகளும் தனியார்துறை வேலை வாய்ப்புகளும் இருந்தபடியால் அங்கு குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசதுறை மட்டுமே இருந்ததாலும் வேறு கல்வி வாய்ப்புகள் இல்லாததாலும் அவர்களை பிரதேச ரீதியான தரப்படுத்தலும் கடுமையாகப் பாதித்தது. இன்று யாழப்பாணத்திற்கு இத்தரப்படுத்தல் உதவுகின்றது.

எதிர்காலத்தில் எமது கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான ஆலோசணைக் குழுக்கள் பாராளுமன்றதில் உள்ளது. தமிழ் கட்சிகள் இவற்றில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர். ரிஎன்ஏ யும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். முன்னைய அரசாங்கங்களில் எல்லோரும் அமைச்சர்களாக இருந்த நிலை இப்போது இல்லை. பின்வாங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றக் குழுக்கள் விவாதங்களையும் ஆலோசணைகளையும் வழங்குகின்றன.

நாட்டினுடைய சட்டம் சமத்துவமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொலிஸ் படைகளில் தமிழ் பொலிசார் இணைக்கப்படுகின்றனர். இராணுவப் படையணியிலும் 25 வீதமானவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 10 வீதமானவர்கள் என்றாலும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

எல்ரிரிஈ இன் ஊடுருவல் இருக்கலாம் என்பதால் படையணியில் இன்னமும் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் என்னிடம் குறிப்பிட்டதாக ஞாபகம். ஆனால் இராணுவ அலுவலர்களாக தமிழர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாட்டினுடைய கட்டுமானங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மக்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மன்னாரில் உள்ளவர்களுக்கும் திருகோணமலையில் உள்ளவர்களுக்கும் இடையிலேயே தொடர்புகள் இல்லை.

மனிதவளங்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். பொதுத் துறைகளில் உள்ளோர் கண்ணியமாக உரையாட வேண்டும். கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

தேசம்: நேற்று உங்களது உரையில் நீங்கள் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதை வரவேற்பதாகக் கூறி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: நிச்சயமாக.

தேசம்: ஆனால் நீங்கள் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் அதிகாரங்களைப் பரவலாக்குவதில் எவ்வித ஆர்வத்தையும் காட்டவில்லை. ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்த அரசு முன்வரவில்லை.

பா உ ரஜீவ: 13வது திருத்தத்தில் சில பிரச்சினைகள் உள்ளது. வரதராஜப் பெருமாள் புலிகளின் நெருக்கடியால் தமிழீழத்தை பிரகடனப்படுத்தியது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிக்கல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் பொலிஸ் காணி அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெரிய முரண்பாடுகள் இல்லை. பொலிஸ் அதிகாரத்தை வடக்குக்கு கையளிப்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் அதனை தென் மாகாணங்களுக்கு கையளிப்பதில் சிக்கல்கள் எழும்.

மேலும் அரசுக்கும் மாகாணத்துக்குமாக வரையறுக்கப்பட்ட கொன்கறன்ட் லிஸ்ட்டில் உள்ள வரையறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டி உள்ளது.

ஆனால் கிழக்கில் மகாணசபையில் உள்ளவர்களிடம் அதனை நடாத்துகின்ற திறன் குறைவாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் எல்லாம் அவர்கள் தங்கள் எண்ணப்படி செயற்பட முடியும். ஆனால் அவர்கள் இதைக்கேட்கலாமா அரசு அனுமதிக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.

தேசம்: பொலிஸ், காணி தவிர்ந்த விடயங்களில் மாகாணசபை தன் எண்ணப்படி செயற்படலாம் என்கிறீர்கள் ஆனால் கிழக்கு மாகாணத்து பாடசாலைக்கு ஒரு ஆசிரியரையோ அல்லது அங்கு ஓடுகின்ற ஒரு பஸ் வண்டிக்கு ஒரு சாரதியையோ நியமிக்கின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் nதிரிவிக்கின்றாரே.

பா உ ரஜீவ: வடக்கு கிழக்கில் ஆளுனர் ஆட்சியே நீண்டகாலமாக இருந்தது. அதனால் ஆளுனரே முடிவுகளை எடுத்து வந்தார். இப்போது முதலமைச்சர் பதவிக்கு வந்ததும் ஒரு அதிகாரப் போட்டி நிலையுள்ளது. முதலமைச்சருக்கு ஆலோசணை வழங்குபவர்கள் தங்கள் அதிகார மேலாண்மையை நிறுவவும் பார்க்கிறார்கள். இதில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்துப் பணியாற்றினால் பலவிடயங்களைச் சர்ச்சையின்றிச் செய்ய முடியும். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்து பல விடயங்களைச் செய்கின்றனர். கிழக்கில் நிலைமைகள் பெருமளவு முன்னேற்றமாகவே உள்ளது. அதிகார குழப்பங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

தேசம்: கிழக்கு மாகாணம் மாகாண சபையூடாக இயக்கப்படுகிறது. வடமாகாணத்திற்கான தேர்தல் எப்போது நடாத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பா உ ரஜிவ: அடுத்த ஆண்டில் வடமாகாண சபைத் தேர்தலை நாடாத்தப்படும் என நினைக்கிறேன். தமிழ் கட்சிகளிடையே ஒரு உடன்பாடில்லை. வீ ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா இருவரும் உறுதியான அரசியல் உடையவர்கள். அவர்களில் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதே இல்லை. இதனால் தான் வவுனியா நகரசபையை ரிஎன்ஏ கைப்பற்றியது. அவ்வாறான ஒரு நிலை வடமாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. (இப்போது ரிஎன்ஏ இன் வவுனியா நகரசபை இயங்காதது போல வடமாகாணசபைக்கு அந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.)

இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் இனைந்து செயற்படுகின்றனர். டக்ளஸ் தேவானந்த சூழலைப் புரிந்துசெயற்படுகின்ற ஒருவர். அவர் பல விடயங்களைச் சாதித்து உள்ளார். அப்போதெல்லாம் எல்ரிரிஈ உடன் தனித்து நின்று போராடியவர். அவருடைய தைரியத்தை மதிக்கிறேன்.

தேசம்: நேற்றைய உரையில் தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்பதாகக் கூறியிருந்தீர்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த இனப்பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: சிறிய திருத்தம், ஆட்சிக்கு வந்தவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்பதல்ல அவர்களே இனப்பிரச்சிiனைக்கு காரணமாகிவிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது ஜேஆர் அரசு மேற்கொண்ட இனக்கலவரங்களே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. அந்த வகையில் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்களுடன் அன்று எனக்கு அனுதாபம் இருந்தது. 1987ல் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலுக்கு வந்த துணிவைப் பாராட்டுகிறேன். பல வருடங்களாக எல்ரிரிஈ யை எதிர்த்து அவர்கள் அரசியல் செய்துள்ளனர். அந்த தைரியத்தை நான் மதிக்கிறேன்.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்!

பா உ ரஜீவ: நிச்சயமாக! நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்கின்றனர். தங்கள் நாளாந்த வேலைகளைச் செய்கின்றனர். அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்! ஆனால் அது முடிவுக்கு வந்த முறை தமிழ் மக்களது உள்ளங்களை மிகக் காயப்படுத்தி உள்ளது. இந்த யுத்தத்தை வேறுவிதமாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பா உ ரஜீவ: 1987 முதல் எல்ரிரிஈ அனைத்து பேச்சுவார்த்தைகளையும் குழப்பி யுத்தத்தில் தீவிரமாக நின்றது. இந்த யுத்தத்தில் 2009 முற்பகுதிவரை பெரும் இழப்புகள் ஏற்படவில்லை. அதன்பின் எல்ரிரிஈ இழப்புகளை பலமடங்கு பெருப்பித்தது. அதுமட்டுமா மக்கள் மீதே எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இதனை ஐக்கிய நாடுகள் அறிக்கையே தெரிவிக்கின்றது. எல்ரிரிஈ மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்து இருக்காவிட்டால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்காது. எல்ரிரிஈ மக்களை விடுவிக்க வேண்டும் என்று உலகமே கேட்ட போதும் ரிஎன்ஏ அப்படி ஒரு கோரிக்கையை விடவே இல்லையே.

எல்ரிரிஈ போன்ற கொடிய அமைப்புடன் வேறொரு முறையில் அதனைச் செய்திருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. மக்களை மனிதக் கேடயங்களாக்கி அம்மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகமும் செல்வீச்சும் நடாத்தி பழியை எதிர்தரப்பில் போடும் அமைப்புடன் வேறுவிதமாக இந்த யுத்தத்தை முடித்திருக்க முடியாது.

தேசம்: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பா உ ரஜீவ: அவர்களிடம் இருந்து வடக்கு கிழக்கை விருத்தியடையச் செய்வதற்கான உதவிகளை எதிர்பார்க்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அரசாங்கத்திறகும் இடையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நிச்சயமாக ஒரு 10வீத முரண்பாடுகள் உண்டு. அதே சமயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய விடயங்களில் அரசாங்கத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் 90 வீதமான விடயங்களில் உடன்பாடுகள் உண்டு.

அவர்கள் உடன்படாத விடயங்களில் உதவ வேண்டியதில்லை. ஆனால் தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைப்பது போன்ற விடயங்களில் அவர்களும் ஈடுபட முடியுமே. மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கலாம். அதனை அவர்கள் அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டியதில்லையே நேரடியாகவே செய்யலாமே. இவ்வாறு பலவாறாக அவர்கள் தங்களுக்கு உதவலாம் அதற்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது.

தேசம்: 2020இல் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளில் இலங்கை எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பா உ ரஜீவ: சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். விவசாயமும் ஏனைய துறைகளும் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்து விளங்கும். கல்வித்துறையும் புதிய கல்விக் கொள்கையையும் புதிய கட்டமைப்புகளையும் கொண்டு சிறந்து விளங்கும். இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்.

”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஓகஸ்ட் 13, 2010 படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான வடிவம்.

கேள்வி நேரம்

டாக்டர் ரொஹான் பெரேரா: திரு ஆனந்தசங்கரி அவர்களே! உங்களிடம் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவது கேள்வி போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் நிலவியது. ஜனாதிபதியாகவும், முப்படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரியாகவும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் இருந்தார். அவரிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. அநேநேரத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்த ஒருவர் இருந்தார். பாரம்பரியமாகவும், காலங்காலமாகவும் எமது நாட்டில் நிலவிவந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் சமாதான பேச்சவார்த்தைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து அல்லது சிந்தனை உண்டு. அதேநேரத்தில் இத்தகைய ஒரு அரசியில் சூழல் நாட்டின் அதி முக்கிய தேசிய பிரச்சினையொன்றில் தெற்கிலுள்ள இரண்டு பிரதான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வினை எடுக்க கிடைத்த ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்று ஒரு சிந்தனை அல்லது கருத்து உண்டு. ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.

எனது அடுத்த கேள்வி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றியது. இவர்கள் எவ்வாறு யுத்தத்தின் பின்னரான சமாதான முயற்சிகளுக்கு உதவ முடியுமென நினைக்கின்றீர்களா?

இந்த இரு விடயங்களிலும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

திரு. வீ. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஜனாதிபதியாக ஒரு கட்சியை சார்ந்தவரும் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்தவரும் இருந்தது ஒரு முக்கிய பிரச்சினையே. போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு இதுவே முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். நட்டின் தலைவருக்கும் பாராளுமன்ற தலைமைக்குமிடையே புரிந்துணர்வு இருக்கவில்லை. இது அழிவுக்கு இட்டுச் செல்லும் என நாம் உணர்ந்திருந்தோம். பாராளுமன்றத்தில் கண்காணிப்பாளர்களை விமர்சிக்க தொடங்கினார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு இவையும் காரணிகளாக அமைந்தது.

எனினும் ஒப்பந்தத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகளின் ஆணவப் போக்கே. அவர்களது ஆணவத்திற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறினால் நீங்கள் சிரிப்பீர்கள். எனது பாராளுமன்ற சகாவான திரு. சம்பந்தன் அவர்களிடம் ஒருமுறை கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும்படி அழைப்பு விடுத்தால் நான் அவரைச் சந்தித்து அவர் கேட்பதற்கெல்லாம் ஆம் ஐயா என்று கூறிவிடுவேன். அதுபோல் வகுப்பாசிரியர் என்னை சந்திக்க அழைத்து சிலவற்றை செய்யும்படி கூறினால் என்னால் செய்ய முடியுமா?  இதைக் கேட்டு திரு. சம்பந்தன் பல நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தார். நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் கூப்பிட்ட போதெல்லாம் நாங்கள் போய் அவர் கூறியபடியே கேட்டு நடந்தோம். அது பரவாயில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டனுப்பிய போதும் விருப்பமின்றியேனும் ஒரு தடவை சென்று பார்த்தேன்.

இப்போது என்னவென்றால் மக்களின் உரிமைகளை பறித்தவர்களும், சிறுவர்களை கைதுசெய்து புலிகள் இயக்கத்தில் சேர்க்கும் சாதாரண பேர்வழிகள் தம்மை வந்து சந்திக்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் இப்போது இராணுவ உளவுப் பிரிவில் ஒரு பெரிய ஆளாக இருக்கின்றார்.

முன்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஒரு கட்சியும் செனட் சபையில் பெரும்பான்மையாக இன்னொரு கட்சியும் இருந்தபோதும் இதே பிரச்சினை இருந்தது. இதனால் செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது. இங்கும் நாட்டின் தலைவரும் பாராளுமன்ற தலைவரும் ஒரே கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிலைமை சீராக இருந்திருக்கும். போர் நிறுத்த ஒப்பந்தமும் சிறப்பாக அடுல்படுத்தப்பட்டிருந்திருக்கும்.

மற்ற விடயம் வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் பற்றியது. இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். நீங்கள் ஏன் கே.பி என்னும் மனிதனின் பின்னால் செல்ல விரும்புகின்றீர்கள்? கே.பி யிடம் 09 பேரே உள்ளனர். நீங்கள் ஒரு சாதாரண புலி ஆதரவாளரை கேட்டால்  அவர் கடையிலோ அல்லது பாரிஸ் நகரத்திலோ  நூறு பேரை திரட்டித் தருவார். அபிவிருத்தி வேலைகளுக்கு வேறு எவரையும் கூட்டி வருவதாக கே.பி கூறியதாகத் தெரியவில்லை.

அதேசமயம் நாடுகடந்த அரசு ஒன்றினை நிறுவுவதற்கு பல்வேறு நாடுகளில் ஒரு குழு தேர்தலை நடத்துகின்றது. அவரையும் இங்கு கூட்டிவந்து “ நீ இங்கு வந்து ஏதாவது செய், ஆனால் அரசியலில் இறங்காதே திரும்பிவந்து உனது நாட்டில் அமைதியாக வாழப் பழகிக்கொள் “ எனக் கூறினால் அதில் அர்த்தமுண்டு. அத்தகையவர்களே நமக்குத்தேவை. அதைவிடுத்து இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சகல அராஜகங்களுக்கும்  காரணமானவர்கள் நமக்குத் தேவையில்லை. இவர்களின் பணமும் பாவப்பட்ட பணம். போதைப்பொருள், கடத்தல், சித்திரவதை ஆகியவை மூலம் பெறப்பட்ட பணம். இப் பணம் எமக்கு தேவையில்லை.

மக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குங்கள். ஆறு மாதங்களில் அவர்கள் தமது வாழக்கையை மீளமைத்துக் கொள்வார்கள். உறுதியளிக்கப்பட்ட நட்ட ஈடுகளை அவர்களுக்கு வழங்குங்கள். இழந்த உயிர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தான் பெற்றுக் கொடுப்பேன் என ஒருமுறை ஜனாதிபதி கூறினார். நட்ட ஈடு இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் வழங்கலாம்.

கிளிநொச்சியில் ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்து உயர்ரக மோட்டார் வாகனங்களையும், லாரிகளையும் வைத்திருந்தவர்களும் பெரியளவில் வர்த்தகம் செய்தவர்களும் 100 ஏக்கர் காணிக்கு மேல் விவசாயம் செய்து கோடீஸ்வரராக இருந்தவர்களும் பின்னர் ஒருவேளை உணவுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசையிலே காத்திருக்க நேரிட்டது. 2,  3 வாரங்களுக்கு முன்னர் பரந்தனிலிருந்து தர்மபுரம் வரையிலான இடங்களுக்கு சென்றிருந்தேன். சாதாரணமாக என் கண்களிலிருந்து கண்ணீர் வராது. அத்தகைய கல்நெஞ்சன் நான். அதற்காக என் தந்தை என்னோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

நான் சென்ற இடங்களில் கண்டது யாதெனில் அங்குள்ள நிலைமை இடம்பெயர்ந்து முகாம்களில் அவர்கள் இருந்தபோது இழந்ததைவிட மோசமானதாகும். அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நள்ளிரவில் பாரிய மழை பெய்ய தொடங்கியது. திடீரென்று விழித்தெழுந்த நான் இந்த மக்கள் இப்போது என் செய்வார்கள் என எண்ணி அழுதேன். இவற்றை ஒருவரும் உணர்வதில்லை. நுளம்புச் சுருள் இன்றி அங்கு என்னால் ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது. ஆனால் இந்த மக்கள் வெட்ட வெளிகளில் எவ்வாறு எவ்வளவு காலம் வாழ்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இலகுவாக இவற்றை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். இங்கு மூலதனம் செய்ய விரும்புவோருக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுமென விளம்பரப்படுத்துங்கள். உங்களுக்கு எதற்காக கே.பி?. அவருக்கு ஏன் இத்தனை வசதிகள்? அவருக்கு தண்டனை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. அவரை தன்பாட்டில் விட்டுவிடுங்கள். அவரை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

திருமதி மனோகரி இராமநாதன்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களின் மனம் இன்னும் வெல்லப்படவில்லை. இதற்கு உங்கள் கருத்து என்ன?

திரு. ஆனந்தசங்கரி: அவர்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். யாழ்ப்பாணத்தில் இன்று யாரிடமேனும் இந்த அரசாங்கம் நல்லதா? அல்லது ஐ.தே.க அரசாங்கம் நல்லதா என்று கேட்டால் ஒருவரும் வாய்திறக்க மாட்டார்கள். ஏன்? யாழ் பல்கலைகழத்தை திறந்து வைக்க சிறிமாவோ அம்மையார் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீரமகாகாளி அம்மன் கோவிலடியில் நாங்கள் ஒரு சத்தியாக்கிரகத்தை ஏற்பாடு செய்தோம். மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் இருக்கும்படி கூறினோம். அம்மையாரும் வந்தார். சத்தியாக்கிரகமும் நடந்தது. இன்று அவ்வாறு செய்ய முடியுமா?

இன்று கிளிநொச்சியில் 750 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் தமது சொந்த இடங்களில் குடிமயர்த்தப்படுவதாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அவர்களின் காணி இராணுவ முகாமுக்கு மிக அண்மித்ததாக இருக்கின்றது. காடுகளை அழித்தே அவர்கள் இந்த விவசாய காணிகளை உருவாக்கினர். இவர்களில் பலர் அகதிகளாக பல்வேறு தோட்டப்பகுதிகளிலிருந்து வந்த இந்திய வம்வாவளி மக்கள். இந்த 750 குடும்பங்களில் 250 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மிகுதி 500 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காணிகளுக்கு இவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தம்மை சுட்டு கொல்லுங்கள், தம்மை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என இந்த மக்கள் கதறுகின்றனர். அவர்களின் காணி அரச தேவைக்கு வேண்டுமாம். அரச தேவைக்கு வேறு இடங்களில் காணிகள் இல்லையா? அவர்கள் எமது மக்களின காணிகளை அபகரிக்க வேண்டும்?

அரசாங்கம் செய்யக்கூடியது இதுதான். இராணுவத்தை உடனடியாக அகற்றி சிவல் நிர்வாகத்தை அங்கு ஏற்படுத்த வேண்டும். சில சிறந்த அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். கிளிநொச்சியில் ஒரு நல்ல அரசாங்க அதிபர் இருந்தார். ஏதோ காரணங்களை காட்டி அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தர். அவரை விடுவித்து கிளிநொச்சிக்கு திரும்ப அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரினேன்.  ஆனால் அவரை பல மாதங்களள் தடுப்புக்காவலில் வைத்திருந்து பின்னர் அண்மையில் அவருக்கு பரிச்சயமற்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக அனுப்பியுள்ளனர். அவரை கிளிநொச்சிக்கே அனுப்பியிருந்தால் இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாக பணியாற்றியிருக்க முடியும்.

மக்கள் இப்போது சுதந்திரமாக இல்லை. அவர்களின் முதல் தேவை தாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. அவிருத்தி அல்ல. எங்கள் நிலதத்pல் எங்களை சுதந்திரமாக  வாழ விடுங்கள். அல்லது எம்மை சுட்டுத்தள்ளுங்கள் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை. நான் தேசபக்தியுடையவன். இந்த மண்ணை நேசிப்பவன். இந்த உணர்வு சிறுவயது முதலே எனது இரத்தத்தில் கலந்துள்ளது. இது ஈழமும் அல்ல கொழும்பும் அல்ல. இது எனது சொந்த பூமி. நான் இங்கு வாழ விருமபுகின்றேன். அதுதான் உண்மைநிலை. வெளித்தோற்றத்தில் ஏமாந்து விடாதீர்கள். விசேடமாக யாழ் மாவட்டத்தில் யுத்தத்தால் மிகக் குறைந்த வீடுகள் மாத்திரம் சேதமடைந்தன. அங்கு இசை, நடன நாடக விழாக்கள் அரங்கேறுகின்றன. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லுங்கள். அவைதான் யுத்தத்தால் முற்று முழுதாக அழிந்த இடங்கள். அங்குதான் அபிவிருத்தி தேவை. ஆனால் அவர்கள் தமக்கு அபிவிருதி தேவையில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்களை தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய விடுங்கள். அவர்கள் ஆறு மாதங்களில் தமது சொந்தக்காலில் நிற்பார்கள்.

திரு எச். எம்.ஜி.எஸ். பனிக்கார்: விடுதலைப் புலிகளுக்கு விரோதமாக இருப்பது அநாகரிகமாக கருதப்பட்ட அந்த நாட்களில் நீங்கள் உங்கள் உயிரையும் பணயம் வைத்து அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். எனவேதான் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சுதந்திரமாக உள்ளார். ஆனால் 10,500 பேர் போராளிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற உங்கள் உணர்வினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது உங்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்ப்பட்ட அரசியல் வாதிகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை இந்த காலக்கட்டத்தில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 10,500 பேரையும் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அவர்கள் கட்டாயத்தின் பேரிலாவது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்கள் தற்போதும் தடுப்புக் காவலில் உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு சில தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எனது அடுத்தக் கேள்வி யுத்தம் இராணுவ ரீதயிhக முடிவுக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வாறு தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் உதவ முடியும்?

திரு. ஆனந்தசங்கரி: அன்று தமிழ் காங்கிரஸ், தமிரசுக் கட்சி என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன. அபேட்சகர்கள் தகுதி அடிப்படையில் தமது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சயனைட் குப்பிகளை முன்னர் அணிந்திருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். இது எமது முக்கிய பின்னடைவு. இது பற்றி நான் மேலும் கூறினால் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுததலாம் என கருதுகின்றேன்.

தமிழ் கட்சிகளிடையே ஒத்த கருத்தினை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்ற முடிவில் இருக்கின்றது. இக் கட்சிகள் கடந்த காலங்களில் எனக்கு இழைத்த தீங்குகளையும் அவமானங்களையும் மற்று மக்களின நலனுக்காக நான் ஒன்றுபடத் தயராக இருக்கின்றேன். தற்போது உயர்ந்த கோட்பாடுகளை பேசுவோர் கடந்த ஆறு வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு தற்போது தமிழ்சமூகத்தை பாதுகாக்கப் போவதாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனினும் மக்களுக்காக முன்னிலையில் நிற்பவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தை முன் வைத்தால் தமிழ் மக்கள் அந்த வேலைத்திட்டத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்று எனக்குத் தெரியாது. நாடு கஷ்டத்தை எதிர்நோக்கினால் மக்களும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும். நான் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுடன் வாழந்திருக்கின்றேன். மூவின மக்களுக்கு கற்பித்திருக்கின்றேன். சிங்கள மக்கள் மிகவும் இணக்கப்படானவர்கள். தவறு அவர்களின் தலைமையில். முஸ்லீம் மக்களும் இணக்கப்பாடானவர்கள். தவறுகள் அவர்கள் தலைமையில். தமிழ் மக்களும் அவ்வாறே இணக்கப்பாடானவர்கள். தவறு அவர்களின் தலைவர்களே. மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் காலங்காலமாக ஒன்றாக வாழந்து வந்துள்ளனர். எனது நண்பர்கள் சிங்களவர்களே. அதேபோன்று முஸ்லீம் சமூகத்தினரேடையும் நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எனவே தவறு சமூகங்களின் தலைமைகளிலே அன்றி மக்களில் இல்லை. நான் இதை கூறுவதற்கு தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனினும் அவர்களுக்கும் எனது கருத்தில உடன்பாடு இருக்குமென நம்புகின்றேன்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களை பற்றி ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் யாவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றே கூறினார். பின்னர் ஓரிரு நாட்களேயாயினும் பயிற்சி பெற்றோம் என ஒப்புக் கொண்டோர் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களை விடுவிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என உறுதி மொழி பெற்றுவிட்டு அவர்களை பெற்றோரிடம் ஒப்படையுங்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் துணிந்து செயலாற்ற வேண்டும்.

பிரபாகரனுக்கு அடுத்த ஆளாக இருந்த 200,000 பேர் கொலை செய்யப்பட்டதற்கும் எண்ணற்றோர் கண்பார்வையை இழந்தும் அங்கவீனமுற்றும் பல பெண்கள் தமது இரு கால்களை இழந்து தவழ்ந்து செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்திய கே.பி போன்ற குற்றவாளிகளை பொறுத்தவரை நாம் துணிந்து முடிவுகளை எடுக்க முடியுமானால் ஏன் இந்த அப்பாவி இளைஞர்களையிட்டு நாம் ஓர் முடிவு எடுக்க கூடாது. நடந்தவை யாவற்றிற்கும் பொறுப்பாளி ஒருவர் இருப்பாரெனில் அவர் கே.பி யே. கே.பியை நீங்கள் நம்புவதால் இந்த இளைஞர்களை ஒன்றில் நீங்கள் விடுதலை செய்யுங்கள் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களின் பெற்றோரின் உத்தரவாதத்துடன் அவர்களை பிணையில் செல்ல விடுங்கள்.

இன்னும் விடுவிக்கப்படாத பல்கலைகழக மாணவர்கள் உள்ளனர். ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குழுக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு விடுவிக்கக்கூடியோரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விடுதலைப் புலிகளுக்கு தேனீர் கொடுதோரும் உணவு வழங்கியவர்களும் இன்று தடுப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் உணவை சாப்பிட்ட மனிதன் இன்று சுதந்திரமாக இருக்கின்றார்.

தலைவர்: நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்றால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளுடன் எத்தகைய தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்பதனை விசாரித்தறிவதற்கு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் பங்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலோ அவர்களை விடுவித்து அவர்களை சமூகத்ததுடன் இணைக்க வேண்டும். நீங்கள் அப்படித்தானே கூறுகின்றீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: ஆம் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படலாம்.

தலைவர்: ஆம் பல குழுக்கள்

திரு. எ. பி பரணகம: மொழிப்பிரச்சனை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.

திரு. ஆனந்தசங்கரி: மொழிப்பரச்சினை ஏற்பட அதிக அளவு தவறு செய்தோர் அரசியல்  தலைமைத்துவங்களே. 1956 வரைக்கும் எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திரு. சண்முகம் அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். எனது தம்பி சிங்களம் கற்றார். சோமஸ்கந்தா கல்லூரியில் எனது தந்தையார் அதிபராக இருந்தபோது பட்டதாரியான ஒரு பிக்குவிடம் நான் சிங்களம் கற்றேன். காலஞ்சென்ற கே.பி இரத்காலக அவர்கள் கல்வி கற்ற ஹாட்லி கல்லூரியில் திரு. சோமரத்ன என்பவர் சிங்களம் கற்பித்தார். யாழ் இந்துக் கல்லூரி கீதத்தை கேட்டால் அதில் “சிங்களமும் தமிழும்” என்ற வரிகள் வருகின்றன.

பின்னர் என்ன நடந்தது? சிங்கள மாத்திரம் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. அநேகமான பாடசாலைகள் தனியார் பாடசாலைகளானபடியினால் இது சாத்தியமாயிற்று. பரீட்சார்த்தமாக வேறு பாடங்கள் கற்பிக்க ஈடுபடுத்தப்பட்ட இந்த சிங்கள ஆசிரியர்களின் சேவை ஒரு வருடத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. சிங்களம் மாத்திரம் சட்டம் கொ:டுவரப்பட்டிருக்காவிட்டால் ஒருவேளை எனது இந்த சமர்ப்பித்தலை நான் சிங்கள் மொழியில் செய்திகருக்க கூடும்.

தலைவர்: சிங்களமும் தமிழும் பாடவிதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று நீங்கள் கூறுகின்றீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: மொழி பிரச்சினைக்கும் இனப்பிரச்சினைக்கும ஏற்றதோர் தீர்வு கண்ட பின்னரே அத்தகைய ஏற்பாடு சாத்தியமாகும். சிங்கள, தமிழ் மொழி கல்வி தீர்வுத திட்டத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மொழிப் பிரச்சினையையோ இனப்பிரச்சினையையோ தீர்க்காமல் சிங்கள, தமிழ் கல்வியை நீங்கள் கட்டாயமாக்கினால் அது செயலற்றதாகி விடும். நான் எப்போதும் கூறுவது என்னவெனில் “சமாதானம் எமது கதவை தட்டுகிறது.’ கதவைத் திறந்து அனைத உள்ளே அனுமதிப்பதோ அல்லது கதவை சாத்துவதோ எமது கைககளிலதான் உள்ளது.

தலைவர்: பல்கலைகழகங்களில் சேர்வதற்கு சிங்களம், தமிழ் அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். என நீங்கள் கருதுகிறீர்களா?

திரு. ஆனந்தசங்கரி:ஆம் நிர்வாக சேவையில் சேர்வதற்கு மொழித்தேர்ச்சி கட்டாயமாக இருந்தது என்று எனக்கு ஞாபகம்.

திரு. எம். பி பரணகம: கட்டியெழுப்ப கலாச்சார தொடர்புகளை எவ்வகையில் பிரயோசனப்படுத்தலாம்

திரு. ஆனந்தசங்கரி:அவ்வாறு கருதுவது தவறானது. முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த 100 யுவதிகளுக்கு நடனப் பயிற்சியளித்து அவர்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். இது அந்த யுவதிகளின் மனோநிலைநிலையை பற்றி அறியாமல் செய்யப்படும் காரியங்கள். அவர்கள் வாழ்வில் பெரும் துன்பங்களை சந்தித்தவர்கள். அதில் அநேகமானோருக்கு தமது தாய், தந்தையர் எங்கேயெனத் தெரியாது. தமது குடும்பங்களில் பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். வீடு பற்றி எரியும் போது அல்லது பக்கத்து வீட்டில் ஒரு மரணச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் இசைமழையில் திளைப்போமா? நான் ஒரு இசை விரும்பி. சிங்களம் தமிழ் அல்லது வேறு எந்த மொழியானாலும் இசையை ரசிப்பேன். ஆனால் அதற்கு கால நேரம் உண்டு. அண்மையில் யாழ் நாடக மன்றம் இரு வாரங்களுக்கு நாடகவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எமது அயலவர்கள் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது நாம் இத்தகைய விழாக்கள் நடத்துவது முட்டாள்தனமாகது என அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அவர்களும் எனது நியாயங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் திட்டத்தை கைவிட்டனர்.

நான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்று விடிய விடிய நாடகங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் அதற்குரிய நேரதம் இதுவல்ல. மக்கள் வீடின்றியும், உணவின்றியும் எதுவித வசதிகளுமின்றி வாழும் போது அவர்களின் குழந்தைகள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.

தலைவர்: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

தலைவர்: தற்போது வடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தொலைகாட்சி போன்ற மின் ஊடகங்களை பயன்படுத்தி ஆங்கிலக்கல்வியை மேற்கொள்வது பற்றி உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: அதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் கல்வி கற்ற நாட்களில் இந்தியாவிலிருந்து பல பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த சிறப்புடன் சேவையாற்றினர். எனவே நாம் ஆங்கிலக் கல்வியை ஆரம்பிக்கும் போது அந்த வகையிலும் முயற்சிக்கலாம்.

திரு. எச்.எம்.ஜி.எஸ். பணிகக்கார்: வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடிமயர்த்தி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த விடயம் ஒரு நிபந்தனையாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இது அன்றைய அரசு விட்ட தவறு. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது முஸ்லீம் மக்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்க வேண்டுமென புலிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். புலிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக பாராளுமன்றத்தில் இருந்த குழுவினரும் இந்த வேண்டுகோளை புலிகளுக்கு விடுத்திருக்க வேண்டும். முஸ்லீம் மக்கள் வெளியேறும் போது ரூபா 500 மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முஸ்லீம்களில் பல கல்விமான்கள் இருந்தனர். எனது நண்பரான திரு மக்பூல் ஒரு சிறந்த தமிழ் – சைவ அறிஞர். தேவார திருவாசகங்கள் யாவும் நன்கறிந்தவர். அவர் மன்னார் அரச அதிபராக இருந்தபோது புலிகளால் கொல்லப்பட்டார்.

பேராசிரியர் கரு. ரங்காவத்த:  நீங்கள் எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வந்துள்ளீர்கள். அதனை நான் பாராட்டுகின்றேன். ஆனால் ஏன் தமிழ் சமூக ஆர்வலர்கள், நான் அரசியல் தலைமைத்துவங்களை கூறவில்லை. செயலற்று இருக்கின்றார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் சமூகத்துக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். இவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதும் தடைகள் உண்டா? ஏன் எல்லாவற்றுக்கு அரசாங்கத்தை வேண்டிநிற்கிறார்கள்.

திரு. ஆனந்தசங்கரி: அவர்கள் சுயமாகச் செயல்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லையென்றே கூறுவேன். வடக்கில் எண்ணற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. அவர்கள் அரச அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியாத நிலை. கிளிநொச்சி மாவட்டம் எனக்கு பரிச்சயமான மாவட்டமாகையால் எதுவித ஊதியமும் இன்றி அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என அரசிடம் தெரிவித்தேன்.

தமிழ்த் தலைவர்களின் தனிப்பட்ட அபிலாசைகள் தமிழ்ச் சமூகத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நான் அன்று ஒத்துக்கொண்டிருந்தால் இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக, அதுவும் இந்த 15 பராளுமன்ற உறுப்பினர்களின் தலைவனாக இருந்திருப்பேன். நானும் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனாலும் அதை நான் வெளிப்படையாக கூறுவதில்லையென சகபாடி ஒருவர் ஒருமறை என்னிடம் கூறினார். நான் எனது மக்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கிளாலியிலிருந்து மல்லாவி வரை கிராமம் கிராமமாக வீடுவீடாக நடந்தே சென்றுள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து நான் வழக்காடுவதை நிறுத்தினேன். எனது பாராளுமன்ற வாழ்க்கையை சமூகப்பணிகளுக்காக அர்ப்பணித்தேன். வேறு எதற்காகவும் அல்ல.

திரு. எச்.எம்.ஜி..எஸ். பணிகக்கார்: நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு  பாதிக்ப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல் எவ்வாறு உதவும் என நீங்கள் நம்புகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: முதலில் நாங்கள் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். இப்போது அவர்களிடம் போய் நாங்கள் இதனை தருவோம் அல்லது ஒரு பாதை போட்டு தருவோம் என்று கூறினால் அதில் அவர்களுக்கு அக்கறையிருக்காது. அவர்கள் முதலில் தமது சுதந்திரத்தையும் தமது மூன்றுவேளை உணவைப் பற்றியுமே சிந்தித்த வண்ணம் உள்ளனர். தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள் நம்ப வேண்டும். நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை சென்று பார்ப்பிர்களாயின் அங்கு வசந்தம் இல்லை. உத்துர வசந்தமும் இல்லை. அது பெயரளவில் மாத்திரமே உள்ளது எந்த அபிவிருத்தியும் அங்கு இல்லை.

தலைவர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள். இந்த நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: கிளிநொச்சி மக்கள் குடியேற்றப்பட்ட ஒரு விவசாய பூமியாகும். காலப்போக்கில் இந்த குடியேற்றவாசிகள் செல்வந்த விவசாயிகளாக மாறினார்கள். கிளிநொச்சி ஒரு வளமிக்க மாவட்டமாக மாறியது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த மாற்றத்தை கண்டேன். குடிசைகள் யாவும் அழகிய வீடுகளாக மாறின. இப்போது அவர்கள் சகலவற்றையும் இழந்து விட்டனர். நீங்கள் இதனை நேரில் சென்று பார்க்கலாம். இதற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. அவர்கள் மந்தைகள் போல் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டியடித்தனர். அவர்களை தப்ப விட்டிருந்தால் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்து சென்றிருப்பர்.

இறுதியில் அவர்கள் மாத்தளனை அடைந்தபோது  அவர்கள் உடுத்தியிருந்த உடைமையைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. பலர் தமது நகைகளை விட்டுட்டு வந்தனர். ஏனெனில் அவர்கள் ஐந்து சவரன் நகைகளுக்கு மேல் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அபோபோன்று ரூபா 5000 இற்கு மேல் எடுத்துவரவும் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்து சென்றபின் அங்கு அதிகளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சான்றுகள் உண்டு.

தலைவர்: எனவே நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற நட்டஈடு வழங்குவது அரசின் கடமையாகும். முதல் தடவையாக ரூபா 5000 வும் 2ம் தவணையாக ரூபா 20,000 கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சிலர் மூன்றாம் தடவையாக ரூபா 50,000 வை பெறுவதாக கேள்விப்படுகின்றேன். சகலவற்றையும் இழந்த மக்களுக்கு இது எவ்வாறு உதவும்? மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகூட அரச பணததிலிருந்து வழங்கப்படவில்லை. அது உலக உணவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படுகின்றது. உழவு இயந்திரத்தை இழந்த ஒருவருக்கு அதற்கு மாற்றீடாக விவசாய உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஏதுவாக அவர்களுடைய நட்டஈடு அமைய வேண்டும். வீட்டின் மேல் கூரையும் உணவும், உடையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

முறிகண்டி கோவிலிலிருந்து கிளிநொச்சிவரை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட யன்னல்களும் கதவுகளும் மிகப் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்துக்கு வீடுகள் கட்ட இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தமக்கென வீடுகட்டியோர் வீதிகளில் இருக்கும் போதும், அகதி முகாம்களில் அல்லல்படும்போதும் இராணுவத்திற்கென தயார் நிலையில் வீடுகள் கட்டப்படுகின்றன. காணிக்கு உரிமையாளர்கள் இருக்கும் போது அக்காணிகள் இராணுவத் தேவைக்கு எடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நீங்கள் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றீர்கள்.

இந்த நாடு ஒரு சுதந்திரமான பாதையில் செலலப் போகின்றதா? சுகல மக்களும் சம அந்தஸ்துடன் வாழப் போகின்றார்களா? அல்லது இந்த நாட்டின் ஒருபகுதி மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இராணுவ அமைப்பின் கீழ் அல்லல்பட போகின்றார்களா? என்பதை நாங்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருதுகின்றேன்.

தலைவர்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! நீங்கள் இங்கு வந்து எமக்குத் தெரிவித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி உங்கள் தனித்தன்மையையும் சுதந்திர போக்கையும் வெளிப்படையான கருத்துக்களையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். நீங்கள் தெரிவித்த கருத்துக்களால் நாம் நிச்சயம் பயனை அடைந்துள்ளோம். நாங்கள் எமது சிபாரிசுகளை தயாரிக்கும் போது நீங்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்திற்கெடுத்து கொள்வோம்.

திரு. ஆனந்தசங்கரி: இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தமைக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் எனது கருத்துக்களால் உங்களுக்கு ஏதும் அசௌகரியம் ஏற்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர்: அவ்வாறு ஏதும் இல்லை

திரு. ஆனந்தசங்கரி: உங்களுக்கு எனது நன்றிகள்.