2006 முற்பகுதியில் மாவிலாறு தொடங்கி 2009 புதுமாத்தளன் வரை தொடரும் யுத்தமானது கடந்த மூன்றாண்டுகளாக எம் தமிழ்பேசும் மக்களை நிர்க்கதியாக்கி, வாழ்வியல் ஆதாரங்கள் எதுவுமே அற்று, தமது சொந்த நிலப்பரப்புக்களை இழந்து, உற்றம் – உறவு – சொந்தம் – பந்தமென உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து எம் சொந்த நாட்டிலேயே அகதிக் கூட்டங்களாக மரணத்துள் வாழ்வதாக்கி உள்ளது. இதில் இலங்கை அரசின் இனவாத அழிப்பும் – புலிப் பயங்கரவாதத்தின் ஏகபிரதிநிதித்துவ தலைமை வெறியும் முட்டி மோதிக்கொள்ளும் நிலையில் தொடரும் இந்த யுத்தம் எமது மக்களைத் தான் பயணக் கைதிகளாக வைத்துள்ளது.
இலங்கை அரசின் இனவாத யுக்திகளைப் பார்ப்போமானால் நாடு சுத்ந்திரமடைந்த கடந்த 60 வருடங்களில் பிரித்தாளும் தந்திரங்களை பல வழிகளில் தமிழ் பேசும் மக்களின் மீதும், அப்பாவி சிங்கள பாமர மக்கள் ஊடாகவும் செயற்படுத்துகின்றது.
முதலாவதாக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிற்குள் அத்துமீறி, ஆனால் சட்ட ரீதியான ஆவணங்களை உருவாக்கி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தமிழ் கிராமங்களின் எல்லைப் பிரதேசங்களில் ஏற்படுத்தியது. இந்தக் குடியேற்றும் சிங்கள மக்களையும் இனவெறியுட்டி ஆதிக்க உணர்வுகளை அடிப்படையாக்கி அந்தந்த கிராமத்திற்கு உள்ளேயே பழைய தமிழ் மக்களுக்கும், குடியேற்றிய புதிய சிங்கள மக்களுக்கும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி முரண்பாடுகளை வளர்த்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே இனவெறியைத் தூபமிட்டு இலங்கைப் பேரினவாத அரசு காலத்திற்கு காலம் இரு கட்சி ஆட்சிமாறினாலும் இவ்விதமாக ஒரே திட்டமிட்ட இன ஒடுக்குமுறையைத்தான் செய்கின்றது.
இக்குடியேற்றமானது, தமிழ் பிரதேசங்களை மிக மோசமாக துண்டாடப் பண்ணி தமிழ் மக்களின் விகிதாசார கணக்கெடுப்புக்களையும் பரவலாக ஐதாக்கி, அந்தந்த பிரதேச உரிமைகளையும் தனித்துவத்தையும் சிதறுறச் செய்துள்ளது. இதனால் எமது சொந்தப் பிரதேசத்திற்குள் எமக்குள்ள முன்னுரிமையையும், குடிசன மதிப்பீட்டு விகிதாசாரப்படி இழக்கப்படுகின்றது.
எனவே இத்திட்டமிட்ட குடியேற்றமானது நன்கு திட்டமிட்டு, இனவாதிகளால் காலத்திற்கு காலம் வளர்க்கப்படுகின்றது. எனவே இந்த அடிப்படைப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வேண்டிய முதலாளித்துவ தமிழ் தேசிய தலைமைகளும் இதனை சரியாக கையாளவில்லை. காலத்திற்கு காலம் தமது தேர்தல் பிரச்சாரங்களில் இக்குடியேற்றப் பிரச்சனையை மெதுவாக தொட்டுச்சென்று காய்களை நகர்த்தியுள்ளனர்.
மொத்த்தில் குறித்த சில தமிழ் சிங்கள முதலாளித்துவ தலைமைகள் பெரும்பான்மையான பாமர தமிழ் சிங்கள தமிழ் மக்களை தமது அரசியல் ஆதாயங்களுக்காக இன மத மொழி பிரதேச முரண்பாடுகளை களையாமல் பகடைக்காய்களாக பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் இனமுரண்பாடுகளின் ஆணிவேர்களை அன்றே களைபிடுங்கியிருந்தால், இரு இனத்தவர்களும், ஏனைய இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் சமத்துவம் – சமாதானம் – சகோதரத்துவமாக தத்தமது இறைமைகளை பாதுகாத்துக்கொண்டு ஒரே நாட்டில் சகல உரிமையுள்ள பிரஜைகளாக கூடி வாழ்ந்திருக்கலாம்.
ஆனால், இந்த 60 வருடத்தில் அகிம்சைப் போராட்டம் கூடர்மையடைந்து, ஆயத போராட்டமாக மாறி, இன்று ஏகப்பிரதிநிதித்துவ தலைமையால் பயங்கரவாதமாக எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் நாம் போராட்டம் தொடங்கிய ஆரம்ப புள்ளிக்கே போய்விட்டோமோ என அங்கலாய்க்க வேண்டியுள்ளது.
இந்த ஆயுதப்போராட்டம் தனித் தலைமை வழிபாட்டை மையப்படுத்திய சர்வாதிகாரத் தன்மையினால், மறுப்க்கத்தில் இலங்கைப் பேரினவாத அரசை – பௌத்தசிங்கள இனவாத கொள்கையை செழுமைப்படுத்த வழிகோலியுள்ளது. இதன் மூலம் இலங்கையரசு பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு தனது நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பிரித்தாளும் தந்திரோபாய வேலைத்திட்டங்களை திறம்படவே செயற்படுத்தி இனசுத்திகரிப்பை நடாத்தி வருகின்றது.
இரண்டாவதாக, இந்த பிரித்தாளும் தந்திர அரசு, தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகள் அல்லது தலைமைகளிடையே முரண்பாடுகளை தூபமிட்டு வளர்த்தோ அல்லது சலுகைகளின் மூலமாக விலைபேசக் கூடிpயவர்களை விலைபேசியோ தமது செயற்பாட்டை நகர்த்துகின்றது.
இதில் புலிகளின் பயங்கரவாதத்தால், தமிழ் தலைமைகள் அங்கிருந்து தப்ப, இலங்கையரசின் பாதுகாப்பை நாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்கள் புலிப் பயங்கரவாதத்hதிற்கும் இலங்கையரசின் இனவாத காய் நகர்த்தலுக்கும் இடையில் அகப்பட்டு தத்தளிப்பது மட்டுமல்லாது பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்களின் சந்தேகப் பார்வைகளுக்கும், கேள்விக்குறிகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்;. இதனால் கனிசமான தமிழ் மக்களிடமிருந்து இத்தமிழ் கட்சிகள் அந்நியப்படுத்தப்படுகின்றன.
இதே நிலைதான் தமிழ் முஸ்லீம் இனக் குழுக்களிற்கிடையேயும் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டு இனஉறவுகள் சிதைக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் உதாரணமாக அண்மைக் காலத்தில் “சிங்களகெலல உரிமைய’ வினதும் – இலங்கையரசினதும் சதிப்படி வட – கிழக்குப் பிரிவினையும், அதன்;சட்ட அமுலாக்கலும் அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கிழக்கில் நடந்த தேர்தல் கூத்துக்களும் ஆகும்;.
இதில் இலங்கையரசு, ரீ.எம்.வி.பி.யை தத்துப் பிள்ளையாக்கி, தேர்தல் மூலம் தமது நிகழ்ச்சி நிரலை அப்படியே பிரதியிட்டு நடாத்துவதும்,படிப்படியாக தமது வெற்றிலைச்சின்ன கட்சியான ஐக்கிய முன்ணணிக்குள் இவர்களை உள்வாங்கியவையும் உலகறிந்த உண்மைகள். கிழக்கு பிரிவினையானது கிழக்கின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதே என இவர்களெல்லலாம் கூறி ‘சட்டத்தாலும் கிழக்கைப் பிரித்து தேர்தல்களாலும் வென்றுவிட்டோம் இனி தனித்துவத்தை முன்னெடுப்போம்’ என்று கூறிக்கொண்டு இன்று நடப்பவை என்ன?
ரீ.எம்.வி.பி. கட்சியிலிருந்து கருணா உட்பட 3000 பேரை மகிந்த சிந்தனையும் அதன் இலங்கையரசும் உள்வாங்கி அதற்கு பிரதியுபகாரமாக கருணாவை அமைச்சே இல்லாத அமைச்சராக்கி ரி.எம.வி.பி கட்சியை சுக்கு நூறாக உடைத்து கிழக்கு பிரதிநிதித்துவங்களை நிர்மூலமாக்கி உள்ளது. இந்த அமைச்சரவையில் இணைந்த கருணாவால் விடிந்த கிழக்கில் உடனடியாக 60 சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகங:கள் பரவலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சராசரி மாகாண சபைக்குள்ள உரிமைகளான பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட கிழக்கு மாகாணசபைக்கு வேண்டாம் என கருணாவால் முன்மொழியப்பட்டு இருக்கின்றது. இவையெல்லாம் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தை முழுமையாக விலைபேசித் தமது சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கு தகுந்த சாட்சியமே.
இந்த விளையாட்டில் முதலமைச்சர் பிள்ளையான் தற்போ பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டார். கருணாவைப் போல் முற்றுமுழுதாக மகிந்தாவின் கட்சிக்குள் உள்வாங்க முடியாத நிலையில் பிள்ளையானின் உயிரும், பதவியும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.
எனவே எப்படி விடிந்த கிழக்கில் கிழக்கின் தனித்துவம் என்று சொல்லப்பட்ட ரி.எம்.வி.பி. கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டு பிள்ளையான் – கருணா என்ற தலைமைகள் உடைக்கப்பட்டு, அக்கடசிக்குள்ளேயே குழுத்தலைமைகள் பகை முரண்பாட்டோடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே கிழக்கின் பிரதிநித்துவம் என்றவர்கள் தங்களுக்குள்ளே தாங்களே முட்டி மோதி ஆயுதத்தையும், அதிகாரத்தையும் கையிலெடுத்து ஆளை ஆள் கணக்குத் தீர்க்கின்றனர். எம் கையைக் கொண்டே எம் கண்கள் குருடாக்கப்படுகின்றது. இவ்வாறே தொடரும் காலங்களில் கிழக்கில் தமிழ் முஸ்லீம் இனக்குழுக்களிடையே இலங்கை அரசு வழக்கமான கைங்கரியத்தை செயற்படுத்தும் என்பதை விரைவில் கிழக்கு மக்கள் உணர்வார்கள்.
இலங்கை அரசின் விடிந்த கிழக்கின் அவலங்களைத்தான் வடக்கு வசந்தத்திற்கும் பிரயோகிக்க தகுந்த நேரத்தையும் – அதற்கான தேர்தல் உத்திகளையும் செய்யத் தொடங்கிவிட்டது.
எனவே இலங்கையரச பயங்கரவாதம் இப்படியென்றால், புலி பயங்கரவாத செயற்பாடுகள் இத்தனை வருடமாக இன்னும் இன்னும் எந்த மக்களைப் பற்றியும் சிந்திப்பதில்லையென இந்நிமிடம் வரை செயற்படுகின்றது.
கடந்த காலங்களில் நடந்த பேச்சு வார்த்தைகளில் கூட புலிகள் எம் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்னெடுக்கக்கூடிய எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதாவது சர்வதேச அழுத்தங்களால் இலங்கையரசுக்கும் – புலிகளுக்கும் இடையில் நடந்த எல்லா பேச்சு வார்த்தைகளையும் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்தாமல் உருப்படியற்ற நிபந்தனைகளை ஒவ்வொரு பேச்சுவார்த்தை மேசையிலும் வைப்பதால் குறிக்கோளை தவறவிட்டனர். பேச்சு வார்த்தைக்கு வரவேண்டிய தகுதியான பிரதிநிதிகள் சிலர் புலிகளுக்குள்ளோ, அல்லது அதன் சார்பான மூத்த தலைமைகள் ‘தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளோ’ இருந்தும் அவர்களை முன்னிலைப்படுத்தாமலோ, என்றும் அரசியல் தந்திரோபாயங்களை முன்னெடுக்காமல் ஏகபிரதிநிதித்துவ ராணுவப் போக்கிலே மட்டுமே சர்வதேச அரங்குகளையும் கொச்சைப்படுத்தினர். இவ்வாறான பல நிகழ்வால் சர்வதேச நாடுகள் மட்டத்தில் புலிகள் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
இப்படியே தமிழ் பேசும் மக்களை இலங்கையரசும் – புலிப் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தை நாடகங்களையும், யுத்த நிறுத்தத்தையும் பின் உலக நாடுகளில் நிதி வசூலிப்பதையும் தொடர்ந்து, தமது ராணுவங்களை பலப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு கோடிக்கசணக்கான பணத்தை, நாட்டையே அழிப்பதற்காகவே பயன்படுத்தி உள்ளனர்.
ஆனால் கிழக்கில் தொடங்கிய மனித யுத்தம் வன்னியின் குறுகிய நிலப்பரப்புவரை வந்தும் முடிவுக்கு வந்தபாடில்லை. வன்னிப் பிரதேசங்களில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோராக்கப்பட்டு உள்ளனர்.
கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து, உறுப்புக்கள் உள்ளேயும் வெளியேயும் சிதைந்து, மனம் பேதலித்து, உறவு பந்தங்களை பிணக்குவியல்களிலும் பங்கர்களுக்குள்ளும் விட்டுவிட்டு ஓடித்திரிந்து, உயிர்மட்டும் மிஞ்சியிருந்தாலும் தறகாலிக கூடாரங்களும், தட்டேந்தி வாழும் அவலநிலையும் நிரந்தரமா? அவர்களின் உடல் – உள நிலைகள் எப்படியிருக்கும்? இப்படி யுத்தத்தின் ரணங்களால் எப்படி எல்லாம் இந்த சமூகம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த இருதரப்பிலும் கூட ராணுவம் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் இளைஞரை நாளாந்தம் யுத்த முனைகளில் பறிகொடுத்தும் அங்கயீனர்களாக்கியும் அனாதைப் பிணங்களாக விட்டுச் சென்றும் போh முரசம் கொட்டுகின்றார்கள். இரு தரப்பும் மாறிமாறி எண்ணிக்கைகளை வீரப் பிரதாபங்களாக வெற்றி கொண்டோம், முன்னேறுகின்றோம் என பீற்றிக் கொண்டாலும் இந்த பயங்கரவாதத்தால் நாட்டின் பொருளாதாரங்கள், வளங்கள், உற்பத்திகள் எங்கே போய்விட்டன?
எனவே நாட்டு மக்கள் தத்தமது இறைமையுடன் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ வேண்டுமென்றால் யுத்தம் உடனடியாக ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும்.
யுத்தம் இடைநிறுத்தம் என்ற போர்வையில் இருபக்க யுத்தத்திலும் தமது இழப்பை ஈடுசெய்ய – அல்லது சிறு இடைநிறுத்தி தமது யுத்த பலங்களை அதிகரித்துவிட்டு தொடர்ந்தும் யுத்த கோரப்பசிக்கு மக்களை காவு கொடுக்க வேண்டுமா? இதுவரையில் இழந்தவை அடுத்தடுத்த தலைமுறையிலும் ஈடுசெய்யக் கூடியவைகளா? எனவே, இலங்கையரசோ புலிகளோ வெறும் யுத்த நிறுத்தம் மூலம் மட்டும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்னெடுக்க முடியாது என்பது உண்மையே.
ஏனெனில் இருதரப்புமே இதுவரை
1) மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஏகபிரதிநிதித்துவ தலைமைவெறியுடன் யுத்தததை நடாத்தி நாட்டு மக்களை காவு கொடுப்பதுதான் தொடரப்போகின்றது.
2 மனித உரிமை மீறல்களை அடுக்கடுக்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்து வருகின்றது.
3) கருத்துச் சதந்திரம், ஊடகச் சுதந்திரங்களை 3ம் தரப்பினர்க்கும், பொதுமக்களுக்கும் எதிராக காலத்திற்குக் காலம் நடாத்திவருகின்றது.
4) ஜனநாயக கருத்துக்களுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ இடம் கொடுக்காமல் அராஜக வடிவங்களை அத்தனை வழிகளிலும் இதுவரை பிரயோகித்து வருகின்றனர்.
5) தம் மக்களை மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலோ அன்றி சர்வதேச மனிதாபிமான அழுத்தங்களுக்கோ செவி சாய்க்காமல் தமது ஆதிக்க வெறியையே நிலைநிறுத்த செயற்படுகின்றது.
6) தமது இருப்புக்களை மட்டுமே நிலைநிறுத்த யாரையும் – எதனையும் பலிகொடுக்கத்தயாராக உள்ளனர். ஏனெனில் நாளை இவ்விரு தரப்புக்குள் மட்டுமே ஓர் உடன்படிக்கையுடன் (புலிகள் பலமிழந்து நிhந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருவது தொடர்ந்தால்) பேச்சுவார்த்தை நடந்தால் தமது சுய இருப்பை நிலைநிறுத்த எதனையும் செய்வார்கள். அதனை ராஜதந்திரமென்று வேறு சொல்வார்கள்.
ஏனெனில் இதே விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் இணைந்தே 1989ல் வட கிழக்கிணைந்த மாகாண சபையையும், அதை முன்நகர்த்திய இந்திய அரசையும் நிராகரித்து செய்த அட்டுழியங்களையும் இதனை முன்னெடுத்து செயற்படுத்திய ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்தமையும் எமது தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் இந்தளவு அழிவுக்கும் ஒட்டுமொத்த காரணமென்பதை வரலாற்றில் மறக்க முடியுமா?
7) கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை மட்டுமே மையப்படுத்தி எம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்காத ஒரு நிலையை நாம் அனைவரும் கருத்திற் கொண்டு இனியும் இந்த இருதரப்பையும் நம்பிக் கொண்டிராமல் இருதரப்பும் சாராத அல்லது இருதரப்பையும் இதுவரை நம்பி இழந்த அங்குள்ள தமிழ் தலைமைகளும், புலம் பெயர்நாடுகளிலுள்ள புத்திஜீவிகள் – முற்போக்காளர்கள், மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுமான பிரதிநிதிகளும், கிழக்கு அரசியலில் கூட அண்மைக் காலத்தில் இலங்கையரசால் துண்டாடப்பட்டு அங்குள்ள மக்களிடமிருந்து அந்நியப்பபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல சக்திகள் கூட எமது சிறு முரண்பாடுகளை மறந்து கொண்டோராக இவர்களுமாக எம் மக்களுக்கான விடிவுக்காய் சர்வதேச அரங்கிற்கு உண்மையான பிரச்சனைகளை முன்னிறுத்தி செயற்பட அனைத்து இப்படியான சக்திகளும் சேர்ந்து உடனடியாக ஒரு கூட்டுத்தலைமையை உருவாக்க வேண்டிய கடமைபாடுகளின் கடைசி விழிம்பில் நிற்கின்றோம்.
ஏனெனில் இருதரப்பையுமே நம்பி; ஏமாந்த நாம், மூன்றாவது தரப்பொன்று உருவாக்கவேண்டி எல்லோரும் சிந்தித்தாலும் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் இந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிடில் இந்த வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் பிழையான சக்திகளினாலேயே எமது மக்களின் போராட்டம் தொடர்ந்து கூறுபோடப்பபடும்.