கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மலையகம் 200 ஆண்டுகள் – தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகளை விட மோசமாக உறிஞ்சிய அரசியல்வாதிகள் !

இன்றைய தேதிக்கு இலங்கைக்கு டொலர்களை  கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான துறைகளாக 03 T காணப்படுகிறது.

Textiles and Garments
Tea Factories
Tourism
இவற்றுள் ஆடை உற்பத்தியும் சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகளும் அண்மை கால இலங்கையில் பெரிய அளவிற்கு வெளிநாட்டு வருவாயை பெற்று தந்தாலும் பிரித்தானியர் இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலப்பகுதி தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவிலான பொருளாதார லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு துறையாக தேயிலை உற்பத்தி துறை காணப்படுகின்றது.
No photo description available.
இந்த தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பு மலையக தோட்டங்களில் கடந்த 2 நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும்  தென்னிந்திய வழ்சாவழி மக்கள்  என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் இலங்கைக்கு கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பாரிய விழாக்களை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த அதே நாளில் என் கண்ணில் இன்னுமொரு படமும் தென்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளியின் மகளான பாடசாலை மாணவி ஒருத்தியின் கிழிந்த சப்பாத்து. இந்த மக்களை அநாதைகளாக்கிய – உழைப்பை சுரண்டிய அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ – இவர்களுக்காக – இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஓடாய் தேய்ந்த மக்களின் நிலை இன்று வரை இந்த மாணவியின் கிழிந்த சப்பாத்து போலவே காணப்படுகின்றது. இன்று நாம் காணும் சுற்றுலாத்தளமாக – இலங்கையின் பொருளாதார மையமாக மலையகம் மாறியிருந்தாலும் கூட அந்த பகுதிகளின் காடுகளை வெட்டி – அவற்றை பொருளாதார உற்பத்திக்கான நிலமாக மாற்றி – மனிதர் நடமாட கூடிய பகுதிகளாக மாற்றிய இந்த மலையக தோட்டத்தொழிலுக்காக வந்த மக்கள் இன்று வரை நம்மால் தோட்டக்காட்டான் என விழிக்கப்படும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.
பிரித்தானியர் கால இலங்கையில் கோப்பிச்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து குறைந்த ஊதியத்திற்காக வேலை செய்ய மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வரப்பட்டனர்.   கோப்பிச்செய்கை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து அதற்கு மாற்றாக தேயிலை பெருந்தோட்ட பயிராக இலங்கையில் அறிமுகமானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி பிரித்தானியருக்கு லாபம் அளித்த நிலையில் அதனை மேற்கொண்டு முன்நகர்த்திச் செல்வதற்காக இன்னும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்த நிலையில் தேயிலை செய்கையை விருத்தி அடையச் செய்வதற்காகவும் – அங்கு குறைந்த ஊதியத்திற்கோ அல்லது ஊதியம் இல்லாமலோ  வேலை செய்வதற்கான தொழிலாளர்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பிரித்தானிய அரசு  கொத்தடிமைகளாக இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு வந்து குடியமர்த்தியது.
200 வருட மலையக மக்களும் 150 வருட தேயிலையும் – மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவை
காலனித்துவம் என்பது 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் மலிந்து போயிருந்த நிலையில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய தமிழர்கள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதுடன்  அவர்களின் உடல் உழைப்ப சுரண்டப்பட்டதுடன் உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.
அத்துடன் அங்கு வாழ்ந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் பிரித்தானியரால் எதுவிதமான கவனத்திலும் கொள்ளப்படவில்லை.  இது பிரித்தானியருடைய காலகட்டத்தில் நீண்டு கொண்டே இருந்தது. கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் அடைக்கப்பட்ட லயங்களில் எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதிகளும் அற்ற ஒரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு கல்வி வசதிகளோ – சுகாதார வசதிகளோ – பொருளாதார உற்பத்தி செயற்பாட்டுக்கான அடிப்படை வசதிகளோ எவையுமே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காலனித்துவ கால இலங்கையில் மலையக மக்களின் இழிவான நிலை கண்டு கொள்ளாது  விடப்பட்ட போதும் சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையிலும் கூட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கவனிப்பாரற்ற நிலையிலே காணப்படுகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுபவர்களாகவும் – கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையில்  தீர்வு திட்டங்கள் தருவதாக கூறி உருவாக்கப்பட்ட அத்தனை அரசியல் திருத்தங்களின் ஊடாகவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் நடைபெற்ற அத்தனை தமிழ் –  சிங்கள இனக் கலவரங்களின் போதும் பெரும் பாதிப்பை சந்தித்த ஒரு இனமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் மிகப்பெரிய வலிமை உடைய மக்கள் கூட்டத்தினராக காணப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட வகையில் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இது மிகப்பெரிய ஒரு நீட்சியான கதை.
1931 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம்.
1948 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு சட்டம்.
.1949 ஆம் ஆண்டின் இந்திய- பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்.
1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டம்.
1958 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறை தாக்குதல்கள்.
1964 ஆம் ஆண்டின் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்.
1971 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த சட்டம்.
1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் பிரிவை நீக்கிய ஏற்பாடு.
1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த திருத்த சட்டம்.
1974 ஆம் ஆண்டின் சிறிமா – இந்திரா உடன்படிக்கை.
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பு.
1978 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1979 ஆம்ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1980 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1981 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1983 ஆம்ஆண்டு கறுப்பு ஜீலை இன வன்முறை தாக்குதல்கள்.
1984 ஆம் ஆண்டு இரத்தினபுரி தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள்.
1986 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இன வன்முறை தாக்குதல்கள் (தலவாக்கலை)
1994 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் உருவாக்கம்.
என தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினராக மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குறிப்பிடலாம்.
பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்
இலங்கையில் கணிசமான அளவிற்கு சிங்களவர்களும் கூட  தோட்டங்கள் உருவான  ஆரம்ப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களாக காணப்பட்டனர். ஆனால் இன்று சிங்களவர்கள் யாருமே தோட்டத் தொழிலாளர்களாக இல்லை. அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை பொறுத்து மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றியது. சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றிய இதே அரசாங்கங்கள் மலையகத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக விட்டுவிட்டனர்.
இந்த அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வளர்த்தெடுப்பதாக கூறிக்கொண்ட மலையக கட்சிகள் இன்று வரை அந்த மக்கள் சார்ந்த எந்த முன்னேற்றத்தையும் வழங்கவில்லை. மாறாக அந்தக் கட்சிகளின் ஆட்சி முறை தென்னிந்தியாவில் நடப்பது போல குடும்ப ஆட்சியாக மாறியதுடன் – மலையக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் ஆடம்பரமான பாடசாலைகளில் படிக்க இவர்களை நம்பி ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலையக மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் இல்லாத தாய்மொழி பாடசாலைகளின் அரவணைப்பில்லாது லயங்களை அண்மித்துள்ள சிங்கள பாடசாலைகளிலும் –  முஸ்லீம்  பாடசாலைகளிலும் கல்வி கற்க ஒதுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலை பல இடங்களில் இன்று வரை நீடிக்கின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் மட்டுமே வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றும் போக்கே நீடிக்கின்றது.
மலையக மக்கள் மத்தியில் தொடரும் அடிமைமுறைகள்.
அண்மைய தரவுகளின் படி மலையக மக்களிடையே மந்த போசணை அதிகரித்துள்ளதாகவும் – மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது எல்லா துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் மலையக மக்கள் பின்தங்கிய ஒரு வாழ்வியலையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முறையான பாடசாலை வசதிகள் இல்லை – தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை –  பாடசாலைகள் இருந்தாலும் பாடசாலையில் கற்பித்தல் கருவிகளின் குறைவு – விளையாட்டு மைதானங்கள் இன்மை – சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் இல்லை – முறையான பாதை வலையமைப்பு வசதிகளில்லை –  முறையான தொலைதொடர்பு வசதிகள் இன்மை – முறையான சுகாதார வசதிகள் இன்மை என இலங்கையின் ஏனைய இடங்களுக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய இந்த சலுகைகள் கூட மலையக தோட்டப்புறங்களில் கிடைப்பது எட்டாக்கனியாகியுள்ளது.
No photo description available.
அண்மையில் சமூக வலைதளங்களில் பெரிதாக ஒரு படம் பேசு பொருளாகியிருந்தது. ஒரு மாணவி கிழிந்த சப்பாத்து  அணிந்திருப்பது தான் அந்த படம். இலங்கையில் இலவச கல்வி என ஒரு பக்கம் இலங்கையின் கல்விமான்கள் மார் தட்டி கொண்டாலும் கூட அந்த இலவசக் கல்வி  கூட மலைகள் சிறுவர்களை சென்றடைவதற்கு பல தடைகள் இன்று வரை காணப்படுகின்றன.  பாதை வசதிகள் முறையாக இல்லாததால் பல கிலோமீட்டர் நடந்தே பாடசாலைக்குச் செல்லும் துர்பாக்கிய நிலை இன்றும் மலையகத்தில் உள்ளன. ஒரு அவசரநிலையில் மருத்துவ சாலைகளுக்கு செல்வது கூட இந்த பாதை வசதிகள் இன்மையால் தடைப்பட்டு விடுகின்றது.
இப்படியான ஒரு நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய ஒரு அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அதாவது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை ஒரு விழாவாக கொண்டாடும்படி ஜனாதிபதி அறிவித்திருந்தார். இன்று வரை அந்த மக்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் ஏனைய பகுதி மக்களோடு ஒப்பிடும்போது மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உத்தரவை வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு விழாவை கொண்டாடும் படி கூறுவதும் – அதனை மலையக அரசியல்வாதிகள் பெருமையான விடயமாக  அதைகாவிச்சென்று மக்கள் மத்தியில் கூறுவதும் – விழா எடுப்பதும் –  அந்த மக்கள் எத்தனை தூரம் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு.
Jeevan Thondaman steps down - Breaking News | Daily Mirror
கோட்டபாய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் என்ற மிகப்பெரிய ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தனர். கோட்டபாய ராஜபச்கவுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தே  மக்களிடமிருந்து பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். புதிய பாராளுமன்றம் பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் கூட இன்று வரை அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் கிடைக்கவில்லை. இதே நிலைதான் சுதந்திரம் அடைந்த இலங்கையில் இருந்து இன்று வரை நீடிக்கின்றது.
இலங்கையின் பல துறைகளிலும் வேலை செய்யக்கூடிய எல்லா தொழிலாளர்களுக்கும் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமே. அண்மையில் கூட ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரி போராட்டங்களை மேற்கொண்ட போது அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. இவ்வாறெல்லாம் இருக்கும்போது மலையகத் தோட்ட தொழிலாளர்கள் கேட்கக்கூடிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுப்பது அரசாங்கத்துக்கு என்ன சிக்கல் இருக்க போகிறது..? இந்த வருட சுதந்திர தினத்திற்காக மட்டுமே 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் சண்டையே நடக்காதுள்ள  இலங்கையில் பாதுகாப்புக்கு என பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது. இவை அனைத்தும் வீணான செலவுகளே. இவற்றைக் கொண்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் பல்வேறு பட்ட வழிகளிலும் மேம்படுத்த முடியும். ஆனால் அரசாங்கம் செய்யாது.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் இருக்கக்கூடிய – கொடுக்காமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலை சற்று ஆழமாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.;
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகப்பெரியது. மலையகத் தோட்டங்களில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் பட்சத்தில் மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் இருவர் ( பெரும்பாலும் கணவன் –  மனைவி) தோட்டங்களில் வேலை செய்தால் குறித்த குடும்பத்துக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். அறுபதாயிரம் ரூபாய் சம்பளமாக அவர்களுக்கு மாதாந்தம்  கிடைக்குமாயின் அவர்களும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களைப் போல சாதாரணமான ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும். தங்களுடைய பிள்ளைகளுக்கு நிறைவான கல்வியை அவர்களால் கொடுக்க முடியும். தங்களுக்கான வீட்டு தேவைகளை யாருடைய துணையுமின்றி அவர்களால் என்ன நிறைவேற்றிக் கொள்ள முடியும். பிள்ளைகளை நன்றாக கல்வி கல்வி கற்க வைப்பதன் மூலம் கல்வி கற்ற பரம்பரை ஒன்றை உருவாக்கி – அவர்களை அரச பணிகளில் அமர வைக்க முடியும். கல்வி கற்றவர்கள் மலையகப் பகுதிகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் தேட ஆரம்பிப்பர். கல்வி கற்ற தலைமுறை ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டால் இயல்பாகவே  அந்த மக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் தோட்டங்களை விட்டு விலகி விடுவர். அதன்பின் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இவர்கள் எதிர்பார்ப்பது போல கொத்தடிமைகள் இல்லாது போய்விடுவார்கள். இதனை தடுப்பதற்காகவே இந்த அரசாங்கமும் – அவர்களோடு இணைந்துள்ள மலையக அரசியல் தலைவர்களும் பல தசாப்தங்களாக  மலையக மக்களின் உரிமைகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை மட்டுமே இந்த அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியும். இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டால்..? மலையக அரசியல்வாதிகள் எதை வைத்து அரசியல் செய்வது..?
இதுதான் மலையக மக்களுக்கான சம்பளம் அதிகரிப்பு இன்றுவரை தடைப்பட்டு நிற்பதற்கான முக்கியமான காரணம்.
மலையக மக்கள் இன்று வரை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என கேட்டால்..?
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் வேண்டும். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத வரை இந்த ஏமாற்று அரசியல் தலைமைகள் அரசியல் என்ற பெயரில் உழைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். மலையகத்தில் இயங்கி வரக்கூடிய சமூக மட்ட அமைப்புகள் முதலில் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளாந்த உணவுக்கே பெரும் பாடாக இருக்கின்ற நிலையில் நாட்கூலிகள் ஆகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது மிக கடினமான ஒரு செயலாக இருந்தாலும் இதனை மலையகத்தில் உள்ள புத்திஜீவிகள் செயல்படுத்த முன்வருதல் வேண்டும். இங்கு அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. இங்கு நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து இரவு தூக்கம் வரையான அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது இந்த அரசியலே. எனவே மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது இன்றியமையாது ஒன்றாக உள்ளது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்படும் போதுதான் தம் இரத்தத்தை உறிஞ்சுவது அட்டைகளல்ல- தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்தலைவர்களே என்பதை புரிந்து கொள்வார்கள். மலையகத்தில் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பாதைகள் காணாமல் போய்விடுகின்றன. அதில் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறன்றது. வெள்ளளைக்காரன் போட்ட பாதைகள் கூட இன்றுவரை தாக்குப்பிடிக்க மலையகத்தில் சுதந்திரத்துக்கு பின்பு தலைமையேற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் போட்ட பாதைகள் ஒர பெருமழையுடன் காணாமல் போய்விடுகின்ற நிலை நீடிக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களே.., ஆனால் அவர்கள் கார் – மாளிகைவீடு – பிள்ளைகளுக்கான வெளிநாட்டுக்கல்வி என வாழ பாவம் சாதாரண மக்கள் தமது பிள்ளைகளுக்கு  இன்றுவரை தேயிலை கொழுந்து பறிக்க பழக்கிக்கொணடிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமாயின் மக்கள் அரசியல்மயப்படுத்துவது தான் மலையக மக்கள் சார்ந்த முன்னேற்றத்துக்கான முதல் படி,
கல்விகற்ற  பட்டதாரிகள் கணிசமான அளவுக்கு மலையகப் பகுதிகளில் உருவாகி விட்டார்கள். இருந்தாலும் பட்டதாரிகளால் மட்டுமே இயக்கப்படக்கூடிய சில அமைப்புகளே மலையகப் பகுதிகளில் இன்று வரை காணப்படுகின்றன. ஏனைய பட்டதாரிகள் தாம் படித்தோம் –  தாம் கல்வி கற்றோம் –  ஒரு அரச வேலையை பெற்றுக் கொண்டோம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமூகம் சார்ந்த செயல்பட முன் வருதல் வேண்டும். குறிப்பாக மலையக பகுதி மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி தடைப்பட்டு போகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. எனவே இந்தப் பட்டதாரிகள் இணைந்து மாணவர்களுக்கான கல்வி அறிவை குறிப்பாக  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க வருதல் வேண்டும். மலையக மக்கள் இன்றுவரை எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் இந்த பட்டதாரிகள் பலரின் சுயநல மனப்பாங்கு. பெரும்பாலான மலையகமக்கள் லயப்புற வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்கள். ஆனால் பட்டதாரிகள் பலரும் ஏனைய மக்களை காட்டிலும்  அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் – தோட்டப்புற வாழ்க்கைக்கு வெளியேயுள்ள சமூகத்தை அறிந்து கொண்டவர்களாகவும் காணப்பட்டாலும் கூட பல பட்டதாரிகளின் சுயநல மனப்பாங்கினால் தம்சார்ந்த முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சமூக முன்னேற்றத்தை மறந்துவிடுகின்றனர். கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு இருக்கக்கூடிய சமூகப்பொறுப்பு தொடர்பில் மலையக பட்டதாரிகள் விழிப்பாக இருக்கவேண்டும். புரட்சியாளர்  சேகுவேரா “கல்வியே புரட்சிக்கான அடிப்படை ” என கூறுகிறார். எனவே அந்த பொறுப்பை பட்டதாரிகள் எடுத்துக்கொள்ள வுண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சனைக்கான  தீர்வுக்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களை ஏமாற்றி வருகின்ற செயற்பாடுகளே  பல தசாப்தங்களாக நிகழ்ந்து வருகின்றன. எனவே  தொழிற்சங்கங்கள் தொடர்பிலும் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவு தொடர்பிலும்  மலையகத் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமக்கான தலைவர்களை அடையாளம் காணக்கூடிய – உருவாக்ககூடிய ஒரு களமாக தொழிற்சங்கங்களை மலையக மக்கள்பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் தேசிய இனமாக கருதி அவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை வழங்க முன் வருதல் வேண்டும். மக்களுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய உண்மையான அரசியல் தலைமைகளை மக்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி மதி மயங்காது தெளிவான தலைமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வை மலையகப் பகுதிகளில் செயற்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.  அதுவே முறையான மாற்றத்துக்கான அடிப்படையாகவும் அமையும்.
இவ்வாறாக ஒரு நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மலையகத்தை மீட்டெடுக்க முடியும்.
“ஆளும் வர்க்கம் எப்போதும் மலையக மக்களை அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்று மலையகத்தில் உருவாகியுள்ள கல்வி கற்ற மக்கள் கூட்டம் – புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டு மலையகத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை 400 ஆண்டுகள் கடந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை என்பதே நிதர்சனம்.”
“ஏனெனில் அரசியல்வாதிகளும் ஏமாற்றி பழகி விட்டார்கள் – மக்களும் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏமாற பழகிவிட்டார்கள்.”

“வடக்கின் கல்வியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப தாயக உறவுகள் ஒன்றிணைய வேண்டும்.”- EDFSL தலைவர் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தல் !

கடந்த 08.01. 2023 அன்று இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தை ஆரம்பிப்பது தொடர்பான அங்குரார்பண ஆலோசனைக் கூட்டம் இணுவில் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கைக்கான கல்வி மேம்பாட்டு மன்றம் (பிரித்தானியா ) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் வடக்கின் முக்கியமான கல்வித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்போர் – ஓய்வு பெற்றோர் – அரச சார்பற்ற நிறுவன அங்கத்தினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கான ஆசியுரையை வழங்கிய சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுகன் பேசிய போது “வடக்கின் கல்வி நிலை இன்று தனியார் டியூசன் சென்டர்களை மையப்படுத்தி நகர்வதாகவும் – மாணவர்களுக்கு ஆன்மீக கல்வியின் தேவை இல்லாது போய்விட்டது எனவும் விசனம் வெளியிட்டார். மேலும் போதைப்பொருள் கலாச்சாரத்தினுள் உள்நுழைய ஆரம்பித்துள்ள இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியதுடன் யாழ்ப்பாண பல்ககைழகமானது முற்றாக சிங்கள- முஸ்லீம் வசமாவமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியழிருந்தார்.

இந்த கூட்டம் தொடர்பில் பேசியிருந்த EDFSL ன் தலைவர் திரு. சச்சிதானந்தம் அவர்கள்  “இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம்” ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருந்தார். இதன் போது மேலும்  கருத்துரையாற்றியிருந்த அவர்,

வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பிலும் அதனை அதன் அடிக்கட்டுமானத்திலிருந்து வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் – இதற்கு கல்வி நிர்வாகத்தில்  செயற்படக்கூடிய அனைவருடைய ஒத்துழைப்பின் தேவை  தொடர்பிலும் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்தார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள உறவுகளிடம் இருந்து இன்னும் சில வருடங்களுக்கு பின்பு எந்த ஒரு உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய முதலாம் இரண்டாம் தலைமுறையினரே இன்று தாயக பகுதிக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை செய்பவோராக உள்ளனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள மூன்றாம்,  நான்காம் தலைமுறையினரிடமிருந்து இந்த உதவிகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் என்னைப்போல தாயகத்தில் பிறந்து – தாயக வாழ்வியலை அறிந்து கொண்டவர்கள் அல்ல. எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து பெறக்கூடிய உதவிகளை விரைந்து பெறுவதும் அதனை ஆக்கப்பூர்வமான வகையில்  தாயக கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதும் இன்றியமையாதது என வலியுறுத்தி இருந்தார்.  மேலும் கல்விச் சுடர் வெளியீடு தொடர்பான முக்கியமான விடயங்கள் பற்றியும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திருமதி செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்கள் முன்பள்ளி கல்வியின் தேவை தொடர்பிலும் அதனை வடக்கிலிருந்து வலுப்படுத்த வேண்டியதனுடைய தேவை தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையாடல்  ஒன்றை  மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து திரு . சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்களால் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பான தெளிவூட்டல் ஒன்று  இடம்பெற்றது. இதில் கருத்துரையாற்றியிருந்த சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம் உருவாக்கப்படுவதன் நோக்கத்தை பின்வரும்  தலைப்புக்களில் வலியுறுத்தியிருந்தார்.

01. முன்பள்ளிகள் தொடர்பான கரிசனையை அதிகரித்து முன் பள்ளிகளை தரமானதாகவும் – ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியதுமான  ஒரு களமாக மாற்றுவதற்காக செயற்படுதல். (முன் பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக நிதி வழங்குதல், மாணவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்)

02. ஆங்கில கல்வியை வழங்குதல். தொழில்துறையில் மிக முக்கியமான மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தை சிறுவயது முதலே வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். இதற்காக முன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடர்பான வகுப்புக்களை மேற்கொள்ளுதல் – இதற்காக British Council  உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

03. கல்வி தொடர்பான செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒரு தளமாக கல்விச் சுடர் சஞ்சிகையை வளர்த்தெடுத்தல்.

04. தாயகப் பகுதிகளில் வாழும் மக்களிடையே கல்விச்சிந்தனை தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்துதல்.

போன்ற விடயங்களை கல்வி அபிவிருத்தி குழுமம் தனது நோக்கங்களாக கொண்டுள்ளதாக திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கான அலுவலகம் தொடர்பிலும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அவற்றுக்கான நிதி திரட்டுதல் போன்ற பல விடயங்களையும் அவர் முன் வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அகில இலங்கை கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி இ.  ஜெயராஜ் அவர்கள் ” வெளிநாட்டவர்களின் நிதியை பெறுவதற்கான ஒரு கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் – வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர் சொந்தங்களின் எண்ணிக்கை 15லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பவுன்ஸ் வீதம் வழங்கினாலே வடக்கின் பின்தங்கிய நிலையை மாற்றி விடலாம். இதற்கு அரசியல்வாதிகள் முன் வந்து இந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் யாழ்ப்பாண தமிழர்கள் இன்று தன்மானம் இழந்து கையேந்தி வாழ்கின்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் எனவும் அவர் கருத்துரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வைத்தியகலாநிதி t.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றிய போது  “இன்றைய கல்விமுறையானது அகம் சார்ந்ததாக இல்லாது மிகப் பெரிய கட்டடங்களையும் – உபகரணங்களையும்  பதக்கச் சான்றிதழ்களையும் மையப்படுத்தி நகர்கின்றது. போட்டி பரீட்சைகளூடாக பல மாணவர்கள் கல்வி நிலையில் பின்தங்கியவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒதுக்கப்படுகின்ற போக்கு நீடிக்கின்றது. இது இன்று நாம் எதிர் கொள்ளக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட மிகப்பெரிய சமூக சீர்கேடுகளுக்கு அடித்தளம் இட்டு விடுகிறது. இந்தக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையின் கல்வியும் சுகாதாரமும் மிகப்பெரிய சொத்து. ஆனால் இன்று இவை பொது நலனுக்காக பயன்படுவதை காட்டிலும் இன்று  தனி நபர் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்ற போக்கு மேலோங்குகின்றது. இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

இந்த நிகழ்வில் கருத்துரையாற்றியிருந்த Face அமைப்பின் பணிப்பாளர்  A.சத்தியமூர்த்தி அவர்கள் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பிலும் – கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் – அவர்களிடமிருந்து வடக்கு தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் விவரித்து இருந்தார். இதன் போது தேசம் நெட்  திரு.த. ஜெயபாலன் அவர்கள் எழுதியிருந்த “கிழக்கில் ஒரு கல்விச் சுனாமி” என்ற கட்டுரையின் விடயங்களை மேற்கோள் காட்டி “கிழக்கின் கல்வி,  ஜெயபாலன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் கண்டுள்ளது”  என  தன்னுடைய உரையை நிகழ்த்தியிருந்தார். 

May be an image of 19 people, people standing and indoorஇறுதியாக ஓய்வு பெற்ற பிரதி பரீட்சைகள் ஆணையாளர் செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்களுக்கும் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதம்  மாணவர் அமைப்பின் அங்கத்தினர்களுக்குமிடையே முன்பள்ளி கல்வியை முன்னேற்றுவதற்கான நடைமுறைகள் தொடர்பான உரையாடலும் இடம்பெற்றதனை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமம் ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது. 

அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக – கல்வி நோக்கிய பெரும்பாய்ச்சலுக்கு அடிப்படையாக அமையும் என்பதில்  மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திரு. சச்சிதானந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது என்ற கருத்து வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் அடிப்படைக் கல்வி அதாவது மாணவர்களுக்கான முன்பள்ளி கல்வியானது நேரடியாக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வருகை தந்திருந்தோரால்  வலியுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்காக மேலதிகமான கொடுப்பனவை EDFSL வழங்குவதாக கூறியது தொடர்பில் இறுதியாக உரையாற்றிய இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளைய தம்பி துரை சிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் அதற்கு மாற்று வழிகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

 

முன்பள்ளிகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய திகதிக்கு மிக முக்கியமானது ஆக்கபூர்வமானதுமான ஒரு செயற்பாடாகும். எனவே இந்த மாற்றத்திற்கு கல்விச்சூழலில் இயங்கும் சகல தரப்பினரும் தங்களுடைய வலுவான ஆதரவை கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

இலங்கையுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166 ஓட்டங்களையும் சுப்மன் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 391 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் 42.5 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற ஜெப்ரி வென்டர்ஸே மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதை அடுத்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து உபாதைக்கு உள்ளான ஜெப்ரி வென்டர்ஸேவிற்கு பதிலாக துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட்ட போதிலும் அஷேன் பண்டாரவிற்கு பதிலாக யாரும் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி – வீணானது தசுன் சானகவின் போராட்டம் !

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி 113 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் சுப்மன் கில் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் இறுதி வரை போராடிய அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

அழகும் அதன் அரசியலும் – கிளிநொச்சி அழகிப் போட்டி கருத்தியல் நோக்கு:- கருப்புதான் எமக்கு பிடிக்கும் கலரா?

நாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு.

கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது.

இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது.

1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல்.

ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு?

ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது.

2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார்.

மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம்,
விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே.

ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல.

இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில்.
1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது.

உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க?

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறை

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் – இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான “இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்”, “எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது” என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை மிரட்டிய யாழ் பல்கலை சிற்றின்பப் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் ரவுடித்தனம் ஓடியோவில் பதிவு!

டிசம்பர் 24 நத்தார் தினத்துக்கு முதல்நாள் பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம் காலைக்கதிர் ஆசிரியரை மிகக் கீழ்த்தரமான முறையில் பேசிய ஒளிப்பதிவு தேசம்நெற் இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளதாக காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை வினவிய பேராசிரியர் சந்திரசேகரனைக் குறுக்கிட்ட வித்தியாதரன் உங்கள் பெயர் அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லையே என விளக்கி இருந்தார். மேலும் உங்களுக்கு அச்செய்தியில் தவறு இருப்பதாகத் தெரிந்தால் மின் அஞ்சல் மூலமாக அதனைத் தெரியப்படுத்துங்கள் அதற்கு பதிலளிக்கப்படும் என பல தடவை கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் நிதானமாக உரையாடிய பேராசிரியர் எஸ் சந்திரசேகரன் சிறிது நேரத்திற்குள் ஒரு தெருப்பொறுக்கியின் நிலைக்கு கீழிறங்கி தகாத முறையில் சண்டையிடவும் மிரட்டவும் ஆரம்பித்தார்.

அவ்வளவு சூடான நிலையிலும் வித்தியாதரன் நிதானமாக வார்த்தைகளை விடாமல் ஒரு ஆசிரியராக பண்பாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும் பேராசிரியர் எஸ் சந்திரசேகரம் அதட்டியும் மிரட்டியும் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக வித்தியாதரனினதும் சந்திரசேகரத்தினதும் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். பேராசிரியர் சந்திரசேகரம் பொருளியல்துறையின் தலைவரும் கூட. இவர்களே இவ்வாறு நடந்துகொண்டால் இவர்கள் வழிகாட்டும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய அந்நண்பர் இவர்களிடம் கற்று வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பணியாற்றுபவர்கள் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, டிசம்பர் 24 காலைக்கதிர் பத்திரிகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சீனாவுக்கு கற்கை நெறிகளுக்கு அனுப்புவது பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. இந்த ஏற்பாட்டை சினாவில் கற்ற பொருளியல் பேராசிரியர் பீடாதிபதி மேற்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டு இருந்தது. அச்செய்தித் தகவல் பேராசிரியர் சந்திரசேகரம் பற்றியதாக இருந்தாலும் அச்செய்தியில் வித்தியாதரனின் அரசியல் குதர்க்கம் இருந்தது. சந்திரசேகரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதில் சிற்றின்பப் பேராசிரியர் தனது மாணவிகளை மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைக்கும் பாணியில் ஒரு ஊடக ஆசிரியரை மிரட்டி இருக்கின்றார். தனது நிலையை உணரும் அளவுக்கு நிதானம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.

காலைக்கதிர் மட்டுமல்ல யாழ் பத்திரிகைகள் அனைத்துமே இந்திய முகவர்களாக செயற்படுபவை. இந்திய நலன்கள் மீறப்படுமானால் இப்பத்திரிகை ஆசிரியர்கள் அதற்கேற்றாற் போல் செய்தியை தாலித்து வதக்கி காரம் மசாலா போட்டு இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்கும் வகையில் வெளியிடுவார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாமல் பொருளியல்துறைக்கு பீடாதிபதியாக எப்படி பேரசிரியர் எஸ் சந்திரசேகரம் நியமிக்கப்பட்டார். தன் புலன்களை ஆங்காங்கு சிதறவிடாமல் கொஞ்சம் அரசியல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் அவருக்கு நல்லது என்கிறார் அவரிடம் கற்ற முன்னாள் மாணவி.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் பெயர் ஊடகங்களில் அடிபடுவது இது முதற்தடவையல்ல. சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விதவையான ஒரு முன்னாள் போராளியின் மனைவியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டமை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் சிற்றின்பப் பேராசிரியரானார். மேலும் இவரது பொருளியல் பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் இளம்குமரன் தன்னுடைய காமுகத்தனத்திற்காக கரும்புடையன் என்ற பட்டம் பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை அந்தப்புரமாக்கி வரும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களின் தொல்லை யாழ் சமூகத்தின் விழுமியங்களுக்கு பெரும் தொல்லையாகி வருகின்றது. இவர்களது காமக்குத்துக்கள் தற்போது மேலும் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டுள்ளனர். தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள், அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain Barre’ Syndrome’ (‘Guillain-Barre’ Syndrome’) பற்றிய வேலியே பயிரை மேய்கின்ற துரதிஸ்ட்டம் பற்றி த ஜெயபாலன் “தமிழ் கல்விச் சமூகம் ஒரு பார்வை” என்ற நூலை 2010இல் வெளியிட்டு இருந்தார். இந்நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளிவந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முன்னாள் பேராசிரியர் சண்முகலிங்கன் ஒரு பதவிக்காலத்துடனேயே பதவி இறக்கப்பட்டு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அது போல் கலைத்துறைக்கு பீடாதிபதியாக பெண் பேராசிரியரை நியமிப்பதே கலைத்துறைசார்ந்த மாணவிகளுக்கு ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

காமுகர்களாக மாறியுள்ள பேராசிரியர்கள் ஒரு பலம் மிக்க அனுபவம்மிக்க ஊடக ஆசிரியரோடு இவ்வளவு மோசமாக நடந்துகொண்டால் இவர்கள் பற்றி முறையிடும் இருபதுக்களின் தொடக்கத்தில் உள்ள மாணவிகளின் நிலை என்ன? மேலும் இம்மாணவிகள் தங்கள் பட்டத்தைப் பெற்று வெளியேற இந்தக் காமுகர்கள் அனுமதி வேண்டும். இதனைப் பயன்படுத்தி இந்த இளம் பெண்களை வேட்டையாட இந்த கல்வியையும் தேசியத்தையும் போர்த்துக்கொண்டு இந்த ஓ(ஆண்)நாய்கள் அலைகின்றன.

“சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும்.”- சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை !

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்கவிற்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமே இவ்வாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமை உறுப்பினர் சங்க அதிகாரி கென்னி ஜீன் மேரி அனுப்பியுள்ள கடிதத்தில்,

“இலங்கையில் கால்பந்து அதிகாரிகளுக்கான தேர்தலில் வெளியுலக தலையீடுகள் இடம்பெறுவதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது. 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பு மற்றும் காலக்கெடுவிற்கு அமைவாக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை தடை செய்வதுடன், நிதித் தடைகள் விதிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுப்பிய கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெயன் தேவா: முரண்களோடு வாழ்ந்த ஒரு மனித நேயனின் மறைவு

சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், கலை – இலக்கிய விமர்சகர், ஜெயன் தேவா என அறியப்பட்ட ஜெயகுமரன் மகாதேவன் டிசம்பர் 21 இங்கிலாந்தில் காலமான செய்தி எட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே அவர் இறுதித் தருணத்திற்கு வந்துவிட்டார் என்ற மற்றொரு செய்தியும் என்னை எட்டியது. எங்களுடைய நண்பர் ஜேர்மனியில் வாழும் அனஸ்லி, ஜெயன் தேவா சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அண்மைய நாட்களில் அவருடைன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். இறுதியில் அவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டு தற்போது மரண விசாரணை முடிவடைந்துள்ளதாக அறியக் கிடைத்தது.

1961இல் பிறந்த ஜெயன் தேவா யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனாலும் யாழ் நகரப்பகுதியிலேயே வாழ்ந்தவர். யாழ் கரவெட்டி மண்வாசனை இடதுசாரிக் கொள்கை கலந்தது எனும் அளவுக்கு அங்கு அறியப்பட்ட பல இடதுசாரிச் சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். இடதுசாரிச் சிந்தனையாளர் சண்முகதாசன் பேராசிரியர் க சிவத்தம்பி இடதுசாரி செயற்பாட்டாளர் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை தோழர் எஸ் பாலச்சந்திரன், மனோ மாஸ்ரர் போன்றவர்கள் கரவெட்டியைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அறியப்பட்ட பல புள்ளிகள் கரவெட்டி மண்ணைச் சேர்ந்தவர்கள். இடதுசாரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களில் கரவெட்டியும் குறிப்பிடத்தக்கது. சாதியத்துக்கு எதிராகப் போராடி பௌத்த விகாரையை நிறுவி கன்னொல்ல என்று பெயரிட்ட கிராமமும் சாதியத்துக்கு பலியானவர்களுக்கு தூபி எழுப்பிய கிராமமும் கரவெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மண்ணின் பின்னணியுடைய ஜெயன் தேவா யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரி, இவரும் இடதுசாரி கருத்தியலால் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. இளவயது முதலே சமூக அக்கறையோடு செயற்பட்டவர். எழுத்தாளர், விமர்சகர் என பன்முக ஆளுமையுடையவர். அன்றைய காலகட்டம் இணையங்கள் முகநூல்கள் ஏன் கைத்தொலைபேசிகள் என்றல்ல தொலைபேசித் தொடர்புகளே இல்லாத காலகட்டம். அன்றைய சமூக வலைத்தளம் பேனா நட்புகள். அந்த பேனா நட்பினூடாக ஐரோப்பியர் ஒருவர் ஜெயன் தேவாவுடன் நட்புக்கொண்டு ஐரோப்பாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை வந்திருந்தார். சமூக எல்லைகளைக் கடந்து சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து அனைவருடனும் நட்புக்கொள்ளக் கூடிய ஒருவராக ஜெயன் தோவா இருந்தார்.

அவருடைய தந்தையார் மகாதேவன் காட்டிக்கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் போராளிகளால் கொல்லப்பட்ட பல நூறு பேர்களில் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ இராணுவத்தினால் இவர் படுகொலை செய்யப்பட்டவர். எவ்வித விசாரணைகளும் இன்றி அல்லது வாந்திகளின் அடிப்படையில் தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகள், குடும்பச் சண்டைகளுக்காக காட்டிக் கொடுத்தோர் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு உயிர்கள் மதிப்பிழந்த வரலாற்றின் சாட்சியங்கள் ஜெயன் தேவாவின் தலைமுறை. துரோகிககள், மாற்று இயக்கம், மாற்றுக் கருத்து எல்லாவற்றுக்கும் மரண தண்டனை விதித்த ஒரு போராட்டத்தின் சாட்சியங்கள்.

அவருடைய முதல் மண உறவினூடு அவருக்கு ஒரு பிள்ளையும் உண்டு. இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக இந்தியவுக்கு புலம்பெயர்ந்த இவர் வெளிநாட்டு ஆட்களை அனுப்பும் முகவராகவும் செயற்பட்டு இறுதியில் தொண்ணூறுக்களில் அவர் மட்டும் லண்டன் வந்தடைந்தார். இவருடைய மணஉறவு நிலைக்கவில்லை. மணமுறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுகள் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பின் மிக நீண்ட இடைவெளியின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவு மற்றும் அதன் அரசியல் பிரிவின் தலைவியாக இருந்த தமிழினியை மணந்தார்.

ஜெயன் தேவா தமிழர் தகவல் நடுவத்துடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவத்தின் வரதரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தவர். அவரது திருமணம் பற்றி அவர் என்னோடு உரையாடிய போது தமிழர் தகவல் நடுவம் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களது நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர்பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி வரதரின் வலையத்துக்குள் வருகின்றார். அவரை விடுவித்து லண்டன் கொண்டுவர நினைத்த வரதர் தனது நம்பிக்கைக்குரிய ஜெயன் தேவாவை அணுகுகின்றார். அரசியலில் இரு துரவங்களாக இருந்தாலும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் வரதருக்கும் இடையே எப்போதும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. இவ்வாறு தான் தமிழனிக்கும் ஜெயன் தேவாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது உறவாக மலர்ந்த வேளையில் தமிழினி புற்றுநோய்க்கு உள்ளானார். அவரது இறுதிநாட்கள் எண்ணப்பட அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல தாங்கள் தீர்மானித்ததாக ஜெயன் தேவா தெரிவித்தார். அதன் பின் அவருடைய அடையாளமே தமிழினியின் கணவர் என்ற நிலைக்குச் சென்றது. இது பற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டிருந்தேன் அதற்கு அவர் தன்னுடைய அடையாளம் என்பது என்றும் தான் சார்ந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு இருந்தார். (இந்நேர்காணல் இதுவரை கானொலியாக வெளியிடப்படவில்லை. நாளை வெளிவரும்.) தமிழினி தனது கடைசிக்காலங்களில் இருந்த போது தமிழினிக்கு இருந்திருக்கக் கூடிய ஒரே ஆறுதலும் மன நிறைவும் தன்னுடை காதலன் கணவன் என்ற வகையில் ஜெயன் தேவாவின் அந்த உறவு.

தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஒரு கொலை இயந்திரமாகச் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தமிழினி. அப்புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெயன் தேவா. ‘கூர்வாளின் நிழலி;ல்” நூல் புலிகளை கடுமையாக விமர்சிப்பதாக ஒரு தரப்பு, அந்நூல் புலிகளை விமர்சிக்கவே இல்லை என மறுதரப்பு, அந்நூல் தமிழினியுடையது அல்ல என ஒரு தரப்பு, தமிழினி எழுதியதை மாற்றிவிட்டார்கள் என இன்னொரு தரப்பு, மூலப் பிரதியை கொண்டு வாருங்கள் என இன்னும் சில குரல்கள்… ஜெயன் தேவா – தமிழினி உயிருடன் இருக்கும்போது எழுப்பப்பட்ட இக்கேள்விகள் அவர்களது சுடுகட்டிலும் எழுப்பப்பட்டுக்கொண்டு தான் இருக்கும்.

ஜெயன் தேவாவிற்கும் எனக்குமான பழக்கமும் நட்பும் மிக நீண்டது. 1997 இல் லண்டனில் தேசம் சஞ்சிகை வர ஆரம்பித்த காலங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான தொடர்புகள் ஏற்பட்டத் தொடங்கியது. அன்றும் சரி இன்றும் சரி விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அரசியல் சமூக செயற்பாடுகளில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றுக் கொண்டவர்களில் ஜெயன் தேவாவும் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக தேசம் சஞ்சிகையால் நடத்தப்படும் அரசியல் சமூக கலந்துரையாடல்களில் ஜெயன் தேவா பெரும்பாலும் கலந்துகொள்வார். கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார். குறிப்பாக சினாமா தொடர்பான ஒன்றுகூடல்கள் ஜெயன் தேவா இல்லாமல் நடந்ததில்லை. சினிமா இயக்குநரும் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருமான தேவதாசனுக்கும் ஜெயன் தேவாவுக்கும் எண்பதுக்கள் முதல் நடப்பு இருந்தது. ஜெயன் தேவா கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசம்நெற் குறைந்தது ஒரு கலந்துரையாடலையாவது ஏற்பாடு செய்திருந்தது. பிற்காலத்தில் தேவதாசனை விடுவிக்க ஜெயன் தேவா சில முயற்சிகளையும் எடுத்திருந்தார். அது பலனளிக்கவில்லை.

தேசம் சஞ்சிகையிலும் தேசம் இணையத் தளமாக வந்த போது தேசம்நெற் இலும் ஜெயன்தேவா கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் லண்டன் உதயன் லண்டன் குரல் பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த போது தகவல்களை வழங்குபவர்களில் தகவல்களைச் சரி பார்ப்பதில் ஜெயன் தேவாவும் ஒருவர். பிற்காலத்தில் அவர் தாமிரம் என்கிற புளொக் சைற்றை உருவாக்கி சில பதிவுகளை இட்டுள்ளார். முகநூலூடாக அரசியல் கருத்துநிலையை தொடர்ந்தும் மரணத் தருவாயிலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இவருடைய ஆக்கங்கள் பதிவு, காலச்சுவடு மற்றும் இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது.

2016 இல் இலங்கையில் என்னுடைய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாயக்கால் வரை’ என்ற 2009 யுத்தம் பற்றிய நூல் வெளியிட்ட போது ஜெயன் தேவா நூல் பற்றிய அறிமுகவுரையை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது எழுத்தாளர் கருணாகரன் வீட்டில் தமிழக எழுத்தாளர் ஒருவரும் சந்தித்து உரையாடியது தான் கடைசியாக நாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டது.

அதன் பின்னும் ஜெயன் தேவாவின் நட்பு தொடர்ந்தது. முல்லைத்தீவில் முன்னாள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் தாய் தந்தையற்ற போராளிகளின் குழந்தைகளைப் பராமரிக்கின்றார் என்றும் அவருக்கு உதவும் படியும் கோரி இணைப்பை ஏற்படுத்தித் தந்தார். இன்று வரை கற்சிலைமடுவின் குழந்தைகளை லிற்றில் எய்ட் ஊடாக பலருடைய உதவிகளையும் பெற்று முடிந்தவரை உதவிகளை வழங்கி அவர்களை கல்விநிலையில் முன்னேற்றி வருகின்றோம். இவ்வாறு ஜெயன் தேவா புகைப்படக் கலைஞர் சுகுன சபேசன் ஊடாக சில உதவிகளை வழங்கி இருந்தார். ஜேர்மனியில் அனஸ்லி ஊடாக சில உதவி நடவடிக்கைகளைச் செய்வித்தார்.

தற்போது உதவி என்பது நாங்கள் எங்கள் பணத்தைக்கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதல்ல. உதவி தேவப்படுபவரையும் அதனைப் பூர்த்தி செய்யக்கூடியவரையும் இணைத்துவிடுகின்ற ஜெயன் தேவா போன்ற பாலங்களின் தேவை இப்போதும் உள்ளது. மக்களை இணைத்துவிடுவதும் மிகப்பெரும் சேவையே.

ஜெயரூபன் மைக் பிலிப் என்பவர் டிசம்பர் 22இல் எழுதிய இரங்கல் குறிப்புக்கு எழுத்தாளர் விரிவுரையாளர் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி எழுதிய குறிப்பு என்னை மிகவும் சினங்கொள்ள வைத்தது. ஜெயன் தேவ காலமாகி சில மணி நேரங்களுக்குள் இப்பதிவு இடப்பட்டிருந்தது. ஜெயன் தேவா ஒன்றும் தேவனுமல்ல தேவ துதனுமல்ல. எங்கள் எல்லோரையும் போல சாதாரணன். நாங்கள் ஒன்றும் கருத்தியல் பிசகாது, ஒழுக்கநெறி பிறழாது வாழும் உத்தமர்கள் கிடையாது. எம் எல்லோர் வாழ்விலும் களங்கங்கள், வடுக்கள் உள்ளது. அதற்காக எங்கள் மரணங்கள் எங்களை தவறுகளில் இருந்து விடுவிப்பதில்லை. மரணத்தின் பின்னும் காத்திரமான விமர்சனங்களில் தவறில்லை. மரணங்கள் மனிதர்களை புனிதப்படுத்துவதில்லை என நம்புபவன் நான். ஆனால் அந்த விமர்சனங்களை மொட்டைப் பதிவுகளாக்கி அதற்கு லைக் போடும் மனநிலை மிக மோசமானது.

ஒரு மனிதனை அவன் மறைவுக்குப் பின் மதிப்பிடுவதானால் அவனை அரசியல் ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள். ஒற்றை வார்த்தையில் ‘தோழரல்ல, பொய்மான், போலிகள்’ என்ற அடைமொழிகள் உங்கள் ‘துரோகி’ அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடே. சேரன் ருத்திரமூர்த்தியின் பதிவு படத்தில். “முன்னொரு காலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்” என விடுதலை வேட்கையை மொத்த குத்தகைக்கு எடுத்த சேரன் ருத்திரமூரத்தி தனது அனுதாபத்தை சில்லறையாக விட்டெறிகிறாரம். ‘தோழரல்ல. போலி. பொய்மான்’ என்று கதையளக்கும் சேரனின் மரணம் நிகழும்போது அந்த நினைவுக் குறிப்பில் “கதிரைக்கு சட்டை போட்டுவிட்டாலும் புனரும் தோழா!” என்ற குறிப்பை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால் அதற்கும் லைக் போட மார்க் சுக்கம்பேர்க் ஆட்களை உருவாக்கி இருக்கிறார். முகநூலினதும் சமூகவலைத்தளங்களினதும் வெற்றி அதுதான். நீங்கள் யாராக இருந்தாலும் கடைநிலைப் பொறுக்கியாக இருந்தாலென்ன பேராசிரியராக இருந்தாலென்ன உங்கள் உணர்வுகளைத் தூண்டி அதனை கிலுகிலுப்பூட்டி சமூக வலைத்தளத்தில் வாந்தியெடுக்க வைப்பது. நீங்கள் அதற்கு லைக் போடுகிறீர்களோ தம்ஸ் டவுன் போடுகிறீர்களோ மார்க் சுக்கம்பேக்கின் பாங்க் எக்கவுன்ட் மட்டும் எப்போதும் அப்பீற்றில் இருக்கும்.

ஜெயன் மகாதேவா தன்னுடைய உயிர் போகப்போகின்றது என்று தெரிந்த நிலையில் டிசம்பர் எழில் தனது முகநூலில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “I am too afraid to be ill because most of the doctors and nurses are too demoralised..” என்று தெரிவித்திருந்தார். பிரித்தானிய சுகாதார சேவைகளின் நிலையையும் அதற்கு பிரித்தானிய அரசு கவனம் கொள்ளாத நிலையையும் ஒற்றை வசனத்திற்குள் அடக்கிய மிகப்பெரும் அரசியல் கட்டுரை இது. பிரித்தானியாவில் றோயல் கொலிஜ் ஒப் நேர்சிங் இன் 160 வருட வரலாற்றில் முதற்தடவையாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் சுகாதார சேவைகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை 133,400 வெற்றிடங்கள். அரசு பணியாளர்கள் சங்கத்தோடு பேச்சுவாரத்தைக்கு வர மறுக்கின்றது. இங்கிலாந்தின் சுகாதார சேவைகள் ஈடாடி உடைந்துவிடும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயன் தேவா மட்டுமல்ல இவ்வாறான நூற்றுக்கணக்கான தடுக்கக் கூடிய தாமதப் படுத்தக்கூடிய மரணங்கள் விரைந்து துரிதகெதியில் நிகழும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஜெயன் தேவாவின் இந்த அரசியல் குறிப்புக்கும் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தியின் மொட்டைக் குதர்க்கத்திற்கு உள்ள இடைவெளி தான் இன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் உணர்வுநிலைப்பட்ட இடைவெளி.

பலவேறு முரண்பாடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் ஜெயன் தேவா நல்லதொரு நண்பர். மனித நேயன். சிறந்த எழுத்தாளர். விமர்சகர். அவருடைய இழப்பு எங்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவருடைய உறவுகள் நட்புகள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் – சாதனையுடன் சாம்பியனானது ஜப்னா கிங்ஸ் அணி !

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது.

தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழம்போ ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.