கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முதலாவது டெஸ்ட் – இலங்கையை இலகுவாக வீழ்த்தியது அவுஸ்திரேலியா !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

தனியார் வகுப்பு – தனித்து வகுப்பு: கணக்கு ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்த போட்ட கணக்கு! முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரத்தில் கற்கின்ற 20 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!!!

முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.

முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.

தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.

2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.

20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.

மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.

வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்க வேண்டும் – துனித் வெல்லாலகே ட்வீட் !

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

எனினும், போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்த போட்டித் தொடரில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இதற்கமைய, போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை வெல்லாலகே பெற்றுள்ளார்.

இந்நிலையில், துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில், ´வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்´ என பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் விளையாட்டுத்துறையில் அசத்தும் கிளிநொச்சி வீரர்கள் – கொமன்வேல்த் போட்டிக்கு தெரிவாகியுள்ள விட்டாலிஸ் நிக்லஸ் !

பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார்.

இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார்.

குடும்ப நிலையை கருத்திற்கொண்டு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இவரின் அதித திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிக்காண போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ளும் குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்த இலங்கைத் தமிழர் என்ற செய்தியை உலகறிய செய்வதுடன், நாட்டிற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து கொடுப்பதே தனது இலட்சியம் என அவர் தெரிவிக்கின்றார்.

தனது சாதனை பயணத்திற்கு சகோதரியும், பெற்றோருமே காரணம் என தெரிவிக்கும் அவர், இதுவரை எந்த அரசியல்வாதியும் திரும்பி பார்த்ததில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த பயணம் வரை பயிற்சிக்காக வாகன டயர் ஒன்றையே பயன்படுத்தி வருவதாகவும், தொடர் முயற்சியே இலக்கை அடைய வழி வகுப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

 

அண்மையில் கிளிநொச்சியில் இருந்து சதாசிவம் கலையரசி எனும் வீராங்கனை 19வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மார்பகங்கள் பற்றி ஆபாசமாக கிண்டல் செய்த சமூக வலைத்தளவாசிகளுக்கு என் மார்பகங்கள் தொடர்பில் பெருமைப்படுகிறேன் என பதிலளித்த ஹிருணிகா!

நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட  கைகலப்பில் ஹிருணி பிரேமச்சந்திரவினுடைய மார்பகங்கள் வெளித் தெரிந்ததாக  காணொளி ஒன்றை பதிவேற்றி சமூக வலைத்தளங்களில்  இளைஞர்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளவாசிகள் பலரும் பகிர்ந்து அதனை கேலியும் கிண்டலும் செய்திருந்தனர்.

 

இதுபோன்றுதான பதிவுகளை தமிழ் இளைஞர்கள் சிலரும் பகிர்ந்திருந்ததை  என்னுடைய முகநூல் கணக்கிலும் காண முடிந்தது. இன்றைய காணொளியை பகிர்ந்து – கிண்டலடித்த இளைஞர்கள் பலரும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் தொடர்பிலும் அப்போது அரங்கேற்றப்பட்டிருந்த பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பிலும் அதிகம் கோவப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். இது போக வித்யா படுகொலை நடந்தபோது கோவப்பட்டது போல தங்களை  காட்டிக்கொண்டவர்களாக கூட இவர்கள் இருக்கலாம்.  இதேபோன்றுதான் கேலியும் கிண்டலும் தன்இன பெண்ணுக்கு – தன் குடும்ப பெண்ணுக்கு நடந்தால் மட்டும் துடித்துப் போகும் நம்மவர்கள் அடுத்த வீட்டுப் பெண்களுக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்ன என கிண்டல் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேட்டால் அனைத்தையும் நகைச்சுவை என கடந்து போகின்றனர். இப்படியான சின்னச்சின்ன நகைச்சுவைகள் தான் பெண்கள் மீதான அடக்கு முறைகளின் ஒட்டுமொத்தமான வடிவம் என்பேன்.

இதற்கு நான் அளிக்கும் பதிலை விட ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வழங்கியுள்ள பதில் இவர்களுக்கு சாட்டையடி போல இருக்கும் என நம்புகிறேன். அவருடைய பதில்.

“I am proud of my breasts! I breastfed three beautiful kids. I nurtured them, comforted them and dedicated my whole body for them. I am sure people who make fun of my exposed breasts ( due to the clash with the police) also sucked thier mothers nipples until its raw when they were infants.

Anyway when you are done talking, making memes and laughing about my breasts , there was ANOTHER civilian died in a queue… Just so you know!

#ආසියාවේආශ්චර්‍ය් #GoHomeGota2022”

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”

– ஹிருணிகா பிரேமச்சந்திர

 

பரபரப்பான ஆட்டத்தில் 4 ஓட்டங்களால் தொடரை வென்றது இலங்கை !

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

“இன்றைய உணவுக்கு அரிசி இல்லாவிட்டால் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” – யாழில் கடை முதலாளியின் நெகிழ்ச்சியான செயல் !

இலங்கையில் நாளுக்கு நாள் உணவு தொடர்பான நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உணவு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை இதை விட பாரிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு சேமிப்பு தொடர்பில் இலங்கை மக்கள் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த கடினமான நேரங்களில் சில சில மனிதர்கள் இன்னொருவரினை புரிந்து கொள்வதே கடினமான விடயம் என்ற நிலை இருக்கையில் அடுத்தவருக்காக உதவிக்கரம் நீட்டுவது எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை.

 

பொருட்களின் விலை நாளுக்கு உயர்கிறதோ இல்லையோ – பல கடை முதலாளிகள் தங்களுடைய உழைப்புக்காக பொருட்களின் விலையை மலையளவுக்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இவர்களுக்குள் சிலரிடம் இன்னமும் மனிதாபிமானம் உயிரப்புடன் உள்ளது என்பதை காட்டுவது போல சாவகச்சேரி – பாலையடி பகுதியில் கடைவைத்துள்ள முதலாளி ஒருவர் செய்த செயல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டிருந்ததது.

 

May be an image of outdoors

கடைமுதலாளி ஒருவர் தன்து கடையின் முன்னால் அரிசியை ஒரு பெரலில் வைத்துவிட்டு “இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” என ஒரு அறிவிப்பையும் பலகையில்  விடுத்துள்ளார்.

சமகால பொருளாதார நிலையில் அடுத்தவனை பற்றியே சிந்திக்காது ஓடிக்கொண்டிருக்கும் பலருக்குள் குறித்த கடைமுதலாளியின் செயல் பலராலும் பாராட்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.

650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை !

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய   நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததது. டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததது.  ஒல்லி போப் 145 ரன்னிலும், ஜோ ரூட் 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

14 ஓட்டங்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.