கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டி – வன்னியிலிருந்து 7 வீர வீராங்கனைகள் !

ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு பயணம்

நேற்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

கோட்டா கோ ஹோம் – அவிழ்க்கப்படாத ஆனால் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுக்கள்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானகோ ஹோம் கோட்டா என்ற  போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது.

Shoplifting protest in Sri Lanka today | இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது.

இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேதியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து, தமது ஆதரவை வழங்கியிருந்தனர். அன்று முதல் சில வாரங்கள் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெளியில், கடும் மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாது, பகலிரவாக இந்த போராட்டத்தை நடத்தி வந்திருந்திருந்தனர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமொன்றை இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்திருந்தனர். குறித்த அதே நாளில் முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததததுடன் அப்போதைய பிரதமராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை அன்றைய தினம் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி, பேரணியாக காலி முகத்திடலை நோக்கி வருகைத் தந்தனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்கள், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, அமைதி வழி போராட்டம் வன்முறையாக மாறியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை அடுத்து, நாடு தழுவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

மேலும் போராட்டத்தின் போது அமரகீர்த்தி அத்துக்கோரல என்பவர் கொலை செய்யப்பட்டதுடன் இந்தக்கலவரங்களின் போது இருநூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறாக இடம்பெற்ற கலவரங்கள் அடுத்தடுத்து ராஜபக்சக்களின் ஆட்சியை ஆட்டம் காண வைத்ததது போல செய்திகளும் பகிரப்பட்டன. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷவின் தலைமறைவு, பஷில் ராஜபக்சவின் பதவி விலகல்,  அவருடைய பிரதமர் பதவி பறிக்கப்பட்டமை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றமை என பல மாற்றங்கள் அடுத்தடுத்து இடம்பெற்று விட்டன.

 

இன்னும் இவர்கள் எதிர்பார்த்த கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகவில்லை. ஆனால் போராட்டம் இன்று வலுவிழந்த நிலையிலேயே பயணிப்பதை அறிய முடிகிறது. ஆரம்பத்தில் இருந்த வேகமும் – உற்சாகமும் போராட்டக்காரர்களிடம் இல்லை. எனினும் உண்மையாக காலி முகத்திடலில் மாற்றத்துக்காக கூடிய குறிப்பிட்ட சிலர் மட்டுமே இன்னமும் அங்கு தங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

50 நாட்களை தொட்டுள்ள இந்த போராட்டம் இன்று வரை தீராத பல சந்தேகங்களையும் – முடிவில்லாத பல வினாக்களையும் இந்த போராட்டம் எழுப்பியுள்ளதையும் மறுக்க முடியாதுள்ளது.

1. இந்த போராட்டத்தை நடாத்துவது யார்..? முக்கியமாக இதனை ஒழுங்கமைப்பது யார்.?

பல நேரங்களில் தொழி்ற்சங்கங்களும் – பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கின்ற போதும் கூட போராட்டத்தை கொண்டு நடாத்த ஒருஅமைப்பு தேவைப்படுகிறது தானே..? அந்த அமைப்பு யார் ..? என்பது இது வரை தெரியவில்லை.

2. இந்த போராட்டம் யாரை எதிர்த்து மேற்கொள்ளப்படுகின்றது..?

இலங்கை வன்முறை: காலிமுகத் திடலில் அரங்கேறிய வன்முறை - படத்தொகுப்பு - BBC News தமிழ்

ஆரம்பம் முதலே பொருளாதார நோக்கமே இந்த போராட்டத்தின் அடிப்படை எனப்பட்டாலும் கூட ராஜபக்சக்களை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட  கோ ஹோம் கோட்டா, கப்புட்டா கா கா என பல ஸ்லோகங்கள் ஏன் முக்கியம் பெற்றன என்பது இன்று வரை தெரியவில்லை. இவர்கள் சொன்னது போல பசிலும் பதவி விலகி விட்டார். மகிந்தவும் பதவி விலகிவிட்டார். அடுத்தது கோட்டா பாய ராஜபக்ச தான் என்கின்றனர்.

உண்மையிலேயே ராஜபக்சக்கள் போய்விட்டால் நாட்டின் பொருளாதாரம் சீராகி விடுமா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகள் கோட்டாபாயவின் ஆட்சியும் – தொடர்ந்து நாமல் ராஜபக்சவின் ஆட்சியும் தான் தொடரப்போகிறது என அரசியல்வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்ட நிலையில் அவர்களின் அரசியல் அத்திவாரமே ஆட்டங்கண்டுள்ளதன் பின்னணில் ஏதோ ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. அதனை கண்டறிய வேண்டிய  – வெளிப்படுத்த வேண்டியும் தேவையும் ஒரு பக்கம் இருக்கிறது.

3. இணைய தள ஹேக்கர்களின் வருகையும் – அனுர குமார திஸ நாயக்க வெளிப்படுத்திய ஊழல் அறிக்கையும்.

கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது கணினி ஹேக்கர்களில் குழுவான  ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ  குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

 

இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து  இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை  தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள்  ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி  ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது..

 

அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.

மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.

 

04. ஏப்ரல் 9 போராட்ட களத்தில் சஜித் தாக்கப்பட்டதும் – அனுர குமாரவுக்கு கிடைத்த வரவேற்பும்.

ராஜபக்சக்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையவையே. இதற்கு ராஜபக்சக்கள் தான் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் ராஜபக்சக்களை கேள்வி கேட்பதில் மட்டுமே முனைப்பு காட்டிய சமூக வலைதளவாசிகளும் சரி – இலங்கையின் ஊடகங்களும் சரி ஏனைய சம்பவங்களையும் – அதன் போக்குகளையும்  சரியாக கவனிக்க தவறிவிட்டன.

மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச,  போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின.

உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!

இலங்கையில் ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் வெடித்த வன்முறை

5. எரியூட்டப்பட்ட ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் – சாதாரண மக்களும்.

மே – 9 அளவில் விஸ்வரூபம் எடுத்த போராட்டத்தில் பல அமைச்சர்களுடைய வீடுகளும் – ஆளுந்தரப்பினருடைய வீடுகளும் சாதாரண மக்களால் எரியூட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் உண்மைத்தன்மைகள் சீர்ததூக்கி ஆராயப்பட வேண்டும். சுமார் 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன. இங்கு இரண்டு வினாக்கள் கேட்கப்பட வேண்டியுள்ளன.

  • எரியூட்டப்பட்ட எந்த வீட்டிலும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக ஆட்கள் யாருமே இல்லாத வீடுகள் எரிக்கப்பட்டன. இது எவ்வாறு சாத்தியமானது..?
  • அமைச்சர்களின் வீடுகளை எரிக்குமளவிற்கு சாதாரண மக்கள் செயற்படக்கூடியவர்களா..? தைரியமுடையவர்களா..?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் இல்லை. மே – 9 கலவரங்கள் தொடர்பில் இது வரை 1800க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர் மேலும் ஆளுந்தரப்பை சேர்ந்த மகிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாமல் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இத்தனை வன்முறையான சம்பவங்களை யார் தூண்டினார்கள் என்பது இது வரை தெரியவில்லை. இது தொடர்பான கருத்துக்களும் வெளிவரவில்லை.

6. ரணிலின் வருகையும் – எதிர்க்கட்சிகளின் அமைதியும்.

தொடர்ந்து இரண்டு மாதங்களாக உக்கிரமைந்திருந்த போராட்டம் கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் அமைதியை நிலையை எட்டியுள்ளன. அரசுக்கு எந்த விதத்திலும் ஆதரவளிக்க போவதில்லை என காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஜே.வி.பி யாக இருக்கலாம், சஜித் பிரேமதாச தரப்பாக இருக்கலாம், போராட்டக்காரர்களாக இருக்கலாம் அனைவரும் அமைதி காக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் விலக சொன்ன கோட்டாபாய இன்னும் பதவியில் தான் உள்ளார். இந்த எதிரக்கட்சிகளின் சத்தம் ரணில் வருகைக்கு பிறகு என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

 

9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது

இந்த போராட்ட விடயங்களை கொண்டு போய் சேர்க்கும் ஊடகங்கள் சரியான – உண்மையான பக்கச்சார்பற்ற விடயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். பல தமிழ் ஊடகங்கள் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுவது போலவே செய்திகளை பிரசுரிப்பதை காண முடிந்ததது. ராஜபக்சக்கள் குற்றவாளிகளாகவே இருக்கட்டும். ஆனால் ராஜபக்சக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக நினைத்துக்கொண்டு சஜித் பிரேமதாச குழுவினரையும் – ஜே.வி.பி குழுவினரையும் புனிதப்படுத்தும் முயற்சிகளையே நமது தமிழ் ஊடகங்கள் மேற்கொள்கின்றன.

அமைதியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் மே-9 ஏன் வன்முறையை நோக்கி நகர்ந்ததது..? அல்லது மக்கள் வன்முறைக்கு தூண்டப்பட்டார்களா..? மக்களை வன்முறைக்கு தூண்டியது யார்.? அமைதியான போராட்டம் தான் எனில் ஏன் போராட்டத்தில் பங்கு கொண்ட 1500க்கும் மேலான மக்கள் கைதாகினர்.? அவ்களின் விடுதலைக்கு யார் உறுதி..? மக்கள் போராட்டத்தை ஏன் ஜே.வி.பி பக்கம் திருப்ப முயல்கிறார்கள்..? அல்லது ஜே.வி.பி யின் போராட்டத்தை தான் மக்கள் போராட்டம் என அடையாளப்படுத்திக் கொண்ருக்கின்றனவா ஊடகங்கள்.? இந்த போராட்ட காரர்களின் உண்மையான நோக்கம் என்ன..? மே – 9 இரவு எரிக்கப்பட்ட வீடுகளில் ஏன் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை.? ராஜபக்சக்கள் பதவி விலகினால் நாடு சீராகிவிடுமா..? இந்த  போராட்டம் யாருக்கு எதிரானது..? அப்படியானால் ராஜபக்சக்ளை தெரிவு செய்த69 லட்சம் மக்களும் முட்டாள்களா..? இப்படியாக பல வினாக்கள் .

கொரோனா இடர்பாடு , உக்ரைன் – ரஷ்ய போர், சீனாவில் மீண்டும் நாடு முடக்கம் என பல விடயங்கள் உலகின் பொருளாதாரத்தை ஆட்டுவித்துக்கொண்டு தான் இருக்கின்றன.  அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பண வீக்கம் கனிசமாக அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பொருட்களின் விலை இரு மடங்கால் அதிகரிக்கின்றது . இப்படியாக பொருளாதார பிரச்சினைகள் உலகம் முழுதிலும் அதிகரித்து்ககொண்டுள்ள நிலையில் இதன் தாக்கமே இங்கேயும் உணரப்படுகிறது.

இதற்கான தீர்வுக்காக இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்துமே இணைந்து செயற்பட்டு நாட்டை வளப்படுத்த முன்வருவதே புத்திசாலித்தனமானது. இதை விடுத்து மக்களின் பிரச்சினையை வைத்து அரசியல்வாதிகளும் – அரசியல் கட்சிகளும்  குளிர்காய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதற்கு ஊடகங்கள் துணை போவதை ஏற்கவும் முடியாது. வெளிப்படையாக இது பெரிய போராட்டம் – பெரிய மக்கள் இயக்கம் என நாங்கள் புலம்பித்தீர்த்தாலும் கூட இந்தப்போராட்டத்தின் அடி வேர்கள் மக்கள் கண்களை இன்னமும் கட்டியுள்ள அரசியல் அறியாமையேயாகும். இலங்கை மக்கள் இன்னமும் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இந்த சுயநலவாதிகளின் அரசியல் போதைக்கு பாவம் சாதாரண – ஏதுமறியாத மக்களே இன்னமும் பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மை மக்கள் காட்டிய வன்முறைக்கு எந்த அறியாமை காரணமாக இருந்தததோ இன்று அதே அரசியல் அறியாமையை தென்னிலங்கை எதிர்க்கட்சி அரசியல் தலைமைகள் தங்களுக்கு ஏற்றாற் போல பயன்படுத்துகிறார்கள். மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் மிகக்கட்டாயமான தேவையேயாகும்.

பொறுமையாக இருந்துபார்ப்போம் மக்களின் பிரச்சினைகளை வைத்து இன்னமும் எத்தனை அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகின்றன என்று..,

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மெத்தியூஸ் அபாரம் – இலங்கை அணி 141 ஓட்டங்களால் முன்னிலை !

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 506 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டம் இழக்காமல் 145 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஷஹிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹுசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸிற்காக பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் அடிப்படையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 141 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

இரண்டாவது ஆண்டாகவும் ஒரு போட்டியிலும் விளையாடாத சச்சினின் மகன் – சச்சின் வழங்கியுள்ள பதில் !

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:
இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.
உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.
ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார்.

‘கோட்டா கோ ஹோம்’ அல்ல ‘ஸ்றிலங்கா பெர்ஸ்ற்!’, ‘ரூறிஸ்ற் ஹம் ஹோம்!!’ அன் ‘மேட் இன் சிறிலங்கா!!!’ பணவீக்கம் என்பது அடிப்படையில் தவறான பொருளாதார புரிதல்!

‘இன்று மே 21ம் திகதி முதல் குழந்தைகளின் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில், சுப்பர்மாக்கற்களில் பால்மா தட்டுக்கள் காலியாகிக் கிடக்கின்றது. கைக் குழந்தைகளின் பெற்றோர் பால்மாவுக்காக கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். ஏற்கனவே பால்மா உற்பத்தி குறைந்திருந்த நிலையில் பால்மா அருந்திய குழந்தைகளில் பற்றீரியா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பால்மாக்களை உடனடியாக மீளப்பெற்றது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி இராணுவத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளார்’.

இந்நிலை இலங்கையில் அல்ல அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமையல் எண்ணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவுக்கான நெருக்கடி உலகத்தை நெருக்கப் போகின்றது. இந்தியா கோதுமை மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இன்றைய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறு குறுக்கிப் பார்ப்பது மிகவும் ஆபத்தான பின் விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகள்:

பின்விளைவுகளை ஆழமாக நோக்காமல், இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறி நடக்கும் போராட்டங்கள்; உலகப் பொருளாதாரப் பயங்கரவாதிகளான உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளன. பழைய ஆனால் மீண்டும் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இலங்கை மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். நிலைமைகள் மோசமடையும் என்பதை மெல்ல மெல்ல அவிழ்த்து வருகின்றார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அரையும் குறையுமாக தங்களுக்கே புரியாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள், சர்வதேச நாணய நிதியம் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் தான் தாங்கள் உதவமுடியும் என அறிவித்திருப்பதாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நாட்டை சூறையாடுவதற்கு யார் அனுமதித்தாலும் அந்நாடுகளுக்கு தங்கள் ‘உதவிக் கரத்தை’ நீட்டும். உலகில் இருந்த சர்வதிகாரிகள், கொடுங்கோலர்கள் எல்லோருக்கும் வாரி இறைத்து அந்நாடுகளைச் சுரண்டுவது தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்தியமும் இதுவரை செய்து வந்தது. அதனை அவர்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு செய்வார்கள்.

ஏப்ரல் 23இல் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் இளவேனிற்கால சந்திப்பை வோஷிங்டனில் மேற்கொண்டன. அதில் இலங்கையின் நிதியமைச்சர் அலி சபாரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கேயும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட செய்தி அறிக்கை: Going forward, the IMF team will support Sri Lanka’s efforts to overcome the current economic crisis by working closely with the authorities on their economic program, and by engaging with all other stakeholders in support of a timely resolution of the crisis. – முன்நோக்கிச் செல்ல சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏனைய பங்குதாரர்களோடும் இணைந்து அதிகாரிகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து தக்க தருணத்தில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்”. இந்தச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் மேற்குலகுக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் பொருளாதார நெருக்கடிக்கு உதவத்தயார்; பாதிக்கப்படும் ஏழை பாளைகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவத் தயார் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதமாகியும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அவ்வாறு உடன்பாடு எட்டப்படாத விடயம் என்ன? யார் அந்த ஏனைய பங்கு தாரர்கள்? சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் உலகெங்கும் சோசலிசக் கொள்கைகள் உருவாகிவிடக்கூடாது, நாடுகள் தங்கள் எல்லைகளை தங்கள் நாட்டு (அமெரிக்க – பிரித்தானிய மற்றும் நாடுகளுக்கு இவர்கள் தான் ஏனைய பங்குதாரர்கள்) நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடுகள் தொடர்ந்தும் நவகாலனிகளாக இருக்க வேண்டும். அதற்காக இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளில் கை வைத்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது. எரிபொருள், மின் சக்தி, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்நாடுகளில் மக்கள் எவ்வளவு சுரண்டப்பட்டாலும் வறுமைப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் தாங்கள் அறவிடும் அறாவட்டியை ஒரு சதம் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். இவை தான் இந்த பொருளாதார பயங்கரவாதிகளின் நிபந்தனை. இவர்கள் ஒன்றும் கோல்பேஸில் காற்று வாங்கவரும் போராளிகள் எதிர்பார்ப்பது போல் தேவதூதர்கள் அல்ல.

போராட்டகாரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டியின் வேண்டுகோள் கேட்குமா:

உறுதியாக இருந்த இடதுசாரிகளின் நீண்ட போராட்டங்களினால் இலங்கை மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர். இதனால் இலங்கை, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளினால் கூட வழங்கமுடியாத இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குகின்றது. இலங்கையில் இலவச அடிப்படைச் சுகாதார கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்கன. விவசாயிகளுக்கான மானியங்கள், எரிபொருள் மானியங்கள் அடித்தட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கி இருந்தது.

ஆனால் அடுப்பில் இருந்து நெருப்பில் வீழ்ந்த கதையாக இலங்கையின் நிலைமை மாறி வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளின் பொறிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இலங்கையை தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போலவே தெரிகின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என இலங்கை அறிவிக்க வேண்டும்:

இலங்கை அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளக் கட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் அறிவிக்க வேண்டும் என என்னுடைய முன்னைய பதிவுகளிலும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஏற்கனவே பல தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாத நிலையில் அக்கடன்களை இலங்கை இரத்துசெய்துள்ளது. ஆனால் நாடுகளுக்கு இடையிலான பன்நிலைக் கடன்களை செலுத்த முயற்சிக்கின்றனர். இக்கடன்களையும் இலங்கை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் கடன் வாங்கி, கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றார். உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவராக இயங்கும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தவில்லை.

அவர் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களும் காலிமுகத்திடலில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அவருக்கு கேள்வியின் ஆழம் புரியவில்லை என்பதால் அதே கேள்வி திருப்பிக் கேட்கப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க உல்லாசப் பயணிகளின் வருகையை வரவேற்று கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கை மக்கள் மீது அழுத்தங்களை இறுக்கி அவர்களை இயலாமையின் விழிம்பில் பணயம் வைத்து, தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கவே அனைத்து முயற்சிகளையும் ரணிலும் – சர்வதேச நாணய நிதியமும் மேற்கொள்கின்றது.

இலங்கை ஆண்டுக்கு 7 முதல் 9 பில்லியன் டாலர்களை 51 பில்லியன் வெளிநாட்டு கடன்களை கட்டுவதற்கு செலுத்துகின்றது. அறவட்டிக்கு வாங்கப்பட்ட இக்கடன்களை தொடர்ந்தும் செலுத்தினால் பெற்றோல், மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பு இருக்காது. அதனால் அரசு உடனடியாக அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளச்செலுத்துவதற்கான மீள்வரையறை செய்வது இப்போதுள்ள நெருக்கடியை சற்றுத் தள்ளிப்போடவே வழிவகுக்கும். அரசு தற்போது கூட்டு முடிவை எடுப்பதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனிலும் பார்க்க உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நலனிலேயே கூடுதலாக அக்கறைகொள்கின்றார்.

‘பணவீக்கம்’ மிகத் தவறான சொற்பாவனை – விலை வீக்கம் என்பதே சரியானது:

தமிழில் தற்சமயம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பணவீக்கம்’ இந்தச் சொல்லானது அடிப்படையிலேயே மிகத் தவறான சொல். ஆங்கிலத்தில் இன்பிளேஷன் – inflation என்ற சொல் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அது குறித்த காலப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வை குறிக்கும். இன்பிளேஷன் – inflation என்பது வீக்கத்தை குறிக்கும். எமது உடலில் ஏற்படும் வீக்கம் முதல் பலூனை ஊதுவது எல்லாமே இன்பிளேயர் – inflare என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. ‘காற்றடித்து பெரிதாவது’ என்பதை அது குறிக்கும். இதனை தமிழில் ‘பணவீக்கம்’ என்கின்றனர். அதன் தமிழாக்கத்தின்படி வீக்கம் என்பது ‘பெரிதாவது’. அதாவது ‘பணவீக்கம்’ என்பது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது என்றே அர்த்தப்படும். பணத்தின் பெறுமதி அதிகரிப்பது ஒரு பொருளாதாரத்திற்கு சாதகமான விடயம். ஆனால் அதனை புரிதல் இல்லாமல் பாவிக்கின்றனர். பணவீக்கம் என்பது ஆங்கிலத்தில் அப்பிரிசியேஷன் – appreciation என்பார்கள். அதாவது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது. பணத்தின் பெறுமதி ஒடுங்கினால் அல்லது வீழ்ந்தால் அதனை டிப்பிரிசியேஷன் – depreciation என்பார்கள். பதங்களின் உண்மையான அடிப்படையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டு இருப்பது பணஒடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவிக்கமும் ஆகும். இதனைப் புரியாமல் விலையுயர்வை பணவீக்கம் என்று குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளையே போட்டுக் குழப்புகின்றனர். பல்கலைக்கழகங்கள் இவை தொடர்பில் சொற்களஞ்சியத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

விலைகள் ஏன் உயர்கின்றது:

ஒரு நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு: 1) பொருட்களின் சேவைகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் (போக்குவரத்துச் செலவு உட்பட) விலை அதிகரிக்கின்ற போது – cost push inflation 2) பொருட்களுக்கான தேவை கேள்வி அதிகரிக்கின்ற போது – demand pull inflation 3) நாட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது அதாவது பணஒடுக்கம் – currency depreciation ஏற்படும் போது (இறுக்குமதி செய்கின்ற) பொருட்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் மட்டுமல்லாது கோவிட் தாக்கத்தில் இருந்து வெளிவரும் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுவே.

கோவிட் காலத்தில் பெரும் வேலையிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலும் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரச உதவிகளும் மற்றும் உதவிகளும் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் சாதாரண காலத்து செலவீனங்கள் அளவுக்கு அவர்களுக்கு செலவீனங்கள் ஏற்படவில்லை. நாடுகள் முடக்கத்தில் இருந்ததால் செலவழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. அதனால் முடக்கத்தில் இருந்து நாடுகள் தங்களைத் திறக்க ஆரம்பித்ததும் மக்கள் தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தனர். அதனால் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரித்தது. ஆனால் நாடுகள் திறக்கப்பட்ட வேகத்திற்கு தொழிற்காலைகள் திறக்கப்படவில்லை. உற்பத்திகள் குறைந்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டது. குறிப்பாக உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் சில பகுதிகள் மாறி மாறி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கின்றது. அதனால் விநியோகத்தில் தடை அது பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது. – Demand pull inflation.

கோவிட் முடிவில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தன் மூலம் உலகில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருள் தவிர்க்க முடியாதவொன்று. அதனால் பொருட்களின் விலை மேலும் எகிறியது. Cost push inflation.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி இன்னுமொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியோடு ஒப்பிட்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி நிதி நிலையைச் சமாளிக்க ஒரு சோம்பேறித்தனமான முடிவை எடுத்தது. பணத்தை அச்சிட்டு (quantitative easing) புழக்கத்தில் விட்டது. இது பணத்தின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய பணஒடுக்கம் (currency depreciation) ஏற்பட இறுக்குமதிப் பொருட்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. பொருட்களின் விலைவீக்கமடைந்தது (விலையுயர்வு).

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம்:

பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைவது அல்லது பணஒடுக்கம் முற்றிலும் மோசமானது அல்ல. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தை கூடுதலாக செய்யும் நாடாக இருந்திருந்தால் எமது பொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும். அதனால் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். ஆனால் இலங்கை கூடுதலாக இறக்குமதியையும் மிகக் குறைந்தளவில் ஏற்றுமதியையும் செய்வதால் அதுவும் இலங்கைக்கு பாதகமானதாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதையே செயற்திட்டமாகக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம், சீனா அமெரிக்காவினுடைய பொருட்களை இறக்குமதி செய்யும் அளவைக் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டோடு ஒரு வர்த்தக யுத்தத்தையே மேற்கொண்டார். உலகமயமாதல் – globalization மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட பெரு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவற்றின் நட்பு நாடுகளும் தற்போது அதே உலகமயமாதல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தோடு (open market economy) தங்கள் நாடுகளில் பொருளாதார பாதுகாப்பு கொள்கையை (protectionism) கொண்டு வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம் தாங்கள் உலகெங்கும் சென்று சுரண்டுவதற்கான உரிமையை மட்டுமே. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் பொருட்களை கொண்டுவரக்கூடாது.

அதனால் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்வதை செய்வதை ஒரு போதும் ஊக்கப்படுத்தாது. அவர்களை இறக்குமதியாளர்களாகவும் கடன்காரர்களாகவுமே வைத்திருக்கும். சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த 1970க்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் 1977இல் மட்டும் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி கூடுதலாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சக 3.6 வீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1980இல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் சய (எதிர்மறையானது) 22.5 வீதமானது. இன்று வரை இந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் எதிர்மறையாகவே உள்ளது. தற்போது இது சய மூன்று வீத்திலும் குறைந்திருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர், தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கியமான துறை இது. போராடுகிறோம் என்ற பெயரில் சர்வதேச நாயண நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் நாட்டை தாரைவார்க்காமல், எங்கள் நாட்டுக்கு வந்து குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இப்பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவரும் நாட்டிற்கு சாதகமானதாக்க வேண்டும். நாட்டினை தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதரிக்கப்பட வேண்டும். தரமாக்கப்பட வேண்டும். அத்தியவசியமற்ற சர்வதேச பொருட்களை கொக்கோ கோலா முதல் பஜ்ரோ வரை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதிகள் தடுக்கப்பட வேண்டும். ‘மேட் இன் சிறிலங்கா – made in Sri Lanka’ என்ற சொல்லுமளவிற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளுர் உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக உப வேந்தரின் ஆதங்கம்:

இது பற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தனது ஆழமான விசனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகத் தாக்கி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில்: “இப்போது வோஷிங்டனில் இருந்து பத்தரமுல்ல வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆண்களோ பெண்களோ most of them GCE(O/L) qualified இல்லை. அவர்களால் எப்படி எங்களை lead பண்ண இயலும். blind serve the blind என்று சொல்வார் என்னுடைய மாஸ்டர். நாங்கள் தான் எங்களை lead பண்ண வேண்டும். எங்கட பலம் strength என்ன என்று பார்க்க வேண்டும். எங்களுடைய பலவீனம் weakness என்ன என்று பார்க்க வேண்டும். எங்கட தமிழ் கலாசாரத்தில தமிழ் கலாசாரத்தில, சுதந்திரத்தைப் பற்றி கதைக்கிறத விட துரோகிய பற்றி கதைக்கிறதுதான் கூட. Parliment வேண்டாம் pajero வேண்டாம் permit வேண்டாம் extra disel வேண்டாம் என்றெல்லாம் சும்மா சொல்றது. எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாம் beggars (பிச்சைக்காரர்கள்). ஏன் நீங்கள் பங்ளோவில இருக்கிறியல்.

இன்றைக்கு ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம். Women lead families எங்களிடம் ஒரு பிளானும் இல்ல. நாங்கள் அடுத்த மாகாண சபை வருதென்றால் உடனே வேர்த்து விறுவிருத்து statementவிடத் தொடங்கிடுவோம். மோடி, அம்பேத்கர் அவங்க தங்கட ambassador இல்ல வாராங்க. நாங்க அந்நியத்தை நாடுறம்.

இன்றைக்கு மினி யாழ்ப்பாணம் எங்கிருக்கு. வெள்ளவத்தையில் இருக்கு. விட்ட நிலத்தில் சீவிக்க ஆட்களில்லை. எங்களுக்கு நாட்டம் அங்க. கொழும்பு செவன் வடக்கையும் கிழக்கையும் கண்டுகொள்ளயில்ல. ஆனால் எங்களுடைய weakness ஆடி… அடி… அடி… அடிச்சால் எல்லாத்தையும் weak ஆக்கிக் கொடுத்தால் எதிரிக்கு சுகம். இப்ப நாங்கள் politicianனையும் கொழும்பில் இருந்து import பண்ணற அளவுக்கு போய்ட்டம். நாங்க அந்நியத்தை நாடினால் என்ன நடக்கும்? இப்ப இருக்கும் economic இந்த problem எங்க கொண்டு போய் முடிக்கும் என்று தெரியாது. ஒருவர் ஒருவர் அடிச்சுக் கொல்லலாம், இன்னும் கொஞ்ச நாளில். Body guard போட்டுத் தடுக்க இயலாது. நடக்கலாம். இதெல்லாம் கன நாடுகளில் நடந்திருக்கு. இப்படியே போனால் என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தைக் கொட்டினார்.

துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தொடர்ந்தும் குறிப்பிடுகையில்: “எத்தனை சாம்ராஜ்யங்கள் உலகத்தில் இருந்திருக்கு. பாபிலோனியா சாம்ராஜ்யம். இன்றைக்கு பாருங்கள் ஈராக் எப்படி இருக்கிறதென்று? எகிப்திய சாம்ராஜ்யம் எப்படியிருக்கு? இன்றைக்கு பிரிட்டன் மூன்றாம் உலக நாடாக போயிருக்கும், Northsea oil கண்டுபிடிக்காட்டி. நாம் deserving ஆக இருந்தால் எம்மை யாரும் அடிமைப்படுத்த இயலாது. இது natural law. இதில் பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?

சுதந்திர சரித்திரத்தை இவர்கள் சுதந்திரத்திற்கு பின்தான் கதைக்கிறார்கள். எமக்கு 2000 ஆண்டு 3000 ஆண்டு history இருக்கிறது. நல்லுரடிக்கு போனால் ஆட்கள் தரிசனத்திற்கு போகிறார்கள். பெரிய பெரிய தலங்களுக்கு எல்லாம் தரிசனத்திற்கு போகிறார்கள். ஆனால் அதில பிச்சைக்காரரகள் எப்பொழுதும் அங்கு இருக்கிறார்கள். 24 மணித்தியாலயமும். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆத்ம சித்தி கிடைத்ததா என்றால் இல்லை. 24 மணித்தியாலயமும் அந்தத் தளத்தில் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் சிந்தனை முழுவதும் ரொட்டித் துண்டும் பிளேன் டீ யும். உயர்ந்த சிந்தனை இல்லை. Vision தான் முதல் எங்களுடைய பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, எங்களுக்கு ஒரு அழிவில்லா மொழி இருக்கு. அழிவில்லாத மொழி எங்களுக்கு. அப்படி பொக்கிஷங்கள் இருக்கு. இன்றைக்கு எங்களுக்கு knowledge நிறைய வேணும்” என்று சொல்லி தமிழ் மக்களில் மாற்றத்தை வேண்டி எஸ் சற்குணராஜா தன்னுரையை முடித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்கள் காலிமுகத்திடல் போராளிகள் உட்பட அனைவரும் ஒரே குரலில் சிறிலங்கா பெஸ்ற் – Sri Lanka First, ருறிஸ்ற் ஹம் ஹோம் – Tourists Come Home, மேட் இன் சிறிலங்கா – Made in Sri Lanka என்ற கோசங்களை முன் வைக்க வேண்டும். எந்தக் கடனையும் மீளச் செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும். இலவசக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அந்நாட்டை தோள்களில் தாங்கக் கூடிய கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெயொழிய பட்டத்தை பெற்றபின் வேலையையும் வாங்கித் தரச்சொல்லி போராடும் சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம்!! – தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி

எந்தவொரு பிரச்சினையையும் இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது! ஆனால் எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம் என தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி சவுக்கு என்ற காணொலிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 76 நிமிடங்கள் நீண்ட இந்த நேர்காணலில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இராணுவ ரீதியான தீர்வே சாத்தியம் என்ற அசாதாரண நம்பிக்கையே விடுதலைப் புலிகளினதும் பிரபாகரனினதும் முடிவுக்கு ஒரே காரணம் என உறுதிபடக் குறிப்பிடுகின்றார்.

மேலும் தற்போதைய பிஜேபி அரசு பாபர் மசூ போன்ற ஒரு பிரச்சினையை காசி விஸ்வநாதர் – கயன்வாபி மசூதி விவகாரத்தை வைத்து தூண்டிவிட்டு 2024 தேர்தலை சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில் 15,000 பேர்வரை கொல்லப்படலாம் என்றும் அதற்று பிஜேபி தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் பத்திரிகையாளர் மணி சவுக்கு காணொலி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2006 இல் மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடிய போது தங்களுடைய முடிவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து விட்டதாக கிஞ்சித்தும் எண்ணி இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அதனை மிக நன்கு உணர்ந்திருந்தார். அன்ரன் பாலசிங்கம் 2005இல் வன்னிக்குச் சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவ்விடயத்தை எடுத்துச் சொல்ல முயன்ற போது, பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை உணர்ந்து கொண்டார். “அண்ணை சேரனின் ‘ஆடொகிராப்’ நல்ல படம் பார்ப்போம்” என்று சொல்லி அதனைப் பார்த்தனர். படம் முடிந்ததும் கதைப்போம் என்று ஆவலில் அன்ரன் பாலசிங்கம் பேச்சை ஆரம்பிக்க “நல்ல படம் அண்ணை, இன்னொருக்கா பார்ப்பம்” என்று பிரபாகரன் சொல்ல ‘ஆட்டோகிராப்’ படம் வன்ஸ்மோர் ஓடியது. அன்ரன் பாலசிங்கமும் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட வேண்டும் என்று இரண்டாம் காட்சி முடிந்ததும் ஆரம்பிக்க, “அண்ணை, இன்னொருக்கா படத்தை பார்ப்பம்” என்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் புரிந்து கொண்டார்.

2009 ஜனவரி 02இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத தலைநகராகத் திகழந்த கிளிநொச்சி இரணுவத்தின் வசம் வீழ்த்த போதும் “பனை மரத்திலா வெளவாள! தலைவருக்கே சவாலா!!” என்ற புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் உசுப்பி விட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில குஞ்சுகள் இப்பவும் தான் விசிலடிக்கிறார்கள். பழக்கதோசத்தில்.

2008 – 2009 காலகட்டங்கள் நான் ஒரு முழுநேர ஊடகவியலாளனாகவே ஆகிவிட்டேன். அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் 2016 இல் வெளியான ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற என்னுடைய நூல். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் எவ்வாறு நகர்த்தப்படும், எந்தெந்த காலப்பகுதிகளில் எந்தெந்த பிரதேசகங்கள் கைப்பற்றப்படும் என்பது முதல் முள்ளிவாய்க்காலில் 2009 ஏப்ரல் 16 இந்திய தேர்தலுக்கு முன்பாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்துது. இத்திட்டத்திற்கு ‘புரஜகற் பீக்கன்’ என்றும் பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றி எனது நூல் தவிர வேறு எங்கும் பதிவுகள் இல்லை.

2009 காலகட்டத்தில் தேசம்நெற் இணையத்தின் பிரதான செய்தியாளராக இருந்தவர் காலம்சென்ற கண்டியைச் சேர்ந்த பி எம் புன்னியாமீன். அன்றைய நாட்களில் நானும் அவருமே பெரும்பாலும் செய்திகளைப் பதிவேற்றிக் கொண்டிருப்போம். வன்னிக் கள நிலவரங்களை அவர் தன்னுடைய தொடர்புகள் மூலம் பெற்றுக்கொண்டிருந்தார். யுத்தகளத்தில் இருந்த புலனாய்வாளர்கள் சிலரதும் தொடர்புகளும் அவருக்கு இருந்தது. அதனால் தேசம்நெற் வதந்திகளை தவிர்த்து களநிலவரங்களை வெளியிடக் கூடியதாக இருந்தது.

2009 மே 18இல் அவர் என்னை தொடர்புகொண்டு “பிரதர் பிரபாகரனை பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்” என்றார். இருந்தாலும் அந்தச் செய்தியை வெளியிடுவதில்லை என்று இருவருமே தீர்மானித்தோம். அவருக்கும் அச்செய்தி ஒரு புலனாய்வு அதிகாரியால் பரிமாறப்பட்டு இருந்தது. அன்று முழவதும் தொலைபேசி உரையாடலிலும் செய்திகளை உறுதிப்படுத்துவதிலுமே பொழுது கழிந்தது. வன்னி மண்ணில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கந்தகத்தூள் மணமும் இரத்தவாடையும் என்னை ஆட்கொண்டிருந்தது. மரண வீட்டின் சுழல் என் வீட்டிலும் தெரிந்தது. மறுநாள் காலை 2009 மே 19 “பிரதர், பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்” என்று பதட்டத்தோடு குறிப்பிட்டார். புலிகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் அவர்கள் இவ்வாறான ஒரு முவைச் சந்திப்பார்கள் என யாரும் எண்ணி இருக்க வாய்ப்பில்லை. “செய்தியை வெளியிடலாமா?” என்றேன். “தகவல் நம்பகமானது, பிரதர்” என்றார். புன்னியாமீன் தகவலை மிக உறுதியாகவே தெரிவித்தார். தேசம்நெற் அச்செய்தியை வெளியிட்டது. வேறு இலங்கைத் தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

அதன் பிற்பாடு மே 24இல் அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சளராக இருந்த கேபி என்றறியப்பட்ட குமரன் பத்மநாதன் பிரபாகரனது மரணத்தை அறிவித்தர். அதற்கு அடேல் பாலசிங்கத்தினது தூண்டுதலும் முக்கிய காரணம் என குமரன் பத்மநாதனோடு உரையாடியதில் நான் அறிந்துகொண்டேன். இவ்வளவு காலமும் தமிழருக்காகப் போராடிய பிரபாகரனது மரணம் நினைவு கூரப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் லண்டனிலும் சர்வதேவத்திலும் இயங்கிய புலிகளுக்கோ தங்கள் வசம் இருந்த 5 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களிலேயே கவனம் இருந்தது. இந்த ஊழலில் அவர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியையும் திருடி வைத்திருந்தது பின்னர் அம்பலமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எனக்கு மிகக் கடுமையான விமர்சனம் இருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணம் என்னையே அறியாத சோகத்தை ஏற்படுத்தியது. தமிழீழத்தை அடையாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை எட்டக்கூடிய அளவுக்கு பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கை ஓங்கி இருந்தது. என் போன்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஒரு சர்வதிகாரமான ஆட்சியை வைத்து அதன் உச்சத்தில் இருந்தவர்கள். ஆனால் இன்று முகவரியற்ற வெற்றுடல்களாக அவற்றை உரிமை கோரவும் யாரும் இன்றி வீழ்ந்து கிடந்தனர். பிரபாகரன் மட்டுமல்ல அவருடைய மனைவி குழந்தைகள் அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. பிரபாகரன் பிடிபட்டார் என்பதோ சரணடைந்தார் என்பதோ புலிகளுக்கும் தமிழர்களுக்கும் அவமானம் என்பதால் புலிகள் தரப்பு வெளிப்படையாக இருக்கவில்லை. அது இலங்கை அரசு தனது யுத்தக் குற்றங்களை மூடி மறைக்க மிக வசதியாகிவிட்டது.

2002இல் பிரபாகரன் இறுதியாக வழங்கிய மிகப்பெரிய ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்கப்பட்ட போது அதனை ஒரு ‘துன்பியல் நிகழ்வு’ என்று தெரிவித்து இருந்தார். இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் அல்பிரட் துரையப்பா முதல் பல அரசியல் தலைவர்கள் உட்பட பல நூறு பேருக்கு நிகழ்ந்தது.

“உங்களை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா, இலங்கை அரசைக் கேட்டது” தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன் “அண்ணை நடக்கக் கூடியதைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள்” என்று அசிரத்தையாகக் குறிப்பிட்டார். ஆனால் அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வு இறுதியில் பிரபாகரனுக்கும் நிகழ்ந்தது.

முத்த பத்திரிகையாளர் மணி அண்மைய பதிவில் ராஜீவ்காந்தியுடைய படுகொலையே விடுதலைப் புலிகளின் முடிவுக்கு மூலகாரணம் என்றும் இந்தியா இதற்காக 18 ஆண்டுகள் காத்திருந்தது என்றும் குறிப்பிட்டார். பத்திரிகையாளர் மணி மேலும் குறிப்பிடுகையில் இராணுவ அணுகுமுறை எந்தப் பிரச்சினையையும் தீர்காது என்பதை பிரபாகரன் உணர்ந்துகொள்ளவில்லை என்றும் செப்ரம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னும் அதை பிரபாகரன் உணரத் தவறிவிட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். பத்திரிகையாளர் மணியின் இந்த நேர்காணலில் விடுதலைப் புலிகள் பற்றிய மிகக் காத்திரமான விமர்சனத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். சில தகவல் பிழைகள் இருந்த போதும் அவருடைய மதிப்பீடு தரமாக அமைந்தது.

அத்தோடு இந்தியாவின் ஆர்எஸ்எஸ், பிஜேபி செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் ஊடுருவியிருப்பதையும் அதன் ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கையில் பௌத்த சிங்களவர்கள் தமிழர்களுக்கு கொடுமை இழைத்தது போல் இந்தியாவில் இந்துக்கள் தொடர்ந்தும் இஸ்லாமியர்களுக்கு கொடுமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் 2024 தேர்தலையொட்டி காசி விஸ்வநாதர் ஆலயம் – கயன்வாபி மசூத சர்ச்சை இப்போதே தூண்டிவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த ராமஜென்மபூமிக் காரர்கள் – பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட்டு பாபர் மசூதி சர்ச்சை போன்று ஒன்றை உருவாக்கி 15,000 உயிர்களை அழித்து தேர்தலை வெற்றிகொள்வோம் என்ற உறுதியில் பிஜேபி தலைவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் பத்திரிகையாளர் மணி இலங்கை அரசுக்கும் பிஜேபி க்கும் உள்ள கூட்டை காணத் தவறிவிட்டாரோ என்ற ஐயப்பாட்டை அவருடைய நேர்காணலின் பிற்பகுதி ஏற்படுத்துகின்றது. பௌத்தத்தை பிஜேபி இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே பார்க்கின்றது. புத்தரை கிருஸ்ணணின் அவதாரமாகவும் எண்ணுகின்றனர். அதனால் பிஜேபியின் உறவு இலங்கை அரசோடு சற்று ஆழமானதாகவே உள்ளது.

மேலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அழிவுதான் இலங்கையை இந்நிலைக்கு கொண்டு வந்தது என அவர் குறிப்பிடுவதிலும் எவ்வித உண்மையும் கிடையாது. தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களை குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஆட்சியாளர்களை எப்போதுமே எதிர்த்தே வந்துள்ளனர். ராஜபக்சக்கள் யுத்தக் குற்றங்கள் இழைத்ததற்கும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது.

ஒரு வகையில் பத்திரிகையாளர் மணி தன் தேசப்பற்றோடு இந்தியா இலங்கையை பல தடவைகள் காப்பாற்றி உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்தியா ஆரம்பம் முதலே இலங்கையை பகடைக்காயாக பாவித்து வருவதை காணத் தவறியுள்ளார்.

வுpமர்சனங்கள் இருந்த போதும் பத்திரிகையாளர் மணியின் நேர்காணல் ஒரு குறிப்பிடத்தக்க பதிவு தான்.

அரப் ஸ்பிரிங் (Arab Spring) முதல் காலிமுகத்திடல் ஸ்பிரிங் (Galleface Spring) வரை போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்குமா? இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளில் கணணி இளைஞர்கள் அந்நாடுகளில் இடம்பெற்று வந்த லஞ்சம், ஊழல் தொடர்பில் முறுகல் நிலையில் இருந்தனர். அதற்குப் பொறிதட்டும் வகையில் 2010 டிசம்பரில் ருனிசியாவில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் கேட்டு அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிலாளி தீக்குளித்து மரணித்தார். அத்தொழிலாளி தன் மீது வைத்த தீ, மத்திய கிழக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. பரப்பப்பட்டது. போராட்டங்கள் வெடித்தது.

புரட்சி வெடித்துவிட்டதாக, நவகாலனித்துவம் சரிந்து விட்டதாக கீ போட் மார்க்ஸிட்டுக்கள் ‘தண்ணி அடிக்காமலேயே உளற ஆரம்பித்தனர். கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளினர். ஒருபடி மேலே போய் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாகவும் எழுதினர். ருனிசீயா, எகிப்து, யேமன், லிபியா என சிரியாவுக்கும் பரவிய இப்புரட்சியில் அமெரிக்க – பிரித்தானிய முதலாளித்துவக் கூட்டும் குளிர்காய்ந்தது. இந்த ‘அராபிய புரட்சி’யில் 180,000 பேர் உயிரிழந்தனர். ஆறு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ருனிசியா தவிர்ந்த அரப் ஸ்பிரிங் நடைபெற்ற நாடுகள், அவை முன்னிருந்த நிலையைக் காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. வாழ்நிலை மிகக் கீழ்நிலைக்கு சென்றது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் அவை முன்னைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜேவிபி கிளர்ச்சி:

1971இல் இரவோடு இரவாக அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் ஜேவிபி புரட்சியில் இறங்கியது. இதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் 1971 மார்ச்சில் தான் நானும் இவ்வுலகில் இலங்கையின் கலாச்சார தலைநகரான அனுராதபுரத்தில் அவதரித்தேன். 1971 ஜேவிபி புரட்சியில் என்ன நடந்தது? பிரேமாவதி மன்னம்பேரி என்ற கிராமத்து அழகியை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்காண இளைஞர்கள் யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இன்று ஜேவிபியின் ஒரு பகுதி அரசோடு, மறுபகுதி போராட்டகளத்தில், அதிலும் ஒரு பகுதி இந்த தீவைப்புகளுக்குப் பின்னால்.

தமிழீழ விடுதலைப் போராட்டம்:

மேதகுவில் 1980க்களின் முற்பகுதில் பஸ்க்கு தீ வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கதை சொல்லப்படுகின்றது. முப்பது ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு தள்ளப்பட்டு, பத்தாண்டுகள் கடந்து; இன்று நாற்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள்; எண்பதுக்களில் இருந்த அரசியல் பொருளாதார நிலைகளிலும் பார்க்க கீழான அரசியல் பொருளாதார நிலையிலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டம் என்ற பெயரில் கொடுத்த உயிரிழப்புகள், பொருளிழப்புகள் எதுவும் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைகளை உயர்த்த தவறிவிட்டது மட்டுமல்லாமல் இன்னமும் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன.

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளில் அறிவுபூர்வமான நம்பிக்கை கொண்ட, அதற்காக இதயபூர்வமாக தங்களை அர்ப்பணிக்கத்தக்க அரசியல் தலைமைகள் போராட்டத்தை தலைமை தாங்க வரவில்லை. உணச்சிவசப்பட்ட இளைஞர்களால் உந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், அதன் முளையிலேயே தன் இலக்கை இழந்தது. தனிமனித வழிபாட்டிலும் அதற்காக சகோதரப் படுகொலைகளிலும் இறங்கியது. சிந்தனையும் இதயமும் தமிழீழ விடுதலையை கைவிட்டு, தனிமனித வழிபாடே போராட்டமான பின், தமிழீழம் முளையிலேயே கருகிவிட்டது. அதன் பின் இடம்பெற்றதெல்லாம் வெறும் அதிகாரத்துக்கான போட்டியே. பலமுடையவர்கள் பலமிழந்தவர்களை அழித்தொழித்தனர். நடந்து முடிந்தது விடுதலைப் போராட்டமே அல்ல. உணர்ச்சிக்கு அடிமையாகி போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் சாதித்தது என்ன? தமிழர்களுக்கு கிடைத்தது வெறும் ஒப்பாரியும் சேதமும் தான். இந்த ஒப்பாரியை வைத்துக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எஸ் சிறீதரனும் சாணக்கியணும் இன்னும் இன்னும் பேர்களும் பாராளுமன்றம் போய் தம்பட்டம் அடிப்பதும் அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் இன்றும் நடைபெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டம்:

இப்போது இதே பாதையில் காலிமுகத்திடலில் போராடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிக்கிறோம், கார்களை எரிக்கின்றோம், பஸ்களை எரிக்கின்றோம் என்று நெருப்பை பற்ற வைத்துக்கொண்டுள்ளனர். இவர்களுடைய கூட்டுஉளவியல் அராஜகம் இலங்கை எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை. பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராஜபக்ச அடியாட்களை இறக்கி போராட்ட காரர்களை தாக்கியதால், மக்கள் கொதித்து எழுந்து; ஆனால் மிகத் திட்டமிட்டு முப்பது வரையான பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தது என்பது சற்று ஆச்சரியம் தான். மிகவும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்புப் படைகள் ஒரு வீடு எரிக்கப்பட்ட பின்னும் ஏனைய வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததும் அதைவிட ஆச்சரியமானது தான். இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இவ்வளவு கண்ணியாமாக இயங்குகின்றன என கோத்தபாய ராஜபக்ச நிரூபிக்க முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோண்றுகிறது. அதற்குப் பின் மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டார். மேற்கு நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்துக்கொண்டுள்ளன. காலிமுகத் திடல் ஸ்பிரிங் – காத்து வாங்கும் போராட்டம் தனது இலக்கை எட்டியது?

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் போராட்டத்தை துண்டிவிட்டவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலருக்கும் அவர்களுடைய பிரச்சினை தங்களுக்கு பெற்றொல், எரிவாயு கிடைக்கவில்லை என்பதே. பொருட்கள் விலையேறுகிறது என்பது உண்மை தான். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் தொடர்பாக பெரிய புரிதல் இருப்பதில்லை என்பது உண்மைதான். இலவசக் கல்வியில் பல்கலைக்கழகம் வரை சென்று படித்துவந்த இளம்தலைமுறையினரும் இப்படி இருந்தால் சனநாயகம் எப்படி இயங்கும்? இந்த பொருளாதார பிரச்சினை பற்றி ஊடகங்களும் தங்களுடைய 24 மணிநேரச் செய்தியை நிரப்ப உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு மட்டுமே அலைகின்றன.

ஒரு பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு போவதே வேலையாகிப் போய்விட்டது. பிறகு அதை வைத்து நாலு பேரை உசுப்பேத்தி எரிக்கிறது, கொழுத்துகிறது என்று தான் சுதந்திர இலங்iகியின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு இன, மத பேதம் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் சிங்கள இளைஞர், யுவதிகளை அரசு கொன்று குவித்தது. அதன் பின் தமிழர்களை அரசு கொன்று குவித்தது. பின் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அரசு வன்முறையை அவிழ்த்து விட்டது. இப்போது இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளது.

போராட்டத்தை தூண்டியவர்களையும் போராட வந்தவர்களையும் காக்க மேற்கின் செல்லப் பிள்ளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டார். அதிஸ்ரவசமாக விரல் விட்டு எண்ணக் கூடிய கொலைகளுக்குள் ‘போராட்டம்’ தணிய ஆரம்பித்துள்ளது. வாக்குகளால் பதவிக்கு வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க போராட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற தீ வைப்புகள் கொலைகளைத் தொடர்ந்து பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தது எப்படி பொருளாதார பிரச்சினைக்கும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘போராட்டத்துக்கும்’ தீர்வானது? இது தான் மேற்குலகின் மாயா ஜாலம். ஆரப் ஸ்பிரிங் முதல் கோல்பேஸ் ஸ்பிரிங் வரை போராட்டங்களை மேற்குலகு தனக்கான வரப்பிரசாதமாக மாற்றிக் கொள்வதில் மிகக் கைதேர்ந்தவர்கள். ஆனால் போராட்டத்தை தூண்டுபவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்ட முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்கான புரட்சிகர சிந்தனையுடைய கட்சிகள் அங்கு இல்லை. அவ்வாறு இருந்தாலும் அவர்கள் முகவரி அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது இந்த அலைக்குள் அவர்களும் அள்ளுண்டு விடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த் சூழலை மாற்றுவதற்கு பதிலாக அவரவர் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றளவில் செயற்பட்டனர். மற்றும்படி எவ்வித அடிப்படை மாற்றத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ராஜபக்ச குடும்பம் கொன்றொழிக்கப்பட வேண்டிய நரகாசுரர்களாகவும் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை காப்பாற்ற வந்த தேவதூதர்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்னணி:

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்ச குடும்பத்திற்குள் போட்டு மூடி மறைப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமன். ராஜபக்ச ஒன்றும் புனிதரும் அல்ல போராடுபவர்கள் யாவரும் பொறுப்பற்றவர்களும் அல்ல. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் 24 மணி நேரத்தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சோசலிச விரிவாக்கத்தை தடுக்கவே அமெரிக்கா ஜப்பானில் ஹிரோசிமா மற்றும் நாகசாக்கி நகரங்களில் அணு ஆயதங்களை பரீட்சித்துப், பல லட்சம் மக்களைக் கொன்றுகுவித்தது. இப்போது உக்ரைனில் ஆயதங்களை குவித்து வருவதும் நேட்டோவை விஸ்தரித்து தன்னுடைய சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கவே. அமேரிக்கா பேசுகின்ற ஜனநாயகம், மனித உரிமைகள் அனைத்துமே மிகப் போலித்தனமானவை. அவர்கள் ஜனநாயகம் மனித உரிமைகள் பேசுவது சந்தைப் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு மட்டுமே.

இச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்ற போதே அமெரிக்காவில் வெள்ளை இனவாதி ஒருவர் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுப்பர்மாக்கற்றினுள் புகந்து பத்துப் பேரைப் படுகொலை செய்துள்ளார். அமெரிக்கா உலகெங்கும் ஆயதங்களை விற்று உலக சமாதானத்தை அழித்துவரவது மட்டுமல்ல தன்னுடைய நாட்டிலும் சமாதானத்தை அழித்து வருகின்றது. கொரோனா காலத்தில் அவரவர் பஞ்சம் வந்துவிடும் என உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்க அமெரிக்காவில் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். தற்பாதுகாப்பிற்காம். இவர்கள் தன்னியக்க துப்பாக்கிகளை வாங்கியது என்ன கொரோனா வைரஸை சுடுவதற்கா?

புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை:

இந்த இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைய ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சுதந்திரமடைந்தன. இவ்வாறு சுதந்திரம் அடையும் நாடுகள் சோசலிச முகாமுக்குள் சாய்ந்து பொருளாதார தன்னிறைவடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடைய முதலாளித்துவ கொள்கையின்பால் ஈர்த்து கடன்காராக, காலம்பூராவும் நவகாலனித்துவத்திற்குள் வைத்திருப்பதற்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்தது, முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க – பிரித்தானிய நாடுகள். அது தான் புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை.

ஒரு நாடு சுதந்திரம் அடைந்து சொந்தக் காலில் நிற்பதற்கு, பொருளாதார வளம் அவசியமாக இருந்தது. இந்தப் புரட்சிக்கு எதிரான அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினூடாக அமெரிக்கா – பிரித்தானிய நாடுகள் இந்த சுதந்திர நாடுகளுக்குள் தங்கள் மூலதனத்தை ஊடுருவச் செய்து, அந்நாடுகளை தமது நவகாலனிகள் ஆக்கின. அது எவ்வாறு? உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலமாக அந்நாடுகளை கடன்காரர் ஆக்குவது. இறக்குமதிகளை ஊக்குவித்து; தங்கள் நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய வைத்து; நுகர்வோர் கலாச்சாரத்தை தூண்டிவிட்டு; நாட்டையும் நாட்டு மக்களையும் கடன்காரர் ஆக்குவது. பின் கடன்காரர்களாக வைத்திருப்பதற்காக, நிபந்தனைகளை விதிப்பது. தாங்கள் இந்நாடுகளை தொடர்ந்தும் சுரண்டுவதற்கு வாய்ப்பாக திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இந்த வல்லாதிக்க நாடுகளின் நிபந்தனையாக இருந்தது. இலங்கை போன்ற சிறிய நாடுகளால் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகச் செயற்பட முடியாத நிலை. அதனால் படிப்படியாக நட்டை அந்நிய சக்திகளிள் சுரண்டலுக்கு அனுமதித்தனர்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்த வல்லாதிக்க சக்திகளின் முகவர்களே. உலகம் முழவதும் கொடும்கோலர்களுக்கும் சர்வதிகாரிகளுக்கும் (சதாம் ஹ_சைன், முகம்மர் கடாபி, ரொபேட் முகாபே, ஹொஸ்னி முபாரக், பேர்டினட் மார்க்கோஸ்) எதிர் புரட்சிகர அபிவிருத்திக் கொள்கையினூடாக வாரி இறைத்து அந்நாடுகளை வங்குரோத்து ஆக்கியதும் இந்த வல்லாதிக்க நாடுகள் தான். ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் தங்களுக்கு கடன்தர வேண்டாம், தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வரித் தடையில்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதியுங்கள் என்ற போது இந்த வல்லாதிக்க நாடுகள் மறுத்துவிட்டன. இவ்வாறு தான் எங்களுடைய மூலப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அவற்றை முடிவுப் பொருளாக்கி, அதனை கூடிய விலைக்கு எமக்கே விற்றனர். எங்களுடைய பாலை குறைந்த விலையில் வாங்கி, அங்கர் மாவை எமக்கே கூடியவிலைக்கு விற்றனர். இங்கு பிரித்தானியாவில் கூட நாங்கள் பசுப்பாலைத் தான் பாவிக்கிறோம். ஆனால் இலங்கையிலோ மக்கள் அங்கர் பிரியர்களாகி விட்டனர். இந்தப் பொருளாதார நெருக்கடி வந்திராவிட்டால் நாங்கள் கோழி போடாத முட்டை சாப்பிடவும் பழகிக்கொண்டிருப்போம். மீளா முடியாத இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்போம்.

போபால் விசவாயுக் கசிவு:

1984இல் நான் இளைஞனாக இருந்த காலம் எங்களை உலுக்கிய செய்தி. இந்தப் பெரிய இந்தியாவுக்கே அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் தண்ணி காட்டியது. 1984 டிசம்பர் 2இல் போபால் விசவாயுக் கசிவு 15,000 பேரைப் பலிகொண்டது. போபால் விசவாயூக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நிறுவனம் இன்றுவரை நட்ட ஈடு வழங்கவில்லை. இப்போது நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் பிள்ளைகள் ஊனமாகவே பிறக்கின்றன. இந்த அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகள் ஏனைய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பசுமரத்து ஆணிபோல் இன்னமும் மனங்களில் உள்ளது. மறக்க முடியவில்லை. அதற்கு மேல் இன்னமும் இந்த நாடுகளின் சுரண்டல்களுக்காக பங்களாதேஸில் ஆடைத் தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்து தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இலங்கையிலும் அவ்வாறான ஒரு பொருளாதார சுதந்திர வர்த்தக வலயத்தை அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா உருவாக்கினார். இலங்கையை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தன்னிறைவு பொருளாதாக் கொள்கைக்கு சாவுமணி அடித்தார். தமிழ் தேசியவாதக் கட்சிகளும் ஜே ஆர் ஜெயவர்த்தனவோடு சேர்ந்து அந்த மணியை ஆட்டிவிட்டனர்.

பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல்:

1980க்களில் எங்களை உலுக்கிய மற்றுமொரு செய்தி பிலிப்பைன்ஸில் பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல் மற்றும் டாம்பீகரமான வாழ்க்கை. அதற்கு எதிராக போராட்டம் வெடித்து. இந்த பரம்பரையான குடும்ப ஆட்சித் தம்பதிகள் ஓரம்கட்டப்பட்டனர். அப்போது இமெல்டா மார்க்கோஸின் வீட்டு அலுமாரிகளில் அவருக்கு 1000 சோடி பாதஅணிகள் இருந்தது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாகவே பிலிபைன்ஸ்சை சூறையாடிய இப்பரம்பரையில் இருந்து; மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் இன்று அவதார புருஷராக வந்துள்ளார். தனது பெற்றோரின் காலம் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்று சொல்லி தற்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளார். மக்கள் இப்போதெல்லாம் எதனையும் குறுகிய காலத்திலேயே மறந்துவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் தேர்தல்கள் கூட ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது.

இலங்கையின் மத்திய வங்கியை சுருட்டிக்கொண்டு சென்ற, ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கவலையேபடாத முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆறாவது தடவையாக பிரதமராக்கப்பட்டு உள்ளார். மேற்குலகின் செல்லப் பிள்ளையான இவர் உலக வங்கிக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையை அடகு வைப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். அல்லது பெற்றோல் பிரச்சினையும் எரிவாயுப் பிரச்சினையும் தீர அவரை ஆறாவது தடவையாகவும் கலைத்துவிடுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திறந்த சந்தைப் பொருளாதாரம்:

இலங்கையை கடன்காரர் ஆக்கிய வல்லாதிக்க நாடுகளின் எதிர் புரட்சி அபிவிருத்திக்கொள்கை இலங்கையை 16 தடவைகள் வங்குரோத்து அடையாமல் காப்பாற்றி இருந்தது. பதினேழாவது தடவையாகவும் அவர்கள் காப்பாற்றுவார்கள். இலங்கை மக்களுக்காக அல்ல இலங்கையை இன்னும் இன்னும் கொள்ளையடிப்பதற்காக. ஏன் இலங்கை இவ்வாறு கடனாளியானது? ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்து என்பது பொருளாதாரத்தில் அரிவரி தெரியாதவர்களின் வாதம். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளைக்கும் சம்பந்தம் கிடையாது. டொனால்ட் ரம்மில் இருந்து ராஜபக்ச வரை பொறிஸ் ஜோன்சன் உட்பட எல்லோருமே தங்கள் தங்கள் நாட்டை கொள்ளையடித்துள்ளனர். என்ன ராஜாபக்ச கொஞ்சம் மொக்குத்தனமாக செய்துவிட்டார் போல் தெரிகின்றது. உலக்கை போன ஓட்டையைப் பார்க்காமல் ஊசிபோன ஓட்டைக்கு போராட்டம் என்ற பெயரில் நாட்டை பெரும் கொள்ளையர்களிடம் தள்ளிவிட்டுள்ளனர்.

இலங்கையன் பெருமை:

திறந்த சந்தைப் பொருளாதாரமே செல்வத்தை உருவாக்கும் வறுமையை ஒழிக்கும் என்று உலகுக்கு வகுப்பெடுக்கின்றது அமெரிக்கா. ஆனால் உலகின் செல்வத்தில் 50 வீதத்தை தன்னகத்தே வைத்துள்ள அமெரிக்காவில் இலவச மருத்துவம் இல்லை. ஆனால் இலங்கையில் இலவச மருத்துவம். அடிப்படைச் சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை இன்னமும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மனித உரிமை என்பது பட்டினியாலும் வருத்தம் துன்பம் வந்து சாவதற்குமான உரிமையாகவே உள்ளது. இலங்கையில் இன்னும் இந்நிலை இல்லை. இலங்கையர்களாக இருப்பதில் பெருமைப்பட வேண்டிய விடயம். ஆசிறி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதே மரணமானவரின் உடலை வைத்துக்கொண்டு அவ்வுடலை திருப்பிக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் கேட்டனர். அப்படியிருக்கும் போது இத்தனை தசாப்தங்கள் பல லட்சம் உயிரிகளை காப்பாற்றுவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறுகின்ற போது £ 50,000 பவுண்கள் (500 x 50,000 = 25,000,000 ரூபாய் / 25 மில்லியன் ரூபாய்) கடனோடு தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இலங்கையில் பல்கலைக்கழகம் முடிக்கும் மாணவனுக்கு ஒரு சதம் கடன் கிடையாது. உலகிலேயே உயர்கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்குகின்ற நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையில் இலவசமாகக் கல்வி கற்ற மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தான் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். அந்நாடுகளை கட்டியெழுப்பவும் உதவுகின்றனர். இது இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். அப்படியானால் பல தசாப்தங்களாக பல்கலைக்கழகம் வரை இந்த இலவசக் கல்வியை வழங்குவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் நாங்கள் கொள்வனவு செய்யும் பெற்றோல் எரிவாயுவிற்கு நாங்கள் அவற்றின் நிர்ணயிக்கப்பட் விலையைக் காட்டிலும் கூடுதலாக வரியையும் சேர்த்து செலுத்துகின்றோம். ஆனால் இலங்கையில் பெற்றோலையும் எரி வாயுவையும் வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்கிறது. அப்படியானால் குறைக்கப்பட்ட அந்தப் பெறுமதியை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

மண்வீடுகள் எல்லாம் கல்வீடுகளாகி உள்ளதே அதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், விதைகள், இலவச உலர் உணவுகள் இதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

உலகிலேயே அதிக விடுமுறை தினத்தை கொண்ட நாடு இலங்கை. இந்தச் சலுகை எப்படி சாத்தியமானது?

இவ்வளவு விடுமுறையும் கொடுத்து 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக அமர்த்தி சம்பளம் கொடுக்கப்படுகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் வேலையே செய்யாமல் ஊதியம் பெற நினைக்கின்றனர். அமெரிக்காவிலோ பிரித்தானியாவிலோ இவை சாத்தியமில்லை.

கிளிநொச்சியில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம்:

பிரதேச செயலகத்திற்கு தன் காணி உறுதிப்பத்திரத்தை எடுக்கச் சென்றிருந்தார் என் சகோதரி ஒருவர். அங்கு நால்வருக்கு மேல் பணியில் இருந்தனர். 100 ரூபாயை வாங்கி அதற்கு பற்றுச் சீட்டைக்கொடுத்து காணி உறுதியை கையளிக்க வேண்டும். அவர் அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு சேவை பெறுவதற்கு வேறு யாரும் வந்திருக்கவில்லை. அதேசமயம் இவர் சென்றதும் இருந்த பணியாளர்கள் ஆளுக்கு ஆள் கண்ணைக் காட்டினார்களேயொழிய யாரும் அவருடைய தேவையைக் கேட்கவில்லை. அவரை இருக்கும்படி உதரவிட்டுவிட்டு, குசு குசுத்தனர். பின்னர் ஒருவர் வந்தார் அவர் ‘நான் அக்ரிங் தான். அதுக்காகா நானா எல்லாருக்கும் அக்ரிங்’ என்று புறுபுறுத்துவிட்டு ஒரு மணிநேரம் இழுத்தடித்துவிட்டு காணி உறுதியைக் கொடுத்தனர். என் சகோதரி முழுநேரம் வேலை பார்ப்பவர். அவர்கள் தாங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் இல்லாமல் தன் நேரத்தையும் வீணடித்துவிட்டார்கள் என்று சினந்துகொண்டார். இலங்கையில் அரச ஊழியர்களின் நிலை இது தான். புகையிரத ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்து பல்லாயிரக்கணக்காணவர்களின் நேரத்தை வீணடித்தது போல.

இந்த லட்சணத்தில் ‘Gotta Go Home’ வேறு. கோட்டபாயா ராஜபக்ச செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் 15 வீதமாக இருந்த பொருட்களுக்கான வரியை ஐம்பது வீதத்தால் 8 வீதமாகக் குறைத்தது. இந்த வரிக்குறைப்புச் சலுகையை அனுபவித்தவர்கள்தான் இப்போது ‘Gotta Go Home’ கோஷம் போடுகின்றனர்.

கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும்:

இவ்விடத்தில் கோவிட் தாக்கத்தை தவிர்க்க முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் செல்வந்த நாடுகளாகவும் அறிவுக் கணதியான நாடுகளாக இருந்தும் அந்நாட்டு தலைவர்களின் முட்டாள் தனங்களினால் கோவிட்டினால் இறந்த மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கு. அமெரிக்காவில் கோவிட் இனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது, அயல்நாடானான இந்தியாவில் கோவிட்டினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. இந்நாடுகளில் இன்றும் பல நூறு பேர் இறந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சராசரி தினமும் 200 பேர் இறந்துகொண்டுள்ளனர். அது பற்றி அத்தலைவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. அவை செய்தியாக வருவதும் இல்லை. ஆனால் இலங்கையில் இந்நிலை ஏற்படவில்லை. நாட்டின் எல்லைகள் முடக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதால் நாடு உயிராபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

ஆனால் கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கின்றது. பிரித்தானியாவில் 2 வீதமாக இருக்க வேண்டிய விலைவாசி உயர்வு ஏழவீதத்தைக் கடந்து விட்டது அமெரிக்காவில் அது பத்து வீதத்தை தொட்டுவிட்டது. இலங்கையில் 21 வீதத்தை கடந்துவிட்டது. ஆனாலும் இந்நாடுகளில் வேலையற்றோர் வீதம் இன்னமும் குறைவாகவே காணப்டுவது சாதகமான அம்சமே.

உலக விலைவாசி உயர்வு:

கோவிட்கால முடக்கத்திலும் மக்கள் வருமானத்தை இழக்காததும் (அரசு மற்றும் உதவிகள்) செலவீனங்கள் குறைந்திருந்ததும் (நாடுகள் முடக்கப்பட்டு இருந்ததால் செலவு செய்ய வழியிருக்கவில்லை.) இப்போது முடக்கம் தளர்ந்ததும் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துவிட்டது. ஆனால் கோவிட்காலத்தில் முடக்கப்பட்ட நிறுவனங்கள் இன்னமும் மீள இயங்க ஆரம்பிக்காததால் (குறிப்பாக சீனாவில் இருந்து உற்பத்தி சகஜநிலைக்கு வரவில்லை) பொருட்களின் தட்டுப்பாடு விலையை அதிகரித்தது. அத்தோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எரிபொருட்களின் விலையை எகிற வைத்தது. தானியங்களின் விலையை எகிற வைத்தது. அதனால் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. இந்த விலையேற்றம் என்பது தேவைகளின் அதிகரிப்பும் உற்பத்திச் செலவின் அதிகரிப்பும் இணைந்ததாக உள்ளது. அத்தோடு இலங்கை முற்றிலும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருந்ததால் நாட்டின் நாயணத்தின் பெறுமதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அமெரிக்க இந்த விலையேற்றத்தை சமாளிக்க சீனப் பொருட்களின் மீது விதித்திருந்த வரியை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த விலையேற்றம் மற்றும் பிரச்சினை இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையும் அல்ல.

கோத்தபாய செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்:

கோவிட் முடக்கம் உலகத்தையே முடக்கியது. இலங்கையில் அந்நியச் செலவாணியை ஈட்டும் உல்லாசப்பயணத்துறை முற்றாக ஸ்தம்பித்தது. நாட்டிற்கு எவ்வித வருமானமும் இல்லை. ஆனால் இறக்குமதி எகிறியது. இந்த நெருக்கடி நிலையை அரசு எதிர்வு கூறியிருக்க வேண்டும். அதனைச் சமாளிப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். கடன்களை மீளச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பை மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அரசு அறிவித்திருக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நீண்ட காலத்திற்கு முன்னரே முடக்கி இருக்க வேண்டும். உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அறிவு வளத்தை இதனை நோக்கி திசை திருப்பி இருக்க வேண்டும். இவ்வளவு சூரிய ஒளியை வருடம் முழவதும் பெறும் இலங்கை எரிசக்தியில் தன்னிறைவை காண்பதை நோக்கிச் சென்றிருக்க வேண்டும்.

எண்பதுக்கள் முதல் இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதனைச் செய்யவில்லை. ராஜபக்சாக்களும் செய்யவில்லை. ராஜபக்சாவை மாற்றி ரணிலைக் கொண்டு வந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையை அடகு வைக்கும் போராட்டம், போராட்டம் அல்ல அரசியல் கும்மாளமாகவே அமையும். எவ்வித புரட்சிகர சிந்தனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிப் பிளம்பில் நடக்கும் போராட்டங்களில் பொழுது போக்குக்காக ஈடுபட்டு எதிர்காலத்தில் உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் நாட்டை இட்டுச்செல்லாமல் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளை வரவழைத்து அந்நியச் செலவாணியை ஈட்டுவது இப்பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை மீளச் செலுத்தாதே என்று கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை ரத்து செய்யக் கோரவில்லை?
ஏன் இந்த போராட்டகாரர்கள் அநியாய வட்டி வாங்காதே எனக் கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் எதிர்க்கவில்லை?

இந்தப் போராட்டங்களினதும் ரணிலினதும் வரவினாலும் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் தலையீடு செய்யும். நாட்டுக்கு மேலும் மேலும் கடன் வழங்குவார்கள். வட்டி வீதத்தை கூட்டுவார்கள். பெற்றோல் எரிவாயுவிற்கு வழங்கிய மானியத்தை குறைப்பார்கள் அல்லது நிறுத்துவார்கள். பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் நிரந்தரமாக மிகக் கூடுதலாக அதிகரிக்கும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் நிதி குறைக்கப்பட்டு அந்நிதி கடனுடைய வட்டியைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இறக்குமதிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி கூடும். அதன் பின் இன்று போராடிய உயர்தர மத்தியதர வர்க்கம் இல்லாதவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக? நிச்சயமாக இலங்கை மக்களுக்காக அல்ல.

ஒத்திவைக்கப்பட்டது ஆசிய விளையாட்டு போட்டிகள் – காரணம் என்ன..?

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் திகதி முதல் 25-ம் திகதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

மேலும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.