கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்

cidam.jpgஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்து இர‌ண்டாவது நாளாக (06) ஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்” எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். 
 

காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன்

Attack on School in Gazaகிளிநொச்சியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியதாக ஜனவரி 2ல் அறிவிக்க அதற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மத்திய கிழக்கில் காஸாவிற்கு ஜனவரி 3 அன்று இஸ்ரேலியப் படைகள் அனுப்பப்பட்டு காஸா முற்றுகைக்கு உள்ளானது. காஸாவாக இருந்தாலென்ன கிளிநொச்சியாக இருந்தாலென்ன யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவையாக அதிகார வேட்கை குன்றாததாக அப்படியே இருக்கின்றது. ஆனால் காஸாவிலும் சரி கிளிநொச்சியிலும் சரி பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையாகத் தொடர்கிறது.

‘சுதந்திரக் காற்றை சுவாசிக்க வன்னி மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்கு ஆரம்பித்து வைத்த யுத்தம் ஒரு குறியீட்டு வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்து உள்ளது. அதே பாணியில் பெப்ரவரி 10ல் வரவுள்ள தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரப்ப இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மட் தனது துருப்புக்களை காஸாவிற்கு அனுப்பி உள்ளார். ‘இது பாலஸ்தினியர்களுக்கு எதிரான யுத்தமல்ல ஹமாஸின் ஏவுகணைகளை அழிப்பதற்கான யுத்தம்’ என்று விளக்கம் அளிக்கும் எகுட் ஒல்மட் அங்கு சில தினங்களுக்கு உள்ளாக கொல்லப்பட்ட பல நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய பொது மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அந்த மரணங்களுக்கு ஹமாஸே பொறுப்பு என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கிறார்.

கிளிநொச்சியினதும் காஸாவினதும் புவியியல் அமைவுதான் மாறுபட்டு உள்ளதே அல்லாமல் இந்தப் பிரதேசங்களின் யுத்தப் பின்னணியும் அதில் ஈடுபடுபவர்களின் பின்னணியும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. பிரித்தானிய காலனியாதிக்கத்துக்குள் இருந்தது உட்பட, இலங்கை – இஸ்ரேல் உள்நாட்டு யுத்தங்களில் ஒத்த புள்ளிகள் நிறையவே உள்ளன. மேலும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிடம் பயிற்சி எடுத்ததும், இலங்கை இராணுவம் மொசாட்டிடம் பயிற்சி எடுத்ததும் தெரிந்ததே. பிற்காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே காலப்பகுதியில் பயிற்சிகளை வழங்கியதும் அம்பலமாகி இருந்தது.

இலங்கை, இஸ்ரேலிய அரசுகளின் ஒடுக்குமுறையும் கட்டற்ற இராணுவப் போக்கும் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரு அரசுகளுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தன்னால் வளர்க்கப்பட்ட பின்லாடனால் (அல்கைடா) செப்ரம்பர் 11, 2001ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை வைத்துக் கொண்டு உலகின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த முத்திரை விடுதலைப் புலிகளுக்கும் ஹமாஸிற்கும் சேர்த்துக் குத்தப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த பயங்கரவாத முத்திரையைக் குத்தவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது. இன்று இலங்கை இஸ்ரேல் உட்பட அரச பயங்கரவாதங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறது அமெரிக்கா. ‘இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை (காஸா மீது தாக்குதல் நடத்துவதை) எடுப்பது தவிர்க்க முடியாது’ என்று ஜோர்ஜ் புஸ் காஸா மீதான தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். உலக சமாதானத்தைச் சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காஸா பற்றி மௌனமாகவே இருக்கிறார். இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ள அவர் இஸ்ரேல் விடயத்தில் ஜோர்ஜ் புஸ்ஸின் தடங்களையே தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அரசுகள் மட்டும் தான் அதிகார வேட்கையுடன் நடந்துகொள்கின்றன என்று கூறிவிட முடியாத அளவுக்கு அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களும் அதிகார வேட்கையுடனேயே இயங்குகின்றனர். இதில் விடுதலைப் புலிகளும் ஹமாஸ்ம் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள். தங்களுடன் உடன்படாதவர்களை தீர்த்துக் கட்டும் இவர்களின் அரசியல் இவர்களின் அமைப்புகளில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு உள்ளது. ஹமாஸ்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடு, முன்னையது மத அடிப்படைவாத அமைப்பு பின்னையது இன அடிப்படைவாத அமைப்பு. இரு அமைப்புகளுமே மக்கள் விடுதலை என்ற பெயரில் அவர்களை மந்தைகளாகவே நடத்துகின்றனர்.

யசீர் அரபாத்தின் ‘பற்றா’ இயக்கத்தைசச் சேர்ந்த பாலஸ்தீனிய ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ பலம் அழிக்கப்படுவதை மறைமுகமாக விரும்புகிறார். ஹமாஸ் காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளது. ‘பற்றா’ வெஸ்ற் பாங் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்த உள்ளது. இந்த ‘ஹமாஸ் – பற்றா’ முரண்பாட்டில் ‘பற்றா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலரை ஹமஸ் இந்த போர்ச் சூழலிலும் படுகொலை செய்து உள்ளது. ஆனால் பாலஸ்தீனிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுவதால் குறைந்த பட்சம் மொகமட் அப்பாஸ் இஸ்ரேலுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தங்கள் அதிகார  ஆசையை தக்க வைத்துக் கொண்டால் சரி என்று புலி எதிர்ப்பு அணிகள் எல்லாம் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் தொங்கிக்கொண்டு உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் வன்னி யுத்தத்தில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி மூச்சுக் கூடவிடவில்லை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று அர்த்தமில்லை. ‘புலிக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி மக்களுக்கும் பொசிந்து உள்ளது.’

இலங்கையில் உள்ள புலியெதிர்ப்பு தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கை அரசின் தயவில் தங்கி இருப்பதாலும் புலிகள் பலமிழந்து போகும் பொது ஏற்படும் வெற்றிடத்திற்கு தாங்கள் தெரிவு செய்யப்படுவோம் என்ற கனவிலும் மறந்துபோயும் மகிந்தவின் மனம் கோணாமல் நடந்தகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ‘அதிகாரத்தை தகர்கிறோம் பார்’ என்று இஸங்கள் பேசியவர்களும் மகிந்தவின் சிவப்புச் சால்வையில் ஒரு துண்டைப் பிடித்தவிட வேண்டும் என்று உன்னி உன்னிப் பார்க்கிறார்கள். மக்களின் பக்கத்தில் நின்று பிரச்சினையை நோக்க இவர்கள் தயாரில்லை. இவர்களது புலியெதிர்ப்பு ‘கட்ராக்’ நோயினால் இவர்களுக்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு வலது – இடது என்று விதிவிலக்கு எதுவும் இல்லை.

இவ்விடத்தில் கட்டுரையாளர் நஜிமில்லாஹி தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையின் ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ”இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.”

கட்டுரையாளர் நஜிமில்லாஹியின் அச்சம் (முழுமையாக அவருடைய கட்டுரையைப் படிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி : http://thesamnet.co.uk/?p=6137) மிகவும் நியாயபூர்வமானது.

கிழக்கை வெற்றி கொண்ட மகிந்த அரசு முற்றிலும் ஒரு பொம்மை மாகாணசபையொன்றை கிழக்கில் உருவாக்கி உள்ளது. மகிந்த மாத்தையாவின் பஸ்ஸில் எங்கு போகிறோம் என்று கேட்காமலேயே தொங்கிக்கொண்டு ஏறியவர்கள் கருணா – பிள்iளையான் அணியினர். மகிந்த மாத்தையாவின் உண்மையான ‘கோளயாக்கள்’. அப்படி இருந்தும் கிழக்கு மாகாண சபைக்கு குறைந்தபட்சம் 13வது திருத்தத்தைக் கூட முழுமையாக கொடுக்க ஜனாதிபதி தயாராகவில்லை.

இப்போது வடக்கை விடுவிக்கிறேன் சுதந்திரக் காற்றை வீசச் செய்கிறேன் என்று கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இராணுவம் புறப்பட்டு உள்ளது. வடக்குக்கான உள்ளுராட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசு ஜனவரி 6ல் அறிவித்து உள்ளது. கிழக்கு போன்று வடக்கிலும் டக்ளஸ் மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஆதரவுடன் தேர்தல் இடம்பெற்று ஒரு பொம்மை அரசு உருவாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே நிறைய உள்ளது. அந்த பொம்மை அரசுகளில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் புலத்தில் இருந்தும் சிலர் ஓடிச்சென்று தங்கள் முன்னாள் அமைப்புகளுடன் ஒட்டிக்கொள்ளலாம். சின்னமாஸ்ரர், பிரபாகரன், ஜெகநாதன், குமாரதுரை என்று இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் நீளலாம்.

ஆனால் இந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைத் தன்னும் தீர்க்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே.

இன்று மக்களுக்கு அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க அவர்கள் சுவாசித்து தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உண்மை. அந்த வெளி எதிர்காலத்தில் நிரந்தரமாக பிரச்சினையைத் தீர்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இவ்விடயத்திலேயே மகிந்தவின் அரசு மீதான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. பொங்கல் பரிசாக குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி என்ற கதையாடல்கள் மூலம் அடிப்படைப் பிரச்சினையை அரசு ஓரம்கட்டப் பார்க்கிறது. கிளிநொச்சி பிடிக்கப்பட்டதை தனது கட்சி அலுவலகங்களுடாக வெடிகொழுத்திக் கொண்டாடிய அரசு, கொழுத்திய வெடியில் இலங்கை மக்களின் பால்மா பிரச்சினை அடிபட்டுப்போனது.

இலங்கை – சிங்கள, தமிழ், முஸ்லீம் ,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பி குறுகிய சுயநல அரசியல் நோக்குடன் செயற்பட்ட காலம்காலமாக பதவிக்கு வந்த அரசுகள், நாட்டை இந்த யுத்தச் சூழலுக்குள் தள்ளி சிரழித்து உள்ளன. இந்த நச்சுச் சூழலில் இருந்து உடைத்து வெளியே வந்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் கவனம்கொள்ளும் என்ற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித சமிஞ்சையையும் அவர்கள் காட்டவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது என்ற பாடத்தை இலங்கை – இஸ்ரேலிய அரசுகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளன.

ஹமாஸ் – புலிகள் வானத்தில் இருந்து பூமியில் தற்கொலைப் போராளிகளாகக் குதிக்கவில்லை. அங்கிருந்த அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த அரசியல் சூழலில் அடிப்படை மாற்றம் ஏற்படும்வரை ஹமாஸை – புலிகளை அழிக்க முடியாது. ஹமாஸ்க்கும் புலிகளுக்குமான தேவை இருக்கும் வரை சேக் அமட் யசின் – பிரபாகரன் போன்றவர்கள் தங்கள் பயங்கரவாத அரசியலை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

இன்று (ஜனவரி 6) இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் காஸாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  30 மாணவ மாணவியர் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற கோரச் செய்தி வெளிவந்தது. செஞ்சோலையில் கடந்த ஆண்டு 64 மாணவிகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. தவறான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எப்படி விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்? ஹமாஸ் – புலிகள் பொறுப்பற்று நடந்தால் அவைசார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படித் தண்டிக்க முடியும்? இவ்வாறான தாக்குதலை நடத்துகின்ற இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் பொறுப்பென்ன?

சேக் அசாத் யசின் – பிரபாகரன் ஆகியோரின் விளைநிலங்களே இந்த இலங்கை – இஸ்ரேலிய அரசுகளின் அரச பயங்கரவாதம் என்றால் மிகையல்ல.

இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது பற்றியது அல்ல எமது ஆதங்கம். அந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவிப் பொது மக்களும், பலாத்காரமாகவும் பொருளாதார நெருக்குதலாலும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு சிறிய பயிற்சியுடன் முன்னரங்க காவல்நிலைகளில் விடப்படும் இளம் போராளிகளின் இழப்புமே. மேலும் பொருளாதார அடிமட்டத்தில் இருந்து தள்ளப்பட்ட இராணுவ வீரர்களதும் இழப்பும். இந்த இழப்புகளின் மீது பெறப்பட்டது தான் இந்த கிளிநொச்சி நகர் மீதான வெற்றி.  இது ஒரு குறியீட்டு வெற்றியே அல்லாமல் வேறொன்றுமல்ல.

அந்த வெற்றியின் மீது காதல் கொண்டு அறிக்கைகளும் கருத்துகளும் தூள் பறக்கின்றன. அதில் புலம்பெயர் தீவிர புலி எதிர்ப்பு அணியும் பின்நிற்கவில்லை. மகிந்த அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் போடும் கூத்து தாங்க முடியவில்லை. ‘புலிகள் அங்கு தாக்கி விட்டார்கள். இங்கு தாக்கிவிட்டார்கள். தமிழீழத்தை அண்மித்துவிட்டோம்’ என்று புலம்பெயர் புலி அதரவு வாலாக்கள் போட்ட கூத்திற்கு எவ்வித குறைவில்லாமல் புலம்பெயர் மகிந்த ஆதரவு வாலாக்கள் கூத்தடிக்கிறார்கள்.

காஸா மீதான இஸ்ரெலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஜனநாயகம் – மாற்றுக் கருத்து பேசுபவர்கள் முரண்நகையாக இலங்கை அரசு வன்னி மீது மேற்கொள்ளும் முற்றுகையை வரவேற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் என்றும் இலங்கை அரசபடைகளின் வன்னி யுத்தம் தவிர்க்க முடியாதது என்று விளக்கம் வேறு. யுத்தம் என்பது புனிதமானது அல்ல. ஹமாஸ் நடத்தும் யுத்தமும் புனிதமானதல்ல. ஹமாஸ், விடுதலைப் புலிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களுமல்ல. சளைத்தவர்களுமல்ல. எதிலும். இஸ்ரேலினுடைய இராணுவ நடவடிக்கை எவ்வளவு மோசமானதோ அதேயளவு இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அடிப்படையில் மோசமானதே. ஹமாஸ் விடுதலைப் புலிகள் இரண்டுமே ஒரே அடிப்படைவாத அரசியலையும் ஒரே மாதிரியான அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்களைக் கொண்ட அமைப்புகளே. இவற்றில் ஏற்ற இறக்கங்கள் பார்ப்பதில் அர்த்தமில்லை.

அடிப்படை அரசியல் பிரச்சினைக்கான தீர்வை கொண்டிராத இராணுவ நடவடிக்கைகளும், வெற்றிகளும் இஸ்ரேல் – இலங்கையில் மட்டுமல்ல உலகின் எப்பாகத்திலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை. இதந்தப் பாடம் இஸ்ரேலுக்கோ இலங்கைக்கோ புதிதல்ல. 2006ல் இஸ்ரேல் லெபனானில் இதைக் கற்றுக்கொண்டது. ஆனால் புரிந்து கொள்ளாமல் மீண்டும் கஸாவில் அதே தவறைச் செய்கிறது. யாழ்ப்பாணத்தை, கிழக்கை இலங்கை அரசு வெற்றி கொண்டது. ஆனால் அங்கு வன்முறைகள் தொடர்கிறது. இன்றுள்ள இராணுவச் சமநிலை மாற்றப்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இதில் இந்தியா உட்பட சர்வதேச அரசியல் மாற்றங்கள் அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது இராணுவச் சமநிலையை மாற்றமடையச் செய்யலாம். இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஹமாஸ் – விடுதலைப் புலிகள் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது. ஆனால் மட்டற்ற அரச பயங்கரவாதம் அவர்களின் பயங்கரவாதத்திற்கு விளைநிலமாக உள்ளது. முன்னையதற்கு முற்றுப் புள்ளி வைத்து அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அதுவே ஹமாஸ் – புலிகளின் அடிப்படைவாத அரசியலின் முடிவின் ஆரம்பமாக இருக்கும். அடிப்படை அரசியல் மாற்றம் இல்லாத இந்த இராணுவ நடவடிக்கைகளும் வெற்றிகளும் அடிப்படைவாத பயங்கரவாத அரசியலுக்கான விளைநிலங்களாக மாறுவது தவிர்க்க முடியாது. இந்தப் அடிப்படைப் பாடத்தை திரும்பத் திரும்பக் கற்றுக்கொண்டும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்ரேலிய அரசு – இலங்கை அரசு – ஹமாஸ் – புலிகள் புரிந்துகொள்ள மறுக்கும் அரசியலுக்கு பாலஸ்தீனியர்களும் தமிழர்களும் செலுத்தும்விலை மிக மிக அதிகம்.

பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும், பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு : நஜிமிலாஹி

Sri lanka Mapமனித உரிமைகள் பற்றி அதிகம் பேசப்படும் காலகட்டம் இது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அவதானங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் இலங்கை மனித உரிமைகளை மீறும் விடயத்தில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளதை நாம் அறிவோம். இன்று மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் உச்சகட்டமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (Responsibility to protect-R2P)  என்றொரு கருத்தாக்கம் சர்வதேச அரசியல் அறிஞர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிக் குழு ( International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் கொழும்பில் நடந்த மாநாடொன்றில் இலங்கைக்கும் இவ்வெண்ணக்கருவின் பொருத்தப்பாடு பற்றி விளக்கினார். “ ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்கமாக ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது”. கரீத் இவான்ஸ் இங்கு மேலும் கூறுகையில் “கம்போடியா ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவோ பாணியிலான பாரியளவிலான கொடூர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது உடனடியாக அப்படியான ஒரு நிலமை தோன்றும் ஒரு சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கு இருக்கிறது. எனவே அது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின், இந்த நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது”.  கரீத் இவான்ஸின் இந்தக் கருத்து சில சிங்கள அறிவுஜீவிகளாலும் அரசியல் வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
 
எனினும் இலங்கையின் சமகால அரசியல் போக்குகளைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இலங்கையை இத்தகையதொரு நிலைமைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன என சொல்லத் தோன்றுகிறது. உடல்சார் வன்முறைகள் இல்லாவிட்டாலும் கருத்தியல்சார்  வன்முறை ரீதியாக் சிறுபான்மையோருக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக் கெதிராக இந்தக்கருத்தியல் வன்முறையை ஜாதிக ஹெல உறுமயசார்ந்த அரசியல் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை வரலாரற்றவர்கள் வந்தேறுகுடிகள் நாட்டுரிமம் அற்றவர்கள் போன்ற  மெகா கதையாடல்களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஹெல உறுமய இதனைச்சாதித்து வருகிறது. வெகுசன மக்கள் பரப்பில் இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். மஹிந்த அரசாங்கம் இந்த இனவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதாக இல்லை. இராணுவத்தளபதி கூட நாட்டுரிமம் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தும் சிறுபான்மை நலனுக்கு எதிராகவே அமைந்திருந்தது.
 
இலங்கையின் சமகால அரசியல் முக்கிய அடையாளமாக இனவாதம் இருந்து வருவது ஒன்றும் நமக்குப்புதிதல்ல எனினும் சிறிது காலம் வெளிப்படையான இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் இங்கு ஓரளவு தணிந்திருந்தன. கிழக்கு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கில் இராணுவ வெற்றிகள் பலவற்றை அரசாங்கம் அடைந்து வருவதையடுத்தே தற்போது இந்த இனவாத அலை மேற்கிளம்பியுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த பேரினவாதக் கருத்துநிலை வெகுசனப்பரப்பில் ஊட்டிவளர்க்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை அரசியல்-சமய தளங்களில் ஒரு பெரும் மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இச்செயற்பாடு என எண்ணத் தோன்றுகிறது. பௌத்த அடிப்படைவாதம் முஸ்லிம்களின் சமய மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறுகிய மனப்பான்மையை கொண்டுள்ளன. தற்போது முஸ்லிம்களின் சில சமய நடவடிக்கைளில் தலையீடுகளைச் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கின்றனர் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதுவெல்லாம் இப்போது செய்யப்படுவதன் நோக்கமென்ன? அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வரும் இந்நிலையிலேயே இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கிலும் ஒரு பூரண வெற்றி கிடைத்த பின்னர் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான நேரடி மோதல்களை பௌத்த அடிப்படைவாதிகள் மேற்கொள்ளக்கூடும்.
 
அப்படியானால் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பயங்கரமானவை என்பதையே சமகால அரசியல் நடப்புகள் காட்டுகின்றன. ஏனவே R2P போன்ற கருத்தாக்கங்கள் இலங்கைக்கும் பொருந்தி வருகிறது. இக்கருத்தாக்கத்தை மக்கள் மயப்படுத்துவதும் இலங்கைக்க்ன அதன் பொருத்தப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு எடுத்தக்காட்டுவதும் சமூக சக்திகளின் தலையாயப் பொறுப்பாகும்.
 
இப்போது கருத்தியல் வடிவில் முன்வைக்கப்படும் இந்த வன்முறைகள் பின்னர் மக்களை உணர்ச்சியூட்டி சமூக மோதல்களாக திட்டமிட்டு மாற்றப்படலாம். அதன் பின் ஏற்படப்போகும் அழிவுகள் மோசமானவை. எனவே இந்த விவகாரம் சிறுபான்மை சமூக சக்திகளாலும் பெரும்பான்மையின மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிறந்தமுறையில் அணுகப்பட்டு முடிவுகள் கண்டடையப்பட வேண்டும். எனவே சிறுபான்மை சமூகங்கள் தங்களது அரசியல் களத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு வந்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் சிறுபான்மை அரசியல் களம் வடிவமைக்கப்பட வேண்டும். பௌத்த அடிப்படைவாதக்குழுவொன்று இப்போது பாரிய திட்டமொன்றுடன் இயங்கத் தொடங்கயுள்ளது.

நடைமுறையிலிருக்கம் இந்த அரசாங்கத்தின் துணையுடன் இலங்கையை பௌத்தமயப்படுத்தம் திட்டமொன்றை வகுத்தள்ளனர். இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவதில் முதலில் முன்னுள்ள தடைகளை அடையாளங்கண்டு அவைகளை அழித்தாக வேண்டும். புலிகள் இதற்குப்பாரிய தடையாக இருந்தனர் இராணுவ ரீதியான வெற்றிகள் இத்தடையையும் விரைவில் முற்றாக நீக்கிவிடுவதற்கான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
 
அரசியலன்றி சமயமே இந்த அரசியல் பௌத்தவாதிகளின் முக்கிய இயங்கு தளமாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்துக்களும் பௌத்தர்களும் சமய ரீதியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. இனம் சார்ந்த அரசியல் முரண்பாடுகளே இரு சமூகங்களுக்குமிடையில் நிகழ்ந்தது. சமய அடிப்படையில் இந்து சமயமும் பௌத்தமும் இந்தியாவில் தோற்றம் பெற்றன. இப்போதுள்ள நிலையில் இந்து சமயம் பௌத்தத்தை உள்வாங்கிக் கொண்டு விட்டது. இலங்கையிலும் இவ்விரு மதங்களும் தங்களுக்கிடையில் இடையூடாட்டத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வணக்க ஸ்தலங்களில் வழிபடுமளவுக்கு சமய நெருக்கத்தினைக் கொண்டுள்ளனர்.

இந்நெருக்கம் அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால் ஒரு ஆரோக்கியமான சமூக உறவை அவர்களுக்கிடையில் ஏற்படுத்தும். எனவே ஹெல உருமயவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசத்துடன் நேரடியான மோதுகை உறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் அரசியல் தளங்களில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்படுவதற்கான சூழலையே தேசிய அரசியல் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே சிங்கள தேசத்தின் அதிகார அரசியலுக்கு சவால் விடுக்கக் கூடிய சக்திகள் இல்லாத இலங்கையில் சிறுபான்மைக் காப்பீடென்பது இனி சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும். எனவே R2P போன்ற கருத்தாக்கங்களை உரையாடல் மயப்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களாகிய நமது பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான உரிமை எங்களுக்கும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றவர்களுக்குமுண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.   

காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் தீக்கிரை; ஐ. நா அலுவலகங்கள் மீது கல்வீச்சு

ag-gasa.jpgகாஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வியுற்று இஸ்ரேல் தரை மார்க்கமான தாக்குதலை காஸாமீது ஆரம்பித்துள்ளதால் மிக மோசமான நெருக்கடிகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கின்றனர். பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் தஞ்சமடைந்த அப்பாவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலில் அறுபது பேர் உயிரிழந்தனர். காஸாவில் இதுவரை ஐநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்தும் இரண்டாயிரம் பேர் காயமடைந்துமுள்ளனர். தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் அங்கு பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே பலியாகியும், காயமடைந்துமுள்ளனர். இவ்வாரான நிலைமைக்கு காரணமான இஸ்ரேலைக் கண்டித்து அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பெருந்தொகையானோர் இதில் பங்கேற்பதால் பொலிஸார் திணறுகின்றனர். எகிப்து, லெபனான், மொரோக்கோ, நோர்வே, பிரான்ஸ், கிரேக்கம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எகிப்தில் இடம்பெற்ற காஸாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அறுபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். தலைநகர் ஸ்தான்புல் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்ததால் அன்றைய தினம் வழமையான அலுவலகங்கள் அனைத்தும் செயலிழந்தன. அரபு ஆட்சியாளர்களையும் எகிப்து ஜனாதிபதியையும் மிக மோசமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

இஸ்ரேலைக் கண்டிக்கும் மிக மோசமான வார்த்தை கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெனர்கள், போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நோர்வே, கனடா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இவர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டதால் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முடியவில்லை. நிலைமை மோசம டையவே கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடந்த அனைத்து நாடுகளிலும் இஸ்ரேல், அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, இஸ்ரேல் தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில நாடுகளில் இருந்த ஐ. நா. அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஈராக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புஷ்ஷ¤க்கு காலணிகளை வீசிய ஊடகவியலாளரின் புகைப் படமும் ஏந்திச் செல்லப்பட்டது. கர்பவாவில் இது நடந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு ஒட்டுசுட்டான் பிரதேசமும் முழுமையாக வீழ்ந்தது

lanka-map.jpgபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 

பரந்தனில் மும்முனைகளில் படையினரின் முன்நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு

0301-ltte.jpgபரந்தன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;

பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா வட பகுதியில் கடும் சமர்; சில பகுதிகள் இஸ்ரேல் வசம்

gaasaa.jpgகாஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.

வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஒட்டுசுட்டான் படையினர் வசம். நிர்வாக, விநியோக நடவடிக்கைகள் துண்டிப்பு.

srilanka_army_.jpg முல்லைத்தீவிலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் நேற்று படையினர் வசமானது. முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறி வரும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் இந்தப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. ஒட்டுசுட்டானில் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணி நேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களின் போது இருபதுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், புலிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாங்குளம் – முல்லைத்தீவு ஏ-34 பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களை நேரடியாக சென்றடைய முடியும். இதனை சாதகமாக பயன்படுத்தி புலிகள் தமது பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ள படையினர் புலிகள் தமது நிர்வாக மற்றும் களஞ்சிய வசதிகளை முன்னெடுப்பதற்கு இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக திகழ்ந்துள்ளதென கூறியுள்ளனர்.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தமது முதலாவது நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான நெடுங்கேணியை கைப்பற்றினர். அங்கிருந்து வட பகுதியின் ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கையை மேற்கொண்டு நேற்று நண்பகல் ஒட்டுசுட்டான் நகருக்குள் பிரவேசித்துள்ளனர். இராணுவத்தின் 14வது சிங்க ரெஜிமண்ட் பிரிவினர் மேஜர் யு. எஸ். என். கே. பெரேராவின் வழிகாட்டலிலும், 642வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் பி. ரி. ஹத்னாகொடை தலைமையிலான படையினரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்த மோதல்களின் போது படையினர் புலிகள் பயன்படுத்தி வந்த புதுகுடியிருப்புக்குச் செல்லும் வீதியையும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் துண்டித்துள்ளனர். இதேவேளை புளியங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுசுட்டானை கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு உதவியாக விமானப் படையின் விமானங்களும் நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

தற்பொழுது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆனையிறவையும், முல்லைத்தீவையும் நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.