கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா? – இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.

SCO மாநாட்டிற்கு ஜூலையில் இந்தியா வருகிறார் சீன அதிபர்.
அங்கு எல்லைப்பிரச்சினை பேசப்படுமா?. ரூபாய்- யுவானில் இருதரப்பு வர்த்தகம் குறித்தான இணக்கம் ஏற்படுமா?. அல்லது QUAD மீதான சீனாவின் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுமா? . இவைகளும் இருதரப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படலாம்.

அதாவது ஷாங்காய் கூட்டமைப்பில் (SCO)பேசப்படும் சகல விடயங்களையும் ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கும் என்று கணிப்பிடலாம்.

QUAD என்பதும் ஒரு வகையில் BRI போன்ற Regional Connectivity திட்டந்தான்.
தற்போது அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களை அதிகம் (1 ரில்லியன்) வைத்திருப்பது ஜப்பான்.
சீன உட்பட பல நாடுகள் இப்பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன.
டொலர் index உம் வீழ்ச்சியடைகிறது.

அதேவேளை தம்மிடமுள்ள Bond களை விற்றால் அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகலாம் என்கிற பயம் ஜப்பானுக்கு.

இந்திய உட்பட பல நாடுகள் டொலரின் வர்த்தகம் செய்யாமல் தமது சொந்த நாணயத்தில் செய்ய ஆரம்பித்திருப்பதால் டொலரில் உள்ள சொத்துக்களுக்கும், அந்நிய செலாவணிக் கையிருப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் அச்சமடைகின்றன.

1944 இல் டொலரை மையப்படுத்திய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உருவாக்கம் இடம் பெற்றது. டொலரிற்கு ஆபத்து ஏற்படுகையில், இந்த நிதிமையங்களும் ஆட்டங்காணும்.

அதனை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகக் கணிக்கப்படும் ஜப்பானும் கவலையுடன் கவனிக்கும்.

மேற்குலகின் அரசியல், பொருளாதார, படைத்துறை ஆதரவு இருந்தாலும், ஆசியாவில் தனக்கான ஆதரவு நாடுகளைத் திரட்ட வேண்டிய அவசியம் ஜப்பானிற்கு உண்டு.

‘தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம்’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு இணைய முயற்சிப்பது போன்று, இந்துசமுத்திரப் பிராந்திலும் அதே சீன விரிவாக்கத்தைக் காட்டி இந்தியாவுடன் அணிசேர ஜப்பான் துடிக்கிறது.

இந்தியாவிலிருந்து திருக்கோணமலைக்கு எண்ணெய் குழாய் போடுவதன் ஊடாகவோ அல்லது இலங்கைக்கு நிதிஉதவி அளிப்பதன் மூலமோ இந்தியா-ஜப்பான்- இலங்கை என்கிற பிராந்திய இணைப்பினை உருவாக்கிவிட முடியுமென ஜப்பான் நினைக்கிறது.

அந்த நினைப்பு குறுகிய கால ஆயுள் கொண்டது என்பதனை மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் புரிய வைக்கும்.
அது பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்.

-இதயச்சந்திரன்
1/4/2023

“ராகுல் Vs மோடி மோதலும் – பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியலும்” : அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்

அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.

The many Khalistani attacks on Indian embassies from UK to America

மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளமிட்டது போல் தெரிகிறது. தற்போது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மீண்டும் கிளம்பியுள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ முழக்கங்கள் இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

ரஷ்யா-உக்ரேயின் போரில், ரஷ்யா மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் நழுவல் போக்கினை இந்தியா கடைப்பிடிப்பதாக மேற்குலகம் கருதுவதை, இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளும் பொதுவெளி ஊடக உரையாடல்களில் வெளிப்படும் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன. “ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமே உலகத்தின் பிரச்சினையல்ல” என்று ஜெயசங்கர் அவர்கள் கடும் தொனியில், ஊடகச் சந்திப்பொன்றில் கூறியது இம்மோதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Germany, Japan seek deeper ties during Scholz visit – DW – 04/27/2022

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மையம் கொண்ட குவாட்(QUAD) இல் இந்தியா இருந்தாலும், ஆக்கஸ் (AUKUS) என்கிற உயர் தொழில்நுட்பக்கூட்டில் இந்தியாவும் இல்லை. ஜப்பானும் இல்லை. ஆனாலும் சீனாவிற்கு எதிரான QUAD அணியில் இந்தியாவின் வகிபாகத்தைப் பலப்படுத்த G7 இலுள்ள ஜப்பானைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய அதிபர், நடைபெறும் போரில் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், தென்சீனக்கடலில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். இதனை ஜப்பான் ஊடான அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறை என்று கணிப்பிடலாம். ஆகவே இந்தியாவை மையச்சுழல் புள்ளியாகக் கொண்ட, மேற்குலகின் புவிசார் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதனை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையிலும் மேற்குலகின் இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் அக்கறை கொள்வதைக் காணலாம்.

அடுத்ததாக இந்திய அரசியலில் இதன் எதிர்வினைகள் என்னவென்று பார்க்கலாம். தமது பிராந்திய மூலோபாய நலனிற்குத் தேவையான நாடொன்று, நடுநிலையாகவோ அல்லது எதிரணியில் இருந்தாலோ, அந் நாட்டினை தம் பக்கம் இழுக்க பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் ஆட்சிமாற்றமும் ஒன்று. இவைதவிர புதிதாக ஒரு பொருண்மிய அல்லது இராணுவக் கூட்டினை அமைத்து, அந்த ‘சிக்கலான’ நாட்டினை உள்வாங்கிக் கொள்வார்கள். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சிமாற்றத்திட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கப்படுகிறது. அவரின் அண்மைக்கால புவிசார் அரசியல் கலந்த பேச்சுக்கள் மேற்குலக நிலைப்பாடுகளுக்கு இசைந்து போவதைக் காணலாம். இலண்டனில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய ராகுல் காந்தி, ‘ இந்தியா மீதான சீனாவின் பாரிய அச்சுறுத்தலை வெளிநாட்டமைச்சர் புரிந்துகொள்ளவில்லை’ என்கிறார். ஆகவே மேற்குலகின் புவிசார் அரசியலோடு இணைந்து, ஹின்டன்பேர்க் அம்பாக மாற, ராகுல் காந்தி வில்லாக மாறி அதானியையும், ‘ஹவாலா’ மோடிகளையும் விமர்சிக்கும் ஒரு இந்தியத் தலைவராக தன்னை இனங்காட்டிக் கொள்ள முனைகிறாரா? என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அவசர அவசரமாக எதிர்வினையாற்றிய மோடி அரசு, ஹவாலா மோடிகளோடு நரேந்திர மோடியை சரிநிகர் பிம்பமாக சித்தரித்துப் பேசிய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை முடக்கிவிட்டது.

ஆகவே இந்திய நாட்டின் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமாக இருப்பதால், அரசின் புவிசார் நிலைப்பாட்டில் மாற்றங்களை நிகழ்த்துவது கடினமானதாகவிருக்கும் என்பதே நிதர்சனமாகும். 18 நாடுகள் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்ய உடன்பட்டிருப்பதும், BRICS இன் விரிவாக்கமும் அதன் பொது நாணய உருவாக்க முன்னெடுப்பும், உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்படும் மாற்றமும், அமெரிக்க- ஐரோப்பிய வங்கிகளின் நிதி மூலதன வெளியேற்றங்களும் சேர்ந்து உலக நிதிக்கட்டமைப்பில் பெருமாற்றங்களை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக்களை காண்பிக்கிறது. இதில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாடு குறித்தே மேற்குலகமும் ஜப்பானும் அதிக கரிசனை கொள்கிறது. ஆனாலும் இந்தியா மீதான மேற்கின் மறைமுக அழுத்தங்கள் அதிகரிக்கும் போக்குகளே அதிகமாகும் என்று தெரிகிறது.

இதயச்சந்திரன் (25-03-2023)

“தேசிய பாடசாலைகளுக்கு மட்டும் ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க ஏற்பாடு ” – இலங்கையின் இலவச கல்வியை அங்கவீனமாக்குகிறதா கல்வி அமைச்சு ?

ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, அனைத்து தேசிய
பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.

தேசிய பாடசாலைகள் ஏற்கனவே அதிகப்படியான பௌதீக வளங்ளும் – ஆசிரிய வளங்களும் அதிகமாக கொண்டு காணப்படும் நிலையில் ஒப்பீட்டளவில் அடிப்படை கல்வி தொடங்கி பல விடயங்களில் பின்தங்கிய கிராமத்து பாடசாலைகளுக்கு கிடைக்கும் ஆசிரிய வளங்களும், பௌதீக வழங்களும் மிகச்சொற்பமானவையே. பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது கிராமப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாமலேயே வெளியேறும் துர்பாக்கிய நிலை இலங்கையில் காணப்படுகையில் கல்வி அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கில பாடசாலையை வழங்கவுள்ளோம் என அறிவித்துள்ளமையானது பிற்போக்குத்தனமான கல்வி அமைப்பொன்று இங்கு காணப்படுவதையே உறுதிசெய்கிறது.

இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வெள்ளை ஆடைகளை வழங்குவதன் நோக்கம் சமத்துவத்தை போதிப்பதேயாம் என கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் இதே கல்வி அமைச்சு தான் இன்று தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண கிராமப்பாடசாலை ஒன்றின் அதிபரிடம் வினவிய போது “முதற்கட்டமாக தேசிய பாடசாலைகளில் பேச்சு ஆங்கில திட்டத்தை நடைமுறைப்படுத்தி பின்பு அதன் வெற்றி தோல்விகளை நோக்கி சீரமைத்து பின்பு அனைத்து பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கில திட்டத்தை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கலாம். இந்த தேசிய பாடசாலைகள் – தேசிய பாடசாலைகள் அல்லாத பாடசாலைகள் என பாடசாலைகளை வகை நிர்ணயம் செய்வதே மோசமான செயலாகத்தான் நான் பார்க்கிறேன். இது பாடசாலை மாணவர்களிடமும் – அவர்களின் பெற்றோரிடமும் தேசிய பாடசாலைகள் தரமானவை என்ற எண்ணம் வந்தமையே இன்றைய கிராமிய பள்ளிக்கூடங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. இந்த நிலையின் ஒரு வடிவமே அண்மையில் யாழ்.நீர்வேலியில் மாணவர்கள் இல்லாததால் பாடசாலை ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவமாகும். இந்த கல்வி முறைமையே மாணவர்களிடம் நீ உயர்ந்த தேசிய பாடசாலையில் படிக்கிறாய் – நீ கீழான கிராம பாடசாலையில் படிக்கிறய் என்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது.” எனக்கூறி விசனம் வெளியிட்டிருந்தார்.

ஒரு உடலின் வளர்ச்சி என்பது அனைத்து அங்கங்களும் சமனாக வளர்வதேயாகும். தனித்து ஒரு சில உடல் அங்கங்கள் மட்டும் அதிகப்படியாக வளருமாயின் அதனை நோய் நிலை என்போம். இலவசக்கல்வி அனைவருக்கும் சமனாக கிடைப்பதேயாம். தனித்து தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிப்போம் என்பதும் – அதனால் ஆங்கிலம் தெரிந்த சமுதாயம் ஒன்று உருவாகும் என கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதும் அந்த நோய் நிலைக்கு ஒப்பானதே !

Silicon Vally Bank, Signature Bank, First Republic Bank, Credit Suisse, … அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.

நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.

ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.

தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.

நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.

இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.

ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.

வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.

இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.

‘நினைவேந்தல் உற்சவம்’: தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்!

 

மலையகத் தமிழர்களை அவமானப்படுத்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும் யாழ் நண்பர்கள் அமைபும் இந்திய தூதரகமும்!!
மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டன அறிக்கையை இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது!!!

நாளை மார்ச் 19 இல் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை நினைவுகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்வு தொடர்பிலேயே இச்சர்ச்சை எழுந்தள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகளுடன் மலையக மக்களின் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை ‘இந்தியதமிழர்கள்’ என அழைப்பிதழ் அடையாளப்படுத்தி உள்ளது. இதனை மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வை யாழ் நண்பர்கள் என்கின்றவொரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நண்பர்கள் என்ற பெயரில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அணுசரணையோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவரகள்: கலாநிதி சிதம்பரம்போமன், கே கோபாலகிருஸ்ணன், சு கமலதாஸ், கலாநிதி கந்தையா சிவராஜா, இரா ரட்ணேஸ்வரன், யாழ் எப் எம் சமனோகரன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வை ‘நினைவேந்தல் உற்சவம்’ என அழைப்பிதழ் குறிப்பிடப்பட்டிருந்ததையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் கடுமையாகக் கண்டித்து இருந்து. ‘நினைவேந்தல்’, ‘உற்சவம்’ போன்ற சொற்களின் விளக்கத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் ‘யாழ் நண்பர்கள்’ என்ற அமைப்பு அழைப்பிதழைத் தயாரித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம், 200 ஆண்டுகளுக்கு முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூருவது எப்படி உற்சவம் கொண்டாட்டமாகும் என்று கேள்வி எழுப்பியதுடன் இது 200 வருடங்களுக்கு முன் உயிரிழந்த மலையக மக்களை மலையகத் தமிழர்களையும் அவர்களது பரம்பரையையும் அவமானப்படுத்தும் செயல் எனக் கண்டித்துள்ளனர்.

200 ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள் பிரித்தானியர்களால் இலங்கைக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக; அவர்களுக்கு பொய்வாக்குறுதிகள் அளித்து; அவர்களை அவர்களது சொந்தபந்தங்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து; அடிமைகளாகக் கொண்டுவந்த நிகழ்வு வரலாற்றின் மிக மோசன நிகழ்வு. அன்று முதல் இன்று வரை அந்த மலையக மக்கள் தேயிலைக் கொழுந்துகளை தங்கள் முதுகில் சுமந்து தங்கள் முதகெலும்பை முறித்து இலங்கையின் பொருளாதாரத்தின் முதகெலும்பாக இருந்தவர்கள். அவர்களுடைய இந்த வலி மிகுந்த வரலாற்றை அது பற்றிய எவ்வித உணர்வும் பொறுப்புமற்ற மனிதர்கள் வெறும் சம்பிர்தாயத்திற்காக செய்ய முற்பட்டதன் விளைவுதான் இது.

இந்நிகழ்வு வலி மிகுந்த மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவிற்கொள்ளும் நிகழ்வு. இது நினைவேந்தல் என்ற உயிர்த் தியாகம் அல்ல. இது உற்சவமோ கொண்டாட்டமோ அல்ல.

மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றத்தின் கண்டன அறிக்கை பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களது வேர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுடன் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது; பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்காக இந்தியத் தமிழர் என்று குறிப்பிட்டதை, சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது உத்தியோகபூர்வமாகவும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அம்மக்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்றே அழைக்கின்றனர். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட வேண்டும்” என்றும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் “ஈழத் தமிழர்கள் என்ற பதம் சனத்தொகைக் கணக்கெடுப்பில் இல்லை. அதில் ஸ்ரீலங்கன் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்ளை ஈழத் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகின்றனர். அது அவர்களுடைய உரிமை” என்பதையும் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவ்வறிக்கையில் மலையகத் தமிழ் துறைசார் வல்லுநர் மன்றம் சார்பில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்: கலாநிதி எஸ் கெ நவரட்ணராஜா (Senior Lecturer, Engineering, University of Peradeniya), ரி ஜெயானந்தராஜா (Attorney-at-law, Colombo), பி சுந்தரசன்; (Pharmacist, Hong Kong) எஸ் விஜயகுமார் (Attorney-at-law, Ratnapura).

இந்நிகழ்வை சிறுபிள்ளைத்தனமாக ஏற்பாடு செய்த மொழியும் வரலாறும் தெரியாத யாழ் நண்பர்கள் அமைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லண்டனில் வாழும் அரசியல் விமர்சகரும் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான ஒருவர்: யாழ் நண்பர்கள் அமைப்பில் உள்ளவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரோக்கர்களும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக் கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் பொன் பாலசுந்தரம்பிள்ளை, ந சண்முகலிங்கன் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். அடுத்தடுத்து வந்த இவர்களுடைய நிர்வாகத்தின் கீழேயே யாழ் பல்கலைக்கழகத்தின் தரம் மிகத் தாழ்ந்து அதன் கடைநிலையை எட்டியதுடன் குறிப்பாக கலைத்துறை விரிவுரையாளர்களின் அந்தப்புரமாக்கப்பட்டது. இவர்கள் விட்டுச்சென்ற துச்சாதனர்கள் இன்றும் கலைத்துறையில் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். யாழ் சமூகம் சார்ந்த இத்துணை வேந்தர்களோ விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ இதுவரை குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அது பற்றிய அறிவும் சிந்தனையும் அவர்களிடம் இல்லை. இவர்கள் மலையக மக்களின் வலி மிகுந்த வரலாற்றை ‘நினைவேந்தல் உற்சவம்’ என்று குறிப்பிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழ் தெரியாத பண்டிதர்களும் வரலாறு தெரியாத புரொக்கர்களும் தான். தமிழர்களின் கல்வி நிலை இவ்வளவுக் வீழ்ந்ததற்குக் காரணம் இவர்கள் உருவாக்கிய பெரும்பாலும் சமூக அக்கறையற்ற இரண்டாம்தர பட்டதாரிகள் தான் வடக்கு கிழக்கின் கல்விக் கட்டமைப்பிலும் ஏனைய கட்டமைப்புகளிலும் உள்ளதுதான்.

இவர்களுடைய இச்செயல் யாழ் சமூகம் பற்றி மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் பற்றியும் தவறான புரிதலை ஏனைய சமூகங்கள் மத்தியில் விதைக்கின்றது.

தங்களுடைய அரசியல் அபிலாசைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற ஈழத்தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் பொறுப்புடன் செவிமடுத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். வடமாகாணத்தில் தற்போது கணிசமான நாற்பது வீதமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் வட மாகாணத்தில் இன்னமும் அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பூஜ்ஜிமாகவே உள்ளது. இந்திய அரசுக்கோ இந்திய தூரகத்திற்கோ தங்களுடைய நாட்டில் வாழும் மக்கள் மீது என்ன கரிசனை உள்ளது என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை. ஆகவே அவர்கள் மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்க முற்படுவது ஒன்றும் அம்மக்கள் மீது உள்ள கரிசனையினால் அல்ல. சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈழத் தமிழர்களை பயன்படுத்தியது போல் மலையகத் தமிழர்களையும் தன்னுடைய முதலாளித்துவ நலன்களைப்பாதுகாப்பதற்கு பயன்படுத்தவே.

இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு மிகத் தீவிரமாகி வருகின்றது. அதற்கான புரோக்கர்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். ஈழத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர்கள் நாம் அனைவருமே இலங்கை மக்களாக இருப்பது மட்டுமே எம் அனைவருக்கும் பாதுகாப்பு.

தமிழையும் வள்ளுவரையும் மானபங்கப்படுத்தும் யாழ் மாநகரசபை! மோடியின் கோமயம் எங்களுக்கு வேண்டாம்!!

திருவள்ளுவருக்கு பட்டையடித்து காவி போட்டு அவமானப்படுத்தும் உரிமையை யாழ் மாநகரசபைக்கு யார் கொடுத்தது? என்ற கேள்வி சுயசிந்தனையுடைய எவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் என்றவுடன் இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தானியுமாக முடிந்த சடையும் தாடியுடனும் வெள்ளைத்துணி போர்த்திய ஒரு மேலங்கியுடன் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நேரிய பார்வை கொண்ட தோற்றமே எம் கண்முன் வந்து நிற்கும். திருவள்ளுவர் என்று கூகுலில் தேடினாலும் அவ்வாறான ஒரு தோற்றத்தையே காண்பீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கிக் கொண்டிருக்கும் ஹொட்டல் உரிமையாளர்களும் மோடியின் மோமயம் பருகி மயங்கிக் கிடப்பவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வள்ளுவர் சிலையைத் திறந்து வள்ளுவத்தையே சிதைத்துள்ளனர். ஆறுமுகநாவலருக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் புரியாமல் சிலையொன்றைத் திறந்து வள்ளுவனை கேவலப்படுத்தி உள்ளனர்.

உலகப் பொதுமறை என அழைக்கப்படக்கூடிய திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருந்தார். திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதில் இருக்கக்கூடிய தத்துவ கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் ஆகியவற்றினால் திருவள்ளுவர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. திருக்குறள் ஒரு தமிழ் நூல் என்பதால் திருவள்ளுவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் அடையாளமாக கருதப்படுகின்றார். “1330 பாடல்களைக் கொண்டுள்ள திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் தனித்த ஒரு இனம் சார்ந்தோ – மதம் சார்ந்தோ –  ஒரு இனக் குழுமம் சார்ந்தோ –  சாதி சார்ந்தோ – எந்த குறிப்புகளும் இல்லை” என்பதே திருக்குறள் இன்று உலகப் பொதுமறை என கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.

இப்படியாக சிறப்பு கொண்ட திருவள்ளுவரின் சிலை இன்று காவி அடிக்கப்பட்ட நிலையில்  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று பட்டையுடன் ஒரு விதமான காவி வர்ணத்துடனான ஆடையை அணிந்து கொண்டு  காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். இந்த நிலை இன்னும் தீவிரம் அடையப் போகின்றது என்பது ஆக கவலையான விடயம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துத்துவாவாதிகள் கோமியம் என மாட்டு மூத்திரத்தை குடிப்பது போல இலங்கை தமிழர்களும் தங்களை இந்துத்துவாவாதிகள் என – இந்துக்கள் என நிரூபிப்பதற்காக மாட்டு மூத்திரத்தை  குடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இந்தியாவில் மிகத்தீவிரத்தன்மையை எட்டியுள்ள இந்துத்துவாவாதம் தமிழ்நாட்டில் மிக வேகமாகவும் – மிக ஆழமாகவும் ஊடுருவியுள்ள நிலையில் அதனுடைய தாக்கம் இன்று இலங்கையையும் குறிப்பாக இலங்கையின் தமிழர் பகுதியையும் பற்றி பிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்துத்துவா கருத்துக்களை காவிச் செல்வோரில்  பெரும்பாலானோர் தமிழ் தேசியவாதிகளாக காணப்படுவது மிகப்பெரிய அபத்தமாகியும் உள்ளது. அதாவது இலங்கையில் இந்துத்துவா செல்வாக்கை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டில் பயணித்து இலங்கை தமிழர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பது போன்றதான பாணியிலும் – தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்து சமயம் ஒன்றை ஒரே தீர்வு எனவும் இந்த கண்மூடித்தனமான தேசியவாதிகளும் – இந்துத்துவாவாதிகள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அதீத எழுச்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதித்து தமிழரின் வரலாற்றை காவி மயப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அதே நிலை இலங்கையிலும் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதன்  நீட்சியாகவே அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை  அவர்களின் இலங்கை வருகையை குறிப்பிட முடியும். இன்று மட்டுமல்ல பிரித்தானியர் இலங்கையை விட்டு சென்ற காலம் தொடங்கி இன்று வரை இலங்கையை பகடை காயாக பயன்படுத்தி வரும் இந்தியாவின் அரசாங்கங்கள் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காவும் – தென்னாசியாவில் இந்தியாவின் ஏகாதிபத்திய வாத வளர்ச்சிக்காகவும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன.  அதன் ஒரு கட்டமாகவே இலங்கை தமிழர்களை தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக இந்தியாவில் பதவியேற்ற அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும் கூட இலங்கையின் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் இந்தியா மட்டுமே இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்கின்ற நிலையில் மடிப்பிச்சை  கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு புதிய வடிவமே இலங்கையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்துத்துவாவாதமாகும்.

இந்த இந்துத்துவவாதிகள் இலங்கை தமிழர்களுக்கு இடையே மதரீதியான சாதிய ரீதியான முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றது. இலங்கையில் இதுவரை காலமும் காணப்பட்டு வரும் இனம் சார்ந்த முரண்பாட்டை மதம் சார்ந்து மாற்ற முற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவான உண்மை. இந்தியாவில் எவ்வாறு இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து தொடர்ச்சியாக மதக்கலவரங்களை மேற்கொண்டு அதனூடாக அரசியல் லாபமிட்டுக் கொண்டிருக்கின்றனரோ அதே வடிவம் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் இன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இந்து சமயத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூட இதனுடைய ஒரு தொடர்ச்சியே.

இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளிலும் இன்று இரவோடு இரவாக முளைத்து கொண்டிருக்கும் சிவலிங்கங்கள் கூட இந்த இந்துத்துவாவாதிகளினுடைய செயல்பாடுகளே. ஏற்கனவே 30 வருடங்கள் சிங்களவர்களுடனான இனப்போராக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தமிழர் என்கின்ற இனத்துக்குள்ளேயே மத போர் ஒன்றை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்க முற்படுகின்றனர்.

குறிப்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2000 வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் பிறந்த 50 நாட்களேயான ஒரு குழந்தை மந்த போசணை நிமித்தம் உயிரிழந்துள்ளது. அதுபோல அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாது தவிக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற – நாளாந்த செய்திகளில் நாம் காண்கின்ற மிக முக்கியமான அவல நிலையே. இவர்களுக்கு உதவி செய்யத்தான் இவர்கள் யாருக்கும் மனதில்லை. இதை விடுத்து கடவுள்களுக்கு சிலை வைத்து மனிதர்களை காபட்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்த இந்துத்துவாவாதிகள்.

ஆணையிறவில் பல கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடராஜர் சிலை, சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டிருக்கும் புதிய கோயில்கள், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இந்துத்துவாவாதிகள் இலங்கையில் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுகிறோம் எனக் கூறி இந்தியாவில் காணப்படும் மதவாத அரசியலை இலங்கையின் தமிழர் பகுதியில் புகுத்துவதற்கு மிக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களே ஆகப்பெரிய துணையாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்ட அநியாயம் இந்த இந்துத்துவாதிகளை நம்பி புலம்பெயர்  தேசங்களில் இருந்து கோயில்களை கட்டுவதற்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகின்றதாகும்.

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற நிகழ்வில் உரையாற்றிய திரு. ஆறுதிருமுருகன் இதனை அவர் வாயினாலே ஒத்துக் கொண்டிருந்தார். அங்கு பேசிய அவர் கடவுளின் அருளால் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய தமிழர்களின் இடத்தில் ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அந்த சக்தியின் ஊடாக இங்கு கோடானு கோடியை கொடுத்து பல கோயில்களை கட்டுகிறார்கள்,” என பெருமையாக கூறியிருந்தார்.

இந்த இந்துத்துவாவாதிகள் தொடர்பில் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்துத்துவாவாதம் தமிழ் மொழியின் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகி உள்ள நிலையில் இலங்கையிலும் இந்த நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன. ஏற்கனவே பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழினம் ஏதோ ஒரு விதமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இந்துத்துவவாதிகளின் வருகை  வடக்கு – கிழக்கில்  இருக்கக்கூடிய தமிழர்களிடம் புதிய பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாகவும் அரசியல் லாபமீட்ட முனையும் இந்தியாவிற்கு துணை போகுமே தவிர தமிழர் பகுதிகளில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.

 

மக்களுக்காக வேலை செய்யாத அரசு அதிகாரிகள் – தங்களுக்கு பிரச்சனைகள் என்றால் மட்டுமே போராடும் அபத்தமான அதிகாரிகள்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டங்களால் மாணவர்கள், நோயாளர்கள் உட்பட பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொதுமக்கள் பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டங்களால் வைத்தியசாலைகளில் யாரும் கவனிப்பாரின்றி உள் மற்றும் வெளி நோயாளர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தால் இந்த நிலை இன்னமும் மோசமடைந்துள்ளது.

இதைவேளை ஆசிரியர்களின் போராட்டத்தால் 100% பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாடசாலைகள் ஒரு வருட கால இடைவெளியில் இயங்கிவரும் நிலையில் இறுதித்தவணை பரீட்சை நேரத்தில் சம்பள உயர்வு வேண்டி பாடசாலை ஆசிரியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பெற்றோர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முழுமையாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நெருக்கடி நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலுள்ளவர்கள் இந்த அரசாங்க அதிகாரிகள் தான். ஆட்சியாளர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்க அதிகாரிகள் பதவியில்  நிலையாக ஆயுள் முழுமைக்கும் இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எந்த விடயங்களிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. நாட்டு மக்களுக்கு தேவையான – அடிப்படை தகவ்லகள் கூட இன்னமும் கணினி மயப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் கணினித்துறைக்குள் தன்னுடைய நிர்வாக கட்டமைப்பை மிக வேகமாக உள்நுழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்காத பிரித்தானியர் கால  நிர்வாக கட்டமைப்பு ஒன்று தான் இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு அரசு திணைக்களங்களில் அளவுக்கு அதிகமான அதிகாரிகள் நித்திரை கொள்வதற்காகவே நியமிக்கப்பட்டது போல அசமந்தப் போக்கிலேயே இந்த நிர்வாக கட்டமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமான அபத்தம் தான் அண்மையில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இலவச உணவுப் பொதிகள் கூட மக்கள் கைகளுக்கு ஒழுங்காக சென்று சேராத பிரச்சினை. மலையகம் தொடங்கி இலங்கையின் பல பகுதிகளிலும் அந்த உணவுப் பொதிகளின் நிலை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.

இந்தக் கல்வித்துறை தொடர்பான இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய ஆசிரியர்கள் எண்ணத்தை சாதித்து விட்டார்கள் என சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள் என தெரியவில்லை. பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் பாவனைக்கான வசதிகளை கூட ஏற்படுத்திக் கொடுக்காத – ஏற்படுத்திக் கொடுக்க நேரமில்லாத ஆசிரியர்களும் – அதிபர்களும் தான் இங்கு அதிகம் பேர்.

மாணவர்களின் உடைய பிரச்சனைகளுக்காக இந்த ஆசிரியர்களும் – நோயாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகளும்- பொதுமக்களின் உடைய தேவைக்காக நிர்வாக அதிகாரிகளும் இதுவரையில் போராட்டம் செய்ததாக பெரிதாக பதிவுகள் இல்லை. எப்பொழுதெல்லாம் இந்த நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்பொழுது மட்டுமே நாடு சீரழிகிறது என இந்த அரசாங்க அதிகாரிகள் அழுது வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் புரட்சி என பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு – இந்த அபாயகரமான நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்த அரசு அதிகாரிகளுக்கும் உரியது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

பிரேமானந்தா – பிரேமகுமார் – ஜெயந்திரன் கொடியவர்களின் கூடாரமாகும் லண்டன், பாரிஸ் சைவ ஆலயங்கள்!

இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார். பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி.

இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர்.

பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றுவதில் அவருக்கு உறுதுணையாக நின்றது ஹைகேற்றில் உள்ள உயர்வாசற் குன்று முருகன் ஆலயம். ஆலயத்தின் நிர்வாகசபைக்கான தேர்தலில் அதில் போட்டியிட்ட தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன், தான் தெரிவு செய்யப்பட்டால் சமூக விழுமியங்களைப் பேணுவேன் என அவர் காங்கேயன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் செப்ரம்பர் 22இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் பாலியல் குற்றவாளிக்கு துணைபோவதாகவே ஆலயத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.

லண்டன் ஹைகேற் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவராக யாழ் காரைநகரைச் சேர்ந்த கதிரவேலு நாகராஜா உள்ளார். தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன் செயலாளராகவும் யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் பார்த்தீபன் பொருளாளராகவும் உள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா சோதிலிங்கம் அறங்காவல் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த அறங்காவலர் சபையினால் நடத்தப்படும் ஹைகேற் உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜா மிகுந்த செல்வாக்கை கொண்டிருந்தார். இவருடைய வழக்கு வூட்கிறீன் நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆலயத்தில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விசேட பூசைகள் நடாத்தப்பட்டது. தண்டனை குறித்த நீதிமன்ற அமர்வின் போதும் பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக பார்த்தீபன் நீதிமன்று சென்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களுடன் தேசம்நெற் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்கள் யாரும் இணைப்புக்கு வரவில்லை. அவர்களுக்கு குறும் செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால் பதிலில்லை. தனாதிகாரி பார்தீபன் முதற் தடவை எடுத்த போது “வேலையாக உள்ளேன் பிறகு எடுக்கிறேன்” என்றார். ஆனால் அவர் பின்னர் எடுக்கவில்லை.

இரு ஆண்டுகளுக்கு முன் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பிரேமகுமாரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொலிஸார் ஹைகேற் முருகன் ஆலயத்திற்கு அறிவித்திருந்தனர். அத்தோடு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய தொடர்ச்சியான கூட்டங்கள் சூம் ஊடாக நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அப்போது ஆலயத்தின் தலைவராக இருந்த சபாபதிப்பிள்ளை ஸ்றிகாந்தா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், மெற்ரோ பொலிட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என மூவர் கலந்துகொண்டு நிலைமையை அவதானித்து வந்தனர். நாகராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபை பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட பிரேமகுமாரோடு நெருக்கமாக இருந்தது.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே முதலில் உருவானது. 1975இல் சபாபதிப்பிள்ளை இவ்வாலயத்தை உருவாக்கினார். தமிழ் ரைம்ஸ் என் எஸ் கந்தையா, பேர்மிங்ஹாம் பாலாஜி கோயிலை உருவாக்கிய டொக்டர் ராஓ, லண்டனுக்கு வெளியே ஒரு கோவிலை உருவாக்கிய வைரவமூர்த்தி, விநாயகமூர்த்தி, விம்பிள்டன் பிள்ளையார் கோவிலை உருவாக்கிய ரட்ணசிங்கம், ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தை உருவாக்கிய குணசிங்கம் ஆகிய ஏழு பேர் இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். சபாபதிப்பிள்ளையின் மகனே முன்னைய நிர்வாகத் தலைவராக இருந்த டொக்டர் ஸ்றிகாந்தா. இவர் பிரித்தானியாவின் மிகப்பிரசித்தி பெற்ற ‘மூர் ஐ ஹொஸ்பிரல்’லில் தசாப்தங்கள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே மிகக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. இவர்களிடம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 45மில்லியன் பவுண்கள் எனமதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும் இவ்வாலயம் இதுவரை குறிப்பிடத்தக்க சமூக செயற்பாடுகளை தாயகத்திலோ லண்டனிலோ மேற்கொள்வதில்லை.

பிரேமானந்தா பற்றிய நேர்காணலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் கோயில்களைக் கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பதாக்க குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் த பாண்டியன். அதில் அவர் லண்டனில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

பாண்டியன் குறிப்பிட்டது போல் ஆர் ஜெயதேவன் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் லண்டனில் இருக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அங்கு வருகின்ற ஆலய வருமானத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பொதுத் தொண்டுகளைத் தாயகத்தில் மேற்கொண்டு வந்தது. அப்போது ஆலய நிர்வாகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எஸ் கருணைலிங்கம் ஆலய வருமானத்தில் செலவு போக மூன்றிலொரு பங்கை தாயக மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். சில தடைகள் இருந்தாலும் அது இன்றை வரைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து லண்டனில் புலிகளும் இரு கோவில்களை நிறுவினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் மற்றையது என்பீல்ட் நாகபூசணி ஆலயம். இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர் ஜெயதேவனை விசாரணைக்கு இலங்கைக்கு வரவழைத்து அவரைத் தடுத்து வைத்து படுகொலை செய்யவும் முயற்சித்தனர். அக்காலகட்டத்தில் தேசம் உட்பட பலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து அழுத்தங்களை வழங்கினர். அதன் பின் பிரத்தானிய அரசினதும் அழுத்தங்களால் ஆர் ஜெயதேவன் விடுவிக்கப்பட்டார்.

பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதல் வழங்கியவர்களின் சமூக அக்கறையற்ற தன்மையை தேசம்நெற் வன்மையாகக் கண்டித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கலாநிதி நித்தியானந்தனின் சமூகப்பொறுப்பற்ற செயலை தேசம்நெற் அம்பலப்படுத்தியது. ஏனையவர்களும் அம்பலப்படுத்தப்படுவார்கள் என தேசம்நெற் எச்சரித்தது.

அதற்காக சமூவலைத் தளத்தில் ஆர் ஜெயதேவன் ஊடகவியலாளரான த ஜெயபாலன் (என்) மீது கொதித்து எழுந்து பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில் ‘குற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற சட்டத்தின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜா நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பின்னரே நாற்பது பேர் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனை நீதிமன்றத்தில் நீதிபதியும் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். “பிரேமகுமார் ஆனந்தராஜா ஒரு பாலியல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது தெரியப்படுத்தப்பட்டே இந்நற்சான்றிதழ் பெறப்பட்டது” என்பதை நீதிபதி பெப்ரவரி 02 தண்டனைக் காலத்தை தீர்மானிக்கும் வழக்கின் போது உறுதிப்படுத்திக்கொண்டார்.

வன்முறையான கிரிமினல் குற்றங்கள் கொலைகள் உட்பட, நிதி மோசடிகள் போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கணப்பொழுதின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வன்முறைக் குற்றங்கள் தேவையின் உந்துதலால் நிதிமோசடிகள் நிகழலாம். அவ்வாறான சமயங்களில் நற்சான்றிதழ் வழங்குவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆனால் மிகத் திட்டமிட்டு சாதுரியமாக இளம்பெண்களைத் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு ஆலயங்களை கூடாரமாக்குவது அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அயோக்கியத்தனமான செயல். இவ்வாறான சமூகத் தலைவர்களை யோக்கியமற்ற அயோக்கியர்கள் என்றால் மிகையல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கலாநிதி நித்தியானந்தனின் தமிழ் பள்ளியில் படித்த குழந்தை. ஆனால் கலாநிதி நித்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவனைக் கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தான் கையெழுத்திட்டதாக சிலருக்கு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அயோக்கியத்தனத்துக்கு ஆர் ஜெயதேவன் வக்காலத்து வாங்குகின்றார். ஈழபதீஸ்வரர் ஆலயம், ஹைகேற் முருகன் ஆலயம் போன்றன முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமாக வேண்டுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமேயொழிய காமுகர்களுக்கு புகலிடமாகவும் அவர்களைக் காப்பாற்ற கையெழுத்து வேட்டையும் நடத்தக்கூடாது. இவர்களுக்கு பாடம் புகட்ட இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், குருதுவாராக்கள் கொடியவர்களின் கூடாரமாகவும் பணம் சுரண்டுபவர்களாகவும் இருப்பதற்கு முற்றுப்புள்ளி முதலில் வைக்க வேண்டும். ஆனால் இவ்வாலயங்கள் அப்படிச் செய்வதில்லை. பிரான்ஸின் லாகுர்னே இல் உள்ள சிவன் ஆலயத்தின் உரிமையாளரான வெற்றிவேலு ஜெயந்திரன் அதன் வருமானத்தைக் கொண்டு நல்லூரடியில் ‘லக்ஸ் ஹொட்டல்’ என்ற பெயரில் காமவிடுதியை நடத்தி வருகின்றார். அதற்காக ஒரு சில மணித்தியாலங்களுக்கு ஹொட்டலை ‘புக்கிங்’ செய்யும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றது. பல இளம் பெண்களின் வாழ்வைச் சீரழித்த ஜெயந்திரன் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையில் உள்ள குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு எடுப்பதாகவும் பின் அவர்களுக்கு போதையூட்டி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாகவும் இந்த ஹொட்டலுக்கு சாரதியாக இருந்தவர்களில் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு இந்த லக்ஸ் ஹொட்டலில் ஒரு ‘ரூம் புகிங்’ செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “அண்ணை இந்த ஹொட்டல் நல்லதில்லை. அது மற்றைய விசயங்களுக்குதான் பாவிக்கிறவை” என்றார் அச்சாரதி. “இப்பதான் இப்படியா?” என்று கேட்டபோது, “அப்ப இருந்தே இப்படித்தான்” என்றார் அவர். “உங்களிடம் யாராவது முறையிட்டார்களா?” என்று கேட்டபோது, “ஆறு வருசத்துக்கு முதல் ஒரு நாள் ஒரு வடிவான நல்ல வெள்ளை கலரான பொம்பிளப் பிள்ளை அழுதுகொண்டு ஓடி வந்தாள். தனக்கு எதனையோ தந்து குடிக்கச் சொன்னதாகவும் தன்னை துஸ்பிரோகம் செய்ய முற்பட்டு தன்னை அடித்ததாகவும் சொன்னாள்” என்றார். “அதைவிட நிறைய கேள்விப்பட்டு இருக்கிறன். இதையெல்லாம் பார்த்துப் போட்டு பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் என்று போட்டுத்தான் அங்கயிருந்து விலத்தீட்டன்” என்றார். “அவன் கோயில் வைச்சிருக்கிறான் காசிலை குறைவிடான். ஆனால் வாயைத் திறந்தா ஒரே தூசணமும் சாதியை இழுத்தும் தான் கதைப்பான். எனக்கு ஒரு மாதிரியாத் தான் இருக்கும்” என்றார் அந்தச் சாரதி. அவர் இப்போது யாழில் இல்லாவிட்டாலும் அவருடைய பாதுகாப்பிற்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குடுமி ஜெயா என்று அறியப்பட்ட கைதேர்ந்த ஒரு அயோக்கியனை கடவுளுக்கு இணையாக வைத்து லாகுர்னே சிவன் கோவிலில் காசுக்காகப் பாடி கூத்தடிக்கின்ற ஒரு காவிக்கூத்தாடி தான் இந்திரநாதன் நாகலிங்கம். பாரிஸில் குடும்பமாக வாழ்கின்ற இவருக்கும் இளவயதில் மகளும் இருக்கின்றார். ஆனால் இவர் குடுமி ஜெயாவின் நெருங்கிய நண்பரும் கூட. புலம்பெயர் தேசத்தில் இருந்து அயோக்கியர்களுக்கும் காமுகர்களுக்கும் கதைவசனம் எழுதும் இந்திரன் என்று அறியப்பட்ட இவர் பொதுமேடைகளில் சமூகம் பற்றி சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றார். பாடுகின்றார். ஆனால் நடைமுறையில் அவரது பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களை கடவுளோடு இணைத்து சமூகத்தை சீரழிக்கின்றார்.

பிரித்தானியாவில் உள்ள நியுகாஸ்டில் உதைபந்தாட்டக் கழகத்தை சவுதியரேபியா கொள்வனவு செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. காரணம் சவுதியரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மன் ஊடகவியலாளர் ஜமால் கொஷொக்கியை படுகொலை செய்தவர் என்பதால் அது உதைபந்தாட்டக் கழகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சர்ச்சை எழுத்துள்ளது. ஒரு உதைபந்தட்டக் கழகம் கூட தன்னுடைய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற போது ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கியுள்ள கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி வருகின்றது.

பிரித்தானியாவில் தமிழர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ஒப்பிரேசன் என்வர் என்ற ஸ்கொட்லன்ட் யாட்டின் பொலிஸ் நடவடிக்கையோடு ஊடகவியலாளராக நானும் அன்றைய கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஈடுபட்டிருந்தோம். வேறும் பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதனை தலைமை தாங்கி நடத்தியது பின்நாட்களில் துணை ஆணையாளராக இருந்த சேர் ஸ்ரிபன் ஹவுஸ். அவர் ஜனவரி 2022இல் உள்துறை அமைச்சு லோசகருக்கு கூறிய ஒரு சொல் பெரும் அதிர்வலையை மார்ச் 2, 2023இல் ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்புணர்வு’ rape என்பதை அவர் ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று குறிப்பிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சேர் ஸ்ரிபன் ஹவுஸ் கடுமையாக தன்னுடைய மறுப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு என்ற மிகக்கொடுமையான குற்றச்செயலை ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று மிதமாகக் குறிப்பிட்டு அக்குற்றத்தின் கொடுமையை சேர் ஸ்ரீபன் ஹவுஸ் குறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிக உறுதியாக போராடுகின்ற நாடுகளில் ஆலயங்களை வைத்திருக்கும் எம் ஆணாதிக்க ஆசாமிகள் இக்குற்றங்களை இழைக்கும் கொடியவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்ட இளம்பெண்களையும் அப்பிள்ளைகளின் தாய்மார்களையும் எள்ளிநகையாடுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்தினால் அதனை gutter reporting, gutter journalism என்று கொக்கரிக்கின்றனர்.

பெண்களை கீழானவர்களாக நோக்குகின்ற பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கு அவர்களது நடத்தையே காரணம் என்று எண்ணுகின்ற பெண்கள் சொல்வதை நம்ப மறுக்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை தான் இந்நிலைக்குக் காரணம். இந்த ஆணாதிக்கச் சிந்தனை இருக்கின்ற வரை பிரேமானந்தா, பிரேமகுமார், குடுமி ஜெயா போன்றவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். எங்களுடைய ஆலயங்கள் முற்று முழுதாகவே ஆண்களுடைய – ஆணாதிக்க வாதிகளுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இயற்கை நிகழ்வான தீட்டை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் இந்த ஆணாதிக்க அயோக்கியர்களை ஆலயங்களில் இருந்து விரட்டாதவரை ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாகவே அமையும். ஹைகேற் முருகன் ஆலயம், வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம், லாகுர்னே சிவன் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட பெண்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆசாமிகளை அறங்காவலர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த ‘உண்டியல்’களை காயவிட்டால் போதும்.

பெண்களை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்த: பெண்களுக்கு போதைவஸ்தூட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதை தடுக்க, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த ஆலயங்களின் உண்டியலை காயப்போடுங்கள். உண்டியலைக் காயப்போட்டால் ஆசாமிகள் ஓடிவிடுவார்கள். கடவுள் உண்டியலுக்குள் போடும் பணத்தை வைத்து யாருக்கும் அருள்பாலிப்பதில்லை. அதனால் சாமிக்கு லஞ்சம்கொடுக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.

முதல் நாளிலேயே மூன்று சாதனைகள் – அசத்தலுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை அணி !

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் மூன்று கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நியூசிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் அரைசதத்தை பதிவுசெய்த வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் இன்று தன்வசப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

இது இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்டமாகும்.

இந்த இரண்டு சாதனைகளைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூஸ், 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், 39 ஓட்டங்களைப் பெற்றிருந்த தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சவுதி தன்வசப்படுத்தினார்.

பிரபாகரனின் கடைசி மணிநேரங்கள்… என்னதான் நடந்தது? ஏன் மே 17 திகதி வரை காத்திருந்தனர்? Project Beacon, Operation Beacon பற்றி ஏன் பேசுகின்றார்கள் இல்லை?

“பேச்சு வாரத்தைக்கு வாருங்கள். அதனை விட வேறு வழியேதும் இல்லை” எனறார் விசாக தர்மதாஸ. இவருடைய மகன் இராணுவத்தில் இருந்தவர் கிளிநொச்சியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களைப் பெற்றவர்களதும் அமைப்பின் ஸ்தாபகரான விசாகா தர்மதாஸாவை நான் லண்டனில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இந்த நேர்காணலை தமிழர் தகவல் நடுவத்தின் காலம்சென்ற பொறுப்பாளர் வைரமுத்து வரதகுமார் ஏற்பாடு செய்துதந்திருந்தார். வரதகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிக வேண்டப்பட்டவர். பிரபாகரனின் மிக நெருங்கிய வட்டத்தில் ஒருவர். எதிர்பாராத விதமாக இந்நேர்காணல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிப்பதற்கு ஓராண்டு முன்பாக 2008 மே 18 இல் நடைபெற்றது. பிரித்தானியாவில் சறே பகுதியில் விசாகா தர்மதாஸ தங்கியிருந்த வீட்டில் தான் இந்நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

2009 பெப்ரவரி 3 இல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கத்தை லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து சந்திதேன். சிவாஜிலிங்கம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த யுத்தத்தின் போது மேற்குநாடுகளில் தான் இருந்தனர். இச்சந்திப்பை முன்னாள் ரெலோ உறுப்பினர் த சோதிலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் பிரபாகரனின் ஊரவர். உறவினர். பிரபாகரனை தன்னுடைய பதின்ம வயதில் காப்பாற்றியவர். பிரபாகரனுடைய பெற்றோருக்கும் இறுதியில் கூட இருந்து செய்ய வேண்டியனவற்றைச் செய்தவர். விடுதலைப் புலிகள் வேறொரு உலகத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவதே தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உகந்தது என மே 17 2009 இல் புலிகள் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரேயே பெப்ரவரி 3, 2009 இல் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

இலங்கையில் அறியப்பட்ட மிக முக்கியமான ஊடகவியலாளரான தராக்கி என்று அறியப்பட்ட தர்மரட்ணம் சிவராம் தமிழ்நெற், தமிழ் கார்டியன் ஆகிய ஊடகங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர் படுகொலை செய்யப்பட்டது ஏப்ரல் 29, 2005. அப்போது ஜனாதிபதியாக சந்திரிகாகுமாரதுங்க இருந்தார். பிரதம மந்திரியாக மகிந்த ராஜபக்ச இருந்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது நவம்பர் 19, 2005இல். ஆனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னரேயே அதாவது தராக்கி சிவராம் கொல்லப்படுவதற்கு முன்னரே அவர் ‘Project Beacon’ பற்றித் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் பேசியுள்ளார். இந்தப் புரஜக்ற் பீக்கன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுப்படுத்துவதற்கான திட்டம் இணைத் தலைமை நாடுகளான: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளால் வரையப்பட்டிருந்தது. நோர்வே பேச்சுவாரத்தை பற்றிய விபரங்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வந்ததால், இந்தியாவும் இந்த புரஜக்ற் பீக்கன் பற்றி நன்கு அறிந்தே இருந்தது.

தராக்கி சிவராமின் நெருங்கிய உறவினரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்கு அழுத்தம் வழங்குவதற்கு இத்திட்டம் வரையப்பட்டது என்றும் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினால் அவர்கள் ஓரம்கட்டப்படவார்கள் என்ற எச்சரிக்கையை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் புலிகள் இந்த எச்சரிக்கையை பெரிதாகக் கருதவில்லை. ரணிலின் சதி என்றே கருதினர். ஏற்கனவே கருணாவை தங்களில் இருந்து பிரித்து இயக்கத்தை பலவீனப்படுத்தியதற்காக ரணிலுக்கு பாடம் புகட்ட புலிகள் நினைத்தனர். ‘மொக்கு சிங்களவன்’ என்று எண்ணும் புலிகள் ரணில் ‘நரித்தனமாகப் பேச்சுவாரத்தைக்கு அழைத்து இழுத்தடிப்பான்’ அதனால் மஹிந்தவை கொண்டுவந்தால் அடித்து நொருக்கி தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று கருதினர். அதனால் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க விரும்பிய வடக்கு கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த புலிகள், மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். அதற்காக 200 கோடி ரூபாய் பணத்தை ராஜபக்சக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய தலைவர் பிரபாகரனின் சாணக்கியம்.

பதவிக்கு வந்த ராஜபக்சக்கள் சில வாரங்களிலேயே டிசம்பர் 2005இல் இணைத் தலைமைநாடுகளின் ‘Project Beacon’ னை திருப்திப்படுத்தும் வகையிலான ‘Operation Beacon’ இராணுவத் திட்டத்தை இணைத்தலைமை நாடுகளிடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து கையளித்தனர். புலிகள் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டாததால் ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் பச்சைக்கொடி காட்டினர். கண்துடைப்பிற்காக அல்லது எதிர்காலத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது, பொது மக்களின் இழப்புகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இணைத் தலைமை நாடுகளும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன. தங்களுக்கு தேவையான வளங்களையும் இலங்கை அரசு கேட்டிருந்தது. இராணுவ தளபாடங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் என்பன இலங்கைக்கு தாராளமாக வழங்கப்பட்டது.

புலிகளுக்கு மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் புலிகள் விழ ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அன்ரன் பாலசிங்கமும் ஒப்பிரேசன் பீக்கன் பற்றி அறிந்திருந்தார். தனிப்பட்ட சிலருடன் தலைவரின் எதிர்காலம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

யூலை 21 2006இல் புலிகள் மாவிலாற்றின் சுளியை மூடி அப்பகுதிச் சிங்கள விவசாயிகளுக்கான நீரோட்டத்தை தடுத்தனர். அரசு மாவிலாற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல புலிகளையே துடைத்து அழிப்பதற்கான ‘ஒப்பிரேசன் பிக்கன்’ திட்டத்தை அடுத்த 5 நாட்களில் 2006 யூலை 26இல் மாவிலாற்றில் ஆரம்பித்தது. இரண்டு நாட்களில் மாவிலாற்றில் இராணுவம் நிலைகொண்டது. ஓகஸ்ட் 11இல் மாவிலாறு நீர் வழமைபோல் திறந்துவிடப்பட்டது.

30 ஏப்ரல் 2007 வரையான ஓராண்டுக் காலத்திற்குள் ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி திருகோணமலையின் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான கடற் பிரதேசத்தையும் நிலப்பரப்பையும் பாரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் இல்லாமல் இலங்கைப் படைகள் கைப்பற்றினர். இந்த ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி மே 1, 2007 முதல் ஏப்பிரல் 30, 2008 ற்குள் மன்னார் முதல் பூனெரியன் வரையான கடற்பரப்பையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது, அடுத்து மே 1, 2008 முதல் ஏப்ரல் 30, 2009 வரையான காலப்பகுதிக்குள் ஆணையிறவு முதல் கொக்குத் தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது என்பதும் திட்டம். மேலும் அம்பாறை, சிலாவத்துறை, பருத்தித்துறை ஆகியவற்றினது கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதன் மூலம் புலிகளுக்கு இராணுவ தளபாடங்கள் வந்தடைவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அவர்களை முள்ளிவாய்க்காலில் முடக்குவதே அத்திட்டமாக இருந்தது. அதன் பின்னரான மே 1, 2009 முதல் ஏப்ரல் 30, 2011 வரையான இரண்டு ஆண்டு காலப்பகுதி புலிகளைக் களையெடுப்பதற்கான காலப்பகுதியாக வகுக்கப்பட்டது. அப்போது மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் என்பதே கணிப்பு.

இத்திட்டம் தொடர்பில் புலிகள் புலனாய்வு எல்லாம் செய்து எதனையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கவில்லை. ஓப்பிரேசன் பிக்கன் திட்டம் மஹித் ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னரேயே தமிழ்செல்வனிடம் கையளிக்கப்பட்டிருந்து. ஆனாலும் இத்திட்டத்தை முறியடிப்பதற்கு புலிகளால் எவ்வித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. இராணுவத்தை சமாளிப்பதைத் தவிர அவர்களால் திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடர முடியவில்லை. புலிகளின் புலானாய்வுப் பிரிவினர் அறிந்திராத பாதைகளினூடாக சந்து பொந்துகளால் எல்லாம் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த யுத்தம் இத்தனையாம் திகதி முடிவுக்கு வரவுள்ளது என்று தேசம்நெற் செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டம் இருந்தது. சிவராமினால் உருவாக்கப்பட்ட ரமில்எடிட்டேர்ஸ்.கொம் (tamileditors.com) என்ற இணையத்தளத்தில் டிசம்பர் 24, 2007 இது பற்றிய கட்டுரையொன்றும் எழுதப்பட்டு ஏதோ இராணுவம் குறிப்பிட்டபடி முன்னேறவில்லையென அக்கட்டுரையில் சடையப்பட்டு இருந்தது.

வவுனியாவுக்கு திருப்பி அடித்திருப்பம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. எந்தவொரு சர்வதேச நாடும் பேச்சுவாரத்தை பற்றியே பேசவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் ஆயதங்களை ஒப்படைத்து சரணடையுமாறே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரே குரலில் ஒலித்தன. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை பல வழிகளிலும் தடுத்தன. புலம்பெயர்ந்த சர்வதேச அரசியல் புரியாத ஆர்வக்கோளாறான அமெரிக்காவில் உள்ள பேர்ள் (PEARL) போன்ற புலிகளின் ஆதரவாளர்கள் தான் சில முட்டாள்தனமான பிரம்மைகளை உருவாக்கினர்.

தமிழ்டிப்ளோமற் (TamilDiplomat) இணையத்தில் தராக்கி சிவராம் பற்றிய நினைவுக் கட்டுரையை அண்மையில் எழுதிய பரணி கிருஸ்ணராஜனி, புரஜக்ற் பிக்கன் பற்றி புலிகள் அறிந்திருந்தும் ஏன் அந்த வலைக்குள் விழாமல் இருப்பதற்கான மாற்றுவழி பற்றி அவர்கள் முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலை பரணி கிருஸ்ணராஜினியால் எழுத முடியவில்லை.

புலிகள் மற்றையவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்திருந்த அளவுக்கு தங்களுடைய பலவீனங்கள் பற்றி எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை. தங்களது எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச அரசியல் பற்றிய அறிவு இருக்கவில்லை. முகநூலுக்கு வரும் லைக்குகளையும் கொமன்ற் களையும் பார்த்து இன்புறுவது போல் புலம்பெயர்ந்து வாழும் விசிலடிச்சான் குஞ்சுகளின் சூரியத்தேவன், தேசியத் தலைவர், அடங்காத் தமிழன் போன்ற விம்பங்கள் ‘பனை மரத்தில வெளவாலா எங்களுக்கே சவாலா’, ‘உள்ளுக்கு விட்டு அடிப்போம்’ போன்ற புலித்தேசிய அல்வா ஆய்வாளர்களின் பிதற்றல்கள் எல்லாமே மே 16, 2009 வரை புலிகளை கனவுப் போதையில் வைத்திருந்தது. வன்னியில் இருந்த புலிகள் குண்டுச் சத்தத்தில் கனவுப் போதையில் இருந்து விழித்துக் கொண்டபோது அது காலம் கடந்ததாகி விட்டது. புலம்பெயர் தேசத்தில் குண்டு விழாததால் இன்னமும் பலர் கனவுப் போதையில் இருந்து எழவில்லை. அவர்கள் ஒரு பரலல் யூனிவேர்ஸில் (parellel universe) தான் இன்னமும் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் த கணேசலிங்கம் போன்ற அரசியல் முட்டாள்கள் பொங்கு தமிழ் நடத்தி தங்களில் தேசியம் பொங்கி வருவதாகக் காட்டிக்கொண்டு முத்தையா யோகேஸ்வரி போன்ற சிறுமிகளை வன்புனர்வதிலும் அதனை வெளியே வந்துவிடாமல் மறைப்பதிலுமே படுபிசியாக இருந்தனர். ‘புரஜக்ற் செக்ஸில்’ (project sex) ‘ஒப்பிரேசன் இன்ரகோர்ஸ்’ (operation intercourse) இல் பிஸியாக இருந்தவருக்கு புரஜக்ற் பீக்கன் பற்றியோ ஒப்பிரேசன் பீக்கன் பற்றியோ எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

ஏப்ரல் 30, 2009 இல் தான் இந்த யுத்தம் முடிவடைய வேண்டும் என ராஜபக்சக்கள் கணிப்பிட்டதற்கு முக்கிய காரணம் மே 16இல் இந்திய தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் வரை பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டே வந்தது. 2006 யூலை முதல் 2009 பெப்ரவரி வரை 3000 பேர்வரை கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் 5 இல் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தை இராணுவம் முற்றுகையிட்டபோது, அது உடைக்கப்பட்டு பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். புலிகளின் பெரும் தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். இப்போது தான் கனவுலகத்தில் பொங்குதமிழ் நடத்தி யுத்த முழக்கம் முழங்கிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் விழித்துக்கொண்டனர்.

இந்த யுத்தத்தை என்ன விலைகொடுத்தும் எப்படியாவது மே 16 வரை இழுத்துச் செல்ல வேண்டும் என்று புலிகள் பெருமுயற்சி எடுத்தனர். அதனால் தான் பாரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புமே தங்களது வெற்றியை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தனரேயல்லாமல், மக்கள் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் சகல விதிமுறைகளும் தூக்கியெறியப்பட்டது. இறுதிச் சில வாரங்கள் யுத்தத்தின் எவ்வித விதிகளும் கடைப்பிடிக்கப்படாமலேயே யுத்தம் நடைபெற்றது.

இந்திய தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியும் அமையப் பெற்றால், தாங்கள் காப்பாற்றப்படுவோம் எனப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். புலிகள் தங்கள் ஆய்வுக் கதையாடல்களிலும், மக்கள் வகைதொகையாகக் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையிடும் என்று ‘கொசோவோ’ உதாரணத்தையும் வைத்துக்கொண்டு ரீல்கள் விட்டு அங்கு மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகினர். கலாநிதி ரட்டணம் நித்தியானந்தன் போன்ற அரசியல் முட்டாள்கள் வணங்கா மண் அனுப்புகிறோம் என்று தங்களுக்கு தமிழ் தேசியச் சாயம் பூசி கூத்தாடினர். இப்போது பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மே 16, 2009இல் ‘மம்மிக்காக காத்திருக்கும் தம்பி’ என்ற கட்டுரையை தேசம்நெற் வெளியிட்டது. அதே தினம் ‘இந்திய தேர்தல் முடிவு விடுதலைப் புலிகளின் கருப்புச் சனி’ என்று மற்றையொரு கட்டுரை எழுதினேன். ஆம் புலிகள் எதிர்பார்த்தது நிகழவில்லை. தமிழகத்தில் கருணாநிதியும் டெல்லியில் காங்கிரஸ்ம் ஆட்சியமைத்தது. உண்மையில் புலிகள் எதிர்பார்த்தது நடந்திருந்தாலும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடிந்திராது என்ற உண்மையை உணரும் அரசியல் அறிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்களை உசுப்பிவிட்ட புலத்து தமிழர்களுக்கும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை.

வன்னியின் மொத்த நிலப்பரப்பு 7,859 சதுர கிலோ மீற்றர். முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 2,817 சதுர கிலோ மீற்றர். ஆனால் மார்ச் மாதம் 3ம் திகதி புலிகள் வெறும் 14 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் குறுக்கப்பட்டு விட்டனர். அப்போது அங்கு 2,00,000 பேர் இருந்தனர். மே 16, 2009 இல் புலிகளுடைய நிலப்பரப்பு வெறும் 5 சதுர கிலோ மீற்றர்களாகக் குறுக்கப்பட்டு விட்டது. மறுநாள் மே 17இல் வெளிவந்த சூசையின் தொலைபேசி அழைப்பில் “போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

இச்சண்டையில் சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகியோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இறுதிக் கட்டத்தில் பொட்டம்மான் தன்னுடைய குடும்பத்தோடு. தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உடலும் யாருக்கும் கிடைக்காதவாறு பார்த்துக்கொண்டார் என பொட்டம்மானோடு உரையாடியதாகக் கூறும் முன்னாள் போராளி விபரிக்கின்றார்.

எண்பதுக்களின் பிற்பகுதியில் இந்திய இராணுவ காலகட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களுக்கு அதனைத் தெரிவித்துள்ளார். அவர் போகின்ற இடங்களுக்கு பெற்றோல் கானும் (petrol can)கொண்டுசெல்வது வழமை என இந்திய இராணுவ காலகட்டங்களில் புலிகளின் உறுப்பினராக இருந்த அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 165,000 எனப் புலிகள் அறிவித்தனர். இவர்கள் பெரும்பாலும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அவர்களின் குடும்பங்களுமே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மணித்தியாலங்கள் கடந்து செல்ல 5 சதுர கிலோ மீற்றர் 500 சதுர மீற்றரானது. இராணுவம் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட படையினரை மே 17 அதிகாலை மீட்டெடுத்தது. மே 18 அதிகாலை 250 சதுர மீற்றராகவும் ஆனது.

மே 17 இரவு – மே 18 அதிகாலையில் செல்வராஜா பத்மநாதன் (கெ பி), ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்து பிரபாகரனை எப்படியாவது விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முன்னரே மே 15 2009 வெள்ளிக் கிழமை இரவே புலிகள் கெபி க்கு தாங்கள் சரணடையத் தயார் என்ற செய்தியை அனுப்பியதாகவும் தான் வெளிநாட்டு ராஜதந்திரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தததாகவும் கெபி தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். அன்று வெள்ளிக் கிழமை மாலையாகிவிட்ட நிலையில் ராஜதந்திரிகள் அலுவலகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டதாகவும் தன்னால் அமெரிக்க ஐரோப்பிய ராஜதந்திரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கெபி தெரிவித்தார். அதேசமயம் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ புலித்தேவன் ஆகியோர் தொடர்பை மேற்கொள்ள முடிந்த ஊடகவியலாளர்கள் பிரான்ஸிஸ் ஹரிசன், மேரி கொலின் மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள ராஜதந்திரிகளுக்கு தாங்கள் சரணடைய உள்ளதைத் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த அழைப்புகள் மே 18 அதிகாலை 5:45 மணி வரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது கொழும்பில் பசில் ராஜபக்சவுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.

தேசம்நெற் க்கு அன்று கிடைத்த தகவல்களின் படி புலிகள் தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தையுமே அரசதரப்பு ஏற்றுக்கொண்டதாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வேண்டுகோள்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித பொறிமுறையும் அங்கிருக்கவில்லை. யுத்த களத்தில் இவ்வாறான சரணடைவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மாதம் எடுக்கும். ஆனால் புலிகள் கையறு நிலையில் சரணடையும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் அனைவருமே வெள்ளைக்கொடியோடு சரணடைந்தனர்.

மே 17 காலையில் 250 சதுர மீற்றர் பரப்பளவிற்குள் இருந்து புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடையும் வேளை ஏனைய இடங்களில் மக்களோடு மக்களாக வெளியேறுகின்ற போது பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு இல்லாமல் மக்களோடு மக்களாக வெளியேறிய புலிகளின் முக்கிய தலைவர்களையும் முகாம்களில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்றது.

இவர்கள் யாவரும் உலகின் அனைத்து யுத்த விதிகளையும் மீறி படுகொலை செய்யப்பட்டனர். அந்த மே 17 அன்று வெள்ளைக் கொடியோடு மக்களோடு அல்லாமல் சரணடைந்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. “அன்று தலைவருக்கு பக்கத்தில் நின்றேன். தப்பி வந்தேன்” என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. அவர்கள் அனைவருமே தலையில் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவரையான இந்த விபரிப்பை கதையாடலை தமிழுணர்வாளர்களோ புலித் தேசியவாதிகளோ பெரிதாக யாரும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இராணுவம் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் யாவரும் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை கதையாடலை மட்டுமே இலங்கை இராணுவம் திரும்பத் திரும்ச்சொல்வார்கள்.

அதன் பின் துடைத்துத் துப்பரவு செய்யும் ஒப்பிரேசன், கொமான்டர் ரஞ்சித் பந்துல கொடிப்பிலி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ், சவிந்திர டி சில்வா போன்ற இராணுவ அதிகாரிகள் இறுதிநேர ஒப்பரேசனில் தொடர்பில் இருந்தவர்கள். அதில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராயத்தில் பணியில் நியமிக்கப்பட்டு பின்னர் எழுந்த மனித உரிமைக் குற்றச்சாட்டுகளால் அங்கிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.

சரணடைந்தவர்களில் மகளீர் அணித் தலைவி தமிழினி பிடிபட்டு இருக்கும் போது ஆனந்தி சில்வா அவரைக் கண்டு ‘தமிழினி அக்கா’ என்று அழைத்துள்ளார். சீலையோடு தலையை குனிந்தபடி இருந்த தமிழினி குரலைக் கேட்டு தலையை நிமித்தினார். மேஜர் ஆனந்தி சில்வா தமிழை ஒரு தமிழனைப்போல் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். இவர் 2002 புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு ஊடகவியலாளராகக் கலந்துகொண்டார். அதன்போது புலிகளுடன் நல்லுறவைப் பேணிய ஆனந்தி சில்வா புலிகளைப் பற்றி செய்தித் தொடர் எழுதப்போகிறேன் என்று அவர்களுடன் உடன்பட்டு வன்னியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அதனால் தமிழினியோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்று தமிழினி அவருடைய கண்ணில் பட்டதால் உயிர் தப்பி இருந்தார்.

சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை ஏற்கும் தமிழுணர்வாளர்கள், புலித்தேசியவாதிகள் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பிரபாகரனும் ஒருவர் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்து, இலங்கை இராணுவத்தின் கதையாடலை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். மே 16 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் பிரபாகரன் மட்டும் தன் மனைவி மகள் கடைசி மகனைப் பிரிந்து ஒழிந்திருந்து சண்டையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். இன்னுமொரு சிலர் பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக்கொன்றார் என்கின்றனர்.

இன்னுமொருவர் சொர்ணத்தைச் சுடச்சொல்லி பிரபாகரன் கட்டளையிட சொர்ணம் அவரைச் சுட்டார் என்கின்றனர். ஆனால் அதற்கு முதல் நாளே சொர்ணம் சண்டையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த உரையாடல்களைச் சொல்பவர்கள் யாரும் தாங்கள் பிரபாகரனுடன் இறுதி நேரத்தில் நின்றதாகவோ தொடர்பில் இருந்ததாகவோ தெரிவிக்கவில்லை. இக்கதைகள் அனைத்தும் தாங்கள் பிரபாகரன் மீது கட்டிய விம்பத்தை தொடர்ந்தும் காப்பாற்றும் ஒரு முயற்சியே.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உரையாடல்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனை பல இராணுவத் தளபதிகளும் கூறியுள்ளனர். ஆனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை வெளியிடவில்லை.

அக்காலங்களில் பல்வேறு தவறான செய்திகள் ஊகங்களாக வெவ்வேறு ஊடகங்களில் வந்தபோதும் தேசம்நெற் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது. இலங்கையில் அன்று எமது ஊடகவியலாளராக இருந்த காலம்சென்ற பி எம் புன்னியாமீன், யுத்தகளத்தில் நின்ற இராணவத் தளபதியூடாக அதனை உறுதிப்படுத்தி இருந்தார். மே 20 அன்று தேசம்நெற் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட செய்தியை ஈழத்தமிழ் ஊடகங்களில் முதன் முதலாக வெளியிட்டது. மறுநாள் 21இல் “இந்தியாவின் மிகப்பெரும் துரோகம்! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டனர்!!” என்ற செய்திக்கட்டுரை தேசம்நெற்றில் வெளியானது. பரதெனிய பல்கலைக்கழகத்தில் என்னுடைய நண்பரோடு ஒன்றாகப் பயின்ற இன்னுமொரு இராணுவத் தளபதியும் பிரபாகரனின் குடும்பத்தினர் சரணடைந்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் வெளிப்படையாக வந்து இதுதான் நடந்தது என்று சொல்வதற்கு அண்மைய எதிர்காலத்தில் எவ்வித வாய்ப்பும் இல்லை.

பிரபாகரன் பற்றிய எந்தக் கதையாடலை யார் கேட்க விரும்புகின்றனரோ அதற்கமைய இந்தக் கதையாடல்கள் அமையும். உண்மைகள் உறங்குவதில்லை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி – சுபாஸ் சந்திரபோஸ் விமானவிபத்தில் கொல்லப்பட்டதாகவும் அவருடைய அஸ்தி ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு இந்திய அரசு வாடகையும் செலுத்துகின்றது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸ் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்வதை பிரதமர் நேரு அப்போதைய பிரித்தானிய பிரதமர் அட்லிக்கு காட்டிக்கொடுத்து ஸ்ராலினூடாக அவரைக் கைது செய்து தூக்கிலிட்டனர் என்பது சில தசாப்தங்களின் பின் வெளியான உண்மை. உண்மைகள் எப்போதும் கசப்பானவை.

மே 16இல் புலிகளின் கையறுநிலை அப்போது மத்திய கிழக்கில் ஜோர்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலிகளின் பிரபாகரனின் சரணடைவு பற்றியும் மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “நான் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டுக்கு நான் திரும்பப்போகின்றேன்” என்று குறிப்பிட்டு விட்டு மஹிந்த ராஜபக்ச மே 17 காலை கட்டுநாயக்காவில் தரையிறங்கி மண்ணை முத்தமிட்டார். பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்ற மமதையை மஹிந்த ராஜபக்சவின் உடல்மொழியும் உரையும் உறுதிப்படுத்தியது.

எல்லோருடனும் வெள்ளைக்கொடியோடு பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்தனர் என்ற உண்மை மிகக் கசப்பானது. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் இன்னமும் கசப்பானவை. ஈபிடிபி தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்த அண்மையில் வெளியிட்ட பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்.

தான் இதையெல்லாம் செய்யவில்லை என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா சொல்ல வருவதன் மூலம் அவர் குறிப்பிடுவது. இதையெல்லாம் பிரபாகரன் செய்தார் என்பதற்கே. அவர் குறிப்பிட்டுச் சொல்கின்ற விடயங்களும் அதற்கும் மேலாக நடந்ததும் வீடியோக் கிளிப்பாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்படி சரணடைந்த பிரபாகரனின் குடும்பத்தினர் பனாங்கொடை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரபாகரன் குடும்பத்தினர் மனித விழுமியங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மதிவதனியும் துவாரகாவும் பாலியல்துன்புறுத்தல்களை அனுபவித்தனர். இவை பதிவு செய்யப்பட்ட காணொலி அங்கிருந்த இராணுவத் தளபதிகளினால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்காக இது பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அந்தக் காணொலி தேசம்நெற் க்கு நெருக்கமான ஒருவராலும் பார்க்கப்பட்டது. அதுபற்றிய பதிவும் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியின் பிரதியை எடுக்க முயன்றபோது அது உடனடியாகவே மறைக்கப்பட்டது. அந்த காணொலியில் காணம்பிக்கப்பட்ட விடயத்தையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரணமாக ஒரு தமிழனாக இந்த விடயத்தை ஜீரணப்பது மிகக் கடுமையானது. புலிகளுடைய பிரபாகரனுடைய எதிரிகள் கூட இந்நிலைமையை ஜீரணிக்க கஸ்டப்பட்டார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அவருடைய அரசியல் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள் கூட பிரபாகரன் தனது குடும்பத்தோடு இறுதிவரை அம்மண்ணில் நின்று போராடியதையும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அப்போராட்டத்துக்கு அர்ப்பணித்ததையும் மிகப் பெருமையாகவே கருதுகின்றனர். இந்த சரணடைவது என்பது யுத்தத்தின் ஒரு அம்சம். தவிர்க்க முடியாதது.

ஒரு சில நாட்கள் சரியான உறக்கமும் உணவும் இல்லாதிருந்தால் நாம் சிந்திக்கவோ சரியான முடிவுகளை எடுக்கவோ முடியாது. அப்படி இருக்கையில் ஒரு சில கிலோ மீற்றருக்குள் ஒரு சில வாரங்கள் தக்க உணவு, உறக்கமின்றி நிம்மதியின்றி இருந்த ஒருவர் மிக நேர்த்தியான முடிவை எடுக்க முடியாது. அன்று இந்த சரணடைவைத் தவிர வேறேதும் வழியில்லை.

இந்நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அறிவின்மையும் வஞ்சப்புகழ்ச்சிகளும் அவர்களுடைய சுயநலன்களும் முக்கிய காரணம். பிரபாகரனும் புலிகளும் தமிழ் சமூகத்தின் உற்பத்திகள் தான். அவர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. பிரபாகரன் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என இரா சம்பந்தன் அவர்களும் விரும்பி இருந்தார். அவர் புலிகளையோ மக்களையோ காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதை எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

விடுதலைப் புலிகளை குறிப்பாக பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலங்கைக்கு அவ்வளவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜேவிபி இன் ரோஹன விஜய வீர, பிகெகெ ஓச்சுலான் போன்று சிறையில் அடைத்து தமிழ் மக்களது உள்ளுணர்வை நொருக்க ராஜபக்சக்கள் விரும்பி இருக்கலாம். சில சமயம் ஏனைய ஆயுத அமைப்புகள் அரசியலுக்கு வந்தது போல் புனர்வாழ்வு பெற்று பிரபாகரனும் பிற்காலங்களில் அரசியலுக்கு வந்திருக்கலாம். இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தது இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்தியாவே பிரபாகரனது குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரும் உயிருடன் இருக்கக் கூடாது என்ற உத்தரவை இலங்கை அரசுக்கு வழங்கியதாகவும் இலங்கை உயர்பீடத்தில் இருந்து சில தகவல்கள் தேசம்நெற்க்கு எட்டியது. பிரபாகரனோ அல்லது அவரது குடும்பத்தினரோ உயிருடன் இருந்தால் தமிழகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஏப்பிரல் 5இல் விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்தித்த போது, புளொட் அமைப்பினூடாக இந்தியாவுக்கு புலிகள் தாங்கள் சரணடைவதற்கு தயாராக இருப்பதை தெரியப்படுத்தி இருந்தனர். இதனை புளொட் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தது. இந்தியத் தூதரகம் பிரபாகரனும் பொட்டம்மானும் தவிர்ந்த ஏனைய போராளிகளை தாங்கள் காப்பாற்றவும் ஏற்றுக்கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்ததாக புளொட் வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தன.

இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆகையால் இந்தியாவின் விருப்பத்திற்கமைய பிரபாகரனின் குடும்பத்தினர் மீளவும் முள்ளிவாய்கால் கொண்டு செல்லப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டனர். மே 17 அதிகாலையில் சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் மே 18இல் மீண்டும்  முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனின் துணைவியார் மதிவதனியினதும் துவாரகாவினதும் உடல்கள் இந்தியாவின் என்டிரி NDT சனலில் மட்டும் ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. அதன்பின் அப்படங்கள் உடனடியாகவே நீக்கப்பட்டது. அதனைத் தவிர வேறு எங்கும் அவர்களின் படங்கள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.

பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய நிபுணர் பிரபாகரனுக்கு மிகக் கிட்ட (ஒரு மீற்றருக்குள்) இருந்தே துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவொரு தற்கொலையல்ல படுகொலையென்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகம் இந்தப் படிப்பினைகளில் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். அடைந்தால் தமிழீழம் இல்லையேல் மரணம், செய் அல்லது செத்துமடி போன்ற உணர்ச்சிகரமான போதையூட்டும் மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். வாழ்க்கை என்பது அது அல்லது இது என்ற பைனறி (binary language) மொழியல்ல. வடக்கு கிழக்கை ராஜ்ஜியமாக ஆண்ட புலிகள் அரசியல் அனாதைகளாகி பூஜ்ஜியமானது மிகச் சோகமான வரலாற்றுப் பதிவு. அரசியலுக்கு மேல் மக்களுக்கு மேல் ஆயுதங்களைக் காதலிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான பாடம்.

தேசம்நெற் பிரபாகரனின் மரணச் செய்தியை வெளியிட்டு நான்கு நாட்களின் பின், மே 24 அன்று அனைத்துலக வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாதன் (கெபி) “தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீர வணக்கங்கள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பிரபாகரனின் மரணத்தை உலகிற்கு அறிவித்தார். சில தினங்கள் பிரபாகரனின் மரணத்தை மறுத்துவந்த கெபி அதன்பின் அடேல் பாலசிங்கம் மற்றும் சிலரோடு உரையாடி புலிகளின் தலைவரின் மரணத்தை அறிவித்து அவருக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வறிக்கையை வெளியிட்டார். அதன் பின் தேசம்நெற் கெபி உடன் தொலைபேசியூடாக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. இந்நேர்காணலை அவருடைய ஆதரவாளரான லண்டனில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான வாசுதேவன் ஏற்படுத்தித் தந்தார். அந்நேர் காணலின் ஒலிப்பதிவு:

எதிர்காலத்தில் அரசியல் படுகொலையற்ற அரசியல் செய்வோம்! செய்வதற்குமுன் சிந்தித்து செய்வோம்!! எதற்காகவும் செத்துமடிய வேண்டாம்!!