::முஸ்லீம் விடயங்கள்

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

டிசம்பர் 5இல் மெளலவி ஆசிரியர் நியமனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப் பேகடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சு வார்த்தையையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடனடியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது

சவூதிஅரேபியாவில் பன்றிக்காய்ச்சல் நான்கு பேர் மரணம்; நான்கு பேர் வைத்தியசாலையில்

macca.jpgசவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுக்குச் சென்றோரில் நான்கு பேர் இன்புளுவென் சியா நோயினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் இம்முறை ஹஜ் கடமைக்காக மக்கா, மதீனா நகரங்களில் கூடுகின்றனர்.

இவர்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மொரோக்கோ, சூடான், இந்தியா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்களென்று சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு அறிவி த்துள்ளது. 17 வயதுச் சிறுமியும் 75 வயது மிக்க முதியோருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

புனித ஹஜ்ஜுக்காக சவூதிஅரேபியா வருவோர் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவதுண்டு. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்று வந்தோரில் இருபது பேருக்கு இன்புளு வென்சியா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர்களில் 12 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டனர். நான்கு பேர் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்ப ட்டுள்ளனர்.

நான்கு பேர் உயிரிழந்தனர்.சவூதிஅரேபியாவில் இம் முறை 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக வரவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக மருத்துவ ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ நிலையங்களும் சேவையிலுள்ளன. மதவைபவங்களுக்காகப் இலட்சக்கணக்கானோர் கூடும் இடமாக சவூதிஅரேபியா உள்ளது.

மெளலவி ஆசிரியர் நியமன போட்டி பரீட்சை அடுத்த வாரம்

மெளலவி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை, அடுத்தவாரம் கொழும் பில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி கூறினார்.  போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தை ஏளனம் செய்த பொன்சேகா வெட்டும் குழியில் எவரும் வீழ்ந்து விடவேண்டாம் அலவி மௌலானா கோரிக்கை

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்றும் நாட்டின் நிருவாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்று முஸ்லிம் சமூகத்தை அவமதித்து ஏளனம் செய்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா என கண்டனம் தெரிவித்திருக்கும் மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா அவரால் வெட்டப்படும் குழியில் எவரும் விழுந்து விடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் மக்களின் கவனத்துக்கென ஆளுநர் அலவிமௌலானா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நமது நாட்டில் நடந்து முடிந்துள்ள யுத்தத்தினாலும், பல்வேறுபட்ட பொருளாதாரச் சிக்கல்களினாலும் திணறிக்கொண்டிருக்கும் எமது மக்கள் இன்று படிப்படியான முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். சமூகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத வித்துக்களைக் களைந்து ஒரே நாடு ஒரே மக்கள் என்ற விழிப்புணர்விற்கான செயற்திட்டங்களை அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் சிந்தித்தேனும் அக்கறை கொள்ளாத சக்திகள் மீண்டும் மக்களை குழப்பி சதிசெய்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களாகிய நீங்கள் இந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளாது சதிகாரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உங்கள் வசம் மிக விரைவில் வந்தடையும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறிது காலத்துக்கு முன்பு வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களிடையே பெரும் மனக் கிலேசத்தினை ஏற்படுத்தியதை நாம் மறந்து விடமுடியாது. அவர் படைத் தளபதியாக இருந்த காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்று ஏழ்மை செய்தார். அவர்கள் நிர்வாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்றும் அவதூறு செய்தார். இவர் வெட்டிய குழியில் எவரும் விழுந்து விடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ரவூப் ஹக்கீம், மனோகணேசன் போன்றவர்களும் அதிருப்தி அடைந்தவர்களாக அன்று காட்டமான அறிக்கைகளை விட்டிருந்தனர் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான ஆக்கபூர்வமான கருத்துகளை இவர்களினாலும் இன்னும் முன்வைக்க முடியாமல் உள்ளது. எவ்வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் போதும் என்ற மனப்பான்மையை எதிர்க்கட்சிகளிலும், சுயநலத் தலைவர்களிடத்தும் மேலோங்கி இருப்பதை அறிவு சார்ந்த மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என்ற புவியியல் கோடுகளை களைந்து நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறும் காலம் உதயமாகியுள்ளது. சுதந்திர இலங்கையில் சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும் நாடு எவரிடமும் தங்கி நிற்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசினால் பேசப்பட்ட போலி சமாதானத்தில் முஸ்லிம் சமூகத்தை மோசமாகக் கையாண்டதில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை சமாளிக்கத் தக்க வகையில் முஸ்லிம் தரப்பை மூன்றாம் தரப்பாக்கி, ரவூப் ஹக்கீமை பேச்சு மேசைக்கு ஓட்டிச் சென்றதை ரவூப் ஹக்கீம் மறந்தே போய்விட்டார்.

புலிகளினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நியாயத்தினை முதன்மைப்படுத்தி மர்ஹும் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், ரணிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்குள்ளோ செல்லவேயில்லை. அவ்வாறு மர்ஹும் அஷ்ரப்பினால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் ஹக்கீம் சங்கமமாவதால் முஸ்லிம் சமூகம் என்ன நன்மையடையப் போகிறது? என்பதை ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லாதிருப்பது ஏன் என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்மைகளை விட திரைமறைவில் மோசமான கழுத்தறுப்புகள் நடத்தப்பட்டதை இங்கு பட்டியலிடலாம். துயரம் என்னவென்றால் ஹக்கீம் கோடரிக் காம்பாகி இருப்பதுடன் தனது சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை கறிவேப்பிலையாக்கிக் கொண்டிருப்பதேயாகும்.

சியோனிசக் கதிரையில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை இன்று முஸ்லிம்கள் நன்கு இனம் கண்டு வைத்துள்ளனர். வரலாறு இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது.

வடபுல முஸ்லிம்களை வையகம் மறந்து விட்டதா? : யூசுப் கே. மரைக்கார்

Muslim_Expulsion._._._._._.
யூசப் கே கே மரைக்கார் மன்னாரைச் சேர்ந்தவர்.  தற்போதும் இலங்கையில் வாழும் இவர் இலங்கையின் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்தும் எழுதி வருபவர். இக்கட்டுரை தேசம்நெற் க்காக எழுதப்பட்டுள்ளது.
._._._._._.

ஒக்டோபர் 24 ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் தமது பூர்வீக தாயகத்தை விட்டு வெளியேறி 20 வருடங்கள் முடிவடைந்து விட்டன.

உள்நாட்டில் இடம்பெயர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, புவியதிர்வு போன்ற இயற்கை காரணங்களினாலும், இனக்கலவரம், மதக்கலவரம் போன்றவற்றாலும் மற்றும் அரசு அபிவிருத்தித் திட்டங்கள், உள்நாட்டு அல்லது சர்வதேச யுத்தம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம். வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு வகையான இனச் சுத்திகரிப்பு என்று கூடக் கூறலாம்.

உள்நாட்டு இடம் பெயர்வு பற்றி சர்வதேச சட்டத்தில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. சர்வதேச சட்டமானது தேசங்களின் வழமையான சட்டங்களையும் சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதற்கு முன்பிருந்த சர்வதேச ஒன்றியங்களினாலும் உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியது எனச் சுருக்கமாக கூறலாம்.

சர்வதேச சட்டங்களுள் மனித உரிமை சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் இணைந்து அகதிகள் பற்றியும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளன.

இவற்றை அடித்தளமாகக் கொண்டு பிரான்சில் டெங் என்ற ஐ.நா. சபையின் சட்ட நிபுணர் 1998 ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்தல் பற்றிய பொதுக் கோட்பாடுகளை (General Principles on Internal Displacement) உருவாக்கினார்.

இந்த கோட்பாடுகளை வோல்டர் கோலின், கோஹன், யாஷ்காய் போன்ற சட்ட வல்லுனர்கள் மேலும் மெருகூட்டினர். இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தனியான சட்டவாக்கங்கள் எதுவும் இல்லையென்றாலும் இலங்கை அரசியல் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் சரத்து முதல் 17 ஆம் சரத்து வரையிலான அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கும் பொருந்தும்.

இங்கே உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான சட்டப்படியான பாதுகாப்பு எனக் கருதுகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கோட்பாடுகளும் (GPIO) இலங்கையின் அரசியலமைப்புச் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தில் 10 முதல் 17ம் பிரிவு, கொசோவோ மற்றும் டேந்தன் உடன்படிக்கை ரீதியான விதிகளும் பொருந்தும். என்றாலும் ஐ. நா. சபையின் அல்லது சர்வதேச சட்டங்களின் ஏற்பாடு இலங்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதையிட்டு இன்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிக் குறிப்பிடுகையில் அகதிகளுக்கும் இவர்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முன்பு கூறப்பட்ட காரணங்களும் உயிருக்கு பயந்து ஒரு நாட்டின் சர்வதேச எல்லையைக் கடந்தவர்கள் அகதிகளாவர்.

அவ்வாறு வெளியேறாது உள்நாட்டிலேயே மறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆவர். இதனோடு இணைந்து பலவந்த வெளியேற்றம், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை, மீள்குடியேற்றம், மீளமர்வு, மீளிணைப்பு, பாரம்பரிய குடிநிலம், வழமையான வதிவிடம் போன்ற செயற்பாடுகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரமாம் ஆண்டு உலகில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டரைக் கோடியாகும். அதாவது உலக சனத்தொகையில் இருநூற்றில் ஒருவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆகவிருக்கின்றனர் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

இதில் இன்னுமொரு பிரதான காரணி என்னவெனில், இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மோரோ (Moro) முஸ்லிம்களும், மியன்மாரில் ரோஹில்லயா முஸ்லிங்களும், தாய்லாந்திலும், பங்களாதேசின் முன்னாள் யுத்த அகதிகளும், பாகிஸ்தானிலும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், துருக்கி, பொஸ்னியா, சோமாலியா, சூடான், எதியோப்பியா, உகண்டா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக சொல்லொனாத் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் பொதுவானவை தான். குறிப்பாக மனித உரிமை அல்லது அடிப்படை உரிமை மீறல் சம்பந்தமான குடியியல் அரசியல் சமூக பொருளாதார கலாசாரம் தொடர்பான பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

விசேடமாக உணவு, உடை, இருப்பிடம், நீர், சுத்தமான சுவாத்தியம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விருப்புடன் கூடிய மீள்குடியேற்றம், வரவேற்ற சமூகம் (Host Community) என்பவற்றைச் சார்ந்த சிக்கல்களுக்கு விடை காண வேண்டியுள்ளது. உலகின் உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளில் அசே, பொஸ்னியா உள்நாட்டு இடம்பெயர்ந்தோர்கள் தவிர்ந்த ஏனைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை சுமுகமான தீர்வு காணப்படவில்லை.

இலங்கையில் இப்போது ஐந்து இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக இருக்கும் நிலையில் இவர்களின் பிரச்சினை முற்று முழுதாய் தீர்க்கப்பட்டால் அந்தப் பெருமை அரசாங்கத்தையும் இது தொடர்பான அமைச்சரையுமே சாரும். இவ்வேளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத், வாகரையிலும் மூதூரிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களை மீள்குடியேற்றியுள்ளமை பெருமை தருவதாக அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதிவாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 72000 வடபுல முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்றுவரை மீள்குடியேற்றப் படாமலிருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.

மீள்குடியேற்றமானது உண்மையான விட்டுக்கொடுப்புடனும் ஒத்துழைப்புடனும் இடம்பெற வேண்டும். பொஸ்னியா, அசே போன்ற நாடுகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகள் இந்த முறையில் தான் தீர்க்கப்பட்டன. முக்கியமாக இனங்களுக்கிடையில் விட்டுக் கொடுப்பும் அரசாங்கத்தின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் சர்வதேச சமூகத்தின் இடையாறாத உதவியும் மிக அத்தியாவசியமான காரணிகளாகும்.

இரண்டே மணித்தியாலங்களுக்கும், சில இடங்களில் இரண்டு நாட்களிலும் தமது நிரந்தர வதிவிடத்தை விட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்களின் இழப்புகள் வடபுல உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் தமிழ்ச் சகோதரர்களது இழப்புக்களை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல.

இதனையிட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டவில்லை. மாறாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் வவுனியா வந்தபோதும் பல லட்சம் ரூபா பெறுமதியான உணவு, உடை, மருந்து என்பவற்றைக் கொடுத்துதவினர்.

மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் காட்டும் அக்கறையைப் பார்க்கையில் உண்மையில் நெஞ்சு நெகிழ்கின்றது. பல கோடி ரூபாக்களை இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களுக்காக கொடுத்துதவினர் என்பது வரவேற்கத்தக்க விடயம்.

உடனடியாக பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லி பிராண்ட்டும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னரும் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனும் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்த அள்ளி அடித்துக்கொண்டு இலங்கைக்கு ஓடி வந்தனர்.

இதற்கு சில தினங்களின் பின்பு பான்கிமூனின் உதவியாளர் லின் பாஸ்கோ இவ்வருட செப்டம்பர் 16 ஆம் திகதி வருகை தந்து மெனிக்பாம் முகாமுக்கு சென்று திரும்பினார்.

ஐ. நா. அகதிகள் தாபனத்தைச் சேர்ந்த அன்டோனியோ கட்டரேஸம் வந்தார். தமிழ் மக்களைப் பார்த்துவிட்டு இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கும் கவனிப்பதற்கும் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்றார். பாக்கிமூனின் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட பிரதிநிதி வால்டர் கேவின் என்பவரும் வந்து சென்றார்.

இவர்களது கண்களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் அவலநிலை படாமற் போனது ஏன்? இந்த முஸ்லிம்கள் அவர்களது பார்வையில் மனிதர்களாகத் தோன்றவில்லை போலிருக்கின்றது. இதேவேளை இந்தியா ரூ. 500 கோடிகளை இந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கியது.

இது போதாதென்று இன்றும் ரூ. 500 கோடிகளை இம்மாதம் ஒதுக்கியுள்ளது. இதேவேளை இந்தியா பலவந்தமாக விரட்டப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வடபுல முஸ்லிம்களுக்கு ஐநூறு ரூபா தானும் கடந்த இருபது வருட காலங்களில் ஒதுக்கவில்லை, கொடுக்கவில்லை என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமல்லவா?

உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி அதீத அக்கறை செலுத்திய அதேவேளை கடந்த 20 வருட காலமாக அல்லலூறும் இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தைதனும் பேசாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இவ்வாறே சர்வதேச மதஸ்தாபனங்களின் கண்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவ் வடபுல முஸ்லிம்கள் தென்படாதது ஏன் என்று புரியவில்லை. இந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையோ? என்னவோ?

வெளிநாடுகள்தான் இவ்வாறென்றால் உள்நாட்டில் கூட பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஓர் எல்லை இல்லை. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் எவ்வளவோ பேசுகின்றனர்.  ஆனால் வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தை தானும் இவர்கள் பேசாததன் காரணம் என்ன? ஒரு வேளை முற்றாக மறந்து விட்டார்கள் போலும். தேர்தல் வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமோ?

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது வாழாவிருந்தது தமிழ்நாடு. இதே தமிழ்நாடு முள்ளி வாய்க்காலிலும் புதுமாத்தளனிலும் மூன்று லட்சம் தமிழர்கள் விடுதலைப் புலிகளினால் மனித கேடயமாகத் தடுத்து வைத்த போது வாய்பொத்தி மெளனம் சாதித்தது.

தமிழக ஊடகங்களும் மேற்குலகும் இத்தமிழர்களை விடுவிக்கும்படி புலிகளை தட்டிக் கேட்கத் துணியவில்லை. துணிவுமில்லை. ஆனால் இன்று இலங்கை அரசாங்கம் அத்தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வைத்திருக்கும் போது மட்டும் கண்ணீர் விடுவதன் மர்மம் என்ன?

இன்று தமிழ் மக்களின் நலனில் திடீரென்று அக்கறை காட்டும் ஒருசில நாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்தினை வைத்துக் கொண்டுதான் புலிகள் இயக்கம் பஞ்சமா பாதகத்தை புரிந்தனர். தம்மை வளர்த்து வாழ்ந்துக் கொண்டு வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சீரழித்தனர். இதே புலிகள் இயக்கம் எப்போதாவது வடபுல முஸ்லிம்களை ஏற்று மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தினார்களா? இந்த சின்னத்தனத்தை எப்படி அழைக்கலாம்? மடைமையா? பாராபட்சமா? இனத்துவேசமா? அறியாமையா? அல்லது இரட்டை வேடமா? யூதர்களின் செல்வாக்குக்கு அடிபணியும் ஒரு சில நாடுகள் முஸ்லிம்களைக் கொன்றழிப்பதற்கும் முஸ்லிம் நாடுகளைத் திட்டமிட்டு அழிப்பதற்குப் பயங்காரவாதத்துக்கும் எதிரான போர் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் தான் இவை.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிங்களை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவர்களுக்கு விடிவு எப்போது? இறைவனுக்குத் தான் தெரியும்.

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி

hajj.jpgபுனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர். ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.

மௌலவி ஆசிரியர் நியமனம் நவம்பரில்! கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தகவல்

210909ramzan.jpgமௌலவி ஆசிரியர் நியமனம் எதிர்வரும்  நவம்பர் மாதம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
 
காலி ஆளுநர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  இந்நியமனங்களை வழங்குவதற்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதால் இந்நியமனத்தை உடனடியாக வழங்க முடியாதுள்ளது. இத்தேர்தல் முடிவடைந்ததும் இந்நியமனங்கள் வழங்கப்படும்.

மௌலவி ஆசிரியர் நியமனமனத்தை கடந்த 20 ஆண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வழங்க மறுத்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதனை வழங்க முன்வந்துள்ளது. இதனால் இந்நாட்டு முஸ்லிம்கள் நன்றியுடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்த போது விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் கையளிப்பு

ramadan-mosque.jpgவட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக தகவல் திரட்டும் வகையில் வடமாகாண முஸ்லிம்களிடமிருந்து திரட்டப்பட்ட 7000 (ஆயிரம்) விண்ணப்பப் படிவங்களை இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனம் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று அமைச்சில் வைத்து கையளித்தது.