::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிரித்தானிய பிரதமரின் முடிவின் ஆரம்பம்! நம்பிக்கையிலாப் பிரேரணையில் தற்போது தப்பித்துக்கொண்டார் பிரதமர் பொறிஸ்!!!

இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.

இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.

முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.

உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரெய்ன் இன்னுமொரு வன்னி!!!

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.

உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.

இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.

ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.

இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது) ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது. மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.

உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.

நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.

அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் பிரான்சின் ஜனாதிபதியானார் இமானுவல் மக்ரோன் !

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரோன் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மெக்ரொன் பிரான்ஸில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு! - தமிழ்வின்

இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மக்ரோன், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இத்தாலிப் பிரதமர் மரியோ டிராகி, போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகை உலுக்கிய புச்சா படுகொலை சம்பவ விவகாரம் – உண்மையான குற்றவாளிகள் பிரித்தானியாவும் – உக்ரைன் இராணுவமுமா..? அதிர்ச்சி வீடியோ.. !

உக்ரைனின் கீவ் புறநகரில் 410 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் புச்சா நகரில் கொலை, சித்திரவதை, பலாத்காரம், கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக உக்ரைன் அதிபர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள நகரங்களின் தெருக்களில் 410க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்யப் படைகளை கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள், பலாத்காரக்காரர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வீடியோ பதிவில், ‘உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய அனைத்து குற்றங்களையும் விசாரிப்போம். சிறப்பு விசாரணை குழுவை அமைப்போம். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களுக்கு மரணம் மட்டுமே சரியான தீர்ப்பாக இருக்கும். ஒவ்வொரு ரஷ்ய வீரரின் தாயும் புச்சா, இர்பின், ஹோஸ்டோமலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? ஏன் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்? தெருவில் சைக்கிளில் சென்றவர் உங்களுக்கு என்ன செய்தார்? அமைதியான நகரத்தில் வசித்த மக்கள் ஏன் சித்திரவதை செய்யப்பட்டனர்? பெண்களின் காதுகளில் இருந்து காதணிகள் பிடுங்கி கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? குழந்தைகள் முன்னிலையில் பெண்களை எப்படி உங்களால் பலாத்காரம் செய்து கொல்ல முடியும்? இறந்த பிறகும் அவர்களின் சடலங்களை ஏன் அவமதித்தீர்கள்? டாங்கிகளை கொண்டு அவர்களின் உடல்களை ஏன் நசுக்கினார்கள்? புச்சா நகரம் ரஷ்யாவிற்கு என்ன பாவம் செய்தது? இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ரஷ்ய தாய்மார்களே! நீங்கள் கொள்ளையர்களை வளர்த்தாலும் கூட, அவர்களும் எப்படி கசாப்புக் கடைக்காரர்கள் ஆனார்கள்? வேண்டுமென்றே மக்களை கொன்றுள்ளனர்’ என்று ஆவேசமாக பேசினார்.

உக்ரைன் அதிபர் பேச்சுக்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா அளித்த பேட்டியில்,

‘புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்கள், உக்ரைன் இராணுவத்தாலும், தீவிர தேசியவாதிகளாலும் நடத்தப்பட்டவை. புச்சா விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களை சீர்குலைக்கும். மேலும்  வன்முறையை அதிகரிக்கும். கடந்த மார்ச் 30ம் தேதி புச்சா பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறிவிட்டது. அதற்கு பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் கொலைக் குற்றங்கள் பற்றிய சான்றுகள் வெளிவந்தன. புச்சா நகரத்தின் மேயர் அனடோலி ஃபெடோருக் வெளியிட்ட வீடியோவில், ‘புச்சாவில் ரஷ்ய துருப்புக்கள் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தினார். எனினும் அவர் பொதுமக்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட விபரங்கள் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று கூறினார்.

இதே நேரம் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய எம்.பி. Ilya Kiva தெரிவித்துள்ளார். உக்ரைன் எம்.பி. Ilya Kiva வெளியிட்ட வீடியோவில், புச்சாவில் நடந்தது பிரித்தானியா MI6 உளவுத்துறையால் திட்டமிட்டப்பட்டு, உக்ரைனின் SBU-வால் அரங்கேற்றப்பட்டது.

உக்ரைன் SBU படைகள், அதிகாலையில் புச்சாவிக்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து, சாலையில் சடலங்கைளை சிதறித்தனர். பின் அவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்தனர். இதனையடுத்து, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க சம்பவயிடத்திற்கு ஜெலன்ஸ்கி சென்றார். ஆனால், அவை அனைத்தும் போலியானது. ஏன் இதுபோன்ற நிலைமை Sumy அல்லது CHernihiv-வில் இல்லை? என எம்.பி. Ilya Kiva கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்கு காரணமானவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்’ என்று கூறினார்.

போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா வெளியிட்ட அறிவிப்பில், ‘மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்களை அனுப்ப வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை புச்சாவில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் பொய்யாக்குகின்றன. எனவே, உக்ரைன் படைகளுக்கு இப்போதைக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே தேவை. அதாவது ஆயுதங்கள், ஆயுதங்கள், நிறைய ஆயுதங்கள்…’ என்று தெரிவித்துள்ளார்.

ரூபிளில் மட்டுமே எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் -ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு

ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது,

எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை மாற்றுவதற்கு சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். அதன்படி, ரஷ்யாவிடம் தோழமை அல்லாத நாடுகள் தாங்கள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே
திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது. எனினும், ரஷ்யா தனது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு அளவை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வழங்கும்.

புதிய கட்டண முறையை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்துமாறு ரஷ்யாவின் மத்திய வங்கியை கேட்டுகொள்கிறேன். இது வெளிப்படையாகவும் ரஷ்யாவின் உள்நாட்டு சந்தையில் ரூபிள் வாங்குவதை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அதன்மீது உலக நாடுகள் விதித்த சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது உக்ரேன் மோதலின் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்து ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு, இப்போது யூரோ மற்றும் டாலருக்கு எதிராக வலுப்பெற்றது.
புட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தனது சர்வதேச கூட்டாளிகள் விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான தொகையை இனி ரூபிளாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.

ரூபிளை வலுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை உக்ரைன் உடனடியாகக் கண்டனம் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க போகின்றதாம்? அதை பைடனும் பொறிஸ்சும் தடுக்கப் போகிறார்களாம்? – முதலைக் கண்ணீர்!!!

கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.

20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.

தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.

உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.

ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.

ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.

இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.

இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.

எளியவனை வலியவன் இன்னும் மிதிக்கின்றான்! மனித சமூகம் நாகரீகமடைந்துவிட்டதா?

அமெரிக்கா – சீனா சண்டை இப்ப நம்மட தவறணைக் கோஸ்டியளின் சண்டை லெவலுக்கு வந்திட்டுது. ஹூவாய் நிறுவனத்தின் பிரதான நிதிப் பொறுப்பாளர் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் மெங் வன்சூ மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடாவில் அவருடைய இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அமெரிக்க அரசின் தடையுத்தரவை மீறி ஈரானுடன் நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு சீனா இரு கனேடிய ராஜதந்திரிகளை தன்நாட்டு இராணுவ இரகசியங்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்து பதிலடி கொடுத்தது.

இப்போது அமெரிக்கா மெங் வன்சூ குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று சொல்லி அவரை விடுதலை செய்ததை அடுத்து சீனாவும் தான் சிறை வைத்த இரு ராஜதந்திரிகளான மைக்கல் கோவ்றிக் மற்றும் மைக்கல் ஸ்பாவ்வோர் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

இதுவரை உலக பொலிஸ்காரனாக உலா வந்த அமெரிக்காவிற்கும் அதன் வாலாகத் திரிந்த பிரித்தானியாவிற்கும் இனி இந்த பொலிஸ்காரன் விளையாட்டுச் சரிவராது. 2019இல் பிரித்தானிய கடற்படை ஈரானிய பெற்றோல் சுப்பர் ராங்கர் ஒன்றை கில்பிராட் கடற்பகுதியில் வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட சிரியாவுக்கு பெற்றோல் அனுப்பப்படுகின்றது என்று கூறி பிரித்தானிய கடற்படை ஈரானிய ராங்கரைக் கைப்பற்றியது. அதனையடுத்து ஈரான் பதிலடியாக பிரித்தானிய ராங்கரை வளைகுடாப் பகுதியில் கைப்பற்றியது. அதன் பின் இரு தரப்புமே உடன்பாட்டுக்கு வந்து ஈரான் தான் கைப்பற்றிய பிரித்தானியாவின் ராங்கரை விடுவிக்கு ஈரானின் ராங்கரை விடுவிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானிய ராங்கரை விடுவித்தது.

சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் எல்லாம் வறுமைப்பட்டவர்களுக்கும் வலுவில்லாதவர்களுக்கும் மட்டுமே. சட்டம்இ ஒழுங்குஇ நீதிஇ நியாயம் எல்லாம் வலுவானவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சாதகமாகவே வேலை செய்யும். இது தனிப்பட்டவர்கள் சார்ந்தது மட்டுமல்ல நாடுகள் மட்டத்திலும் இதுவே நடைபெறுகின்றது. வலுவான நாடுகள் வலுவற்ற நாடுகளை ஆட்டிப்படைப்பதும் இதன் அடிப்படையில் தான்.

டார்வினின் ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட் – The survival of the fittest’ காடுகளுக்குள் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு இடையேயும் இதுவே பொதுவிதி.

இப்போது என்னமோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயமாக நடக்கும் தங்களை சீனா குறுக்கு வழியில் மடக்கிவிட்டதாக மேற்குநாட்டு ராஜதந்திரிகள் புலம்புகின்றனர். பிடல் கஸ்ரோவை கொல்வதற்கு 600க்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்த போது எந்தச் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை கடைப்பிடித்தார்கள்? ருவின் ரவரை தாக்கி அழித்தவர்கள் சவுதிய அரேபியர்கள் ஆனால் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டில் மனித அழிவுக் கணக்கெடுப்பின்படி உத்தியோகபூர்வ எண்ணிக்கை 200,000. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம்.

ஈராக் மட்டுமா, இந்த மேற்குலகம் தலையீடு செய்த அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இன்றும் உயிரழிவுகள் நடந்தவண்ணமே உள்ளது. ஆனால் சீனா, ரஸ்யா, வடகொரியா போன்ற நாடுகள் வலுச்சமநலையை வைத்திருப்பதால் மட்டுமே இன்று உலகில் ஓரளவு சமாதானம் நிலவுகின்றது. முதலில் யாரும் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமே இதுவரை சமாதானத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது.

குடும்பம் என்பது சிறிய அரசியல். அரசியல் என்பது பெரிய குடும்பம். எதிலும் டார்வினின் கூர்ப்புக்கொள்கையே இன்றும் நிலைக்கின்றது. அதாவது ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட்’. ஆகவே மனிதன் நாகரிகமடைந்துவிட்டான் என்பது வெறும் ஆடை, ஆபரணங்கள், சார்ந்தது என்றால் அதில் ஓரளவு உண்மையுள்ளது. ஆனால் நாகரீகம் சிந்தனை சார்ந்தது என்றால் அது பற்றி மீளச் சிந்திக்க வேண்டும். எளியவனை வலியவன் மிதிக்கின்ற சமூகம் நாகரீகமான சமூகமாக கருதப்பட முடியாது.