::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

வட்டுக்கோட்டை ‘மாவடி சிறி’யின் படைப்புகள் – நாடகங்கள் ஒரு பகிர்தல்

நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.

யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.

ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.

சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.

இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.

2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.

சிவஜோதி ஓராண்டு நினைவு: ஒரு சமூகப் போராளிக்கு ஒரு சமூக அரசியல் தலைவரின் மனையில் நினைவுக்கூட்டம்

சமூக செயற்பாட்டாளனும் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகவும் இருந்து எம்மைவிட்டுப் பிரிந்த வ சிவஜோதியின் ஓராம் ஆண்டு நினைவு நிகழ்வு அவன் பிறந்த இளமைக்காலக் கல்வியைக் கற்ற சுளிபுரம் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளனான சிவஜோதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு உருவாக்கம். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவை நாளை டிசம்பர் 19 அன்று மாலை நான்கு மணி முதல் 6 மணிவரை நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்களில் முன்னோடியான சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த எம் கே சுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த சத்தியமனையில் உள்ள மண்டபத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சத்தியராஜன் (மீரான் மாஸ்டர்) பெயரில் உள்ள அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வ சிவஜோதி என்ற ஆளுமையை உருவாக்கியதிலும் அவனுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் சோ தேவராஜா தலைமையில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சிவஜோதியின் துணைவியார் பெற்றோர் கல்லூரி நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
 
இந்நிகழ்வில் சட்டத்தரணியும் கொழும்பு தமிழ் சங்க தலைவரான நடராசா காண்டீபன்இ தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெட்சனாமூர்த்தி மதுசூதனன்இ புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவரும் புதியநீதி பத்திரிகை ஆசியருமான சி கா செந்திவேல், ஆய்வாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான கலாநிதி நடேசன் இரவீந்திரன் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
நிகழ்வின் இறுதியில் வ சிவஜோதியின் பயணத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடரும் அவருடைய துணைவி லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்பாவர். ஹம்சகௌரி சிவஜோதி சிவஜோதியின் வழியில் குறிப்பாக சமூகத்தில் பெண்களுடைய நிலையை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். பெண் சமத்துவம், குடுபங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, இளவயதுத் திருமணங்கள், இளவயதில் தாய்மை அடைதல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிகழ்வில் ‘சிவஜோதியின் ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்படும்.
 
தற்போதைய சுகாதார சுகாதார விதி முறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நிகழ்வு பற்றிய பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளது.

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்ட இலக்கியங்களை நிராகரிக்கின்றது! – கலந்துரையாடல்

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்டம் சார்ந்த இலக்கியங்களை நிராகரிக்கின்றது என்பதனை விவாதத்துடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வு ஒன்றை ‘திரள்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஓகஸ்ட் 29 இலண்டன் நேரம் மாலை 2:30ற்கு ஆரம்பிக்கும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரத்தில் உள்ளது.

‘நவீன தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தமிழக இலக்கியச் சூழலாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டுள்ள ஈழச் சமூகங்களின் இலக்கியங்களை தமிழக இலக்கியச் சூழல் மேலும் ஓரம்கட்டுகின்றதா என்ற கேள்வி உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் ஈழத்து – தமிழக எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அண்மைக்காலத்தில் இணைந்து மேற்கொள்கின்ற கலந்துரையாடலும் விவாதமுமாக இது அமைய உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கிய ஆய்வாளர் ரியாஸ் குரானா தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இலக்கிய விமர்சகர் அபிலாஷ் சந்திரன் இலக்கிய ஆய்வாளர் முபீன் சந்திகா இவர்களுடன் லண்டனில் இருந்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  இந்நிகழ்வை இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமான வாசன் வழிநடத்துகின்றார். இவர்களது ஒரு மணிநேர முன்னுரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வோர் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைப் பரிமாறவும் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்த நிகழ்வும் இரு மணி நேரத்திற்குள் முற்றுப்பெறும். இந்த இணையவெளி கலந்துரையாடலில் இலங்கை, இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கேள்விகேட்டு கருத்துக்களை பரிமாற விரும்பாதவர்கள் சமகாலத்தில் நிகழ்வை முகநூலில் பார்க்கின்ற வகையில் நிகழ்வு ஒளிபரப்பாக்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘திரள் – உரையாடல் வெளி’ என்ற இவ்வமைப்பு அண்மையில் பிரித்தானியாவில் உள்ள முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு தொடர்ந்துவரும் காலங்களில் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒரு நிகழ்வையேனும் நடத்த உள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தனர். ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ள ஈழத்து இலக்கியச் சூழலை புலம்பெயர்ந்த நாட்டு எல்லைகலைக் கடந்து ஒருங்கிணைத்து புதியதொரு உத்வேகத்தோடு பயணிக்க உள்ளதாகவும் திரள் குழுமம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தது. பின் கோவிட்-19 காலம் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வெளியானது இலக்கிய ஆர்வலர்களை எல்லைகளைக் கடந்தும் சமகாலத்தில் கலந்துரையாடல்களை தொழில்நுட்ப வெளியில் மேற்கொள்வதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகத் தெரிவித்த திரள் குழுமத்தினர் தடைகள் பின்னடைவுகள் கூட புதிய வெளிகளை உருவாக்கி விடுகின்றன எனத் தெரிவித்தனர். முற்போக்கான ஆரோக்கியமான ஒரு இலக்கியச் சூழலை உருவாக்க முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர்.

தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.

புலி ஆதரவு இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போர்!

அடுத்த ஆண்டு ஜனவரி கொழும்பில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மாநாடு அதற்கு எதிராக எழுத்துள்ள எதிர்ப்பலையால் தேவைக்கு அதிகமான விளம்பரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆதரவாகவும் எதிராகவும் இணைய வலையில் கடந்த ஆறு மாதங்களாக பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

தற்போது கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக 130 பேர் வரை கையெழுத்திட்டு உள்ளனர். இவர்களில் நூறுக்கும் அதிகமானவர்கள் தமிழக எழுத்தாளர்கள். ஏனையவர்கள் 30ற்கும் குறைவானவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்கள். இவர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய அரசியலையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள்.

இது தொடர்பாக தேசம்நெற்றில் பதிவிடப்பட்ட கட்டுரை: ( யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு )

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுடைய கலை கலாச்சாரப் பிரிவில் இயங்கிய அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மென்போக்குடைய கி. பி. அரவிந்தன், இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; அருள் எழிலன், இந்தியா; பிரான்ஸ் மு. புஷ்பராஜன், காலம் செல்வம், கனடா; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.போன்றோரால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டறிக்கையை தேசம்நெற் விவாதக் களத்திற்குப் பதிவிடுகிறோம்.

தேசம்நெற்

._._._._._.

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு” எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். “வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது” என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா.

க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர், இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர், இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர், இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் : மு. புஷ்பராஜன், இங்கிலாந்து; காலம் செல்வம், கனடா; கி. பி. அரவிந்தன், பிரான்ஸ்; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; அருள் எழிலன், இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.

யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

Murugaboopathy_Writterஇலங்கைத் தமிழர்கள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் சர்வதேச அளவில் விவாதத்திற்குரியதாகிறது. இது தமிழ் மககளின் அரசியலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அதற்கு அப்பாலும் விரிந்துள்ளது. 2011 ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு அம்மாநாட்டை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

மேற்படி மாநாட்டுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் இம்மாநாடு பற்றிய விவாதக்களத்தை தேசம்நெற் ஆரம்பித்து வைக்கின்றது.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன் தொடங்கி நியூயோர்க் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, டெக்மார்க் தமிழர் பேரவை எழுத்தாளர் எஸ் பொ, பிரான்ஸில் கி பி அரவிந்தன் என பலரும் இந்த மாநாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இவ்விவாதத்தின் ஆரம்பக் கட்டுரையாக சர்வதேச மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி சில மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்த எதிர்வினைகளுக்கான பதில் பதிவிடப்படுகின்றது.

._._._._._.

யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே  பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக் காட்சியிலும் தொலைபேசி ஊடாக  விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப் பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப் பணிகளிலும் அயராமல் ஈடுபட்டுவருகின்றேன்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாக நான் வாழ்ந்தவன் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதலே கலை, இலக்கிய, ஊடகத்துறையில் எனது பணிதொடர்கிறது. உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எனது பணிதொடரும்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்(Ceylon Students Educational Fund-Inc) பணிகளில் அர்பணிப்போடு இயங்கி அதனை இன்றளவும் காப்பாற்றி வருகின்றேன்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்ச்சியாக கடந்த 22 வருடகாலமாக இயங்கிக் கொணடிருப்பதுடன், கடந்த ஆண்டு மே மாதம் வன்னியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்ற ஈழ யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிச் சிறார்கள்  (ஆண்கள்- பெண்கள்) இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஆசைப்பட்ட போது அவர்களது கல்வி சார்ந்த நலன்களை கவனிக்க மாணவர் கல்வி நிதியம் ஊடாக பணியாற்றினேன்.

இத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழா என்ற இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை முன்னெடுத்தேன்.

இதற்கும் அரசியல் சாயம் பூசி பகிஷ்கரித்தவர்களின் போலி முகங்களையும் அப்போது என்னால் பார்க்க முடிந்தது. 2001 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியாவில் மெல்பன், கன்பரா, சிட்னி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை ஒழுங்காகவும் கனதியாகவும் தரமாகவும் நடத்துவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன்.

முத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராஜதுரை, கவிஞர் அம்பி, ஓவியர் ஞானசேகரம், நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன், கலைவளன் சி சு. நகேந்திரன், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்பட தயாரிப்பாளருமான வி.எஸ.துரைராஜா, தையற்கலை நிபுணர் திருமதி ஞானசக்தி நவரட்ணம், இலங்கையின் மூத்த மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோரை இந்த எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்து விருதுகளும் வழங்கியிருக்கின்றேன். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary & Arts Society Inc- ATLAS) உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த அனுபவங்களின் தொடரச்சிதான் நான் முன்னெடுத்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.
இப்பொழுது  நான் இலங்கையில் ஒழுங்கு செய்துள்ள எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கும் அரசியல் சாயம் பூசுவதற்கு ஒருகூட்டம் முற்பட்டிருக்கிறது.

இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு நாம் தீர்மானித்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

உலகம் பூராவும் சிதறுண்டு வாழும் ஈழ எழுத்தாளர்கள் தமது இலக்கிய உறவுகளை மீண்டும் காலம் கடந்துவந்து சந்திப்பதற்கும் குறிப்பிட்ட சந்திப்பானது கூடிக்களைந்து உண்டுகளித்துவிடும் ஒன்றுகூடலாக அமையாமல் பல ஆக்கபூர்வமான கலை, இலக்கியம், மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற்காகவுமே திட்டமிடப்பட்டது.

அனுபவம் இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத அனுபவம் மேலானது என்பார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை நடத்திவரும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களினாலும் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டுவதற்கு பலரதும் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றேன். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே இந்த யோசனை இலங்கையில் நடந்த மல்லிகைப்பந்தல் இலக்கியச் சந்திப்பில் இலங்கை படைப்பாளிகளினால் முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வதியும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், படைப்பாளிகளுடன் தொடரச்சியான உறவும் தொடர்பும் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த மகாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க மிகவும் பொறுத்தமானவன் முருகபூபதிதான் என்ற கருத்து குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றதுடன், என்னிடம் சில பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.

2009 ஜனவரியில் வெளியான மல்லிகை  44 ஆவது ஆண்டு மலரில் ‘தொலைபேசி மான்மியம்’ என்ற  கட்டுரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி பதிவு செய்திருக்கின்றேன்.

அதனைப் படித்த மேலும் பல படைப்பாளிகள் என்னுடன் தொடர்புகொண்டு இந்த யோசனைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர் .

தமிழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் அகலக்கால் பதித்துள்ள எமது மூத்த படைப்பாளியான எஸ்.பொ. அவர்களுக்கு, எனக்கிருக்கும் சர்வதேச இலக்கிய தொடர்புகள் தெரிந்தமையால் தான் பல வருடங்களுக்கு முன்னர் அவரால் வெளியிடப்பட்ட ‘பனியும் பனையும்’ என்ற புலம்பெயரந்த படைப்பாளிகளின் கதைத் தொகுப்புக்காக  எனது ஆதரவை நாடியிருந்தார். நானும் என்னால் முடிந்த அளவு கதைகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரித்துக் கொடுத்தேன்.
குறிப்பிட்ட ‘பனியும் பனையும்’ வெளியானது. ஆனால் தொகுப்பாசிரியர்கள் என்ற பெயரில் இந்தப்பணியில் சிறுதுரும்பும் எடுத்துப் போடாத எனது இனிய தமிழக நண்பர் இந்திரா பார்த்தசாரதியின் பெயரை எஸ்.பொ. அவர்கள் சேர்த்துக்கொண்டார். எனது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

ஏன் இப்படிச்செய்தீர்கள்?- என்று அவருக்கு மிகநெருக்கமாக இருந்தவர்கள் கேட்டபோது அவரிடமிருந்து ஆழ்ந்த மௌனம்தான் வெளிப்பட்டது.

தாம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன இலக்கிய அந்தஸ்தை தமிழகத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் முயற்சிதான் குறிப்பிட்ட நூலின் தொகுப்பில் அதற்குச் சம்பந்த மில்லாதவரின் பெயரைச் சேர்த்துக்கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக இலங்கையில் ஏற்கனவே வெளியான தமது நூல்களை தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்யும்போது தமிழக நூலக அபிவிருத்திச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்று விற்பனை செய்துகொள்வதற்காக குறிப்பிட்ட ஏற்கனவே வெளியான தமது நூல்களை (தீ, சடங்கு உட்பட பல நூல்கள்) தமிழகத்தில் இரண்டாம் பதிப்பு எனச் சுட்டிக் காட்டாமல் புத்தம்புதிய முதல் பதிப்பு என்று காண்பித்துக் கொண்டதுடன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ராமனுஜம், சாலை. இளந்திரையன் போன்ற நன்கு தமிழகத்தில் அறியப்பட்டவர்களின் அணிந்துரைகளுடன் தமிழக அங்கீகாரத்துக்கு அவாப்பட்டுக் கொண்டார்.

இலங்கையில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் டானியல், ஜீவா, ரகுநாதன், சுபத்திரன் போன்ற இடதுசாரி படைப்பாளிகளுடன் இணைந்து இயங்காமல் ஆலயப்பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளாமல் தாம் தோற்றுவித்த நற்போக்கு இலக்கிய முகாமை செலுமையுடன் வளர்த்துக்கொள்ளத் தெரியாமல் தனக்குத்தானே பகைவனாகிக் கொண்ட எஸ். பொ. அவர்கள் ஒரு சந்தரப்பத்தில் தமிழ் நாட்டில்  மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தம்மை தக்கவைத்து தமது நூல்களை தமிழகத்தில் மறுபிரசுரம் செய்துவிட்டு, இப்போது தம்மை ஒரு தலித் இலக்கியப் போராளி என்று காண்பிப்பதற்காக மற்றுமொரு வேடம் புனைவதற்காக முயன்றுள்ளார்.

இலங்கைக்குச்சென்று தமது முன்னாள் நண்பர்களை சந்திப்பதற்காகவும் இழந்துபோன மரியாதையை மீட்டுக்கொள்வதற்காகவும் முருகபூபதியின் தயவை இவர் எப்படி நாடியிருந்தார் என்பதை  எனது ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் விளக்கும்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பின் தோற்றத்துக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனால் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இவர் முயன்றபோது, எவருமே மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டு விழாவுக்கு இவருக்காக தலைமை தாங்க முன்வராதபோது மெல்பனிலிருந்து முருகபூபதியை வரைவழைத்து (முருகபூபதி தமது சொந்தச் செலவில்தான் விமானம் ஏறினார்) குறிப்பிட்ட விழாவை நடத்தினார்.இச்சம்பவங்கள் எழுத்தில் அழுத்தமாக பல பத்திகளில் பதிவாகியிருக்கின்றன.

2009 இலே சர்வதேச மகாநாட்டில் சமரபிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பலதடவை எஸ்.பொ. அவர்களை நான் தொடர்புகொள்ள முனைந்தும் முடியாமல்போனது.
பின்னர் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் மூலம் தகவல் அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் எஸ்.பொ. சொன்ன வார்த்தைகள் “I am always with Murugapoopathy.  He doing Good Job. I am Going to support”

‘பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். .அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவரது நண்பர்கள் மூலமாகவும் என்னை இந்த தொகுப்பு வேலைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளப்பார்த்தார். எதையெதை யாராhல் செய்துமுடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். நான் இதுவிடயத்தில் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்று அவருக்கே தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கின்றேன்.

அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடந்த சர்வதேச மகாநாட்டுக்கான முதலாவது விரிவான ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்தியும் படங்களும் தமிழ்நாடு  யுகமாயினி 2009 மார்ச் இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

ஆசிரியர் சித்தன் இம்மாகாநாட்டுக்கான தமிழக பிரதிநிதியாக இயங்குவார் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சித்தனும் தமது ஆசிரியத் தலையங்கத்தில் மகாநாட்டை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றுமொரு இலக்கிய சிற்றிதழான இனிய நந்தவனம் ஏப்ரில் இதழிலும் மகாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது மகாநாட்டின் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர்களில் ஒருவரான நண்பர் அந்தனிஜீவா தமிழகம் சென்று பாண்டிச்சேரி வரையில் பயணித்து இம்மகாநாடு குறித்த எமது 12 அம்ச யோசனைகளை பிரதியெடுத்த விநியோகித்துள்ளார்.

அதனைப் பார்த்த பா.செயப்பிரகாசம் மற்றும் பல தமிழக எழுத்தாளர்கள் என்னுடன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டனர். தாமரை இதழ் ஆசிரியரும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளருமான மகேந்திரன் எனது குடும்ப நண்பர். அவரும் இந்த மகாநாடு தொடர்பாக தமது ஆதரவை நண்பர் அந்தனிஜீவாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் பல முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்க… திடீரென்று அந்தர் பல்டி அடிப்பது போல எனக்கும் எனது இலக்கிய நேர்மைக்கும் என்னுடன் இணைந்து மகாநாட்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக அவதூறும் அபாண்டமும் பழிச்சொற்களையும் பரப்புவதற்கு எஸ்.பொ. வரிந்துகட்டி எழுந்திருப்பதன் மர்மம் என்ன?

2009 டிசம்பர் முதல் 2010 ஜூன் வரையில் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த மௌனம் காத்துவிட்டு இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு அவர் புறப்பட்டுள்ளதற்கான ரிஷி மூலம் – நதி மூலம் என்ன?

போர் நடந்த காலப்பகுதியின் பின்னர் 2009 டிசம்பர் ஞானம் இதழ்  (115 ஆவது இதழ்) எஸ்.பொ.வுக்காக இலங்கையில் பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டபோது அதனை மானசீகமாக ஆதரித்து ஏற்றுக்கொண்டவருக்கு, அந்த மலர் வெளியான மண்ணில் போர்க்குற்றம் நடந்தது தெரியாமலா இருந்தது. “இத்தருணம் எனக்கென்ன பவளவிழா மலர்” என்று கேட்காமலிருந்துவிட்டு இப்போது குறிப்பிட்ட ஞானம் இதழ் ஆசிரியரும் இணைந்துள்ள மகாநாட்டுப் பணிகளை கொச்சைப்படுத்த முனைந்துள்ள மர்மம் என்ன?

இலங்கையில் போர் முடிந்தபின்னர் நான் அங்கே சென்று சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வன்னி அகதி முகாமிலிருந்து ஊக்கமுடன் கல்வி கற்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் (துவிச்சக்கரவண்டிகள்) பெற்றுக்கொடுத்ததுடன் அவர்களையும் எமது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள தமிழ் அன்பர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள்.
இந்தப்பணிகள் பற்றி ஏற்கனவே பல உண்மையான அறிக்கைகள் எமது இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைப் பயணத்தின்போது போர் நடந்த இடத்தில் பாதிப்புற்ற எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களுக்கும் அத்துடன் மனநலம் குன்றிய படைப்பாளி ஒருவருக்கும் உதவி வழங்கியதுடன் திருகோணமலையில் தற்போது தங்கியிருக்கும்  கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் என்னால் இயன்ற உதவிகளும் செய்தேன்.

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத்தெரியக்கூடாது.

எனது இந்தப்பயணம் குறித்தும் புதுவை ரத்தினதுரையும் மற்றும் சில போராளிகளும் சரணடைந்தது தொடர்பான பல தகவல்களையும் நான் விரிவாக எழுத வேண்டும் என்று ஐரோப்பா, அவுஸ்திரேலியா  மற்றும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகள் என்னிடம் கேட்டுக்கொண்டபோதும் அப்படி எழுதி எனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பல இடங்களுக்கும் சென்று கெமராவில் படங்களை எடுத்த நானும் எனது இலக்கிய நண்பர்களும் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது கெமராவை எடுத்துச்செல்ல விரும்பவில்லை.

நாம் அவர்களை எமக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சந்திக்கச் செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை. அவரும் மற்றும் சிலரும் எங்கோ உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி ரஞ்சி ரத்தினதுரையும் மற்றும் பிள்ளைகள் உறவினர்களைப் போலவே நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

எமக்கு ஆக்கபூர்வமான பணிகளும் கடமைகளும்தான் முக்கியமே தவிர மலினமான பரபரப்போ, மலினமான நேர்காணல்களோ சுயதம்பட்டம் அடிக்கும் அறிக்கைகளோ அல்ல.

இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்க முடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம்  தொடர்ந்தும் ஈடுபடும்.

அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?
கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா? இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகைதராமலா இருக்கிறார்கள்.?
கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?
மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும்  பல்லாயிரக்கணக்hன தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?
கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப் படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது.
இலங்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கிய நாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத் தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?

சுனாமியினால் கடற்கோள் வந்து எஸ்.பொ. பெண்ணெடுத்த கிழக்கு மாகாணம் பாதிப்புற்ற போதும் தாம் பிறந்து தவழ்ந்து விளையாடிய யாழ்ப்பாண மண்ணில் அகதிகளின் எண்ணிக்கை பெருகியபோதும் அந்தப் பக்கமே எட்டியும் பார்க்காத அம்மக்களின் தேவைகளுக்காக ஒரு சதமேனும் செலவிடாதவர்தான் இப்போது திடுக்கிட்டு எழுந்து போர்க்குற்றம் நடந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கிறார்.

யார் ஐயா உம்மிடம் கருத்துக்கேட்டது?

கருத்துக்காக பல தடவைகள் தொலைபேசியிலும் தொடர்புகொண்டபோது சாமர்த்தியமாக நழுவிக்கொண்டு இப்போது அதுவும் 2010 ஜூன் மாதத்திற்குப் பின்னர் அறிக்கையும் அவுஸ்திரேலியாவை குறிபார்த்து வனொலி பேட்டிகளும கொடுப்பதன் மர்மம் என்ன? இவற்றின் ரிஷிமூலம் என்ன?

மகாநாட்டுக்கான நிதிவளம்:

பச்சைத் தண்ணீரில் பலகாரம் பொரிக்க முடியாது. 2009 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்னர் 27-12-2009 ஆம் திகதி கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழிலும் இந்த மகாநாட்டிற்கான செலவுகளுக்கு எப்படி நிதி சேகரிக்கப்போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு உயர்வினாலும் போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் கஷ்டமுறும் படைப்பாளிகளிடமிருந்து நிதியுதவி பெறாமல், உலகெங்கும் வாழும் ஈழத்து படைப்பாளிகள் சுமார் 500 பேரிடமிருந்து தலா ஒருவர் $100 வெள்ளிகளை நன்கொடையாக தருவதன் மூலம் இந்த மகாநாட்டை சிறப்பாகவும் கலை. இலக்கிய கனதியுடனும் நடத்த முடியும் என்று கூறியிருக்கின்றேன். அத்துடன் பாதிப்புற்ற தமிழ்ப் படைப்பாளிகளின் குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கும் எண்ணத்தையும் வெளியிட்டிருக்கின்றேன்.

இதற்கெல்லாம் உதவப் போகிறவர்கள் புகலிடத்தில் வாழும் மனிதநேயப் படைப்பாளிகளே தவிர போலி முகங்கள் அல்ல.

கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டுகள் தரப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரிடம் (Auditor) காண்பிக்கப்பட்டு உதவியவர்களுக்கும் படைப்பாளிகள் சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஒன்று கூடல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் முயற்சியாகவே நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும் என்றும் பேசியிருக்கின்றேன். பல பத்திகளில் எழுதியுமிருக்கின்றேன்.

இலங்கையில் நடந்த திரைப்பட விழா ஒரு கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி. அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. அதனை எதிர்தார்கள் பகிஷ்கரித்தார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
ஆனால் எமது எழுத்தாளர் ஒன்று கூடலானது மிகவும் சாதாரண எளிமையான சிறுகச்சிறுக சேமித்து ஒரு ஏழைக்குடும்பம் நடத்தும் எளிமையான வைபவத்துக்கு நிகரானது.

இதனை அரசியலாக்கி அதற்குப் பின்னால் சிங்கள. தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனையில் பிதற்றி சிறியதொரு நிகழ்வை பூதாகரமாக்கி தமது பொறமைப் பொச்சங்களை அம்பலப்படுத்தி அதற்கு நெருப்பூட்டி அதில் குளிர் காய்ந்து கெர்ண்டிருப்பவர்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்.?

எந்த ஆதாரத்தில் நாம் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கித்தான் இதனை நடத்துகின்றோம் என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள்?

தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சவாரி செய்வதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தோதான வாகனமாக இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கருதுகிறார்கள். இலங்கையில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தலாம் என்று மகத்தான யோசனைகளை அவுஸ்திரேலியாவிலிருந்து சொல்லுபவர்கள் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் மிகச்சாதாரண தமிழ் எழுத்தாளர் விழா நடந்த மண்டபத்தின் பக்கமே எட்டியும் பார்த்ததில்லை. அதனை நடத்திய சங்கத்தின் சிறுசேமிப்புக்கோ கோரிய நிதியுதவிக்கோ ஒரு சதமேனும் கொடுத்ததும் இல்லை.
எழுத்தாளர் விழாக்களினதும் நடத்தவிருக்கும் மகாநாட்டினதும் பூர்வீகம் தெரியாமல் ஏதோ தாமும் இருக்கிறோம் பேர்வழிகள் எனச்சொல்லிக் கொண்டு தமக்கேயுரித்தான காழ்ப்புணர்வுகளுக்கு சொல் அலங்காரம் அணிவித்து போலி அரிதாரம் பூசி பவனி வருகிறார்கள்.

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிலிருந்து (பிரான்ஸ்) ஒரு இலக்கிய நண்பர், நீண்ட காலத்திற்குப் பின்னர் தமது மனைவி பிள்ளைகளுடன் இலங்கை சென்று வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களிலும் கொழும்பிலும் சுமார் 46 நாட்களை மகிழ்ச்சியோடும் பிரிநதவர்களை மீண்டும் பார்த்த குதூகலத்துடனும் விரிவான கடிதம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளதுடன். மகாநாட்டுப் பணிகளிலும் ஒத்துழைக்கின்றார்.

இதுவரையில் நாம் பல புலம்பெயர் படைப்பாளிகளிடமிருந்து மகாநாட்டு மலர்கள், நூல்கள் ஆகியனவற்றுக்கு பல படைப்புகளை பெற்றிருப்பதுடன் நிதிப்பங்களிப்பையும் பெற்றுள்ளோம்.
மகாநாட்டிற்காக இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு உதவ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியொரு சர்வதேச நிகழ்வு நடக்கப்போகும் விடயமே அங்குள்ள எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் சொல்லப்படவில்லை. நாம் அரசியல்வாதிகளோ, வியாபாரிகளோ, பரபரப்பான விளம்பரம் தேடும் போலிகளோ இல்லை.

காலம் கடந்து குடும்பங்கள் எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடுவதுபோன்று கலை இலக்கிய குடும்பத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சந்தித்துக்கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.

இதனை வைத்துத்தான் இலங்கை அரசாங்கம் தனக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறப்போகிறது என்று சொன்னால்…

ஆடிவேல் விழாவையும் நல்லூர்க்கந்தன் உற்சவத்தையும் மாத்தளை முத்துமாரியம்மன் ரதோற்சவத்தையும் அங்கே நாடுபூராவும் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தின விழாக்களையும் வாராந்தம் நடக்கும் நூல் வெளியீட்டுவிழாக்களையும் தொடர்புபடுத்தியும் தனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாமே?

வெளியிலிருந்து வரப்போகிறவர்கள் தமது விடுமுறை மற்றும் வசதிகருதித்தான் வருவார்கள். வரவசதியில்லாதவர்கள் தமது கட்டுரைகளை படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு அரங்கு, படைப்புகளில் செவ்விதாக்கம், சிறுவர் இலக்கியம் , நாடகம், கூத்து, குறும்படம் வலைப்பதிவு உட்பட பல நுண்கலைகள் தொடர்பான கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற   விருக்கின்றன.

தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலுமிருந்து வருகைதரும் சிற்றிதழ் ஆசிரியர்களின் கருத்தரங்கு அமர்வும் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே திருக்குறள், பாரதி கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயரக்கப்பட்டுவிட்டன. தமிழக படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.சின்னப்பபாரதி ஆகியோரின் படைப்புகளும் இலங்கையில் டொமினிக்ஜீவா, திக்குவல்லை கமால், மேமன் கவி, செங்கைஆழியான், சாந்தன், மலரன்பன். தி.ஞானசேகரன் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள் சிறுகதைகள் சிங்களத்தில்  மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அத்துடன் மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், குணசேனவிதான, ஜி.பி.சேனநாயக்கா உட்பட பலரது சிங்களப்படைப்புகள் தமிழுக்கு மொழிபெயரக்கப்பட்டுவிட்டன.

(இத்தருணம் ஒரு சிறுதகவல்: ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்து முன்னர் வெளியான கல்பனா இதழில் குணசேனவிதானவின் சிங்களச்சிறுகதை தமிழில் மொழிபெயரக்கப்பட்டு வெளியானது.)
தமிழர் புகலிட நாடுகளில் எம்மவரின் தமிழ்ப்படைப்புகள் (நாவல், சிறுகதை, கவிதை, வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டுள்ளன.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 6 ஆவது எழுத்தளர்விழாவில் (07-01-206) நான் தொகுத்து வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் 20 பேரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டேன்.

தற்போது இக்கதைத்தொகுதியை கனடாவிலுள்ள மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான ஒரு சகோதரி ஆங்கிலத்தில் மொழிபெயரத்து அனுப்பியுள்ளார். இத்தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் – முன்பு வசித்த 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருக்கின்றன. பின்னர் இங்கு வதியும் 45 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற தொகுப்பை 7 ஆவது எழுத்தாளர் விழாவில் (27-01-2007) வெளியிட்டேன். எனினும் இந்த தொகுப்பு நூல்களிலும் எனது எந்தவொரு படைப்பும் இல்லை என்பது அவற்றை பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

மொழிபெயர்ப்புத்துறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் சங்கடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்காகத்தான் சர்வதேச மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடைபெறவிருக்கிறது.
சிங்கள படைப்பாளிகளுடன் நாம் புரிந்துணர்வுடன் இயங்குவதையும் சிலர் கொச்சைப்படுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்துடன் பல வருடகாலமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர்ப் பிச்சினை இருந்தாலும் தமிழ் வாசகர்கள் கன்னடப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்காமலா இருக்கிறார்கள்.
பிறப்பால் கன்னடராகப் பிறந்த நடிகர், நடிகையர்கள் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

நாடு, மொழி, இனம், மதம், சாதி கடந்து சிந்திப்பவனே ஆரோக்கியமான கலைஞன், படைப்பாளி. எதனையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வரா.

மகாநாடு திட்டமிட்டபடி நடக்கும் வருகைதர விரும்புபவர்கள் இலங்கையராக இருந்தால் தாயகத்தின் யதார்த்த நிலையையும் அங்குள்ள படைப்பாளிகளின்  ஆதங்கங்களையும் நேரில் பார்ப்பார்கள். தமிழகம் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தப் பயணம் சிறந்ததொரு வாழ்வனுபவமாக மனதிலும் எதிர்காலப் படைப்புகளிலும் பதிவாகும்.

ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.