::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இன்று பாலேந்திராவின் தமிழ் நாடகப்பள்ளி 5வது ஆண்டு நிகழ்வுகள்

தமிழ் அவைக்காற்றுக் கழகம்- லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்று இன்று (5.4.2009) ஞாயிறு மாலை கரோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் நாடகப் பள்ளியின் இவ்ஜந்தாண்டு நிறைவு நிகழ்வுகள் Pinner Village Hall, Chapel Lane, Pinner HA5 1AB என்ற இடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் ஆற்றுகை; .எமது கடந்த கால சிறுவர் நாடகங்களின் வீடியோ அளிக்கை; இளையவர்களின் “படிக்க ஒரு பாடம்;” – புதிய மேடை நிகழ்வு; கருத்தாடல் என்பன நடைபெறவுள்ளது.

கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.

cm-ep.jpg இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு  (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77.  மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

அவைக்காற்றுக் கழகத்தின் மரணத்துள் வாழ்வு ஒரு அலசல் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Balendra_Kநாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை

இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).

கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.

இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு  உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.

உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.

ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.

ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.

ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. 

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்; தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஏ.ஆர். ரஹ்மான்

ar-ragman.jpg“இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஒஸ்கார் புகழ் இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏர்.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான், “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளைப் பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். ‘ஒஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ” என்றார்.

ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

ar-ragman.jpgடெல்லி யிலுள்ள அலிகார் முஸ்லீம் பல்கலை கழகம், ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

ஏ.ஆர். ரகுமானுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ் சாமிநாதன் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ஒஸ்கார் விருதுகள் ஒரே பார்வையில்…சிறந்த திரைப்படம்:ஸ்லம்டொக் மில்லியனர்

ar-ragman.jpgசிறந்த நடிகர்: சீன் பென் (மில்க்)
சிறந்த நடிகை: கேத் வின்ஸ்லெட் (தி ரீடர்)

சிறந்த இயக்குநர்: டோனி போயல் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த பிறமொழிப்படம்: டிபார்ச்சர்ஸ் (இயக்கியவர் யோகிரோ டகிடா ஜப்பான்)
சிறந்த பாடல்: ஜெய் ஹோ ஸ்லம்டொக் மில்லியனர்( இசை:ஏ.ஆர். ரஹ்மான்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்( ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த படத்தொகுப்பு: க்ரிஸ் டிக்கென்ஸ் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒலிக்கலவை: (ரெசுல் பூக்குட்டி, இயான் தாப், ரிச்சர்ட் ரைகி (ஸ்லம்டொக் மில்லியனர்)

சிறந்த ஒலித்தொகுப்பு: ரிச்சர்ட் கிங் (தி டார்க் நைட்)

சிறந்த காட்சித்தொகுப்பு: எரிக் பார்பா, ஸ்டீவ் ப்ரீக்ல் பர்ட் டால்டன், க்ரெய்க் பார்ரன்(தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த ஆவணப்படம்: மேகன் மைலன் (ஸ்மைல் பின்கி)
சிறந்த ஆவணப்படம்:ஜேம்ஸ் மார்ஷ் சைமன் சின் (மென்ஒன்வயர்)
சிறந்த துணைநடிகர்: ஹீத் லெட்ஜர் (தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பெனால்ஃப் க்ரூஸ் (விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா)
சிறந்த குறும்படம்: ஜோசென் அலெக்சாண்டர் (டாய்லேண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: அன்ரனி மென்டில் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒப்பனை: கிரெக் கேன்னடம்( தி க்யூரியஸ்கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு: மைக்கேல் ஓக்கானர் (தி டச்சஸ்)
சிறந்த கலை வடிவமைப்பு: டொனால்ட் க்ரஹாம் விக்டோர் ஜே. சோல்ஃபோ (தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த அனிமேட்டட் குறும்படம்: குனியோ கடோ(லா மேய்ஸன் என் பெடிட்ஸ் க்யூப்ஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஆண்ட்ரூ ஸ்டான்டன் (வால் ஈ)
சிறந்த உண்மை திரைக்கதை: டஸ்டின் லான்ஸ் ப்ளாக்(மில்க்)
சிறந்த திரைக்கதை (தழுவல்): சைமன் பஃபாய் (ஸ்லம்டொக் மில்லியனர்)

பிந்திய செய்தி: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் -ஏகாந்தி

ar-rhman.jpgஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 81ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் வைபவமாகும். இதுகாலவரை இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு திரைப்படக் கலைஞருக்கும் இந்த ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்த அடிப்படையில் இந்தியரைச் சேர்ந்த ஒருவர் முதல் ஆஸ்கர் விருது வென்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

ஸ்லம்டாக் மில்லினர்’திரைப்படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் இதுவரை இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொததம் 8 விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த திரைக்கதை தழுவல் (Best Adapted Screenplay) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் – ஏ.ஆர்.ரஹ்மான்
“ஜெய் ஹோ…” பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

”எல்லாப் புகழும் இறைவனுக்கே”: ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது. இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது (‘ஜெய் ஹோ’) வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள். எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி (Smile Pinki) படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் (cleft lip) சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

ஏ.ஆர்.ரஹ்மான் சில குறிப்புகள்

இன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைற்கல்லை ஏற்படுத்தியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சில குறிப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர் அவர்களது புதல்வனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். இவரின் பெயர் ஏ.எஸ்.திலீப் குமார். 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் இவரின் குடும்பம் பல நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு தன்சுயவிருப்பின் பேரில் இஸ்லாம் சமயத்துக்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஹ்மான். இவரது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார். கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார். எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக 1992ம் ஆண்டு அமைந்தது. இவ்வாண்டில் தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை ரஹ்மான் ஆரம்பித்தார். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் ஆரம்பித்தார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது. இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் ஆரம்பித்த பின் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று மணிரத்தினம் ரஹ்மனைக் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பை ரஹ்மானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற நிலையை ரஹ்மான் ஏற்படுத்திக் கொண்டார்.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார். இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான் மாறினார். அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான். குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறியிருந்தார் என்றால் பிழையாகாது.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் தந்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்று இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான். 2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான். இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான். 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அலாதிப் பிரியம். ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.

ரஹ்மானின் முதல் படங்கள்

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா. மலையாளத்தில் முதல் படம் யோதா. தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ். ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்

ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது

தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)—–

வரலாறு படைப்பாரா ரஹ்மான்?

ar-rhman.jpgஉலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர்

mia.jpgசமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்” (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் ‘ஓ சயா’ என்ற பாடலை எழுதி பாடியவர் MIA.  இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் MIA என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர்  விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வ‌சிக்கும் ஈழ‌த்து த‌மிழ்பெண் ‘MIA’ மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் இவ‌ர் இங்கிலாந்தில் புக‌ழ் பெற்ற‌ பாட‌ல் ஆசிரிய‌ர், ராப் பாட‌க‌ர். த‌மிழ் ஈழ‌த்தில் 17 ஜுலை 1977-ல் க‌லா ம‌ற்றும் அருட்பிர‌காச‌ம் த‌ம்ப‌தியின‌ருக்கு பிற‌ந்த‌வ‌ர். இவ‌ர‌து த‌ந்தை அருட்பிர‌காச‌ம் தீவிர‌ ஈழ ஆத‌ர‌வாள‌ர் ம‌ற்றும் அப்போதையை த‌மிழ் ஈழ‌ மீட்பு போர்ப்ப‌டை (த‌ற்போது த.ஈ.வி.புலிக‌ள்) ப‌ணியாற்றிய‌வ‌ர். முத‌லாம் உள்நாட்டு போரில் சிங்க‌ளப்‌ப‌டைக‌ள் த‌மிழ‌ர்க‌ளை குடும்ப‌ம் குடும்ப‌மான‌ கொலை செய்த‌போது த‌ன‌து தாயுட‌ன உயிர் பிழைத்து சென்னைக்கு வ‌ந்தார். சென்னையில் த‌ங்கிருந்த‌ இவ‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து மீண்டும் த‌ன‌து த‌ந்தையைக் காண‌ யாழ்ப்பாண‌ம் சென்றார்.

அங்கு த‌ன‌து வீடு ம‌ற்றும் ப‌டித்த‌ ப‌ள்ளிக்கூட‌ம் முழுவ‌தும் இல‌ங்கை இராணுவ‌த்தின‌ரால் சூரையாட‌ப்ப‌ட்டு கொண்டிருந்த‌து. அவ‌ர‌து த‌ந்தையும் இல‌ங்கை இராணுவ‌த்துட‌ன் போராடிக்கொண்டிருந்த‌ கார‌ண‌த்தால் இராணுவ‌ம் இவ‌ரையும் இவ‌ர‌து தாய் ம‌ற்றும் இவ‌ர‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ளையும் தேடிக்கொண்டிருந்த‌து. உயிருக்கு ப‌ய‌ந்து மீண்டும் த‌மிழ‌க‌ம் வ‌ந்த‌ இவ‌ர்க‌ள் உற‌வின‌ர் இருவ‌ரின் ஆத‌ர‌வால் ல‌ண்ட‌ன் நோக்கி ப‌ய‌ண‌ம் ஆனார்கள். MIAவிற்கு வ‌ய‌து 11 ல‌ண்ட‌னில் அக‌தியாக‌ த‌ன‌து வாழ்க்கையை தொட‌ங்கிய‌வ‌ர். ல‌ண்ட‌னில் உள்ள‌ சென்ட்ர‌ல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் த‌ன‌து க‌லைப் ப‌ட்டப்‌ப‌டிப்பை முடித்தார். ப‌ட்டப்‌ப‌டிப்பு முடிந்ததும் இவ‌ர் த‌னி இசைப்பாட‌ல்க‌ள் இய‌ற்றுவ‌தும் தானாக‌வே ஆல்ப‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டார். இவ‌ர‌து பாட‌ல்க‌ள் இங்கிலாந்து ம‌ட்டுமின்றி அமெரிக்க‌ நாடுக‌ளிலும் பிர‌ப‌ல‌மான‌து. த‌னி இசை ஆல்ப‌ம் இங்கிலாந்தில் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌து. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்ப‌ம் ஆப் த‌ இய‌ர்’ என்ற‌ விருதை பெற்றுத்த‌ந்த‌து. இந்த‌ வ‌ருட‌ம் பேப்ப‌ர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற‌ இர‌ண்டு ஆல்ப‌ங்க‌ளுக்கு மிக‌ உய‌ரிய‌ விருதான‌ கிராமிவிருது இவ‌ருக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து.