ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள் : ஆதவன் தீட்சண்யா

Athavan TheedchenvanTamilnathy._._._._._.

(ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தமிழகத்திலும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியாததல்ல. அதேநேரம் இப்பிரச்சினை தமிழக அரசியல் தளத்தைக் கடந்து இலக்கிய மற்றும் சிற்றிதழ் தளங்களிலும் சர்ச்சைக்குரிய விடயமாக ஆகியுள்ளது. ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் முரண்பாடுகள் தற்போது தமிழகத்திலும் பிரதிபலிக்கின்றது. தமிழ்நதி – ஆதவன் தீட்சண்யா போன்றோரின் கருத்துநிலை முரண்பாடுகள் அதனை வெளிப்படுகின்றது.

ஆதவன் தீட்சண்யா தேசம்நெற் க்கு அனுப்பி வைத்துள்ள கட்டுரை இம்முரண்நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது. கட்டுரையை வாசிப்பவர்கள் அதன் தொடர்ச்சியை புரிந்து கொள்வதற்காக தமிழ்நதி தனது புளொக்கில் வெளியிட்டுள்ள கட்டுரைகள் பின்னே இணைக்கப்பட்டு உள்ளது.)
._._._._._.

தமிழ்நதி அவர்களுக்கு,
வணக்கம்.                                                                                                                                 

1.
நான் உங்களைப்போல புலியடிமையல்ல. அல்லது மொன்னையான புலி ஆதரவு / எதிர்ப்பு அமைப்பு எதுவொன்றின் உறுப்பினனுமல்ல. எனவே இலங்கை / ஈழம் சார்ந்து உணர்ச்சிப்பிழம்புகள் நடத்தும் எந்தவொரு விவாதத்திலும் குறுகிய ஆதாயங்களுக்காக பங்கேற்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. எனது வாசிப்பு மற்றும் தோழர்கள் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியே எட்டிய புரிதல்கள் வழியே நான் இலங்கைத் தமிழர் பிரச்னையை புரிந்துகொள்கிறேன். சிங்களப் பேரினவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அரசின் பயங்கரவாதத்திற்கு ஆளாகிவிட்ட இலங்கைத் தமிழர்களை நான் வாழும் காலத்தின் மிகக்கொடிய துயரமாக கருதுகிறேன்.

அதேவேளையில் ஜனநாயக உரிமைகளுக்காவும் சுயமரியாதைக்காவும் இலங்கை மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை என்றென்றைக்குமாக மிகப்பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்ற முறையிலும் ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற தன்முனைப்பில் பிற இயக்கங்களையெல்லாம் அழித்தொழித்தவர்கள் என்பதற்காகவும் புலிகள் மீது எனக்கு கடும் விமர்சனங்களுண்டு. புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை, இந்துத்துவ வெறி, இஸ்லாமிய எதிர்ப்பு, சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள் என்று அந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் இன்னும் நீள்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது அக்கறை புலிகள் சார்ந்தது அல்ல, அது எளிய மக்கள் சார்ந்தது. இனவெறி ராணுவத்தின் இலக்காகவும் புலிகளின் கேடயமாகவும் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான மக்கள் குறித்தது. தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் கைதிகளைப் போல வதியும் ஏதிலிகள் பற்றியது. ( இனவுணர்வின் மிகுதியில் எகிறிக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் எந்தளவிற்கு வாழத்தகுதியற்றதாய் இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததுதானே? )

தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர். இத்தகைய குறுகிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிற இனவுணர்வுத் திலகங்கள்தான் இன்று உங்களைப் போன்றவர்களின் கபடம் நிறைந்த பேச்சுக்கு கைதட்டும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிகாரப் பெருமிதமும் சாதிய சிறுமதியும் கொண்ட இவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களை தம் சொந்த இனமாகவும், தமிழ்நாட்டிலிருந்து 150 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு பிடித்து செல்லப்பட்ட தமிழர்கள் குறித்து  பாராமுகமாகவும் இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியே புதுவிசை இதழின் தலையங்கங்கள், நேர்காணலில் எழுப்பப்படும் கேள்விகள் அமைந்துள்ளன. எனவே ஈழப்பிரச்னையில் உள்ளன்று வைத்து புறமொன்று பேசி உங்களை நான் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாக கருதவில்லை. உங்களது நிலைப்பாட்டைச் சொல்ல உங்களுக்கிருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு. ஆனால் அப்படியரு ஜனநாயகப் பண்பை கடந்தகாலத்தைப் போலவே இனியும்கூட நீங்கள் எட்டப்போவதில்லை என்பதற்கு என்னைப் பற்றிய உங்கள் அவதூறான பதிவே நிரூபணம்.

2.

‘ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை.  ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது. )

ஆனால் நான் ஆச்சர்யப்பட்ட விசயம் என்னவென்றால், ‘இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான்  தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது…’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்க வேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானுற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

மதுரை கூடல் சங்கமத்தின் இறுதி அமர்வில் தாங்கள் பேசத்தொடங்கும் போது ‘எனக்கு கதைகள் அவ்வளவாக வராது, அவை எல்லாமே சோதனை முயற்சிகள்தான்’ என்று சொன்னீர்கள். 24 மணிநேர அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் ரெடிமிக்ஸ் சாம்பார் செய்கிற அதிரடி வேகத்தில் ‘ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி’ என்ற தலைப்பில் பிரமாதமான ஒரு கதையை எழுதத் தெரிந்த  நீங்களே இப்படி உங்களை மட்டம்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒட்டுமொத்த நிகழ்விலிருந்தும் உங்களது நோக்கத்திற்கு இயைவான துணுக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்கள் கதை வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பது? நீங்கள் திரித்துச் சொன்ன கதையை உண்மையென நம்பி ஈழப்போராட்டத்தின் லேட்டஸ்ட் துரோகி ஆதவன்தான் என்று முத்திரைக் குத்துவதற்கு சிலர் கிளம்பியிருப்பதும்கூட உங்கள் கதைத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுங்கள் தமிழ்நதி.

(ஷோபா சக்தி ராஜபக்ஷேவிடம் வாங்கியப் பணத்தில்  ஒரு பகுதி ஆதவனிடம் இருப்பதாகவும் அந்தப் பணத்தில்தான் இப்படி மிடுக்காக திரிகிறார் என்றும், செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வந்த பின்னூட்டங்களை மகிழ்ச்சியோடு பிரசுரித்துவிட்டு ‘‘ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை, எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு’’ என்று  மற்றுமொரு சுவாரசியமான கதையை தொடங்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் பேசுவதற்கு கூசவில்லையா உங்களுக்கு? பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவரும் மற்றும் அதை ‘நேர்மையோடு’ வெளியிட்ட தாங்களும் இந்த அவதூறுக்கான ஆதாரத்தை அவசியம் வெளியிட்டாக வேண்டும். அதுபோலவே செருப்பால் அடிக்கவிரும்புகிறவர் அநாமதேயம்போல் ஒளிந்து கொண்டிருக்காமல் நேருக்குநேர் என்னைச் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அவருடைய நண்பர் என்ற வகையில் தாங்கள்தான் செய்யவேண்டும். இவ்விரண்டு விசயத்திலும் உங்களிடம் ஒருபோதும் சமரசம் கிடையாது) 

28.06.08 அன்று நடந்தவை எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நான் வற்புறுத்தமாட்டேன். அந்தளவிற்கு உங்களுக்கு அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படியரு கட்டுக்கதையை எழுதத் துணிந்திருக்கமாட்டீர்கள். எனவே நடந்ததை நானே ஒருமுறை உங்களுக்கு ரீவைண்ட் செய்து காட்டவேண்டியிருக்கிறது. உலகத்திலிருப்பவர்களெல்லாம் எங்களுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும், ஆனால் மற்றவருக்காக நாங்கள் ஒரு சொட்டு உப்புக்கண்ணீரைக்கூட சிந்தமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிற உங்களுக்காகவெல்லாம் எங்களது நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையோடுதான் இதை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அந்த அமர்வில் என்முறை வந்தபோது, எழுதுவதில் நான் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிட்டேன். எனக்கு அடுத்து நீங்கள் பேச வந்தீர்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று நீங்கள் யாரையோ பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நான் என்பாட்டுக்கு இருந்திருப்பேன். ஆனால் ‘ சமூக ஒடுக்குமுறைகளை காத்திரமாக எதிர்த்து எழுதுகிற ஆதவன் தீட்சண்யா ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுத மறுக்கிறார்’ என்று நீங்கள் மிக நேரடியாக என்னைக் கேட்டதை முன்னிட்டே நான் பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று என்பதையாவது மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நரியோ நதியோ இடமும் போகாமல் வலமும் போகாமல் என்மீதே குறிவைத்துப் பாய்ந்தநிலையில்தான் நான் பேச வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவும்கூட உங்களுக்கு ஆதரவாக ஊளையிட்டவர்கள் தயாரில்லாத நிலையில்தான் இந்த தன்னிலை விளக்கம்.

3.

‘‘நான் ஏன் எழுதவில்லை என்று கேட்க தமிழ்நதிக்கு உரிமையிருப்பதைப் போலவே தமிழ்நதியிடம் கேட்பதற்கு சில கேள்விகளும் அதை கேட்பதற்கான உரிமையும் எனக்கிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ்நதி இங்கு நிகழும் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக ஆடுமாடுகளைப்போல லட்சக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர்.  அந்த அடிமைத்தனத்திலிருந்தும் கொடிய சுரண்டலிலிருந்தும் அட்டைக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தியப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேரின் கவிமனம் பதறித் துடித்திருக்கிறது? பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்? ( இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசியதை படைப்பாளிகளின் கணக்கில் வரவி வைக்கத் துணிந்துவிடாதீர்கள்)

2005 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அந்தனி ஜீவா, ‘இன்றளவும்கூட இலங்கைத்தமிழருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை சமீபத்திய செங்கதிர் இதழ் மறுபிரசுரம் செய்துள்ளதே- அதை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா? 

தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து  500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? 

தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா? 

இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என்பதற்காக நாங்களும் எழுதவில்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக – டிட் ஃபார் டாட் என்று நான் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கைத்தமிழர் மீது நிகழ்த்தப்படும் கொலைபாதகங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் இங்கு யாருமில்லை. அது குறித்த ஆழ்ந்த கவலைகள் எமக்குண்டு. ஆனால் அதற்காக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று காசி ஆனந்தனைப்போல அதிகாரத்துக்காக நான் எழுத முடியாது.

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்…’’

4.
மேற்கண்டவை தான் அந்த அமர்வில் நான் பேசியவை. இவையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கைவசமிருக்கும் வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். அதை விடுத்து  உங்கள் பதிவில் இட்டுக்கட்டி குறிப்பிட்டுள்ளவாறு ‘நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசவேண்டுமென்று, குரல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றோ ‘எங்களுக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும் எழுத வேண்டும்’ என்றோ நான் பேசவில்லை. பொய் சொல்லியாவது உங்கள் வலைப்பதிவின் வாசகர்களிடம் அப்ளாஷ் பெறுவது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களது பொய்யின் அளவு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் பேசி முடித்ததும் நீங்கள், ‘நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை என்பதற்காக இப்போது எங்களை பழிவாங்குகிறீர்களா ஆதவன்..?’ என்று கேட்டீர்கள். ஏட்டிக்குப் போட்டியில்லை என்றும் சமகாலப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பதில் தமிழகப்படைப்பாளிகளின் மனநிலை குறித்தும் நான் பேசியிருந்த நிலையில் நீங்கள் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்தாலும் பொறுப்புடன் பதில் சொல்ல நான் மீண்டும் எழுந்தேன். அவ்வாறு நான் எழுந்ததை ‘ஆதவன் என்னைத் தாக்க எழுந்தார்’ என்று பதிவில் தலைவிரிக்கோலமாக எழுதாமல்  விட்ட உங்களது பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி நான் எழுந்தபோதுதான் யோக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான டி.கண்ணன் துள்ளியெழுந்து- வால் மட்டும் தெரிகிறது சார் என்று சொன்ன மாணவனைப்போல- ‘இது அயோக்கியத்தனம்’ என்று கத்தினார். எது அயோக்கியத்தனம் என்று நான் கேட்கும்போது, லேனாகுமார் ‘இது அவன் ஒருத்தனோட கருத்து. தமிழ்நாட்டு மக்களின் கருத்தல்ல…’ என்று கூறினார். ஒருவேளை என்னைத் தவிர்த்து மீதியுள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவரிடம் ஆதரவு கையெழுத்துப் போட்டு பிரமாணப்பத்திரம் எதுவும் கொடுத்திருக்கிறார்களோ என்னமோ என்று ஒருகணம் அசந்துதான் போனேன். அவர் சொன்னதும் ஒரு தனிமனிதனின் கருத்துதான் என்பதை மறந்துவிடுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம்? அப்போது ஒரு கும்பல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ‘ஆதரவாக பல குரல்கள் எழுந்தன’ என்று எழுதி உங்களை நீங்களே இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் தமிழ்நதி?

இந்தக்கட்டத்தில்தான் அரசு நுழைந்தார். அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல. ‘ஆதவன் சொன்னதைப்போல இலங்கை வரலாற்றைப் பற்றி பேச இங்குள்ள பலரிடமும் ஏராளமான விசயங்கள் இருக்கு. அங்கு நிகழ்ந்த தவறுகள் ஏராளம். ஆனால் அதைப் பற்றி இப்போது பேசுவது உள்நோக்கம் கொண்டது.  ஆதவன் நடத்தும் புதுவிசை என்ற பத்திரிகையில் ( சிறுபத்திரிகை அரசியல் என்ற புத்தகத்தில் புதுவிசை என்ற பெயரை கவனமாக மறந்திருந்த அரசுவுக்கு இப்போது எப்படியோ ஞாபகம் வந்துவிட்டது பாருங்களேன்) சுரேந்திரன் என்பவருடைய பேட்டியை வெளியிட்டிருக்கிறார். (சுசீந்திரனைத்தான் சுரேந்திரன் என்கிறார்) அந்த சுரேந்திரன் புலிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். அதுவும் உள்நோக்கம் கொண்டது… ’ என்று நீட்டி முழக்கி ‘தவறான புரிதலோடு இருக்கிறீர்கள் என்று சொல்வதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் ஆதவன்…’ என்று ஆவேசமாக முடித்தார். (பலத்தக் கைத்தட்டல் என்று இவ்விடத்தில் ஒரு பிட்டை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் தமிழ்நதி?).  நீங்கள்தான் தவறாகப் பேசியிருக்கிறீர்கள் அரசு. ஆகவே நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றேன்.

தாங்குமா அரசுவுக்கு? நான் சொன்ன வார்த்தையை வச்சிக்கிட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டுறியா… நான் தமிழ் வாத்தியான். என்கிட்ட வார்த்தை விளையாட்டுக் காட்டாதே… என்று எகிறினார். அவர் சலாமியா பாஷைக்குகூட வாத்தியாராக இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன அதைப்பற்றி? நான் அவரிடம் இலக்கணப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ஸ்கூல் பையனில்லையே? பின் எதற்கு இந்த எகிறாட்டம் என்று யோசிக்கும்போதே அடுத்த ரவுண்டுக்கு இறங்கினார் அரசு. ஈழத்தைப் பற்றி எனக்கொன்னும் சொல்லாதயா… போய்யா உன் வேலையப் பாத்துக்கிட்டு… என்றதும் ‘வாய்யா போய்யான்னு பேசறதுதான்  ஒரு பேராசிரியருக்கு அழகா?’ என்று நான் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட நமது மாண்புமிகு பேராசிரியப் பெருமகனார், ‘வாய்யா போய்யாங்கறது தமிழ்ல மரியாதையான சொல்தான்’ என்று பதவுரை பொழிப்புரை பகன்றார். ‘அப்படியானால் உங்க மாணவர்களை இனிமேல் உங்களை வாய்யா போய்யான்னே கூப்பிடச்சொல்லய்யா..’. என்று நானும் மரியாதை கூட்டி மறுமொழி பகன்ற பின் ஓரிரு மணித்துளிகளில் முகாம் முடிந்துவிட்டது.

ஆனால் இவ்விடத்தைப் பற்றி எழுதும்போதுதான் உங்களது ‘செலக்டிவ் அம்னீசியா’ வேலை செய்கிறது தமிழ்நதி. ‘இருவரும் வாய்யா போய்யா’ என்ற அளவுக்கு இறங்கினார்கள் என்று பொத்தாம் பொதுவாக உங்கள் பதிவில் எழுதிக் கடக்கிறீர்கள். அரசுவின் வாய்த்துடுக்கை கண்டிக்கத் துப்பில்லையா அல்லது தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு பிரதிக்கருணையா?

விக்கிரமாதித்யன் இரண்டு நாட்களாக எதெதற்கோ ஸ்பிரிங் போல துள்ளிக் குதித்து என்னவெல்லாமோ பேசினார். அதையெல்லாம் குறிப்பிடாமல் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக் காட்டுகிற இந்த எடிட்டிங் வேலையை எங்கே கற்றீர்கள்? அதற்கு பிறகு பேருந்தில் மதுரை வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதே விக்ரமாதித்யன் என்னிடம் சொன்னதையெல்லாம் இப்போது நான் எழுதினால் என்ன சொல்வீர்கள்? 

விசயம் இத்தோடு முடியவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ‘நீங்கள் வேறு ஏதோ கணிப்பில் என்னை டீல் செய்யறீங்க ஆதவன். தேவையில்லாமல் என்னை தமிழ் வாத்தியான் என்றெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்றார் அரசு. நானொரு தமிழ் வாத்தியானாக்கும் என்று முண்டா தட்டத் தொடங்கியவர் அவர்தான், நானில்லை என்று தெரிவித்துவிட்டு நகர்ந்தேன். நாம் மீண்டும் பேசுவோம் என்றார். ‘இப்படித்தான் பேசுவோம் என்றால் நாம் பேசி என்ன ஆகப்போகிறது என்றேன். கையைப் பிடித்து நிறுத்திய  டி.கண்ணன் ‘நீ சொன்ன விசயமெல்லாம் சரிதாண்டா தம்பி. நேரம்தான் சரியல்ல’ என்றார். வெண்மணியில் இங்க எரியறப்பவும் அங்க அவங்க அநாதையாத்தாண்டா இருந்தாங்க என்று வரலாற்றை ஒரு தீட்டாக்கோணத்திற்கு திருப்பிவைத்தார் கண்ணன்.

இது பொருத்தமான நேரமல்ல, இந்த விசயத்தைப் பேச இதுவா நேரம்?, எப்ப எதைப் பேசணும்னு ஒரு கணக்கிருக்கில்ல என்ற வார்த்தைகள் ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. மாற்றுக்கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள திராணியற்று நேரப்பொருத்தம் வாய்க்கவில்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்கு தப்பித்துக்கொள்ள முடியும்? மாற்றுக்கருத்து எதுவொன்றையும் பேச இது தருணமல்ல என்ற அறிவிப்போடு நிகழ்த்தப்பட்ட கொலைகள் தான் எத்தனை? அழிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றா இரண்டா?

நேற்று பேச முயற்சித்தபோது, போராட்டக் களத்தில் இருக்கிறவர்களை விமர்சிக்கக்கூடாது என்று குரல்வளையைக் கவ்வினீர்கள். இன்று பேசும்போது அது இழவுவீடு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழ்மக்களின் வீடுகளில் தொடர்ந்து இழவு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. தியாகமென்றும் துரோகமென்றும் நானாவிதப் பெயர்களோடு மரணத்தை அவர்களுக்கு விநியோகித்தவர்கள் இப்போது கொல்லப்பட்ட நிலையில்தான் உங்களுக்கெல்லாம் இழப்பின் வலி உறைக்கிறது. ஆகவே இப்போதும் மௌனம் காக்கச் சொல்கிறீர்கள். இன்னும் நாலைந்து வருடம் கழித்துப் பேசினால், அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே இப்போது எதற்கந்தப் பேச்சு என்று அப்போதும் வாயடைக்கப் பார்ப்பீர்கள்.  

நிகழ்ந்துவிட்ட இழப்புகளுக்கு சம பொறுப்பாளியாக இருந்தவர்களை அடையாளம் காட்டி அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு உரையாடலையும் மறுப்பதற்கே நேரப்பொருத்தம் என்ற வார்த்தைஜாலம் களமிறக்கப்படுகிறது. நேரம் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் டி.கண்ணனும்  தமிழாசிரியர் அரசுவும் ஒரு நன்முகூர்த்தத்திற்காக காத்திருக்கட்டும். ஆனால் அதை என்மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

உங்களுக்கு மேலும் சில விசயங்கள் தமிழ்நதி-

தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது. அதுசரி, ‘கத்த புத்தி செத்தால்தான் போகும்’ என்பது மூத்தோர் வாக்கு. பெருமைக்கும் சிறுமைக்குமான துலாக்கோலை உங்களுக்கு வழங்கியது யார் அம்மணி? அல்லது பாம்பின் கால் பாம்பறிகிறதா? ஒரு மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று  பின்னூட்டம்  என்ற பெயரில் வசைபொழிகிற பத்து அநாமதேயங்கள் இருக்கிற தைரியத்தில் நீங்கள் எதுவும் எழுதுவீர்களோ?

மாற்றுக்கருத்து எல்லாவற்றுக்கும் ஷோபாசக்திதான் பிறப்பிடமா? அ.மார்க்ஸ் பேசினாலும் ஆதவன் பேசினாலும், நீலகண்டனோ அடையாளம் சாதிக்கோ  புத்தகம் போட்டாலும் அவர்களை உடனே ஷோபாசக்தியின் சீடர்களாக்கிவிடுவதில் உங்களைப் போன்றவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம்? மேய்ப்பனின் கீழ் உழன்ற மந்தை மனோபாவம் பிறரையும் அவ்வாறே பார்க்கப் பணிக்கிறதா? உங்களது குரலுக்கு எஜமானர்களாக யாரையும் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களின் குரல் சுதந்திரமானதாய் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கான பயிற்சியை இனியாவது கைக்கொள்ளுங்களேன். எனது குரல் பிரான்சிலிருந்து கேட்கிறதென்றால், உங்களது குரல் எங்கிருந்து ஒலிக்கிறது என்று கேட்பதும் சாத்தியம்தானே? தமிழ்நாட்டின் எந்தவொரு சமூக- அரசியல் பிரச்னையிலும் தலையிடாத சிலர் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் உரத்து முழங்கி உக்கிரவேஷம் போடுவதற்குப் பின்னால் வெறும் இனவுணர்வு மட்டும்தான் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எவ்வளவு நேரமாகும்? உங்களது சந்தேகத்தை திருப்பிப்போட்டு எதிர்மறையாக நீட்டித்தால், இலங்கைத் தமிழர்கள் செரிந்து வாழும் கனடாவை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் குடியேறியிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்றும்கூட ஒருவர் குதர்க்கமாக கேட்டுவிட முடியும்.

உங்களுக்கு நியாயம் கேட்கிற அவசரத்தில் ‘எங்கோ இருக்கிற குஜராத்’ என்கிறீர்கள். தமிழ்நாட்டானைப் பொறுத்தவரை குஜராத் எங்கோ இருக்கிறது என்ற தர்க்கத்தில் இறங்கினால், இலங்கையும் தமிழ்நாட்டானுக்கு எங்கோ இருக்கிற ஒன்றாகிவிடும் என்பதாவது தங்களுக்குப் புரிகிறதா? எங்கோ இருக்கிற இலங்கையில் நடக்கிற பிரச்னைகளுக்கு இங்கே ஏன் 14 தமிழர்கள் தம்முயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற கேள்வி எழும்பாதா? உங்களுக்கென்ன, வென்றால் ஈழம் தோற்றால் இலங்கை. ஆனால் உங்களுக்காக இறந்துபோன அந்த இந்தியத் தமிழர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் என்ன இருக்கிறது? அவர்கள் உங்களை எங்கோ இருக்கிற இலங்கைத்தமிழராக பார்க்கவில்லையே?  ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களைக் கொன்றும் எஞ்சியவர்களை இரவிரவாக விரட்டியடித்தும் பெருமிதம் கொண்ட இந்து மனோபாவத்தின் எச்சம் உங்களுக்குள்ளிருந்து, எங்கோ இருக்கிற குஜராத்தின் இஸ்லாமியருக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சலடைகிறதோ? அதெப்படி உங்களால் அப்படி சொல்ல முடிகிறது? இங்குள்ள தமிழர்கள் யாருக்காக துக்கப்பட வேண்டும் என்பதைக்கூட நீங்கள்தான் தீர்மானிப்பீர்களோ? ஒடுக்கப்படுகிற ஒரு சமூகம் உலகின் பலபாகங்களில் ஒடுக்கப்படுகிற பிற சமூகங்களோடு இயல்பாகவே ஒருமைப்பாடு கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கேன் இந்த வன்மம்? எனக்கொன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லை, முடிந்தால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

இலங்கையின் ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற இந்தியத் தமிழர்களை ஒதுக்கிவைத்திருக்கிறீர்கள். ‘இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை’ என்கிறார் அந்தனி ஜீவா ( செங்கதிர்- மே 2009 பக்கம்- 10). ஆனால்   நீங்கள்  இங்கேயுள்ள அவர்களது சொந்தங்களான எங்களிடம் வந்து துளியும் உறுத்தலின்றி ‘‘எங்களுக்காக குரல் கொடுங்கள்’’  என்று கேட்கிறீர்கள். ‘ஆடு பகை குட்டி உறவு’ என்று  எங்களூரில் சொல்லப்படும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேள்வி எழுப்பினால் சிறுமைப் புத்தி உள்ளவர்கள் என்று பதிவு எழுதக் கிளம்பி விடுகிறீர்கள். சரி, எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று உங்களுக்கு வெகு அருகாமையில் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாணத்து தமிழனிடமாவது உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? அவர்கள் ஏன் உங்களிடமிருந்து பிரிந்து போனார்கள்? அவர்களில் ஒருவரும் ஏன் உங்களுக்காக தீக்குளிக்கவில்லை? உண்ணாவிரதம் ஊர்வலம் என்று ஒரு சுக்கும் நடக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் கருணாவையும் பிள்ளையானையும் காரணமாக்கிவிட முடியுமா?

உங்கள் தேவைக்காக தமிழினம் என்று குரல் கொடுத்துக்கொண்டே உடனிருக்கும் தமிழர்களை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தீர்கள், ஒழித்துக்கட்டினீர்கள். இந்த சூதுக்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் மாற்றுக்கருத்து தெரிவிப்போரை துரோகிகளாக சித்தரிக்கும் இழிவான செயல்களை கைக்கொள்கிறீர். உங்களையழிக்கும் துரோகிகள் வெளியிலிருந்துதானா வரவேண்டும்? புலிகளின் துரோகிகள் புலிகள்தான் என்ற உண்மையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?

மாற்றுக்கருத்துக்கு செவிமடுக்கும் ஜனநாயகப்பண்பும் சகிப்புத்தன்மையும் அற்ற புலிகளின் அராஜகப் போக்கு தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் போக்குக்கு இரையானவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தாங்கள் அறிந்திருப்பதே இறுதி உண்மை என்று நிறுவப்பார்க்கிறார்கள். அடுத்தவர் கருத்தை பொறுமையற்று கேட்கிறார்கள். அல்லது கேட்க மறுத்து காதையும் மனதையும் மூடிக் கொள்கிறார்கள். தாங்கள் வைத்திருக்கும் பலவீனமான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் அவர்கள் குறுங்குழு வாதங்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் இருந்த துரோகி முத்திரையை இப்போது யார் முதுகில் குத்தலாம் என்று ஏந்தி அலைகிறார்கள். ‘புலிகள் ஈழத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் புகலிடத்தில் இருப்பார்கள்’ என்றார் சுசீந்திரன். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானவர்களுக்கு ஒரு சாமர்த்தியமான- கற்பனை வளம்மிக்க- கதை ஜோடிக்கத் தெரிந்த ஒரு தலைவி தேவைப்படலாம். எனவே இங்கேயே இருங்கள். வீம்புக்காகவோ ரோஷத்திலோ ஊருக்குப் போறேன்னு கிளம்பிவிட வேண்டாம்.

மற்றபடி படைப்பாளியின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் இலக்கணமெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன் ஒருமுறையாவது அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் இதிலுள்ள அக்கப்போர். அதற்காக குறைந்தபட்சம் இப்போதாவது ஒரு மட்டக்களப்பானை, ஒரு இஸ்லாமியனை, ஒரு மலையகத்தமிழனை, முடிந்தால் ஒரு சிங்களனையும்கூட உங்களைப்போலவே அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கப் பழகுங்கள்.

பார்த்துப் பழகிய ஆதவனை இனி பார்க்க முடியாது, பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். தனக்கு உவப்பான கருத்தைச் சொல்லாதவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற இந்த நினைப்புதான் சகிப்பின்மையாக உருவெடுத்து சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த உங்கள் தலைமையை இட்டுச் சென்றது. ஆனால் நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்.

._._._._._.

07.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். “ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?” என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், ‘எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?’என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது ‘செலிபிரிட்டீஸ்’ என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். “எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்…” என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், “அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?” என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்… எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர்இ நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல ‘எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?’ என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.
வருத்தங்களுடன்

தமிழ்நதி

._._._._._.

06.29.2009

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’ என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.

‘நான் மநுவிரோதன்’ என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும். (புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும் ‘புது விசை’ குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் ‘மீட்டர்’ மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.

ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.

எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன்.

“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றைஇ எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.

சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?

இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில் – எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”

கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.

அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.

“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.

‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.

“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’ என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித் தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா?

எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”

ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.

“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.

ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.

இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.

“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.

அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.

பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.

“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.

இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.

இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக் கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப் போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’ என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’ போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.

இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.

என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம் இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்?

சமூகத்திலுள்ள சாதிஇ மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.

எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?

ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?

ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.

பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது” என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.

சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’ என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.

நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்” என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!

மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.

ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.