எஸ் வாணி

எஸ் வாணி

தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கிறார் வரதரின் மகள் நீலாம்பரி

Neelambari_Perumalஈபிஆர்எல்எவ் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் மகள் நீலாம்பரி தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கின்றார். உமமர் கரிகட் இயக்கும் ‘பொம்பே மிட்டாய்’ என்ற மலையாளப் படத்தில் நீலாம்பரி பெருமாள் அறிமுகமாகின்றார். இலங்கைத் தமிழர்கள் ஓரிருவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த போதும் ஒரு ஈழத் தமிழ் அரசியல் புள்ளியின் மகள் தென்னிந்தியத் திரைக்கு வருவது இதுவே முதற்தடவை.

மலையாளப் படத்தில் நடிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள நீலாம்பரி மலையாளப் படங்கள் சமூக அக்கறையுடையவையாகத் தரமானவையாக இருந்த போதும் அவை பரந்து பட்ட மக்களைச் சென்றடையும் நிலையை எட்டவில்லை எனத் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் வாழும் இளம் பெண் ஊடகவியலாளர் தனது தாயகமான தென்னிந்தியாவுக்கு செல்கிறார். அங்கு ஒரு கொலைக்குப் பின்னுள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே கதை.

சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட நீலாம்பரி பெருமாள் கலையில் நாட்டம் கொண்டவர். அரங்கியலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை அதனுடன் இணைத்துக் கொண்ட ஒரு போராளியின் மகள் நீலாம்பரி. 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் நீலாம்பரியின் தந்தை வரதராஜப்பெருமாள். 1991ல் இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியெறியபோது அவர்களுடன் வரதராஜப் பெருமாளும் வெளியேற வேண்டிய நிலை உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முக்கிய புள்ளியாக இருந்த வரதராஜப்பெருமாளதும் அவரது குடும்பத்தினரதும் உயிரைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு இந்திய அரசுக்கு இருந்தது.

இலங்கை அரசியலில் செல்லாக்காசாகிப் போனாலும் வரதராஜப்பெருமாள் மற்றும் ஈஎன்டிஎல்எப் ராஜன் போன்றவர்களது உயிரைப் பாதுகாப்பது இந்தியாவை நம்பும் தலைமைகள் கைவிடப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அவசியமாக இருந்தது.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் நீலாம்பரியினது இளமைப்பருவம் பெரும்பாலும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குள்ளேயே அமைந்தது. பெரும்பாலும் வட இந்தியாவிலேயே இவரது இளமைக்கால வாழ்வு அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவினுள் இவரது நுழைவு அவருக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றே கருத இடமுண்டு.

சுவிஸ்ஸில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு

011109dag.jpgதமிழ் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சுவிற்சர்லாந்திற்கு வந்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு நவம்பர் 20ல் சுவிஸில் நடைபெறவுள்ளது. ‘சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு’ இதுவென இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ள அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. இச்சந்திப்பில் ‘சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம்பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படும்’ எனவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாளை (நவம்பர் 20ல்) ஆரம்பமாக உள்ள மாநாட்டிற்கு நேற்று (நவம்பர் 18ல்) பெரும்பாலான தமிழ் முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்கள் சுவிஸ் வந்தடைந்தனர். இவர்களுக்கு மாநாட்டினை ஆரம்பித்து வைக்கு முன்னர் இன்று மாலை (நவம்பர் 19) விருந்துபசாரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. (தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்)

இம்மாநாட்டுக்கு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடனான சந்திப்பு ஒன்று நவம்பர் 18ல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணம் வந்து அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பிற்கு புலம்பெயர்ந்த மக்கள் சற்றுத் தள்ளி நிற்பதாக முதலமைச்சர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் தமிழ் கட்சிகளின் மாநாடு முற்றுப்பெறுமுன் இலங்கைக்குத் திரும்புவார் எனத் தெரியவருகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பில் தேசம்நெற் வாசகர்கள் கேட்கும் கேள்விகளும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். ஆகவே தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யவும்.

அமைச்சரைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் சுவிஸ் சென்றுள்ளனர்.

சந்திப்பு நடைபெறவுள்ள காலம்
மாலை 6:00 நவம்பர் 20 2009

சந்திப்பு நடைபெறவுள்ள இடம்
Katholische Universitätsgemeinde (AKI)
Alpeneggstrasse 5 
3012 Bern

ரிஎன்ஏ வன்னிமுகாம் விஜயம் – முரண்பட்ட தகவல்கள்

வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது அரசு மீள்குடியேற்றும் விடயங்களில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றது என ரிஎன்ஏ குழுவில் சென்ற ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலும் மீண்டும் வருவதில்லை என மக்கள் தன்னிடம் முறையிட்டதாக பி அரியநேந்திரன் குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்து இருக்கின்றார். ஆனால் இது பற்றி என் சிறிகாந்த டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் கூறியதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி முகாம்களுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களுக்குள் வெளிவந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் என் சிறிகாந்தா, பி அரியநேந்திரன், சிவநாதன் கிஸோர், விநோ நோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ஆர் எம் இமாம், தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஆகியோரே வன்னி முகாம்களுக்கு பயணித்திருந்தனர். இவர்கள் அரசினால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பியதாக குளொபல் தமிழ்செய்தி குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இது பற்றி பிபிசி தமிழோசையில் செவ்வி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரிவுகளாக வன்னி முகாம்களுக்குச் செல்லவே திட்டமிட்டு இருந்ததாகவும் இரண்டாவது பிரிவு விரைவில் வன்னி செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் நாளை சுவிஸ்மாநாட்டுக்குச் செல்ல இருப்பதால் அவருடைய வயது காரணமாக அலைச்சலைத் தவிர்க்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் உடனடியாகவே தங்கள் வீடுகளுக்கு செல்லும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டதாக என் சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள என் சிறிகாந்தா அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதால் முகாம்களில் இருந்த சுகாதார மற்றும் குடிநிர்ப் பிரச்சினைகள் சற்றுக் குறைந்துள்ளதை ரிஎன்ஏ குழு சுட்டிக்காட்டி இருந்தது.

முகாம்களில் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது. – அடைக்கலநாதன் : அவர்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர் – கிஷோர்

kishoor.jpgவவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாக பீ.பீ.ஸி தமிழோசை தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்க்ள் கொண்ட குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் உள்ள முகாம்கள் மற்றும் வன்னியில் மக்கள் சிலர் மீள்குடியேற்றப்பட்ட இடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டுத் திரும்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தமிழோசையிடம் பேசுகையில், அந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு தாம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதை மழை காரணமாக முகாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும், தமது உடனடி மீள்குடியேற்றத்தையே அந்த மக்கள் அவசரமாகக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்ததாக பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது. நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர். அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும்.”

இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

”வன்னி முகாம்கள் நல்லமுறையில் இயங்குகின்றது. மீள்குடியேற்றம் நல்லமுறையில் நடக்கின்றது” அவுஸ் பிரதமரின் விசேட பிரதிநிதி

John_McCarthyநவம்பர் 12ல் மனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பிரதமரின் விசேட பிரதிநிதி ஜோன் மக்காத்தி ”நாங்கள் நேரடியாக நிலைமைகைளப் பார்வையிட்டது பயனுள்ளதாக இருந்தது” என்று தெரிவித்ததுடன் ”அங்கு கண்ட விடயங்கள் தங்களை ஊக்கப்படுத்தி உள்ளது” என்றும் குறிப்பிட்டார். ”முழுமையாகப் பார்க்கையில் முகாம்கள்நல்ல முறையில் இயங்குககின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நல்லமுறையில் நடைபெறுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் படகு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ள நிலையில் அவ்வாறு அகதி அந்தஸ்துக் கோரி வருவொரைக் கட்டப்படுத்தும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் அவுஸ்திரேலிய இலங்கை அரசுகள் கைச்சாத்து இட்டன. அதற்காகவே அவுஸ்திரேலியப் பிரதமரின் விசேட தூதுவர் இலங்கை வந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரி கடந்த ஒரு மாதகாலமாக கடலில் தவிக்கும் இரு தொகுதிப் படகு அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முயற்சி எடுத்து வருகின்றது. அதற்கு பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் டெஸ் பிரவுணியும் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளார்.

ஐநா பிரதிநிதியின் மற்றுமொரு விஜயம்

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹொல்மஸ் நவம்பர் 17 முதல் 19 வரையான மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளாதாக ஐநா பேச்சாளர் நவம்பர் 12ல் அறிவத்துள்ளார். ஜோன் ஹொல்ம்ஸ் பெப்ரவரி ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு இருந்தார். தற்போது நான்காவது தடவையாக அவர் இலங்கைக்குப் பயணிக்கின்றார்.

சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலர் வன்னி முனாம்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் பொதுவாக மக்கள் விரைவில் மீள் குடியெற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். வன்னி முகாம்களில் மக்களுடைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

மீள முயற்சிக்கும் யாழ் பொருளாதாரம்

Jaffna_Grapesயாழ் நகரிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படக் கூடிய முந்திரிகை உட்பட்ட விவசாய விளைபொருட்களின் விலைகள் உயர்ந்தள்ளது. ஏ9 பாதை திறக்கப்பட்டதால் கொழும்புச் சந்தைக்கான வாய்ப்பினை யாழ் விவசாயிகள் பெற்றுள்ளனர். இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் விளையும் பொருட்களுக்கான சந்தை யாழ்ப்பாணத்திலேயே முடக்கப்பட்டதால் அவற்றின் விலை மிகுந்த வீழ்ச்சியைக் கண்டிருந்தது.

யுத்த காலத்தில் முந்திரிகை கிலோ 30 ரூபாவுக்கும் விற்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது கொழும்பிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருப்பதால் முந்திரிகை கிலோ 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் யாழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அதே போல் கொழும்பில் இருந்து பொருட்கள் ஏ9 பாதையூடாக வர ஆரம்பித்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாகவும் அவ்வர்த்தகர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வீதித் தடைகள் நீக்கப்பட்டு ஏ9 பாதை ழுழுமையாகத் திறக்கப்பட்டாலேயே முழுவீச்சான பொருளாதாரப் பயனை யாழ் மக்கள் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

”மடுமாதா அந்த அன்புக்குரிய மண்ணை காண்காணிக்க வேண்டும் என்று கேட்டு வணங்குகிறேன்” போப் பெனடிக்ற்

Pope_Benedict_XVI ”மடுமாதா அந்த அன்புக்குரிய மண்ணை காண்காணிக்க வேண்டும் என்று கேட்டு வணங்குகிறேன்” என போப் பெனடிக்ற் தனது பொது வழிபாட்டு தின முடிவில் தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் தொடர்பாக நவம்பர் 11ல் போப் பெயடிக்ற் குறிப்பிடுகையில் யுத்தம் முடிவடைந்து ஆறு மாதத்திற்குப் பின் இலங்கை வழமைநிலைக்குத் திரும்புவதாகவும் ஆனாலும் அங்கு செய்யப்படுவதற்கு நிறைய வேலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுமையாக மனித உரிமைகளை மதித்து அரசியல் தீர்வை எட்டுவதை நோக்கி அனைத்துப் பிரஜைகளும் செயற்பட வேண்டும் என்றும் போப்பாண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான மனிதத்துவ பொருளாதார தேவைகளை சர்வதேச சமூகம் வழங்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ள போப்பாண்டவர் அந்த மண்ணில் உள்ள அன்புக்குரிய மக்களை காக்கும் மடுமாதாவை தான் வணங்குவதாகத் தெரிவித்தார். http://www.catholicnewsagency.com/new.php?n=17663

வரும் ஜனவரிக்குள் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை இலங்கை அரசு வழங்கிய போதும் இன்னமும் இரண்டு லட்சம் மக்கள் வரை முகாம்களிலேயே தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

யாழ், வவுனியா நகர வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது.

யாழ் மற்றும் வவுனியா நகரங்களை அண்மித்துள்ள பகுதிகளில் வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக வன்னி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு வருவதால் இருப்பிடங்களுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் வீட்டு வாடகைகளும் உயர்ந்துள்ளது. யாழ், வவுனியா நகரங்களில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்கட்டணம் கேட்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நிலையில் அங்குள்ள வீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உறவினர்களின் கவனிப்பில் விடப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இருப்பிட நெருக்கடிக்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.

யாழ் மற்றும் வவுனியாவில் உறவினர்கள் உள்ளவர்கள் குறுகிய காலத்திற்கு தங்கள் உறவுகளுடன் தங்கியிருக்க முடியுமாயினும் ‘எவ்வளவு நாட்களுக்கு இப்படி மற்றயவர்களின் வீட்டில் இருக்க முடியும்’ என்கின்றனர். தற்போது பிறந்துள்ள கைக் குழந்தையுடன் யாழ் வந்துள்ள ரவி குடும்பத்தினர் தாங்கள் தனது சகோதரியுடன் இருப்பதாகவும் ஆனால் ஒரு வீடு பார்த்துச் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் அங்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதும் அங்கு சென்றுவிடுவோம் எனத் தெரிவித்தார். அரசாங்கம் உதவிப் பணமாக வழங்குவது வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று வாழும் மற்றுமொருவர் தெரிவிக்கையில் வாடகைக்கு வீடு எடுத்துச் செல்ல தங்களால் முடியாததால் தனது உறவினர் வீட்டு முற்றத்தில் ஒரு கொட்டிலைப் போட்டு இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

20க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக இணைத்து மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டு பற்றிய விடயங்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது. நவம்பர் 12ல் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இம்மாநாடு இறுதி நேரத்தில் சுவிஸ்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். இம்மாநாடு பற்றிய பின்னணிகளை அறிந்திராத நிலையில் தங்கள் கட்சித் தலைவர் அதில் பங்கெடுப்பது ஐயத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வருகின்றது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர்.

ஒரு சாதாரண சட்டத்தரணி 20க்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கட்சிகளுக்குமான விமானச்செலவு, ஒரு வாரத்திற்கான ஹொட்டல் செலவு என்பவற்றை பொறுப்பேற்பது என்பது அதன் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இம்மாநாடுக்குப் பின்னணியில் இந்திய, இலங்கை அரசுகளோ அல்லது புலிகளின் பினாமிகளோ பின்நிற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ரிஎம்விபி உறுப்பினர்களான மனோகரனும் கிருஸ்ணனும் பின்நிற்பதால் இம்மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு உள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

மாநாட்டின் நோக்கம் மாநாடு யாரால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது போன்ற அடிப்படைத் தகவல்கள் இன்றி கட்சிகள் இம்மாநாட்டில் கலந்தகொள்ளுமா என்ற சந்தேகங்களும் உள்ளது.
இதற்கிடையே நவம்பர் நடுப்பகுதி வார விடுமுறையில் இலங்கையரசு புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகெங்கும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.