2009

2009

வாகன இறக்குமதியாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்த நடவடிக்கை

வெளிநாடு களிலிருந்து வாகனம் இறக்குமதி செய்வோர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வாகன இறக்குமதியாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற போது அவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.

வாகன இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை ஆராயும் வகையில் நாம் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதுடன், அங்கு முறைபாடுகளை செய்யக்கூடிய வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் இப்போது தீர்வு காணப்பட்டு வருகின்றன. இந்த வகையில் வாகனம் இறக்குமதி நடவடிக்கையில் முகங்கொடுக்க நேரும் பிரச்சினைகளிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதற்கிணங்க அவர்களுக்கு நிவாரணமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். வாகன இறக்குமதிக்கான சுங்கவரி அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் புதிய வாகனங்களுக்கும் பாவி த்த வாகனங்களுக்கும் ஒரே விதமாக வரி அறவிடப்பட்டு வருவதாகவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர். கடந்த காலங்களைப் போன்று தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

ஆளும் கட்சி அமைச்சர் எம்.எம். முஸ்தபா ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானம்?

ballot-muthaffa.jpgஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் கல்வி பிரதி அமைச்சர் எம்.எம். முஸ்தபா சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 17ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் விரைவில் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உயர்கல்வி பிரதி அமைச்சராக தாம் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்விதமாக சேவையும் தம்மால் மக்களுக்கு ஆற்ற முடியவில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம்

பாகம் 6
தேர்தலும் வாக்களிப்பும்

தேர்தல் என்பது குறைந்த பட்சத்தில் மக்களது பொதுமைப் படுத்தப்பட்ட இறைமைகள் குறித்த அரசியல் பங்கீடுகள் பற்றியது. இதனை அரிதான அளவிலாவது தரக்கூடியது, இன்று நடைமுறையில் மட்டுமின்றி, உலகளாவிய அழுத்தத்தின் பால் உள்ளது, முதலாம் நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மிதவாத ஜனநாயக வழிமுறை ஒன்றேதான்.

இறைமை என்பது சமூகத்தினதும் தனிமனிதனதும் உடமைகள் பற்றியவை.

உடமை என்பது பணம் காணி பூமி எனச் சம்பாதித்த வெறும் சடப்பொருட்கள் பற்றியவை மட்டுமல்ல.
அவற்றைவிட, அவனுக்கு அத்தியாவசியமான உயிர், உடல், வாழ்வு என்பவற்றின் உத்தரவாதங்கள் பற்றியவை மட்டுமே என்பதும் அல்ல. இவற்றிலும் மேலாக, அவனது மொழி, சமூக-மனோவியல் இயல்புகளால் கொண்ட தத்துவார்த்தங்கள் சித்தாந்தங்கள், அவற்றின் பேரிலான நோன்புகள் சம்பிரதாயங்கள், காலாகாலமாக இயம்பப்பட்டு வந்த பாரம்பரிய இதிகாசங்கள் புராணக்கதைகள், சகாசவீரர்கள் சமுதாயத் தலைவர்கள் தந்த அறிவு அவற்றாலான உணர்வுகள், என்பன யாவும் அவனது உடமைகளே. இவற்றுடன் இணைந்த நிலத்துடன் அவன் கொண்ட உற்பத்தி உறவுகளில் தங்கிய சரித்திரமும் அவனது உடமைகளைப் பூரணமாக்கும்.

இவ்வகையில், தனி-மனிதனாக முதற்படியாக தற்பாதுகாப்பிற்கும், அடுத்தபடியாக தனதும் தன் குடும்பம் அல்லது பரந்த-குடும்பம் பற்றிய பொருளாதார முன்னேற்றத்தை நாடும் போதும், ஒரு குலத்தின், இனத்தின், நாட்டின் அங்கத்தவனாக அடையாளம் காட்ட வேண்டிய அத்தியாவசியத்தால், அதன் நுகர்வுகளைப் புரிந்தமையால், தனது தனிப்பட்ட இறைமைகளை மனிதன் பொதுமைப்படுத்துகிறான்.

தனிமனிதனாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கும், ஒரு சமூகத்துள்ளே விதிகள் நோன்புகளுடன் வாழ்வதற்கும் இடையிலான வேற்றுமைகளை, இறைமைகளை மாற்றீடு செய்யும் உரிமைகளின் மட்டுப்படுத்தல்களை உணர்ந்தும், தனது மேன்மையை நோக்கிய போக்கையும் அதற்கான இழப்புகளைப் புரிந்துமே அவன் இந்நிலை எய்துகிறான்.

இவ்வாறாக மனிதனது சமூக-பொருளாதார வளர்ச்சியின் வாஞ்சையும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றிய போராட்டங்களும் இணக்கங்களும் புதிய உறவுகளுமே, என்றுமே பரிணாமம் கண்டு கொண்டுள்ள அவனது உடமைகள் பற்றிய விளக்கத்தையும், அவற்றின் அடிப்படையிலான பொதுமைப் படுத்தப்பட்ட இறைமையின் அர்த்தத்தையும் அதன் வீச்சினையும் நிர்ணையம் செய்கின்றன.

எனவே, தேர்தல் என்பது மனிதன் தனியவனாகவும் கூட்டாகவும் தனது இறைமைகளின் பெறுமதியை மாற்றீடு செய்வதற்கான ‘சமூக-பொருளாதார-அரசில் சந்தைப்படுத்தலின்’ வழிமுறையாகும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

இவ்வாறு பொதுமைப்பட்ட இறைமைகள் பற்றி இல்லாத வரைவுகளுள் இருந்தபடி ஏதாவது தேர்தலை அணுகுபவர்கள் மேற்படி அமைந்த சந்தைப்படுத்தலின் அழையா விருந்தாளிகளே. ஆகவே, பொது இறைமைகளது அவை தங்கிய உடமைகளது உறவுகளை ஏற்பாடு செய்யக் கூடிய வல்லமை கொண்டவராகவோ, அவற்றின்பால் கருமம் ஆற்றக் கூடிய செயலாளராகவோ இருக்க மாட்டார் என்பது திண்ணம்.

எனவே இந்த அரசியல் சந்தைப்படுத்தலில் “விற்பவர் யார்? வாங்குபவர் யார்?” என்ற கேள்வி நியாய பூர்வமாக எழுகிறது.

முதலாம் உலக நாடுகளில் வாழும் சாதாரண மனிதரது (1) நுகர்வுத் தன்மையும் (2) கொள்வனவுத் தன்மையும் (3) உற்பத்தித் தன்மையும் சுமுகமான சமாந்தர நிலமையை எய்தி உள்ளது. ஆதலால், அங்கே எல்லாம் விற்பவர்-வேண்டுபவர் என்ற உறவுகளில் சாதாரணரிடையே பாரிய வேறுபாடுகள் இல்லை எனலாம்.

இவர்களிடமிருந்து சொத்துக்களை பல வகைகளில் சேகரித்து தமது மூலதனத்தை அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவர்களை நாம் பிரித்தே பார்க்கிறோம் என்பதை சகலரும் புரிந்து கொள்ளவர்.

மேலும், சமூக-பொருளாதார சந்தைப்படுத்தல் முதலாம் நாடுகளில் உச்சக் கட்டத்தில் உள்ளமையால், ஒரு நாட்டின் உள்ளே அவ் உறவினிடையே உருவாகும் ஏற்றத் தாழ்வுகளை சுமாராக்க நாடுகளின் அரசுகள் ஒரு புறத்தில் முதலாளித்துவத்தின் பாதுகாவலனாகவும், மறுபுறத்தில் உற்பத்தி உறவுகளை சீர் செய்யும் வகையில் தனிமனித சமூக அத்தியாவசியங்களைப் பூர்த்தி செய்யமுயலும் கருவியாகவும் இயங்குகின்றன.

இதனைவிட ஒருபடி மேலாக இந்நாடுகள் பிராந்திய ஜனநாயகத்தை ஏற்று நடை முறைப் படுத்துவதால், ஒரு புறத்தில் சமூகங்களது ஏற்றத் தாழ்வுகளை முன்நிலைப் படுத்தி சீர்திருத்தம் கோருகின்றன அமைப்புகளை ஏற்றுக் கொள்பவையாகவும், மறுபுறத்தில் மத்திய அரசின் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் யாப்புகளை நடைமுறைப் படுத்தி நிலைமைகளை ஒருமுகப் படுத்தும் கருவிகளாகவும் அமைகின்றன.

ஆகவே, முதலாம் நாடுகளில் இந்த அரசியல் சந்தைப்படுத்தலானது, சாதரணரிடையே ஓரு ‘பண்டமாற்று’ முறையாக, ஒருவரிடம் மற்றவர் பெறுவதற்கும் விற்பதற்கும் விடயங்கள் இருப்பதாலான செயற்பாடகவும் அமைகிறது எனலாம்.

இவ்வாறான ஜனநாயகம் போர்த்த சமூக-அரசியல் மாதிரியானது 60 பதுகளில் மேற்கு ஐரோப்பியா பூராக பரவலாக்கப்பட்டு இன்று, சோவியத் அரசுகளின் வீழ்சியின் பின்னர், கிழக்கு ஐரோப்பியாவையும் உள்வாங்கும் திட்டம் ஆக்கப்பட்டுள்ளதையும்தான் நாம் அறிவோம்.

அதாவது, நாம் வரைவு செய்யும் அரசியற்-சந்தைப்படுத்தலானது பல்வேறு வடிவங்களில், இன்று ஐரோப்பாவில் ஓரிரு நாடுகள் தவிர்ந்த யாவற்றையும் உள்ளடக்கியதாக உருவாகி வருவதை காணலாம் என்கிறோம்.

மூன்றாம் நாடுகளிலோ நிலைகள் நேர்மாறானவை.

மனிதன் தனியவனாகவும் கூட்டானவனாகவும் ‘நாடு’ என்ற ரீதியில் தமது இறைமைகளைப் பொதுமைப்படுத்த முடியாதவனாகவே இன்றும் இருக்கிறான். அவனது ‘நாடுகள்’ இன்றும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய தன்-அடையாளம் அற்றவையாக, காலனத்துவர் விட்டுச் சென்ற நில-வரைவுகளுடன் மட்டுமே தங்கியவையாகவும், அவற்றினை வியாபிக்க விஸ்தரிக்க முடியாதவையாகவுமே உள்ளன.

சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்தவனோ, தனது சமூக உடமைகளை பாதுகாக்க முடியாதவனாக, அத்து மீறிய செயற் திட்டங்களுடாக பெரும்பான்மை இனத்தினுடைய சொத்தாக சுவீகரிக்கப்படுவதை தடுக்க முடியாதவனாக, அன்றாட இம்சைகளுக்கு உட்பட்டவனாக வாழ்கின்றான்.

காலனித்துவர் விட்டுச் சென்ற அரச-அமைப்பின் அதிகாரங்களை, குருட்டுத்-தனமாகவும் மூர்க்க-தனமாகவும் குரோதத் தன்மையுடன் பேரினவாதக் குழுக்களும், இன வேறுபாடுகளைச் சாதகமாக்கித் தத்தமது மூலதனத்தை வளர்த்திடும் வர்க்கங்களும், அவை சார்ந்த குடும்பங்களும், பிரயோகமாக்கிடும் சூட்ச்சிகளுள் தவிக்கின்றான். அவற்றிக்கு எதிர் முகம் கொடுக்கும்போது பாரிய பின்னடைவுகளையே அவன் சந்திக்கிறான்.

மாற்றாரது உடமைகள் தனது பெயரில் சுவீகரிக்கப்பட்டு, பொதுவில் சொத்துக் படைத்தவனாக காட்டப்படும் போதிலும் தனது இறைமைகளைக் கூட பொதுமைப்படுத்த முடியாதவனாகவே பெரும்பான்மை இனத்தில் மிக மேலதிகமானவன் இன்றும் உள்ளபோது, சிறுபான்மை மனிதனோ தனது இறைமைகளை எவ்வாறு நிரூபித்துக் கொள்வது என்ற கேள்வியில் மட்டுமே தங்க வேண்டியவனாக இருக்கிறான்.

அவன் இருக்கும் ‘நாடுகள்’ எந்த இனத்தவனது உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாதவையாகவும், மாறாக அவனது உயிரை ‘நாட்டின்’ எதிரியாக அல்லது பாதுகாவலனாக பணயம் பேசியே தமது அடையாளத்தையும் ஸ்திரத்தையும் நிலை நாட்டுவனவாகவும் உள்ளன.

ஆதலால், தேர்தல் என்பது ஒரு பேரின-வழக்காகவும் சகலரதும் இறைமைகளையும் கொச்சைப்படுத்தும் பெரும்-தேசியவாத அரசியல் வர்க்கங்களது “குடியானவர்-ஜனநாயகமாகவே” மூன்றாம் உலக நாடுகளில் உள்ளன.

சிறுபான்மை இனத்தவனுக்கோ, “தனது ‘நாட்டில்’ தன்-பங்கு என்ன என்பதை தானே முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளபோது, தேர்தலில் தன்-பங்கு என்ன முடிவைத் தரும்?” என்ற கேள்வி வெறும் எண்கணிதப் பரீட்ச்சையே அன்றி வேறெதுவுமல்ல.

எனவே, மொத்தத்தில் மூன்றாம் நாடுகளில் தேர்தல் எனும் அரசியல் சந்தைப்படுத்தல் அதிகாரமயப்படுத்தப்படாத (un-empowered) சகல மனிதனும் அவன் சமூகங்களும் சமுதாயங்களும், அதிகாரத்தில் உள்ளவனுக்கு தனது இறைமைகளை சிறிது சிறிதாக தாரைவாரத்துத் தந்த வண்ணம் உள்ளன. கைமாறாக அதிகார வர்க்கத்தினர், பொதுவாக சில குடும்பங்களைச் சார்ந்தவர்கள், பண்டைய பெருமைகளையும் எதிர்காலக் கனவுகளையும் இலகுவாக வழங்குவதை நன்றியுடன் பெறவேண்டிய நிலையலேயே அவன் உள்ளான்.

எனவே, தேர்தல் எனும் அரசியற்-சந்தைப்படுத்தலில் அதியாரமயப்படுத்தப்படாத சகல மனிதனும் ‘வாக்குகளால்’ தமது இறைமைகளை ஊர்ஜிதம் செய்திடலாம் என்ற போலியான வாதத்துள் அவனது ‘தலைவர்களால்’ இட்டுச் செல்லப்படுகிறான்.

அரசாங்கத்தின் அல்லது அரச எதிர்க்-கட்சியின் ஆதரவாளனாக, அதிகாரவர்க்கங்களின் தயவிலேயே தமது ‘வாழ்வுக்கும்;’ சாவிற்கும் தங்கியிருப்பவர், அதிகாரமயப்படுத்தப்படாத தமது மக்களுக்கு உண்மையான தலைமையை எப்படிக் கொடுக்க முடியும் என்பது சமூக-பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய சகல மூன்றாம் உலக நாடுகளிலும் பரந்து காணப்படும் ஒரே கேள்வியாகும்.

இந்நிலையைச் சீர் செய்ய, தனது இறைமைகளை தமதென ஊர்ஜிதம் செய்திட, தனது சமுதாயத்தினை தேசியவாதம் அல்லது இராணுவமயப்படுத்தல் என்பவற்றுள் உட்படுத்துவதே மாற்றுத் தலைமைகளது மேலெழுந்தவாரியான பதிலாக இன்றுவரை இருந்து வந்துள்ளது.

இவ்வழிகள் இன்று, உலகளாவிய-சந்தைப்படுத்தலின் காலகட்டத்தில் 9/11 நிகழ்வின் பின்னடியில், பல பிரதேசங்களில் சர்வதேசியத்தை நிர்வாகம் செய்பவர்களால் மிக வன்முறையாக நிராகரிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தாக வேண்டும்.

உணர்ந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் பாரிய இடைவெளி உண்டு என்பதையும் புரிந்தும்தான் நாம் காரியமாற்ற வேண்டும்.

இவையாவும், பரந்துபட்ட சகல சமூகங்களுக்கும் பொதுவானவை என்பதுடன், எமது ஆய்வுகளின் தேடலின் பிரகாரம் நாம் காணும் பொது-அறிவும் ஆகும்.

அதாவது, இவை வெற்றுப் பொதுப்-புத்திகளிலோ, இலட்சியக் கோட்பாடுகளற்ற புத்தி-ஜீவித-சுத்தியற்ற போலி அரசியல் அவதானிப்புகளிலோ தங்கிய தத்துவங்கள் அல்ல. எனவே, இவை முகமோ முறையோ பாராது, நாட்ட ஓட்டங்களைத் தாண்டி, இலட்சியக் கணிப்புகளைக் கொள்ள முனைபவன் கருத்தில் கொள்ள வேண்டிய வரையறுப்புகள் ஆகும்.

இவற்றிலான வரைவினுள் இருந்தபடி சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை எப்படி நோக்குவது?

வெற்று அரசியல் விஞ்ஞாபனம்
வெளிநாடுகளில் புலிகளுக்காக ‘வேலை’ செய்தவர்கள், தமிழீழத் தேசியவாதிகள், மகிந்தா அரசினை ‘இன ஒழிப்பு’ குற்றச்சாட்டில் சர்வதேசிய மனிதாபிமானக் கோட்டில் நிறுத்துவோம் என அமரிக்க-வழக்கறிஞர் ஒருவரை கூட்டித் திரிந்தவர்கள், புலிகள் இயக்கமாக அழிக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷா சகோதரர்களை சந்திக்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதைச் சாடும் பலத்த விமர்சனங்களை நாம் காண்கிறோம். இவற்றை நாமும்தான் செய்திடலாமா என்ன?

2001 இல் ரணில் அரசுடன் புலிகள் புரிந்துணர்வு ஏற்பாடு கண்டபின் ‘சமாதானம்’ ஒன்று நிலவியது. நிலமைகள் சமாதானம் என்று கூடப்பட்ட போதிலும் பின்னணியில் கொலைகளும், மீண்டுமொரு போருக்கான ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் இருந்த காலமுமிது.

அப்போது அமைச்சராக இருந்த ஒரு ஜெயவர்த்தனாவை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் A9 சாலையை புதுப்பிப்பதற்கான வர்த்தக ஒப்புதல்களுக்கு பொறுப்பானவர், மற்றும் இறக்குமதி தொடர்பான சான்றுப் பத்திரிகைகளை வழங்குபவர் என்பதால் அவருடன் ‘பிசினஸ்’ செய்த தமிழர்களோ அவரை மறந்திருக்க மாட்டார்கள். அவர் இங்கிலாந்து வந்தபோது பல இடங்களில் எடுப்பு எடுத்து, மாலைகள் போட்டு அமைச்சருடன் ‘போட்டோ’ பிடிக்க போட்டா போட்டி போட்ட புகலித் தமிழர்களும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

இம்மாதிரியான அன்றைய நிகழ்வுகள் இன்று நடப்பவற்றின் முன்காட்டிகள். ‘தொப்பி பிரட்டிகள்’ என இஸ்லாமிய தமிழ் சமூகத் தலைவர்களை ‘தமிழ் அறிஞர்கள்’ வர்ணித்த போது, தம்மைத் தெரிந்தும் உணர்ந்திராத தமிழரது நடுத்தர வர்க்கங்களின் அரசியற் கலாச்சரமும் இது.

எனவே, சமூக-அரசியல் அறிவினை சுயசிந்தனையை கொண்டவர்கள், தமிழீழக் கோரிக்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்தவர்கள், இவற்றினால் ஆச்சரியமோ ஆத்திரமோ கொள்ள முடியாது.

தமிழீழக் கோரிக்கை கொழும்பின் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான ஒரு பேச்சுவார்த்தையின் உச்சவரம்பை ஸ்திரமாக்கும் யுக்தியாகவே நடுவர்க்கங்களால் முன் நிறுத்தப்பட்டது.

அக் கோரிக்கையில் தமிழரது உடமைகள் குறித்தோ அல்லது தமிழ் பேசுவோரது பிராந்திய ஜனநாயகம் குறித்தோ ஆழமான கருத்துகள் இருக்கவில்லை. பலகலைக்கழக நுளைவிற்கான தரப்படுத்தலே தனிநாட்டுப் போராட்டத்தின் பிரதான காரணம் என்று தமிழீழவாதிகள் கூறுவதிலிருந்து அவற்றினைப் புரிந்து கொள்ளலாம்.

அக் கோரிக்கையை, நடுத்தர வர்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் சிலரும் அவ்-வர்க்க அபிலாசைகளால் உள்வாங்கப்பட்ட மற்றைய சமூகத்து இளைஞர்களும் இலட்சியக் குறிக்கோளாக ஏற்ற பின்னரே அவர்களது இரத்தத்தாலும் தியாகங்களாலும் அதனை ஒரு அரசியற் சித்தாந்தமாக மாற்றி அமைக்கும் முயற்சியும் இடம் பெற்றது.

நிலமைகள் பாரதூரமானபோது இயக்கத்து உட்பிரச்சனை அல்லது மாற்று இயக்கத்துடனான பிரச்சனை காரணமாக நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் பெரும் திரளாக “தமிழீழப் போரிலிருந்து” வெளியேறியதில் இருந்தே இக்கோரிக்கையின் இரு-இளை அவிழ்வினைக் கண்டு கொண்டிருக்கலாம்.

எனவே, நடுத்தர வர்க்கங்களால் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான யுக்தியாக முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையும் அதன் பேரிலான யுத்தமும் சமூகத்தில் பின்தங்கியவரது பாரமாகச் சுமத்தப்பட்டு அவர்களது இலட்சியமாகவும் அழுத்தப்பட்டது. (இவைபற்றிய விரிவு வேறொரு தடவையில்)

இவற்றை கூர்ந்து அவதானித்து வந்தவர்கள் நடுத்தரவர்க்கத் தமிழரது அரசியல் கலாச்சாரம், ‘போரின்’ முடிவில் பழைய நிலையை மீண்டும் எய்திடும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர். ஆனால், அப் போர் சடுதியாக, அதிலும் உலக அரசுகளின் இணக்குடன் முடிவுக்கு வரும் என்றோ, பின்னோக்கும் அரசியற் கலாச்சாரம் அவர்களை டட்லி-பண்டாரநாயக்க காலத்து நிலைப்பாடுகளுக்கு இழுத்துச் செல்லப் போகிறது என்று முன்கூறிடுவது இலகுவான விடயமல்ல.

ஆனால், இந்த அரசியல் வர்க்கத்தினரோ தேர்தல் என்றதும் குட்டையைக் கண்ட தாரா போலாகி உள்மனதுள் குதூகலம் கண்டிடுவர் என்ற விடயமோ சுலபமாக யாரும் கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பு.

இது வெறும் தனித் தமிழீழம் பேசித் தடம் புரண்ட தேசியவாதிகளை மட்டும் கொண்ட கூட்டம் அல்ல. பலவிதமான புரட்சிகள் பேசி மற்றவர்களைப் புரட்டி எடுத்து, முடிவில் தம்மைப் பலதடவை பிரட்டிப் பிரட்டிப் பிதட்டிக் கொள்பவர்களும், நடத்தையில் செயற்பாடுகளில் அகராதி-வார்த்தைகளில் சற்றே வேறுபட்டவர்களாகக் காணப் பட்டாலும், அரசியல் முடிவுகளில் அதே இடத்தில்தான் காணப்படுட்டவர்.

தம்மைப் பரிசீலனை செய்வது, சுயவிமர்சனம் செய்து தமது பழைய நிலைப்பாடுகளுக்கு அவற்றையொட்டிய செயற்பாடுகளுக்கு, மற்றவர் மீதான கடுமையான வார்த்தைகளுக்கு வன்முறைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்பதெல்லாம் கிண்டலுக்கு இடமான அவசியமற்ற விடயங்கள் இவர்களுக்கு.

எனவே, இரகசியப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் என்பவற்றிலேயே அவசர நாட்டமும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இவர்கள் என்றும் இருப்பர். மேலும் தம் முரண்பாடுகளுக்கு, தாம் சற்று முன்னே கூறியவற்றிக்கும் தற்சமய நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளுக்கு, அவ்வப்போது மற்றவர்களது நடத்தைகளால் ‘விளக்கம்’ கொடுப்பதையே ஆய்வாகவும் கற்பிப்பர் இவர்.

எனவே, மற்றவரது சமூக-பொருளாதார அரசியல் அகராதிகளுள் ஒழிந்து வாழும் இவர்களது தனிப்பட்ட அரசியல் அகராதியில் எஞ்சிவிடுது ‘யதார்த்தம்’ என்ற ஒரு சொல்லு மட்டுமே.

இறுதியில் இதுவே இவர்களது அரசியல் விஞ்ஞாபனம்.

தேர்தல் பண்டி(கை)க் காச்சல்

இலங்கைத் தீவின் அரசியல் அங்கு வாழும் சாதாரணர்களின் கைகளில் இல்லை என்பதற்கு இன்று போலியாக கத்தி எழுப்பப்படும் தேர்தல் காச்சலே அத்தாட்சி.

சிங்கள நாட்டு அரசாங்கத்தின் உத்தியோக எதிர்க் கட்சியினர் தமது வேட்பாளரை நிர்ணையம் செய்ய முடியாதபடி, அரசின் இராணுவத் தளபதியையே பொது வேட்பாளனாக முன்நிறுத்தப்பட வேண்டியதிலிருந்து தேர்தலின் போலித் தன்மையை ஊகித்துக் கொள்ளலாம். அதே தருணம் இலங்கை அரசியலின் ஓட்டத்தின் போக்கினையும் கணிப்புடன் குறித்துக் கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு என்ன என்று அங்கலாய்த்துக் கொள்வதுதான் இன்று எமது அரசியல் கட்சிகளது செயற்பாடாக உள்ளது.

புலிகள் பலாத்காரமாக தமிழரதும் தமிழ் பேசும் சமூகங்களதும் அரசியலை தம்வசம் எடுத்தமையும், காலப்போக்கில் சடுதியான அவர்களது மறைவும் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன என்பதை இப்போதுதான் சிலர் உணரத் தொடங்குகிறார்கள்.

புலிகளின் பலாத்கார அரசியலின் நேரடி விளைவாக இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த தமிழ் பேசும் சமூகங்கள் தம் சுயஇயல்பை ரத்து செய்து சிறீ லங்கா அரசுடன் போவதின்றி வேறு வழி இல்லை என்ற நிலைமையை ஏற்க வேண்டியவரானார்கள். மேலும், இஸ்லாமிய மதவாரியான தேசியச் சித்தாந்தங்கள், பல ஆதி ராகங்களைக் கொண்டிருந்தாலும், கீதங்களாக உருப்பெற காரணகர்த்தர்களும் புலிகளே என்கின்றன அதன் சார்பான எழுத்துக்கள்.

புலிகளது வஞ்சகங்களுக்கும் படுகொலைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகளோ தமக்கு வேறு வழி இல்லை, பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ளோம், புலிகள் இல்லாது போகின் எமது அரசில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்கள். இது நடக்கக் கூடிய காரியமோ இல்லையோ அவர்களது-பாதுகாப்பு என்ற விடையத்தையும், புலிகளது அட்காசத்தையும் உணர்ந்தவர்கள் ‘ஒரு வேளை?’ என்ற கணிப்புடன் காலா அவகாசத்தைக் கொடுத்தார்கள்.

இன்று புலிகளோ இல்லை. அவர்களது ஆதரவாளர் என்று இருந்தவர்களும் எவ்வளவு தூரம் தமது தமழீழ நிலைப்பாடுகளைவிட்டு ஓட முடியுமோ ஓடுகிறார்கள். ஏன், அவர்களது அங்கத்தவரே அரசியல் வரம்புகளை மறந்து வக்கற்று தமது ‘பிசினஸ் இன்ரறஸ்டுகளைக்’ காப்பாற்ற மகிந்தா குடும்பத்தினரிடம் போய்ச் சேர்கிறார்கள்.

இந் நிலையில், “(புலிகளுக்கு) மாற்று-அரசியல் பேசியவர்களது நிலைப்பாடுகள்தான் என்ன?” எனக் கேட்டால், வெவ்வேறு திக்கில் அரசுடன் நிற்கும் அவர்களது ‘யதார்த்த நியாயங்கள்தான்’ காதுகளை நெருக்குகின்றன.
இவற்றிலிருந்து புலிகளது நடத்தைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எவ்வளவு ஆழமானவை என்பது துலக்கமாகிறது.

புலிகள் தம்கைகளில் அதிகாரத்தை மட்டுமின்றி, அதற்காக தமிழரது மிடுக்கை மட்டுமின்றி, அவற்றின் அடிகோலிகளாக இருக்கும் மக்கள், பொருளியல், மனோவியல் என்ற சகல தளங்களையுமே கைப்பற்றி வைத்திருந்ததால் இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல, கூடவே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களும் அரசியற் தளமற்ற பேதைகள் ஆகி உள்ளார்கள்.

எனவே, சிலகாலங்களுக்கு இச்சமூகங்களது தலைமைகள் பட்டியுள் அடைபடப் போகும் ஆடுகள் போல மேயவைத்து சாய்த்து செல்லப்படுவது, சகிக்க வேண்டிய எதிர்பார்த்த விடயமே.

ஆனால், காலப்போக்கில் தமது சமுதாயங்களின் உண்மையான பலம்-பலவீனம், அடிப்படை நிலைப்பாடுகள், தமிழ் பேசும் சமூகங்கள் இடையேயான ஒத்துழைப்பு-போட்டி, சிங்கள அரசுடனான சர்ச்சை-உறவின் அவசியம், வௌ;வேறு பிரதேசங்களில் தமிழ்-சிங்களம் பேசும் சமூகங்கள் இடையேயான உறவுகள்-போட்டிகள், பற்றிய நிலைப்பாடுகளை சமூக-சுயநிலை பெற்றபின் எடைபோட்டு முடிவுகளை எடுக்கும் சமூகத்-தலைவர்கள் உருவாகுவர் என்பதில் ஐயமே இல்லை.

ஆனால், அதற்கு பல அரசியற் கட்டங்களைத் தாண்ட வேண்டியவையாகவே இச்சமூகங்கள் உள்ளன என்பதையும் ஏற்றாக வேண்டும்.

அரசியற் பிரதிநிதித்துவம்
அதிகாரமயப்படுத்தப்படாத மக்களுக்கு ‘அதிகாரத்-தலைமை’ கொடுப்பதற்கான இரு வழிகளும் அதாவது, தேசியவாதம் இராணுவத்துவம் என்பவை, தவிர்க்கப்பட வேண்டிய நிலையில், தலைமைகள் என்பது வெற்றுக் கோதானவே என்பது தத்துவார்த்த உண்மை மட்டுமல்ல, யதாரத்தங்களின் யதார்த்தமுமே.

எனவே, ஜனநாயகப் பிரதிநிதித்துவம் என்பது தேசியத்தை அண்டிய சித்தாங்களின் கூட்டான வடிவங்களையே தங்கி இருக்க முடியும். அவைகள் அற்றுப் போகும்போது அப்பிரதிநிதித்துவங்கள் வெறுமையானவை என்பதை யாரும்தான் கண்டு கொள்ளலாம். இதனை ஜேவிபியினரது வர்க்கப் போரின் தோல்வியின் பின்னர் தம்மை சிங்களத் தேசியக் கொடியால் போர்த்துக் கொண்டதிலிருந்தும், புலிகள் போனபின் வாயற்று நிற்கும் சகல தமிழ் அரசியற் கட்சிகளது அரசியல் நடத்தைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அதாவது, வளர்ச்சியற்ற மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதம், தேசியத்துவம் என்பவையே இன்றும் மக்களை அணி திரட்டும் வாதங்களாக உள்ளன. சமூக-பொருளாதாரம், பிராந்திய அல்லது சமூக ஜனநாயகங்கள் பற்றியவை இரண்டாம்தர விடயங்களாகவே இடம்பெறுகின்றன. இதனை அவற்றை முன்னெடுக்கும் வர்க்கங்களைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய போதிலும், பெரும்பான்மையினரது முன்னெடுப்புகளாலான குளப்ப நிலையும் காரணிகளாகின்றன.

எனவே, இங்கெல்லாம் அரசியல் அதிகாரத்தை தேர்தலூடாகவோ பலாத்காரமாகவோ கைப்பற்றிக் கொள்பவர்கள் தேசியவாதத் தன்மை அற்ற நிலையில் பிரதிநிதுத்துவம் மறுக்கப்பட்டவராகவும் ஆழுமை அற்றவராகவும் காணப்படுகிறார்கள்.

இந்நிலையில் தனது சமுதாயத்தையாவது சமூகமாக மாற்றிக்காட்டிட வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தவர் ஆகி புதிய வடிவங்களில் செயலாற்ற முயல்கிறார்கள்.

இச்சூழலில், பெரும்பான்மையினரின் ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசி மக்களது உடமைகளை அவைபாலான இறைமைகளை இவர்களால் பெற்றுத் தரமுடியும் என நம்புவோர் புலிகளது தனிநட்டையும் உமாவின் ‘பொங்கலுக்கு தமிழீழத்தையும்’ காத்திருந்த பேதைகளிலும் பேதைகளாவர். மேலும், சிங்கள ஜனாதிபதிகளை கடந்த மூன்று தடவைகளில் நிர்ணையம் செய்த புலிகளுக்கு என்ன நடந்தது என்பதும் ஒரு பாடம்.

கொழும்பில் இருக்கும் அதிகாரத்தில் பங்கு கேட்பவர்கள் கொழும்பிலேயே தங்கிவிவதும், அங்கேயே தமது அரசியல்-பொருளாதார மூலதனங்களை அமைத்துக் கொள்வதும் தற்செயலான விடயங்களல்ல. சிங்களவாதக் குழுக்கள் பிராந்தியங்களில் ஆரம்பித்திருந்தாலும் கொழும்பு அரசைக் கைப்பற்றுவதையும் அதனை காத்துக் கொள்வதையுமே தமது இறுதிக் கருமங்கள் ஆக்கிக் கொள்கின்றன என்பதும் புதுமையானவை அல்ல.

ஜேவிபியினர் கொழும்பிற்கு அப்புறமானவர்கள் என்பதும், தமிழ் தேசிய வாதிகளாயினும் பிரதேச விடுதலை கேட்டு உயிர் நீர்த்த புலிகளும் அவர்களின் கிழக்கு மாகாண மீதியான TMVP யினரும், கொழும்பைத் தாண்டியவர்கள் என்பதும் தொடர்புகள் இல்லாத விடயமல்ல.

கொழும்பும் அது அமைந்துள்ள மேற்கு மாகாணமும் பொருளாதாரத்தில் இலங்கைத் தீவின் மற்றைய பிராந்தியங்களிலும் பாரியளவில் வேறுபட்டவை என்பதும், அவ்வகையில் பின் தங்கியவர், அதிகாரமயப்படுத்தப் படாதவர்கள், யாவரும் புவியியல் ரீதியில் வறண்ட வலையத்துள் (dry zone) வாழ்பவர்கள் என்பதும் கவனத்திலிருந்து இலகுவில் புறம்பாக்கிடும் விடயமுமல்ல.

சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் நகர்புறப்படுத்தப்பட்ட (urbanised) தொழிலாளர்களிடமிருந்து எழவில்லை என்பதும், அவை குடியானவர் சமுதாயங்கள் சமூகங்களது இளைஞர்கள் வசமிருந்தே இதுவரை எழுந்துள்ளன என்பதும் சாதாரண விடயமல்ல.

வெள்ளையரிம் இருந்து பெற்ற விடுதலையின் உற்சாகம் சில வருடங்களே தங்கிற்று. அதன்பின் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் பேரில் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களவாதக் குழுக்கள் தீவினை அழிவிற்கே இதுவரை இட்டுச் சென்றுள்ள போதிலும் கொழும்பின் பொருளாதாரம் வளர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலைகளையெல்லாம் ஒருமைப்படுத்தி அவற்றுள் இருந்து கணிப்புகள் சொல்பவன், வறண்ட வலையத்து மக்கள் அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கே முதலில் வர முடியும்.

அடுத்து அவனது கேள்வி, “அதனை எப்படி நிஜமாக்குவது?” என்பதாகவே அமையும்.

“நாம் இனங்களாகவே அதனை செயற்படுத்த முடியும்” என்பது தேசியவாதத்தின் நியாயமான பதில்.

ஆனால், அதற்கோ உட்சூழலோ ஒருபோதும் சாட்சியமாக இருக்கவில்லை. சரி, இது தர்க்கத்திற்குரிய விடயமென தற்செயலாக ஏற்றுக் கொண்டாலும், புறச் சூழலோ தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு இடம் கொடுப்பதாக எப்போதும் இல்லை.

“அப்படியானால், வெளியாரது நிர்ப்பந்தம் என்ற ஒரே காரணத்தால், தேசியம் என்ற அபிலாசை அதனூடாக அடையக் கூடிய உடமைகளின் இறைமைகள் எல்லாவற்றையும் மக்கள் மறந்து போகவேண்டியது தானா?”

முடியாது! ஆனால், பாறைக் கல்லுகளுடன் மோதியபடி தாவரங்கள் அவற்றிடையே வளர்வதில்லை. சர்வதேச- சந்தைப்படுத்தலும், பிராந்திய பூகோள-அரசியலும் தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு சாதகமாக இல்லாது போகினும், பிராந்திய-ஜனநாயகத்தை அவை எதிர்க்கின்றன அல்லது மறுக்கின்றன என்பது தவறு. எனவே தேசியவாதத்தின் தனிநாட்டுக் (separate state) கோரிக்கைக்கும் தேசியத்துவத்திற்கும் (statehood) இடையிலான விளக்கங்களைக் புரிந்தாக வேண்டும். இங்கேதான், ‘காந்தியப் போராட்டத்தின்’ பின்னணியில் தெலுங்கான தேசியத்துவத்தை இந்திய மத்திய அரசு இன்று ஏற்றுக் கொண்டதை நாம் அவதானிக்க வேண்டும்.

ஆனால், இதற்கான அரசியற்-காரணங்கள் பலவென ஒப்பிக்கப்பட்டாலும், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியும் அதனுள்ளான பிரதேசவாத ஏற்றத்தாழ்வுகளுமே அடிப்படைக் காரணிகள் என்பதை நாம் மறந்து போகலாகாது.

ஆகவே, அதிகாரமயப்படுத்தப்படாதவரிடம் பரந்துபட்ட ஓரணிப்போக்கு இடம்பெறும் போதே, அதனுள் தேசியத்துவங்களையும் சமூக-அடையாளங்களையும் அவைசார்ந்த உடமைகளையும் பேணிடலாம் என்பதும், காலப்போக்கில் அவற்றின் இறைமைகளையும் ஊர்ஜிதம் செய்திடலாம் என்பதும் எமது வாதம்.

ஆகவேதான், இலங்கையில் வறண்ட பிரதேசத்திற்குரிய ஒரு பொருளாதாரத் திட்டமும், அதற்கேற்ற போருளாதார-முன்னேற்றத் திட்டமும் வேண்டும் என்கிறோம்.

இவற்றினை இந்த ஜனாதிபதித் தேர்தலும் அதன் வேட்பாளர்களும் விரும்பினால்கூட தர முடியாதவை என்பதையும் நாம் அறிவோம். ஏனெனில், அவர்களுக்கு அதற்கான சமூக-பொருளாதாரச் சிந்தையோ, தொலைநோக்கோ, அதற்கான ஞானமோ இல்லை என்பது பட்டவாரத்தனம்.

இல்லாவிடில் ‘சுதந்திரம்’ பெற்ற 60 ஆண்டுகளில் 40 வருடங்களை உள்நாட்டுப் போர்களில் களித்திருக்கமாட்டார், தமது வங்கிச் சேகரிப்பை பல்லாயிர மடங்காக மாற்றி இருக்க மாட்டார். 50 வருடங்களின் பின்னர் இன்னுமொரு தடவை, இராணுவம் அரசைக் கைப்பற்றப் போகிறது எனக் கூக்குரல் போடமாட்டார்.

ஆனால், இவை அனைத்தையும்விட, இவர்களோ இவர்கள் நடத்தும் அரசாங்களோ சுதந்திரமாக அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையை இழந்துவிட்டமையே அதற்கு முக்கிய காரணமாகும் என்கிறோம்.

புலிகளை அழிப்பதற்கு பேரம் பேசியதில் தமது நாட்டின் இறைமைகளை அடகு வைத்தார்கள், நாட்டின் சுய இயல்பின் பெரும் பகுதியை இழந்தனர்.

புலிகளை தோற்கடிப்பது என்ற பேரில் தமிழர்களை அழித்தமையால் மனிதாபிமானத்தையும் தன்-ஞானத்தையும் இழந்தனர், அதனாலும் சுய இயல்பு அற்றவராகினர், இனிமேல் வெளியார் அழுத்தங்களிலேயே முடிவுகள் கொள்பவருமாகினர்.

இலங்கையின் சமுதாய அணிகளை (civil society) எல்லாம் ஒழித்து எஞ்சியவற்றை அரசாங்கத்தை ஆழும் குடும்பங்களின் கைக்கூலிகளாக இராணுவமயப்படுத்தி விட்டதால், சமூக-நீதி அரச-நீதி என்பவை அடியொட்ட அற்றுப் போய், ஆழுமை என்பதும் அரசின் இறைமை என்பதும் தொடர்பற்றவை என்றாக்கினர்.

பொருளாதார ரீதியில் மற்றைய அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் வட்டிக்-கடன் வாங்கிச் ‘சீவனம்’ செய்யும் சிறீ லங்கா தனது எந்தப் பிரதேசத்தையும் பொருளாதாரத்தில் வளர்த்திடும் சுய-வக்கற்றது. ஏன், 2001 இன் பின்னர் கொழும்பிலும் அதனைச் சுற்றியும் இடம்பெற்ற மூலதனத்தில் 40% மேலான பங்கு வெளிநாட்டுத் தமிழர்களது என புள்ளி விபரங்கள் சொல்வதில் பல உள்ளார்த்தங்கள் உண்டு.

ஆகவேதான் அரசும், அதிகார வர்க்கங்களும் கூட அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவை ஆகிவிட்டன எனலாம்.

இவ்வாறு, அரசிடமோ அரசாங்கத்திடமோ உண்மையான அதிகாரம் இல்லாத நிலையையே தூர்ந்துபோன-அரசு (failed state) என வர்ணிக்கிறோம்.

எனவேதான், இத்தேர்தல் வெளியாருக்கான காட்சியே அன்றி இலங்கைவாழ் மக்களது முடிவில் தங்கியவை அல்ல என்கிறோம். இவற்றினால் ஏற்படப்போகும் ஏதாவது விளைவுகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் கருதுகிறோம்.

சர்வதேசிய நிர்வாகிகளுக்கு புலிகளை அழிப்பதற்கான முடிவை எடுப்பதற்கும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 15-20 வருடங்கள் எடுத்தன என்றால், சிறீ லங்காவை தம்வழி கொண்டுவர சிலகாலம் எடுக்கும் என்பதை புரியாதவர்கள் அல்லர் அவர்கள். அதற்கு அரசியற் குடுப்பங்களது அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்பதையும் பல புதிய ஜனாதிபதிகளை உருவாக்கவும் வேண்டும் என்பதையும் தெரிந்தவர்கள் அவர்கள்.

எனவே, தேர்தலில் நாமும் ஏதாவது சொல்லிட வேண்டும் என்ற அவாவோ, அறிவிலாமையால் எழும் செருக்கோ, எம்மிடம் இல்லை.

தமிழ் பேசும் மக்களும், அவர்கள் போலவே அதிகாரமயப்படுத்தப்படாத சிங்கள மக்களும், இந்நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்வாரேயாகின், குறைந்தபட்சம் தமது ‘அரசியற்-தலைவர்கள்’ போலாகாது, தத்தமது சுயமரியாதைகளையாவது காப்பாற்றியவராக எஞ்சுவர்.

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்

12 மார்கழி 2009
Academic Secretary- ASATiC
E-mail: academic.secretary@gmail.com

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி – ஜே.வி.பி கூட்டு

dew.jpgஇலங்கை யின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. – ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை மாற கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் வேண்டும் – ஜனாதிபதி

mahinda0.jpgஆசியாவின் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் நமது கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையானது கடல், வான் மற்றும் வர்த்தகத் துறை கேந்திர நிலையமாக மாறிவருகின்ற போதும் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினரை விஞ்ஞான உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் வெற்றிபெறக் கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு கல்வித் துறையில் சகல அதிகாரிகளுக்குமுரியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கல்வித்துறை நிர்வாகச் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிப தியைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று முன்தினமிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும் நாடு இது. அந்த ஜனநாயகத்தை நாம் தொடர்ந் தும் பாதுகாப்பது அவசியம். ஜனநாயகத்தை உதாசீனப்படுத்திய காலகட்டமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம்.

சமாதான உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சித்த யுகமொன்று இருந்தது. இது போன்ற செயல்கள் ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாது. பட்டலந்தை வதை முகாம் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. எனினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஆரம்பித்த போராட்டத்தின் பலனை இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

இந்நாட்டின் சகல மக்களினதும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதாலேயே வடக்கு மக்களும் தமக்கு விருப்பமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தீர்மானித்தோம். இதன் மூலம் நாட்டின் சகல மக்களும் சமமாக ஜனநாயக உரிமையை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்.

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. எனினும் அவர்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவன் என்ற வகையில் அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். நான் ஒரு பகுதியினருக்கு தலைவனாக இருப்பதில் பயனில்லை.

அதனால் தான் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன். எனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்களாக உள்ள போதும் அவர்களுக்கு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலைக் கொண்டு வந்தோம்.

அம்மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுள்ளோம். மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. தற்போது நிவாரணக் கிராமங்களில் 94,000 பேரே உள்ளனர். தினமும் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தவறு என சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் இதனை நான் தவறென்று கருதவில்லை. மக்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரு வெள்ளம்; 52,000 குடும்பங்கள் இடம்பெயர்வு; இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம்; ஒருவர் பலி

front.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ. எஸ். எம். சியாத் தெரிவித்தார்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் 200 குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனையில் 7565 குடும்பங்களும் காரைதீவில் 2595 குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566 குடும்பங்களும் நிந்தவூரில் 7000 குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842 குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009 குடும்பங்களும் திருக்கோவில் 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இம்மாவட்டத்தில் மழையின் வேகம் சற்றுத் தணிந்துள்ளது. ஆயினும் வானம், மப்பும், மந்தாரமுமாகவே இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்முனை- கிட்டங்கி வீதி, காரைதீவு – அம்பாறை வீதி என்பனவும் சம்மாந்துறை – சவளக்கடை வீதி என்பனவும் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளன. கல்முனை – கிட்டங்கி வீதியில் கிட்டங்கி தாம்போதியில் நான்கு அடி வெள்ளமும், காரைதீவு – அம்பாறை வீதியில் மாவடிப்பள்ளி பாலத்திற்கு மேலால் மூன்றடி வெள்ளமும் சம்மாந்துறை – சவளக் கடை வீதியில் வழுக்காமடு எனுமிடத்தில் இரண்டடி வெள்ளமும் பாய்கின்றது.

இவ்வெள்ள நிலைமை காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரணதர பரீட்சைக் கடமைக்கு செல்வோரும் பரீட்சை எழுத செல்வோரும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது. இன்னும் சிலர் பரீட்சை எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்.

சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 6500 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல்களிலிருந்த வரம்புகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடாக காட்சி தருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இங்குள்ள நீர்ப்பாசனக் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. இவை உடைப்பெடுப்பதை தடுப்பதற்காக அவற்றின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு நீர்வெளியே திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோகனராஜா தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் இரு கதவுகள் திறக்கப்பட்டு 4 1/2 அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. உறுகாமம் குளத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு 6 அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. அதே போன்று 31 அடி உயர நவகிரி குளமும் நிரம்பி வழிவதால் அதன் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. வாகனேரி குளமும் தும்பங்கேணி குளமும் நீர் நிரம்பியுள்ளது. இந்த தகவல்களையும் அவர் கூறினார்.

front.jpg

முகாம்களிலிருந்து விடுதலையாவோர் புதிய நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் இல்லை ஐ.நா.வின் ஹோம்ஸ் கூறுகிறார்.

lankaidsleavingcamp.jpgவவுனியா அகதி முகாம்களிலிருந்து மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் உண்மையில் புதிய முகாம்களுக்கு நகர்த்தப்படுகின்றனர் என்பது தொடர்பாக ஆதாரம் இல்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரத்திற்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார். ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில்; தான் அறிந்த வரை மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் முதலில் இடைத்தங்கல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பின்னர் அங்கிருந்து துரிதமாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

மெனிக்பாம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஏனைய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அத்துடன் காணாமல் போதல் தொடர்பாகவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹோம்ஸ், அவர்களை காணாமல் போனவர்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் முன்னர் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் தற்போதும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களின் தொகை 10 ஆயிரம் அல்லது 11 ஆயிரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆட்சியில் ஆர்வம் இருந்தால் எப்போதோ அதனைச் செய்திருப்பேன். “நான் ஒழுக்கமுள்ள ஜெனரல் – சரத்

pr-can.jpgயுத்த வெற்றியை கவசமாக வைத்துக்கொண்டு எவராவது தனது குடும்ப செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்தாலோ அல்லது சர்வாதிகாரத்தனத்தில் ஒட்டிக்கொண்டு நின்றாலோ சமாதானம் ஏற்படும் என்று கூறமுடியாது என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அசோசியேற்றட் பிரஸுக்கு வியாழக்கிழமை வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள பொன்சேகா, ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதிக்குள்ள அதிகளவான அதிகாரங்களை குறைத்து பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கு வலுவூட்டுவாரென கூறியுள்ளார். ஆனால், பொன்சேகா அதிகளவு அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் இட்டுச் செல்லக்கூடும் என்று ஜனாதிபதி

ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பொன்சேகா நிராகரித்திருக்கிறார். இராணுவ ஆட்சியில் ஆர்வமாக இருந்திருந்தால் நீண்டகாலத்துக்கு முன்பே அதனை செய்திருப்பேன். யுத்தத்தில் வெற்றியடைவதற்கு முன்பே அதனை செய்திருப்பேன். ஒழுக்கமுடைய இராணுவத்துக்கு தலைமை தாங்கிய நான் ஒரு ஒழுக்கமுள்ள ஜெனரல் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கத்தின் தலைவர்களுக்காக இயங்கும் குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறும் ஜெனரல் போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார்.

இராணுவத்தைப் பொறுத்தவரை எந்தவொரு போர் குற்றங்களும் இழைக்கப்பட்டதாக எனக்குத் தெரியாது. படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் கண்காணித்தேன். பொது மக்களின் பாதுகாப்பை நாம் புறக்கணித்திருந்தால் காப்பாற்றப்பட்ட 3 இலட்சம் பேரில் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று பொன்சேகா கூறியுள்ளார். தனது முன்னைய பதவியில் தமிழர்களுக்கு நிதி வழங்கியிருந்ததாக கூறுகிறார். நான் பயங்கரவாதத்தை அழித்தேன், பாதிக்கப்பட்ட மக்களை விடுவித்தேன் என்று கூறும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் சம உரிமை சமநீதியை உறுதிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத தன்மையையே அவர் வெளிப்படுத்துகிறார். இந்த விவகாரத்தை எதிர்கால பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் சம்பள நிலுவையை உடன் வழங்க அமைச்சு நடவடிக்கை – ரூ. 400 மில்லியன் மாகாணங்களுக்கு அனுப்பி வைப்பு

sri-lanka-teacher.jpgஆசிரி யர்களுக்கான நிலுவைச் சம்பளத்தைத் தாமதமின்றி வழங்கு வதற்குக்கல்வயமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கென 400 மில்லியன் ரூபாவை சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கு வழங்கியுள்ளதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாகாணங்களுக்குரிய நிலுவைச் சம்பளம் உரிய மாகாணக் கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அம்மாகாணங்களிலிருந்து கோரப்பட்டிருந்த தொகை முழுமையாக அனுப்பப்பட்டுள்ள தெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரணில் இன்று யாழ். விஜயம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார். 2005 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அவரது யாழ். விஜயம் இதுவே முதற்தடவையாகும். யாழ்.மாநகர சபைத் தேர்தலின் போது அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அதனைத் தவிர்த்துக் கொண்டார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டகையோடு விரைவில் யாழ். விஜயத்தை மேற்கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் செல்கிறார். இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

அதையடுத்து நல்லை ஆதினம் உட்பட இந்து சமயத் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இச் சந்திப்பையடுத்து யாழ். வர்த்தக சங்கக் குழுவினருடனான சந்திப்பு இடம்பெற விருக்கின்றது. இச் சந்திப்பில் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் பங்கேற்க விருக்கின்றனர். இக் கலந்துரையாடலின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்வார். பல்கலைக்கழகத்தில் சந்திப்பை முடித்துக் கொண்டதன் பின்னர் யாழ். ஆயர் இல்லத்துக்குச் சென்று ஆயர் தோமஸ் சௌந்திர நாயகத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே யாழ். நாகவிகாரைக்குச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு அங்கு இடம்பெறும் பௌத்த சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளும்.

இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ரணில் விக்கிரம சிங்க உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சி நிரலுக்கப்பால் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் எனவும் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகை அலுவலகங்களுக்கு அவர் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் யாழ். விஜயம் தொடர்பான நிகழ்ச்சிநிரல் மற்றும் ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரான சட்டத்தரணி டி.எம்.சுவாமிநாதன் மேற்கொள்கிறார்.