January

January

உலகின் தலைநகரில் தாயக உறவுகளுக்காக தமிழ் மக்களின் எழுச்சி : த ஜெயபாலன்

Protest_UK_Jan31தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் தங்கள் உறவுகள் மீதான அன்பையும் வேதனையையும் சர்வதேசத்திற்கு எடுத்தக் காட்டியது. பெரும்தொகையான இளவயதினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் வன்னி மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற கோசங்கள் உரத்து ஒலித்தன. மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 50000 வரையானோர் கலந்து கொண்டதாக ஸ்கொட்லன்யாட் தெரிவித்து உள்ளது. கலந்த கொண்டவர்களின் தொகை இதனிலும் இரட்டிப்பானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிராதவர்கள் விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தைக் கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்களும் யுத்தத்தின் அவலத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் வன்னியில் யுத்தத்திற்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்படப் போகும் மனித அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

லண்டனில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சி இதுவென முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் கா பாலமுருகன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு புலிகளுடன் எவ்வித உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை எப்போதும் தீர்க்கக் கூடியவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட அவர் ஆனால் இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை எதேச்சையாக செயற்படவும் தமிழ் மக்களை அழிக்கவும் அனுமதிக்க முடியாது என்றார்.

இந்த ஊர்வலத்திற்கு வந்த பெரும்தொகையான மக்களால் லண்டன் நிலக்கீழ் புகையிரதம் ஊர்வலம் நடந்த பகுதிகளில் இருந்த புகையிரத நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டி இருந்தது. வீதிகள் சில பொலிசாரால் மூடப்பட்ட போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. மற்றும்படி ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கோசங்களை எழுப்பி பலருக்கும் நாவறண்டு தொண்டைகட்டியதாக முதற்தடவையா ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்வலக்ஸ்மி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு இந்த ஊர்வலத்தை யார் நடத்தினார்கள் என்பது தெரியாது ஆனால் நான் கேட்கின்ற செய்திகள் தன்னை குடைவதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்கை நியூஸிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே செய்திச் சேவையில் கருத்துத் தெரிவித்த லிபிரல் டெமொகிரட் பா உ சைமன் ஹியூச் இலங்கை அரசாங்கம் சர்வதேச ஊடகங்களை மனிதாபிமான ஸ்தாபனங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்காததைக் கண்டித்தார். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சைம்ன் ஹியூச்சின் அதே கருத்தை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்ட நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் தனது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய அவர் தங்களுடைய தாயக உறவுகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள்  லண்டன் நகரில் கூடி குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்றது போன்று விடுதலைப் புலிகளின் கொடியோ அல்லது அதன் தலைவர் வே பிரபாகரனது உருவப்படமோ ஊர்வலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே இது தொடர்பாக பொலிகார் அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் ஆங்காங்கே எங்களது தலைவர் வே பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் போன்ற கொசங்களும் இடம்பெற்றது என்று தெரிவித்த புலிகளின் தீவிர ஆதரவாளரான ஆர் நந்தகுமார் ஆனால் வன்னி மக்கள் மீது இன அழிப்பை நிறுத்து என்பதே பிரதான கோசமாக அமைந்ததாக தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இந்த மக்கள் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுடனேயே தாங்கள் வீடு திரும்பியதாகக் குறிப்பிட்ட முன்னாள் புலிகளின் உறுப்பினர் எஸ் ரவிக்குமார் புலம்பெயர்ந்த நாங்கள் எங்களால் முடிந்ததை எமது உறவுகளுக்குச் செய்ய வேண்டும் என்றும் அவர்களை நாங்கள் கைவிட்டுவிடவில்லை என்பதையும் இங்கு வந்து உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

ஊர்வலத்தின் முடிவில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் ஆகியொரும் உரையாற்றினர். இவர்களின் உரையில் இந்த யுத்தத்தை நிறுத்த இந்தியாவின் தலையீட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழர்களுக்காக மற்றுமொருவர் தீக்குளித்ததாக பரபரப்பு : ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார் – போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் நேற்று இரவு பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ரவியின் மகன் பிரபாகரனுடன் வக்கீல்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துத்தான் ரவி தீக்குளித்தார். ஆனால் இதை போலீஸார் மறைக்க முயலுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தினர். பிரபாகரனும், தனது தந்தை ரவி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்தார் என்று தெரிவித்தார்.

ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர். ரவி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் வீட்டில் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறினர்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்

muthukumar-111.jpg
தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசை வாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக் கொத்தளத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் ஊர்வலப் பாதை நெடுகிலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெருமளவில மக்கள் அணிவகுத்து வந்ததால் மிக மிக மெதுவாக இறுதி ஊர்வலம் நகர்ந்தது.மூலக்கொத்தளத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதி ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வழமைபோல் நேற்றுக் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமானது.

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு நேற்றுக் காலை வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

உண்ணாவிரதப் போராட்டம் இன்றிலிருந்து விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை யாழ்.குருநகர் புதுமை மாதா ஆலயத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் இவ் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வகுப்புப் புறக்கணிப்பும் ஊழியர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டமும் நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனால், மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வரவின்றி பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடியிருந்தது.

பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் விரிவுரைகள் மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பரீட்சைகள் என்பன நடைபெறாததோடு நிர்வாக வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.

புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.

உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்

இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.

மக்கள் அகப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள்? இலை குலைகளை உண்டா வாழ்வது? குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா? காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.

மக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.

நாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.

யுத்தம் பிரச்சினைக்கு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.

எந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.

சற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா? பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை? நாட்டின் வளங்கள் யாருடயவை? எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா? –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.

நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!

nagesh.jpgநகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.