January

January

தென்னிலங்கையில் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் -அரசு எச்சரிக்கை

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் தலைநகர் கொழும்பிலும் தென்னிலங்கையில் முக்கிய இலக்குகளிலும் எந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாமென எச்சரிக்கை விடுத்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, சுதந்திர தினக் கொண்டாட்ட காலப்பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிட்டியிருப்பதாகவும் தெரிவித்தது. வன்னியில் படு தோல்வியடைந்து விட்ட நிலையில், புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏற்கனவே 16 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாகவும் மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமெனவும் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைமைகளை விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சுதந்திர தினத்தன்றோ, அதற்கு இடைப்பட்ட காலத்திலோ கொழும்பில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் 16 பேர் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். இவர்களில் இருவர் இம்மாத ஆரம்பத்திலேயே பலியாகிவிட்டனர்.மீதமுள்ள 14 பேரும் கொழும்புக்குள்ளேயோ அல்லது தலைநகரை அண்மித்த பகுதிகளிலேயோ பதுங்கியுள்ளனர். எந்த வேளையிலும் கொழும்பில் முக்கிய இலக்குகளை குறிவைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும். அதேசமயம், கொழும்புக்கு வெளியேயும் முக்கிய நிலைகளைத் தாக்க புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் தலைநகரிலும் தெற்கின் முக்கிய பகுதிகளிலும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. கொழும்புக்குள் பிரவேசிக்கும் சகல நுழைவாயில்களிலும் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் உள்வரக்கூடிய சகல வாகனங்களும் பொது மக்களும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவர். அதே சமயம் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள், பயணிகள் சோதனைக்குள்ளாக்கப்படும். பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்ற போதிலும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் பொது மக்கள் இக்காலப் பகுதியில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

புலிகளின் பிரதான கட்டுப்பாட்டு நிலையம் தர்மபுரத்தில் கண்டுபிடிப்பு

_army.jpg
முல்லைத்தீவு, தர்மபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தை பாதுகாப்புப் படையினர் கண்டு பிடித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகள் தங்களது சகல நடவடிக்கைகளுக்கும் இதனையே பிரதான கட்டுப்பாட்டு நிலையமாகப் பயன் படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் நேற்று நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது,
முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புலிகளின் முக்கிய பிரதேசமாக விளங்கிய தர்மபுரத்தை கைப்பற்றினர். இந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 80 x 40 அடி அளவிலான பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறைக்குள் சகல வசதிகளும் காணப்படுகின்றன.

இலங்கையின் வரைபடங்களுடன் ஒவ்வொரு பிரதேசத்தை தெளிவாக சித்தரிக்கும் வரைபடங்களும் தனித்தனியாக ஒட்டப்பட்டிருந்தன. இராணுவத் தலைமையகம் உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள இராணுவ மற்றும் முப்படைகளின் முகாம்கள், படைப் பிரிவுகள், படையணிகளின் தலைமையகங்கள் சுட்டிக்காட்டப்பட்ட வரைபடங்கள், புலிகளின் முக்கிய பிரதேசங்கள், முகாம்கள், இராணுவத்தினதும் புலிகளினதும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை காண்பிக்கும் வரைபடங்களும் இந்த கட்டுப்பாட்டு அறை முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அருகில் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பிரதான விரிவுரை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செல்வதற்கு மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் வழிஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரத்தை புலிகளிடமிருந்த விடுவித்த படையினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டு தயாரிக்கும் பிரதேசத்தையும் மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர். இந்த முகாம்களுக்கு அண்மித்த பிரதேசத்திலேயே இந்த கட்டுப்பாட்டு நிலையமும் அமைந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் சிலாவத்தைக்கு வட கிழக்கு கரையோரப் பிரதேசத்திலும் 58வது படைப் பிரிவினர் ஏ-34 வீதிக்கு வடக்கே புளியன்பொக்கரை ஏ-34 வீதிக்கு தெற்காக விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இராமநாதபுரத்திற்கு கிழக்கிலும், விசுவமடுவுக்கு மேற்கிலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்பு தெற்கிலும் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குளம் பிரதேசத்திலும் மூன்றாவது செயலணியினர் கல்மடு குளம், உடையார் கட்டுக்குளம் பகுதிகளிலும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுண்டிக்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் தற்பொழுது அதன் தென் பகுதி ஊடாக முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.          

61 ஆவது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

lanka_flag.jpgஇலங்கையின்
61 ஆவது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுதந்திரதின ஏற்பாடுகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பீ.திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.

61 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும் சமயவைபவங்களும், வழிபாட்டு நிகழ்வுகளையும் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கும் அமைச்சு சுற்று நிருபங்களை அனுப்பிவைத்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 3 ஆம் திகதியும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடிபறக்கவிடப்பட வேண்டுமெனவும் கட்டிடங்களில் மின் அலங்காரங்களைச் செய்யுமாறும் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வார இறுதியில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ரூ. 8 கோடி பெறுமதியான சட்ட விரோத சிகரட்டுகள்!- சுங்கப் பிரிவினரிடம் அகப்பட்டன

800-mili.jpgதிருட்டுத் தனமாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள எட்டு கோடி ரூபா பெறுமதியான 88 இலட்சம் சிகரெட்டுகள் அழிக்கப்படும் என சுங்க அத்தியட்சகர் ஏ. டி. வளவகே தெரிவித்தார்.

40 அடி நீளமான கொள்கலனில் போலி ஆவணங்களுடன் வந்த இச் சிகரெட்டுகளை வரவழைத்தவர் யார் எனத் தெரியவில்லை எனவும் இவர் மேலும் தெரிவித்தார். இக் கொள்கலனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்லீஃப், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ஜெர்மனிய தயாரிப்பான கோல்ட் சீல் ஆகிய சிகரெட் பக்கட்டுகள் காணப்பட்டன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிலோன் டுபாக்கோ நிறுவன அதிகாரி ஒருவர், சமீபத்தில் 206 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் துபாய்க்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப் படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஒரு ரூபா 20 சதம் பெறுமதியான ஒவ்வொரு சிகரெட்டும் 16 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட விலைக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் இவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளை அழிக்க முடியுமென கூறிய எமக்கு வாக்களியுங்கள்; ஜே.வி.பி.

wijitha_herath_jvp.jpgசுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பிரிவினையைக் கோரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் பிரிவினைக்கே வழிவகுக்குமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்க பாடுபடும் தமக்கே வாக்குகளை அளிக்குமாறு மக்களை அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டில் பிரிவினையை கோருகின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதாவது, சுதந்திரக் கட்சி மலையகத்துக்கு தனி அலகினை கோருகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் யோகராஜன் மலையகத்துக்குத் தனி அலகு கோரியதை நாம் காணலாம். அதேபோல மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் கடந்த காலங்களில் பிரபாகரனுடன் கதைத்து வந்ததுடன் ஈழம் குறித்தும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இவர்கள் கோரும் தனி அலகுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வேண்டுமென கோருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைக்கு வாக்களிப்பது பிரிவினைக்கு அளிக்கும் வாக்காக அமையும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியும் முஸ்லிம்களுக்கு தனி அலகு கேட்கின்ற முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டமைத்துள்ளது. இந்நிலையில் பிரிவினையைக் கோருகின்ற கட்சிகளுடன் கூட்டமைக்காது தேர்தலில் போட்டியிடுகின்ற, பிரிவினைக்கு எதிராக செயற்படுகின்ற ஒரேயொரு கட்சியான ஜே.வி.பி.க்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி. நாட்டில் பிரிவினைக்கு எதிராக செயற்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்று அதனை இல்லாமல் செய்தோம். அதுபோல் கடல்கோள் நிவாரண கட்டமைப்பு தொடர்பில் புலிகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அதனை இடைநிறுத்தினோம். 2002 இல் புலிகளுடன் செய்துகொண்ட பொய்யான சமாதானத்தை நாம் எடுத்துரைத்ததுடன் அதனை இல்லாமல் செய்தோம். புலிகளை அழிக்க முடியாதது பொய். அதனை செய்ய முடியும் எனக் கூறி அதற்காக முழு ஆதரவினையும் அளித்தோம். இவ்வாறு நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி புதிய ஐக்கிய இலங்கையை உருவாக்கும் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதற்கு தேசப்பற்றாளர்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

வாஷிங்டனில் இன்று தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் பேரணி

file-photo.jpgஇலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று மாலை பேரணி நடத்தப்படவுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தை, மகாத்மா காந்தியடிகளின் வழியில் இந்திய அரசு அணுக வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தப்படவுள்ளது. அமெரிக்கா முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல உடை தரித்து, காலித் தட்டுடன் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவின் நண்பர்கள், தொப்புள் கொடி உறவுடையவர்கள். அவர்களைப் படுகொலை செய்து வரும் சம்பவங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு எவ்வித உதவியையும் இந்தியா தரக் கூடாது. தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் வலியுறுத்தவுள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்துமாறு இந்தியா, இலங்கையை கட்டாயப்படுத்த வேண்டும். இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமைதி திரும்பும். சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளது.

சட்டக்கல்லூரி அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

lawcollage.gifஇலங்கை சட்டக்கல்லூரி 2010 ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 2000 ஆம் ஆண்டும் அதற்கு பின்னரும் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த (பழைய பாடத்திட்டமாயின் 4 பாடங்கள்) சட்ட கல்விப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுடன் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியிலும் தமிழ் அல்லது சிங்கள மொழியிலும் திறமைச் சித்தி பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரி விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதிவரை அலுவலக நேரத்தில் சட்டக்கல்லூரியில் பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அத் திகதிக்கு முன்னர் அதிபர், இலங்கை சட்டக் கல்லூரி, கொழும்பு12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரிகள் 2009 ஜுன் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள அனுமதிப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் 21 நாட்களில் 2959 பேர் வருகை

wanni.jpgமுல்லை தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து கடந்த 21 நாட்களுக்குள் 2959 பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில் :- இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 21ம் திகதி வரையே 2959 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் செய்து கொடுத்துள்ளனர்.

சுண்டிக்குளம் பிரதேசத்தை நோக்கி 17 பொதுமக்களும், கொக்குத் தொடுவாய் பிரதேசத்தை நோக்கி 17 சிவிலியன்களும் வருகைத் தந்துள்ளனர். இவர்கள் படகுகள் மூலம் வருகை தந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

நவம்பரின் பின் 5,600 கோடி ரூபா புதிய நாணயத்தாள் வெளியீடு

parliment_inside.jpgகடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை (ஜனவரி வரை) அரசாங்கம் 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதின்கிழமை நடைபெற்ற நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே கபீர் ஹாசிம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; புதிய நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்நிவாட் கப்ராலுக்கு நாட்டின் ஒரு நெருக்கடியைப் போக்கிக் கொள்ள முடியாது. வியட்நாம் யுத்த களத்தில் ஏற்பட்ட செலவுகளினால் அமெரிக்காவும் நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்ததன் விளைவாக அங்கு பெரும் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு கையிருப்பிலிருந்த தங்கங்களை விற்கவேண்டி ஏற்பட்டது. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை காண்பதற்கில்லை. எமது ஆட்சிக் காலத்தில் நாம் 29.9 சதவீதமாக பணவீக்கத்தை கொண்டு செல்லவில்லை. அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டி அவர்களின் வயிற்றில் அடிக்கவில்லை.

அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 56 பில்லியன் (5,600 கோடி) ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் அரசாங்கம் தொடர்ந்தும் நாணயத்தாள்களை அச்சிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை அரசாங்கம் திறைசேரி உண்டியல்களிலிருந்தும் 148 பில்லியன் (14,800 கோடி) ரூபாவைப் பெற்றுள்ளது. இதுவும் உரிய முறையில் பெறப்படவில்லை. அரசாங்கம் கட்டுப்பாடின்றி புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வருவதால் இலங்கையின் நாணயப் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசாங்கத்தின் தவறான நிதி கையாளுகையினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது என்றார்.

17 ஆவது திருத்த அமுலாக்கம் முழுமையான பொறுப்பு எனக்கு தரப்படவில்லை – சபாநாயகர் லொக்கு பண்டார

speaker.jpgஅரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முழுப் பொறுப்பும் தனக்கு வழங்கப்படவில்லையென சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார பாராளுமன்றில் கூறினார். 17 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.கூறுகையில், அரசியல் யாப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முன்னேற்றம் என்னவென கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், 17 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்படவில்லை. அப்படியானதொரு பொறுப்பு 17 ஆவது திருத்தச் சட்டத்தில் இல்லை. இது தொடர்பான பொறுப்பு என்னிடம் தான் உள்ளதெனக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த வேண்டாம். தேவையானால் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பாக நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு உங்களுக்கு தெரிவிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விளக்கம் தேவையானால் நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னை சந்தியுங்கள். நான் தெளிவுபடுத்த தயாராகவுள்ளேன் என்றார்.