January

January

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

tna.jpgவன்னியில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  வடக்கு, கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;

வன்னி நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாய மடைந்தவர்களுக்குக் கூட போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் கடமைகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை கூட மரணச் சடங்குகள் செய்ய முடியாமல் தொடர்ச்சியான விமான, ஷெல் தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூர்ந்தும் தாக்குதலைக் கண்டித்தும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பக் கோரியும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஷெல் வீச்சுகளை நிறுத்தக் கோரியும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தமிழர் தாயம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தினத்தில் பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாயகத்தில் உள்ளவர்கள் ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.  கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.

வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.  போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.

தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை: ராஜபக்சே உறுதியளித்தாக பிரணாப் முகர்ஜி தகவல்

prathaf-mahi.jpgவிடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியை மதித்து நடப்பதாகவும், ராஜபக்சே தெரிவித்ததாக பிரணாப் கூறியுள்ளார்.  அவசர பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக பிரணாப் கூறினார்.

அதற்கு ராஜபக்சே போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாக பிரணாப் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கும் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொக்கலகாமா மற்றும் சில அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதற்கிடையே வன்னிப்பகுதியில் போரில் காயமடைந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்களை காப்பாற்ற உதவ தயார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படலாம்

lanka-map-02.jpgமேல், ஊவா, தென் மாகாண சபைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம். இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் ஒபாமா.

obama.jpgஅமெரிக் காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது.இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா. மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன்.இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதை புரியவைப்பதே எனது பணி.  பரஸ்பர நலன்,மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.இதை அரேபிய,இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது.இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. பதவியில் அமர்ந்து 100-நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன். அல் காய்தா தலைவர்களான ஒசாமா பின்லேடன்,ஜவாஹிரி ஆகியோரின் கருத்துகள், யோசனைகளை யாரும் இப்போது செவிகொடுத்து கேட்பது இல்லை. எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம்.

பின்லேடன்,ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது.முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன்.பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.

பிரபாகரன் தொடர்பான புலனாய்வுத் தகவலை இந்தியாவிடம் பெற்றுக்கொள்ள மலேசியா முயற்சி

Pirabaharan_Eelamவிடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் இடங்கள் பற்றிய புலனாய்வுத் தகவலை இந்தியா மற்றும் இன்ரர்போலிடமிருந்து பெற்றுக்கொள்ள மலேசியா விரும்புகின்றது. இது தொடர்பாக மலேசிய பொலிஸ் மா அதிபர் மூஸா ஹுசெய்னிடமிருந்து உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லையாயினும் இடம்பெறும் விசாரணைகள் மலேசியா இந்தப் பாதையில் செல்வதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று “இந்து” பத்திரிகை  திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் இவ் விசாரணைகள், பிரபாகரன் ஏற்கெனவே வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார் என ஊடகங்கள் வெளியிட்ட ஊகங்களை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்று வருகின்றன. இவ் ஊகங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புலிகள் அமைப்புடன் தொடர்புடையதென கருதி, ஒரு வருடத்தின் முன்னர் தடை செய்யப்பட்ட “இந்துராவ்’ என்ற மலேசிய, அமைப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

redcrose2801.jpgவன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின

முல்லைத்தீவில் உடையார்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாள் முழுவதும் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள 300க்கும் மேற்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவர நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை. படுகாயமடைந்தவர்களை வவுனியாவுக்கு கொண்டுவர புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கி நேற்றுக் காலை17 அம்புலன்ஸ்களுடனும் ஐந்து பஸ்களுடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) சென்ற போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் மோதல்கள் நடைபெற்று வருவதால் இவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லை.

திங்கட்கிழமை காலை முதல் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் உடையார்கட்டு முதல் தேவிபுரம் வரை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதாக “புதினம்’ மற்றும் “தமிழ் நெற்’ இணையத்தளங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் ஆபத்தான நிலையிலிருப்பதால் அவர்களுக்கு மேலதிக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்களை வவுனியாவுக்கும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐ.சி.ஆர்.சி.யிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து வவுனியா ஆஸ்பத்திரியில் நான்கு வார்ட்கள் ஒதுக்கப்பட்டதுடன் இரு சத்திரசிகிச்சை பிரிவுகளும் முழு அளவில் தயார்படுத்தப்பட்டதுடன் புதுக்குடியிருப்புக்குச் சென்று, காயமடைந்த 300பேரை வவுனியாவுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மன்னார் ஆஸ்பத்திரியிலிருந்து அவசரமாக ஐந்து அம்புலன்ஸ்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 17 அம்புலன்ஸ்களும் 5 பஸ்களும் ஐ.சி.ஆர்.சி.யின் வழித்துணையுடன் நேற்றுக் கலை புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றன.

இவை மாங்குளம் முல்லைத்தீவு வீதியால் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் சமர் நடைபெறுவதால் அவர்களால் தொடர்ந்து பயணம் செல்லமுடியவில்லை. அங்கு நீண்டநேரம் காத்திருந்தும் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து அப்புலன்ஸ்களும் பஸ்களும் நேற்று பிற்பகல் வவுனியாவுக்குத் திருப்பின

வவுனியா மனிக்பாம் முகாமில் 2ம் திகதி பாடசாலை ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ள பொதுமக்களின் பிள்ளைகளுக்கான இரண்டு தற்காலிக பாடசாலைகள் திங்கட்கிழமை முதல் வவுனியா மனிக்பாம் முகாமில் இயங்கவுள்ளன. மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்களுக்கு கல்விகற்கக் கூடிய விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணிகள், பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதுடன் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் அன்றைய தினமே தற்காலிக கொட்டில்களுக்கு வழங்கப்படும் என வவுனியா கல்வி வலய பணிப்பாளர் திருமதி வீ. ரஞ்ஜனி எ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

மனிக்பாம் முகாமில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக தற்காலிக கொட்டில்களில் மேற்படி பாடசாலைகள் இயங்கவுள்ளன.

கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் தற்காலிக பாடசாலைகள் விரைவில் அமைக்கப் பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார். திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகின்றபோதும் முகாமிலுள்ள மாணவர்கள் சீருடையின்றி வர்ண ஆடை யுடனேயே பாடசாலைக்குச் சமுகமளிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் சீருடைத் துணிகளை முகாமுக்குள்ளேயே தைக்கக்கூடியவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு தைத்துக் கொடுக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. முகாமுக்குள் 15 ஆசிரியர்கள் இருக்கின்றபோதும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ள சுமார் 255 ஆசிரியர்களுள் சிலரையும் மனிக்பாம் முகாம் பாடசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மேலும் வன்னியிலிருந்து சுமார் 85,000 மாணவர்களும், 2500 ஆசிரியர்களும் வரவேண்டியுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தரவுகள் தெரிவிக்கின்றன.

எஞ்சிய மாகாண சபைகளுக்கும் புதுவருடத்திற்கு முன் தேர்தல்

susil.jpgவிரைவில் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதலில் இரண்டு மாகாண சபைகளையோ அல்லது மூன்றையும் ஒரே தடவையிலோ கலைக்கப்படலாம். தமிழ்- சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தும் வகையில் இம் மாகாணசபைகள் கலைக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லையெனவும் தேவையேற்படின் விரைவில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் செய்தியாளர் மாநாடென்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் காமினி லொக்கே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம். பி. ஆகியோர் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின் அங்கும் தேர்தல் நடத்தப்படும். எனினும் கிழக்கைப் போன்று ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அப்பகுதியின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பல பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. முதலில் மக்களின் பாதுகாப்பான இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். அதனையடுத்து முதலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலே நடத்தப்படும் அதன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது போன்று வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும். கல்வித்துறையைப் பொறுத்தவரை கிழக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று வடக்கிற்கும் கல்வித்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பாடசாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணனி இயந்திரங்கள் உட்பட பெரும்பாலான வளங்களை புலிகளே உபயோகித்துள்ளனர் என்பதால் வளங்களில் பின்னடைவு காணப்பட்டது. இவையனைத்துமே மீளக்கட்டியெழுப்படும்.

புலிகள் ஆசிரியர்களையும் பலவந்தமாகத் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ள முற்பட்டதையடுத்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை மீள அவர்கள் கற்பித்த பாடசாலைகளுக்கே நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலக சாதனை- சனத் ஜயசுரிய

srilanka-india.jpgஇன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் சனத் ஜயசுரிய சதம் அடித்ததினால் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் கூடிய வயதில் சதம் அடித்தது இவரின் இந்த சாதனையாகும். இவர் சதம் அடிக்கும் போது இவரின் வயது 39 வருடங்களும் 254 நாட்களும் ஆகும். இதற்கு முன் இச்சாதனையை ஏற்படுத்தியவர் ஜெப்ரி பொய்கொட் (இங்கிலாந்து) என்பவராவார். அவர் சதம் அடிக்கையில் அவரது வயது 39வருடங்களும் 51நாட்களும் ஆகும்.  

ஊடக முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

mahi-raja.jpgஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நேற்று தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைப்பதற்கோ, இழுத்தடிப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையவே கிடையாது. அப்படியானதொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் இத்தகைய கேவலமான வேலையை செய்யவேண்டிய தேவையே இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போது அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல முக்கியஸ்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம்.

ரிவிர ஆசிரியர் காமினி விஜயக்கோனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமானது. பதவியிலுள்ள அரசாங்கம் இதற்கு வகை கூறவேண்டுமென்பது உண்மை. அதற்காக எடுத்ததற்கெல்லாம் அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவுடன் தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இது நாட்டில் பாரதூரமான குரோதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அமைதியின்மையொன்றை தோற்றுவிக்கும்.

தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன. தயவுசெய்து தமிழர்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டாமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தமிழ் மக்களுக்கெதிரானதல்ல. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள தமிழ் மக்களை விடுவிப்பதற்கானது. வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். அதாவது, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதனை வலியுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். இத்தகைய பங்களிப்புக்களை தமிழ்ப் பத்திரிகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.