February

February

நடிகர் நாகேஷ் உடல் தகனம்

nagesh.jpgசென்னையில் நேற்று காலமான நடிகர் நாகேஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

நாகேஷின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல், சோ, கே.ஆர்.விஜயா, சச்சு, பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பலர் நாகேஷின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் காலை 10.30 மணியளவில் நாகேஷ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.  இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகிறது – திஸ்ஸ அத்தநாயக்க

மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு டிபென்ட்டர் வாகனங்களில் ஆயுததாரிகள் மாத்தளை பிரதேசத்தில் நடமாடி வருவதை ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,ஆயுதங்களுடன் இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சோதனைச் சாவடிகளில் ஆள் அடையாளத்தைக் காட்டி விட்டு அச்சமின்றிச் செல்கின்றனர் என்றார்.

தம்புள்ள வீதியில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் வீட்டுக்கு முன்னாள் பொலிஸ் அனுமதியின்றி வீதித் தடைகள் போடப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனங்களில் செல்வோர் அடையாளம் காணப்படுகின்றனர்.  மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிந்து கொண்ட பின் அதனைத் தடுப்பதற்காக இவ்வாறு அரசு நடந்து கொள்கின்றது.

மகிந்த சிந்தனையை மத்திய மாகாண மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பதையே தேர்தல் நிலைமைகள் வெளிப்படுத்துகின்றன.  வடக்கே யுத்தத்தில் 98 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மீதி 2 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் அரசு கூறி வருகிறது. கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இயல்பு நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மீதி 2 சதவீத வெற்றியை அரசு பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு வருகின்ற போதும் தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 48 மணிநேரக்காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஆழ ஊடுருவும் படை ஊடுருவுமா? – ஏகாந்தி

sl_navy.jpgஇலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் மனிதாபிமான நெருக்கடிமிக்க ஒரு கட்டத்தில் தற்போதைய யுத்த நிலை காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாவிலாறில் ஆரம்பித்த எதிர்நடவடிக்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இன்று விடுதலைப்புலிகளின் பலத்தை சுமார் 35 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவமிக்க பல இடங்களை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை கைப்பற்றுவதில் அரச படையினர் முழுமூச்சாக இருப்பதாக தெரிகின்றது.

இங்கு அவதானிக்கக்கூடிய முக்கிய விடயம் விடுதலைப் புலிதரப்பில் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லை சுருங்கியுள்ளதால் இப்பிரதேசத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை என்னவாகும் என்பதாகும்.

வன்னி நிலப்பரப்பில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கைப் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான கணிப்பீடு வெளியிடப்படவில்லை. பொதுவாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இப்பிரதேசத்தினுள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (31) அமைச்சர் மஹிந்த சமரசிங்க முல்லைத்தீவுப் பிரதேசத்தினுள் 1 இலட்சத்து 20ஆயிரம் மக்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முல்லைத்தீவுப் பிரதேசத்துக்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வன்னி நிலப்பரப்பில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசாங்கம் வழங்கிய நாற்பத்தெட்டு மணித்தியால கால அவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது.

palitha_koahana.jpg48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தகவல் தெரிவிக்கையில்  கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக  தெரிவித்தார். அதேநேரம்,  பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலிருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவிலியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர். இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்துள்ள நிலையில் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்குமிடத்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியாகிவிக் கூடிய நிலையுள்ளதுடன்,  ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விஸ்வமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யுத்தம் நடைபெறுகின்றது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் A35 மையமாக வைத்தே நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது. 15 கிலோமீற்றர் X 15 கிலோமீற்றர் பரப்பளவில் புலிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இப்பகுதியினுள்ளே பொதுமக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தி வருவதாகவும் அரச தரப்பு அறிவிக்கின்றது.

தற்போது புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்துவிடவே படையினர் முயல்கின்றனர். இந்த நகரையும் கைப்பற்றி விட்டால் A35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியும் என கருதுகின்றனர். அத்துடன்,  புலிகளின் பகுதியையும் மிகவும் குறுகளாக்கி A35 வீதிக்கு வடக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடக்கிவிட வேண்டுமென கருதுவதால் எட்டுத் திக்கிலிருந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிவேக டோறா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகள் என முல்லைத் தீவு முதல் வட மேற்கே சாலை வரையான கடற்பரப்பு பலத்த பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை U வடிவில் சுற்றி வலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Protest_UK_Jan31எனவே இலங்கையின் களநிலைகள் இவ்வாறிருக்க முன்னெப்போதுமில்லாத வகை சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் உணர்வலைகள் ஒன்றிணைந்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும்,  இத்தகைய கவனயீர்ப்பு நடவடிக்கைகளினால் இலங்கை அரசாங்க நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படுவதை காணமுடியவில்லை.

banki-moon.jpgசிலதினங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பங்கிமூங் வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பார்க்கும்போது வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை பான் கீ மூன் வரவேற்றிருந்தார்.

மோதல் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தினருக்கும்,  விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போர்நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் அழைப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியில் கவனத்தைக் குவித்து இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவென்று மக்கள் உணருகிறார்களோ அங்கு செல்வதற்கு மக்களை அனுமதிக்கவேண்டுமென விடுதலைப்புலிகளைக் கோரியுள்ள ஐ.நா.செயலர், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் சர்வதேச நடைமுறைமைகளுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளபோதிலும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து தான் தொடர்ந்தும் கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உண்மைத் தன்மையுடன் ஏற்படுத்தவும் தம்மால் இயன்ற அனைத்தையும் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர, விரும்பிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் முழு அளவில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைவரம் மிகவும் துக்ககரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அரச திணைக்களம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் உதவி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரச திணைக்களத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நாளாந்த நிகழ்வின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் வூட், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்தார்.

unicef_2301.jpgஇந்நிலையில், மோதல் பகுதிக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்), கொல்லப்படும் அல்லது காயமடையும் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இங்கு நடைபெறும் மோதல்களால் சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தும் காயமடைவது குறித்தும் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக யுனிசெப்பின் தென்னாசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் டானியல் ரூல் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் என்பன பாதுகாப்பு வலயங்களாக கருதப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், மோதல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிக்கியிருப்பது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் யுனிசெப் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளது.

redcrose2801.jpgமோதல்கள் காரணமாக காயமடைந்து வன்னிப் பிரதேசத்தின் மீட்கப்படாத பிரதேசங்களில் சிக்கியிருக்கும் பொது மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கின்றது.  அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மேலதிக வைத்திய உதவி தேவைப்படும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இவர்களுக்கு உதவுவது அவசியமானதென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்தார்.

குறிப்பாக மோதல்கள் நடைபெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே பெருமளவு பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து உரிய வைத்தியசாலை வசதிகளின்றி பெரும் அவல நிலையை எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து வன்னி நிலைகள் குறித்த செய்திகளை இச்செய்தி எழுதப்படும்வரை தெரிந்துகொள்ள முடியவில்லை. படைத் தரப்பிலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் புலிகளைப் பிடிப்பதற்கு ஆழ ஊடுருவும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

கலைப்பிரிவு பட்ட மேற்படிப்பை தொடர இந்திய புலமைப்பரிசில் பிரிவில் திட்டம்

india_map_.jpgகலைப் பிரிவின் பட்ட மேற்படிப்பை தொடருவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றினை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வழங்குகின்றது. இப்புலமைப்பரிசிலை பெற விரும்புவோர் 20 – 25 வயதுக்குட் பட்டவராகவும், க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவராகவும் தெரிவு செய்யும் பிரிவிற்கான பாடத்தில் திறமைச் சித்தி (B) அடைந்தவராகவும், க.பொ.த.ச.பரீட்சை ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியும் (C) அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மாத்திரம் பெற முடியும் எனவும் விண்ணப்பங்களை பெற விரும்புவோர் வாரநாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் 1 மணி வரை இலக்கம் 133 பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 04 இல் அமைந்துள்ள இந்திய கலாசார நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளது.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பு, பகல் 2 மணி முதல் 4 மணிவரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக தகவல்களுக்கு 0112500014 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.  மலையகப் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

லிபியாவில் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு ஏப்ரலில் ஒரு பகுதியினர் செல்வார்கள்

topics_libya.jpgதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களில் ஒரு தொகுதியினர், வேலை வாய்ப்புக்காக ஏப்ரல் மாதத்தில் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறைகளில் நிலவும் வெற்றிடங்களில் இவர்கள் வேலைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெப்ரவரி நடுப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகள் லிபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த வருடத்தில் இலங்கையும் லிபியாவும் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள், லிபியாவில் தொழில்வாய்ப்பை பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகவும், பல வெற்றிடங்கள் இலங்கையருக்காக அங்கு உள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார். லிபியாவில் தொழில் வாய்ப்பு நிலைமைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள அதேநேரம், வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் முக்கிய வீதிகள் ஐந்து நாட்கள் மூடப்படும்

ranjith-gunasekara.jpgஇலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் ஒத்திகைகளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் நான்காம்திகதி வரை கொழும்பில் முக்கிய வீதிகள் சில மூடப்படவுள்ளன. இதனால், கொள்ளுப்பிட்டி சந்தி முதல் செரமிக் சந்தி வரையான வீதி மற்றும் கொம்பனி வீதிச் சந்தி முதல் காலிவீதி வரையான வீதிகள் குறிப்பிட்ட நாட்களில் அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மூடப்பட்டிருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இவ்வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வன்னி மக்களின் அவல நிலையை மூடிமறைக்க அரசு பெரு முயற்சி – ஐ.தே.க. குற்றச்சாட்டு

logo_unp.jpgயுத்தம் காரணமாக வன்னியில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.  அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவு, மருந்துவகை, குடிநீர் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதம், பிற்போக்கு வாதம் கொண்ட கட்சியோ, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கட்சியோ அல்ல, அதிகாரத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது நாம் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தையோ, யுத்த வெற்றிகளையோ ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இல்லை. எதிர்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை.

நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதும் நாட்டில் எவரும் எங்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதும் தான்.

எனினும், நாட்டின் ஒரு பகுதியான வன்னியில் இன்று எமது சகோதர இனத்தவர்கள் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெற்கில் மூடி மறைக்கின்றது. உள்ளூரில் மறைக்கப்பட்டாலும் சர்வசேத்துக்கு அவை கிட்டியுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் வரை இந்த விவகாரம் சென்றடைந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் அரசு வஞ்சகப் போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறும் அரசு, மறு

புறத்தில் தமிழர்களை முற்று முழுதாக புலிகளாகவே பார்க்கின்றது. இந்தப் போலி நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த அரசாங்க அதிபர்கள் வவுனியாவிலிருந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று புலனாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஏற்படுத்திய சிவில் நிருவாகம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இன்று முற்று முழுதாக செயலிழந்து போயுள்ளது தான். வடக்கிலும், வன்னியிலும் இன்று என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெற்கு மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சி பெறாது போனால் நாடு முற்று முழுதான சர்வாதிகாரத்துக்குள் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் – தமிழக டாக்டர்கள் அறிவிப்பு

surgery.jpgஇலங்கையில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதிகளை அளிக்கத் தயாரென தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவித் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கும் இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்; முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சகிச்சை வழங்கத் தயார். மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.

ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் 10.11.2008 இல் சேகரிக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் இன்று மாபெரும் மக்கள் பேரணி – தேச மக்கள் எழுச்சி பேரவை நடத்துகிறது

“வன்னி வாழ் எமது உறவுகளை மீட்க ஒன்றிணைந்து எழுவோம் வாருங்கள்” என்ற அழைப்புடன் யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப் பேரவை இன்று யாழ். குடாநாட்டில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்துகிறது.

யாழ். குடாநாட்டில் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

flag_logo_sl.jpgஇலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் கடையடைப்பு நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும்   தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் வரும் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.