இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கடன் உதவி வழங்குவது தொடர்பாக ஆயத்தமான நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றபோதும் கொழும்பு கோரும் நிதித்தொகை தொடர்பாக இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லையென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் திகதி எதுவும் எம்மிடம் இல்லை.அல்லது எப்போது இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான திகதி குறித்தும் எம்மிடம் முடிவு எதுவும் கிடையாது. அத்துடன் எவ்வளவு தொகையை நிதியத்திடமிருந்து இலங்கை கோருகிறது என்ற தகவலும் இதுவரை எமக்கு தெரியாது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவுகள் திணைக்களத்தின் தலைவர் கரோலின் அட்கின்சன் தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பரின் பின்னர் நாட்டின் 2/3 பகுதி அந்நிய செலாவணி கையிருப்பை இலங்கை இழந்துவிட்டது. இதனையடுத்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாக கோரியிருந்தது.
கையிருப்புகள் முடிவடைந்தால் அத்தொகையை ஈடுகட்ட கடன்உதவி வழங்குவது சர்வதேச நாணய நிதியத்தின் வழமையான நடைமுறை அல்ல. ஆயினும் நாட்டின் நிதித்தேவைகளையும் உள்ளூர் பண நிரம்பலின் அளவையும் கருத்தில் கொண்டு கடன் உதவி தொடர்பாக நாணய நிதியமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள விடயமாகும்.
நாட்டிற்கு சர்வதேச நாணயநிதிய தூதுக்குழு வருகை தருவதற்கு முன்னராக ஏப்ரல் முதலாவது அல்லது இரண்டாவது வாரம் உடன்படிக்கை தயாராகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது பேச்சுவார்த்தையில் துரிதமாக முன்னேற்றம் ஏற்பட்டால் இது சாத்தியமாகும் எனக்கருதப்பட்டது.
செப்டெம்பரிலிருந்து ஜனவரிவரை இலங்கையின் கையிருப்புகள் 3.4 பில்லியன் டொலரிலிருந்து 1.4 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது. அந்நிய செலாவணி சந்தைத் தலையீடுகளுக்கு வலுவூட்டுவதற்காக உள்ளூர் பணச்சந்தைக்கு சுமார் 200 பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது.அல்லது அச்சிடப்பட்டது. ஆனால், நாணய கையிருப்பு ஜனவரி இறுதியில் 1.2 பில்லியன் என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவித்தன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்உதவியால் பணம் அச்சிடப்படுவதை நிறுத்த முடியும். அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்புகளை மீள அதிகரித்துக்கொள்ளவும் இயலும். பரிமாற்ற விகிதம் சந்தை நிலைவரத்திற்கேற்ப தீர்மானிக்கக்கூடியதாக இருந்தால் அதனை மேற்கொள்ள முடியும்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பனவாக இருக்காது என்று இலங்கை அதிகாரிகள் லங்கா பிஸ்னஸ் ஒன்லைனுக்கு கூறியுள்ளனர்.
வீண் விரயத்தை குறைத்தல், நாணயம் அச்சிடுவதை குறைத்தல் என்பனவே நிதியமானது வழமையாக விதிக்கும் நிபந்தனைகளாகும். இது இவ்வாறிருக்க வியாழன் இறுதி மதுபானம்,சிகரட் என்பனவற்றுக்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.