May

May

தமிழ்மொழியில் கருமமாற்றும் அதிகாரிகளை இணைக்க முடிவு

basil.jpgவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய தமிழ் உத்தியோகத்தர்களை உடனடியாக சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் கரும மாற்றக் கூடிய தேர்ச்சி இவர்களுக்கு இருத்தல் அவசியம் விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றங்களுக்கான இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் கல்வி கற்ற, சேவை செய்த, தொழில்வாண்மையாளர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாக இருந்தது. இவ்வாறான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களது ஆலோசனைகளையும் கேட்டமைக்காக தொழில்வாண்மையாளர்கள் பசில் ராஜபக்ஷ எம்.பியை பாராட்டியதுடன் எந்நேரமும் ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மருத்துவதுறை சார்ந்த டாக்டர்கள், விவசாயத்துறை நீர்ப்பாசனத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கின் கல்வி அபிவிருத்தி, விவசாய அபிவிரத்தி, நீர்பாசன திட்டங்கள், உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஆரம்பித்தல் குறித்தும் நீண்ட நேரம் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தொழில்வாண்மை யாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.

வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நேரம் கைகூடியுள்ளது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் செல்லும் போது மொழிப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பாரிய பிரச்சினையாக இருக்கிறது என புத்திஜீவிகள், தொழிவாண்மையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்தே பசில் ராஜபக்ஷ தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற தமிழ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வது என முடிவு செய்துள்ளார்.விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள் ளன. சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களின் தகைமைகள் வயது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.

‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் – புன்னியாமீன்

may-31.jpgஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization   உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.  1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA  40.38  தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட,  அதேயாண்டில் WHA 42.19  தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும்.  இத்தாவரத்தின் தண்டுப் பகுதியைவிடவும்,  இலைப் பகுதியிலேயே அதிக இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.  இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி. டி. ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார் தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர். 

புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.     

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் ‘வில்லியம் பொலின்’  வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம்  (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 
‘பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்’. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது?  இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதையீ புற்றுநோய்இ சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரபையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.

அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறைமாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப் பையினுள்ளே சிசு இறந்து பிறப்பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.

இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்றவாறான பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும். அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic)  முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே  (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.

புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டு வந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிவறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது.

பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகைபிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை,  சிலநாடுகளில் புகையிலையும்,  மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங்கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில்,  புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்கு பெருமளவுக்கு வருமான வரியை ஈட்டுகின்றன.

1988ல் பின்லாந்தும்,  1994ல் பிரான்சும் மதுபான,  புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன்,  நியூஸிலாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் இந்நிலையை துரிதப்படுத்துகின்றன. எவ்வாறிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்.  புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக ‘நாட்டிங்காம்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப்பிடிக்கின்றார்கள் என்று  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பழக்கவழக்கங்கள் காரணமாக 21 %, மகிழ்ச்சிக்காக 21.1% , புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 22.7% , நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக  8.2%, தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5% , ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் 7.6% , நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6 % , பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 3.3%  த்தினரும் புகைப்பிடிப்பதாக தெரிய வருகின்றது. மேலும், இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் 17.1% ,  கொழும்பு மாவட்டத்தில் 20.4%,  கேகாலை மாவட்டத்தில் 24.5% ,  அநுராதபுர மாவட்டத்தில் 27.9% ,   கம்பஹா மாவட்டத்தில் 29.8%,  காலி மாவட்டத்தில் 44.2%   இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற்பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன்வைக்கின்றது. அவை வருமாறு:

1990 – Childhood and youth without tobacco: growing up without tobacco
1991 – Public places and transport: better be tobacco free
1992 – Tobacco free workplaces: safer and healthier
1993 –  Health services: our windos to a tobacco free world
1994 –  Media and tobacco: get the message across
1995 –  Tobacco costs more than you think
1996 –  Sport and art without tobacco: play it tobacco free
1997 –  United for a tobacco free world
1998 –  Growing up without tobacco
1999 –  Leave the pack behind
2000 – tobacco kills, don’t be duped
2001 – second-hand smoke kills
2002 – tobacco free sports
2003 – tobacco free film, tobacco free fashion
2004 – tobacco and poverty, a vicious circle 
2005 – health professionals against tobacco
2006 – tobacco: deadly in any form or disguise
2007 – smoke free inside
2008 – tobacco-free youth
2009 – tobacco health warnings

மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை

da-de.gifபுலித் தலைமையின் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தயா மாஸ்டர் 5 மணி நேரம் வாக்குமூலம்

dayamaster000.gif
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் சுமார் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் தொடர்ச்சியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் தயா மாஸ்டர் தானாக முன்வந்து வாக்குமூலமளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே நேற்று அவர் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டு பிற்பகல் 1.10 மணியளவில் ஆரம்பித்து மாலை 5.50 மணிவரை அவர் வாக்குமூலமளித்துள்ளார்.  பிரதம நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்தே தயா மாஸ்டரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர் தவிர சி.ஐ.டி.அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றி விட்டே நீதிவான் தயா மாஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த 47 பேரின் சடலங்கள் மன்னாரில் அரச செலவில் அடக்கம்

ஜனவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 27 ஆம் திகதிவரை 47 சடலங்களை மன்னார் பிரதேச செயலகம் அரச செலவில் அடக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்களில் உயிரிழந்த 47 பேரின் சடலங்களே இவ்விதம் அரசாங்க செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சனின் உத்தரவின் பேரில் அடையாளம் காண்பதற்காகவும் உறவினர்கள் உரிமை கோருவதற்காகவும் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும், சடலங்களை எவரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டி மெல்லின் ஏற்பாட்டில் குறித்த சடலங்கள் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதம் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் ஜனவரி மாதத்தில் மட்டும் 15 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

kovairamesh.jpg கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் – திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலிகளின் நிதியுதவியில் செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை – பொலிஸ் மா அதிபர்

விடுதலைப்புலிகளின் கொடுப்பனவுகளில் பல பத்திரிகையாளர்கள் செயற்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள் எனவும் கிளர்ச்சியின் போது அவர்களுக்கு அதிகளவு சம்பந்தம் இருந்தமை பிந்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண தெரிவித்திருக்கிறார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என். இற்கு வியாழனன்று அளித்த பேட்டியில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேசத்துரோக செயல் தொடர்பாக பொலிஸாருக்கு அதிகளவு விபரங்கள் தெரியும். மேலதிகமான விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால் அவை யாவற்றையும் வெளியிட நான் விரும்பவில்லை. உன்னதமான தொழிலுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். இலங்கை தொடர்பாக திரிபுபடுத்தப்பட்டவற்றை மட்டுமன்றி, பணத்திற்காகவும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற ஏனைய அனுகூலங்களுக்காகவும் அவர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொழும்பிலுள்ள பத்திரிகையாளர்கள் புலிகளின் கொடுப்பனவுகளில் செயற்பட்டார்களா என்பது குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்ததா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவை தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது உண்மை என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். இந்த ஆதாரங்களில் அநேகமானவை தம்மை வெட்கப்பட வைத்ததாகவும் அந்தப் பத்திரிகையாளர்களில் அநேகமானவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அவர்களில் பலர் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், எப்போதும் மக்களின் ஊடக சுதந்திரம், ஜனநாயக மனித உரிமைகளுக்காக கதைப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்பலமானதுடன் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் நாட்டை விட்டு சென்றதாகவும், உண்மையில் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டிருந்ததாலேயே அவர்கள் நாட்டைவிட்டு சென்றதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார். அவர்களால் இலகுவில் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் யுத்தத்தில் தோல்விகண்டு வந்த நிலையில் அவர்கள் வெளியேறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுக்கு சார்பாக அவர்களில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும், வெளியேறும் பொதுமக்களை புலிகள் சுட்டபோது பொதுமக்கள் மீது இராணுவம் செல்வீச்சு நடத்தியதாகவும் அவர்கள் தவறாக செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் நண்பர்களுக்கு அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்களை வழங்க நிகழ்ந்ததாகவும் இலங்கைத் தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக புலிகளின் நண்பர்களுக்கு அவற்றை வழங்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அந்தப் பேட்டியின் போது ஆட்களின் பெயர்களை பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருக்கவில்லை.

வவுனியா முகாம்களில் 200 புலிச் சிறுவர்கள்

child_solders_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடன் புலிகளின் ஆயுதப் படையில் இருந்த 200 சிறுவர்கள் வவுனியா முகாம்களில் தங்கி உள்ளதாக ஐ.நா வின் யுனிசெப் நிறுவன இலங்கைப் பிரதிநிதி பிலிப் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 59 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் கூறினார். 

ஈரானில் குண்டுவெடிப்பு : 23 பேர் பலி

iran-bomb.jpgஈரானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாகிதான் நகரில் உள்ள ஷிட்டி மசூதியில் மாலை நேர பிரார்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியாகியவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபிகளின் மகளான பாத்திமாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரார்த்தனையின் போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

mahinda-0000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்.எல்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

“இலங்கை ஜனாதிபதி அடுத்தவாரம் இந்தியாவுக்கு வருவார் என நாம் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அவருடன் பேச்சுகள் இடம்பெறும். இலங்கையின் நெருக்கடிகள் தற்போது முடிவடைந்துள்ளன. அங்கு புனர்வாழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளன. அது மிகப் பாரிய பணியாகும்” என்றும் கிருஷ்ணா மேலும் தெரிவித்தார்.