June

June

ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

maical-jak.jpgபொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.

கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரது உடலில் அறுவைச் சிகிச்சை தழும்புகளும் நிறையவே இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அழகுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.அவரது உடலை ஆராய்ந்ததில் அவர் ஆரோக்கியமானவராக இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு ள்ளனர். தினமும் ஒருவேளை மட்டுமே அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

வலி நிவாரணி ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அதன் மாதிரிகள் மருந்துப் பரிசோதனைக்கு அனுப்பப்ப ட்டுள்ளன. 1984ல் ஒரு விளம்பர படத்தில் நடித்த போது அவரது தலைமுடி தீப்பிடித்தது. அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயல்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப் படுத்தியுள்ளது.

அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும் மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது. முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும், இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உடல் பிரச்சினைகளுடன் மைக்கல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள அவரது நவர்லாண்ட் இல்ல வளாகத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுமென அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்தார். இறுதிச் சடங்குகள் தொடர்பாக அவரது குடும்ப அங்கத்தவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். அவரது ரசிகர்களும் பங்குபற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென மைக்கல் ஜக்சனின் தந்தை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்; அமெரிக்கா கருத்து

பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தல்இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்காவின் புதிய உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் கூறியுள்ளார்.  வாஷிங்டனில் காங்கிரஸ்குழு முன் கடந்த வியாழக்கிழமை இதனை தெரிவித்துள்ள ரொபேர்ட் பிளேக், இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளநிலையில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமெனக் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரு தசாப்தகாலங்கள் கடந்து விட்டன. உயர் நீதிமன்றமும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. ஆனால், 13 ஆவது திருத்தத்தின் ஒருபகுதியே அமுல்படுத்தப்படுகிறது. 13 ஆவது திருத்தத்திலும் குறைவானவற்றை பெரும்பான்மைச் சிங்களக்கட்சிகள் வலியுறுத்தும் அதேவேளை, தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தத்திலும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன.

அதேவேளை, இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையின் முக்கியத்துவம் குறித்தும் பிளேக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மேல்சபையான இந்த இரண்டாவது சபையான மாகாணங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாக இருப்பதற்கான யோசனையை உள்ளடக்கியதாகும். இந்த நடவடிக்கைகள் அரசியல் நல்லிணக்கத்தை வென்றெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற அபிப்பிராயத்தை பிளேக் வெளிப்படுத்தியுள்ளார்.

மொனராகலை, மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கல்

bulbs.jpgஇலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மொனராகலை, கல்கமுவ தேர்தல் தொகுதியில் உள்ள மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக இன்று (30) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் 300 வீடுகளுக்கு இவ்வாறு மின்சார வசதி அளிக்கப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதன்படி மடுல்ல கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

மின்மாற்றிக் கோபுரங்கள் நிர்மாணிக்க முடியாத கஷ்டப் பகுதி கிராமங்களுக்கு சூரிய சக்தி மற்றும் மாற்று வழிகளினூடாக மின்சார வதி அளிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்றைய நிகழ்வில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை

சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. வின் தலைமைத்துவம் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தாழ்ந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனது அமைதியான இராஜதந்திரத்தையும் பதவிக் காலத்தில் (5 ஆண்டுகள்) அரைவாசிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் தான் ஈட்டியுள்ள வெற்றிகளையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த வாரம் “யொன்சாப்’ செய்திச் சேவைக்கு பேட்டியளித்திருக்கும் பான் கீ மூன் அரசாங்கமொன்றை விட ஐ.நா. வின் செயற்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை என்று கூறியுள்ளார். பல சர்வதேச நெருக்கடிகள் தொடர்பாக ஐ.நா. தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிக உச்சமட்டத்தில் இருப்பதாகவும் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணப்படாத போது விரக்திநிலை அதிகளவில் ஏற்படுவதாகவும் முன்னாள் தென்கொரிய வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் கூறியுள்ளார்.

எரிபொருள் , உணவு, நிதி, புரூ பிராந்திய நெருக்கடிகள், உலகம் வெப்பமடைதல், வறுமை, ஈரானிய, வடகொரிய அணுப் பிரச்சினைகள் என்பவை தொடர்பாக ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு தனிநபரால் தீர்வுகாண முடியாது என்று கூறியுள்ள அவர் ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தன்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அதேசமயம் தனது தலைமைத்துவப் பாணியை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.பிராந்திய மோதல்களில் சம்பந்தப்பட்ட நாடுகள் வேறுபட்ட பின்னணிகளையும் புரிந்துணர்வுகளையும் கொண்டுள்ளன. அவற்றில் பல விவகாரங்களில் ஐ.நா. தலையிடமுடியாது. சர்வதேச விழுமியங்கள் சம்பந்தப்பட்டவையாயின் மனித உரிமைகள் மற்றும் இறைமையுடன் தொடர்புபட்ட விடயங்களாயின் நான் வலுவான அறிக்கைகளை விடுத்து வருகிறேன். இலங்கை மோதல் தொடர்பாக 22 அறிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கடுமையானதாக விடுத்துள்ளேன். மியான்மார் சூறாவளியால் பாதிக்கப்பட்ட போது அங்கு சென்றேன். பின் சர்வதேச உணவு உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜுபின்டா இராணுவ நிர்வாகத்தை இணங்கச் செய்வதால் 5 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

இந்த விடயங்களே ஐ.நா. செயலாளர் நாயகத்தால் மேற்கொள்ளக்கூடியவை என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

”கப்டன் அலி” கப்பலில் இருந்து பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கவுள்ளது

vanangaamancaptainali.jpgபுலம் பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த ”கப்டன் அலி” என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டதை அடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பாக தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த பொருட்களை தாம் பெற்று இலங்கைக்கு வேறு கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி கூறியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள தமது அலுவலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதி பணி முடிவு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் இன்றுடன் (30) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாத ஆரம்பம் முதல் ஏற்கப்பட்டன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பாடசாலைகளில் நேர்முகப் பரீட்சை குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி பேசுவதும், அறிக்கைகள் விடுவதும் மட்டும் போதாது. செயல்பாட்டு ரீதியாக காட்ட வேண்டும். – சட்டத்தரணி ஏ.எம். வைஸ் : நேர்காணல்

சட்டத்தரணி ஏ.எம். வைஸ்வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன்வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 27,77,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிந்தனை வட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

லண்டனில் இயங்கும் அகிலன் பவுண்டேசன் இம்மாணவர்களின் கல்வித்திட்டத்திற்கு உதவ முன் வந்துள்ளது. இது பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்” க்கு வழங்கிய விசேட நேர்காணல் கீழே தரப்படுகின்றது.

தேசம்நெற்: தற்போதைய நெருக்கமான சூழ்நிலையின் பின்னணியில் வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களுக்கு உதவும் முகமாக மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் முன்வந்தமையிட்டு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பான நீங்கள் இத்திட்டத்தில் ஏன் உதவியளிக்க முன்வந்தீர்கள் என்பதை குறிப்பிட முடியுமா?

ஏ.எம். வைஸ்: மானுடம் என்று பார்க்கும்போது இனம், மதம் இரண்டாம் பட்சமே. வன்னி மாவட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள அனைவரும் மானுடப் பிறவிகளே. எங்களைப் போலவே ஆசாபாசமுள்ள அவர்களது உணர்வுகளை நாங்கள் மதிக்க வேண்டும். கடந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம்ஜயந்த அவர்கள் தெரிவித்த அறிக்கை பிரகாரம சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்து வன்னியில் அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.

இம்மாணவர்களின் நிலையினை நேரடியாக அவதானிக்கும்போது அவர்களின் ஏக்கங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அந்த அடிப்படையிலேயே மாணவர்களின் கல்வி நலனுக்காக வேண்டி செயல்படும் அமைப்புகளுடன் இணைந்து உதவி புரிய எண்ணியமையினாலேயே தேசம்நெற், சிந்தனைவட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இதற்கு உதவி வழங்க முன்வந்தோம்.

மறுபுறமாக இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பற்றி கூட்டங்களில் பேசுவதால் மாத்திரமோ, அறிக்கைகள் விடுவதால் மாத்திரமோ சரிசெய்யப்படுவதில்லை. நாங்கள் செயல்பாட்டு ரீதியாக முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால்தான் நடைமுறை சாத்தியப்பாடுமிக்கதாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவிகளை வழங்குவதில் முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் ஒரு கடமையெனக் கருதுகின்றது.

தேசம்நெற்: எம்மால் வழங்கப்படக்கூடிய மாதிரிவினாத்தாள்கள், வழிகாட்டிப் புத்தகங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளவையாக உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்களா?

ஏ.எம். வைஸ்: தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் வழங்கப்படும் மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் எமது முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவு பரிசீலித்தது. அந்த வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளமையை எமது கல்வி அபிவிருத்திப் பிரிவு உறுதிப்படுத்தியது. எமது கல்வி அபிவிருத்திப் பிரிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். கல்வி அபிவிருத்திப் பிரிவின் உறுதிப்பாட்டின் பிற்பாடு இத்திட்டத்துக்கு உதவுவதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை.

மேலும், தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் விநியோகிக்கப்படும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிநூல்களும் நேரடியாக மாணவர்களிடம் போய்ச் சேர்வதை எம்மால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. வேறு உதவிகள் நிமித்தமாக எமது இயக்கத்தின் சார்பில் இடம்பெயர் முகாம்களுக்கு சென்ற பிரிதிநிதிகள் இதனை உறுதிப்படுத்தினர். அதேநேரத்தில் இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிந்தனைவட்ட வினாத்தாள்களுக்கும், வழிகாட்டிப் புத்தகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருவதையும் அவதானிக்க முடிந்தது.

தேசம்நெற்: அரசாங்கம் இம்மாணவர்களுக்காக வேண்டி இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வரும் அதேநேரத்தில் எம்மால் வழங்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள், மாதிரிவினாத்தாள்களின் முக்கியத்துவத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்?

ஏ.எம். வைஸ்: அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள அனைத்து தர மாணவர்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச புத்தகங்களை வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் தரம் 05 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு முக்கிய விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தகங்கள் ஓராண்டு கல்வி செயற்பாட்டை மையமாகக் கொண்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவையாகும். ஆனால், இடம்பெயர்ந்து வந்துள்ள பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத் தீவைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 06 மாதங்களில் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே உள்ளனர்.

அதேநேரத்தில் மடுவலயம், முல்லைத்தீவு துணுக்காய் போன்ற பிரதேச மாணவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டுகள் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய தேசிய பரீட்சைகள் தேசிய ரீதியில் திட்டமிடப்படுவதனால் அரசாங்கப் பரீட்சைகள் திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரஅட்டவைணயில் நடைபெறுகின்றன. இதனால் இடம்பெயர்ந்த மாணவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்யாத நிலையில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தேசம்நெற், சிந்தனைவட்டம் இணைந்து வழங்கும் மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமைகின்றன என்றே நாம் கருதுகின்றோம்.

தேசம்நெற்: இடம்பெயர்ந்த மாணவர்கள் தொடர்பாக தங்கள் இயக்கம் ஏற்கனவே பல ஆய்வுகளை மேற்கொண்டதாக நாம் அறிகின்றோம். இந்த மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து யாதாவது குறிப்பிட முடியுமா?

ஏ.எம். வைஸ்: பொதுவான அவதானத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களும் போல மானசீகமாக பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து பிரிந்து வந்த வேதனை, தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்த துயர சூழ்நிலை. ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பதற்கும் போதிய வசிதியில்லை இவ்வாறாக பல காரணங்கள் நிமித்தமாக மனோநிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கூட, இச்செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே.

இத்தகைய மாணவர்களிடம் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் போதனைகளை நடத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு காரியமே. அதற்காக இம்மாணவர்களை விட்டுவிடமுடியாது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதைவிட அரசாங்கப் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு அப்பரீட்சையை முகம்கொடுக்கக் கூடிய வழிகளைக் காட்ட வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமானது. மாணவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய இரண்டு பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக வேண்டி பல துரித செயற்றிட்டங்கள் நடைபெறுவதாக அறிகின்றோம். அதேநேரம் தேசம்நெற், சிந்தனைவட்டம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் இத்திட்டம் தரம் 05 மாணவர்களுக்கான துரித செயல்திட்டமாகக் கொள்ளலாம். இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்.

கவிஞர் முருகையன் காலமானார்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyதிறனாய்வாளரும் கவிஞருமான இ. முருகையன் 27 June 2009 காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக்கொண்ட, கொழும்பில் வசித்துவந்த இவர் திடீரென காலமானார். இறுதிக் கிரியைகள் இன்று காலை 8.30 அளவில் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, 3 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ஆதிபகவன், அது அவர்கள், நாங்கள் மனிதர், மாடும் கயிறறுக்கும் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், சிறந்த திறனாய்வு ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

வெறியாட்டு, கடூழியம், மேற்பூச்சு, இரு துயரங்கள் போன்ற பா. நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி, மகாகவி உருத்திரமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு ஆக்கங்களை மேற்கொண்டுள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளராக இருந்த இவருக்கு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.

(படம் – தமயந்தி)

வவுனியா தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள்

images-elc.jpgவவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு அவர்களின் இலக்கம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டதும் இந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன் வவுனியா நகர சபையின் பல பகுதிகளிலும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  இதன் முக்கிய கருத்தரங்கு அடுத்தவாரம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வவுனியா பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய தமிழ்க்கட்சிகளும் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளன.

தடுத்து வைத்துள்ளவர்களை இரான் விடுவிக்க வேண்டும் – பிரிட்டன்

miliband_.jpgஇரான் அரசால் கைது செய்யப்பட்ட தெஹ்ரானில் இருக்கின்ற பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்த இரான் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இரான் அதிபர் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைக்கு இவர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஒன்பது பணியாளர்கள் பிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் எத்தனை பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

இரானின் இந்த செயல் சற்றும் ஏற்க முடியாத ஒன்று என்றும் இது வம்புக்கிழுக்கும் ஒரு செயல் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறைக்கு அடித்தளமிட்டவர்கள் மேற்கத்தைய நாடுகள் தான் என்று இரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.