July

July

கண்டிக்கு அழைத்து வரப்பட்ட நலன்புரி நிலைய சிறுமிகள்

kandy-parahara.jpgவவுனியா அகதிகள் முகாமிலிருந்து ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 73 சிறுமிகளை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான “இளைஞர்களின் நாளை’அமைப்பினர் மத்திய மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் கண்டிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கண்டிக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிகளை கண்டி மகா மாயா தேசியக் கல்லூரி மாணவிகளும் அதிபர் ஐ.விதானாச்சியும் வரவேற்றதுடன், அங்கு கலை நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. மாலை தலதாமாளிகைக்கு விஜயம் செய்து தரிசித்ததோடு இரவு பெரஹராவையும் கண்டு கழித்தனர். நாமல் ராஜபக்ஷவும் இவர்களோடு கலந்துகொண்டார்.

நேற்று புதன்கிழமை காலை பேராதனைப் பூங்காவிற்குச் சென்ற இவர்களை கண்டிப் பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் வரவேற்றனர். கண்டிப் பெண்கள் சாரணியர் மாணவிகள் கலை நிகழ்வுகளை நடத்தினர்.

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, சொர்ணாலி பேராதனை கனிஷ்ட வித்தியாலயம், அந்தெஸ்ஸ மகா வித்தியாலயம், தீரானந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா 10 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஒன்று கூடலின் போது விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் கலந்து கொண்டு பராமரிப்பு சிறுமிகளுக்கு புத்தகங்கள், உடைகள், பாதணிகள், உணவுப் பண்டங்கள் வழங்கினார்.

“இளைஞர்களின் நாளை’ அமைப்பினர் மற்றும் இவர்களைப் பராமரிக்கும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தாய், தந்தை, உறவினர்களை இழந்து செஞ்சோலையில் பராமரிக்கப்பட்டவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாளை வெளியாகவுள்ள தீர்ப்பு குறித்து ஆங் சான் சூ கி அச்சம்

miyanmar_s.pngமியன்மார் எதிரணித் தலைவி ஆங் சான் சூ கிக்கு எதிரான விசாரணை குறித்த தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தீர்ப்பு வலி மிகுந்ததாக இருக்குமென தான் அச்சமடைந்துள்ளதாக ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.  நாளை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் சூ கிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரங்கூனின் இன்செய்ன் சிறை வளாகத்திலுள்ள நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதிக்கட்ட வாதத்தை சூ கியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முன் அனுமதி எதுவுமின்றி அமெரிக்கரொருவரைத் தனது வீட்டில் தங்க அனுமதித்ததன் மூலம் வீட்டுக்காவல் விதிகளை மீறியதாக சூ கி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறுதிநாள் விசாரணைகளை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையைத் தரும் தீர்ப்பே வழங்கப்படுமெனத் தான் அச்சமடைந்துள்ளதாக சூ கி தூதுவர்களுக்குக் கூறியதாக அங்கு பிரசன்னமாயிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். மேலும், துரிதமாகத் தீர்ப்பு வெளிவர முயற்சித்தமைக்காக தூதுவர்களுக்கு சூ கி நன்றியும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட்டால் தீர்ப்பில் சாதகமான மாற்றம் வருமெனத் தாம் சிறிது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சூ கியின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கு அரசியலுடன் தொடர்புடையது என்பதால் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியல் வழக்குகளில் எந்தவொரு பிரதிவாதியும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களைத் தான் ஒருபோதும் பார்த்ததில்லையெனத் தெரிவித்துள்ள வழக்கறிஞரும் சூ கியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளருமான நியான் வின் எம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். மோசமான முடிவுகளைச் சந்திப்பதற்கு அவரும் (சூ கி) தயாராகியுள்ளாரெனத் தெரிவித்துள்ளார்.
 

இ.ஒ.கூ. தாபனத்தில் டிஜிட்டல் கலையக தொழில்நுட்பம் – அமைச்சர் யாப்பா திறந்து வைப்பு

images-radio.jpgஒலிநாடா, இசைத் தட்டுகள், இறுவட்டுகள், யாவற்றையும் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் சுவடி கூடத்தில் சேகரித்து தேவையான நேரத்தில் எடுத்து கலையகத்தின் ஊடாக நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கான கணனி தொடர்பு முறையில் செயல்படும் புதிய கலையகத் தொடரை ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உத்தி யோகபூர்வமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திறந்து வைத்தார்.

ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் சகலவற்றையும் சுவடிக் கூடத்திற்குள் உட்புகுத்துவதற்கு 33 வருட காலம் தேவைப்படும் என்று தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தெரிவித்தாலும், இங்குள்ள அனைத்தையும் கட்டிக் காக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இது எங்கள் சொத்து இதனை இரவு பகலாக பாதுகாப்பது எங்கள் கடமை என்றார்.

10580 பாடல்கள் அடங்கிய “ஹாட் டிஸ்க்” அமைச்சர் பிரியதர்ஷன யாப்பாவிடம் முன்னாள் ஊழியரும், கலைஞருமான ஆரியதாச பீரிஸ் கையளித்தார். அத்தோடு ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட 99 வருட பழைமை வாய்ந்த இசைத் தட்டு ஒன்று தலைவர் ஹட்சன் சமரசிங் கவிடம் ஆரியதாச பீரிஸால் வழங்கப்பட்டது.

இலங்கையின் நடுநிலை கொள்கைக்கு பஹ்ரெய்ன் பிரதமர் பாராட்டு

kalifa-shik-binsalman.jpgஅரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றமையைப் பாராட்டுவதாக இலங்கை வந்துள்ள பஹ்ரெய்ன் இராச்சியத்தின் பிரதமர் ஷேய்க் கலிபா பின் சல்மான் அல்- காலிஃபா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையும், நடுநிலைக் கொள்கையையும் கொண்டுள்ளமை பாராட்டுக்குரியதென்று அவர் தெரிவித்தார். பஹ்ரெய்ன் பிரதமர் தமது இல ங்கை விஜயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமது இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீண்டகால ஆழமான உறவின் ஒரு புதிய மைல் கல்லாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இணக்கம் கண்டிருப்பதாகத் தெரிவித்த பஹ்ரெய்ன் பிரதமர், பஹ்ரெய்ன் இராச்சியத்தின் மேம்பாட்டுக்காகப் பங்களிப்புச் செய்துவரும் இலங்கை யர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

வவுனியா நகரில் பஸ் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு – அமைச்சர் டளஸ் அழகப்பொரும தகவல்

dallus_allahapperuma.jpgவவுனியா நகரில் இரவு 7:30 மணியுடன் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் நாளை 31 ஆம் திகதி முதல் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நடத்தப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பொரும இன்று வவுனியாவில் தெரிவித்தார்.

இன்று காலை வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சும் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியா மக்களுக்கு சிறந்த போக்குவரதது சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரஜரட்ட ரயில் சேவை நாளை 31 ஆம் திகதி மீண்டும் வவுனியா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் நாளை அதிகாலை 3:15 மணிக்கு வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் இதற்கு முன்னர் வவுனியா வரை நடத்தப்பட நகரங்களுக்கிடையிலான  ஐந்து கடுகதி ரயில் சேவைகளும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டன. இப்போது அவை அநுராதபுரம் வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இச்சேவைகளும் வவுனியாவரை நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில் தண்டவாளத்தில் ஓடுகின்றன. – இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வியப்பு

rail_bus000.jpgதரையில் ஓடும் இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில்; தண்டவாளத்தில் ஓடுகின்றன. இந்தியாவில் கூட நாம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை.  இலங்கையில்தான் முதற் தடவையாக எமது நாட்டுத் தயாரிப்பான அசோக்லேலண்ட் பஸ்கள் இப்படி மாற்றப்பட்டு ரயில்பஸ் ஆக சேவையில் ஈடுபட்டுள்ளது. எனவே இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இப்படி ரயில்பஸ்களைத் தயாரிக்க வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கூறினார்.

கிழக்கு மாகாண சபைக்கு இந்தியா உதவியாக வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ரயில்பஸ்’ சேவையின் ஆரம்ப வைபவம் நேற்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையில் சேவையில் ஈடுபடுவதற்கும்,  கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடுவதற்கும் 5 ரயில் பஸ்களை தயாரிப்பதற்காக இந்தியா 44 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்களை வழங்கியது.

அத்தோடு தயாரிப்புச் செலவாக இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.  இதற்காக மொத்தம் 66 மில்லியன் ரூபாவை இந்தியா செலவிட்டுள்ளது.

இந்தச் சேவையானது இந்திய – இலங்கை நட்புறவுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.  இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பஸ்கள் இலங்கையில், தண்டவாளத்தில் ஓடும் ரயில் பஸ்களாக தற்போது மாற்றப்பட்டு சேவையில் ஈடுபடுவதுதான் என்றார்.

பாக். உயர் நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை

musharap.jpgபாகிஸ் தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கு நேற்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முஷாரபோ அல்லது அவர் சார்பாகவோ எவரும் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம்; உத்தரவிடடிருந்தும் முஷாரப் சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.

பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும்,  நீதிபதிகளை பதவி நீக்கம்  செய்ததைக் கண்டித்தும்,  வக்கீல் சங்கங்கள்; உயர் நீதிமன்றத்தில்; கடந்த வாரம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது.
 

படைப்பிரிவு தளபதிகளுக்கு பதவி உயர்வு

brigadier_prasanna_silva.jpgவடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய மூன்று தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார்.

அதன்படி  கட்டளைத் தளபதிகளான பிரிகேடியர் பிரஸன்ன சில்வா, பிரிகேடியர் சவேந்ர சில்வா மற்றும் பிரிகேடியர் சாகி கால்லகே ஆகிய மூவரும் மேஜர் ஜெனரல்களாக  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

வன்னி நடவடிக்கைகளின் போது 55 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்ன சில்வா கடமையாற்றினார். 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக  பிரிகேடியர் சவேந்ர சில்வா கடமையற்றியதுடன் குடும்பி மலையை மீட்ட பிரிகேடியர் சாகி கால்லகே 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக வன்னி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

இதேவேளை 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமல் குணரத்ன மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் பல கேர்ணல்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உதவி வழங்குவதும் உரிமைப் போராட்டமும் : த ஜெயபாலன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இராணுவ பாடப்புத்தகம் போல் கால அட்டவணையிடப்பட்டு மே 18 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆயினும் யுத்தம் ஏற்படுத்திய அழிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் குறையவில்லை. வன்னி முகாம்களின் முட்கம்பிகள் இலங்கை அரசின் முகத்திரையை இன்னமும் கிழித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசோ அது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. தமிழ் மக்களின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தனிநாடு கேட்ட நிலை போய், தற்போது வன்னி முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை என்ற நிலைக்கு மறைந்த தலைவர் வே பிரபாகரனும், அவரது விடுதலைப் புலிகள் இயக்கமும், இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது.

வன்னி மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி அரசியல் சார்ந்ததே. முகாம்களில் உள்ள இம்மக்கள் இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயரவில்லை. தற்போது அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட்டு உள்ளது. இவர்களை 180 நாட்களுக்குள் மீளக் குடியமர்த்தப் போவதாக அரசு அறிவித்த போதும் அவர்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தடுத்த வைக்கும் திட்டமே இருக்கின்றது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நிரந்தரக் கட்டுமானங்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக உள்ளனர். இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வரைமுறைகளையும் மீறி எதேச்சதிகார அரசாக தன்னை கட்டமைத்துள்ளது. இந்நிலையில் வன்னி முகாம்களில் உள்ள தமிழ் மக்களுடைய நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் இன்னமும் தனக்குள் உடன்பட முடியாதவர்களாக முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவது உட்பட அம்மக்களின் நலன் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இணைந்து செயலாற்ற முடியவில்லை. இவர்கள் பல கோணங்களில் பிரிந்துள்ளனர். இதில் இரு பிரதான பிரிவுகள் உண்டு.
1. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது.
2. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது.

முதலாவது பிரிவினர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி, தனிநாட்டுக்கான தமது அரசியலைப் பலப்படுத்த நினைக்கின்றனர். தனிநாடு அமைப்பதே இப்பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வாக அமையும் என நினைக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காத சிறு பகுதியினரும் இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது அர்த்தமற்றது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு அரசுக்கு நிர்ப்பங்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் அரசுக்கு ஆதரவானவர்கள். முற்று முழுதாக அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கை அரசு நோகாமல் செயற்படுவதன் மூலமே வன்னி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என நம்புகின்றனர். அல்லது ரிஎன்ஏ தவிர்ந்த தமிழ் கட்சிகள் போன்று இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரரலின் கீழ் செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளுக்கு முன் சலுகைகளையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இருக்கின்றனர்.

மற்றுமொரு சிறு பிரிவினர் தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் அதே சமயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு அரச கட்டமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குவது தவிர்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனால் முகாம்களுக்கு உதவிகளை வழங்க முற்படுபவர்களும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகளைப் பேச முற்படுபவர்களும் தங்களுடைய பாத்திரங்களை ஒன்றையொன்று குறுக்கீடு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

‘வன்னி முகாம்களில் உள்ள மக்களுடைய பிரச்சினை அரசியல்ப் பிரச்சினை, அதனால் அதனை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக முடியும்’ என்பது தத்துவக் கோட்பாட்டுக்கு சரியாக அமைந்தாலும் யதார்த்தத்தில் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குறைந்தபட்ச உதவிகளைச் செய்வது தவிர்க்க முடியாது. ‘சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ அவலத்தில் இருந்து தப்பிய மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்துக் கொண்டு அவர்களது உரிமைகளுக்காக போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்வரை அவர்களால் காத்திருக்க முடியுமா? புலம்பெயர்ந்த நாடுகளில் போராடி மீட்கிறோம் காக்கிறோம் என்று முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் காத்திருந்த மக்களை இந்தப் போராட்டங்கள் எதுவும் காக்கவில்லை. மாறாக அம்மக்களை ஆயிரம் ஆயிரமாக மரணத்துள் தள்ளியது.

இந்த அவலத்திற்கு தாக்குதலை நடத்திய இலங்கை அரசு மட்டும் குற்றவாளிகள் அல்ல. அப்பகுதிக்குள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே. அதனைக் கண்டிக்கத் தவறிய வன்னி மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்காத அதன் ஆதரவாளர்களும் அதற்குப் பொறுப்புடையவர்கள். ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்துவார்த்த ரீதியில் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தில் அரசை மட்டுமே கண்டிக்க முடியும் என்று முரண்டு பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

அதேசமயம் வன்னி மக்களின் நல்வாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றது. அவர்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வாழ வைப்பதன் மூலமே தங்கள் அரசியலைப் பலப்படுத்த முடியும் என்று எண்ணுவது மூன்றாம்தர அரசியல். வன்னி மக்கள் அனுபவித்த அவலம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குகின்ற அதேவேளை அதற்குச் சமாந்தரமாக அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதும் முடிந்த உதவிகளை மேற்கொள்வதும் அவசியம். ஒன்றிற்காக மற்றையதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.

சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் (ஐஎன்ஜிஓ) மங்களின் போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கின்றது, ஏகாதிபத்தியங்களின் முகவர்களாக செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உண்டு. அதற்காக வன்னி முகாம்களில் இருந்து ஐஎன்ஜிஓ க்களை அகற்ற வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தமானது என்பதும் அது இலங்கை அரசின் நோக்கிற்கே துணைபுரியும் என்பதும் வெளிப்படையானது. அதேபோல் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவது அரசுக்கு துணை செய்யும் என்கின்ற வாதம் அபத்தமானது. அரசின் விதிமுறைகளை மீறி முல்லைத் தீவுக் கடற்பரப்பில் வணங்காமண் கப்பலை தரையிறக்குவதாக தம்பட்டம் அடித்து பணம், பொருள், நேரத்தை வீணாக்கியது போன்று செய்ய வேண்டியம் அவசியம் யாருக்கும் இல்லை. உதவிகள் மக்களைச் சென்றடைவதற்காக அரசு விதிக்கின்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் முரளிதரன் அதிரடி ஆட்டம்

murali.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரன் மிகவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியுள்ளார்.
பின்வரிசை ஆட்டக்காரரான முரளிதரன் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுன்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு தம்புள்ள, சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். எனினும் அஞ்சலோ மெத்திவ்ஸ், அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் முறையே 43,  36, 33 ஓட்டங்ளைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். இறுதியாக முரளிதரனின் அதிரடி ஆட்டத்துடன் இலங்கைய அணி 232 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மொஹமட் ஆமிர் 3 விக்கட்டுக்களையும் அப்துல் ரஸாக் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இன்னும் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணி 233 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது.