September

September

பன்றிக்காய்ச்சல்: தென்கிழக்கு ஆசிய அமைச்சர்கள் கூட்டம்

swine.jpgஇந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உட்பட 11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் காட்மாண்டுவில் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது.

செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று நோய் பாதிப்பு, அதனைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தட்ப வெப்பநிலை மாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. தென் கிழக்கு ஆசிய உலக சுகாதார நிறுவனத்தின் மண்டலக் குழுக் கூட்டமும் அப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

500 பாடசாலைகளில் கணனி கூடங்களை அமைக்க நடவடிக்கை -கல்வி அமைச்சு தீர்மானம்

susil_premajayant000.jpgநாடெங் கிலுமுள்ள 500 பாடசாலைகளில் கணனி கூடங்களை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வருடமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரம் கணனி கூடங்களை அமைக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக 500 கணனி கூடங்கள் அமைக்கப்பட வுள்ளன. யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் கணனி கூடங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள 23 பாடசாலைகளிலும், வவுனியாவிலுள்ள 4 பாடசாலைகளிலும், மன்னாரிலுள்ள 2 பாடசாலைகளிலும் இக் கணனி கூடங்கள் அமைக்கப்படும். மாத்தறையில் 27, காலியில் 30, கம்பஹாவில் 12, கண்டியில் 38, களுத்துறையில் 17, குருனாகலையில் 21, அநுராதபுரத்தில் 29, பதுளையில் 27, ஹம்பாந்தோட்டையில் 17, கேகாலையில் 25, புத்தளத்தில் 15, மட்டக்களப்பில் 17, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 8, பொலன்னறுவையில் 19, மொனராகலையில் 14, திருகோணமலையில் 15, அம்பாறையில் 13, இரத்தி னபுரியில் 25 அமைக்கப்பட வுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள்: பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா

1111srilanka_army.jpgவன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது.  செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் ‘ரைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக ‘ரைம்ஸ்’ கூறியது.  உயிரிழப்புக்கள் அநேகமாக ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் ‘ரைம்ஸ்’ நாள் ஏடு கூறியிருந்தது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் ‘சனல் – 4’ நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது. இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.  எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.

போரின் கடைசிக் காலப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க  அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது.  இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.

இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம் மக்கள் துயரங்களுக்கு மத்தியில்

இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் நோக்குவதை தன்னால் அறிய முடிந்ததாகக் கூறுகின்றார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் பற்றியே பலரும் ஆர்வம் காட்டுவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், புல்மோட்டை நலன்புரி நிலையம் தொடர்பாக எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

குடியேற்ற பிரச்சனை: பிரிட்டனில் 470 சிறுவர்கள் கைது

britain.jpgஇந்த ஆண்டில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே, சூடான், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த ஏழை குடும்பங்கள் பிரிட்டனில் தஞ்சம் அடைகின்றன. இதில் பெரும்பாலானோர் முறையான குடியுரிமை ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இவர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் குடியுரிமை இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லண்டன் விமானம் நிலையம் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெரும்பாலான சிறுவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் 28 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 225 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 100 பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஊவா மாகாண சபையின் முதல் அமர்வு நாளை

5வது ஊவா மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெதியூ தலைமையில் இடம்பெறும் இவ்விசேட நிகழ்வில் ஊவா மாகாண சபைத் தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இடம்பெயர் மக்களின் வைத்திய தேவைக்கு மருந்துகள் : சுவிஸ் அரசு சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

IDP_Camp_Aug09இடம் பெயர்ந்த மக்களின் அவசர வைத்திய தேவைக்குரிய ஒரு தொகுதி மருந்துகளை சுவிற்சர்லாந்து வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை ஆற்றி வரும் வைத்தியசாலைகளில் அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு தொகுதி மருந்துகளையே சுவிற்சர்லாந்து அரசாங்கம், சுகாதார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

‘அன்டி பயோடிக்’ மருந்துகளைக் கூடுதலாகக் கொண்ட இந்த மருந்துத் தொகுதி 71 லட்சம் ரூபா பெறுமதியுடையவை என்றும், இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய தேவைக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய 3ஆவது தொகுதியாக இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம், கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான வைத்திய சேவையில் அவசரமாகத் தேவைப்படும் 180 லட்சம் ரூபா பெறுதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை விரைவாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுவிஸ் அரசு ஆதரிக்கின்றது. அதேவேளை, மனிக்பாம் முகாம்களில் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவலைகொண்டிருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள், மனிதாபிமான பாதுகாப்பு மற்றும் அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்புக்கான நிறுவன ரீதியான தீர்வுகளுக்கு தனது ஆதரவையும் உதவிகளையும் வழங்குவது என்ற நிலைப்பாட்டை சுவிற்சர்லாந்து இந்த மருத்துவ உதவிகளின் மூலம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்கினியாகல பிரதேசம்: போலிக் கச்சேரி நடத்திய பெண் ஆவணங்களுடன் கைது

அம்பாறை இங்கினியாகலப் பிரதேசத்தில் போலிக் கச்சேரி ஒன்றினை நடத்தி வந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று முன் தினம் (30) சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய போது சந்தேக நபரான பெண் நடத்தி வந்த போலி கச்சேரியிலிருந்து பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்தி ரங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிரதேச நிர்வாக சேவை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் சிலவற்றினையும் கண்டு பிடித்து கைப்பற்றியதாக இங்கினியாகல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசார ணைகளை இங்கினியாகல பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதி காரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

ஜப்பானின் புதிய பிரதமர் மிகவும் எளிமையானவர்!

japan.jpgஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள யுகியோ கோடோயாமா மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. உலகக் போருக்குப் பின்னர் லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறோரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்ற வரலாற்றை, இத்தேர்தல் மூலம் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டாரோ அஸோ பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜப்பான் ஜனநாயக கட்சித் தலைவர் யுகியோ, மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து யுகியோவின் மனைவி மியூகி, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் ஓர் யதார்த்தவாதி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டவரை போல் அல்லாமல் வெளிநாட்டவரை போல் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக இருப்பவர். அவரை யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்றும் மியூகி கூறினார். மியூகி, முன்னாள் பிரபல நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-2015க்குள் செவ்வாய்க்கு ராக்கெட்…

29-chandrayaan.jpgசந்திரா யன்-2 திட்டத்துக்கு பின் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக பல விஞ்ஞான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் திட்டங்களை அடிப்படையாக வைத்து செவ்வாய் கிரக ராக்கெட்டை எப்படி உருவாக்குவது என்பதை முடிவு செய்ய முடியும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். விரைவில் பிரதமர்  மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரயான்-1 திட்டம் குறித்து மாதவன் நாயர் விவாதிக்கவுள்ளாராம்.

செயலிழந்து போய் விட்ட 514 கிலோ எடை கொண்ட சந்திரயான்-1 விண்கலம் இன்னும் ஓராண்டுக்கு நிலவின் வட்டப் பாதையில் இருக்கும். அதன் பின்னர் அது படிப்படியாக நிலவின் தளத்தில் மோதி விழுந்து விடும்.

இதற்கிடையே, எந்தவிதமான நிலவுப் பயணங்களும் ஒரு ஆண்டு வரை நீடித்ததில்லையாம். அதிகபட்சம் 6 அல்லது 7 மாதங்கள் வரைதான் நீடித்துள்ளன. ஆனால் சந்திரயான்-1 விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிலவைச் சுற்றி வந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.  நிலவின் சுற்றுச்சூழல், சூரிய கதிர்வீச்சு, விண்வெளியில் காணப்படும் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றைத் தாக்குப்பிடித்து சந்திரயான்-1 இத்தனை காலம் இருந்ததே மிகப் பெரிய சாதனை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.