October

October

50 இலட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் மக்கா மசூதியை விரிவுபடுத்த சவூதி அரேபிய அரசு திட்டம்

ramadan-mosque.jpgஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து மக்கா செல் பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால், நெரி சலை தவிர்க்க பல வளர்ச்சிப் பணிகளை சவூதி அரேபிய அரசு செய்து வருகிறது. இதில் ஒன்றாக மக்கா மசூதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்போது அதன் பரப்பளவு 4 இலட்சத்து 800 சதுர மீட்டராக உள்ளது.

இதில் 40 இலட்சம் ஹாஜிகள் பிரார்த்தனை செய்ய முடியும்.  இதை 50 இலட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கா, மதீனா நகரங்களின் கலாசார அடையாளங்களை தக்கவைத் துக்கொண்டு அந்த நகரங்களில் நவீன வசதிகளை மேம்படுத்த கோடிக்கண க்கான ரூபாய் செலவிட்டு வருவ தாக மக்கா கவர்னர் இளவரசர் கலீத் அல் பைசல் தெரிவித்தார். கனடா நாட்டு ஆலோசனை நிறுவ னம் தயாரித்த திட்டத்தின்படி வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மக்கா மசூதி அருகே உள்ள புனிதத் தலங்களான மினா, அரபா, முஸ்தலிபா ஆகியவற்றை மக்காவுடன் இணைக்கும் வகையில் மோனோ ரெயில் போக்குவரத்து ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் திட்டமிட ப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் 2011ம் ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009: சிறுபோக நெல்கொள்வனவுக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – 70,000 மெ. தொ. நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்

190909paddy.jpg2009 சிறுபோக நெல் கொள்வன வுக்கென அரசாங்கம் 2,000 மில் லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் இதன் மூலம் 70, 000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க நாட்டரிசி நெல் ஒரு கிலோவை 28 ரூபாவிற்கும் சம்பா ரக நெல்லை கிலோ 30 ரூபா வாகக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறுபோக அறுவடை இடம்பெற்று வருவதால் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை, அனுராதபுரம் மாவட்டங்கள் உட்பட கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து வலயங்களாக இப்பிரதேசங்கள் கணிக்கப்பட்டு இவற்றிலி ருந்து 70, 000 மெற்றிக் தொன் நெல் இம்முறை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கான சகல நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதுடன் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக இக்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இதுவரை 10,000 மெற்றிக் தொன் நெல் மேற்படி சபையினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொலனறுவையில் 4, 200 மெற்றிக் தொன்னும், அனுராதபுரத்தில் 350 மெற்றிக் தொன்னும் வட மேல் மாகா ணத்தில் 2400 மெற்றிக் தொன்னும் கிழக் கில் 2800 மெற்றிக் தொன்னும் தெற்கில் 1,000 மெற்றிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் சிறுபோக நெல் கொள்வனவு இடம்பெறும் இவ்வேளையில் 2008, 2009 பெரும்போக நெல் கொள்வனவின் மூலம் பெறப்பட்ட நெல்லை சந்தையில் விற்பனைக்கு விட நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிணங்க 15,000 மெற்றிக் தொன் நெல்லை விற்பனை செய்யத் தீர்மானிக் கப்பட்டுள்ளது. பொலனறுவைக்கு 7,000 மெற்றிக் தொன், கிழக்கு மாகாணத்துக்கு, 7,000 மெற்றிக் தொன், வட மேல் மாகாணத்திற்கு 1,000 மெற்றிக் தொன் என, இவ்விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு குடைதான், ஒரு நிறக்குடையல்ல! : யூட் ரட்ணசிங்கம்

Multicoloured_Umbrella1948ம் ஆண்டு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது இலங்கை. அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்துக்காக பல தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டு அகிம்சை வழியில் போராடிவந்தன. தனித்தனிக் கட்சிகளாக நின்று தமிழ்பேசும் மக்களின் உரிமையை வென்றுவிடமுடியாது என்று எண்ணிய இந்த தலைமைகள் 1976ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் கூடி தனித்தமிழீழத்தை வென்றெடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, தமிழீழத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். அதுவே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று அழைக்கப்பட்டது. (வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏதோ ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் எடுக்கப்பட்ட தீர்மானம்போல் சிலர் பிதற்றித்திரிகிறார்கள்.)

இலங்கையின் நான்கு தனித்துவமான இனங்களில் தமிழ்பேசும் மூன்று தனித்துவமான இனங்களின் பிரதிநிதிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற (TULF) குடையை உருவாக்கினார்கள். 1977ம் ஆண்டு தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியீட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தது TULF. இதன் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். (இவர் தந்தை செல்வாவின் தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவார்.) இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டவல்லுனர்.

தேர்தலின்பின் ஒரு குடையில் ஏற்பட்ட விரிசலால் கூட்டுச்சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக குடைக்கம்பிகள் போன்று விலக்கப்பட்டார்கள். அல்லது விலகிப்போனார்கள். ஒரு குடையிலிருந்து விலகிப்போன திரு தொண்டமான், திரு ராசதுரை, திரு தேவநாயகம் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த J R ஜயவர்த்தனாவின் UNP யுடன் சேர்ந்து கொண்டார்கள். தனித் தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுத்தார்கள்.

மிதவாதிகளை மறுத்து அகிம்சையைப் புறக்கணித்து தீவிரவாத இயக்கங்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இவர்களுடைய இலக்கும் தமிழீழமே ஆனால் ஒரு குடைக்கொள்கையை உடனடியாக அமுல்படுத்த முயலவில்லை. காலப்போக்கில் எல்லா இயக்கங்களும் வளர்ந்து போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த பின்னர் நான்கு இயக்கத் தலைவர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள். வட்டுக்கோட்டை போல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு குடைக் கொள்கைதான். அதுவும் காலப்போக்கில் போட்டுத்தள்ளப்பட்டு முடியாட்சியில் முடிந்தது. தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்த மன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது LTTE அமைப்பும் ஒரு குடைக் கொள்கையை கையிலே எடுத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வன்னிக்கு வந்துசேர்ந்த விடுதலைப் புலிகளின் கிளிநொச்சிப் பிரகடனமாக இருந்தது.

இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்போல் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆயதத்தை அரணாகக் கொண்ட தீர்மானம். “வடக்குக் கிழக்கிலே வாழுகின்ற அத்தனை அசையும் அசையாச் சொத்துக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல், அதன்மூலம் தமிழீழத்தை வென்றெடுத்தல்.”

இந்தக் குடைக் கம்பிகளும் கருணாவைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன அல்லது கழன்று போயின. கழற்றப்பட்ட கருணாவும் அவர் சகாக்களும் ஆட்சியில் இருந்த சுதந்திரக்கட்சியுடன் உடனடியாக இணைந்து கொண்டார்கள். தனித்தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மிகுதியான அரசியல் வாழ்வை அர்ப்பணிக்க விரும்புகிறார்கள்.

Tamil_Eelam_Umbrellaகடந்த கால வரலாற்றை நோக்கின் தமிழ்த் தேசியக் குடைக் கொள்கை மக்களை இணைத்ததைவிட பிரிப்பதில் அதிக பங்கு எடுத்துள்ளது. அகிம்சைவாதிகளும் சரி, ஆயததாரிகளும் சரி ஒரு குடையிலிருந்து பிரியும்போது முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஒன்றாகவே காணப்படுகின்றன.
1) ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் செயல்படவில்லை
2) ஒரு மாவட்டத்தின் ஆளுமை
3) தனிநபர் விரோதப்போக்கு
4) மற்றய மாவட்டங்களையும் அந்த மக்களையும் சமமாக ஏற்று மதிக்கப்படாத தன்மை
5) சாற்றை எடுத்துவிட்டுச் சக்கையை துப்புகின்ற சிந்தனை
6) மட்டக்களப்பான் மந்திரவாதி, மலையகத்தான் வடக்கத்தையான், வன்னியான் காட்டுமிராண்டி, முஸ்லீம் தொப்பிபிரட்டி, யாழ்ப்பாணத்தான் பனங்கொட்டை சூப்பி என்று சமூகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களும் அவை சார்ந்த சிந்தனைப் போக்கும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய ஒருகுடையின் கீழ் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவதுபோன்ற பல.

இதுவரை காலமும் ஒரு குடை என்றதுமே அது ஒரு நிறக்குடையாக இருக்க வேண்டும் என்பது கடுமையான நிபந்தனை. ஆளுமை செலுத்துகின்றகட்சி, மக்கள் தொகையில் எண்ணிக்கை கூடிய பிரதேசம், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட தனிநபர், அமைப்பு, ஒரு குழுமமக்கள் போன்ற குறுகிய எண்ணமும் செயலும் ஒரு குடையின் இயங்குசக்திகளாக இருந்தன.

கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவங்களும் கால் நூற்றாண்டு கால வன்முறைகளும் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த தமிழ்த் தேசிய குடைக்கொள்கையின் உள்ளமைப்பை தோலுரித்துக் காட்டி நிற்கின்ற நேரத்தில் மீண்டும் ஒரு குடைக்கொள்கையின் அவசியமும் அவசரமும் பலராலும் உணரப்படுகின்ற வேளை இது ஓர் ஆய்வுக்குரியதாகவும் மாறியிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாறும் முக்கியமாக கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையோடு கூடிய அரசியலும் ஆராயப்பட வேண்டியவை. 30 ஆண்டுகால வன்முறை கலந்த ஆயதப் போரில் நான்கு தனித்துவமான இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சல்களும், மன மாற்றங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தமிழ் தேசியக் குடை மீண்டும் ஒருமுறை மூன்று தனித்துவமான தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கி இயங்கும் தன்மை கொண்டதா? இல்லையென்றால் இதன்பின் ஆய்வு எதற்கு? ஆம் என்றால் எப்படி? கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை எவை?
1) இலங்கையில் வடகிழக்கில் நான்கு தனித்துவமான இனங்கள் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளல்
2) அவர்களுடைய தனித்துவங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவை முதன்மையாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்
3) தவறிப்போன நேர்மையான அரசியலை அறிமுகம் செய்து திறந்த மனதுடனான ஜனநாயக அரசியலை முன்னெடுத்தல், அதுவே ஒரு குடைக் கொள்கையாக பிரகடனப்படுத்தல்
4) சம்பந்தப்படுவோர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை கைவிட்டு (முனிவர் நிலையடைதல்) அத்தனையும் தமது மக்களின் வாழ்வுக்கு அர்ப்பணித்தல்
5) அந்தந்த மாவட்டங்களை அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆளுகின்ற முறைமையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தல்
6) ஒருவரை ஒருவர் தமது தேவைகளுக்காக பயன்படுத்துவது என்ற காட்டுமிராண்டித்தனமான சிந்தனையை கைவிட்டு ஒருவரை ஒருவர் மதித்து, ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற தனித்துவமான திறன்களை சமூகம் பெறும்படியான திட்டங்களை முன்வைத்தல்
7) ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கின்ற வளங்களை அந்தந்த மாவட்டமக்கள் பெறும்படியான திட்டங்களை வகுத்து மிகுதியானவற்றை மற்றய மாவட்டங்களும் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகளை கண்டுபிடித்தல் போன்ற பல கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Multicoloured_Umbrellaஇனி உருவாக்குகின்ற குடை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அவர்களின் தனித்துவங்களையும் ஏற்றுக்கொண்டு மதித்து வாழுகின்ற ஓர் ஜனநாயகத் தளத்தை உருவாக்குகின்ற பல வர்ணக் குடையாக இருக்குமேயானால் இந்தக் குடையின் கீழ் வருவதற்கும் வாழ்வதற்கும் அத்தனை பேரும் விரும்புவார்கள் என்பது என் கருத்து.

மக்களின் மனங்களில் உள்ள சந்தேகங்களை நீக்க புதிய புதிய சிந்தனைகளை வேறுபட்ட தளங்களிலிருந்து உள்வாங்கி ஆய்வுகளை செய்யாதவரை கூடுவதும் பின் பிரிவதும் என்பது தமிழ்த் தேசியத்தின் வாழ்வாக மாறிவிடும். அந்த வாழ்க்கைச் சக்கரத்துள் தமிழ் தேசியம் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப்பட்டுவிடும்.

ஒருவரோடு ஒருவர் சார்ந்து வாழவேண்டும் என்பது தமிழ் சமூகத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நம்முடைய உருவாக்கத்தின் அடிப்படையிலிருந்து உருவான இயற்கை விதி அது. அணுவிலிருந்து அண்டவெளிவரை அனைத்துமே ஒன்றேடு ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. அந்த அணுவால் உருவாக்கப்பட்டு இந்த அண்டவெளிக்குள் வாழும் மனிதன்மட்டும் எப்படி சார்பின்றி வாழ்வது? சார்பின்றி வாழ்வில்லையென்பது வரலாற்று உண்மை. இதை இன்று முழுஉலகும் குறிப்பாக பொருளாதார வல்லரசுகளே உணர்ந்துள்ள காலம் இது. தமிழ்பேசும் மக்களும் தலைவர்களும் உணர்வார்களா?

அவுஸ்திரேலிய வீரர் முதலிடம் – உலக சைக்கிளோட்டப் போட்டி:

011009cadeel.jpgசுவிட் சர்லாந்தின் நட்சத்திர சைக்கிளோட்ட வீரர் பெபியன் கென்சல்ரா, சொந்த மண்ணில் சம்பியன் பட்டம் வெல்லும் அரிய வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் பெபியன் கென்சல்ரா ஐந்தாம் இடத்தையே பெற்றுக்கொண்டார். சுவிட்சர்லாந்தின் மென்டிரிசோ பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றது.

அவுஸ்திரேலிய வீரர் கடெல், எவன்ஸ் 262.3 கிலோ மீற்றர் ஓட்ட தூரத்தைக் கடந்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அலக்சாண்டர் கொல்ப்நோவ் இரண்டாம் இடத்தையும், ஸ்பெய்னைச் சேர்ந்த ஜோக்கின் ரொட்ரிகஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெபியன் கென்சல்ரா பிரகாசிக்கத் தவறியமை உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற டைம் ட்ரயல்ஸ் போட்டிகளில் கென்சல்ரா முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

13 வருடங்களுக்குப் பின்னர் உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் கைச்சாத்து

நிலக்கரி அகழ்தல் ஒப்பந்தத்தில் ஏழு ஆபிரிக்க நாடுகளுடன் வெனிசூலா ஒப்பந்தம் செய்துள்ளது. வெனிசூலாவில் நடந்த ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளின் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

முரிட்டானியா, மாலி நைகர், சிராலியோன், தென்னாபிரிக்கா, அங்கோலா, தன்சானியா ஆகிய நாடுகளுடனே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஆபிரிக்க நாடுகளிலுள்ள எண்ணெய், எரிவாயு, இரும்பு ஆகிய மூலப் பொட்களை அகழ்தல் ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட வேலைகளில் வெனிசூலாவின் கம்பனிகள் ஈடுபடவுள்ளன.

அமெரிக்க மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கெதிராக மாற்று அணியொன்றை உருவாக்கும் திட்டம் பற்றியும் இம்மாநாட்டில் பேசப்பட்டது. நாணயம், இராணுவம் வங்கி உள்ளிட்ட முக்கிய விடயங்களை தென்னமெரிக்க ஆபிரிக்க நாடுகளிடையே பொதுவான அமைப்பொன்றின் கீழ் கொண்டுவரவும் இந்நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளின் உருக்குத் தொழில் இரும்பு, நிலக்கரி அகழ்வுத் தொழில்கள் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்புகளை வெனிசூலாவின் அறிக்கை குறைவாக மதிப்பிட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

பீடைகொல்லி பாவனை ஒழுங்கு விதிகளை மீறினால் ரூ. 5 இலட்சம் வரை அபராதம்

பீடைக்கொல்லி பாவனை தொடர் பான ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பீடைக்கொல்லிகள் பதிவாளர் அலுவலக சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரியான சுமித் ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

பீடைக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பாவித்தல் என்ற தொனிப் பொருளில் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் சுகாதார கல்வி பணியகம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து வயோதிபத்தை வரவேற்போம் : ஒக்டோபர் 1 சர்வதேச முதியோர் தினம் – புன்னியாமீன்

elderly-care.jpgஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும்  நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் ஒக்டோபர் 1 ஆம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட  பிரிவு 45/106  தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும்,  ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.

இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட,  முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும். 

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு
முதுமையடையும் போது,  மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது.  இழையச் சீர்கேடு,  தோல் சுருக்கம்,  தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது.  நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம்.  பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும்,  மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும்,  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.

முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.

மேலும்,  யாரும் இறக்காவிட்டால்,  உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி  (The Genetic Theory of Aging)
மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது,  பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.

ஐ.நா.வின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150 இல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து,  சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம்,  அவர்களின் பங்களிப்பு,  வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில்  இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல்,  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக,  கலாச்சார,  அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்;க்கப்படுகின்றன.

முதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை. அண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம்  ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.

நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு  மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும்,  தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது

இயந்திரமான வாழ்க்கை,  மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும்,  ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள்,  முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.

வளரும் வரைதான் பெற்றோர்… சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால்,  தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள். 

இலங்கையைப்பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது  கூடிய முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011 ஆம் ஆண்டளவில்  60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாகவும்,   2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.

இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.

பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகின்றது? அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.

இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது.   ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.

புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல,  அதே நேரத்தில்  நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட,  இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.