February

February

கண்டி மாநகரசபை மேயர் நீக்கப்பட்டதை ஆட்சேபித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

கண்டி மாநகர சபை மேயர் எல்.பி.அலுவிகாரவை திடீரென பதவி நீக்கம் செய்தமை மத்திய மாகாண முதலமைச்சரின் நியாயமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டி ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபையை விட்டு வெளி நடப்பு செய்ததால் கூட்டம் 15 நிமிடங்களுடன் முடிவடைந்தது.

கண்டி மாநகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பதில் மேயர் தலைமையில் கூடியது. இதன்போது ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் சிலருமாக கண்டி மாநகர சபையின் மேயர் எல்.பி.அலுவிகார பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பமானதும் ஜே.வி.பி.உறுப்பினர் ஆனந்த கோணவல, மேயர் பதவி நீக்கப் பட்டமையானது முதலமைச்சரின் நீதி நியாயமற்ற செயலெனச் சுட்டிக்காட்டினார். ஏனைய சில உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களுடன் சபை கலைந்து சென்றுள்ளது.

விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்

itb.bmpஇலங் கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.

அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது.

BBC தமிழோசை

மட்டு. மாணவிமீது பாலியல் வல்லுறவு : ஒரு சந்தேக நபர் அடையாளம்

மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த 12ஆ ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது, வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டார். பின்னர் இவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது, அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தெரிவித்தார்.

4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

ஸ்ரீரங்கா நுவரெலியா மாவட்டத்தில்…

unp-logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் முன்னணி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கே.கே.பியதாசவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு, ஸ்ரீரங்கா, திகாம்பரம், உதயகுமார், சதாசிவம், எல்.பாரதிதாஸன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன! முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி

thangeswari.jpgஅரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்

 sandanaya.pngஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பெறுகின்றவ்களின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பின் செயலாளர்  நாயகம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தோதல்கள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (26) கையளித்தார்.
பட்டியலில் இடம்பெறுகின்றவர்கள்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரட்ன
டலஸ் அழகப்பெரும
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
டியூ குணசேகர
பேராசிரியர் விஸ்வா வர்ணபால
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
அச்சல ஜாகொட
எம். எச். முஹம்மட்
கீதாஞ்சன குணவர்தன
விநாயகமூர்த்தி முரளிதரன்
வி. ஜே. மு. லொக்கு பண்டார
சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்
முத்துசிவலிங்கம்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
மொகமட் முசம்மில்
அனுருத்த ரத்வத்த
ஏ. ஆர். பீ. சூரியபெரும
ஜானக பிரியந்த பண்டார
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
லெஸ்லி தேவேந்திர
சந்திரசேகரன் சண்முகநாதன்
ஏ.எச். எம். அஸ்வர்
டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க
யூ. எல். சாஹுல் ஹமீத்
கமலா ரணதுங்க
சரத் கோங்காகே
மாலினி பொன்சேகா

”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது – பாதுகாப்பு செயலர்

gr.jpgஅரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது.

எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அடுத்த இரு வாரத்தில் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு அரசாங்கம் அறிவிப்பு

sarath_fonseka.jpgஇராணு வத்தினால் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், குற்றவியல் கோவை நாணயப் பரிமாற்றச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்தது.

சுமார் 40 வருடங்கள் இராணுவச் சேவையிலிருந்து இராணுவத்தளபதியாக பதவி வகித்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அரசியலில் பிரவேசித்த ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வந்தது. இதனடிப்படையில் ஜெனரல் பொன்சேகா இராணுவத்தினரால் இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அவர் மீதான விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வரும் நிலையில் சட்டமா அதிபர் சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவம் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அது முடிவுற்றதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தல் போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

அது அவ்விதமிருக்க அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கமைய அவர்மீது சிவில் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்படவிருக்கின்றன.இராணுவத்துக்கு ஆயுதங்கள் உபகரணங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற ஊழல் தொடர்பானது இது றைகோப் நிறுவன ஊழல் மோசடியாகும்.அடுத்தது இராணுவத்தை பிளவுபடுத்தி அரசுக்கு எதிராகச் செயற்படத்தூண்டியமை, மூன்றாவது தப்பியோடிய இராணுவத்தினரை அணிதிரட்டி தனது தேர்தல் பிரசாரப்பணிகளுக்குப் பயன்படுத்தியமை. இவற்றுக்கு மேலதிகமாக நாணயப் பரிமாற்றச்சட்ட விதிகளுககு முரணாக பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை வங்கிப்பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தமையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றைச் சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தயார்படுத்தி வருகின்றார்.இந்த சிவில் வழக்குக்குப் புறம்பாக ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை தொடர்ந்து இடம்பெறும்.அத்துடன், ஒரு உயர் இராணுவ அதிகாரிக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா கைது விவகாரத்தை உள்ளூர் அரசியல் சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதுபடுத்திக் காட்டி அரசுக்கு எதிரான விதத்தில் சர்வதேச மயப்படுத்தி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து போதுமான பதிலாக அமைந்துள்ளது.அவரது கைது நியாயமானது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

tn.jpgஅமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.

ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.

அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத்  திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.

முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.

அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும்,  புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும்,  கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;

தம்பிமுத்து,  சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம்,  யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர்,  ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி,  தினகரன்,  சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி,  புதினம், அஞ்சல்,  தொடுவானம்,  ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும்,  பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” 

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும்,  நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற  வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால்,  இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும்,  ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான்  நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும்,  எனது கவிதைக் கோவைகளையும்,  என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும்,  காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்:  இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம்,  87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்:  Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ  லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை,  மதுரகவி,  சொல்லின் செல்வர்,  புலவர் மணி,  செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும்,  அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை,  புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை,  கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!

அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.