March

March

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம் – ஜனாதிபதி

president.jpgவட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது.  இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக்கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்

sarath_fonseka-02.jpgஇராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்ற 1100 இராணுவ பொறியியலாளர்களும், 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் ஏ-32 வீதியின் இரண்டு பக்கமும் காரைநகர் ஜெட்டி வரையும், ஏ-9 வீதியின் இரண்டு பக்கமும் சுன்னதீவு முதல் ஆனையிறவு வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் ஆனையிறவு முதல் ஓமந்தை வரையான ஏ-9 வீதியின் இருபக்கமும் ஏ-35 வீதியின் இரு பக்கமும், பி- 69 வீதியின் இருபக்கமும் அகற்றப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள 25 கிராமங்கள் கண்ணிவெடி அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது முல்லைத்தீவின் ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மாந்தை மேற்கின் 15 கிராம சேவகர் பிரிவுகள், மாந்தை கிழக்கின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் அகற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் சேமமடு கிராம சேவகர் பிரிவில் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சுமார் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட எண்ணிக்கையிலானவர்களே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்குடன் படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு நீடிக்கும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இந்தக் காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவதான நிலையம் பொது மக்களை கேட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மின்னல் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இடி மின்னல் வேளைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இடி, மின்னல் வேளையில் கையடக்கத் தொலைபேசியுடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த நபர் ஒருவரை மின்னல் தாக்கியதில் நால்வர் மாத்தளை பகுதியில் காயமடைந்தனர். மின்னல் தாக்கியதில் நேற்று முன்தினம் புசல்லாவ பகுதியில் ஒருவர் இறந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது- அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவிப்பு

patalee_champica_ranawake.jpgஅரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாகவும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முழுயாக நிராகரிப்பதாக அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, மக்களின் இரண்டில் மூன்று பெரும்பான்மை பலத்தைப் பெற்று இந்த அரசியல் யாப்பை திருத்த அரசாங்கம் தீர்மானத்துள்ளது. அரசியல் யாப்பில் எந்தெந்த பகுதிகள் திருத்தப்படும் என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பதவியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளோம். அமைச்சுக்களின் ஆலோசனை சபை முறையை மாற்றவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை பலப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை எவ்வாறு மாற்றப்படும் என விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளின் எல்லைகளை மாற்றி கூடுதல் அதிகாரம் வழங்கவும் சகல கிராம சேவகர் பிரிவிலும் ஜனசபாக்களை அமைக்கவும் தொகுதிவாரி முறையையும் விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தவும் உள்ளோம். 17 வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்தி ஒழுங்கான முறையாக மாற்றப்படும்.

யாப்பிலுள்ள சில பகுதிகளை சிறிய பெரும்பான்மை பலத்துடன் மாற்றலாம். சில பகுதிகளை இரண்டில் மூன்று  பலத்துடனும் சர்வஜன வாக்குடனும் மாற்ற வேண்டும். யாப்பை முழுமையாக திருத்தும் தேவை அரசுக்கு இல்லை. 1978 ஆம் ஆண்டில் போன்று யாராலும் முழுமையாக யாப்பை திருத்த முடியாது. பிரதான கட்சிகள் யாவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அவை வெறும் தேவதைக் கதைகளாகவே உள்ளன.

உலக நாடுகளில் லிபரல் பொருளாதார கொள்கைகள் அழிந்து விட்டன. ஜப்பான் முதல் அமெரிக்காவரை இன்று மஹிந்த சிந்தனையில் உள்ளவாறு உள்நாட்டு பொருளாதார முறைகளை பின்பற்றுகின்றன. உலக நாடுகள் கைவிட்ட லிபரர் பொருளாதார முறையை ரணில் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மின்சாரத்துறையை அழித்த ரணில் சகலருக்கும் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று 88 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடத்திற்குள் சகலருக்கும் மின்சாரம் வழங்கப்படும். கையடக்கத் தொலைபேசி பாவனை செய்வோர் தொகை 3 மில்லியனில் இருந்து 14 மில்லியனாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு 30 ஆக அதிகரித்துள்ளதோடு 6 வருடத்தில் 60 வீதமாக உயர்த்தப்படும்.

1983 கலவரத்தை தூண்டி நாட்டை சீரழித்தது ஐ.தே.க. அரசாங்கமே. ஆனால் இன்று அந்தப் பொறுப்பை சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும் என்று ரணில் கூறியுள்ளார். ஐ.தே.க. வின் தவறினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்பல்ல.

யுத்தக் குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களுக்கு எதிராக அரசாங்கம் அமுலில் உள்ள சட்டங்களின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.தே.க. ஆட்சிகளைப் போன்று வதை முகாம்களை அமைத்து எமது அரசு தண்டனை வழங்காது. புதிய பாராளுமன்றத்தில் தெரிவாகும் ஐ.தே.க. எம்.பிகளில் படித்தவர்கள் அரசியல் யாப்பை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

president.jpgதேர்தல் பிரசார நட வடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதி நேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்தார். வியாழனன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

“உதயன்’, “சுடர் ஒளி’ மீது வழக்குத் தாக்கல் செய்வாராம் டக்ளஸ்

boy.jpg“சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை’  என்ற தலைப்பில் நேற்று “உதயன்’, “சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகளுக்காக அப்பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

“உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத் தாக்கல்’ என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும்  குறிப்பாகத் தேர்தல்களில்  இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும் 
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த “உதயன்’ மற்றும் “சுடர் ஒளி’ பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சுவரொட்டிகள் 5 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படும் – 208 முறைப்பாடுகள்; 130 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் என்று தெரிவித்த அவர், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 208 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெருந்தொகையானோர் கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு பொது மக்களினதும், ஆதரவாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் இராணுவம் நிர்மாணித்த 437 வீடுகள் புத்தாண்டுக்கு முன் கையளிப்பு

house.jpgயாழ்ப் பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன. நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.

பிரதேச, நகர சபைகளை இணைத்து மாநகர சபையாக தரமுயர்த்த திட்டம்

களனி பிரதேச சபையையும், பேலியாகொடை நகர சபையையும் இணைத்து மாநகர சபையாக அமைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக பரிசீலனை செய்து மேற்பார்வையை முன்மொழிவதற் காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச். பீ. ஹேரத் குழுவொன்றை அமைத்துள்ளார். மாநகர சபையின் எல்லை விபரம், அதற்கு உட்படும் கிராம சேவகர் பிரிவுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவையும் முன் மொழியப்படும்.

இவ்விடயமாக பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பிரஸ்தாப குழு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இது பற்றிய கருத்துக்களையும் ஆலோச னைகளையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சங்கங்கள், நிறுவனங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளன.