April

April

நாடுகடந்த தமிழீழம் – நிலம் தொடாத வேர் – ரி சோதிலிங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான போராட்டமாகவே அமைந்தது. இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். இந்த அழித்தொழிப்பு வரலாறு அதனுடன் நிற்கவில்லை. ‘தமிழீழத் தேசியத் தலைவர்’ பெற்றுத் தராத தனித்தமிழீழத்தை அவரின் தடங்களைப் பின்பற்றி பெற்றுத் தருகிறேன் என்று மே 18க்குப் பின் உருவான மதிஉரைஞர் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் என்று கலையாட ஆரம்பித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவு இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் அழியும்வரை போராடி முழுத் தமிழர்களையும் இல்லாதொழிக்காமல் பாதுகாக்கப்பதற்கு உதவியுள்ளது என்பது யதார்த்தம். இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் இருந்தது என்பதே வரலாறாகி இருக்கும். அது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது எமக்கு இருக்கின்ற வளங்களை இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இன்று வெளிநாடுகளில் பேசப்படுகின்ற நாடுகடந்த தமிழீழம் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலின் ஒரு தொடர்ச்சியே. உருத்திரகுமாரனின் சன்றைஸ் வானொலிப் பேட்டியின் போது கூறப்பட்ட கருத்துக்களின்படி புலிகள் ஒரு நிழல் அரசை வைத்திருந்தாகவும் அதன் போராட்ட தொடரச்சியையே இன்று இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற அமைப்பினர் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தமிழ்ப்பிரதேசங்களில் புலிகளின் படை என்ன செய்தது என்பதும் இன்று வெளிநாடுகளில் இந்த நாடு கடந்த தமிழீழப் படை என்ன நடாத்தி முடிப்பார்கள் என்பதும் எதிர்வுகூறக் கூடியதே.

வணங்கா மண், கண்ணீர் வெள்ளம் போன்ற இன்னோரன்ன நிதி சேகரிப்புக்கும் அதற்குக் கணக்குக் காட்டுவதற்கும் இவ்வாறான அரசியல் சதிராட்டங்கள் அவசியம். ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றும் ஜனநாயகம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழர்களின் நலன்களில் அக்கறை காட்டி தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இப்படியானவர்களை வணங்கா மண் மூர்த்தி தொடக்கம் இல்போர்ட் பிள்ளையார் கோயில் செல்வராஜா வரை இப்பட்டியல் மிக நீளமானது. நாட்டுக்கு நாடு தனித்தனிப் பட்டியல் உண்டு.

இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும் இந்த சூழ்நிலைகளை மிகத்தந்திரமாக பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வைக்கப்படுகின்றது. ‘தேசியத் தலைவர்’ இன் இறுதியாணை நிறைவேற்றியுள்ளதை காட்டி மீண்டும் நிதி சேகரிக்க ஆரம்பிக்கவே இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ உதவப் போகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. இதில் பல முன்னணிக் கொள்ளையர்கள் சில உள்ளுர் கொள்ளையர்களை இப்போது அமர்த்தி இந்த நாடு கடந்த அரசு உருவாக்கம் என்ற நாடகத்தை தொடக்கிவிட்டு பின்னர் தாமே நேரடியாக களமிறங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

சர்வதேச சட்டதிட்டங்களைப் படித்து சர்வதேச ஜனநாயக நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்த உருத்திரகுமாரன் மக்கள் அமைப்புக்கள், மக்கள் போராட்டம் என்பது என்ன? மக்களின் பங்களிப்பு என்பது என்ன? என்ற அர்த்தம் புரியாமலே வானொலியில் பேசினாரா? அல்லது இவரும் மோசடியில் இணைந்து செயற்ப்படுகிறாரா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.

சன்றைஸ் வானொலியில் ஒருவரின் கேள்வியில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று கூறும் உருத்திரகமாரன் ஏன் தமிழர்க்கும் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று இருக்காமல் ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று இயங்குகின்றார்.

இந்த நாடு கடந்த தமிழீழம் என்பது ஆரம்பிக்கப்பட்டது எப்படி? எந்த ஜனநாயக அடிப்படையில் இது உருவாக்கப்படடது? போன்ற விபரங்களை எந்த நாடு கடந்த தேர்தல் வேட்பாளர்களும் பேசுவதாக இல்லை. மாறாக இவர்களது விளம்பரங்களை பார்த்தால் இவர்கள் தமது சுய நலத்தின் அடிப்படையிலே பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்கு செய்த சேவைகள் பற்றி சொல்லவதற்கு எதுவுமே இல்லை. இவற்றைவிட இதில் சிலர் முன்னணி கிரடிற்காட் மற்றும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.

‘புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. போராட்டம் தொடரப்பட வேண்டும்’ என்பதே உருத்திரகுமாரனின் கருத்தாக இருக்கிறது. போராட்டம் எங்கே என்றால் ‘புலம்பெயர்ந்த நாட்டில்’ நடக்குமாம். நாடுகடந்த தமிழீழம் என்பதை தான் உருத்திரகுமார் போராட்டம் என்கிறார். தமிழீழம் யாருக்கு என்றால் என்றால் அது தாயகத்தில் உள்ள மக்களுக்காகவாம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்க்கால் வெட்டுகிறார்கள் என்ற அச்சம் நியாயமானதே. இம்முறை உருத்திரகுமாரன் தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் புலிகளின் போராட்டம் பற்றிய எந்தவித மதிப்புக்களும் இல்லாமல் புலிகளின் பணங்கள் விபரங்கள் சொத்துக்கள் பற்றியோ யார் இவற்றிக்கெல்லாம் இன்று பொறுப்பானவர்கள் பற்றியோ எந்தவித பேச்சுக்கள் இல்லாமல் சிலர் ஒளித்திருந்து இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். திரைமறைவில் இருப்பவர்கள் யார்? இவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள்? போன்ற விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால் பிறகு எப்படி ஜனநாயக அமைப்பு, அது, இது என்று பேசுகிறார்கள். அது மட்டுமல்ல இவையாவும் மக்கள் போராட்டம் என்று உருத்திரகுமாரன் பேசுகிறார். இது உருத்திரகுமாரனுக்கு மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லை என்பதேயாகும். இவர் சன்றைஸ் வானொலியில் பேசும் போது ‘புலிப் போராளிகள் மக்களிடமிருந்தே வந்தனர். ஆகவே இது மக்கள்’ போராட்டம் என்றார். இவர் சுருக்கமாக ‘தலைவர்’ தமிழ் மக்களிடமிருந்தே வந்தார் ஆகவே இது மக்கள் போராட்டம் என்று சொல்லியிருக்கலாம்தானே.

இதர தமிழ்க்கட்சிகள் ரிஎன்ஏ மற்றும் திம்பு பேச்சவார்த்ததையில் ஈடுபட்ட அமைப்புக்களிடம் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல், இதர தமிழ்க் கட்சிகளுடன் எந்த ஒரு கூட்டிணைவையும் ஏற்படுத்தாமல் அல்லது அதற்கான முயற்சிகளையும் செய்யாமல் நாடு கடந்த தமிழீழம் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் பாணியில் புறப்பட்டு உள்ளனர். இந்த நாடுகடந்த தமிழிழத்துக்கான ஆணைபெறல் என்பது புலிகள் பாணியிலான ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற சண்டித்தனமேயன்றி வேறேதுமில்லை.

‘இந்த நாடு கடந்த தமிழீழத்தை தாயகத்துக்குள் புகுத்துவதற்கு ஒரு இடைவெளியை சர்வதேசம் ஏற்படுத்தும்’ என்றும் ‘இந்த இடைவெளியை உருவாவதற்கு சர்வதேச சமூகத்திலும் இந்திய பிராந்தியத்திலும் உள்ள சர்வதேச மயமாக்கலில் ஏற்படவுள்ள சீன இந்திய உறவு விரிசல்களை உருவாக்கும்’ எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார். இவர்கள் இதனை நம்பியே ‘மக்கள் போராட்டத்ததை’ நடாத்துகிறார்கள். இவர்களும் நிலத்தை தொடாத ஆணி வேர்களேயாகும். ‘இன்று நாட்டிலுள்ள தலைமைகள் ரிஎன்ஏ இந்தியாவின் கையாட்கள்’ என்றும் ‘இலங்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை’ என்றும் ‘வெளிநாடுகளிலேயே இந்த உத்தேச தமிழீழத்தை வளர்க்க வேண்டும்’ என்றும் உருத்திரகுமாரன் கருத்துப்பகிர்வு செய்வதன் மூலம் மக்களைத் தொடாத மக்கள் சம்பந்தப்படாத ஒருவிடயத்தை மக்கள் மீது திணிப்பதாகவே உள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழ் இளைஞர்க்கு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆயதப் போராட்டத்தை புலிகள் நடத்தியதாகவும் இன்று அதன் மற்றுமொரு வடிவமாகவே இந்த நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுவதாகவும் உருத்திரகுமாரன் கருத்து தெரிவித்தார்.

‘இந்த ஆயுதப் போராட்டத்திற்கு புலிகளுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒரு புலிகளின் நிழல் அரசு இருந்ததாகவும் இதில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் இதில் புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்துள்ளதாகவும்’ உருத்திரகுமாரன் தெரிவிக்க முயன்று ‘புலிகளின் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மக்கள் போராட்டத்தில் மக்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லத் துணிவில்லாதவரை நம்பி இத்தனை வேட்பாளர்கள் தமது சுயமரியாதையை இங்கே இழக்க உள்ளனர்.

இதே வானொலி நிகழ்வில் யூத மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட பின்பே இஸ்ரேல் உருவானதாகவும் இதேபோல் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருப்தாகவும் தமிழீழம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் உருத்திரகுமாரன்.

இந்த உருத்திரகுமாரின் பேச்சில் இவரும் முள்ளிவாய்யகாலில் பெருந்தொகையாக மக்கள் கொல்லப்பட்டதிற்கு புலிகள் மக்கள் இருப்புக்களின் மீது தாக்குதல் நடாத்தி மக்களை கொலை செய்ததற்கும் தொடர்புடையரவாகவே தென்படுகின்றுது. ஜபிசி-வானொலி, ஜிரிவி, தீபம் தொலைக்காட்சி சேவையினர் இந்த தமிழ் மக்களை தொகையாக கொலைக்களத்தில் தள்ளியதில் தொடர்புடையவர்களே. இவர்கள் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு தமது சுயநலனுக்காக இளைய தலைமுறையினரை உசுப்பிவிட்டதில் பெரும்பங்கு கொண்டவர்களாகும். இப்போது இவர்கள் மீண்டும் நாடு கடந்த தமிழிழத்திற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்னர். இன்று இவர்கள் ‘மக்கள் ஆணை’ என்றும் ‘மக்கள் தீர்ப்பு’ என்ற பொய்யான பிரச்சாரங்களை தொடக்கிவிட்டுள்ளனர்.

ஜிரிவி, ஜபிசி, தீபம் அமைப்பினரும் புலிகளால் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பங்கு போட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்து இதில் குறிப்பாக முதலாம் கட்ட போர் நிதியிலிருந்து கண்ணீர் வெள்ளம், வணங்காமண், இறுதிக்காலப் போர்நிதி தமிழீழ காப்புறுதி என பலவகைப்பட்ட நிதி சேகரிப்புக்களுக்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் புலி இணைவு ஊடகங்களான இவர்களாலேயே மக்கள் ஏமாற்றப்பட்டதாகும்.

‘நாடு கடந்த தமிழீழம் கடந்தகால புலிகளின் போராட்ட தொடர்ச்சி’ என்று கூறும் உருத்திரகுமாரன் ‘கடந்த காலத்தில் நடைபெற்றது மக்கள் போராட்டம்’ என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களும் தமிழ்பேசும் மக்களே என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களை ஏன் சுட்டுத்துரத்தினர் என்பது பற்றி மெளனமாகவே உள்ளார்.

முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்கள் என்றால் இந்த நாடு கடந்த தமிழீழம் அமைப்பினர் எந்த முஸ்லீம் அமைப்புடன் பிரதிநிதிகளுடன் பேசினர் என்பதை இன்று வரையில் ஏன் வெளியிடவில்லை.

ரிஎன்ஏ தமிழரசுக் கட்சியினர் குறைந்த பட்சம் ஒரு சிங்களவரையென்றாலும் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெற்றனர் இந்த 30 வருட மக்கள் போராட்ட ஜனநாயக அனுபவம் என்று கூறும் உருத்திரகுமாரனும் இந்த நாடுகடந்த தமிழீழத்திற்கான அமைப்பினரும் எத்தனை முஸ்லீம்களை இந்த நாடுகடந்த தமிழீழ வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மாறாக இந்த நாடுகடந்த பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களில் பலர் முன்னாள் புலிகளும், புலிகளின் பெயரில் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களிலிருந்து பணங்களை திருடியவர்களும், இதர தமிழ் முஸ்லீம் அமைப்பினரையும் அமைப்புக்களையும் துரோகிகள் என் முத்திரை குத்தியவர்களும், முஸ்லீம்களை தமிழ் இன விரோதிகள் என வர்ணித்து புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேசியவர்களும், இதர கட்சிகள், சமூக அமைப்பினர், இயக்கங்கள், சங்கங்களின் மீது பயங்கரவாத்தினை கனடா, ஜரோப்பாவிலும் இலங்கையிலும் நடாத்தியவர்களுமேயாகும்.

இதைவிட வன்னி மக்கள் வன்னி போரின்போது வன்னி மண்ணைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் தலைவுடன் இருந்து பேராட வேண்டியவர்கள் என்றும் போர் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடியவர்கள் இனத்துரோகிகள் என்றும், தலைவனை விட்டுவிட்டு அரச முகாமிற்கு வந்தவர்களுக்கு (குழந்தைகள், விதவைகள் வயது வந்த முதியவர்கள்) உதவிகள் செய்யக்கூடாது என்றும் இவர்களை அரச முகாம்களிலிருந்து சாக வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த நாடு கடந்த தமிழிழத்திறகான வேட்பாளர்களில் பலர் நேரடியாக ஜபிசி, ஜிரிவில் கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான இவர்கள் தமது கடந்தகால தவறுகளையும் மக்கள் விரோதங்களையும் ஒன்று சேர கூட்டி அள்ளி தமது தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் மக்கள் முன் பசுத்தோல் போர்த்துக்கொண்டு அப்பாவிகள் போன்று நிற்கிறார்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம்மக்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் கடந்தகால புலி ஆதரவு பற்றிய ஒரு முழுமையான விமர்சனமேயாகும். இவர்கள் தமது கடந்தகால புலி ஆதரவு பற்றிய சுய விமர்சனத்தை பொதுவாக மக்கள் முன்வைக்காது மக்கள் முன்வந்து நிற்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது.

‘புலிகள் அமைப்பும் மக்கள் அமைப்பு ஜனநாயக அமைப்பு’ என்று அடிக்கடி கூறும் உருத்திரகுமாரன் ஏன் புலிகளின் கடந்தகாலம் பற்றியோ புலிகளின் நிதிகள் பற்றியோ புலிகளின் சொத்துக்கள் பற்றியோ ஏதும் பேசாமல் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களின் ஜனநாயகப் பண்பும் வெளிநாடுகள் தம்மை தமது நலனுடன் இணைத்தே ஆதரிப்பர் என்பதும் இந்த அமைப்பு எந்த விடயங்களையும் தமிழ் மக்களின் நலனில் இருந்தோ நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகிளிலிருந்தோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த நாடு கடந்த அமைப்பின் பேராசிரியர் ஒருவர் தனது கட்டுரையில் இது மக்கள் அமைப்பு என்றும் மக்களிடமிருந்து பணம் வந்தால் மட்டுமே இந்த அமைப்பு இயங்க முடியும் என்றும் எழுதியதும் இந்த அமைப்பும் அமைப்பின் முன்னிணயாளர்களது நோக்கமும் சந்தேகத்தை வளர்த்து விட்டுள்ளது.

கடந்தகால புலிகளின் ‘மக்கள் போராட்டத்தின்’ போது காயப்பட்ட, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது? தாம் முள்ளிவாய்க்கால் வரையிலான தமது பங்களிப்பின் புலிகளுக்கான ஆதரவின் மதிப்பீடு என்ன? என்ற ஏதாவது கருத்துக்கள் உண்டா? எல்லாமே தமது சுய புராணமும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றிய ஆழுமையற்ற கருத்துக்களும் வசனங்களுமேயாகும். இவையாவும் இவர்களில் பலர் போராட்டம் மக்களுக்கான சேவை பற்றிய தப்பான அபிப்பிராயமும் இந்த நாடுகடந்த தமிழீழம் என்ற வாகனத்தில் ஏறி தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிதி சேர்த்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் என்ற பலமான சந்தேகம் புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிடையே வளர்ந்து விட்டது – இதே போன்ற சம்பவங்களால் புலிகளின் கடந்தகால போராட்ட வரலாறு நிறைந்துள்ளதும் இதன் அனுபவ அடிப்படையில் தாமும் பணம் திருடும் நோக்கம் இதில் நிறையவே உள்ளதை புலம்பெயர்மக்களில் பலர் உணர்கிறார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் என்றுமே தலைவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகியதும் அவர்களைத் தூக்கியெறிந்த வரலாறு கொண்டவர்கள். வன்னி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் மக்கள் அவர்களைத் தூக்கியெறிந்ததே. அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களால் தூக்கியெறியப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழத்தின் தாயகக் கட்சியாக உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டனர். கொங்கிரஸ் கட்சியில் நின்று புலம்பெயர்ந்த மக்களின் தயவில் போட்டியிட்ட இவர்களை மக்கள் முற்றாக நிராகரித்தனர். உருத்திரகுமாரன் தலைமையில் உள்ள நாடு கடந்த தமிழீழத்தவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

மானிடம் வெல்லும்.

இந்திய, பாக்., பங்களாதேஷ் பிரதமர்களுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சுவார்த்தை

m-r.jpgஇந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவியதாகவும் இதனால் கிடைத்த முன்னேற்றம் தெற்காசிய வலயத்துக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் முன்மாதிரியாகுமென்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் கூறினர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை ஜனாதிபதி பெற்ற அமோக வெற்றி தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சார்க் வலய பாராளுமன்றமொன்றை அமைக்கும் நடவடிக்கை அடுத்த வருடத்துக்குள் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்டினார். அதற்காக பாகிஸ்தான் – இலங்கை மற்றும் பங்களாதேஷ் – இலங்கை என கூட்டு ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாகும். அதேபோன்று இந்த நாடுகளுக்கிடையே விமான சேவைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும் பேச்சு இடம்பெற்றது.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கு மிஹின் எயார் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதியுடன் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் எதிர்காலத்தில் பணியாற்ற பாகிஸ்தானிய மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

mervyn2.jpgஊடகத் துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார். தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார். இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா அடுத்த வாரம் செய்தியாளரை சந்திப்பார்- விஜித ஹேரத்

sarath_.jpgபாராளு மன்றம் அடுத்த வாரம் கூடும்போது அமர்வுகளில் பங்கேற்கவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதனை ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது கூட்டத்தின் போது ஜெனரல் பொன்சேகாவை ஊடகவியலாளர் சந்திக்க முடியவில்லை. அத்துடன், அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருந்தன. இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை, அவசர சபைச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதம் மே மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற விருப்பதாகவும் அந்த விவாதத்தில் எதிரணியின் பிரதான பேச்சாளராகப் பொன்சேகா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத் கூறினார்.

நாட்டிலுள்ள மனித உரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து பொன்சேகா பேசுவார். தனிப்பட்ட முறையில் இப்பிரச்சினைகளை பொன்சேகா எதிர்கொண்டுள்ளார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார். அதேவேளை, எதிர்காலத் தேர்தல்களில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணத்தின் கீழேயே ஜே.வி.பி. போட்டியிடுமெனவும் ஹேரத் கூறியுள்ளார்

“மலையக மக்களுக்கு பயன்தராத அமைச்சை இ.தொ.கா. ஏற்காது”

மலையக மக்களுக்குசேவையாற்றக்கூடிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டம் கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி.சக்திவேல் கருத்துத் தெரிவிக்கையில்;

நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்ட மூவர் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். எமக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவியும் அமைச்சுப்பதவியும் வழங்க அரசு முன்வந்தது. பிரதியமைச்சுப் பதவியை எமது கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் ஏற்றுள்ளார். கால்நடை அபிவிருத்தி அமைச்சை அரசு வழங்க முன்வந்த நிலையில் அதனை நாம் ஏற்கவில்லை.

கால்நடை அமைச்சை வைத்துக்கொண்டு மலையக மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் எமது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அதனை ஏற்கவில்லை. மலையகத்துக்குச் சேவை செய்யக்கூடிய சமூக அபிவிருத்தி மற்றும் மனித வளத்தையும் இணைத்துத் தருமாறு நாம் கோரியுள்ளோம். இதன் மூலமே உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.

மலையகத்தில் வீடு, குடிநீர் உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதால் கால்நடையுடன் இணைந்த அமைச்சுப் பதவியை நாம் கோரினோம். இந்நிலையில், அரசாங்கம் மலையகத்தக்குச் சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியை வழங்க இணங்கியுள்ளது. ஜனாதிபதியின் பூட்டான் விஜயத்துக்குப் பின்னர் எம்மால் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்போம் இல்லாவிட்டால் நிராகரிப்பதெனத் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சி, தொழிற்சங்கத்துக்கு அப்பால் சமூக ரீதியான சிந்தனை வலுப்பட்டு வருகின்றது. இதனாலேயே மாற்றுக் கட்சியின் மத்தியில் பொதுத் தேர்தலில் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் மலையக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளைப்பெற்றுக்கொடுக்கவும் எமக்கு சக்தியளிக்கும் பொருட்டு கொட்டகலை நகரில் நாம் நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தில் பேதங்களை மறந்து அணிதிரளுமாறு கோருகின்றேன் என்றார்.

மே தினத்தையிட்டு ஊர்வலங்கள், கூட்டங்கள்

2010-may-day.jpgபயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து மே தினம் உழைக்கும் வர்க்கத்தினால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளும் தொழிற் சங்கங்களும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் பிரதான மேதினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு தலைமைதாங்குவார். பெருமளவிலான தொழிலாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது. ஐ. தே. க. இம்முறை சமய நிகழ்வுகளை மாத்திரமே ஏற்பாடு செய்துள்ளது.

இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இடதுசாரி முன்னணி ஆகியன நாரஹென் பிட்டி சாலிகா மைதானத்தில் நடைபெறும். இ. தொ. கா. அதன், மே தினக் கூட்டத்தை தலவாக்கலையில் நடத்துகிறது. ஜே. வி. பி. பொரள்ள கம்பல் பூங்காவில் அதன் கூட்டத்தை நடத்துகிறது.

வவுனியா வடக்கில் 80 வீத மீள் குடியேற்றம் பூர்த்தி

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். இரண்டு கிராமசேவையாளர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் நடைபெறவேண்டியுள்ள தென வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நெடுங்கேணி அரசினர் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளும் நடைபெறுகின்றன. நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய இடத்தில் இயங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை -சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ

gunasekara.jpgபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது, “நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம். சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் டியூ.

கிளிநொச்சி, முல்லையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 960!

கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி, முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வட மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக இருந்தவருமான தி.இராசநாயகம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் இவ்விபரம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 960 சிறுவர்களும் தந்தை, தாய் இருவரையும் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் மகளிர் இல்லத்தில் தாய் தந்தையரை இழந்த 100 பெண்கள் முதற்கட்டமாக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், முழுமையான கணக்கெடுப்பொன்று நடத்தப் பட்டால் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கபட்டுள்ள சிறுவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்படத்தக்கது.

தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

Jaffna_Signயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி – விஸ்வா, யாழ்ப்பாணம்.