April

April

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

m-r.jpgசர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.

சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.

வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.

சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும். காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.  தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.

இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும். ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.

இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது. உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும். இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன்றாகும். தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

சார்க்கில் சீனா இணைவதற்கு சந்தர்ப்பம் எதுவும் இல்லை

ஆசியாவின் வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவானது 16ஆவது சார்க் உச்சி மகாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாவ் குயங்கியா “அவதானி” என்ற அந்தஸ்துடன் கலந்துகொண்டிருக்கின்ற போதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

சார்க் அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் பிராந்தியத்துக்கு வெளியேயுள்ள நாடொன்று (சீனா) அங்கத்துவம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதிகாரி ஒருவர் ரான் ஒஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

அத்துடன் சார்க் அமைப்பினை விரிவுபடுத்தும் யோசனை எதுவும்
முன்வைக்கப்படவில்லை என்றும் அத்துடன் புதிய நாடொன்றை உறுப்பினராக சேர்த்துக்கொள்வதாயின் சகல உறுப்பினர்களும் ஏகமனதாக இணங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் – கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை

pm.jpgநாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள். பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.

ஒரேவிதமான நாணய புழக்கத்திற்கு தெற்காசியா இன்னமும் தயார் இல்லை

saarc-logo.jpgதெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிராந்தியத்தில் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவது தொடர்பாக ஆராய்வது முன்முதிர்ச்சியற்றது என்று சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் ஷீல் காந்த் சர்மா கூறியதாக பேர்னாமா செய்திச் சேவை நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

புதுடில்லியில் 2007 இல் சார்க்கின் 14 ஆவது உச்சிமாநாடு இடம்பெற்ற வேளை சார்க்நாடுகளின் மத்தியில் பொதுவான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் யோசனையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலாவதாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் தெற்காசிய நாடுகள் மத்தியில் தாழ்ந்த மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் நிதிப்பாய்ச்சல் குறைவாக இருப்பதும் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்குரிய சாதகமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றகரமான கட்டத்தை எட்டும் போதே பொதுவான நாணயம் புழக்கத்தில் விடப்படுவது வழமையான நடைமுறையாகும். எமது வழக்கங்களை உகந்தவகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எமது பொருளாதாரத்தைத் தாராளவாதப் போக்கிற்கு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய நிலைமையிலேயே உரிய வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஷீல் காந்த் சர்மா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட பிரிட்டனின் “ஸ்ரேலிங்”  இன்னரும் யூரோ வலயத்திற்கு வெளியிலேயே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 கோடி மக்களைக் கொண்ட தெற்காசியாவில் நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 11 பில்லியன் டொலராகவே இருக்கின்றது

வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம் – யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாளாயிரம் குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு நிறைவடைந்துவிட்டதாகவும், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கட்டளைத் தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கான திகதி விரைவில் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுமென்றும் யாழ். அரச அதிபர் கணேஷ் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மீளக் குடியம ர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர் பெரும்பாலும் மீள்குடியேற்றம் நிறைவுறும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மீளக்குடியேறுவோருக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் வீடுகளைத் திருத்திக்கொள்ளவும் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது.

யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை

computer.jpgயாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்ப டவுள்ளது என்றார்.

மனோகணேசன் – ரணில் முரண்பாடு தொடர்கின்றது

ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லையென பிரபாகணேசன் எம்.பி தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.

சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

Sivaram_Tharaki(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது பதிவு இனறு தேசம்நெற்றில் பிரசுரமாகின்றது. பின்னுள்ள இரு பதிவுகளும் 2005ல் தேசம் சஞ்சிகையின் இதழ் 23இலும் இதழ் 25இலும் பிரசுரமாகி இருந்தன அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.)

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதை கேலிக் கூத்தாக்கி உள்ளது இலங்கை அரசு. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பிரான்சைத் தயமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

Media Minister MR and his deputy Mervin Silvaஇருந்தும் புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மேர்வின் சில்வாவை பிரதி ஊடக அமைச்சராக நியமித்ததன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை ‘Gang boss known for hostility towards journalists appointed deputy media minister – ஊடகவியலாளருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என அறியப்பட்ட காடைக்குழுத் தலைவர் பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று தலைப்பிட்டு கண்டித்துள்ளது Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு. ஏப்ரல் 26ல் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘In what country do you appoint an arsonist to put out fires? – எந்த நாட்டில் தீ வைப்பில் ஈடுபடும் ஒருவரை தீயை அணைப்பதற்கு நியமிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றியை இவ்வாறான நியமனங்கள் பாதிப்படையச் செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடகங்களுக்கான அவ்வமைப்பு இவ்வாறான நியமனங்கள் மீளுறவையும் மீள்கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த ஊடக சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகவியலாளர் தாராக்கி என்று அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நிறைவு லண்டனில் நினைவு கூரப்படுகின்றது. Tamil Legal Advocacy Project (TLAP) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு : April 29, 2010 – from 6:30 PM – 9:30 PM,
Conway Hall
25 Red Lion Square
WC1R 4RL London
United Kingdom இல் நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் தண்டிக்காது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்ற நாடுகளின் வரிசையில் இலங்கையை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists – CPJ ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற குழு. உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள், அரசியல், ஈராணுவ விடயங்கள், ஊழல் – மோசடிகள் பற்றி தகவல்கள் வெளியிட்டமைக்காக கடந்த ஒரு தசாப்த காலத்தில் 24 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்படுகொலைகள் தொடர்பாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளரைப் பாதுகாப்பதற்கான குழு தனது 2010 அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதே காலப்பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் காரணமாக 2008 யூன் முதல் 2009 யூன் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 11 ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி உள்ளதாக அவ்வூடக சுதந்திரத்திற்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதமே படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் 90 வீதமானவர்கள் உள்ளுர் ஊடகவியலாளர்களாகவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன் முக்கிய நோக்கம் அனைத்து ஊடகங்களுக்குமே ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை வழங்குவதே. சிவராம் உட்பட 1999 முதல் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேருடைய கொலைக்கான நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேருடைய கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியவில்லையென ஊடகவிளலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவிக்கின்றது.

இலங்கை ஊடகத்துறையின் மீதான தாக்குதல்களுக்கு அரசு மட்டுமல்ல விடுதலை கோரிப் போராடிய அமைப்புகளும் பொறுப்பாக இருந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இருந்தள்ளனர். குறிப்பாக இலங்கை ஊடகத்துறை ஆயுதம் ஏந்திய அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் கடந்த காலங்களில் இருந்தது. தற்போதும் இந்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஊடகங்களில் சுயதணிக்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழமையாகவே இருந்து வந்தள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாக அல்லாமல் அரசியல் சார்ந்த கட்சி சார்ந்த ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்ற போக்கு இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு அம்சமாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில கூட வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறிகஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ரெங்கா உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் மற்றும் சிங்கள பத்திரிகையாளர் சிலரும் அரசியற் கட்சிப்பட்டியலில் தேர்தலில் நின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் சுயாதீனத்துடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்ற கலாச்சராம் இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை. கொல்லப்படுபவரின் அரசியல் சார்ந்தே அதனைக் கண்டிப்பதா? இல்லையா? என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது. இப்போக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையான அம்சமாக உள்ளது.

இதற்கு சிவராமின் படுகொலையும் விதிவிலக்காக இருக்கவில்லை. சிவராமின் படுகொலைக்கான கண்டனங்கள் அவரது அரசியலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது. சிவராம் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டதை தமிழ் ஊடகத்தறையின் ஒரு சிறுபகுதியினர் கண்டிக்கத் தவறினர். அல்லது கடமைக்காகக் கண்டித்தனர். சிவராமின் கொலையை கண்டிக்க முற்பட்டவர்கள் ஒரு ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தமது கண்டணத்தை முன்வைத்தனர் என்பதிலும் பார்க்க தங்கள் அரசியலின் பக்கம் சிவராம் என்பவர் நின்றதனால் தங்கள் கடுமையான கண்டனங்களை சரியாகவே முன்வைத்தனர்.

Media Minister MR and his deputy Mervin Silvaஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமல்ல எந்தவொரு மனித உரிமை மீறலையும் அதனை யார் யாருக்கு எதிராக மேற்கொண்டாலும் கண்டிக்கின்ற வன்முறைக்கு எதிரான அரசியல் கலாச்சாரம் தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்படுபவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரல்கள் அழுத்தமாக வரவேண்டும். அதன் பின் அவர்கள் மீதான அவர்களது அரசியல் தொடர்பான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். ஆனால் அந்த மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அவர் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது.

1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தகவல் மூலம் – CPJ

நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கொலைகள்:
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
     February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka
Lasantha Wickramatunga, The Sunday Leader
     January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka
Rashmi Mohamed, Sirasa TV
     October 6, 2008, in Anuradhapura, Sri Lanka
Paranirupasingham Devakumar, News 1st
     May 28, 2008, in Jaffna, Sri Lanka
Suresh Linbiyo, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
T. Tharmalingam, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Isaivizhi Chempiyan, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Selvarajah Rajeewarnam, Uthayan
     April 29, 2007, in Jaffna, Sri Lanka
Subash Chandraboas, Nilam
     April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka
Subramaniyam Sugitharajah, Sudar Oli
     January 24, 2006, in Trincomalee, Sri Lanka
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
     August 12, 2005, in Colombo, Sri Lanka
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror
     April 29, 2005, in Colombo, Sri Lanka
Lanka Jayasundara, Wijeya Publications
     December 11, 2004, in Colombo, Sri Lanka
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
     August 16, 2004, in Colombo, Sri Lanka
Aiyathurai Nadesan, Virakesari
     May 31, 2004, in Batticaloa, Sri Lanka
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
     October 19, 2000, in Jaffna, Sri Lanka
Anura Priyantha, Independent Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka
Indika Pathinivasan, Maharaja Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka

நோக்கம் உறுதிப்படுத்தப்படாத கொலைகள்:
Sahadevan Nilakshan, Chaalaram
     August 1, 2007, in Jaffna, Sri Lanka
Sinnathamby Sivamaharajah, Namathu Eelanadu
     August 20, 2006, in Jaffna, Sri Lanka
Sampath Lakmal, Sathdina
     July 1, 2006, in Colombo, Sri Lanka
Vasthian Anthony Mariyadas, Freelancer
     December 31, 1999, in Vavuniya, Sri Lanka
Atputharajah Nadarajah, Thinamurusu
     November 2, 1999, in Colombo, Sri Lanka
Rohana Kumara, Satana
     September 7, 1999, in Colombo, Sri Lanka

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 23 (மே – யூலை 2005)

சிவராம் : வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர்கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் : அசோக்

Sivaram_Tharakiசிவராம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இன்றைய தமிழ் ஊடக உலகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. இது இன்னும் சில நாட்களுக்கே. மீண்டும் இன்னுமொரு ‘மாமனிதர்’ பட்டம் சூட்டும் கதை தொடங்க இவன் கதை முடிந்து போகும். நாம் காணும் துதிபாடும் சார்பு நிலை தமிழ் ஊடக வரலாறு இதுதானே. ஆனால் தவிர்க்க முடியாத இந்த காலகட்ட நாட்களுக்குள் சிவராமைப் பற்றி ஒரு சாரார் கட்டமைக்கும் விம்பங்கள் அச்சார்பு நிலையாளர்களின் அரசியல் மனோ நிலையை புரிந்து எமக்கு ஆச்சரியத்தை தராவிட்டாலும் அவை சில வேளைகளில் நகைச்சுவை உணர்வை அதிகம் தந்துவிடுகிறது.

சிவராமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதியுயர் நம்பிக்கைக்குரியவனாகவும் அவர்களின் ‘அனைத்து’ வகை அரசியலையும் ஏற்றுக் கொண்டவனாகவும் அவனைச் சுற்றி கட்டமைக்கும் புனைவுகள் சிவராமை நன்கு தெரிந்த – புரிந்த நண்பர்கள் மட்டத்தில் கேலிக்குரிய ஒரு நகைச்சுவைத் தனம் எழுந்து வருவதை தவிர்க்க முடியாததாக்கிவிடுகின்றது. சிவராம் உயிர் கொண்டு எழுவானானால் தமிழீழ விடுதலைப் புலிகள் தன் தலையில் மாட்டிய அந்த மாமனிதர் பட்டம், அவனுக்கு அவனுடைய மட்டக்களப்புத் தமிழில் அவன் அடிக்கடி கூறும் அந்த எள்ளல் மொழியோடு இணைந்து மாபெரும் பகிடியாக தென்பட்டிருக்கும்.

சிவராம் என்ற அந்த மனிதன், மார்க்சியத்தின் வழிகாட்டலோடு அரசியல் களம் புகுந்ததாக அறிக்கைவிடும் பலரில் ஒருவன்தான். ஆனால் சிவராம் ஒரு இனவாதி என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. மார்க்சியம் பேசப்போய் மறுபுறம் இனவாதம்கக்கும் போலிகளிடையே சிவராம் தன்னை கடைசி ஒரு தமிழ் தேசியவாதியாகவாவது காட்டிக் கொண்டவன் என்ற வகையில் நாம் அவனைப் பாராட்டியே தீரவேண்டும்.

கொழும்பு வாழ் சூழல், அதன் நெருக்கடி, இலங்கை அரசின் கண்ணோட்டம் அனைத்தும் சேர்த்து சிவராம் போன்ற நபர்களை இன்னொரு பக்க இனவாதிகளாக மாற்றிவிடும் பரிதாபத்தை செய்து வருகின்றது. அரசின் இனவாதம் அதன் பின்னணி, வர்க்க சார்பு நெருக்கடிகள், சமூகத் தாக்கங்கள் இவை பற்றிய எந்த அவதானிப்பும் – விமர்சனக் கண்ணோட்டமும் அற்று தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட அனுபவ வெறுப்புகளிலிருந்து இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு வருவதும், இனவாத சேற்றுக்குள் மூழ்குவதுமான பரிதாப தற்கொலை அரசியலை இவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மார்க்சியவாதியாக எம்மிடம் அடையாளம் காண்பித்த பேராசிரியர் சிவத்தம்பியே கொழும்பில் சொகுசாய், பாதுகாப் பாய் அனைத்து சௌக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டு பச்சை இனவாதம் பேசும் போது பாதிப்புக்குள்ளாகும் சிவராம் போன்றவர்கள் இனவாத அரசியலை தேர்வு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அதேவேளை சிவராம் போன்ற@ புலிகளின் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்ட, புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விடுதலை அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் புலிகளின் கடந்தகால, நிகழ்கால வன்முறை அரசியலை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் தங்களின் நிகழ்கால அரசியலை நடத்துவதற்கு தங்குமடங்களாக புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களின் சில நோக்கங்கள் நிறைவேறும் வரையிலாவது புலிகளோடு தங்களை இனம்காட்டிக் கொள்ளவும் வேண்டியவர்களாகி விடுகின்றனர். இதற்கு நல்லுதாரணம் சிவராம் என்பேன்.

சிவராமுக்கும் எனக்குமான உறவு ஓரளவு நீண்டது. 1978க்களில் இருந்தே அவன் எனக்கு நண்பனானவன். எங்கள் இருவரையும் இணைத்தது இலக்கியமே. அதன்பின் 1981ல் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் – புளொட்டில் இணைந்து கொள்ள சிவராம் 1983ம் ஆண்டில் நான் சார்ந்த விடுதலை அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டவன். ஒரு காலத்தில் புலிகளின் வன்முறையை ஒடுக்குவதற்கு ஆயுதத்தின் உதவியை நாடுவதில் எவ்வித தயக்கமும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். புலிகளின் பாஸிசப் போக்கும் வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பதில் தான் போய் முடியும் என்றும் அவர்களின் பாஸிசப் போக்கு மௌனம் கொண்ட ஒரு அடிமைத் தமிழ் சமூகத்தை உருவாக்குவதையே தலையான கடமையாக கொண்டிருக்கும் என்னும் முன் ஆருடம் கூறியவன் அவன்.

சிவராமுக்கும் எனக்கும் கருத்தியல் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் ஏராளம். அதில் குறிப்பானது அவனது தீவிர பிரதேசவாத நிலைப்பாடு. கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் சமூக முன்னேற்றத்தில் அவன் கொண்டிருந்த அக்கறையானது அவனை யாழ் மேலாதிக்க மையவாத சிந்தனைக்கு எதிரானவனாக மாற்றியிருந்தது. இந்த சிந்தனையானது புலிகளில் மலிந்து காணப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிரானவனாக, அவர்களின் செயற்பாடுகளில் கடும் விமர்சனம் கொண்டவனாகவும், புலிகளுக்கு மாற்றாக கிழக்குப் பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது கால அவசியம் என்ற கருத்தில் கடும் முனைப்பும், அதற்காக எந்தவிதமான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாரானவனாக அவனை ‘ரகசியமாக’ உருவாக்கி இருந்தது. இந்த சிந்தனை வழித்தடங்களின் நீட்சியே விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட கருணா முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற முறைமையும் அதில் ஏற்பட்ட சிக்கலும். இது பலரும் அறிந்த இரகசிய விடயங்களாகிவிட்டன இன்று.

அவனது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய கடைசிப் பயணத்தின் சந்திப்பின் போது கூட கிழக்கு மாகாணம் பற்றிய அதீத வெறி யை வெளிப்படுத்தினான் சிவராம். கருணாவின் உடைவின் மீதான விமர்சனங்களோடு கிழக்கின் தனித்துவ செயற்பாட்டின் மீதான அவனின் விருப்பும் வெளிப்பட்டது. சிவராமின் கடைசிக் கால செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மையே கருணா, இவனை புறந்தள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். கருணாவின் இந்த தள்ளி வைப்பே புலிகளிடம் இருந்து சிவராம் உயிரைக் காப்பதற்கான தற்காப்புக் காரணியாக அமைந்திருக்கும். எனினும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் சிவராமின் ‘அனைத்தும்’ அறிந்த புலிகளுக்கு சிவராமின் இறுதி முடிவு துயரைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே. சிவராமின் மரணம் புலிகளுக்கு மதிப்பிடவியலா அறுவடையை கொடுத்துவிட்டது என்பது தான் உண்மை.

இத்தோடு இப்பத்தி எழுத்தை நிறுத்திக்கொண்டு பின்வரும் சுவரொட்டி வாசகத்தோடு நிறைவு செய்கிறேன்.
‘புலிகளின் மேலாதிக்க வன்முறையை பிடித்து இன் னொரு வரலாற்றை உருவாக்க முயன்றவன் வாழ்வு மாமனிதப்பட்டத்தோடு முடிவுற்றது. வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர் கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் இது என்பேன்.’

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Sivaram_Tharakiவிடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
 
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
 
 (1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
 
 (2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும்  PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
 
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
 
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான  ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
 
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்
சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
 
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர்  பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
 
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
 
“உங்களை நம்பேலாது மச்சான்”
 
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
 
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
 
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
 
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
 
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
 
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – கரு ஜயசூரிய எம்.பி

unp_logo_.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம். பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.

இலங்கையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது

rajitha.jpgமிக விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவி காலத்திற்கான சத்தியபிரமாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளும் தருணத்திலேயே செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது.

அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் மாகாண சபைகளின் ஊடாக இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி அத்தியாவசியமாக்கப்படவுள்ளது.

அத்துடன் செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..