April

April

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

president.jpgதமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக்காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம். தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.

‘தோல்வியுறுவோருக்கு தேசிய பட்டியல் ஊடாக இடமில்லை’

பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் எவரும் தேசியப்பட்டியலூ டாக மீண்டும் உள்வாங்கப்படமாட்டார்கள் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். எமது கட்சி இந்த கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 44 சட்டத்தரணிகள், ஐந்து வைத்திய கலாநிதிகள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், தொழிற் சங்கவாதிகள், வர்த்தகர்கள் என அனைத்து துறைகளையும் சார்ந்த இளம் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அவர்களுக்கு எமது கட்சி சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்றும் கூறினார்.

பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

மிலிபான்டின் அறிக்கைக்கு அரசு விரைவில் பதிலளிக்கும் – அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு

keheliya-rambukwella.jpgநாடாளு மன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பிரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

துரையப்பா விளையாட்டரங்கில் திரளான மக்கள்

president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437வீடுகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார். வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

மீளக் குடியேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேடமாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர். வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்: 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு

ind.jpgவடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.

மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.

மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.

யாழ் – பூநகரி படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

poonary.jpgஅரச ஊழியர்கள் பெரும் சிரமமின்றி யாழ் சென்றுவர யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவையொன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு பரந்தன், ஜயபுரம், ஆகிய இடங்களைத் தாண்டிவரவே இவ்வளவு நேரம் செல்கின்றது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்த படகுச் சேவை மூலம் நன்மையடையவுள்ளனர்.

யாழ் மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையிலீடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்; 1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.

‘ஈழத் தமிழர்’ என்ற பதத்திற்கு பதிலாக இன்று ‘ஐரோப்பிய தமிழர்’ என அடையாளப்படுத்தும் நிலை – என். செல்வராஜா

selvarajah-n02.jpgஐரோப்பாவில் வாழும் தமிழர் எதிர்காலத்திலும் தமிழர் என்ற அடையாளத்தினை பேணுவார்கள். ஆனால்,  ஈழத் தமிழர்கள் என்ற பதத்திற்கு பதிலாக ஐரோப்பிய தமிழர் என்று அடையாளப்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாக லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல்களை ஆணவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நூலகர் என். செல்வராஜா தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் புலம்பெயர் தமிழ் சூழலில் வெளியீடுகளை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்களும்,  விரிவுரையாளர்களும்,  தமிழ்த்துறை உள்ளிட்ட பல மாணவர்களும் பங்குபற்றினர்.

தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலகவியலாளர் என். செல்வாராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்:

ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் இலங்கை தமிழர் பற்றி பல ஆய்வுகளை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்கின்றனர்.  ஐரோப்பியரும் இவ்வாறான ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். பல்வேறு மொழி அகராதிகளும்,  மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களினாலும் அவர்களது இரண்டாம் தலைமுறையினராலும் நேரடியான மூல மொழியிலிருந்தும்,  மூல நூலாசிரியரின் வாழிடச் சூழலை அனுபவித்தும் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. படைப்பாளி நிலக்கிளி பால மனோகரன் (டென்மார்க்) சரவண பவன் (ஜேர்மனி) கலாமோகன் (பாரிஸ்) போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

1980களில் மலேசியா,  சிங்கப்பூர் நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களின் தலைமுறையினர் இன்று சிலோன் தமிழர்களாக வாழ்வது போல ஐரோப்பிய தமிழரும் தனித்துவ அடையாளத்துடன் வாழ்வார்கள்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட பல இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் தமிழர்களில் இலங்கையிலிருந்து சென்றவர்களே 1870-1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல இலக்கியங்களை படைத்துள்ளனர். மலேசியா மான்மியம் ஈழத்தமிழராலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியாவின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் ஈழத்தமிழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,  இவை ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றை தனியான ஒரு மலேசிய நூல்தேட்டம் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளேன்.

ஐரோப்பிய தமிழ் ஆவணகாப்பகமும்,  ஆய்வு நிலையமும் என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களின் நூல்கள் ஆவணப்படுத்தப்படுவதோடு,  அங்கு இலங்கை தமிழர் பற்றிய நூல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் தமிழர் பற்றி ஆய்வு செய்யும் ஐரோப்பியர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பல்கலைக்கழகங்களில் கற்பவர்களுக்கும் ஒரு ஆய்வகமாகத் திகழப் போகிறது. பிரித்தானியாவிலுள்ள முன்னணி ஆறு பல்கலைக்கழங்களில் 600ற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் வருடாந்தம் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். எமது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர்.

நூல்தேட்டத்தின் 7வது நூல் தொகுப்பு பேராதனை பல்கலைக்கழக வெளியீடுகளையும்,  பல்கலைக்கழக நூலகத்தின் அரிய வளங்களையும் ஆவணப்படுத்தி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் தேட்டம் விற்பனை நோக்கத்துடன் செய்யப்படவில்லை. ஈழத்தமிழரின் வெளியீடுகள் உலகளாவிய ரீதியில் ஆவணப்படுத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடத்திலிருந்து கொண்டே இலங்கை தொடர்பான பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இவை இலங்கையிலும் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் அச்சிடப்படுகின்றன. இந்த நூல்கள் பலவற்றில் எழுத்தாளரின் இலங்கை விலாசமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

இளம்தலைமுறையினரும் இலங்கை பற்றி ஆய்வு செய்யவே ஆர்வமாகவுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் பல வெளியீடுகளை மேற்கொள்வார் எனவும் புலம் பெயர் தமிழரின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தாயகத்திலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். உரையின் முடிவில் திரு. செல்வராஜா ஒன்றுகூடலில் கலந்துகொண்டோரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.