May

May

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை – ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

gotabaya.jpgபுலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும்,  இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும்,  இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று மே தினம்; பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு கொழும்பில் 11 கூட்டங்கள்; 6 ஊர்வலங்கள்;

2010-may-day.jpgஉழைக்கும் வர்க்கத்தினரைக் கெளரவிக்கும் மே தினம் இன்றாகும். இதனையிட்டு நாடு முழுவதும் ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்பு நாட்டில் மிகவும் அமைதியான சூழலில் நடைபெறும் இந்த மே தினக் கொண்டாட்டங்களையிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாநகரில் 11 கூட்டங்களும், ஆறு மே தின ஊர்வலங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் ஐ. ம. சு. மு.வின் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை திடலில் நடைபெறுகிறது.  ”வேலைத் தளத்துக்கு பலம், தொழில்சாலைக்கு சுறுசுறுப்பு, தாய்நாட்டுக்கு சமாதானம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இவ்வருட மே தினம் அமைகிறது என இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல மே தின கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல தொழில் சங்கங்கள் பங்குபற்றும் இந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் கூட்டம் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி முன்னணி சங்கங்கள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கிருலப்பன பொது விளையாட்டு மைதானத்துக்கு வந்து அங்கு கூட்டம் நடத்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் மேதின கூட்டம் எதனையும் நடத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக கடந்த வருடங்களைப் போன்று சமய நிழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்க அமைப்பான ஜாதிக சேவக சங்கமய சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைமையகம் அறிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினக் கூட்டத்தை இம்முறை தலவாக்கலையில் நடத்துகிறது. இக்கூட்டத்துக்கு இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வகிப்பார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை பொரள்ள கெம்பல் பூங்காவில் நடைபெறுகிறது. இலங்கை தொழில் சங்கம், கெசல்வத்தையில் உள்ள ஏ. ஈ. குணசிங்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சி கொடவத்தையில் அதன் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறது. ஜுலை 1980 வேலை நிறுத்தக்காரர்கள் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மே தின கூட்டத்தை நடத்துகிறது.
 

பதுளையில் கடும் மழை

lightning-01.jpgபதுளை மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ரணுகொல்ல ஆறு பெருக்கெடுத்ததால் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிக்கிய மேலும் ஆறுபேர் காப்பாற்றப்பட்டனர். பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்