August

August

இலங்கைப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிபந்தனைகள்

sri-lankan-maids.jpgஇலங்கை யிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொள்கைகள், நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களூடாக இந்தத் தீர்மானம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என்று வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே. றுகுணுகே கூறியுள்ளார்.

இந்தக் கொள்கைகள், நிபந்தனைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும். பணிப்பெண்களாகத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு முன் இவற்றுக்கு இணங்கியிருக்க வேண்டும். அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அதிகாரிகள் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் றுகுணுகே கூறியுள்ளார்.

தொழிலுக்கு அமர்த்துவோரால் வீட்டுப் பணிப்பெண்கள் சித்திரவதை, கொடுமைக்கு இலக்காகும் போது அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும்

அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே இருக்கமுடியும் என்ற அம்சத்தை முற்றாக நீக்கும் விதத்திலேயே அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படவிருக்கின்றது.

அமரர் தொண்டமானின் 98வது ஜனன தினம்

tondaman.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தின் நிமித்தம் இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் பழைய பாராளுமன்ற முன்றலிலுள்ள அமரர் தொண்டமானின் உருவச் சிலைக்கு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு மலர்மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் தலைமையில் இ. தொ. கா. வின் தலைமையகமான செளமிய பவனில் அமரர் தொண்டமானின் ஆத்ம சாந்திக்காகப் பூஜைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இ. தொ. கா. செயலாளர் நாயகமும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை 8.00 மணிக்கு அன்னாரது குடும்ப உறவினர்கள் சகிதம் ரம்பொட தொண்டமான் கலாநிலையத்திலுள்ள அமரர் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பார்.

இதேவேளை கொட்டகலை தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் கற்கையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு ஸ்தாபகர் தின சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுகின்றார். அத்தோடு அமரர் தொண்டமானின் நினைவாக கொட்டகலையைச் சேர்ந்த 150 ஏழைக் குடும்பங்களுக்கு கால் நடைகளும், வழங்கப்படவுள்ளன. லிந்துல, திலிக்குற்றி தோட்டத்தில் குளிரூட்டி நிலையமொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

இந்த நிதியத்தை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்கு முதற் கட்ட மாக (SAVE THE CHILDREN) சேவ் த சில்ரன் அமைப்பு 100 மில் லியன் ரூபா நிதியை வழங்கியு ள்ளதாக தெரிவித்த அவர், வெகு விரைவில் இது ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதியுதவிக ளைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக திறைசேரியும் அனுமதி வழங்கியுள் ளது என்றும் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 2000 ரூபாவை கொடுப் பனவாக வழங்க திட்டமிட்டுள்ளது டன் முதற்கட்டமாக 500 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்றும் தெரிவித்தார்.

அரச இலவச மருந்தை மோசடி செய்வோருக்கு ஆயுள் தண்டனை – சட்டத்திருத்தம் விரைவில் வருகிறது

mini.jpgஅரசாங் கத்தினால் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து வகைகளைத் தனியார் மருந்தகங்களுக்கு சட்ட விரோதமான முறையில் வழங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

இம்மருந்து வகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் தனிநபர்களுக்கும் இத்தண்டனையை விதிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரச ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒரு தொகை மருந்து வகைகளை புறக் கோட்டையிலுள்ள தனியார் மருந்தகமொன் றுக்கு நபரொருவர் வழங்கியுள்ளார். இந் நபருக்கும், இம் மருந்து வகைகளை கொள்வனவு செய்த தனியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்றது. இந்த அமர்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து வகைகளின் ஒரு தொகுதி புறக்கோட்டையில் தனியார் மருந்தக மொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த சமயம் இரு வாரங்களுக்கு முன் னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர் பான புலன்விசாரணையை குற்றப் புல னாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“எமக்கு இந்த மருந்து வகைகள் கொண்டு வந்து தரப்பட்டது. அதனை வாங்கி நாம் விற்பனை செய்தோம். மற்றபடி எமக்கு எதுவும் தெரியாது என்று தனியார் மருந்தக வர்த்தகர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலாகும். குறித்த வர்த்தகர் சிறுபிள்ளை அல்லவே. இப்படியான அர்த்தமற்ற கூற்றுக்களை நம்புவதற்கு அரசாங்கமோ, நானோ தயாரில்லை.

இப்படியான மோசடிகள் நீண்டகாலமாக இடம் பெற்று வந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படாததால் அவை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளும் போதியதாக இல்லை. அதன் காரணத்தினால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள் ளேன்.

இப்படியான செயலில் ஈடுபடுவோரு க்கு ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத் தேசித்திருக்கின்றேன் என்றார்

மு.காவின் தீர்மானத்திற்கு ஹிஸ்புல்லாஹ் வரவேற்பு

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பிரிந்து பிளவுபட்டு இருப்பது அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் மு.கா.வின் இந்தத் தீர்மானத்தை முழு மையாக வரவேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மு. கா.வின் இந்த செயற்பாடானது முஸ்லிம்கள் பற்றிய நல் லெண்ணத்தை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் ஏற்படுத்தியுள் ளது. முஸ்லிம்கள் எமது அரசியல் உரிமைகளையும் தேவைகளையும் அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பொருத்தமானதாகும்.

முரண்பட்ட அரசியல் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண முடியாது என்று தெரி வித்த பிரதியமைச்சர், இந்தத் தீர்மானத் திற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள் வதாகவும் குறிப்பிட்டார்

‘மழை நதி கடல்’ கவிதைநூல் ஓர் அறிமுகம் – சாமஸ்ரீ : எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி) – அட்டாளைச்சேனை.

Iniyavan_Isarudeenநூலின் பெயர் : மழை நதி கடல் (கவிதை)
நூல் ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன்.
உரிமை : முஃப்லிஹா இஸாறுதீன்
வெளியீடு : எழுவான் வெளியீட்டகம்.
விலை : 400ரூபாய்

இயற்கையுடன் இரண்டறக்கலந்ததுதான் மனிதவாழ்க்கை. அந்த இயற்கையை மனிதன் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்திக் கொண்டேயிருக்கின்றான். இவ்வாறான இயற்கையின் இன்பதுன்பங்களை வாழ்வின் நெருக்கத்தோடு கவிஞர்கள் தங்களது ஞானதிருஷ்டியினால் செய்யுள்களாக வடிப்பர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் கவிஞர்கள் தங்களது கண்ணுக்குள் தெரியும் இயற்கையின் உள்ளக்கிடங்கினை இவ்வாறு நயத்துடன் வடிக்கின்றபோது அவை மனித உள்ளங்களுக்கு சற்று ஆறுதலை அழிப்பதுடன் கவிஞனும் இயற்கைக்கு உதவுமாற்றலை பெறுகின்றான். அந்தவகையில் இலங்கையில் தென்கிழக்கு வட்டாரத்திலிலுள்ள அட்டாளைச்சேனையிலிருந்து “இனியவன் இஸாறுதீன்” என்றொரு இளைய கவிஞன் புதுக்கவிதைகளை வரைந்து “மழை நதி கடல்” என்கின்ற பெயரில் எழுவான் வெளியீட்டகத்தின் துணைகொண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளமை நவீன இலக்கியத்தின் மீதுள்ள இயற்கையின் பற்றை பறைசாற்றி நிற்கின்றது.

‘இரசிகமானவன் நீ
என்னைத் தாங்கும் உன் வேர்கள்
எங்கெங்கு உண்டென்று என் கிளைகளுக்கும் தெரியாது
என் இலைகளுக்கும் தெரியாது’

என்றொரு கவிதையை ‘இறைவா உன்னிடம்’ எனும் தலைப்பில் இயற்கையின் அருட்கொடைக்கு ஒப்புவிப்பதானது அற்புதமானதோர் பரவசத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இதேபோன்று இந்நூல் வாயிலாக 91 கவிதைகளை 318 பக்கங்களில் வடித்துள்ளார் கவிஞர். தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்;ட நெழிவு சுழிவுகளையும், இயற்கையின் நடத்தைக்கோலத்தையும் நன்கு இரசித்து, புசித்து, அனுபவித்து யாத்துள்ள இக்கவி முத்துக்களை அழகுற வடிவமைத்துள்ள பாணியோ எவரையும் படிக்கத் தூண்டும் கவிதைப்புனல்களாகவே காணப்படுவதுடன், ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு கவிதைகளின் உள்ளார்ந்தமான கருத்துக்களை ஆழமாக அறிகிறபோது இப்படியொரு கவிஞன் எம்மத்தியில் இருக்கின்றானா? என்பதையே சிந்திக்க வைக்கின்றன.

MAZHAI_NATHI_KADAL_BookCoverவிசேடமாக கூறப்போனால் ‘மணமங்கைக்கு, காதலித்துப்பார், காமத்திடம் பேசும் காதல்’ போன்ற காதல் கவிதைகளும், உறவுகளான ‘உம்மா, தாய், தமிழாசிரியருக்கு எழுதிய கவிதைகளும்’, இயற்கையின் எழிலுக்கு மெருகூட்டக் காரணமான உயிர் ஜென்மமான ‘மண்புழுக்களே, சுமைதாங்கி, சிலந்தியுடன் ஒரு செவ்வி, எறும்புகள் ராச்சியம்’ போன்ற கவிதைகளும், ‘மரம், பூக்கள், வேர்கள், முட்கள், மூங்கில்கள், மவுனம், புல்வெளி’ போன்ற இயற்கைத் தாவரப்பகுதிகளுடனும், ‘மேகமே மேகமே, விடியல், தண்ணீர், மழை, நதி, கடல், காற்று, நட்சத்திர பயணம்’ போன்ற இயற்கையின் அருட்கொடைகளுடனும் தனது கவிநடையைப் புனைந்து யுத்தத்திற்கு சாவுமணியடிக்கும் துப்பாக்கிக்கும், சமாதானத்திற்கு சாந்தமாய் தேசத்திற்கொரு தூது விட்டு, இறுதியில் ‘ஈழம்? | என்றொரு தலைப்பில் “வளமான நிலம் – அழகான பூவனம் – அருமையான நூல்கள் – அற்புதமான பள்ளிக்கூடங்கள் – அறிவுஜீவிகள் – ஆயுதம் சுமக்கும் அராஜவாதிகள்” என்று தொடர்கின்ற கவிதை சொல்லும் பாடம் மனிதநேயத்தில் எம்மைப் புல்லரிக்க வைக்கின்றது.

“எல்லாத்தீயிலும் என் ஆன்மா” என்றொரு தலைப்பில் வருகின்ற கவிதையில் கவிஞரோ ஆத்மாவுடன் இவ்வாறு பேசுகின்றார். “ஆதிக்கத்தீயில் எரிந்தேன் அது என்னை கருகிய தகரம்போல் துருவேற்றி விட்டது, ஆணவத்தீயில் எரிந்தேன் அது என்னை உருகிய ஈயம்போல் உருக்குலைத்து விட்டது, பசித்தீயில் எரிந்தேன் அது என்னை பழுத்த இரும்புபோல் வளைத்தெடுத்து விட்டது, பொறாமைத் தீயில் எரிந்தேன் அது என்னை புகைந்த சிகரெட்போல் பொசிக்கி விட்டது, காமத்தீயில் எரிந்தேன் அது என்னை ருசியில்லாத வெறும் கறியாக்கி விட்டது” என்று இன்னும் எரிக்க என்னில் என்ன இருக்கிறது’ என்று வெற்றுடல் கேட்பதுபோல் வரும் இக்கவிதை ஒவ்வொரு மனிதனையும் ஆத்மார்த்தமாக சிந்திக்க வைக்கிறது.

‘கலீல் ஜிப்ரானே’ என்றொரு தலைப்பில் வரும் உலமகா கவிஞனின் “முறிந்த சிறகுகள்” கவிதையிலிருந்து பிறந்த ஒரு கவிதையாக “உன் முறிந்த சிறகுகளைப் படித்த பிறகுதான் எனக்குச் சிறகிருப்பதே என் சிந்தைக்கு வந்தது” என்று கூறி “பூவிதழில் பனித்துளியால் எழுதிய படிமக்காரனே” என்றும் கலீல் ஜிப்ரானை வர்ணிக்கும் கவிதைகளோ அபாரம். ‘அழைப்பு’ என்றொரு தலைப்பில் ‘மகாகவி பாரதிக்கு’ இப்படி புகழாரம் சூட்டுகின்றார் இனியவன் இஸாறுதீன். “புரட்சிப்புய மேந்தி எழுச்சிப் பாக்களால் போராடிய உயர்ந்த ஆத்மாவே, உன்னைப் பின்பற்றவும், உயர் ஜென்மம் எய்தவும் இங்கே சிலர் நாங்கள் இன்னும் உனக்காகக் காத்திருக்கிறோம், மானுடம் காக்க நீ மறுபடியும் வருவாயா?’ எனக் கேட்கிறார் நமது கவிஞர் பாரதியை பார்த்து. உண்மையில் இதுபோன்ற பல கவிதைகள் சிந்தையைத் தூண்டி படிக்க சுவைக்கவும்  மேலும் வடிவமைப்பில் பார்த்hதல் ருசிக்க வைகசவும் தூண்டுகிறது இந்த ‘மழை நதி கடல்’ கவிதைநூல்.

இக்கவிதைகளுக்காக அணிந்துரையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். “மவுனத்தின் காதலன்” என்ற தலைப்பில் இவருக்கும் நூலுக்கும் ஒரு பொன்னாடையாக அணிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார் கவிக்கோ. “கவிஞர்கள் மௌனத்தின் காதலர்கள் அதனால்தான் கவிஞர் இனியவன் இஸாறுதீன் மௌனத்தை பூக்கள் பேசும் பிரபஞ்ச பொதுமொழி” என்று அழகாகப் பாராட்டுகிறார். அதுமட்டுமல்ல இன்னோரிடத்தில் அவர் “இந்த இருளிலும் ஒளியின் நம்பிக்கை இவரிடம் இருக்கிறது இன்னமும் நம்பிக்கை விதையை நெஞ்சினில் விதைத்து காலத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன் நான்’ என்கிற இனியவன் மட்டுமல்ல நாமும் காத்திருக்கிறோம்” என்று கூறிய அவர் ‘எனது கவிதைகள் இவரை மீட்டியிருக்கின்றன என்று தெரிகிறது இது விரலுக்பும் பெருமை வீணைக்கும் பெருமை’ என்று வாழ்த்தித் தன் பெருமிதத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘இயற்கைக்கு இறக்கை கட்டிய இனியவன்’ எனும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ள ஆசுகவி அன்புடீன் அவர்கள் இக்கவிஞனை இவ்வாறாக அறிமுகம் செய்கிறாhர். அதாவது “நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப்படுபவர் இனியவன் இஸாறதீன். 1980களில் அட்டாளைச்சேனையில் உருவான தினகரன் வாசகர் வட்டம், நிலவிலே பேசுவோம், கலை கலாச்சார மேடை நிகழ்வுகளில் அறிமுகமாகியவர் இக்கவிஞர்” என்று ‘இறக்கைக்கவி’ கட்டுகிறார் ‘ஆசுகவி’ அவர்கள். அன்னாருக்கு ஒரு சபாஷ்! நூல் வெளியீட்டாளரான எழுவான் பிரதம ஆசிரியர் பௌசுர் றகுமான் “ஆன்மாவுக்குள் ஓர் ஸ்பரிச உணர்வு” எனும் தலைப்பில் “இந்நூல் மூலமாக தனது வெளியீட்டுப்பணியினை எழுவான் ஆரம்பிக்கிறது” என்கிறார் எழுவான் ஆசிரியர். மேலும், “இதயத்தின் அடிஆழத்தில்” எனும் தலைப்பில் அற்புதமானதோர் முன்னுரையை முன்வைக்கிறார்; இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

‘மழை நதி கடல்’ என்கிற மூன்று சொற்களுக்கும் நீண்டதோர் விளக்கம் தரும் கவிஞர் ஒரு கட்டத்தில்
‘என்தாய் மண்தான் என் கவிதைகளின் மூலம்
அந்தக்கிராமம்தான் என் கற்பனைகளின் மையம்’  என்று குறிப்பிட்டு
மனித நேயத்தையும் – மாறாத மனிதாபிமானத்தையும் – வாழ்க்கையை நேசிக்கும் வைராக்கியத்தையும் –
கலைக்கண் கொண்டு பார்க்கிறது என் கவிதைமனம்’ என்று கூறுகின்றார். மேலும் இன்னோரிடத்தில்;
‘இயற்கை என் தாய், இயற்கை என் ஆசான், இயற்கை என் சுவாசம்’ என்று இயற்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ள இனியவன் அவர்கள் நூலின் தலைப்பிற்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார்.

“மழை என்பது வாழ்வின் தொடக்கம்
நதி என்பது வாழ்வின் ஓட்டம்:
கடல் என்பது வாழ்வின் முழுமை என்ற
வாழ்க்கை வரலாற்றுக்கு
வரைவிலக்கணம் வகுத்த பெயராய் இருப்பது என்பதே மூலகாரணம்.” என்கின்றார். உண்மையிலேயே இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுகின்ற அனைத்துவிடயங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கவிதைகளில் மனிதநேயத்தைக் காட்டிப் பின்னரான காலத்தில் நினைவுறுத்துகின்றபோது அக்கால நினைவலைகளும் எம் ஆத்மாவுக்கு நிழலாய் வரும் என்பதை இக்கவிஞர் தனக்கே உரிய இலகு மொழியில் யாவரும் வாசித்து விளங்கும் வகையில் அற்புதமாக இதைப் படைத்துள்ளார். படைப்பாளியின் கற்பனை இயற்கையின் மீது பற்றுவைத்து வாசிப்பவர் யாவரையும் பற்றுள்ளதாக்கிவிடும் இனியவனின் மழை நதி கடல் என்பது மிகையானதல்ல.

‘தாய்க்கும் தந்தைக்கும்’ அர்ப்பணம் செய்திருக்கும் இக்கவிநூல், அழகிய முறையில் அச்சிடப்பட்டு கவரிடப்பட்டும் உள்ளது.  முன் அட்டையில் மனித முகத்தின் இருகண்ணும் பின்புலத்தில் அந்திமேகமாய் உலகைப்பார்த்தும், மழைபெய்தால் அங்கே நதியாகி இறுதியில் கடலில் சங்கமிக்கின்றவாறு அற்புதமான ஒரு ஓவியத்தையும் பதிந்துள்ள ஓவியர் “அஹ்மத் அல் ஹவாரி” அவர்களின் கற்பனையோ அபாரம்;. பின் அட்டையில் கவிஞர் இனியவன் உயிர்ப்பாய் இருந்து எம்மோடு புன்னகைக்கும் நிலையில் படம்பொறித்து அருகில் கவிக்கோவின் அற்புத வரிகளும் வரையப்பட்டுள்ளன. அது இவ்வாறு செல்கிறது.

“இதோ இந்த புல்லாங்குழலோசை
இனியவன் இஸாறுதீன் உடையது
இந்த இசையின் அழகில்
இரசனையும் மானுட நேயமும் ததும்புகின்றன.

இந்த மழை நதி கடல் என்ற
மொழிப்பொழிவில்
அழகிய கவிதைகள்
ஆங்காங்கே நட்சத்திரங்களாய்ப்
பிரகாசிக்கின்றன”  என்றவாறு தொடர்ந்து செல்கின்ற இயற்கையின் வரிகளாக இனியவனின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவிக்கின்றார் கவிக்கோ அவர்கள். அண்மைக்காலத்தில் வெளியாகிய கவிதை நூல்களுள் மிகவும் கூடிய கனமிக்க கவிதைகளையும், பக்கங்களையும் தாங்கிக் பாத்திரமாக வெளிவந்துள்ள இக்கவிப்புனல் நாளைய உலகில் பார்ப்போரை பரவசப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

சாமஸ்ரீ : S L மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை.

கிளிநொச்சியில் பாம்புக் கடியினால் சிறுவன் மரணம்!

images-snakes.jpgகிளி நொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டு தரப்பாள் கூடாரத்தில் உறங்கிய சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீள்குடியேற்றப்பட்ட இச்சிறுவனின் குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட தரப்பாள் கூடாரத்தில் வசித்து வந்தனர். கடந்த 26ம் திகதி இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில், கூடாரத்திற்குள் நுழைந்த பாம்பு இச்சிறுவனைத் தீண்டியுள்ளது. உருத்திரபுரம் வடக்கைச்சேர்ந்த ஞானசீலன் நிலக்சன் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு பாம்பினால் கடியுண்டு உயிரிழந்துள்ளான்.

பாம்பினால் கடியுண்ட சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு  பின்னர். யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு வைத்து மரணமானான்.

Related News:

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் யாழ்ப்பாணத்தில் கடலுணவின் விலைகள் அதிகரிப்பு!

Fishing_in_Jaffnaயாழ் குடா நாட்டில் கடலுணவு வகைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் குடாநாட்டு மக்கள் கடலுணவுகளை நுகர்வதில் பல சிரமங்களை எதி;ர்கொண்’டு வருகின்றனர். சாதாரணமாக ஒரு கிலோ 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மீனின் விலை தற்போது 600 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

தென்னிலங்கையிலிருந்து அதிகளவு சுற்றுலாப்பயணிகள் குடாநாட்டிற்கு வருகை தருவதாலேயே  கடலுணவகளின் விலை  அதிகரித்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.. தெற்கிலிருந்து வரும் மக்கள் அதிகளவு யாழ்ப்பாண கடலுணவுகளை விரும்பி உண்கின்றனர். அத்துடன் அவர்கள் திரும்பிச்செல்லும் போது அதிகளவான கடலுணுவுப் பொருட்களை கொள்வனவு செய்தும் கொண்டு செல்கின்றனர்.

யாழ்ப்பாண மீனவர்கள் தற்போதும் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படுமானால் கடலுணவுப் பொருட்களின் தொகை அதிகரிப்பதோடு அவற்றின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  (வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி. )

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்து!

LandMine_Signவன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்டப் பின்னரே மக்கள் மீளக்குடியமாத்தபட்டு வருகின்ற போதும் சில வெடிபொருட்கள் கண்களுக்குப் புலப்படாத வகையிலுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

மரங்களிலும், நிலத்திலும் புகுந்த நிலையில் வெடிக்காத நிலையில் சில எறிகணைகள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை வெடிபொருட்கள் என அறியாத சிறுவர்கள் இவற்றைப் பரிசோதிக்க முயலும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன் இதனால் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில விடுகளின் சுவர்களில் பெரிய சுடுகலன்களின் தோட்டாக்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன. வீட்டு முற்றங்கள,; காணிகளை துப்புரவாக்கி தீமூட்டுகின்றபோது அதற்குளிளிருந்தும் வெடிபொருட்கள் வெடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில்  மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தருமபுரம், கட்டைக்காடு, விசுவமடு முதலான பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையிலும் பொதுமக்களால் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.