September

September

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

Varathakumar_V_TICtic_logoஎனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009

”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.

செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும்  Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”

ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.-  இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.

தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.

2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.

தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.

இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதிக்கு நன்றி…- அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgஇலங் கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.  இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை.  உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

Jaffna_Manipallavamவடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்தும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில், பகுதிகளில் இத்தொல்லியல் எச்சங்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான வரலாற்று ஆய்வுக்குழுவினர் நேரடியாக அவ்விடங்களுக்குச் சென்று இவற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

Jaffna_Manipallavamகுறித்த பகுதிகளில் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட குழிகளுக்குள் சென்று அவதானித்த போது, சுன்னாகம், கந்தரோடைப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டதைப் போன்ற மணிவகைகள், கூரை ஓடுகள், முதலான மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ். பல்கலைக்கழக அரும் பொருட்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இது தவிர தமிழ் பிராமி வடிவில் ‘நாகபூமி’ ‘பரராச’ போன்ற சொற்கள் பதிக்கப்பட்ட நாணயங்களும் நாகர்கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பேராசியர் கிருஸ்ணராஜா அப்பகுதிகளில் மணல் அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவோர் இத்தொல்லியல் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்காமல் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்படுமானல் அவற்றை யாழ்.பல்கலைக்கழக வராற்றுத்துறையில் ஒப்படைத்துதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்டமராட்சியில் படையினர் எனக்கூறி ஆயதமுனையில் நகைகள், பணம் கொள்ளை!

கடந்த செவ்வாய்கிழமை தென்மராட்சியில் பட்டப்பகல் வேளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி மட்டுவில் தெற்கில் காலை 9 மணியளவில் வீட்டில் தனித்திருந்த பெண்ணொருவரை ஆயதமுனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள் பல லட்ச ரூபா பெறுமதியான நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் படையினரென்றும் வீட்டை சோதனையிடப் போவதாகவும் கூறி பின், துப்பாக்கியைக் காட்டி அப்பெண்ணை அச்சுறுத்தி இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களாக நடைபெற்று வந்த கொள்ளைச் சம்பவங்கள் சற்று குறைவடைந்துள்ள போதும் அவை முற்றாக கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவிற்கு ‘மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை’ ஜனாதிபதி அங்கீகாரம்.

sf.jpgமுன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கெதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகாவின் வழக்கை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு ஆகக்கூடியது மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக தீhப்பளித்தது. இதனையே ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.சபையின் 65வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று 29ம் திகதி காலை நாடு திரும்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமராட்சிக்கிழக்கில் கடற்றொழில் நேற்று ஆரம்பம்.

வடமராட்சிக் கிழக்கில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பதற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை காலை வடமராட்சிக்கிழக்கின் மாமுனை, செம்பியன்பற்று, உடுத்துறை, வத்திராயன், ஆகிய கடற்பகுதிகளில் சுமார் 200 கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழில்களை ஆரம்பித்தனர்.

கடற்றொழிலாளர்கள் மாமுனையிலிருந்து அழியவளை வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபடலாம என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  நேற்று கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் நிகழ்வை 551வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

வடமாராட்சிக் கிழக்குப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இது வரை 600 கடற்றொழிலாளர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.

முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்து வரும் இரு மாதங்களும் கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

fo.jpgதற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இக்கடும் மழையினால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் வளிமண்டலத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக இடைமழை பெய்யவிருப்பதாகவும், மலையகத்தில் நுவரெலிய, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடைமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பருவமழைக்கு முன்பாக தற்போது பெய்த வரும் மழையினால் வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்டுவரும் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து வரகின்றனர். தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பாதிப்படைந்து வருவதோடு வீடமைப்பிற்கான உதவிகளைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வீடமைக்கும் பணிக்கான பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாலும் இரண்டாம் கட்ட பணம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பரவலான மழை – மலையக பகுதிகளில் மண்சரிவு

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நேற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் ஆகக்கூடிய மழை புத்தளத்தில் 174.5 மி. மீட்டர்கள் அளவில் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இடைப்பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கால நிலை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளம் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகால்தென்ன குறிப்பிடுகையில், நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ராஜாங்கனைப் பிரதேசத்தில் 101.00 மி. மீ. மழை பெய்துள்ளது. அத்தோடு மகா இலுப்பள்ளமவில் 128.00 மி. மீ, அனுராதபுரத்தில் 88.090 மி.மீ என்றபடி மழை பெய்திருக்கின்றது. இதன் விளைவாக இராஜாங்கனைக்குளம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. அதனால் இக்குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று முதல் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறுகையில், இராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதால் எலுவன்குளம் ஊடான மன்னார்- புத்தளம் வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மன்னார்- புத்தளம் வீதியில் எலுவன்குளம் பிரதேசத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கி இருப்பதன் விளைவாகவே இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்த வெள்ள நீர் வடிந்து வருவதாக அம் மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்கள் கூறினர்.

நுவரெலிய – வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா – வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா – வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்களில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப்பாதையில் முன்னெச்சரிக்கையோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டயொன்று குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.