நக்கீரன் என்ற அருமையான தமிழ்ப்புலவரின் பெயரைப் பயன்படுத்தி வம்புச் செய்திகளும், ஒட்டுச்செய்திகளும், பட்டுப்பட்ங்களும், கட்டுக்கதைகளும் வெளியிட்டு பிழைப்பு நடத்தும் கேவலமான கூட்டம் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் உலவுகிறது.
நாங்கள் ஈழத்தமிழர்கள். இந்த நக்கீரன் என்ற விசமப்பத்திரிகை பற்றிக் கருத்துச் சொல்லவேண்டிய தேவை எமக்கில்லை. ஏனெனில் தமிழகத் தமிழர்கள் சினிமா பார்ப்பது, கதை கேட்பது என்று இத்துறையில் தங்கள் வாழ்வை இணைத்துள்ளனர். எனவே நக்கீரன் என்ற பத்திரிகை கதை சொல்லப் புறப்பட்டு தமிழர்களுக்கு வாராவாரம் இரண்டு முறை கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரே கதையை பலவாரங்களுக்கு பல வடிவங்களில் சொல்வார்கள். வாரம் இருமுரை புதுக்கதைகளும் சொல்லவேண்டும். அப்போதுதான் வியாபாரம்நன்கு நடக்கும். இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஈழத்தமிழர்கதை. ஈழத்தமிழரும் விடுதலைப்புலிகளும் பற்றிய கதை சொல்ல இந்தப் பத்திரிகை ஆரம்பித்து கொழுத்த பணம் ஈட்டியது.
ஆட்டோசங்கர் கதை, வீரப்பன் கதை, டாக்டர் பிரசாத் கதை பின்னர் விடுதலைப்புலிகள் கதை இவைகள் மூலம் பணம் பார்த்த ஒரே வார வெளியீடு இந்த நக்கீரன்தான். இவர்களது கதைகளைப் படித்த விடுதலைப் புலிகள் இவர்கள் அல்லவா (நக்கீரன் நபர்களை) எங்களை விடச் சிறப்பான போராளிகள் என்று நினைத்தனர். நாங்கள் நினைக்காததை, செய்யாததை எல்லாம் திடடமிட்டோம், செயல் படுத்தினோம் என்று எங்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்று வியந்து இவர்களிடம் செய்தி சொல்லப் புறப்பட்டனர் புலிகள். நக்கீரனுக்கு வருவாய் கழுத்தைத் தாண்டியது. தாங்கள் எதை எழுதினாலும் மடமக்கள் நம்புகின்றனர் என்று கண்டு கட்டுக்கதைகளில் கரைகண்டனர் இந்த நபர்கள்.
வழக்கம் போன்றே ஓர் அதிர்ச்சித் தகவலையும் கட்டுக்கதைகளையும் வெளியிட்டனர், செப்டம்பர் 11-14, 2010 தேதியிட்ட அவர்களது அவதூற்றுப் பத்திரிகையான நக்கீரனில். எங்கள் இயக்கப் பெயரைக் கெடுக்கும் வகையில் கதைவசனம் எழுதியுள்ளனர் இந்த வம்படி நபர்கள். எனவேதான் இவர்கள் பற்றி நாம் எழுதவேண்டி ஏற்பட்டது. அதற்காக வருந்துகிறோம். ஏனெனில் இவர்கள் ஒன்றும் தியாகிகளோ, போராளிகளோ அல்ல. வெறும் வேசதாரிகள். ஒருவரின் நற்பெயரைக் கெடுத்து அதில் பிழைப்பு நடத்துபவர்கள். ஆயினும் தொடர்ந்து இந்த நபர்கள் எங்கள் விடயத்தில் தலையிடாமல் இருக்கவே இதனை எழுதுகிறோம்.
இவர்கள் வடித்த தலைப்பு ‘கடத்தல், சித்திரவதை, கொள்ளை, தமிழகத்தில்
ராஜபக்சேயின் வெள்ளைவேன், அலறும் ஈழத்தமிழர்கள்’ இவைதான் அந்த வாரத்தின் வெடிச்செய்தி! இவர்கள் பின்னிய இந்த வெடிக்கதையின் முக்கியமானவற்றை கீழே தருகிறோம்!
ஈழத் தமிழரை இழிவுபடுத்தி பணம் பண்ணும் நக்கீரன் கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத்தமிழ் இளைஞர் சிவபாலன். வெள்ளைவேன் வந்தது. விடுதலைப் புலியா என்று கேட்டனர். அவர் மறுக்கிறார். அப்படியானால் குவாலிஸ் வேனில் இருக்கும் இந்திய அதிகாரியிடம் விளக்கிச் சொல்லிவிட்டுப் போங்கள் என்று கட்டாயப் படுத்துகின்றனர். அவரும் சம்மதித்து வர, அவரைத் தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்குக் கடற்கரைசாலை சவுக்குத்தோப்புக்கு பறந்தன. அடி, உதை என்று அவர் சித்திரவதைப் படுகிறார். இறுதியில் பணம் நான்கு லட்சத்தைக் கண்டதும் அடிப்பதை நிறுத்திவிட்டு சிவபாலனை சவுக்குத்தோப்பில் தள்ளிவிட்டுப் பறந்து விட்டனர். சிவபாலனுக்கு மரணபயம் அவரது கண்களை விட்டு அகலாமல் நடனமாடுகிறது என்று நக்கீரன் கோவாலு எழுதியுள்ளார்.
பிறகு மடிப்பாக்கத்தில் இலங்கைத் தமிழ் குடும்பமாம், உறவினர் சிங்கள ராணுவமுகாமிலாம், அவர்களை வெளியில் எடுத்துவிடுவது என்று கூறி 25 இலட்சம் ரூபாயை அடித்து உதைத்து பறித்துச் சென்றனர். அதிலும் தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி பறித்துச் சென்றனர்.
பிறகு கியூபிராஞ்ச் ஈழத்தமிழர் ஒருவரை பிடித்துச் சென்று விட்டது. அவரை விடுவிக்க அந்த அப்பாவியிடமிருந்து பத்து லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இவை எல்லாவற்றையும் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னனி என்ற அமைப்பைச் சேர்ந்த மோகனும் ரஜனியும் செய்கின்றனர் என்று ரஜனியின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களது இயக்கத்தின் பெயரை கெடுக்க நக்கீரன் கோபாலும் பிரகாஷ் என்ற நபரும் சேர்ந்து கதைவிட்டு வசனம் எழுதி பெற்றுக்கொண்ட பணத்துக்கு விசுவாசமாக செயல்பட்டுள்ளனர். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு என்பவர்தான் இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். இவர்களது கட்டுக்கதையில் பணம், பேருந்து நிலையம் இவைபற்றி அடிக்கடி வருகிறது. கோபாலும் அருப்புக் கோட்டையிலிருந்து பஸ் ஏறி வயிற்றுப்பிழைப்பிற்காக சென்னை வந்ததை இன்றுவரை மறக்கவில்லை என்பது நல்ல விடயம்தான்.
”ஈழத்தமிழன் ஒருவன் நான்கு இலட்சம் பணத்துடன் திருவான்மியூர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்”
இலங்கைத்தமிழர் ஒருவர் இலட்சக்கணக்கான பணத்துடன் திருவான்மியூர் லோக்கல் பஸ் நிலையத்தில் அடையாறு போவதற்காக காத்துக் கொண்டு நிற்கமாட்டார். ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்று விடுவார். இந்தப் பேருந்துக் கதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.
அடுத்து, இந்திய அதிகாரிகள் என்று சொன்னதும் அவர் மதிப்பு கொடுத்து போலீஸ் வேனுக்கு சென்றதாக கூறுகிறார்கள். இந்த நபர்கள். அடி, உதை, சித்திரவதை செய்தபின்னர் பணம் நான்கு இலட்சத்தை கண்ட பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளனர். தம்பி கோபாலு, பணத்தைக் கண்டால் வாயைப்பிளப்பது உங்களைப் போல பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள்தான். ஈழத்தமிழர்கள் பணத்தைத் தேடி சென்னைக்கு வந்தவர்கள் அல்ல!!
நீங்கள் வீரப்பன் தூதராகி எவ்வளவு பணம் சுருட்டினீர்கள் என்பது அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரியும். போலீஸ் மற்றும் உளவுத் துறையினருக்கும் தெரியும். நாங்கள் பிழைப்புக்காக விடுதலைப் போராட்டத்துக்கு வரவில்லை. எங்கள் விடுதலை இயக்கங்கள் பற்றி விமர்சிக்கவோ, விளக்கவுரை கொடுக்கவோ உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
”அமைதிப்படையை வரவேற்ற ராஜன்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.”
இப்போதும் சொல்கிறோம், இந்திய அமைதிப்படை மீண்டும் ஈழத்திற்கு வந்தால் நாங்கள் முன்னின்று ஆதரவு வழங்குவோம். வரவேற்ப்புக் கொடுப்போம். இதற்கான காரணங்கள் என்ன என்று மீசையை மட்டும் வளர்த்த கோவாலுக்குத் தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஒப்பந்தமும் அமைதிப்படையும் நிகழ்ந்த காலங்களில் நீங்கள் தராசு பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட். படங்கள் வரைந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தீர்கள். இப்போது கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நீங்கள் எங்களுக்கும் பட்டம் சூட்டப் புறப்பட்டு விட்டீர்கள்.
அமைதிப்படையை வைத்துக்கெர்ண்டு எங்கள் உரிமைப் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான ஓர் வாய்ப்பினைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை தமிழகத்துப் புலி ஆதரவாளர்களையே சாரும். இன்றைய நிலையில் ஓர் படை ஈழத்துக்குச் செல்லாமல் எந்தவித உரிமைகளையும் நாங்கள் சிங்கள அரசிடமிருந்து பெற முடியாது. ஈழத்தமிழர்கள் எந்த நிலையை அடைந்தாலும் உங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. தொடர்ந்து பணவரவுதான். சில சமயங்களில் குறையலாம். இப்போதும் வீரவசனம் பேசி பணம் பறிக்கும் முயற்சியால்தான் தங்களைப்போன்ற பணவிரும்பிகள் ஈழத்தமிழருக்கு கதைகள் சொல்கின்றனர். அவர்களும் அவற்றை நம்பி இப்போதும் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அதற்கு விசுவாசமாக நீங்களும் ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பட்டம் சூட்டி, விளம்பரம் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வருகிறீர்கள்.
ராஜபக்சேயுடன் இணைந்து வெள்ளைவேனில் கொள்ளை அடிக்கின்றனர், அதனைப் பார்த்து வன்னிய அரசு என்று பெயர் சூட்டிக் கொண்ட ஜெயராஜ் என்பவர் வேதனைப்படுகிறாராம். இந்த ஜெயராஜ் – வன்னியஅரசு பற்றி பின்னர் நாம் சொல்கிறோம். கவலைப்பட இவரென்ன ராஜபக்சயால் விரட்டப்பட்டு அகதியாக தமிழகம்வந்தவரா? இலங்கைத் தமிழரது பணத்திலல்லவா இவர் வாழ்வை நடத்தி வருகிறார்!
நான்கு லட்சத்தை பறிகொடுத்த சிவபாலன் என்பவர் ‘இந்திய அதிகாரிகளிடம் வந்து கூறிவிட்டுச் செல்லவும்” என்று சொன்னதைக் கேட்டு மதிப்பு கொடுத்து வேன் நின்ற இடத்துக்கு வந்தவர் அடி, உதைபட்டுப் பணத்தைப் பறி கொடுத்ததும் நேராக போலீஸ் நிலையத்துக்குச் சென்று முறையீடு கொடுத்திருந்தால் உடனே அந்தத்திருடர்களை பிடித்திருக்கலாமே!
அவரது முகத்திலிருந்த மரணபயத்தை நக்கீரன் கோவாலுதான் கண்டுபிடித்து கதை எழுத முற்பட்டாரா? பணத்தைப் பறிகொடுத்த சிவபாலன் கோவாலுவையா சந்திக்கச் சென்றார்? அல்லது ஜெயராஜ் என்ற வன்னிய அரசிடமா சென்றார்? ஏன் தமிழ்நாட்டில் போலீஸ், சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே கிடையாதா? கோவாலுவும் வன்னியஅரசுமா தமிழ்நாட்டை நிர்வகிப்பவர்கள்?
அடுத்து இலங்கையில் இருக்கும் கைதி ஒருவரை மீட்க பணம் ரூ25 லட்சம் கேட்டு, பின் பஸ்’ நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து பறித்துச் சென்றனர் என்று வர்ணனை செய்து வருத்தப்படுகிறார். இந்தியப் பணத்தில் 25 லட்சம் என்றால் இலங்கைப் பணத்தில் 75 லட்சம். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளியே வர ஒரு நபர் முயற்சிக்கிறார் என்றால் அவர் என்ன பொட்டு அம்மானின் ஸ்தானத்திலா இருந்தார் வன்னியில்?
அட மடப்பயல்களா! நாங்கள் இந்தத் தரகர் வேலை எதுவும் செய்வது கிடையாது. இப்போதும் புலிகளின் நபர்கள்தான் இந்தத் தரகுவழி பணப்பறிப்பைச் செய்கின்றனர். இன்றைய நிலையில் புலிகளின் முப்பது சதவீத நபர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர். கொழும்பு விமானநிலையத்தில் உளவு வேலை பார்ப்பவர்கள் புலிகளின் அங்கத்தினர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பது உண்மைதான். வன்னிப்பகுதியில் புதைக்கப்பட்ட பணம், நகைகளை, சிங்களஇராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுத்துப் பங்குபோடுகின்றனர் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியினர்.
புலிகள் புனிதமானவர்கள், ஏனைய அனைவரும் அயோக்கியர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்தால் உங்களுக்குப் பணம் குவியும், புலிகள் வாரி வழங்குவார்கள் என்பதைக்கண்ட உங்களைப் போன்ற பலரும் இதுபோன்ற விசமப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் துரோகிகள் என்றால் பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தது போன்று நாங்களும் ராஜபக்சேயுடன் இணைந்திருப்போம். டக்கிளஸ், கருணா, பத்மநாதன் போன்று நாமும் வாழலாமே இலங்கையில்!
அடுத்து இன்னுமோர் புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கியூ பிராஞ்ச் பிடித்துச் சென்ற ஒருவரை விடுவிக்க 10 லட்சம் பேசி பறித்துக் சென்றனர். பத்து லட்சம் கொடுத்து தப்பிச்செல்லும் அளவுக்கு அந்த நபர் கொடூரப்புலிப் பயங்கரவாதியா? புலிப் பயங்கரவாதியாக இருந்தால் தான் இப்படி பத்து லட்சம் கொடுக்க வேண்டும். அப்பாவி ஈழத்தமிழருக்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் புலிப் பயங்கரவாதி என்றால் ENDLF அங்கத்தினரை ஏன் அணுகவேண்டும்? புலி ஆதரவாளர்களை அல்லவா அணுகி இருப்பார்கள்? நக்கீரன் கோவாலு, கதை எழுதினால் அதை எழுதிய உங்களுக்கு என்றாலும் புரியவேண்டும்.
நோர்வேயிலிருந்து நெடியவன் எதையாவது சொல்ல நீங்கள் பெற்றுக் கொண்ட பணத்துக்காக ஏனைய இயக்கத்தவர்கள் மீது உங்களது பாணியில் சேற்றை வாரி வீசக்கூடாது.
ராஜீவ்காந்தி அவர்களைப் படுகொலை செய்தது போன்ற இன்னுமோர் நிகழ்வைச் செய்ய ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனுமதிக்கக்கூடாது. ராஜபக்சேயுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான புலிகள் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். ராஜீவ் அவர்களைப் போன்ற இன்னொரு சம்பவம் நிகழ்த்தப்பட்டால் ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு முற்றாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஓர் நிகழ்வை ராஜபக்சே எதிர்பார்த்து இருக்கிறார். அதிலும் புலிகளை வைத்தே இந்தச் செயலை மீண்டும் செய்விக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். புலிகளில் பலபேர்களைக் கூலிகளாக்கி நாச வேலை செய்ய சிங்களஅரசுடன் இணைந்துள்ளனர்.
அப்படி ஓர் சம்பவம் நடந்தால் அதற்கும் விளக்கக்கூட்டம் போட புலிகளின் ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். இழப்பு தமிழகப் புலி ஆதரவாளருக்கோ, தலைவர்களுக்கோ தீவிர வாய்வீச்சாளர்களுக்கோ அல்ல! வீழ்வதும் பாதிக்கப்படுவதும் ஈழத்தமிழர்கள்தான்!
நோர்வே நெடியவன் தூண்டுதலால் அப்படியோர் நிகழ்வு ஏற்பட இருந்ததை நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். அது பற்றியெல்லாம் கோவாலுவுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அதற்குப் பழிவாங்கவே நெடியவனின் தூண்டுதலில் ஜெயராஜூம் (வன்னியரசு) நக்கீரன் கோவாலுவும்.
எங்களைக் கேவலப்படுத்தி கதை விட்டுள்ளீர்கள். ‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்” என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். ஈழத்தமிழர் மத்தியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பிழைப்பு நடத்தும் வன்னியஅரசு உமக்கு தமிழகப் போலீஸாகத் தெரிகிறார். ஏனெனில் நீங்கள் அனைவரும் குறுக்கு வழியில் சென்று பணத்தை நாடும் பண்பாளர்கள் தானே! தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவுப் பத்திரிகைகள் சில எங்களைக் கேவலமாக விமர்சித்து செய்தி வெளியிடுவதன் மூலம் புலிகளிடத்து நற்பெயரும் பணமும் பெற்றுள்ளார்கள். இப்படி இலாபம் சம்பாதிக்கும் சிறந்த குறுக்கு வழிதான் இந்தக் கட்டுக் கதையிலும் அடங்கியிருக்கிறது.
விடுதலை என்ற சொல்லைக் கேள்விப்பட்டும், புலிகளின் பணத்தைப் பார்த்த பின்னரும்தான் நீங்கள் ஈழவிவகாரத்தில் புகுந்தீர்கள். நாங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக இழந்து அகதிகளாகவும் அடக்கப்பட்டவர்களாகவும் நாடற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்குப் பட்டம் சூட்டும் பணியைச் செய்யாதீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள். நக்கீரன் என்ற பெயரைப் பயன்படுத்தி அவதூறும் பொய்யும் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் கேவலத்திலும் கேவலமான பிழைப்பு.
தெருவோரத்தில் நின்று கூச்சல் போடுவோராலும் காதுகள் கிழிய மேடையில் முழங்குவோராலும் கற்பனையில் கதை எழுதி பிழைப்பு நடத்தும் தங்களைப் போன்றோராலும் ஈழத்தமிழரின் ஒருபகுதியினர் ஏமாந்தது மட்டுமல்ல, அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அப்படியிருந்தும் இன்னமும் விடுவதாகயில்லை. உங்களது வருவாய்க்காக எங்கள் மக்களை கூறுபோட்டு பணம் பண்ணப் பார்க்கிறீர்கள். பேராசைக்கு அளவு ஏது? ஆயினும் எங்களது இனப்பிரச்சினையில் இனியாவது பணம் சேர்ப்பதை நிறுத்தி ஒருவருக்கொருவர் சிண்டுமுடியும் வேலையைத் தவிர்த்தாலே நீங்கள் தமிழினத்திற்குச் செய்யும் பெரும்சேiவாக அது அமையும். வீரப்பனுக்காக கண்ணீர் விட்ட கோபாலு ஈழத்தமிழருக்காக நொந்து கண்ணீர் விடவேண்டாம். அவர்களிடமிருக்கும் பணத்தைப் பறிக்க வீரப்பன் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஆண்டு மே மாதம் 18ந் தேதியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது. அதன் பின்னர் 23-5-2009 அன்று பிரபாகரன் தனது படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற இந்தப் படத்தினை நக்கீரன் வெளியிட்டு பெருமை பெற்றது. இது ஒரு ஒட்டுப்படமோசடி என்பது அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாது.
இந்த ஒட்டுப்படத்தின் உண்மையான படம் இதுதான். இது பாலசிங்கத்திடம் உரையாடிக் கொண்டிருக்கும் பிரபாகரனின் பழைய படத்தை இவ்விதம் ஒட்டு வேலை செய்து மொத்தத் தமிழினத்தையும் துணிந்து ஏமாற்றியது இந்த நக்கீரன். இப்படி ஓர் அழிவைச் சந்தித்த இனத்தின் முக்கியமான ஒருவர் புன்னகைக்ககூடிய காலகட்டமா அது! நக்கீரனின் ஒட்டுவேலை அவரை இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.
நக்கீரன் இதழின் வழக்கமான மோசடிதான் இது என்று தெரியாமல் இந்த மோசடிக்காரருக்கு வாழ்த்து சொன்ன அப்பாவி இளிச்சவாய்த் தமிழர்கள்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(E.N.D.L.F) வெளியீடு !!!