November

November

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை – பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில்,

கொத்மலை – பியகம தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.

மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை – பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரியங்களுக்குள்ளாகினர். இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.

இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிப்பு.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையில் நாடு முழுவதுமாக 55ஆயிரத்து 520 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 250 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைப்பதற்காக நாடு முழுவதும் 22 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தங்க வைத்து பராமரிப்பதற்கு சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வீடுகளை இழந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். தெற்கிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மழையால் வீதிகள் சேதமடைந்துள்ளன. அங்கு அதிகளவு புகைமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலங்களில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. வடக்கில் வன்னி மற்றும், யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. வன்னியில் தறப்பாள் கூடாரங்களில் தங்கியுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இம்மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலநிலை டிசெம்பர் மாதம் இறுதிவரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காணாமற் போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பிரதேசசெயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மேலதிக பதிவாளர் நாயகம் என். சதாசிவம் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த போர்க்கால சம்பவங்களின் போது காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு நடாளுமன்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது சட்டநடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதும் அது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசு வெளியிடும். அதனைத் தொடர்ந்து விரைவில் காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொள்வது பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாழ், முல்லை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

santira_sri.jpgயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிருத்தித் திட்டங்களுக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ்விரு மாவட்டங்களிலும் 115 உள்ளூர் வீதிகள் 39 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும், கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச சபைக் கட்டடங்களும் இந்நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இன்று கடமைகளைப் பொறுப்பெற்றார்.

புதிய நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பதவியேற்றுள்ளார். இன்று திங்கள்கிழமை காலை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இக்கைதிகளின் விடுதலை குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இன்று முதல் நீதிஅமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறினார். நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

No_Future_Without_Forgiveness”நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் (Truth and Reconciliation) உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” என அமெரிக்காவில் இருந்து யாழ் திரும்பியுள்ள பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தமிழீழ விடுதலைப் புலிகளினன் கொலை மிரட்டல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

பேராசிரியர் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்களின் சுருக்கும் மட்டும் கீழ்பதிவிடப்படுகிறது. அவருடைய சாட்சியம் முழுமையாக ஆங்கிலத்தில் LLRC_Testimony_By_Ratna_Jeevan_Hool இணைக்கப்பட்டு உள்ளது. (இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. சாரம்சம் மட்டுமே.)

”நான் ஒரு இலங்கையன். ஒரு தமிழன். நான் உள்ளக சுயநிர்ணய உரிமையை இதயபூர்வமாக ஆதரிப்பவன். இந்த அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் இவ்வாறன ஒரு அதிகாரப் பரவலாக்கலுக்காக (மத்தியில் கூட்டாச்சி. மாநிலத்தில் சுயாட்சி) பாடுபடுபவர்.

யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் எப்போதும் அரசாங்கத்துடன் இணங்கி இருக்கவே விரும்பி உள்ளனர். அல்பிரட் துரையப்பா வுக்கும் அப்போது மூன்றில் ஒரு பகுதி யாழ்ப்பாண மக்களின் ஆதரவு இருந்தது. அண்மைய தேர்தலும் இதனையே காட்டி உள்ளது. இது தமிழ் தேசியவாதம் வெட்கப்பட வேண்டிய உண்மை.

என்னைப் போன்ற இலங்கையனாகவும் தமிழனாகவும் உள்ளவர்களுக்கு இது கடினமான காலம். அரசாங்கத்தில் எண்ணிக்கையில் குறைந்த சிலர் தமிழர்களுக்கு தாயகப் பிரதேசம் இல்லை என்கின்றனர். இது சிங்கள தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். அதனாலேயே கடந்த 50 ஆண்டுகால துயரம் நிகழ்ந்தது. எல்ரிரிஈ வளர்ந்தது. தமிழ் – சிங்கள இனவாதம் ஒன்றையொன்று வளர்த்தது.

எனக்கு இந்த அரசாங்கத்திலும் அதன் ஸ்தாபனங்களிலும் குறைந்தபட்ச நம்பிக்கையே உள்ளது. ஆணைக்குழுக்களை உருவாக்கி காலத்தை இழுத்தடித்து அதனுடைய ஆலோசணைகளை நடைமுறைப்படுத்தாமல் அவை எங்களுடைய வரலாற்று குப்பைகளாக அக்கப்பட்டு உள்ளன. சன்சோனி ஆணைக்குழு அறிக்கை ஒரு போதும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவ்வாறே திருகோணமலையில் அக்சன் எய்ட் உறுப்பினர்களின், 5 மாணவர்களின் கொலை தொடர்பான விசாரணைக் குழுக்கள்.

இந்த யுத்தத்தின் முடிவுடன், 1970ற்குப் பிறகு யாழ்ப்பாணம் ஓரளவு சுதந்திரமாக உள்ளது. அதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி அனைவருக்கும் பொதுவான ஒரு தேசத்தை உருவாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர்கள் ஜனாதிபதியின் சிந்தனைக்கு மாறாக செயற்படுகின்றனர்.

எனது அனுபவத்தில் இங்குள்ள செயற்தளத்திற்குள் நாம் செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நான் அந்த செயற்தளத்திற்குள்ளேயே சட்ட நடவடிக்கை எடுத்து நீதியைப் பெற்றுக்கொண்டேன். இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டைக் கட்டியமைக்க, ஜனாதிபதி இலங்கையர் அனைவருக்கும் அழைப்பு விட்டபோது, நானும் இலங்கைக்கு வந்தேன். பலரும் வருவதற்கு ஆவலாக உள்ளனர். ஆனால் இங்கு சட்டத்திற்கு வெளியேயான தடைகள் பல. யாழ் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாகப் பேராசிரியராக நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியபடி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டும், கடந்த மூன்று மாதகாலமாக நியமனத்தை வழங்க, யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்து வருகின்றது. இலங்கையில் குறிப்பிட்ட தகமையுடைய ஒரே பேராசிரியராக உள்ள எனக்கு அறிவியல் தேர்ச்சிக்கும் தகமைக்கும் பெரும் தேவையுள்ள பிரதேசத்தில், நியமனத்தை வழங்கப் பின்னடிக்கிறார்கள். இதற்கு இனவாதம் காரணமல்ல. ஜனாதிபதி வரை தொடர்புடைய எனக்கு இவ்வளவு தடைகள் இருந்தால் சாதாரண ஒரு தமிழன் உடைய நிலை என்ன?

அதனாலேயே ஆளப்படுபவர்கள் அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரப் பகிர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2006ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட எனக்கு, எல்ரிரிஈ ஆல் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கு இராணுவ பாதுகாப்புத் தரவும் முன்வந்தார். ஆனால் அவ்வாறான ஒரு சூழலில் பணியாற்ற என்னால் முடியவில்லை. நான் கொழும்பில் இருந்து செயற்பட முயன்ற போதும், அதுவும் முடியவில்லை. அதனால் நாட்டைவிட்டு வெளியேறினேன். அப்போதைய ரிஎன்ஏ எம்பி கஜேந்திரன், எல்ரிரிஈ அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் எனக்கு எதிராக கடுமையாகச் செயற்பட்டனர்.

இவ்வாறு முக்கிய விடயங்களை தீர்மானிப்பது ஒரு சிலரின் கைகளிலேயே இருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் தனிப் பல்கலைக்கழகங்களாக வளர்ச்சி அடைந்த போதும் வவுனியா கம்பஸ் திருகோணமலைக் கம்பஸ் என்பன தனிப் பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கப்படவில்லை. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை விரும்பிய போதும் தமிழ்ச்செல்வன் பிரதேசம் வாதம் கதைப்பதாகக் கூறி அதனை நிறுத்திவிட்டார்.

ஒரு தமிழனாக இது எனக்கு ஒரு வேதனையான காலம். தமிழர்களுக்கு விடுதலை என்ற பெயரில், எங்களுடைய அத்தனை நிறுவனங்களையும் – பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள், தேர்தல் முறை, எங்களிடம் என்ன இருந்ததுவோ அனைத்தும் மத்தியப்படுத்தப்பட்ட உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கீழ்ப்பணிய நிர்ப்பந்திக்கப்பட்டது. சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் எங்களைப் பாதிக்கின்ற முடிவுகளை ஒரு சிலரே எடுத்தனர்.

இது முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியானது. இப்பொது அரசாங்கம் சுயநிர்ணய உரிமையை அளவுக்கு வழங்கப் போகிறதா இல்லையேல் பழைய விடயங்களுக்கு புதிய எஜமானர்களாக அரசாங்கம் இருக்கப் போகிறதா?

நாங்கள் இன்று வாழ்கின்ற அவலத்திற்கு தமிழ் பாராளுமன்றத் தலைவர்களுடைய தவறான தலைமைத்துவமும் காரணம். ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும், கள்ள வாக்குகளுடன் ரிஎன்ஏ எம்பி க்களாக வந்தவர்களை தம்மத்தியில் ஏற்றுக்கொண்டதால் எங்களைத் தவறவிட்டனர். இவர்கள் அரசியலில் இருந்து சாதாரணமாக ஓய்வு பெற்றிருந்தாலே தலைமைத்துவப் பண்பை பேணியதாக இருந்திருக்கும். அது தமிழ் ஏகபிரதிநிதித்துவம் எதிர்கொள்ள வேண்டிய முடிவை விரைவுபடுத்தி இருக்கும். தமிழரசுக் கட்சியில் பல தவறுகள் இருப்பினும் தமிழர்களிடையே அவர்கள் ஆழ வேர்விட்டள்ளனர். இனி அவர்களைக் கடவுள் வழிநடத்துவாராக.

நோர்வேயின் மத்தியஸ்துவமும் அவர்கள் கூறுகின்ற சமாதானம், நீதி, மனித உரிமைகள் சந்தேகத்திற்கு உரியதே. அவர்கள் எல்ரிரிஈ இன் மீறல்கள் பற்றி குறிப்பாக என்னுடைய உபவேந்தர் நியமனத்தில் எல்ரிரிஈ இன் தலையீடு பற்ற அக்கறைகொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினையைத் தாண்டுவதற்கு ரிஎன்ஏ ஜனாதிபதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நான் உண்மையிலேயே நினைக்கிறேன். இந்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா அரசியலை சரியாகவே புரிந்துகொண்டுள்ளார். ஆனால் தமிழரசுக் கட்சியும் ரிஎன்ஏ யும் இதனைத் தவறவிட்டுள்ளனர்.

அரசாங்கம் மதிப்பிற்குரிய தமிழ் தலைமைகளை உருவாக்குவதில் அக்கறையுடன் இருக்கின்றதா என்ற சந்தேகம் எனது சிந்தனையில் எழுகிறது. ஒரு காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. ஆனால் அவர் தனது கடுமையான உழைப்பினால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். கூடுதலான விருப்பு வாக்குகளை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கி உள்ளனர். தனது உயிராபத்துக்கு மத்தியிலும் அரசாங்கத்துடன் நின்ற டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து இப்போது அரசாங்கம் தன்னுடைய விசுவாசத்தை திருப்புவதையே உணரமுடிகிறது. இது எப்படி ஏனைய தமிழர்களை அரசாங்கத்துடன் இணைய வைக்கும்?

No_Future_Without_Forgivenessகடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் பத்து ஆயிரங்கள் என்று இரு தரப்பாலும் மக்கள் கொல்லப்பட்டதை நான் உறுதியாக நம்புகிறேன். குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லோரையும் தண்டிக்க முற்பட்டால், தண்டிக்கப்படுவோம் என்று அஞசுபவர்கள் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும். தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் சொந்தங்களை இழந்தவர்கள் ஒரு அமைதியைப் பெறுவார்கள்.

அரசாங்கம் உண்மையில் ஆர்வமாக இருந்தால், எதிர்கால சட்டங்கள் திருத்தங்ககள் பற்றிக் கதைப்பதை விட்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.உதாரணமாக 13வது திருத்தம், மொழிச் சட்டம் என்பன. இது நடைபெற்ற பின் அரசு உறுதியானதாகும் நீங்கள் எதிர்பார்க்கின்ற கலந்துரையாடலுக்கான நேரம் கனியும்.” என்று நீண்டதொரு சாட்சியத்தை பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வைத்தார்.

2006ல் உபவேந்தர் பொறுப்பை தொடர முடியாத நிலையில் தனது சேவையை யாழ் கல்விச் சமூகத்திற்கு தான் பிறந்த மண்ணுக்கு வழங்க பேராசிரியர் ஹூல் ஊர் திரும்பியுள்ளார். தற்போதைய உபவேந்தர் தெரிவுக்கான பட்டியலில் கூடுதல் தகமையும் நிர்வாகத்திறமையும் உடைய பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்டுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும். தமிழ் மக்களின் கல்விநிலை கடந்த காலங்களில் கல்விக் கட்டமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களின் பொறுப்பற்ற தன்மையினால் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. அதனை தடுத்து தமிழ் கல்விச் சமூகத்தை மீளுயிர்ப்பிக்கும் ஒருவரை பொறுப்புவாய்ந்த பதவியில் நியமிக்க இன்றைய அரசியல் தலைமைகள் ஆதரவளிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திருடர்களால் தொல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்ள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கதவுகள், யன்னல்களற்ற நிலையில் காணபடுவதாலும் பல வீடுகள் முற்றாக சேதமடைந்து தற்காலிக வீடுகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையிலும் திருடர்கள் இரவு நேரங்களில் அவர்களின் உடமைகளை திருடிச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளில் அண்மைய நாட்களாக சைக்கில்கள். மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகள் பல திருடர்களால் களவாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிப்பதாகவுள்ளது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் நேற்று யாழ்.பொது நூலகத்தின் முன்பாக நடைபெற்ற உழவு இயந்திரங்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தையானது திருப்தியானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்துக்கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்திப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கிருஸ்ணாவிற்கு நேரமின்மை காரணமாக இச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் கிருஸ்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.